Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி♥️38

யாதுமாகி #38

 மகனின் கர்ஜனையில் சப்த நாடியும் ஒடுங்கி நின்றார் ஜோதி.

என்ன பேச்சைக் காணோம்….டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து நிரூபிக்கட்டுமா? இல்லை,கோயிலில் வைத்து குழந்தையை தாண்டி சத்தியம் பண்ணட்டுமா? எரித்து விடும் வாய்ப்பு அவன் பார்வைக்கு இருந்தால் இந்நேரம் ஜோதி பஸ்பமாகி இருப்பார்.

விஷ்ணு என்ன பேச்சு இதெல்லாம்? வேணுவதற்கு கிடுகிடு என நடுங்கியது.



Advertisement

 அப்பா நீங்க கத்தணும்னா உங்க பொண்டாட்டிகிட்ட தான் கத்தணும். மடக்கிய முஷ்டியை சுவற்றில் குத்தினான்.

வினிதா எதுவும் பேச இயலாது கடப்பாரையை முழுங்கியது போல் நின்றாள்.

அன்னம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி நூல் பிடித்தார் போல் ஓரளவு யூகித்துக் கொண்டார். மருமகளை அற்ப புழுவை போல் பார்த்தார். த்தூ … இவளெல்லாம் என்ன ஜென்மம் பூமிக்கு பாரமாய்…அவர் மனம் துடியாய் துடித்தது.

Advertisement

யாரையும் கண்ணோக்கி பார்க்கும் திராணி இன்றி ஜோதி கண்மூடி நின்றார்.

Advertisement

ஜோதி என்ன சொன்ன? ஏன் விஷ்ணு இப்படி பேசுறான்? வேணு ரௌத்திரம் கொண்டு முறைத்தார்.

 எதுவும் பேசாது பிடித்து வைத்த பிள்ளையார் போல் இறுக்கமாய் நின்றார்

அவங்க பேச மாட்டாங்க அப்பா. ஏன்னா அவங்க வாயிலிருந்து வந்ததெல்லாம் உன்னதமான திருவாசகம்.

Advertisement

உங்க பொண்டாட்டி சொல்லலைன்னா என்ன உங்க பொண்ணுக்கு எல்லாம் தெரியுமே… அவ சொல்லட்டும்!

வினிதாவிற்கு அவமானம் பிடுங்கி தின்றது. எது நடக்கக்கூடாது என்று நினைத்தாலோ அது நடந்தே விட்டது.

இவ்வளவு நாள் எல்லாம் தெரிந்தும் அண்ணன் அமைதியாக இருந்திருக்கிறான். அந்த எண்ணமே அவளை கிலி கொள்ள செய்தது.அவமானம் தாங்காது அவள் கண்ணில் மாலை மாலையாய் நீர் சொரிந்தது.

வினி சொல்லு! என்ன நடந்துச்சு… மகளை உலுக்கினார் வேணு.

அப்பா… ஸாரி.. அது… எப்படி சொல்ல?அவள் தட்டு தடுமாற…

அப்போ பெருசா ஏதோ நடந்திருக்கு.. அப்படித்தானே? நீயெல்லாம் ஒரு ஆளான்னு நினைச்சு என்கிட்ட யாரும் எதுவும் சொல்லாமல் விட்டு இருக்கீங்க. தொய்ந்து சோபாவில் அமர்ந்தார்.

 அப்பா…சாரிப்பா, சத்தியமா நான் எதுவும் சொல்லலை. நான் எதையும் மறைக்கணும்னு நினைக்கல, நான் அம்மா பேசியது தவறுன்னு அவங்களை சண்டை போட்டேன்.வாய் விட்டு அழுதவள் தந்தையின் காலடியில் போய் அமர்ந்து அவர் மடி சாய்ந்தாள்.

வாடிய மகள் முகம் காண சகியாது மெல்ல அவள் தலை கோதினார்.

அண்ணா சாரி, நீ என்னை தப்பா நினைச்சுட்ட இல்ல…மீண்டும் கண்ணீர் பெருகியது அவளுக்கு.

 ஏய் இப்போ எதுக்குடி அழறவ? என்ன நடந்து போச்சுன்னு மொத்த பேரும் அவளை என்கொயரி பண்ணி குற்றவாளி கூண்டில் நிறுத்தி இருக்கீங்க?ஆவேசமானார் ஜோதி.

அம்மா ப்ளீஸ் வாயை மூடு! ஏதும் விபரீதம் நடந்துவிடுமோ என்று அணை போட முயன்றாள் வினி.

 என்னடி பூச்சாண்டி காட்டுற… ஊர் உலகத்தில் பேசாத பேச்சையா பேசிட்டேன்? நெஞ்சை நிமிர்த்தி தலையணையில் சாய்ந்து வாகாய் அமர்ந்து கொண்டார் ஜோதி.

 பாருங்க உங்க பொண்டாட்டியை…கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாம எவ்வளவு தெனாவட்டா பேசுறாங்க? பல்லை கடித்தான்.

 பேச்சு போகும் திக்கை உணர்ந்த அன்னம்,. ஜோதி வாயை மூடு! நீ ஏதோ பேசிட்ட நேத்ரா அமைதியா போயிட்டா…அதோடு முடிந்ததை விட்டுத்தொலையேன்!மருமகளை கண்டித்தார்.

 அது நல்ல குடும்பத்து பொண்ணு இவ வாயில் மாட்டி சந்தி சிரிக்க வேண்டாம் என்று அம்மா வீட்டுக்கு போயிருக்கு. வேணு சினம் பொங்க மனைவியை முறைத்தார்.

ஆமா அவ நல்ல குடும்பத்து பொண்ணு, நாங்க நாடோடி வீட்டுப் பொண்ணு. கணவனை அச்சமின்றி இறுமாப்புடன் முறைத்தார் ஜோதி.

 ஆமாம் நீ நாடோடி மாதிரி தான் நடந்துக்கிற! குடித்தனம் பண்ற பொம்பளை மாதிரியா நடந்துக்குற? நேத்ராவா இருக்கவே அனுசரிக்குது, உங்க அண்ணன் மகளா இருந்தா இந்நேரம் பெட்டியை கட்டிட்டு போயிருப்பா. அன்னம் பொங்கி விட்டார்.

என்ன பேசுறீங்க?எல்லாம் அவகிட்ட சரண்டர் ஆகி கிடக்குறீங்களா… எனக்கு பிடிக்காதவளை கட்டிக்கிட்டு வந்து என் நிம்மதியை கெடுத்தது உங்க தப்பு. பண்றதையெல்லாம் பண்ணிட்டு என்னை குறை சொல்ல வந்துட்டீங்க,! அசரவில்லை ஜோதி.

 உங்களுக்கு எதுக்கு பிடிக்கணும்? என்கூட குடும்பம் பண்றவளை எனக்கு பிடித்தால் போதும்.விஷ்ணு கடுப்புடன் பதிலடி கொடுத்தான்.

அதுதான் பிடித்து போய் கல்யாணத்துக்கு முன்னாடியே அவ வயித்தை நிரப்பிட்டியா? அதனால வேற வழி இல்லாம அவளுக்கு அவசரமா தாலி கட்டிட்டியா? எந்த தாயும் பேசாத வார்த்தைகளை ஜோதி கொட்டி கவிழ்த்தார்.

விஷ்ணு உயிர் பிரியும் வலியுடன் சிலை என சமைந்து நிற்க… பலம் முழுதும் ஒன்று திரட்டி வலது கன்னத்தில் ஓங்கி இடியென இறக்கினார் வேணு. காதில் இருந்த வைர கம்மல் தெறித்து எங்கோ சத்தத்துடன் விழுந்து அடங்கியது.

 வேணு கொடுத்த அடி மண்டை முழுதும் வண்டு போல் குடைய ஒரு நிமிடம் கண்கள் இருட்டியது ஜோதிக்கு.

என்னை அடிச்சிட்டா அது வீர பிரதாபமா?

கல்யாணமானது ஆனி 11,அவ இங்கே வந்து தலைக்கு ஊத்திக்கவே இல்லை.அடுத்த மாசமே பிள்ளை உண்டாகிட்டா. ஒன்பது மாசமே முடியலை பிள்ளை பெத்துட்டா. அது குறை பிரசவத்தில் பிறந்த மாதிரி இல்லையே.. மூணு கிலோவில் நல்லா மொழுக்கு,மொழுக்குன்னு தான் இருந்துச்சு.

எனக்கு தப்பா பட்டுச்சு நான் பேசினேன்… துளி கூட மனசாட்சி இன்றி பேசினார்.

அடி நாயே… கேடு கெட்டவளே! உன் மருமகளை கேவலப்படுத்துறதா நினைத்து உன் பிள்ளையையும் அசிங்கப்படுத்தியேடி.

பெத்தவ பிள்ளையை பற்றி பேசுற பேச்சா இது?வேணு எட்டி உதைத்தார்.அடி மேல் அடி வாங்கியும் அசராத ஜோதி அவிழ்ந்த கூந்தலை அள்ளிக் கொண்டை ஆக்கிக் கொண்டு மீண்டும் வெறி பிடித்தார் போல் கத்தினார்.

 அடிங்க அடித்துக் கொல்லுங்க. நான் கேட்டதில் என்ன தப்பு இருக்கு? துளியும் கூச்சமின்றி காட்டு கத்தலாய் கத்தினார்.

எனக்கு உறுத்தலா இருந்துச்சு, அஸ்வி டாக்டருக்கு படிக்கிறாளேன்னு அவகிட்ட கேட்டேன்.

குழந்தை நம்ம யார் ஜாடையிலும் இல்லை. நல்ல கலரா, கண்ணெல்லாம் பிரவுனா, சுருள் முடியா இருந்துச்சு.

ஒருவேளை நேத்ரா வேற யார் கூடயும்…

 ஏய்…வாயை மூடு! உனக்கு அவ்வளவு தான் மரியாதை. டிவியை தூக்கி போட்டு பொத்தென்று உடைத்தான் விஷ்ணு.

 நீ திருந்தவே மாட்டியா? முடியை கொத்தாக பற்றி இழுத்து இரு கன்னத்திலும் ஆவேசம் தணியாமல் மாறி மாறி அறைந்தார் வேணு.

அப்பா விடுங்க அந்த பொம்பளையை! கர்ஜித்தான் விஷ்ணு.

அனைவரும் திடுக்கிட்டு நின்றனர்.

வேட்டைக்கு கிளம்பிவிட்ட சுடலை மாடனை போல் அத்தனை வெறியுடன் நின்றான்.

அப்பா இந்த நிமிஷத்தோட எனக்கும் இவங்களுக்குமான உறவு முடிந்து போச்சு! அவங்களுக்கு இனி ரெண்டு பொண்ணுதான். தளர்ந்த நடையுடன் வெளியேறியவன் கண்கள் அருவியாய் நீரை உகுத்தது.

 நாதாரி என்ன பேச்சு பேசுற… புழு புழுத்து சாகப்போற. நீயும் ரெண்டு பொண்ணை பெத்தவ தானே…உன் முகத்தை பார்த்தாலே ஏழு ஜென்மத்திற்கும் பாவம்.மருமகளை சபித்து தீர்த்தார் அன்னம்.

விதிர்விதிர்த்து குன்றிய நடையுடன் வெளியேறிய விஷ்ணுவை கண்ட அவர் உள்ளம் பிசைந்தது.

 விஷ்ணு என் சாமி மனம் கலங்காத தங்கம். தள்ளாமையிலும் பேரன் பின்னாடியே ஓடி வந்தார் அன்னம்.

 பாட்டி இங்கே ஈட்டியால் குத்தின மாதிரி வலிக்குது பாட்டி! இடது மார்பில் அடித்துக் கொண்டவன் பாட்டியை அணைத்துகொண்டு கேவினான்.

 உன் நிலைமை எனக்கு புரியாம இல்ல தங்கம். பேசக்கூடாத பேச்சை அந்த சாக்டைபேசிட்டா…அதை மறந்துட்டு உன் பொண்டாட்டி பிள்ளை குடும்பம் என்று வாழ தொடங்கு சாமி. அவன் தலையைக் கோதி நடுங்கும் அவன் மேனிக்கு ஆறுதல் கொடுக்க முயன்றார்.

பாட்டி என் பொண்டாட்டி உத்தமி பாட்டி.அவளை பழி சொல்ற இந்த அம்மாவுக்கு கண் அவிந்து போகும்.

எனக்கு தெரியாதா சாமி? நேத்ரா பரிசுத்தமான தங்கம். இவ பேசிட்டா அந்த பொண்ணு நடத்தை தப்புன்னு ஆகிடுமா?

 நான் குடும்பம், கௌரவம் என்று தானே என் ஆசையை எல்லாம் விட்டுட்டு இந்த ஊரில் இருக்கேன்.

நான் ஊர் உலகத்து பசங்க மாதிரி ஊதறியா, ஊரை சுத்திக்கிட்டு வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கலையே…என்னை பற்றி யோசித்ததை விட இந்த குடும்பத்துக்காக தானே அதிகம் யோசித்தேன்.

 என்னோட நடத்தையை போய்…வலிக்குது பாட்டி வலிக்குது…தலையில் அடித்துக் கொண்டான்.

 ஐயோ! என் குழந்தையை போய் யார் ஜாடைன்னு…

எனக்கு கூசுது பாட்டி.

 இதைக் கேட்டு நேத்ரா எவ்வளவு துடித்திருப்பா?

இந்த குடும்பம் உனக்கு வேண்டாம்னு எவ்வளவோ சொன்னேன்…எனக்காக என்னை ஆசைப்பட்டு கட்டிக்கிட்டா பாட்டி…அவ நடத்தையை கலங்கப்படுத்தி பேசினதை கேட்டிருந்தா உயிரை விட்டிருப்பா…

அழுதான்,அரட்டினான். அவனால் தாங்கவே முடியவில்லை.

அன்னம் அழுதுவிட்டார். என் குலசாமி நீதான். நீயே கலங்கினா இந்த கிழவிக்கு யாரு சாமி ஆதரவு.

 பாட்டி இந்த விஷயம் எனக்கு போன மாசமே தெரியும்! அன்னைக்கு கூட இவ்வளவு கேவலமாக பேசலை, எவ்வளவு குரோதம் இருந்தால் இன்னைக்கு இவ்வளவு கீழ்த்தரமா பேசுவாங்க?

 நானும் பிரச்சனை வேண்டாம் வேண்டாம்னு பொறுத்து போனேன், அதுதான் நான் பண்ணின தப்பு!இவங்க எனக்கு நல்ல பாடம் சொல்லிக் கொடுத்துட்டாங்க. முகத்தை சட்டை கையில் துடைத்துக் கொண்டவன் தனது அறைக்கு போய்விட்டான்

“—————-”

அம்மா நான் முன்னாடியே சொன்னேன்… நீ அண்ணனை இழந்துட்டு நிற்கப் போறேனன்னு…அது இன்னைக்கு நடந்துடுச்சு பார்த்தியா?

 நீ உன் இஷ்டம் போல இரு! வினிதா வெறுப்புடன் தாயைப் பார்த்து விட்டுப் போனாள்.

இனி ஊர் உலகத்துக்கு தான் நீ வேணுகோபாலன் பொண்டாட்டி.என்னை பொறுத்த வரைக்கும் நீ யாரோ? இஷ்டம் இருந்தால் இந்த வீட்டில் இரு, இல்லைனா எங்க வேணாலும் போ! இனி உன் கையால் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாலும் அது எனக்கு விஷம். வேணு வலித்த இதயத்துடன் வெளியேறினார்.

 இந்த வீட்டுக்கு நேத்ராவை மருமகளாக கொண்டு வந்ததில் தவறில்லை. ஜோதியை மருமகளாக கொண்டு வந்தது தான் தவறு.

 தன் கணவர் அன்றே ஜோதியை வேண்டாம் என்று கூறியிருக்கிறார் என்றால் அவர் தீர்க்கதரிசி. எண்ணி எண்ணி உருகினார் அன்னம்.

வீடு மயான அமைதியில் இருந்தது.அவரவர் அவரவர் அறையில் முடங்கி கிடந்தனர். கட்டிலில் படுத்து கண்மூடிய விஷ்ணுவிற்கு நேத்ரா அன்று சொன்ன வார்த்தை நினைவிற்கு வந்தது.

 கல்யாணம் ஆன உடனே குழந்தைன்னா உங்க அம்மா என்னென்னவோ பேசுவாங்க!

 அவள் அன்று சொன்னது உண்மையாகிவிட்டதே… என்னைவிட அவளுக்கு தெரிந்திருக்கிறதே இந்த அகங்காரியின் லட்சணம். எண்ணி எண்ணி துடித்தான்.

அவன் மனம் மீண்டும் மீண்டும் ஜோதி உதிர்த்த அபாண்டமான வார்த்தைகளையே அசைபோட்டு உழன்றது. அவனுக்கு மனம் சமன் படவேயில்லை.

 திருமணத்திற்கு தேதி குறிக்கும்போதே பாட்டி மாதவிலக்கு நாள் கேட்டு அதற்கு தகுந்தபடி தேடி குறிக்க சொன்னாரே…

 திருமணத்தின் போது அவளுக்கு மாதவிலக்கு வந்த ஆறாம்நாள்.ஓவுலேசன் சமயத்தில் சாந்தி முகூர்த்தம் நடைபெற… கரு கூடிவிட்டது! இதற்கு போய் கண்,காது, மூக்கு வைத்து பேச முடியுமா?அவன் நாடி நரம்புகள் முறுக்கியது.

 பேசிய தாயை கொன்றாலும் தவறில்லை என்று தோன்றியது.

 அவள் என்ன ஓட்டத்திற்கு பிரேக் போடும் விதமாய் போன் அழைக்க… லைனில் நேத்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!