புயலடித்து ஓய்ந்தது போல் காட்சியளித்தது ரெமிஜியஸின் இல்லம்.
ஒரு உயிரிழப்பால் வெடித்த கலவரங்களும் போரட்டங்களும் பெரும் சர்ச்சையாய் ஊடங்களின் மொத்த கவனத்தையும் கவர்ந்தது.
அவர்கள் உள்ளே குடைந்து தலைப்பு செய்திகளுக்காக தேடி சேகரித்த புதிய புதிய தகவல்களை திடுக்கிடலுடன் வெளியிட்டதில் பரபரப்பு சூழ்ந்தது.
ஏற்கெனவே சரிந்திருந்த எட்டீ நிறுவனம் மேலும் உருகுலைந்து போக உடனே எதாவது செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளபட்டார் அமல்ராஜ்.
திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை என்றாலும் தான் மும்பையில் இருக்க வேண்டிய அவசியம் உணர்ந்து அவசரமாய் கிளம்பிக் கொணடும் இங்கிருந்து ஆணைகளை பிறப்பித்து கொண்டும் யோசனைகள் கூறிக் கொண்டும் தன் தொழில்வட்டதில் கொண்ட அரசியல் புள்ளிகளிடம் தொடர்பு கொண்டும் என தீர்வுக்கான வழியை நோக்கி செயல்ப்பட்டார். ஆனால் என்ன முயன்றாலும் தன் வினைகான கூலியை அனுபவிக்கும் காலமும் வரதானே செய்யும்..!!
ஜோஷ்வா மற்ற நிறுவனங்களை முடக்கிய எல்லாவற்றின் விவரமும் அறிந்தபோதே ஒருநாள் எட்டீயையும் அந்நிலையில் நிச்சயம் நிறுத்துவான் என ஜோசஃப் உணர்ந்து தான் இருந்தான்.
ஆகையால் அது நிகழும்போது அவற்றை எதிர்கொள்ளும் மனபக்குவம் அவனிடம் வந்திருந்தது. அமல்ராஜை போல் தங்களையோ தங்கள் நிறுவனத்தையோ காத்துக் கொள்ள எந்த அடியும் அவன் எடுத்து வைக்கவில்லை. மாறாக வருவது எதுவானாலும் அதனை அப்படியே ஏற்கவும் அதன் எதிர்வினைகளை தாங்கும் முடிவில் இருந்தான். அத்தோடு அவன் எதையும் யாருக்கும் மறைக்கவும் முனையவில்லை. அம்மா,அனீ,தாத்தா என அனைவரிடமும் அவன் அறிந்த உண்மைகளை மொத்தமாய் சொல்லிவிட்டான். அவர்களுக்கும் அவை தெரிந்திருந்தால் மட்டுமே அதன் விளைவுகளையும் அவர்களாலும் ஏற்க முடியும் என்பதால்…!!
அனைவரையும் விட ப்ரியா தான் மிகவும் துவண்டு போனார். ஜோஷ்வாவை துளியும் நம்பாமல் இருந்துவிட்டோமே என அவர் மனம் துடித்து போனது.
‘ஒவ்வொரு முறையும் குற்றம் சுமத்தும் போது அவன் மனம் என்ன வேதனை அடைந்திருக்கும்.. பேசுபோது எல்லாம் என்னை அவன் பார்க்கும் வெற்று பார்வைக்கு இது தான் அர்த்தமா..!! தப்பு பண்ணிட்டேனே.. என் பிள்ளையை நானே நம்பலையே..”
என தலையில் அடித்து கொண்டு வாய்விட்டே அரற்றினார். அமல்ராஜை காண காண பெரும் கோபம் பொங்கியது. ஆனால் இந்த சூழ்நிலையில் அவரிடம் சண்டையிட்டு ஒன்னும் ஆகபோவது இல்லை..’ என உணர்ந்து அவரை விடுத்து ஜோஷ்வாவை தான் தேட அவன் எப்பொழுதோ அங்கிருந்து சென்றதை யாருமே கவனிக்கவில்லை. அவனை தேடி செல்ல முனைந்த ப்ரியாவை தடுத்து,
“அம்மா இருங்க.. இப்ப நீங்க அவனை பார்த்து பேசினாலும் சரியா பேசமாட்டான்.. ரெண்டு பேருக்குமே தேவையில்லாத கசப்பு தான் அதிகமாகும்.. அவன் காயமாறனும்.. அதுவரை அவனை விடுங்க ம்மா.. உங்களை அவனோட சேர்த்து வைக்கிறது என் பொறுப்பு.. இப்ப நாமும் மும்பை கிளம்பலாம் ம்மா.. சித்தி, ஜெஸிகா எல்லாம் ரொம்ப பயந்து இருப்பாங்க..”
என அவரை ஒருவாறு தேற்றியிருக்க நிகழ்ச்சியின் பாதியிலே அங்கிருந்து நேராய் குடும்பம் மொத்தமும் கிளம்பியிருந்தது.
அனைத்தையும் மௌனமாய் உள்வாங்கி,
‘நேத்து சொன்ன டேரிங் டெஷிசனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குமோ..’ என திகைத்து நின்ற ஜென்சிக்கு அந்த சிறுவனின் இறப்பையும் அதன் காரணத்தையும் அறிந்தபோது லிசா தான் நினைவில் வந்தாள்.
அவளும் லாக்டோ கூல் டிரிங்க்ஸ் பிரியை தான். கல்லூரி முடிந்து கிளம்பும் வேளைகளில் அவள் கையில் எப்பொழுதும் லாக்டோ பாட்டில் இருக்கும்.. அதனை யோசித்து பார்த்தவளுக்கு ‘அவளுக்கு சிறுநீரக கல் வந்தது கூட இதனால் தானோ’ என்ற சந்தேகங்கள் முளைக்க பதைத்தாள். அந்த சிறுவனுக்காக வருத்தப்பட்ட உள்ளம் இத்துடன் இதற்கு எல்லாம் ஒரு முடிவு வரவேண்டுமே என வேண்டுதலும் வைத்தது.
அத்தோடு ஜோஷ்வா வேறு எங்கே சென்றான்.. திடீரென வந்துவிட்டு பின் காணாமல் போக காரணம் என்ன..?? என அதை சுற்றியும் அவள் எண்ணவோட்டம் இருந்தது.
அத்தனை களேபரம் நடுவிலும் வெள்ளி விழா நிகழ்வு சிறப்பாய் நடைபெற்று முடிய அதுவரை வருகை புரிந்திருந்த விருந்தினர்களுக்காக கஷ்டப்பட்டு அங்கே உட்கார்ந்திருந்த ரெமிஜியஸ் அனைத்தும் முடிந்ததுமே ஜென்சியுடன் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி விட்டார். அவருக்கும் பதட்டத்தில் எதுவும் ஓடவில்லை. யாரிடமும் பேச கூட தோன்றவில்லை.
“என்னால நம்பவே முடியல ஜென்சி.. மாப்ளயா இப்படினு.. இந்த விஷயத்தில் என் பேரனைவிட அவர் மேல தான் அதிக நம்பிக்கை வைச்சு இருந்தேன்.. கேட்கவே எனக்கு படபடப்பா இருக்கு.. அடுத்தவன் உயிரை பணையம் வைக்கிற அளவுக்கு இரக்கம் இல்லாத மனுஷனா இருப்பார்னு நினைக்கவே இல்ல.. எல்லாத்தையும் எப்படி என் பொண்ணு தாங்குறாளோ தெரியல..”
என்று மனமுடைந்தவரை
“இப்பவாவது தெரிஞ்சுதேனு நினைங்க தாத்தா… அங்கிள் கடைசிவரை தன் தப்பை உணரவே இல்ல.. அது அவரை எங்கே கொண்டு போய் நிறுத்தபோது தெரியல.. ப்ரியா ஆன்ட்டி இன்னோசெண்ட்.. அவங்க ஹஸ்பெண்ட்டை கண்மூடிதனமாய் நம்பியது தவிர அவங்க எந்த தப்பும் பண்ணல.. அவங்களுக்கு இது பெரிய அதிர்ச்சி தான்.. ஆனால் அவங்களுக்கு ஆறுதலாய் ஜோசஃப்,அனீ எல்லாருமே இருக்காங்க தாத்தா.. நீங்க எதையும் நினைச்சு மனசை வருத்திகாதீங்க.. இதுவும் கடந்து தானே போகும்..”
என தேற்றுதலாய் பேசி அவரை சமாதானம் செய்தாள். அவர் வயதிற்கு இத்தனை அதிர்ச்சிகளை ஒரே நாளில் தாங்க சிரமம் தானே..!! அவரை பாக்கவும் பாவமாக இருந்தது.
‘எங்க போனான் ஜோஷ்வா.. அவன் வந்து தாத்தாவுடன் மனசுவிட்டு பேசினால் தான் என்ன..’ என இப்பவும் ஜோஷ்வாவை தான் யோசித்தாள்.
ஃப்ளைட்டிற்கு நேரமாகுவதால் இன்னும் சிறிது நேரத்தில் அவளும் கோவை கிளம்ப வேண்டும்..! காலையில் இருந்து ஜோஷ்வாவின் நடவடிக்கைகளில் அவளுக்கு உறுத்தலாய் இருக்க அவன் வருகைக்காக காத்திருந்தாள். ஆனால் நேரம் தான் ஓடியதே தவிர அவன் வரும் அறிகுறியே இல்லை. ஒரு கட்டத்தில் மனம் கேட்காமல் ரெமியிடம் அவனின் நம்பர் வாங்கி அழைப்பு விடுத்து பார்க்க முதல் ரிங்கிலே கட் செய்யபட்டது.
நெற்றி சுருங்க மீண்டும் மீண்டும் முயற்சித்ததில் ஒருவழியாய் அழைப்பை ஏற்றவன் அவளை பேசவே விடாமல் குதறினான்.
“என்னடி பிரச்சனை உனக்கு..? உன் ஸோ கால்ட் ஃப்ரெண்டோட திட்டம் போட்டு வந்த வேலையை சிறப்பா செஞ்சிட்டேல..!! கேவலம் இதுக்காக இவ்வளவு தூரம் நீ என் ஃபீலிங்க்ஸோட விளையாடுவேன்னு நினைக்கல டி.. என்னை நம்பவைச்சு ஏமாத்தி உசுரோட கொன்னாச்சே.. இன்னும் என்ன இருக்கு.. உன்னை பார்க்கவே எனக்கு விருப்பம் இல்ல.. என் முன்னால மட்டும் வந்திடாத..”
அனல் தெறிக்கும் அவனின் வார்த்தைகள் சூடாய் அவள் செவியை அடைந்த கனம் பட்டென்று அழைப்பும் கட் செய்யபட அதனை கிரகிக்கவே அவளுக்கு சில நொடிகள் பிடித்தது.
“என்ன ஜென்சி.. என்ன சொன்னான்.. ஏன் உன் முகம் ஒருமாதிரி இருக்கு..”
அருகில் அமர்ந்திருந்த ரெமி அவள் முகத்தை பார்த்து கேட்க,
“ஒ..ஒன்னுமில்ல தாத்தா..” என கரகரத்த குரலை சரி செய்தபடி சொன்னவளுக்கு மெல்ல மெல்ல அதிர்ச்சி மறைந்து ஆத்திரம் தலைதூக்கியது.
“என்னமா.. உன் முகமே சரியில்ல.. அவன் எதாவது சொன்னானா..? ஏற்கெனவே நிலமை சரியில்ல.. நீங்களும் சண்டை போடாதீங்க.. ஊருக்கு வேற கிளம்புற.. போகும்போது கோபமா இருக்காத ஜென்சி..”
என கவலையாய் அவர் பேச ஏதோ முடிவுக்கு வந்தவளாய் அழுத்தமான பார்வையோடு,
“கோபம் எதுவும் இல்ல தாத்தா.. நான் இப்ப மும்பை கிளம்பல.. ஜோஷ்வாட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க… காலைல இருந்த அலைச்சலில் டயர்ட்டா இருப்பீங்க.. போய் ரெஸ்ட் எடுங்க..”
என அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தவள் மனம் உலைக்களமாய் கொதித்தது.
“அவனுக்கு வேணும்னா கட்டி பிடிச்சு கொஞ்சுவான்.. இல்லைனா அவன் முன்னாலே வரகூடாதா..! இஷ்டபடி ஆட்டிவைக்க ஜென்சி அவ்வளவு ஈஸி கிடையாது ஜோஷ்வா.. எனக்கு பதில் சொல்லி தான் ஆகணும்..”
என உறுதி பூண்ட மனதோடு அசையாமல் அங்கேயே அமர்ந்துவிட நிமிடங்கள் மணிநேரங்களாய் மாறி நிற்காமல் ஓடியது.
இடையில் ரெமி சாப்பிட கூப்பிட்டபோதும் அவள் மறுத்துவிட்டாள்.
இருள் படர்ந்த வானம் மெல்லியதாய் தூரல் போட சாவகாசமாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் ஜோஷ்வா..
காரில் இருந்து இறங்கி வந்தவனுக்கு வாசல் படியருகே கையை கட்டி நின்ற ஜென்சியை கண்டதும் நடை தடைபெற்றது. அவள் இருப்பாள் என எதிர்பார்க்கவில்லை போலும்..!!
அவளை கோபமாய் முறைத்த ஜோஷ்வா முன் கைகட்டி மறித்து நின்றவள் கண்களிலும் அத்தனை தீர்க்கம்..!!!
“முன்னால வந்து நின்னுட்டேன்.. என்ன பண்ணுவ இப்ப..”
அடக்கப்பட்ட கோபத்தோடு அமைதியாக கேட்டு நின்ற தோரணையில் சற்று அசந்து தான் போனான்.
‘எதுக்குமே அசரமாட்டாளே.. இந்த அழுத்தம் தானேடி உன்மேல பைத்தியம் ஆகிச்சு என்னை..!!”
அத்தனை கோபத்தையும் மீறி திட்டுகிறானா இல்லை திட்டும் பாணியில் மெச்சுகிறானா அவனுக்கே அது வெளிச்சம்..!!
“ஃபோன்ல அப்படி பேசிட்டு இப்ப மௌனகுரு மாதிரி நின்னுட்டா ஆச்சா..??? நான் உன்னை திட்டம் போட்டு ஏமாத்துனேனா..?? அதை நீ சொல்றீயா…??”
ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் குரலுயர அவன் தோளில் கைவைத்து தள்ளியதில் சற்று பின்னடைந்த அவனும்,
“ஆமா.. நான் தான் சொல்றேன்.. ஜோசஃப் சொல்லி.. அவனுக்காக தானே நீ இங்க வந்த..! அவனுக்கு நான் என்ன செய்யிறேன்.. என் நோக்கம் என்னானு தெரியனும்.. அதுக்கு உன்னை வைச்சு காய் நகர்த்தி இருக்கான்.. நீயும் நம்ப வைச்சு கழுத்தறுத்துட்டேல..”
என ஒற்றை விரலை நீட்டி கத்தினான்.
“அவனுக்காக உன்னை நான் ஏன் வேவு பார்க்கனும்.. ஏன்.. எனக்கு வேற பொழப்பு இல்லையா..?! நான் பொம்மை இல்ல ஜோஷ்வா.. யாரு சாவி கொடுத்தாலும் ஆடுறதுக்கு..!! ஐ ஹேவ் மை டிக்னிடி.. உங்க அண்ணன் தம்பி பிரச்சனை உங்களோட..!! அதில் என்னை பேச்சுக்கு நுழைச்சால் கூட அவனை உண்டு இல்லைனு ஆக்கிடுவேன்னு அவனுக்கே தெரியும்.. இதில்.. என்னை வைச்சு காய் நகர்த்தினானாம்… என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க நீ..?”
தூரல் பெருமழையாய் உருவெடுக்க
தீயாய் காயும் அவர்கள் நெஞ்சந்தனை தணிப்பதுபோல் அவர்களை முழுமையாய் அபிஷேகித்தது கணமழை…!!
ஊசியாய் குத்திய மழைத்துளியிலும் குளிரிலும் நடுங்காமல் ஒருவர் விழி மற்றவரை குத்தி நின்றது.
“ஹோ.. அப்படியா.. அப்போ காலைல நீங்க பேசுனதுக்கு என்ன மேடம் அர்த்தம்.. இந்த வாய் தானே அவனுட்ட சொன்னுச்சு.. ‘நீ சொல்லி தான் ஜோ..’ இங்க வந்தேன்னு.. அது வேற வாயா..?”
என நக்கலாய் கேட்டவனை,
“அவன் தான் போக சொன்னான்.. ஆனா அவன் சொன்னதும் எனக்காக.. நான் வந்ததும் எனக்காக தான்..! பாழாய் போன என்னோட மனசுக்காக மட்டும் தான்..” என அழுத்தாமாய் முறைத்தாள்.
இருவரும் தொப்பலாய் நனைந்திருக்க மழைநீர் முகத்திலும் வழிந்தோட
விழியில் விழும் நீரை கண்சிமிட்டலோடு விலக்கி அவளையே பார்த்தான் ஜோஷ்வா. அந்த விழியின் வீச்சிலும் அதில் தெறித்த கோபத்திலும் துளியளவும் பொய்மை இல்லை.
“என்ன பார்க்கிற.. என்ன சொல்ல வரேன்னு புரியலைல.. சொல்றேன்.. எல்லாம் நானே சொல்றேன்.. என் லவ் ஸ்டோரி சொல்லு சொல்லுனு என்ன பாடு படுத்தினே.. இப்ப சொல்லவா.. இப்ப சொல்லவா என் லவ் ஸ்டோரிய..”
என அவள் அருகில் வந்து உக்கிரமாய் சொல்லவுமே உள்ளுக்குள் எதுவோ இடறியது.
“ஜோ… பத்து வயசுல இருந்தே அவன் எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்.. என்னை நிறைய பேச வைச்சான்.. நான் எப்ப எல்லாம் லோன்லீயா ஃபீல் பண்ணாலும் என் முன்னால வந்து நிற்பான்.. கண்ணுல எப்பவும் குறும்பும் சிரிப்பும் இருக்கும்.. எனக்காக எதுவும் செய்வான்.. அவனுக்கு பிடிக்காத கேம் செண்டர்ல மணிகணக்கா காத்திருப்பான்.. தினமும் புதுசா எதாவது அறிமுகப்படுத்தி ஆச்சரியப் படுத்துவான்.. அவனை போலவே புக்ஸ் படிக்கிற பழக்கத்தை எனக்கு புகுத்தினான்.. புது புது சுவை அறிஞ்சு சாப்பிட பழக்கினான்… என் சைல்ட்ஹூட் ஃபுல்லா அவன் தான் நிறைஞ்சு இருந்தான்..”
இப்பொழுது கூட இதழில் புன்னகை தேங்கினாலும் கண்களில் காரம் குறையவில்லை.
“திடீர்னு ஒருநாள் படிக்க போறேன்னு மறைஞ்சவன் என்கிட்ட திரும்பவே இல்ல.. ஜோவை என் ப்ரெண்டா மட்டும் தான் அதுவரை பார்த்திருந்தேன்.. அவன் பிரிவு என்னை இவ்வளவு பாதிக்கும்னு நான் நினைக்கவே இல்ல ஜோஷ்வா.. அவனோட ப்ரெசன்ஸ் என் லைஃப்ல இவ்வளவு முக்கியமா இருக்கும்னு நானே எதிர்ப்பார்க்கல.. அவனுக்காக ரொம்ப ஏங்கினேன்.. ஒவ்வொரு நாளும் அவன் நினைவோடு போராடினேன்.. அந்த ஏக்கம் தான் அவன் மேல காதலா மாறுச்சா தெரியல.. என்னை அறியாமலே அவன்மேல கொண்ட காதலோட அவனுக்காக காத்திருந்தேன்..
அவனும் வந்தான்… ஆனா மொத்தமா மாறி போன ஜோவா..!! எனக்கே புதுசான ஒரு ஜோவா..!! இப்பவும் ரொம்ப நட்பா தான் பழகினான்.. இப்பவும் பாசம் தான் வைச்சு இருந்தான்.. ஆனால் அவன்கிட்ட என் சின்ன வயசு ஜோ இல்ல.. அப்போ கிடைச்ச அந்த அன்பு இப்ப அவன்கிட்ட இல்ல.. ஏதோ.. ஏதோ ஒன்னு அவன்கிட்ட தேடிட்டே இருந்தேன்..
அவன் பக்கத்தில் இல்லாதப்ப அவனை நினைச்சு உருகுறதும்.. அவனை பார்க்கும்போது எதையோ தேடி தேடி கிடைக்காமல் ஏமாறுவதும்.. ஹப்பா!!!! நரகம் தெரியுமா அது..!? என் மனசு பூரா காதலை சுமந்து இருந்தாலும் அவன்கிட்ட அதை வெளிப்படுத்த தோணவே இல்ல ஜோஷ்வா.. என் தேடல்கான பதில் கிடைக்காம அவனை நெருங்கவே தோணல.. அதுக்குள்ள அவன் வாழ்க்கை அனீயோடு முடிவாகிடுச்சு.. பதினைஞ்சு வருச காதல்.. கண்முன்னாலே கைவிட்டு போயிடுச்சுனு உணர்ந்தப்ப உடைஞ்சு போயிட்டேன்..”
அவள் கண்களில் கண்ணீர் பெருகி மழையோடு கரைந்தோட உணர்ச்சிகரமாய் அவள் பேச பேச அவனின் கோபமெல்லாம் எங்கோ சென்றிருக்க ஒருவித அலைப்புறுதல் குடிக்கொண்டது.
குன்னூர் குளிரில் எத்தனை நேரம் தான் மழையை அவள் உடலும் தாங்கும்..? வெடவெடவென அவளுக்கு நடுங்க தொங்கவுமே,
“ஜென்சி.. போதும்.. உள்ள வா..”
அவள் கையை பிடித்து பதட்டமாய் இழுத்து செல்ல முயல பட்டென்று அவன் கையை தட்டிவிட்டவளிடம் அப்பவும் சீற்றம் குறையவில்லை.
“விடுடா.. நான் பேசுவேன்.. இத்தனை வருஷம் வலி அனுபவிச்சவ நானு.. நான் பேசி தான் ஆவேன்..”
“பேசுமா.. ஆனால் உள்ள வந்து பேசு.. உடம்பு விறைச்சு போயிடும்போல…”
“விறைச்சு செத்தாலும் பரவாயில்லை.. நின்னு கேளு..”
என அவள் வார்த்தைகளை கடித்து துப்ப தவிப்போடு நின்றான்.
“என்ன தேடுனோம்.. என்ன தான் எனக்கு வேணும்னு யோசிச்சு யோசிச்சு பித்து புடிச்சவ மாதிரி சுத்திட்டு இருந்தேன்.. ஆனா உண்மையாவே பைத்தியமா தான் இருந்திருக்கேன்னு இப்ப தான் புரிஞ்சுகிட்டேன்… ஒருத்தனை இன்னோர்த்தனில் தேடுறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்ல.. உருவம் ஒரே மாதிரி இருந்தாலும் உள்ளமும் உணர்ச்சியும் வேற வேற தானே..?! என் மனசுல உள்ள காதலை அதற்கு உரியவன் கிட்ட தானே உணர முடியும்.. அதுக்கு கொஞ்சமும் சமபந்தமே இல்லாத ஒருத்தனை என் ஜோன்னு நினைச்சு பழகினதை இப்ப யோசிச்சு பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா..?”
என்றவள் ஒற்றை விரலால் அவனை குத்தி,
“இத்தனை வருஷமா ஏமாந்து நிற்கிறவ நான்.. திட்டம் போட்டு ஏமாத்தினது நீ தான்..”
என கத்த அவன் கண்களும் கலங்கிவிட்டது.
“இல்ல ஜென்சி.. ஏமாத்தனும்னு எல்லாம் எதுவுமே செய்யல.. இது இப்படி ஒரு நிலமைல நம்மை நிறுத்தும்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல.. உனக்கு உண்மை தெரியாதுன்ற விஷயமே உன்னை மறுபடியும் பார்த்தபோது தான் எனக்கு தெரியும் ஜென்சி..”
தலையசைத்து பதற்றமாய் அவனும் தன்னிலை விளக்கம் கொடுக்க முனைய,
“ஹோ ஏமாத்தனுனு செய்யல தெரியாம செஞ்சுட்டே.. சரி.. தெரிஞ்ச அப்புறம் ஆவது உண்மையை சொல்லனும்னு ஏன் நினைக்கல ஜோஷ்வா.. நீ சொல்லணும்னு நினைச்சால் எப்ப வேணும்னாலும் சொல்லி இருக்கலாம்.. ஏன் இங்க வந்தனு கேட்டேல.. இதுக்கு தான்.. நான் எதிர்பார்த்து வந்தது இதை மட்டும் தான்.. உன் பக்கம் எதாவது ஒரு நியாயம் இருக்கும்.. ஏதோ ஒரு நேரத்தில் நீயாவே,
‘ஜென்சி.. உன்னோட ஜோ நான் தான்னு..’ சொல்லிட மாட்டீயானு எதிர்பார்த்தேன்.. ஆனா ஒரு சந்தர்பத்தில் கூட உனக்கு சொல்லனும்னு தோணலல..”
பெண்ணவளின் கேள்வி அம்புகளில் பதில் சொல்ல முடியாமல் திணறி தான் போனான். அவன் விளக்கம் சொல்ல நினைத்தாலும் அதை நிதானமாய் கேட்கும் நிலையில் அவள் இல்லை.
விழியில் வழியும் கண்ணீரோடு சிலையாய் நின்றவனை பார்க்க பார்க்க அவளுக்கு இருந்த கோபம் எல்லையை கடக்க அவன் சட்டை காலரை பிடித்து,
“பதில் பேசு ஜோஷ்வா.. நான் ஏமாத்தினேன்னு சொனனேல.. இப்ப சொல்லு… யாரு யாரை ஏமாத்தினானு இப்ப சொல்லு.. சொல்லுடா..”
என உச்சஸ்தாயில் கத்தியவள் அதற்கும் மேல் உடல் நடுக்கம் தாங்காமல் மயங்கி விழ சட்டென்று தன்னோடு தாங்கி கொண்டான் ஜோஷ்வா.
“ஜென்சி.. ஜென்சி.. எந்திரிடா..”
பதட்டமாய் அவள் கன்னத்தில் தட்டியவன் அவளிடம் அசைவே இல்லாமல் இருக்கவும் வேகமாய் அவளை தூக்கி கொண்டு மழைநீர் சொட்ட சொட்ட வீட்டிற்குள் ஓடினான்.
அவளை சோஃபாவில் படுக்க வைத்து உள்ளங்கைகளையும் கால்களையும் சூடு பறக்க தேய்த்துவிட்டு,
“ஜென்சி.. கண் முழுச்சு பாருடி.. சத்தியமா உன்னை இப்படி பார்க்க முடியல.. எல்லா தப்பும் என் மேல தான்.. உன்னை தெரிஞ்சும் உன்மேல தப்பு சொன்ன நானெல்லாம் மனுஷனே கிடையாது.. எழுந்து வந்து சட்டையை பிடிச்சு சண்டைபோடு.. ப்ளீஸ் ஜென்சி..”
என்று தன்னைமீறி ஆதங்கமாய் புலம்பி தீர்க்க அவன் போட்ட கூச்சலில் உள்ளிருந்து அவசரமாய் அங்கே வந்த ரெமிஜியஸ் ஜென்சியை கண்டு அதிர்ந்துவிட்டார்.
“என்னடா..? என்னடா ஆச்சு ஜென்சிக்கு..?”
என பதட்டமாய் அருகில் வர,
“ம-மழைல ரொம்ப நேரம் நின்னது.. மயங்கி விழுந்துட்டா தாத்தா.. ரொம்ப பயமா இருக்கு..”
உடைந்த குரலில் கண்ணீர் தடத்தோடு தடுமாற்றமாய் அவன் பேச இரண்டு பேருமே தொப்பலாய் நனைந்திருப்பதை கண்டவர் என்ன நடந்தது என ஆராயும் நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்து,
“எனக்கு தெரிஞ்ச டாக்டரை நான் உடனே வர வைக்கிறேன்.. நீ போய் ராஜம்மாவை கூப்பிட்டு வா ஜோஷ்.. முதல்ல ஜென்சிக்கு ட்ரஸை மாத்தணும்..”
என்று சொல்ல அவனும் மறுப்பேச்சு இன்றி வெளியே ஓடினான்.