அன்று ஹாஸ்டலுக்கு திரும்பிய தன்யாவுக்கு மனம் முழுக்க ஆதியின் நினைவே…! அவளே மறக்க வேண்டும் என நினைத்தாலும் கூட உடன் இருக்கும் தோழிகள், ‘ஆஹா, ஓஹோ’ என ஆதி புகழ் பாட, அது ஒருபுறம் கேட்க உவப்பாய் இருந்தாலும், மறுபுறம் கொஞ்சம் எரியவே செய்தது.
“நான் நேத்தே சொன்னேன்ல? அவர் பார்க்க ஒன்னும் மோசமான ஆளா தெரியலன்னு! இப்போ பார்த்தியா? நான் சொன்னமாறியே அவர் எவ்ளோ ஸ்வீட்டா இருக்காருன்னு” என அம்ருதா தன் படுக்கையில் விழுந்தபடி சொல்ல,
“ஆமா! அவர் கிளாசுக்கு வந்தப்போ நான் பயந்தே போயிட்டேன்! எங்க அவர் நம்மளை தேடி தான் வராரோன்னு! ஆனா அவர் நம்மளை தெரிஞ்சமாறிக்கூட காட்டிக்காம, எல்லார்க்கிட்டயும் எப்படி சிரிக்க சிரிக்க பேசுனாரு! இல்ல?” என்றாள் நவ்யா.
தன்யாவுக்கு கேட்க கேட்க கடுப்பாய் இருந்தது. காலேஜ் முடிந்து வந்தது முதல் இன்னும் எத்தனை நேரம் தான் அவரை பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற சலிப்பு. அவள் மட்டுமே அவனை நினைக்க வேண்டும் என எண்ணினாளோ!?
தீப்தி, “பேச்சை விடுங்க! ஆளு சும்மா சூப்பரா இருக்காருல?” கன்னத்தை வலக்கையால் தாங்கியபடி, படுக்கையில் படுத்துக்கொண்டே தோழிகளை பார்த்து அவள் கேட்க, “ஹையோ… ஆமான்டி!!” என கதை சொல்லும் தோரணையில் வாகாய் எழுந்து அமர்ந்தாள் அம்ருதா.
தன்யாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமை அவளைவிட்டு பறந்துக்கொண்டிருந்தது.
“பர்ஸ்ட் டைம் பாக்கும்போதே அவர் அழகா இருக்காருன்னு தோனுச்சு, ஆனா, அவர் பேசி, சிரிச்சு, பாடி கேட்டதுக்கு அப்பறம், அவர் ரொம்….ப ரொ…ம்ப அழகா தெரியுறாரு!” என சொல்ல, படக்கென அங்கிருந்து எழுந்துவிட்டாள் தன்யா.
அவள் எழுந்ததுமே, “என்னாச்சு?” என தோழிகள் கேட்க, “சும்மா ஏன் அவரை பத்தியே பேசிட்டு இருக்கீங்க? வேற வேலையே இல்லியா உங்களுக்கு?” என கடுப்பாய் அவள் கேட்கையில், “அவ வாங்குன பாவ் பாஜியை அவர் வாங்கிக்கலன்னு அவளுக்கு கோவம் போல” என சிரித்தாள் நவ்யா.
“ஆமாம் ஆமாம்… பின்ன மதியம் முழுக்க அவளுக்காக மரத்தடில மன்க்கி மாறி உட்காந்து இருந்துருக்காளே?” என சீண்டினாள் தீப்தி.
புசுபுசுவென தன்யா மூச்சுவாங்க, “ரொம்ப அலட்டிக்காதீங்க! நாளைக்கே அவரை பார்த்து எதுக்காக என்னை வெயிட் பண்ண வச்சீங்கன்னு நான் கேட்காம விட மாட்டேன்” என்றதும்,
நமட்டு சிரிப்பு சிரித்த அம்ருதா, “உன்னை வெயிட் பண்ண வைக்கலடி, உன்னை வர சொன்னதையே அவர் மறந்துட்டாரு! அதை என்னனு போய் தெளிவா கேளு” என சொல்ல, “ஹாஹா ஆமா” என மற்ற இருவரும் கிண்டலாய் சிரிக்க, அவ்வளவுதான் தன்யாவின் பொறுமை.
தோழிகளை கடிந்துக்கொள்ள முடியாமல் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள். பொழுது எப்போது விடியும், எப்போதும் ஆதியை சந்தித்து நியாயம் கேட்கலாம் என மறுநாளுக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள் அவள்.
எப்போதும் போல கல்லூரிக்கு கிளம்பினாலும் ஆதியிடம் பேசப்போகிறோம் என்ற எண்ணமே, தன்யாவுக்கு சிறு படபடப்பை உண்டு பண்ணியது. அதை மற்றவருக்கு காட்டாமல் அவள் இயல்பாய் இருக்க முயன்றாலும், தங்கள் பேச்சில் கலந்துக்கொள்ளாமல் யோசனையுடனே இருக்கும் தன்யாவை எளிதில் கண்டுக்கொண்டனர் தோழிகள்.
அவர்களிடம் ஏதேதோ சொல்லி மழுப்பியவள் காலை வகுப்புகளை எப்போதும் போல கொட்டாவியுடன் நெட்டித்தள்ளி, மதிய உணவு வேளையை சிறு படபடப்புமும் ஆர்வமுமாய் எதிர்க்கொண்டாள்.
முதல் நாள் ஆதியை பற்றி புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்த பெண்கள், தூங்கி எழுந்ததும் அம்னீஷியா வந்ததை போல அவனை மறந்துவிட்டு மற்ற விஷயங்களை பேசியது வேறு தன்யாவுக்கு நிம்மதியாய் போனது.
[the_ad id=”6605″]
உணவு முடிந்ததும் அவர்களின் ஆஸ்த்தான மரத்தடி கல்பெஞ்சில் நால்வரும் அமர்ந்து கதை பேச, தன்யாவின் கண்கள் நாலாபுறமும் மின்னல் வேகத்தில் சுழன்றது.
அவளை ரொம்பவே சோதிக்கவென ஆதி அங்கே விஜயம் புரியவில்லை. நேற்றை போல காத்திருக்க முடியாமல் தோழிகள் அழைத்ததும் வகுப்புக்கு சென்றுவிட்டாள் தன்யா.
முதல்தினம் போல ‘அவன்’ தங்கள் வகுப்புக்கு வருவானோ என்று அவள் மனம் ஆசைக்கொள்ள, அதேபோல நவ்யாவும், ‘ச்ச! இன்னைக்கும் ஆதி சீனியர் வந்தா நல்லா பொழுது போகும்! இவர் கிளாஸ் நடத்தியே கொல்றாரு!’ என்று புலம்ப, அவனை அதிகமாய் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டாள் தன்யா.
வகுப்புகள் முடிந்திட, ஹாஸ்டலுக்கு நடைப்போட்ட தோழிகளுடன் தன்யா சென்றாலும் கண்கள் மட்டும் ‘அவன்’ தென்ப்படுகிறானா? என தேடுவதை நிறுத்தவில்லை.
பதின்வயதின் இறுதியில் ஒரு முழு ஆண்மகனின் மீது ஈர்ப்பு ஏற்ப்படுவது ஒன்றும் அரிதில்லையே? தன்யாவும் அதற்க்கு விதிவிலக்கில்லை.
சற்று தூரம் நடந்து சென்றதும், தூரத்தில் இருந்த புட்பால் கோர்ட் அநாதரவாய் கிடக்க, தன்யா நடையை நிறுத்தாமலே அந்த பக்கம் பார்த்ததில், களத்தின் ஓரமாய் இருந்த ஒரு கல்பெஞ்சில் ஒரு உருவம் தெரிய, முதுகு மட்டுமே தெரிந்த போதிலும் அவள் மனம் அடித்து சொன்னது அது ‘ஆதி’ தான் என்று…! அவள் தலை முதல் கால் வரை சுறுசுறுவென ஒரு புல்லரிப்பு.
நடையில் வேகம் குறைய, பின்தங்கிவிட்ட தன்யாவை கண்ட தீப்தி, “என்ன நின்னுட்ட? வா ஹாஸ்டல் போலாம்” என்றாள்.
அவர்களிடம், ‘அங்கே இருப்பது ஆதி என்று சொன்னால், இவர்களும் உடன் வந்து பேசுவார்களோ?’ என நொடியில் காரணமேயில்லாத பயம் அப்ப,
“அது…. ஆ…” என தன்யா யோசிக்கும்போதே, “என்னன்னு சொல்லு?” என கேட்டிருந்தாள் நவ்யா.
“அது… என் நோட் ஒன்னு நம்ம டேபிள்ளையே வச்சுட்டு வந்துட்டேன்” என தன்யா ஏதோ ஒன்றை சொல்ல வேண்டுமே என சொல்ல, “சரி வா, போய் எடுத்துட்டு வரலாம்” என திரும்பி நடக்க வந்தனர்.
உடனே அவசரமாய், “இல்ல இல்ல, நான் போய் எடுத்துட்டு வரேன்… நீங்க ஹாஸ்டல் போங்க” என்றவளை அவர்கள் சந்தேகமாய் பார்க்க,
“திரும்ப கிளாஸ்க்கு போயிட்டு வரணும்ன்னா லேட் ஆகிடும், அப்புறம் இன்னைக்கு ஹாஸ்டல்ல குடுக்குற நம்ம பேவரைட் பாதாம் பால் யாருக்குமே கிடைக்காம போய்டும்ல… அதான் சொன்னேன்” என்று மழுப்பினாள் தன்யா.
அப்போதும் தான் மட்டுமாவது உடன் வருவதாய் சொன்ன அம்ருதாவை என்னென்னவோ சொல்லி கழட்டி விட்டு அந்த புட்பால் கோர்ட்டை நோக்கி வேக எட்டுகள் போட்டாள் தன்யா.
அருகே நெருங்க நெருங்க அவன் பின்தோற்றம் தெளிவா தெரிய, அவள் கைகால்கள் எல்லாம் சுறுசுறுப்பானதை போல ஓர் உணர்வு. வெகுவாய் அருகே சென்றுவிட்ட பின், அவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னே நின்ற தன்யா, அப்போது தான் யோசித்தாள், ‘எந்த தைரியத்தில், என்ன பேச என இதுவரை தான் தனியாய் வந்தோம்?’ என!!!
ஒரு புட்பாலை தரையில் அடித்து அடித்து அமர்ந்தவாக்கிலேயே விளையாடிக்கொண்டிருந்தான் ஆதி.
அவனிடம் என்ன என்னவோ பேச வேண்டாம், கேட்க வேண்டும், ஏன்? சண்டையிடவே வேண்டும் என நினைத்தவளுக்கு அவன் அருகே சென்ற பின் படித்த கேள்விகள் எல்லாம் மறந்து போய் ‘வாழ்வே மாயம்’ என்ற ரீதியில் பரீட்சை அறையில் அமர்ந்திருக்கும் மாணவனின் நிலை ஆனது.
‘திரும்பி போய்டலாமா?’ என அவள் தன் ஒரு பாதத்தை பின்னோக்கி திருப்பிய நொடி, ஆதி கையால் குதித்துக்கொண்டிருந்த பந்து இடம் மாறி ஓட, அதை பிடிக்கவென இருக்கையில் இருந்து எழுந்தவன் கண்களில் சிக்கிக்கொண்டாள் தன்யா.
அவளை அங்கே கண்டதும் புருவம் சுருக்கிய ஆதி, பின்னே அவளை அடையாளம் கண்டுக்கொண்டதை போல பளிச்சென சிரித்து, “அடடே, சீனியர் நீங்களா? என்ன இவ்ளோ தூரம்? நான் சல்யூட் பண்ணி காட்டணுமா?” என்றவனின் குரலில் நக்கல் நாலு லாரி அளவுக்கு இருந்தது.
அவன் அப்படி பேசியதும் முகம் சுருக்கியவள், “நீங்க சீனியர்ன்னு தெரியாம டீஸ் பண்ணிட்டேன்” என்றாள் சிறு குரலில்.
நின்றுக்கொண்டிருந்தவன் மீண்டும் பெஞ்சில் வசதியாய் அமர்ந்துக்கொண்டு, பின்ப்பக்கம் நின்றவளை, “முன்னாடி வா” என்றான் கை நீட்டி.
அவன் முன்னே சென்று தன்யா நின்றதும், “சோ, சீனியர்ன்னா டீஸ் பண்ண மாட்டீங்க! இதே ஜூனியர்ன்னா என்ன வேணா பண்ணுவீங்க! அப்படியா?” கொஞ்சம் தீவிரமான குரலில் கேட்டதும்,
வேகமாய், “இல்ல இல்ல! இதுவரைக்கும் நாங்க யாரையும் டீஸ் பண்ணதே இல்லை… எங்களைத்தான் போன வருஷம் எல்லாரும் ரொம்ப ரேக் பண்ணாங்க! அதான் இந்தமுறை நாங்களும் சீனியர்ன்னு சும்மா கெத்து கா…ட்ட…லாம்ன்னு…” இறுதி வார்த்தைகளை அவள் இழுக்க,
“ஒருத்தர் தப்பு பண்ணா அதையே நம்மளும் பண்ணனுமா என்ன?” என்றான் ஆதி.
நெஞ்சோடு இறுக்கி பிடித்திருந்த புத்தகத்தின் நுனியை சுரண்டியபடியே குனிந்திருந்த தன்யா, “தப்பு தான்! சாரி” என்றான் முனுமுனுப்பாய்.
“ஹும்ம்! சரி, இப்போ எதுக்கு இங்க வந்த? சாரி கேட்கவா?” என்ற ஆதியின் குரலில் குறும்பு மீண்டிருந்தது. உடனே நிமிர்ந்தவள், சகஜமாய் பேசிய சில நிமிடங்கள் கொடுத்த தைரியத்தில்,
“நான் உங்ககிட்ட கேள்வி கேட்க வந்தேன்!” என சொல்ல,
“கேள்வியா? யூ மீன் இன்டர்வியூ? ஆனா, நான் அவ்வளோ பெரிய ஆள் ஒன்னும் இல்லையேம்மா!” என்றான் சிரிப்புடன்.
“ப்ச்! பேச்சு மாத்தாதீங்க சீனியர்! நேத்து உங்களுக்காக மூணு மணி நேரம் கேண்டீன் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருந்தேன்! ஆனா, நீங்க என்னை காத்திருக்க வச்சுட்டு, ஜாலியா என் கிளாஸ்க்கே வந்து சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க! என் பிரண்ட்ஸ் எல்லாம் என்னை எவ்ளோ கிண்டல் பண்ணாங்க தெரியுமா?” என படபடப்பாய் பேசிக்கொண்டே போக,
“ஹே… வெயிட்…வெயிட்…” என கை உயர்த்தி அவள் பேச்சை நிறுத்திய ஆதி, “எனக்காக வெயிட் பண்ணியா? எதுக்கு?” என்றான் வியப்பாய்.
அவன் கேள்வியில் இவளுக்கு கோபம் வர, “எதுக்கா? நீங்க தானே என்னை பாவ்பாஜியோட வந்து என்னை மீட் பண்ணுன்னு சொல்லிட்டு போனீங்க? அதுமட்டுமில்லாம டெய்லி உங்களுக்கு சல்யூட் பண்ணிட்டு தான் ஹாஸ்டல் போகணும்ன்னு சொன்னீங்களா இல்லையா?” என விரல் நீட்டி கேட்க,
[the_ad id=”6605″]
உதட்டின் மீது விரல் வைத்து அசந்தபடி அமர்ந்துவிட்டான் ஆதி.
தன்யா, “சீனியர்?” என அழைத்ததும், “நான் சொன்னதுக்காகவா மூணு மணி நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்த?” என்றான் இன்னமும் ஆச்சர்யம் நீங்காத குரலில்.
அவள் ‘ஆம்’ என தலையசைக்க, “நீயென்ன லூசா?” என்றிருந்தான் ஆதித்யா.
அவள் மலங்க மலங்க விழிப்பதைப்பார்த்து, “ரேக்கிங் பண்றது தப்புன்னு தெரியாதா உனக்கு? அதை நீ பண்ணா என்ன, உனக்கு மத்தவங்க பண்ணா என்ன? எல்லாமே தப்பு தான்!” என்றவன்,
“சீனியர் சொன்னா அதை அப்படியே கேட்கணும்ன்னு இங்க சேரும்போது எதுவும் டாக்குமென்ட்ல சைன் போட்டு குடுத்துட்டு வந்தியா என்ன?” என்று கேட்க, ‘என்ன சொல்வதென தெரியாமல்’ அவள் அப்படியே நின்றாள்.
“அவங்க ஏதாவது சொன்னா, உனக்கு அதுல உடன்பாடு இல்லாத பட்சத்துல நீ அதுக்கு உடன்படனும்னு அவசியமே இல்லை! தைரியமா அவங்க மேல காலேஜ் அட்மினிஸ்ட்ரேஷன்ல, நீ கம்ப்ளைன்ட் குடுக்கலாம். அதைவிட்டுட்டு என்னவோ ஆட்டு மந்தை கூட்டம் மாறி அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டி, இப்போ அதையே அடுத்தவங்களுக்கு பண்ணவும் ரெடி ஆகிட்டீங்க” என்றான் உர்ரென்ற முகத்துடன்.
‘என்ன கிளாஸ் எடுக்குறாரு? ஐயோ… அடியே தன்யா? இவர் போடுற மொக்கையை கேட்கவா எல்லாரையும் கழட்டி விட்டுட்டு வந்த?’ என தன்யா உள்ளுக்குள் நினைக்கும்போதே,
‘என்ன? எதுக்குடா இங்க வந்தோம்ன்னு யோசிக்குறியா?’ என கேட்டிருந்தான் ஆதி.
‘இல்லை’ என சொல்லாது திருதிரு’வென அவள் பார்த்த பார்வையே அவள் அதை தான் நினைத்திருக்கிறாள் என்பதை அவனுக்கு சொல்ல, வாய்விட்டே சிரித்தான் ஆதி.
“நான் சீரியஸா பேசுறதே அதிசயம்! ஆனா, அந்த நேரம் யாராது சிக்கிட்டா ரொம்ப கஷ்டம்! நான் அதே ப்லோல நிக்காம போய்க்கிட்டே இருப்பேன்” என்றவன் மீண்டும் சிரித்தான்.
அவளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. அவன் சிரிப்பதையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றாள்.
அவனே சிரித்து முடித்து, “ஹாஸ்டலுக்கு ஆறு மணிக்குள்ள போனும்ல? நேரமாச்சு பாரு… கிளம்பு” என்றான்.
அவள் சின்ன தலையசைப்போடு அவனை பார்த்துக்கொண்டே இரண்டடி எடுத்து வைக்க, இவன் மீண்டும் பந்தை கையில் எடுத்து விளையாட ஆரம்பித்தான்.
அங்கிருந்து அப்படியே அவனை விட்டுவிட்டு போக மனமில்லாது, “இங்க யாருமே இல்லையே? யாருக்கு வெயிட் பண்றீங்க?” என்றாள் சின்ன தயக்கத்துடன்.
சட்டென பந்தை கையில் பிடித்தபடி அவளை திரும்பிப்பார்த்த ஆதி, “யாரும் இல்லாத இடமா வேணும்னு தான் இங்க வந்தேன்” என சொல்ல, அவள் முகம் தெளியாததை கண்டவன், “எனக்கு வீட்டுக்கு கொஞ்சம் லேட்டா போனா போதும், அதான்! எல்லாருக்கும் புட்பால் ப்ராக்டிஸ் அடுத்த மாசம் தானே ஆரம்பிக்குது! சோ, இங்க வந்து டைம் ஓட்டிட்டு இருக்கேன்!” என்றான் ஆதி.
அவளிடம் எதற்கு விளக்கம் கொடுக்கிறான்? என அவன் யோசிக்கக்கூட இல்லை. யார் கேட்டிருந்தாலும் இப்படிதான் சொல்லியிருப்பானோ என்னவோ?
இறுதியாய் கிளம்பும்போது, “வீட்டுக்கு தினமும் லேட்டா போவீங்களா?” என அர்த்தமாய் கேட்டுக்கொண்டாள் தன்யா. அவன் ‘ஆம்’ என்றதும், அவள் குதூகலமானாள். தினமும் அவனை சந்திக்க முடியுமே?! அதற்கு தான்!
அடுத்தநாள் மாலை அவனை பார்க்க போகும் ஆர்வத்தில், ‘இன்று என்ன காரணம் சொல்லி தோழிகளை கழட்டி விடலாம்?’ என யோசித்தவள், “என் லக்கி பென்னை கிளாஸ்லயே விட்டுட்டேன்” என சொல்ல,
அம்ருதா, “என்னடி தினம் ஒன்னை விட்டுட்டு வர? ஒன்னும் சரியில்லையே?” என்றாள் சரியாய்.
சிரித்தே மழுப்பி அவர்களை அனுப்பி வைத்தவள், ‘அவன் இருப்பானா?’ என்ற ஆவலுடனே புட்பால் கிரவுண்டை நோக்கி ஓடினாள். அவளை ஏமாற்றாது அங்கே காத்திருந்தவன், கையில் ஏதோ ஒரு பெரிய லட்ஜரை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க, மெதுவாய் அவனை நெருங்கி, “ஹாய் சீனியர்” என்றாள்.
அவளை ஏறிட்டுப்பார்த்தவன், “ஹாய்” என்றான் புருவம் சுருக்கி.
“என்ன இன்னைக்கும் வந்திருக்க?” என ஆதி சந்தேகமாய் பார்க்க, அவன் அப்படி கேட்பான் என எதிர்ப்பார்த்திராத தன்யா முழித்துக்கொண்டு நிற்க,
“ஏய்.. என்ன?” என அவள் முகத்தின் முன்னே கையசைத்தான் ஆதி.
“ஹான்…?” என விழித்தவள், “அது… ஹான்…? உங்களுக்காக பாவ்பாஜி வாங்கிட்டு வந்தேன்” என்றாள் உண்மையிலுமே அவனுக்கென வாங்கி வந்திருந்ததை நீட்டி.
அவளை இன்னும் கூர்மையாய் பார்த்தவன், “எதுக்கு?” என்றான்.
என்னவென்று சொல்வாள்? இதை ஒரு சாக்கிட்டு உன்னிடம் பேசுவதற்காக வந்தேன் என்றா சொல்ல முடியும்?
“இல்ல, அன்னைக்கு நீங்க வாங்கினதை நான் வேஸ்ட் பண்ணிட்டேன்ல… அதான்” என அவள் சொன்னதும், ‘சரி’ என வாங்கிக்கொண்டவன், “கிளம்பு” என்றான் அடுத்த நிமிடமே!
அவள் முகம் சட்டென வாட, அங்கே நிற்கவும் முடியாமல் மெதுவாய் அவனை விட்டு நகர, “ஹேய்! உன் பேரு என்ன சொன்ன?” வினவினான் ஆதி.
பளிச்சென முகம் மலர்ந்தவள், “தன்யா” என சொன்னதும், “தன்யா.. இனி தனியா வரதெல்லாம் வேண்டாம்.. என்ன?” என்றான் ரைமிங்காய்.
மீண்டும் பழையபடி அவள் முகம் மாறவே, “உனக்கு என்னைப்பத்தி என்ன தெரியும்?” என்றான் அவளிடம்.
“ஹும்?” என யோசித்தவள், “உங்க பேரு” என தொடங்க, “என் பேரு, என் படிப்பு, நான் பாடுவேன்… இதெல்லாம் தாண்டி என்ன தெரியும்?” என்றான்.
இதற்குமேல் தான் ஒன்றும் தெரியாதே அவளுக்கு!!!
“….”
“ஒன்னும் தெரியாது இல்லையா?”
“ம்ம்ம்”
“சோ, ஊரு விட்டு ஊரு வந்து இங்க தங்கிருக்க… இந்த காலேஜ்ல சீட் கிடைக்கிறது ஒன்னும் சின்ன விஷயம் இல்லை! அதனால நேரத்தை வேஸ்ட் பண்ணாம கவனத்தை படிப்புல வை! புரியுதா?” என்றான் ஆதி இலைமறைக்காயாய்.
என்ன இருந்தாலும் அவளை விட வயதில் மூத்தவனுக்கு, பலருடன் பழகி இருவருட தொழில் பயிற்சியும் பெற்றவனுக்கு, அவன் மேல் அவளுக்கொரு ஈர்ப்பு ஏற்ப்பட்டுள்ளது என்பதை அறிய அத்தனை அவகாசம் தேவைப்படவில்லை.
‘சரி’ என அவள் தலையை உருட்ட, அவள் முகம் வாடியிருப்பதை கண்டதும் “படிப்புல ஏதாவது சந்தேகம்ன்னா என்னை கேளு! நானும் கொஞ்சம் படிப்ஸ் தான்” என்றான் சிரித்த முகமாய்.
அதை கண்டவள் தானும் சிரித்து, ‘சரி’ என்றதோடு அங்கிருந்து ஓடினாள்.
அவனும் ‘சிறுபெண்’ தானே என இலகுவாய் விட, மறுநாளே ‘எனக்கு கணக்கில் சந்தேகம்’ என அவள் வந்து நிற்ப்பாள் என அவன் துளியும் எண்ணவில்லை.
தன் முன் நின்றவளை முழு சந்தேகப்பார்வையுடன் எதிர்க்கொண்டான் ஆதித்யா.
“எனக்கு இந்த பேப்பர்ல மட்டும் எப்பவுமே மார்க் கம்மியா வருது… கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல சீனியர்?” என முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு அவள் கேட்டபோது, ‘மாட்டேன்’ என சொல்ல தோணவில்லை அவனுக்கு.
‘உட்காரு’ என அவன் அருகே இருந்த இடத்தை ஆதி ஜாடையில் காட்ட, அடுத்த நொடி வந்து அமர்ந்துக்கொண்டாள் தன்யா.
அவர்கள் இருக்கும் இடத்தில் ஆள் நடமாட்டம் வெகுவாய் இருக்காது என்பதால் யார் கண்ணிலும் அவர்கள் இருப்பது சிக்கவில்லை.
தன் மடியில் இருந்த லெட்ஜரை மூடி அவன் அருகே வைக்க, “அது என்னது?” என்றாள் தன்யா.
“ம்ம்? அது எங்க கம்பெனியோட அக்கவுண்ட்ஸ் லெட்ஜர். சும்மா தானே இருக்கேன்னு இந்த வேலை பார்ப்போம்ன்னு எடுத்துட்டு வந்தேன்” என்றான் ஆதி.
அடுத்து அவள் சந்தேகம் என சொல்லிய பகுதியை ஒரு பேப்பர் பேனா எடுத்துக்கொண்டு தெள்ளத்தெளிவாய் அவன் விளக்க, அவனிடம் பேசிக்கொண்டிருக்கலாம் என இதை ஒரு காரணமாய் சொல்லிக்கொண்டு வந்தவள், அவன் இயல்பாய் விளங்க வைத்த விதத்தில், உண்மையிலுமே கவனிக்க ஆரம்பித்துவிட்டாள்.
இடையிடையே, அவனது சிறு சிரிப்பும், சிகை கோதலும், கட்டைவிரல் நகத்தால் புருவத்தை வருடும் அவன் மேனரிசமும் அவளை மீறி மனதில் பதிய, ‘இவன்க்கிட்ட என்னவோ இருக்கு!’ என அவள் உள்மனம் ரசனையாய் சொன்னது.
அவள் கவனம் அங்கே இல்லை என்பதை உணர்ந்தவன், கையில் இருந்த பேனாவால் அவள் முன்நெற்றியில் ஒரு தட்டு தட்ட, ‘உஸ்ஸ்’ என நெற்றியை தேய்த்துக்கொண்டவள், “என்ன சீனியர்?” என சிணுங்கினாள் சிறு வலியால்.
“நான் இங்க கத்திட்டு இருக்கேன், நீ கனவு கண்டுக்கிட்டு இருக்கியா?”
[the_ad id=”6605″]
“ஹிஹி… லைட்டா டிஸ்ட்ராக்ட் ஆகிட்டேன்” என அசடு வழிந்தவளிடம், “படிக்குற நேரத்துல பராக்கு பார்த்துட்டு இருந்தா, மார்க் குறையாம என்ன செய்யும்?” என்று அவன் கடிய,
மறுநொடி முகத்தை அஷ்டகோணலாக்கி, “நீங்க ஏன் எப்பவும் சீரியசாவே பேசுறீங்க?” என கேட்டிருந்தாள் தன்யா.
அதை கேட்டு, “ஹாஹாஹா” என வாய்விட்டே சிரித்தான் ஆதி.
நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருந்தான்…
கண்களின் ஓரத்தில் நீர் வரும் வரை சிரித்துக்கொண்டே இருந்தவனை நிறுத்த வழி தெரியாமல், “டேய்… டேய்… என்னாச்சுடா” என உலுக்கினான் கோகுல்.
அவன் உலுக்கியதில் நிஜத்திற்கு வந்தவன், துளிர்த்த இரு துளி நீரை சுண்டிவிட்டபடி,
“நான் ஏன் எப்பவும் சீரியசாவே பேசுறேன்னு கேட்டா டா தன்யா… நீ சொல்லு, நான் சீரியஸா பேசுற ஆளா?” என கேட்டு மீண்டும் அதே போல சிரித்தவன்,
“நான் அவ விஷயத்துல மட்டும் தான் சீரியஸா இருந்தேன்! ஆனா, அதுவே அவளுக்கு கடைசி வரைக்கும் புரியல” என சொல்ல,
“இப்ப எதுக்கு நீ பிளாஷ்பேக்குக்கு ப்ரேக் விட்ட?” என்றான் கோகுல்.
சாய்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்துக்கொண்ட ஆதி, கோகுலை நெருங்கி அவன் தோளில் தன் இருக்கைகளையும் போட்டு கட்டிக்கொண்டபடி, “ஏன்னா, நீ இல்லாம ரெண்டு எபிசோட் போய்டுச்சுடா” என்றான் பீலிங்காய்.
ஆதியை ‘உர்ரென’ முறைத்த கோகுல், “உன் மொகரை! ஒழுங்கா கண்டின்யூ பண்ணுடா” என சொல்ல, “ஆபிஸ் டைம் ஓவர், மணியை பாரு” என்றான் ஆதி.
கடிகாரத்தை பார்த்தவன் மணி எட்டை கடந்திருப்பதை கண்டு, “ஐயோ இவ்ளோ நேரம் ஆகிடுச்சா?” என திகைத்து, “சரி வா! வீட்டுக்கு போயிட்டு பேசிக்கலாம்” என ஆதியின் அறையை விட்டு வெளியே வந்தான் கோகுல்.
மொத்த ஆபீசும் இருளில் மூழ்கியிருந்தது.
கோகுல், “எல்லாரும் போய்ட்டாங்கடா”
இருவருமாய் நடந்து அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் செல்ல, அங்கே தன் காரில் சாய்ந்து நின்றிருந்தாள் தன்யா.
காலையில் பனியில் நனைந்த புது மலரென வந்திருந்தவள், இப்போது வாடிய மலராய் நிற்க, அவளையே பார்த்தபடி முன்னேறிக்கொண்டிருந்தான் ஆதி.
இருவருக்குமான நெருக்கம் உணர்ந்த கோகுல், “நான் பைக் எடுத்துட்டு வெளில வெயிட் பண்றேன்… நீ வா” என சொல்லிவிட்டு நல்லபிள்ளையாய் வேகமாய் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
கண்மூடி காரில் சாய்ந்து நின்றவள் அரவம் உணர்ந்து கண்விழிக்க, அவளை பார்த்துக்கொண்டு நின்ற ஆதியை கண்டதும் தன்னை மீறி அவனை சில நொடிகள் அசையாது பார்த்தவள், பின் தலையை உலுக்கிக்கொண்டு காருக்குள் ஏற போனாள்.
சட்டென தன்யாவின் கரத்தை பற்றியிருந்தான் ஆதி. அவனிடம் இருந்து கரத்தை உருவிக்கொள்ள அவள் முயலவில்லை. அப்படியே நின்றாள்.
“தனு… ஏற்கனவே நாலு வருஷம் உன்னைவிட்டு முழுசா தனியா இருந்துருக்கேன்… ஆனா, இனியும் அப்படி இருக்க முடியும்ன்னு எனக்கு தோணல! சொன்னா கேளு… நம்ம இனி ஒண்ணா இருப்போம்” என்றான் ஆதி.
மௌனமாய் அவனை சில நொடிகள் வெறித்தவள், “நான் ஒன்னு கேக்குறேன்… கொஞ்சம் பழசா தான் இருக்கும்… ஆனா பதில் சொல்லு” என்றாள் தன்யா.
ஆதி, “ம்ம்ம்”
தன்யா, “உன் கைல ஒரு ரோஜாப்பூ இருக்கு… அதோட இதழ்களை ஒன்னு ஒன்னா நீ பிச்சு போட்டதுக்கு பிறகு, திரும்ப அதை உன்னால பழையமாதிரி ஒட்ட வைக்க முடியுமா? முடியாதுல??? அதுதான் நம்ம உறவுக்கும் பொருந்தும்” என உணர்ச்சி பிழம்பாய் அவள் சொல்கையில்,
“என்னால ஒட்ட வைக்க முடியுமே!” என்றான் ஆதி.
“ப்ச்! ஏதாவது பேசனும்ன்னு பேசாத தேவா”
“ஏய்… நிஜமா என்னால ஒட்ட வைக்க முடியும்! ஏன்னா என் கைல இருந்தது பிளாஸ்டிக் ரோஸ் தானே?” என அவன் சொல்ல,
“வாட்ட்ட்ட்….” என திகைத்துப்போனாள் தன்யா.
எப்படி அவனால் இந்த சூழ்நிலையில் கூட இப்படி பேச முடிகிறது? என அவள் மூளை அவனை திட்டிக்கொண்டே யோசிக்க,
“எதையும் நேர்மறையா பார்த்தா, எல்லாமே நல்லதா தான் கண்ணுக்கு தெரியும் தனு!”
தன்யா, “சாரி தேவா! எனக்கு அந்த பழக்கம் இல்லை!” முகத்தில் அறைந்ததை போல வந்தது விடை.
“இனி பழகிக்கோ” என்றான் விடாமல்.
“முடியும்ன்னு தோணலை”
“ப்ச்! தனு, வீம்பு பிடிக்காத! என்க்கிட்ட என்ன ஏதுன்னு விசாரிக்காம உன் இஷ்டத்துக்கு சண்டை போட்டுட்டு வந்துட்ட! இப்போ வரைக்கும் என் பக்க நியாயத்தை நான் சொல்ல நீ எனக்கு வாய்ப்பே குடுக்கல!” என ஆதி சொன்னபோது,
“எதுக்கு நான் குடுக்கணும்? எதுக்கு குடுக்கணும் தேவா? உன்க்கூட சேர எனக்கு எந்த விதத்துலையும் விருப்பம் இல்லை! உன் பக்கம் தப்பே இல்லன்னாலும் சரி!” என்றவளின் குரலில் அத்தனை பிடிவாதம்.
ஆயாசமாய் உணர்ந்தவன், “ஏன்டி?” என்றான் சினத்தை அடக்கும் குரலில்.
“அது உனக்கு சொன்னா புரியாது! ஒரு பொண்ணுக்கு தான் என்னோட மனசு என்னனு புரியும்! நான் என்ன சொல்றேன்னு புரியும்” என்றாள் அவள்.
“என்க்கிட்ட சொன்னா தானே தெரியும் தனு” என கேட்கும்போது, அவன் சற்று பிடி தளர்த்திய வேளையில் அவன் கரத்தில் இருந்து விடுப்பட்டவள் காரில் ஏறிக்கொண்டாள்.
காரை இயக்கி அவள் அங்கிருந்து வெளியேறும் வகையில் ரிவர்ஸ் எடுத்து முன்னேற, இவனோ, “நம்ம எதுக்காக பிரிஞ்சோம்ன்னு எனக்கு தெரியலை… எதுக்காக இப்போ சேர முடியாம இருக்கோம்ன்னும் கூட எனக்கு புரியல!” என அவன் கத்த, அவனைத்தாண்டி காரை செலுத்த ஆயத்தமானாள் தன்யா.
காரின் முன்னே சென்று நின்று, “தன்யா… நான் உன்கிட்ட தான் கேக்குறேன்” என்று கத்தியவனின், கோவம் ஏறிக்கொண்டே போனது.
“அது உனக்கு சொன்னா புரியாது தேவா! தேவையில்லாம என் பின்னாடி வராத!”
“சொல்லாமலே எனக்கு புரியாதுன்னு நீ எப்டிடி முடிவு பண்ணுவ?”
“ஏன்னா நீ ஒரு ஆம்பளை! உனக்கு நான் சொல்றது புரியாது!” என அவள் சொல்ல,
அவன் சினம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைக்கடக்க, “அப்போ எங்க அம்மாவை அனுப்புறேன், அவங்ககிட்ட சொல்றியா?” என பல்லைக்கடித்தான் ஆதி.
“ப்ச்! வழி விடு தேவா! உனக்கு நான் சொன்னா புரியாது” என்றாள் தேய்ந்த ரெக்கார்ட் போல.
அவள் அருகே வர வேண்டி அவன் காரின் முன்னிருந்து நகர, அதற்கெனவே காத்திருந்ததை போல, அந்த நொடியை சாதகமாக்கி அங்கிருந்து வெளியேற போனாள் தன்யா.
அவள் செல்வதை கண்டவனுக்கு இன்னமும் கோவம் ஏற, “ஆஆஆ” என ஆத்திரத்தில், சுவரில் தன் காலை ஓங்கி மிதித்து, அப்போதும் அடங்காத கோவத்துடன்,
அண்டர்க்ரவுண்டில் இருந்து மேலேறிக்கொண்டிருந்த காரை பார்த்து, அவளுக்கு கேட்கும் சத்தத்தில்,
“நான் வேணுன்னா பாம்பே போய் ஆபரேஷன் பண்ணிட்டு வரேன்டி.. அப்போவாது சொல்லுவியா?” என ஆதி அலற, அதை கேட்க தான் அவள் அங்கே இல்லையே! அதற்குள் கார் சென்றிருந்தது.
-கலாட்டா தொடரும்…