Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி ♥️8

 தூக்கத்தில் இடது புறமாக உருண்டவள் உருள இடமில்லாமல் துழாவ…ரோமங்கள் நிறைந்த தன்னவன் மார்பில் கரம் பட்டு உணர்ந்து கொண்டாள்.

 நள்ளிரவு முடிந்து முற்பகல் தொடங்கிய பிறகு நித்திரையில் ஆழ்ந்தான் என்பதால் அவள் தீண்டல் அவனை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.

 அவன் விழித்திருந்தால் நடக்கும் கதையே வேறு (ஒரு ரொமான்ஸ் சீன் ஜஸ்ட் மிஸ்ஸிங் 😜)

 ஆழ்ந்த உறங்கும் தன் காதல் கண்ணாளனை கண் இமைக்காது பார்த்தாள்.



Advertisement

 நீ வசியக்காரன்!உன்னிடம் விழுந்த என்னை எழ விடாமல் பார்த்துக் கொள்ளும் வித்தை கற்றவன். என் உயிர் உடலை தழுவி இருக்கும் இறுதி நொடி வரை உன் நினைவு ஒரு நாளும் ஒரு கணமும் என்னை நீங்கி பிரியாது.

 இரவு விளக்கின் ஒளியில் அவள் உயிரில் உறைந்திருக்கும் அவன் திருமுகம் கண்டு லயித்தாள்.

 அது எப்படி இந்த ஒன்னே முக்கால் ஆண்டில் அவன்பால் கொண்ட காதல் இம்மியும் குறையாமல் இன்னும் இன்னுமாய் பல்கி பெருகி வாமன அவதாரம் போல் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது!

Advertisement

 தனக்குள் சிரித்து தளிர் மேனி சிலிர்த்து, அடர்ந்த அவன் கேசம் கோதி பரந்துபட்ட நெற்றியில் சுவடின்றி மென் முத்தம் பதித்தாள்.

Advertisement

குழந்தை அழவே சுவர் கடிகாரத்தை பார்த்தாள் மணி மூன்று.

 குழந்தையின் அழு குரலில் கணவன் உறக்கம் களைந்து விடுமே என்று கவலை கொண்டவள் அவசரமாய் குழந்தையை தூக்கி பசியாற்றினாள்.

 பிரணவ் மொச்சு மொச்சு என்று விழித்துக் கொண்டு கால் கட்டை விரலை வளைத்து வாயில் வைத்து சப்ப முயன்றான்.

Advertisement

 இப்படி பண்ண கூடாது செல்லம் அழுக்கெல்லாம் வாயில் போயிடுமே…

கிசுகிசுப்பாய் குழந்தைக்கு அறிவுரை பகன்று கால்விரலை வலிக்காது தட்டிவிட்டாள்.

ங்கே…ங்கே என்று மழலை மொழி மிழற்றி கை கால் உதைத்து குஷி மூடில் சத்தம் போட்டு விளையாடத் தொடங்கி விட்டது குழந்தை.

 குழந்தைகள் அதிகாலை தான் அதிகம் ஆர்ப்பாட்டம் செய்யும் என்று அன்னம் பாட்டி சொல்வதுண்டு.

 ஐயோ பட்டு அப்பா தூங்குறாங்க தங்கம்! வா நாம வெளியில் போலாமா? குழந்தையை மார்பில் அணைத்து திருஷ்டிக்காய் மை வைத்திருந்த கன்னத்து பொட்டில் அழுந்த முத்தமிட்டாள்.

 ஓசையின்றி மெல்ல நடந்து பால்கனி கதவை திறந்து அங்கு தொங்கிய பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்தார்கள் தாயும் சேயும் .

 என்ன தங்கம் தூக்கம் வரலையா? அம்மாக்கு தூக்கமா வருது…. கொட்டாவி விட்டபடியே குழந்தையை தோளில் போட்டு தட்டிக் கொண்டு மெல்ல காலை விந்தி ஊஞ்சலை ஆட்டினாள்.

 அன்னையின் அரவணைப்பான உடல் சூடு… மெல்ல தொட்டில் போல் ஆடும் ஊஞ்சல்,வயிறு நிறைந்திருந்த குழந்தை மெல்ல மெல்ல கண்ணயர்ந்தது.

 தன் முதல் செல்லமானவனை எண்ணி,சற்று முன் முத்தமிட்ட அவன் வதனத்தை எண்ணி செல்களில் காதல் பூ பூக்க அதை தொடுக்கவோ கோர்க்கவோ என்ற மையலில் தலை லேசாக கிறுகிறுக்க உறங்கிப் போனாள்.

“————–”

 தொழுவத்தில் இருந்து காமாட்சியின் குரல் ம்ம்ம்மா என்று அழைத்தது.

 பின் வாசல் புறமிருந்து போ போ…பக் பக் கோழிகளின் சத்தம்.விடியலுக்கான சாட்சியாய் பறவைகள் இரைதேடி பறக்கும் கிரீச் ஓசை எல்லாம் சேர்ந்து கிறங்கி மயங்கி இருந்தவளை உசுப்பி விட்டது.

 பதறி அடித்து கண்ணை கசக்கினாள். நிலம் தெளிய வெளிச்ச போர்வையை கிரணத்தால் போர்த்திக் கொண்டிருந்தான் இரவி.

 அடிக்கடி அவள் ரசிக்கும் அதி அற்புதக் காட்சி இது. பூமி மகள் கருப்பு போர்வை நீக்கி வெள்ளுடை தரிக்கும் அழகிய காட்சி.

 குழந்தை கையில் இல்லாது போக பதறி எழுந்தாள். அறையில் பிரணவ் தந்தை மார்பில் துயில் கொண்டிருந்தான்.

 இருவரையும் இமைக்காது பார்த்தவள் ஆளுக்கு ஒன்றாய் அவசர முத்தம் வைத்தாள். குழந்தைக்கு பட்டு கன்னத்திலும், கணவனுக்கு சுழியும் அதரத்திலும்.

“————————”

 மீண்டும் போய் பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து…விட்ட காட்சியை தொடர்ந்தாள்.

 கண்முன் அவளவன் கூற்று காட்சியாய் விரிந்தது.

 பூவை சுத்தி இருக்கும் முள் கூட அழகுங்கிற, குளியல் அறையில் மூடி இருக்கும் குழாயில் சொட் சொட் என்று விழும் தண்ணீரும் சங்கீதங்கிற, அமாவாசை அழகுங்கிற! எனக்கு ஒன்னும் புரியல…

கேலியாய் சிரித்தான் விஷ்ணு.

 ஹலோ இதெல்லாம் இபிகோ படிச்சவங்களுக்கு புரியாது பாஸ், லிட்ரேச்சர் படித்தவர்களுக்கு மட்டும்தான் புரியும்!

போடீங்க… நீயும் உன் புடலங்காய் லிட்ரேச்சரும்…

வலிக்காது அவள் கன்னம் கிள்ளினான்.

பாஸ்.. யூ நோ ஒன் திங்… உலகில் உள்ள எல்லோரும் லிட்ரேச்சர் படித்தாலே போதும் உங்களை மாதிரி கிரிமினல் லாயர்ஸ் எல்லாம் கடையை மூட வேண்டியது தான்.

வர வர நீ நல்லா ஆர்கியூ பண்ற நேத்ரா…. அவள் தலையை பிடித்து ஆட்டினான்.

 உண்மையை சொன்னா உலகம் நம்பாதே…மூக்கை சுருக்கி கண்களை இடுக்கி சிரித்தாள்.

 முப்பொழுதும் அவன் நினைவே தன்னை ஆட்டுவிப்பதை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள்.

“———————”

 தந்தையும் மகனும் பசையிட்டார் போல் ஒட்டிக்கொண்டு உறங்குவதை பெருமையுடன் பார்த்தாள்.

 குழந்தை நெடுநேரம் அவன் மார்பில் உறங்குவது உணர்ந்து மெல்ல அவன் கரம் விலக்கி குழந்தையை தூக்க முயன்றாள். முயன்றாள்…

முயன்று கொண்டிருந்தாள்.. முடிந்தால் தானே?

அவளது முரட்டு வக்கீலின் பிடி அப்படி! சத்தமின்றி சிணுங்கி நின்றவளின் கரம் பற்றி சொடுக்கி இழுத்தான்.

பஞ்சு பொதியாய் அவன் மார்பில் விழிந்தாள்.

குழந்தையை அணைவாய் பற்றியிருந்தவன் குழந்தை மேல் அழுத்தாமல் அவள் பாரத்தை இடது தோளுக்கு மாற்றினான்.

என்ன என்பதாய் கோப பார்வை பார்க்க முயன்றாள்.

சும்மாபார்த்தேன், மூக்கோடு மூக்கு உரசி ஸ்பரிசித்து சிலிர்த்தான்.

விடுங்க! அவள் திமிராமல் திமிறி எழ முயல்வது போல் முயன்றாள்.

ரொம்ப பிகு பண்ணாத குடைமிளகாய். இப்போ என்னை நினைச்சுட்டு தானே பால்கனியில் உட்கார்ந்திருந்த? மீண்டும் அவள் குடைமிளகாய் மூக்கை உரசினான்.

எப்போதடா உன்னை மறந்தேன்…இனிமையாய் மனதிற்குள் சலித்துக் கொண்டு ஆமாம் எங்களுக்கு வேற வேலையில்லை…

அல்லும் பகலும் இவர் நினைவா திரியறோம்! சடைத்துக் கொண்டாள்.

இல்லையா பின்ன? அவள் இடையை இறுக்கிக் கொண்டே…வலபக்கம் துயில் கொண்ட தன் உயிரை கட்டிலில் கிடத்தினான்.

ஷ்…. விடுங்க! கையை உதறினாள், வீண் முயற்சி என்று தெரிந்தும்.

எனக்கு தெரியும்! என் குடைமிளகாய்க்கு எந்நேரமும் என் நினைப்பு தான். அவள் நைட்டி காலரை பற்றி இழுத்தான்.

ச்சு….குடைமிளகாய்னு சொன்னா எனக்கு கெட்ட கோபம் வரும். சென்ற நொடி வரை முகம் சிவந்திருந்தவளுக்கு இப்போது கண்கள் சிவந்தது.

உன் மூக்கு அப்படி தானே இருக்கு….! அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.

அப்படிங்களா கிரான்பா…. விழி உருட்டி குறும்பாய் கேட்டாள்.

ஏய் ஒத்த பிள்ளை தான் பெத்திருக்கேன். இன்னும் மூனு பெத்துக்கணும்னு பிளான் வைத்திருக்கேன் அதுக்குள்ள கிரான்பாவா? இப்பொழுது அவன் கண்கள் சிவந்தது.

பின்ன…. முப்பதிலே முடி நரைச்சு பல்லை காட்டுதே… அவள் பழிப்பு காட்டினாள்.

 இது “ஞான நரை” தன் தேசத்தை, கோதிக் கொண்டான்.

 இது” கேன நரை” அடக்கி அடக்கி சிரித்தாள்.

அடங்குடி! ஐயா இப்போ போய் ரோட்ல நின்னா கூட எவ்வளவு பிகர் சைட் அடிக்கும் தெரியுமா? மீசையை முறுக்கினான்.

 செருப்பு பிஞ்சிடும்! பல்லை கடித்தாள்.

எதே… வாயை பிளந்து பார்த்தான்.

 என்ன லுக்கு? சைட் அடிக்கிறவளுக்கு சொன்னேன்.அவன் தலையில் நங்கென்று குட்டினாள்.

நீ மட்டும் என்னை சைட் அடிச்சு தானே கட்டிக்கிட்ட? அவன் குறும்பு கேள்வியும் கூர் பார்வையுமாய் பார்க்க…வெட்கி போனவள் நான் தான் மாட்டிகிட்டேன் வேறு எவளாவது மாட்டாம தப்பிகட்டுமேன்னு தான் நானே கட்டிக்கிட்டேன். சற்றும் யோசிக்காமல் சரமாரியாய் ராக்கெட் விட்டாள்.

எது எப்படியோ காபி போட கத்துக்கலைனாலும் வாய் கிழிய பதில் பேச கத்துக்கிட்ட…இதழ் சுழித்து அவளை வெறுப்பேற்றி சிரித்தான்.

 ஏன் கேட்டரிங்கில் கோல்டு மெடல் வாங்கினவளா பார்த்து கட்டிக்க வேண்டியது தானே? கோபமாய் நொடித்துக் கொண்டாள்.

 எங்க நீ விட்டா தானே? கோயில் காளை கணக்கா சுத்திகிட்டு இருந்த என்னை வளைத்து போட்டுட்டல்ல… அவள் இதழை தன் விரலால் மீட்டினான்.

 விட்டில் பூச்சு வெளிச்சத்தை நம்பி விளக்குக்குள்ள விழுந்து சாகுமாம்!அவள் கோபத்தில் குமுறினாள்.

 ஏய்….நேத்ரா விளையாட்டுக்கு தானேப்பா சொன்னேன்! .அவள் இதழ் ஒற்ற முனைய…துளிர்த்த கண்ணீரை அடக்கிக் கொண்டவள் அவனை வேகமாய் உதறி எழுந்தாள்.

 இரண்டு மூன்று முறை சொல்லிக் காட்டி விட்டான்.

விளையாட்டாய் சொன்னானோ, வினயமாய் சொன்னானோ?அவள் துரத்தி துரத்தி காதல் சொன்னதை.

நான் தான் துரத்தி துரத்தி லவ் பண்ணினேன். நீங்க உறுதியா ஒதுங்கி போயிருக்க வேண்டியது தானே…? நீங்க சின்னத்தம்பி பிரபு உங்களுக்கு கல்யாணம்னா என்னன்னு ஒன்னும் தெரியாது. ஏமாளியா என் கழுத்தில் தாலி கட்டிட்டீங்க பாருங்க!

 அவள் சீரியஸாக பேச கேட்டவன்…ஹே குடமிளகாய் சும்மா கேலிக்கு பேசினா இவ்வளவு சென்சிட்டிவா பீல் பண்ற… அவளை சமன்படுத்த முயன்றான்.

 எது கேலி?நான் உங்களை சுத்தி சுத்தி வந்ததா? எங்க வீட்ல நீங்க வந்து எங்க அப்பாவை மிரட்டினதா?

உங்க குடும்பம் பத்தி தெரிந்தும் நான் துணிந்து தலையை கொடுத்ததா? இன்னும் இங்கே சகிச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கேனே இதை விட கேலி இருக்கா? சூடான கடாயில் போட்ட பாப்கான் போல் பொரிந்து தள்ளிவிட்டு பாத்ரூமில் நுழைந்து படார் என்று அறைந்து கதவை சாத்தினாள்.

“——————-”

 வழமையான மூடில் அவன் இருந்திருந்தால் காரசாரமாக பேசி எகிறி இருப்பான். அவன் இன்று துள்ளி குதிக்கும் மூடில் இல்லை.ஒரு வகையில் அவள் சொல்வது உண்மைதானே? அவன் கோபக்கார கிளியின் கோபம் அவன் மனதை சன்னமாய் பிசைந்து விட்டது.

 பல நேரங்களில் மிக நல்லவனாக இருப்பவன் வெகு சில நேரங்களில் பிடிவாதக்காரன்.

இன்றும் அப்படி தான்… தாய் பேசிய பேச்சு தவறு என்று அறிந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.தான் அறிந்து கொண்டதை தன் மனைவியிடம் சொல்லிக் கொள்ளவில்லை.

தவறு தான் மறுப்பதற்கில்லை என்றாலும் குடும்பம் சம்பந்தப்பட்டது.என்ன நடந்தது என்று கேட்டு மீண்டும் கிளறிவிட்டால் நேத்ரா மனம் நொந்து போய்விடுவாளே என்ற பயம்.

 அதற்காக அவன் தாய்க்கு ஆதரவு என்பதல்ல. அவரை விலக்கிச் செல்ல ஒரு நிமிடம் போதும்.அவன் அப்படியான குணநலன்களோடு வளரவில்லை.

 பரம்பரை பெருமை சொல்ல ஒற்றை ஆண்மகன். அவன் நான்கு புறமும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அல்லவா இருக்கிறான்!

 அவன் தாயிடம் அதிருப்தி என்றால் சிறு முகச்சுழிப்போடு ஒதுங்கி கொள்வான். இதுவரை கடுமைகாட்டி பேசியதில்லை.

 கோபமோ, பிடிவாதமோ,சிரிப்போ, காதலோ அவன் ஆசை மனைவியிடம் மட்டுமே…

‘————–”

மனைவி கோபித்துக் கொண்டாள் என்பதைவிட கடந்த 10 நாட்களில் இன்று தான் அவனுடன் பேசி இருக்கிறாள் என்ற மகிழ்வே அவனுக்கு திருப்தியாய் இருந்தது.

 அனேகமாய் பாத்ரூமுக்குள் அழுகிறாள் போலும். நெடு நேரமாய் வெளியில் வரவில்லை.அவளை சீண்டி விளையாட முடிவு செய்தான்.

 ஏய் நேத்ரா கதவை திற ஒற்றை விரலால் என்று தட்டினான்.

பேச்சு மூச்சு இல்லை.

  நேத்ரா … உன்னைத்தான். கதவைத் திறடி! நான் பிரஷ் பண்ணனும்.

ம்க்கும்…நோ ரியாக்ஷன்.

 பெயரைப் பாரு நேத்து முந்தா நேத்துன்னு சத்தமாய் முனு முனுத்தவனை நோக்கி பிளாஸ்டிக் மக் சீறிப்பாய்ந்து வந்தது.

கேட்ச்…. லாவகமாய் பிடித்தவன் சத்தமாய் கத்தினான்.

 இவன் கத்தலில் குழந்தை பயந்து அழ…அய்யோ செல்லம் அம்மா இதோ வரேன்டா! கணவனை முறைத்துக் கொண்டே ஓடினாள்.

“————/—–”

 கீழே வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த வினிதாவை கண்டான்.

வா வினி எப்போ வந்த? சந்தோஷ் வரலையா?அவள் வந்ததை அறியாதது போல் இயல்பாக கேட்டான்.

 நைட் வந்தேண்ணா. அவருக்கு லீவு இல்லை. தியா குட்டிக்கு குவார்ட்டலி எக்ஸாம் லீவ். பிரணவை பார்க்கணும்னு ஒரே அடம்,அதுதான் டிரைவரை அழைச்சிட்டு வந்துட்டோம்.

 தியா தூங்குறாளா?

ஆமாம் அண்ணா!

சரிம்மா நான் வாக்கிங் போயிட்டு வரேன்.

 விஷ்ணு நைட் எப்போ வந்த? சாப்பிட்டியா?மகாராணி சாப்பாடு எடுத்து வைத்தாளா? கண்டுக்காம தூங்கிட்டாளா? ஜோதி அதிகார குரலில் கேள்விக்கணைகள் தொடுக்க…நிற்கவோ பதில் பேசவோ விரும்பாது அவன் நடையை கட்டினான்.

 அண்ணனின் வேகநடை வினிதாவை கலவரப்படுத்தியது.

அச்சத்துடன் தாய்முகம் பார்த்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!