Skip to content
Post Views: 2,693
யாதுமாகி #10
அன்றெல்லாம் சரிக்கு சரியாய் பேசித் தெறிக்க விட்டவள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கி இருக்கிறாள்.
அவள் நத்தையாய் தன்னை சுருட்டி கொண்டதில் அவன் பங்கு ஏதும் இல்லை.
ஆனால் அவனால் அவள் வாட்டத்தை ஏற்க முடியவில்லை அதேசமயம் போக்கவும் முடியவில்லை.
Advertisement
கண்மூடித்தனமாக அவள் தன்னை காதலித்த அந்நாளைய நினைவு ஏற்படுத்திய சுகத்தில் அகமும் முகமும் புன்னகைத் தவழ ஏக்கப்பார்வையுடன் பார்த்துக் கொண்டே கிளம்பினான் விஷ்ணு.
கீழே இறங்கி வந்தவன் தன் உடன் பிறந்தவள் பெற்ற செல்லத்திற்கும்,தான் பெற்ற செல்லத்திற்குமாய் முத்தமிட்டு பை சொல்லி கிளம்பினான்.
நேத்ரா குழந்தைக்கு ஆறு மாசம் முடிய போகுது இனி பருப்பு சாதம்,காய்கறி,பழம் என்று எளிதா ஜீரணம் ஆகுற உணவு கொடுக்க தொடங்கனும்! அன்னம் பேத்திக்கு சொன்னார்.
Advertisement
சரிங்க பாட்டி!ஒரு நல்ல நாள் பார்த்து கோயிலுக்கு போய் அன்ன பிரசன்னம் பண்ணிடலாம் என்றாள் நேத்ரா.
Advertisement
உங்க அப்பா வீட்டுக்கு சொல்லி தான் பண்ணனும் நேத்ரா.
சரிங்க பாட்டி இந்த குடும்ப வழக்கம் போலவே செய்து விடலாம் என்றாள்.
“——————”
Advertisement
அண்ணி இங்க நாட் போட்டு முடித்த உடனே ரெட் கலர் எப்படி ஜாயின் பண்ணனும்? க்ரோசா ஊசியை தலையில் தட்டியபடி வினிதாவிடம் மும்மரமாய் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தாள் நேத்ரா .
தன்மகன் பிரணவிற்கு தன் கையால் ஸ்வெட்டர் பிண்ணிக் கொண்டிருக்கிறாள். கற்றுக் கொடுத்தது நாத்தனார் வினிதா தான்.
வெள்ளை வண்ண உல்லன் நூலில் ஓரம் மட்டும் சிவப்பு வருவது போல் டிசைன்.
வினிதா, ஸ்வெட்டர்,சாக்ஸ், ஸ்கார்ஃப்,பர்ஸ் என்று உல்லன் நூலில் செய்து அசத்துவாள். பெங்களூருவில் அதற்கென்று மூன்று மாதம் பயிற்சி வகுப்பிற்கு சென்று கற்று தேர்ந்திருந்தாள்.
அண்ணியும் நாத்தனாரும் அளவளாவி கொண்டிருப்பதைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து போனார் அன்னம்.
சர்க்கரை மில்லுக்கு சென்று கணக்கு வழக்கு பார்த்துவிட்டு வந்த வேணு தான் பெற்ற பெண்ணும், தன் வீட்டிற்கு வந்த பெண்ணும் அவ்வளவு உரிமையாய் அன்னியோன்யமாய் பேசிக்கொண்டிருப்பதை கண்டு மகிழ்ந்து போனார்.
வேணுவிற்கும் சரி அன்னத்திற்கும் சரி நேத்ராவை மிகவும் பிடிக்கும்.
அவளது எளிமை, சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொள்ளும் பக்குவம்,கடினமான சூழலில் எதிர்வாதம் புரியாது விலகி செல்லும் தன்மை, அனைவரையும் சமமாக நடத்தும் அந்த பாங்கு இதெல்லாம் அவள் வளர்ப்பை எண்ணி பெருமைப்பட வைத்தது.
இரு பெண்களும் சிரித்து பேசி கொண்டிருப்பது ஜோதியின் காதில் புகை வர வைத்தது.
கண்களால் எகத்தாளமாய் மருமகளை அளவிட்டபடி “ஆடு பகை குட்டி உறவு” என்றார்.
அவரை நிமிர்ந்து பார்க்கவோ முறைக்கவோ செய்யாது சட்டென்று அவ்விடம் விட்டு விலகி சென்றாள் நேத்ரா.
ஏன் ஜோதி இப்படி இருக்க? கடுமையாய் முறைத்தார் வேணு.
என்ன இப்போ, என்ன பேசிட்டேன்னு நாட்டாமை பண்ண வந்துட்டீங்க? என்னை கண்டால் ஆகாது, என் பொண்ணு கூட மட்டும் என்ன உறவு வேண்டி கிடக்கு? கொந்தளித்து போனார் ஜோதி.
அறிவு இருக்கா உனக்கு? நம்ம காலத்துக்கு பிறகு நம்ம பொண்ணுகளுக்கு நல்லது கெட்டதுல ஆதரவாக நிற்க போறது நம்ம மருமக தான். அது ஞாபகத்தில் இருக்கட்டும்!
அங்கங்க அண்ணிக்கும் நாத்தனாருக்கும் முட்டிக்கும்.இங்கே அவங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா இருக்காங்க, உனக்கு ஏனோ பத்திகிட்டு எரியுது! தலையில் அடித்துக் கொண்டார்.
மருமகளை கடிந்து கொள்ள இயலாத நிலையில் அன்னம் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.
ஏம்மா? ஒற்றை சொல்லில் தாயை தீப்பார்வை பார்த்தாள் வினிதா.
அவ ஜெய்ப்பூர் அரண்மனையின் இளவரசி, இவ அவளுக்கு சப்பைக்கட்டு கட்ட வந்துட்டா…! போடி வேலையை பார்த்துக்கிட்டு…முகம் சுழித்துக்கொண்டார் ஜோதி.
“—————–”
தனது அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்தவள் கொந்தளிக்கும் மனதிற்கு அணை போடத் தெரியாமல் வேக மூச்சுகளை வெளித்தள்ளி தன்னை சமன்படுத்திக் கொள்ளப் போராடினாள்.
எந்த வகையில் சேர்ந்தவர் இந்த பெண்மணி? ஆகாத மருமகள் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்பார்களே… இந்த அம்மா அப்படித்தான்!
இன்னும் இன்னும் ஏன் அந்த அம்மாவுக்கு வெறுப்பு கூடிக் கொண்டே போகிறது?
அவரை எதிர்த்துப் பேச எவ்வளவு நேரம் ஆகிவிடும்? பொறுத்து பொறுத்து விலகி வந்தால் எகிறி அடிக்க துடிக்கிறாரே…
விஷ்ணுவை பார்க்க வேண்டுமே….என்று பொறுமை காக்கிறாள்.
அவன் தாயின் பக்கமும் இல்லை,தாரத்தின் பக்கமும் இல்லை.
இதில் விஷ்ணு மேல் குற்றம் சொல்ல முடியாதே…!
அன்றே அவன் கிளி பிள்ளைக்கு சொல்வது போல் படித்து படித்து சொன்னான்.
நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் அன்று அவன் பேசியது இன்றும் காதில் ரீங்காரமிடுகிறது.
என்னை பற்றி என்ன தெரியும் உனக்கு?சிரித்தபடி கேட்டான் டெல்லி அப்பளத்தை சுவைத்துக் கொண்டே….
ம்க்கூம்…. எதுவும் தெரியாது என்பது போல் உதடு பிதுக்கினாள்.
அப்புறம் எப்படி லவ்? குறும்பு கொப்பளித்தது அவன் பேச்சில்.
அதற்கும் தெரியாது என்பது போல் உதடு பிதுக்கினாள்.
நிறைய தமிழ் படம் பார்ப்ப போல… தலையில் அடித்துக் கொண்டான்.
நோ…ஹாலிவுட், ஸ்பானிஷ் மூவி என்றாள் சீரியஸாய்.
அவள் பதிலில் தன்னை மறந்து சிரித்து விட்டான்.
கள்ளமில்லா அவள் முகம் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ….நேத்ரா உன்னை எனக்கு பிடிச்சிருக்கா இல்லையாங்கிறது நெக்ஸ்ட்.
நீ நெய்வேலி டவுன்ஷிப்பில் பிறந்து வளர்ந்தவ,சென்னை சிட்டியில் படித்தவ, உன் ஹை ஃபை லைப் ஸ்டைலுக்கு எங்க குடும்பம் உனக்கு செட்டாகாது.
அதெல்லாம் செட் ஆகும்!கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்திப்பேன். வீரா வேசமாய் பதிலுரைத்தாள் .
சொல்றது ஈசி மா, நடைமுறைக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம்! உண்மையை சொன்னான்.
உன் கலரின் ஹேர், போனி டெயில், வெளுத்துப்போன ஜீன், இந்த காலர் வைத்த குர்தா இதையெல்லாம் பார்த்தாலே எங்க அம்மா சாமி ஆடிடுவாங்க.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பாவமாய் சிறு பிள்ளை போல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா, இல்லையா? வெளிப்படையாகவே கேட்டாள்.
அமைதியாக சிரித்தபடி அவள் முகம் பார்த்தான்.
நேத்ரா லவ் வேற, லைஃப் வேற!
தெரியும்!
இல்லம்மா லவ் பண்றப்ப எறும்பா தெரியறது எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு ஏரோபிளேன் மாதிரி பூதாகரமா தெரியும்!
அன்று அவன் சொன்னபோது அவன் மீது கோபமாக வந்தது இன்று அதெல்லாம் நடக்கும் போது தன்மீதே கோபமாக வருகிறது.
“—————–”
மதிய உணவிற்கு வராத நேத்ராவை தேடி வினிதா வந்தாள்.
அண்ணி சாரி,அம்மா பேசினது ரொம்ப தப்பு! தயக்கமாய் மன்னிப்பு கோரினாள் வினிதா.
ஐயோ அண்ணி அவங்க பேசினதுக்கு நீங்க எப்படி பொறுப்பாக முடியும்? நாத்தனாரை தேற்றினாள்.
அண்ணி, பேசாம நீங்க தனி குடுத்தனம் போயிடுங்களேன்!
error: Content is protected !!