Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மெய்யறிவாயோ மெல்லினமே 14

அத்தியாயம் 14

காலடி சத்தத்தில்  தன் நினைவில் இருந்து வந்தவள் மெல்ல இமைகளை திறந்தாள். எதிரில் நின்றவனைக் கண்டதும் அவளது கண்கள் அனிச்சையாக விரிந்து கொண்டது.



Advertisement

அவளது விழி விரிப்பை கண்டு கொள்ளாமல்  “வெறும் காய்ச்சல் தானா?…”  எனக் கேட்டான்.

முதலில் அவன் கேட்டது துளியும் புரியவில்லை அவளுக்கு, அது புரிந்ததும் கணவனை நேரடியாகவே  முறைத்தாள்.

Advertisement

Advertisement

“முறைச்சா மட்டும் பயந்துருவோமா? அன்னைக்கு நீ பேசின பேச்சுக்கு, நான் மனசுக்குள்ள விட்ட சாபம் தான் இந்தளவுக்கு  பவர்ஃபுல்லா வேலை செஞ்சு இருக்கு… ” முறைப்போடு கூறிக் கொண்டே மனைவியை நெருங்கியவன் அவளின் கழுத்தை தொட்டுப் பார்த்தான்.

காய்ச்சலில் உடல் கொதிக்கவில்லை என்றாலும் லேசாக சூடாக இருந்தது… இரண்டு நாட்களாகக் கண்டுகொள்ளவில்லை என்ற கோபத்தோடு சேர்த்து இதுவும் இணைந்து கொள்ள இன்று அவளை ஒரு வழியாக்க வேண்டும் என நினைத்து கொண்டான்.

Advertisement

அவளை முறைத்துக் கொண்டே

பாக்கெட்டிலிருந்த அலைபேசியை எடுத்தவன் தந்தைக்கு அழைத்தான். நீண்ட நேர மெளனத்திற்கு பிறகு சிறு சத்தத்தோடு கட் ஆனது.  நெற்றியை பெருவிரலால் கீறி கொண்டவனுக்கு இரண்டு நாட்களாக மனைவி அழைக்காத காரணம் புரிந்தது. இத்தனை நேரம் மனதில் அழுத்திய எதோ ஒன்று மெல்ல கரைந்தது.

மீண்டுமொருமுறை தந்தைக்கு அழைத்து பார்த்தவன் அவருக்கு அழைப்பு செல்லவில்லை என்றதும் தாயிற்கு அழைத்தான்.அவருக்கும் அழைப்பு செல்லவில்லை…

கன்னக்கதுப்புக்களை கடித்துக் கொண்டே தாயின் மற்றொரு எண்ணிற்கு அழைத்தான். அந்த எண்ணிற்கு  அழைப்பு செல்லவும் “ஊப்ஸ்…” காற்றை வாயில் நிரப்பி வெளியிட்டவன் அவர் அழைப்பை ஏற்றதும் விவரத்தைக் கூறிவிட்டு அலைபேசியைத் துண்டித்தான்.

அதேகணம் இங்கு இதயாவின் பார்வை முழுக்க முழுக்க கணவனிடம் மட்டுமே நிலைத்தது.ஒரு கை அலைபேசியை பற்றியிருக்க மற்றோரு கையோ அவனின் அலையலையான கேசத்தை கைகளால் கோதிக் கொடுத்தபடி இருந்தது.

உயிர்ப்பில்லா கண்களும், காய்ந்து தோள் விட்டிருந்த தடித்த   இதழ்களும், மூன்று நாட்களுக்கு மேல் மழிக்கப்படாத தாடியென  பார்ப்பதற்கே பாவமாக  தெரிந்தாலும் அவளின் கண்களுக்கு அழகாய் தெரிந்து தொலைந்தான். இதழ்களில் புன்னகை தவழ, அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

பாவையின் விடாத பார்வையில், ஒற்றை புருவத்தை உயர்த்தி  “என்ன ?…” எனக் கேட்டான்.

“ஒன்றுமில்லை…” என்பதை போல் தலையாட்டியவள் மீண்டும் அதே பார்வை பார்த்து வைக்க, அவளின் பார்வையை கண்டுகொள்ளாமல் மறுபுறம் திரும்பி கொண்டான்.

அப்போது தான்  மேசையில் வைத்திருந்த பாத்திரங்களை கவனித்தான். எழுந்து சென்று அதனை பார்க்க இன்னும் சூடாக இருந்தது ராகி  கஞ்சி.

‘ இப்ப வைச்சது போல இருக்கு…’ என நினைத்தவன் இதயாவிடம் திரும்பி

“வாசு எங்க?,…” எனக் கேட்டான்.

“கோவிலுக்கு போயிருக்காங்க…” என்றாள் மெல்லிய குரலில்.

“ம்ம்…” என்றவன் பாத்திரத்திலிருந்த கஞ்சியை டம்பளரில் ஊற்றினான்.

“இல்லை எனக்கு வேண்டாம். வாயெல்லாம் ஒரு மாதிரி கசக்குது..” எனக் கூறி முடிக்கும் முன்பே அவளைத்  திரும்பி முறைத்தான். அதற்கு மேல் மறுப்பாளா என்ன? வேண்டா வெறுப்பாக அவன் கொடுத்ததை வாங்கி கொண்டாள். ஆனால் அதனை குடிக்கவில்லை வெறுமனே கையில் வைத்திருந்தாள்.

“கஞ்சியை குடிக்காம அப்படி என்ன யோசிக்கற…” எனக் கேட்டவன் பின்  “ஆமா அப்படியே நீ நல்லத யோசிச்சு கிழிச்சுட்டாலும்…” என வேண்டுமென்றே சலித்தப்படி கூறினான்.

அவனின் பேச்சில் கடுப்பானவள் கையில் வைத்திருந்த டம்ப்ளரை மேசையில் வைத்துவிட்டு “இங்க பாருங்க. நா இப்ப உடம்பு முடியமா இருக்கேன். கொஞ்சம்  கூட அந்த எம்பதி கூட இல்லாம பேசிட்டே இருக்கறீங்க… சொல்லப்போனால் நான் தான் கோபமா இருக்கணும்…” என்றாள் கோபமாக.

அவளை அழுத்தமாக பார்த்தவன் “உன்மேல எல்லாம் எனக்கென்ன எம்பதி வர போகுது. இன்னும் பத்து டிகேட் ஆனாலும் புருஷனுக்கு பொண்டாட்டி கிட்ட இருந்து என்ன வேணும்னு உங்களுக்கு எல்லாம் தெரியாதுடி.. என்னைய பேச வைக்காம வாய மூடிட்டு அதைய குடி..” என்றான் சற்றே கடுமையாக.

என்றைக்கும் இல்லாமல் இன்றைய கணவனின் பேச்சு அவளுக்கு ஒரு பக்கம் ஆச்சரியத்தையும் ஒரு பக்கம் கோபத்தையும் கொடுத்தது…

“ஆமாமா, நீங்க நெருங்கி வந்தாலும்,அம்போன்னு விட்டாலும் எது பண்ணாலும் வாயை மூடிட்டு இருக்கறது தான ஆம்பிளைங்களுக்கு வேணும்” என்றாள் வெடுக்கென்று.

காய்ச்சலிலோ அல்லது கோவத்திலோ கண்ணில் கோர்த்துவிட்ட நீரோடு, செவ்விதழ் அசைத்து அவள் சொல்வதைக் கேட்கக் கேட்க.. என்ன இருந்தாலும் பரவாயில்லை என்று அவள் நடு மண்டையில் ஒரு கொட்டு வைக்கலாமா என்று தான் தோன்றியது அவனுக்கு.

ஆனால் அவன் பார்வையோ அவளின் செவ்விதழில் படிந்து மீண்டது. அன்றைய கவியிதழ் வாசிப்பின் நீட்சி இன்றாகுமோ என்று ஏங்கியது.

தலையை உலுக்கிக் கொண்டவன் “அடியே மனசாட்சிய தொட்டு சொல்லு. நீ என்ன சும்மாவா விட்ட? என்னை களங்கப்படுத்தறீங்கன்னு சொல்லல” என்றுவிட்டு

“ஆமா.. ஆசையா பக்கத்துல வந்துட்டு அதை கன்ட்ரோல் பண்ண நான் என்ன பாடுபட்டேன்னு எனக்கு தான தெரியும்…” என அவளுக்குக் கேட்காமல் முணகிக் கொண்டான்.

“ஆமா, சொன்னேன் அதுக்கு என்ன இப்ப? உண்மையை தானே சொல்றேன். ஒவ்வொரு முறையும் என்னை நீங்க நெருங்கி  வரும்போதெல்லாம் என் மனசுல நீங்க மட்டும் தான் இருப்பீங்க… ஆனா உங்களுக்கு அப்படி இல்லை போல… ஒவ்வொரு முறையும் என் பக்கத்துல வரும் போதெல்லாம் சாரின்னு சொல்லிட்டு விலகி போயிடறீங்க, அப்ப உங்க மனசுல அதெல்லாம் இருக்குன்னு தானே அர்த்தம்…” என உதடு துடிக்க, கண்களை தாண்டிய நீரை வேகமாக துடைத்தபடி கேட்டவளின் மண்டையில ஓங்கி கொட்டினால் என்னவென்று தோன்றியது சுதனுக்கு.

“நான் எதை பத்தியும் யோசிக்கல, என்னோட நெருக்கம் உன் மனசுல இருக்கற காயத்தை தெரியாம கூட நான் கீறி விட்டுற கூடாதுன்னு யோசிக்கிறேன். உனக்கு புரிதா இல்லையா…” கிட்டதட்ட கத்தியே விட்டான். அவனின் கோபத்தில் இமைகள் படபடக்க இதழ்கள் கீழாக வளைய, நுனி மூக்கு அழுகையில் துடிக்க பாவமாக கணவனை பார்த்தாள்.

“இப்ப கூட அழுகையில துடிக்கற இந்த லிப்பை கடிச்சு வைச்சா என்னன்னு தான் தோணுது…” என்றவன் தலையை கோதிக் கொண்டே  கண்ணீரில் நனைந்த இமைகளை பார்த்தப்படி

“எனக்கு ஸ்மூத்தா எல்லாம் ஹேண்டில் பண்ண வராது டி. என்னோட கிஸ்லயே தெரியலையா?.” என்றவனின் உணர்வுகள் அக்கணம் பேயாட்டாம் போட்டது.

“இதை உன்கிட்ட சொல்லறது  தப்பா சரியாண்ணு கூட எனக்கு தெரியல, எதையும் உன்கிட்ட ஓபனா சொல்லவும்  முடியல, என் நிலவை என்னால கஷ்டப்படுத்த முடியாது. என்னோட ஓவ்வொரு மூவ்வும் உனக்குள்ள வடுவா இருக்கற காயத்தை கீறி விட்டுருமோன்னு எனக்கு பயமா இருக்கு. எனக்கு புரிது நானும் அவனும் ஒன்னில்லை தான். ஆனால் உன்னை என்னையும் அறியாமல் காயப்படுத்திட்டா? என்னால அது முடியாது டி…” என அடர்த்தியான குரலில் கூறினான்.

இதற்கு என்ன பதில் சொல்வாள் அவளும் ‘என்னால சாப்ட்டா ஹேண்டில் பண்ண முடியாது டி…’ என்ற வார்த்தையே அவளை ஏதோ செய்தது. அக்கணம் பயமா?, நாணமா? என பிரித்தறிய முடியா நிலையில் அமர்ந்திருந்தாள் இதயநிலா…

*****

ஒன்றிரண்டு வாகனங்கள் அதீத வேகத்திலும், அதன் வேகத்தோடு கூடிய ஹார்ன் சத்தமும் மேல் மாடியிலிருந்த நவியின் வீடு வரைக்கும் கேட்டது… அதே நேரம் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை செல்லும் வாகனத்தின் சத்தத்தோடு பானுமதி  திட்டும் சத்தமும் கேட்டது..

அவரது அர்ச்சனைக்கு காரணமானவளோ தலைக்கு வலது கையை முட்டுக் கொடுத்தப்படி அமர்ந்திருந்தாள்…

அவள் அப்படி அமர்ந்திருக்க இரண்டு காரணம்  உண்டு..

ஒன்று உள்ளுக்குள் அவள் மனமே அவளை கழுவி ஊற்றி கொண்டிருந்தது. மற்றொன்று வெளியில் பானுமதி கழுவி ஊற்றி கொண்டிருப்பது.

இவ்விரண்டிற்கும் ஒரே ஒருவன் தான் முழு முதற்க்காரணம். அது வாசுவை தவிர வேறு யாராக இருக்க முடியும். அவன் (சுயவிவர படத்தை) டீபியை மாற்றினால் என்ன? மாற்றாது அப்படியே விட்டால் தான் என்ன? எதற்காக தான் அதனை பார்க்க வேண்டும்.

அடித்து தூரத்தாத குறையாக தன்னிடம் கத்தியவனோடு வெட்கமே இல்லாமல் ஏன் பேச வேண்டும்.

தான் வலியச்சென்று பேசியதற்கு அவன் மறுமொழி கூறவில்லையே என்று ஏன் இரண்டு நாட்களாக  கவலையில் சுற்ற வேண்டும்.

அந்த கவலையில் பாலை இப்படி கொட்ட வேண்டும்,  அதற்கு பானுமதியிடம் இப்படி திட்டு வாங்கிக் கொண்டிருக்க  வேண்டும்… இப்படி எத்தனையோ தேவை இல்லாத வேண்டுமால் அவளது மனதிடமே திட்டு வாங்கி கொண்டிருந்தாள் நவினா…

” ஒன்னு சொன்னா மூஞ்சி எட்டு முழத்துக்கு தூக்கி வைச்சுக்க வேண்டியது.இப்ப எழுந்து கிளம்ப போறாயா இல்லை நாங்க மட்டும் போகாவா?…” முகத்தை கடுகடுவென வைத்தபடி கேட்ட தாயை நிதானமாக பார்த்தாள்.

‘ நீ போகாதா, மாட்டேன்னு சொல்லு…’ என்ற மனதிடம் அவசரமாக ஏன் என்று கேட்டாள்.

‘ எதுக்கு? மறுபடியும் வெட்கமே இல்லாம அவன்கிட்ட பேசுவ. அப்பறம் நாலு நாளைக்கு கவலையிலயே உட்கார்ந்து என்னை சாவடிப்ப அப்பறம்…’ என மனம் ஒரு பக்கம் கழுவி ஊற்ற ஊற்றவே அவள் ஊருக்கு கிளம்பி இருந்தாள்.

அவள் அவசரமாக கிளம்புவதை பார்த்து  ‘த்து…’ என ரோசக்கார மனம் துப்பிவிட்டு சென்றதெல்லாம் நவினாவின் காதில் கூட விழவில்லை…

எப்பொழுதும் சுடிதார், இல்லையென்றால் ஜீன்ஸ் அணிந்து கொண்டு வரும் மகள் இன்று தாவணி உடுத்தி வந்திருப்பதை மேலும் கீழுமாக பார்த்தார் பானுமதி.

“ஏங்க வெளிய மோடம் போட்டு இருக்கான்னு பாருங்க…” என்றார் கணவரிடம்.

அவரும் என்னவோ என்று எட்டிப் பார்க்க பல்லைக் கடித்துக்கொண்டு “அப்பா…” என்றாள் நவி…

“என்னமா…” என்றபடி திரும்பியவர் அப்பொழுது தான் மகளையும், மகளின் உடையையும் கவனித்தார்.

‘அடிபப் பாவி…’ என்று மனைவியை ஒரு லூக் விட்டுவிட்டு அசடு வழிய மகளை பார்த்தார். அவளோ தந்தையையும், தாயையும் முறைத்தப்படி நின்றாள்.

****

வெய்யோனின் கதிர்கள் தரணியில் தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருந்தாலும் அதன் தாக்கம் துளியும் இல்லாமல் இருந்தது அந்த கோவிலில்…

அக்கோவிலை சுற்றிலும் பெயர் தெரியாத மரங்கள் தங்களின் ஆட்சியை நிலைநாட்டிக் கொண்டிருக்க, அவை காற்றின் மொழிக்கு ஏற்ப தலையாட்டிக் கொண்டிருந்தது.

காற்றின் வேகத்திற்கு மரக் கிளைகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சண்டையிட அதன் சத்தம் மட்டுமே அவ்விடத்தை நிறைத்திருந்தது.

அக்கணம் இயற்கை அன்னையின் வனப்பையும் காற்றின் குளுமையையும் ரசிக்கும் மனநிலை தான் அவனிடத்தில் இல்லை…

ஆடவன் மனம் முழுவதும் வீட்டில் இருப்பவளை சுற்றியே வளம் வந்தது. அது நேரம் செல்ல செல்ல பயமாக உருமாறியது. நிமிடத்திற்கு நிமிடம் ஆண்மகனின் மனதில் பயம் ஆக்கிரமித்து கொண்டே வர அருகில் அமர்ந்திருந்த தாயிடம்

“அம்மா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும், இதயா வேற தனியா இருக்கா. நீங்க வேணா இருந்துட்டு பூஜை முடிஞ்சதும் வாங்க நான் போறேன்…” எனக் கூறினான்.

மகனின் பதட்டம் அவருக்கும் புரிய தான் செய்தது. மகனின் கையை தட்டிக் கொடுத்தபடி  பொங்கல் வைத்தபடி அமர்ந்திருந்த தாயிடம் திரும்பி “அம்மா, இதயா வேற தனியா இருக்கா… வாசுவை வேணா அனுப்பி விடலாமா?” எனக் கேட்டார்.

“அவன் இவடத்திக்கே இருக்கட்டுமாயா, நான் அய்யனை அனுப்பி வைக்கிறேன்… ” எனக் கூறியவரின் கவனம் முழுவதும் பொங்கல் பானையில் மட்டுமே நிலைத்து இருந்தது

ஜானகி மகனைப் பாவமாகப் பார்த்தார். அவனோ தாயை பார்க்காமல் காய்ந்த விறகை லாவகமாக ஒடித்து அடுப்பில் வைத்து கொண்டிருந்த கிழவனையும் பொங்கல் பானையை கிண்டிக் கொண்டிருந்த கிழவியையும் மாறி மாறி பார்த்தான்.

மகனின் பார்வை சென்ற திசையில் பார்த்த ஜானகிக்கு சிரிப்பு தான் வந்தது… “எனக்கு தெரியும்,..” என்றார் பொதுவாக.

தாயின் குரலில் தன் பார்வையை மாற்றி தாயை ‘ என்ன தெரியும்…” என்பதை போல் பார்த்தான்.

“உனக்கு, அவங்க மேல கோபம்ன்னு எனக்கு தெரியும்…”எனக் கூறியவரின் பார்வை தற்பொழுது தாய், தந்தையிடம் மட்டுமே நிலைத்து இருந்தது.

“வயசானவங்க தம்பி, பாவம் பார்த்து மன்னிச்சு விடேன்…”என சிறு புன்னகையோடு கூறினார். அவருக்கு பதில் சொல்லாமல் திரும்பி பெரியவளை பார்த்தான்.

இரண்டு நாட்களுக்கு

முன்பு அத்தனை காய்ச்சலாக இப்போவோ அப்போவோ என்று காலத்தை நெட்டி தள்ளிக் கொண்டிருந்த பெரியவள் தங்களை கண்டதும் படுக்கையில் இருந்து எழுந்து இப்போது வரை பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்  என நினைத்தவனுக்கு ஒரு பக்கம் அவசரமாக வர வைத்து விட்டனர் என்று கோபமாகவும் மற்றொரு பக்கம் ஆச்சரியமாக இருந்தது  திருமணத்தன்று இருந்தவருக்கு  தற்பொழுது இருப்பவருக்கும் எத்தனை வித்தியாசங்கள். நீண்ட நெடிய பெருமூச்சு வந்தது வாசுவிற்கு.

தன் அக்கா பேத்தியின் திருமணத்தில் மகளையும், பேரனையும் பார்த்ததில் இருந்தே மெல்லிய ஏக்கம் பெரியவளிடம்… கணவனை மீறி பிள்ளையிடம் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் நாளாடைவில் மன நோயை கொடுத்திருக்க அடுத்த வாரமே காய்ச்சலால் படுக்கையில் விழுந்தார்.

படுக்கையில் விழுந்தவருக்கு கடைசி வரையிலும் மகளிடம் பேசாமல் சென்று விடுவோமோ என்ற பயம் எழுந்தது. அதை மறைக்காமல் கணவனிடம் கூறிவும் செய்தார். அதன் விளைவு தற்போது ஜானகியும், வாசுவும் வந்திருந்தனர்..

மகனின் பார்வை தாயிடத்தில் நிலைப்பதை உணர்ந்தவர் அவனின். தோளில் கைவைத்து அழுத்தம் கூட்டியப்படி “ஹோம் சீக்னு சொல்ற மாதிரி தான் இதுவும். நம்மளை பார்த்ததும் உன்னோட ஆச்சி எழுந்திட்டாங்க” என்றார் மகனுக்கு புரிய வைக்கும் நோக்கில்.

“ம்ம்…” என்றான் உள்ளே சென்ற குரலில். அவனின் தோளில் தட்டிக் கொடுத்தவர்

“உனக்கு தனியா சொல்லனும்னு இல்லை, ஒரு பொண்ணா அவங்களுக்கு நான் அவமானத்தை மட்டும் தான் கொடுத்திருக்கிறேன். இனியாவது அவங்களுக்கு துணையா இருக்கணுன்னு நினைக்கிறேன்” என்றவரின் குரல் கம்மியது.

குரலை செருமிக் கொண்டே “இனி அவங்க காலம் முடியப் போகுது. இதுநாள் வரைக்கும் நான் அவங்களுக்கு எதுவும் செஞ்சது இல்லை… இனிமேயாவது அவங்களுக்கு ஏதாவது பண்ணணும்னு நினைக்கிறேன் தம்பி” என்றவர் மகனின் பதிலை கூட கேட்காமல் தாய்,தந்தையிடம் சென்று நின்று கொண்டார். தாயை மென்னகையோடு பார்த்தான் வாசு.

ஒரு பக்கம் நொடிகள் நிமிடங்களாக கரைந்து கொண்டே செல்ல வாசுவிற்கோ கடுப்பாக வந்தது ‘அவன் இவடத்திக்கே இருக்கட்டுமாயா, நான் அய்யனை அனுப்பி வைக்கிறேன்…’  என்ற கிழவியும் கண்டுகொள்ளவில்லை சரியென்று தலையாட்டியவரும் கண்டுகொள்ளவில்லை…

அலைபேசியில் அழைத்து கூறலாம் என்று நினைத்தாலும் அதுவும் முடியவில்லை… அக்கணம் ‘எதற்கும் அலைபேசியை எடுத்து பாரேன்… ‘ என்ற மனதின் குரலில் அலைபேசியை எடுத்து பார்த்தான்.

எப்பொழுதும் போல  அவனது அலைபேசிக்கு நெட்வர்க் கிடைக்கவில்லை… “ப்ச்ச்…”என்று சலித்து கொண்டவனின் இதயம் தன்னாலேயே அவள் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறாளா? என காண்பதில் ஆர்வம் கொண்டது.

மதி மறுக்க மறுக்க இதயத்தின் கட்டளையில் கைகள் தானாகவே அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை கிளிக்கியது…

இரண்டு நாட்களுக்கு முன்பு அனுப்பிய செய்தியை தான்  பார்த்தான். அதற்கு பின் பாவையிடமிருந்து எவ்வித குறுஞ்செய்தியும் இல்லை என்பதை விட இவன் அலைபேசிக்கு நெட்வொர்க் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

கடகடவென அவள் அனுப்பிய அத்தனை குறுஞ்செய்திகளையும் தாண்டி முதன்முதலாக அவள்

அனுப்பிய குறுஞ்செய்தியை படித்தான்.

கிச்சன்ல இருக்கும்

ஸ்டவ்வு..

நீ தான் என்னோட

லவ்வு…

இதுவே என்னோட

ஃபர்ஸ்ட்டூ போயம்மு…

என்ற வரிகளை படித்ததும் நெற்றியை பெருவிரலால் கீறி கொண்டே கீழ் இதழ்களை அழுத்தி கடித்துக் கொண்டவன் மீண்டும் அடுத்த கவிதையை வாசித்தான்…

வானத்துல பறக்குது

ஏர்பிளைன்னு….

நான் தான் உனக்கு

காதல் ஏர் பிளைன்னு

என்ற வரிகளை படித்ததும் அவள் கண்முன்னே மின்னி அதனை முகப் பாவனையோடு கூறுவதை போல் யோசித்தவனுக்கு உண்மையாகவே சிரிப்பை அடக்க முடியவில்லை… சுற்றம் மறந்து சத்தமாக சிரித்து விடுவோமோ என்று நினைத்தவன் கேசத்தை கோதிக் கொண்டே சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தான். தன்னை சமன் செய்தபடி அடுத்த மேசேஜை பார்த்தான்.

மண்ணெண்ணெய்

நல்லெண்ணெய்..

வேப்பெண்ணெய்…

ரிப்ளே பண்ணுடா விளக்கெண்ணெய்…

என்ற வாக்கியங்களை படித்ததும் முன்னிருந்த கவிதைக்கும் இரண்டாவது கவிதைக்கும் உள்ள நேர வித்தியாசங்களை தான் முதலில் கண்டான்.

ஒரு மணி நேர இடைவெளி இருக்க அந்த வரிகளுக்கான அர்த்தம் புரிந்தது… மீண்டுமொரு முறை அதே வரிகளை படிக்க, அப்போது தான் அவளின் விளக்கெண்ணெய் என்ற வார்த்தை உரைத்தது.

அவளை முறைப்பதாக எண்ணி அலைபேசியை முறைத்தவன் “போடி…” என இதழசைத்து அடுத்து அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை படிக்காது அலைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டான்.

தென்றல் அவனின் கேசத்தை கலைத்து விளையாட அதனை

கோதிக் கொண்டே தாயை பார்த்தவனுக்கு அப்போது தான் அந்த எண்ணமே தோன்றியது.

“ம்மா… உங்கப்பா கிட்ட போன் இருக்கா?” கண்டிப்பாக இங்கு டவர் கிடைக்கும் சிம் கார்டை தான் உபயோகிப்பார் என நினைத்தான்.

பேரனின் கேள்வியில் சட்டென திரும்பி பார்த்தார் ஜானகியின் தந்தை மணியன். அவரை கண்டுகொள்ளாமல் தாயின் பதிலுக்கு காத்திருந்தான். ஜானகியோ தந்தையை கேள்வியாக பார்த்தார்.

“உம்பட மவனை என்றகிட்ட கேக்கச் சொல்லு சொல்றேன்…” பேச்சு ஜானகியிடம் இருந்தாலும் அவரின் பார்வை முழுக்க தன்னையே உரித்து வைத்தபடி அமர்ந்திருந்த பேரனின் மீது தான் இருந்தது…மணியனின் பேச்சில் நேரடியாகவே  பெரியவரை முறைத்தான்.

“எளையவன் மொறைக்கறதுல கூட எனக்கு உங்கு ஜாடை தான் தெரியுதுங்க” என சிலாகித்து அய்யாமாள் சொல்ல மீசையை கோதிக் கொண்டே சிரித்தார் மணியன்.

தங்களுக்குள் பேசியப்படியிருந்த பெரியவர்களை ஒரு பார்வை பார்த்தவன் “அம்மா, நான் உங்களை மாதிரி இருக்கேன்.வேற யாரு மாதிரியும் இல்லை…” அமைதியாக அதே சமயம் அழுத்தமாக கூறிவிட்டு திரும்பி கொண்டான்.

“உம்பட அம்மா எம்பட இரத்தம் டா…” நேரடியாக பேரனிடம் பேசினார் மணியன்.. அவரை திரும்பி பார்த்தவன் பதில் பேசாமல் “ம்மா, உங்கப்பா கிட்ட போன் இருக்கா இல்லையான்னு மட்டும் கேட்டு சொல்லுங்க…” என்றான் மீண்டும்.

என்ன தான் இளையவன் முகத்தைத் தூக்கி வைத்திருந்தாலும் பெரியவர்கள் அதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அவன் பேசவில்லை என்று அவர்கள் பேசாமலும் இல்லை. சொல்லப்போனால் அவன் இப்படி கோபம் கொள்வது கூட அவர்களுக்கு பிடித்து தான் இருந்தது.

“ஏனுங் மாமா… அந்த போனை தான் எடுத்து குடுங்களேன் புள்ளை கேட்டுட்டு இருக்கறான் பாருங்க…” என அய்யமாள் கூறியதும் வெள்ளை  சட்டை பாக்கெட்டை பாதியாக நிறைத்த கீபோர்ட் போனை எடுத்து மகளிடம் நீட்டினார் மணியன்.

“அம்மா, நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கறவங்க நம்பர் இருந்தா கால் பண்ணிக் கொடுக்க சொல்லுங்க…” இப்போதும் தாயை பார்த்தபடி தான் கூறினான். பேரன் எதற்காக கேட்கிறான் என புரிந்தது பெரியவருக்கு உடனே அவன் கூறியதை செய்தார்.

எதிர் முனையில் கூறிய செய்தியில் “அப்டியா? யாரு என்னன்னு விசாரிச்சிட்டு ஒரு போனை போடு, அதுக்குள்ள நானும் எம்பட பேரனும் பொறப்பட்டு வரோம்…” என்றவர் அலைபேசியை துண்டித்து “நம்ம வூட்டுக்கு முன்னாடி காரு நிக்குதாம் கண்ணு. நாங்க போயி யாருன்னு பார்த்துட்டு வரோம்…” என்றவர் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டப்படி நடக்க, பெரியவருக்கு முன்னால் வேகமாக நடந்தான் வாசு…

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!