அதிர்துடியன் குவாரியில் இருந்து கிளம்பி காரை சென்று திறக்கவும் அவன் கைபேசி ஒலித்தது..,
சுகமதியின் எண்ணை கண்டு, ‘சொல்லுங்க அத்தை’ என்றான்.
ஆனால் மறுபுறமோ ‘ஹலோ சார்’ என்று விஷ்ணுவின் குரல்,
இப்போது பேக்டரிக்கு செல்லாமல் தனக்கு ஏன் அழைத்தான் என்று அதிரின் புருவம் முடிச்சிட, ‘சார்’ என்று மீண்டும் விஷ்ணு.,
‘ஹ்ம்ம்… சொல்லு விஷ்ணு’
‘சார் எனக்கு ரெண்டு மணி நேரம் பர்மிஷன் வேணும்’
‘எதுக்கு..??’
‘என் அக்காவை பார்க்கணும் போல இருக்கு நான் பார்த்துட்டு பேக்டரிக்கு போறேன்’ என்றான் இறுகிய குரலில்…
பின்னே எப்போதும் யாழியுடனே சுற்றி திரிபவனை அவளிடம் இருந்து பிரித்தது மட்டும் இல்லாமல் நினைத்த நேரத்தில் உடனே சென்று பார்க்கவும் முடியாமல் இப்படி அவனிடம் அனுமதி கேட்கும் நிலையில் நிறுத்தி இருப்பதில் ஏக ஆதங்கம் விஷ்ணுவிற்கு.
அவன் கோபம் புரிந்த அதிரனின் முகத்தில் இளநகை படர்ந்தது.., ‘ஏன் சண்டே உனக்கு ஆப் தானே அப்போ போய் பார்க்கிறது’ என்று கேட்க மறுபுறம் அமைதி,
‘சரி இன்னைக்கு ஓகே போயிட்டு வா ஆனா இப்படி அடிக்கடி பர்மிஷன் கேட்க கூடாது… எனக்கு வேலை எந்த தடையும் இல்லாம நடக்கிறது முக்கியம்’ என்று அவன் வைக்க,
‘ம்மா நான் யாழியை பார்த்துட்டு பேக்டரி கிளம்புறேன்’ என்று அன்னையிடம் மொபைலை கொடுத்து விட்டு கிளம்பினான்.
அதிர்துடியன் மனதில் இடம் பிடிக்கும் வேகத்தில் யாழியும், யாழியை குறையின்றி அதிர் பார்த்து கொள்ள வேண்டி விஷ்ணுவும் தீவிரமாக படிப்பில் கவனம் செலுத்தி கொண்டிருந்தாலும் இருவருமே தினமும் ஒரு முறையாவது பேசி விடுவர்…
விஷ்ணு நைட் ஷிப்ட் முடித்து அயர்ச்சியில் அங்கேயே உறங்கிவிடுபவன் காலை பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்து குளித்து கல்லூரி செல்ல சரியாக இருக்கும்.., ஆனால் மதிய நேரம் உணவு இடைவெளியில் மறக்காமல் அவளுடன் பேசி விடுவான்… யாழியும் தம்பியின் அழைப்பிற்காக காத்திருப்பவள் இப்போது பரீட்சைக்கு படிப்பதில் தொடங்கி வீடியோ எடுப்பது வரை அன்றாட நிகழ்வுகளை அவனுடன் பகிர்ந்து கொள்வாள்.
இதோ இப்போதும் அவளை தேடி வரும் தம்பிக்கு சுட சுட பஜ்ஜி, கட்லெட் செய்து கொண்டிருந்தவள் காபி தயாரித்து மற்றவர்களுக்கும் கொடுத்து விட்டு அவன் வந்ததும் அழைத்து கொண்டு மாடிக்கு சென்று விட்டாள்.
விஷ்ணு தானும் அரியர் கிளியர் செய்ய வேண்டி படித்து கொண்டிருப்பதை கூற,
‘டேய் வேலையும் பார்த்துட்டு எப்படிடா படிக்கவும் செய்யற, போதும் விஷ்ணு நீ வேலையை விட்டு நின்னுட்டு வீட்டுல இருந்தே படி அப்போதான் கிளியர் பண்ண முடியும்’
“இல்ல யாழி முதல்ல கஷ்டமா இருந்தாலும் இப்போ எனக்கு பழகிடுச்சி.. காலேஜ் நைட் ஷிப்ட் ரெண்டும் பேலன்ஸ் பண்ண கத்துகிட்டேன் அதோட அப்பா அங்க நாள் முழுக்க தூசிலயும், சத்தத்துலயும் அங்க இருக்க நார்த் இந்தியன் பசங்க கூட போராடுறதையும் பார்த்தா எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்குடி” என்று வருத்தத்தோடு கூற,
‘என்னடா சொல்ற..??’
“ஆமாடி அப்பா வேலை ஒன்னும் அவ்ளோ ஈசி கிடையாது” என்று கல்லூரி விடுமுறை நாட்களில் எல்லாம் முழு நேரமும் மற்ற நேரங்களில் குறைந்தது மூன்று மணி நேரமாவது பேக்டரியில் மகேஷ்வரனுடன் இருக்கும் விஷ்ணு தந்தையின் வேலை தன்மையை, அங்கு இருப்பவர்களிடம் எப்படி அவர் வேலை வாங்குகிறார் , எத்தனை பொறுப்புகளை சுமக்கிறார், அவர் சந்திக்கும் சிக்கல்கள், தன் வயதை பொருட்படுத்தாமல் ஓய்வின்றி பம்பரமாக சுழன்று கொண்டிருத்தல் குறித்து எடுத்து கூற,
இத்தனை நாட்கள் தந்தை சம்பாதிக்கிறார் நமக்கு செலவு செய்கிறார் என்ற அளவில் தெரிந்து வைத்திருந்த குழந்தைகள் இப்போது பணம் வரும் பின்னணியை கண்டு கலங்கி போயினர்…, அதிர்துடியன் வலுக்கட்டாயமாக விஷ்ணுவை அங்கே சேர்த்ததே உழைப்பின் அருமை, பொறுப்போடும் சேர்த்து தந்தையின் கஷ்டங்களை உணர வேண்டும் என்ற நோக்கத்தோடு தான்.., அது இப்போது வெற்றி அடைந்துள்ளது.
‘அப்பா இவ்ளோ கஷ்டபடுறாரா விஷ்ணு’ என்றவளின் கண்கள் கலங்கி இருந்தது…
‘ஆமாடி பேக்டரில முக்கால்வாசி நேரம் நின்னுட்டு இல்ல நடந்துட்டே தான் இருப்பாரு சில நேரம் நான் அவர்கிட்ட நீங்க போய் ரெஸ்ட் எடுங்கப்பான்னு சொன்னாலும் போக மாட்டார்.. ஏன்பா இப்படி இருக்கீங்கன்னு கேட்டா..’
“செய்யும் வேலைக்கு உண்மையா நேர்மையா இருக்கணும் அவர் சரியா இருந்தா தான் அவருக்கு கீழ இருக்கிறவங்களை அதிகாரம் பண்ண முடியும், அப்போதான் அவர் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும்.., ஒருவேளை உழைக்க பயந்துட்டு அவரே ஏமாற்ற நெனச்சா சம்பளம் கொடுக்குற முதலாளியை முட்டாள் ஆக்குறதா அர்த்தம் இல்ல அவரை அவரே முட்டாள் ஆக்கிறதா அர்த்தம்ன்னு சொன்னாரு யாழி”.
‘ஏன்டா அப்படி’
‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவானாம் அப்படி நாம ஏமாத்துறது தெரிய வரும் போது நம்முடைய மரியாதை இழந்து அவமானப்பட்டு நிற்க்கனுமாம்.., கொடுக்குற சம்பளத்துக்கு வேலை பார்க்க தானே வந்திருக்கோம் அப்போ அதை சரியா செஞ்சிட்டு போகணும் சொல்லி நேரத்துக்கு சாப்பிட மாட்டேங்கிறார்’
‘எனக்கு எப்படியாவது படிச்சி நல்ல பொசிஷன்க்கு வந்து அவருக்கு வேலையில் இருந்து ரெஸ்ட் கொடுக்கணும்ன்னு இருக்கு’ என்று கூற
‘ஆமா விஷ்ணு அன்னைக்கு அம்மாவும் இதே தான் சொன்னாங்க ஆனா நாம தான் அப்பாக்கு வேலையோட சேர்த்து எவ்ளோ டென்ஷன் கொடுத்துட்டோம் இல்ல’
‘ஆமாடி எனக்கும் இப்போ தான் அது புரியுது..!! எத்தனை தடவை அவரை மதிக்காம எடுத்தெறிஞ்சு பேசி இருப்பேன் ஆனா இப்போலாம் வேலை செய்யற இடத்துல அந்த பசங்க அப்பாவை ஏதாவது பேசினா எனக்கு தாங்க முடியலை கோபம் வருது ஒரு முறை அடிக்கவே போயிட்டேன் ஆனா அப்பா தான் தடுத்துட்டார்’
‘என்னடா சொல்ற..??’
‘ஆமா யாழி வேலை நேரத்துல ஏதாவது ஒரு சாக்கு சொல்லி ஏமாத்த பார்க்கிறது இல்ல சரியா முடிக்காம தாமதபடுத்துறது, அப்பாவை எரிச்சல் ஆக்குறதுன்னு ரொம்பவே பண்றாங்க ஆனா அப்பா அவங்களை ரொம்பவே பொறுமையா டீல் பண்ணுவார் இல்லையா சார் கிட்ட சொல்லி கவனிக்க வைப்பார்.., அப்படிப்பட்ட அவரையே நாம டென்ஷன் பண்ணி அடிக்க வச்சிட்டோம்’ என்று தந்தையை உணர்ந்து பேசிக்கொண்டே சென்ற மக்கள் இறுதியில் இனியும் அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல் தோள் கொடுத்து நிற்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தனர்.
விஷ்ணு பேக்டரிக்கு திரும்பி அதிர்துடியன் அறையை தட்டி உள்ளே செல்ல அங்கு அவனெதிரே நின்றிருந்த ப்ரித்வியை கோபமாக கத்தி கொண்டிருந்தான் அதிர்துடியன்.
ப்ரித்வியோ மௌனமாக தலை குனிந்து நின்றிருந்தவன் இறுதியாக, ‘சாரிண்ணா கண்டிப்பா இன்னொரு முறை இந்த தப்பு நடக்காது நான் கவனமா இருக்கேன்’ என்றான்.
‘டேய் போதும்டா நிறுத்து இதுக்கு மேலயும் உன்னோட லேம் எக்ஸ்கியுஸஸ் கேட்க நான் தயாரா இல்லை, உன்னோட கவனம் எங்க இருக்கு..?? வர வர உன் மேல இருக்க நம்பிக்கை குறைஞ்சிட்டு வருது ப்ரித்வி.. இப்படியே போச்….’ என்று பேசிக்கொண்டே போனவன் கைபேசியின் அழைப்பில் தன் பேச்சை நிறுத்தி அதை துண்டித்து விட்டு மீண்டும் ப்ரித்வியிடம் தன் அர்ச்சனையை தொடர்ந்திருந்தான்.
அவன் நிறுத்த போவதில்லை என்பதை உணர்ந்த விஷ்ணுவோ ‘சார்’ என்றழைத்து, தன்னோடு கொண்டு வந்த அறிக்கையை அவனிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றான்.
மேலும் சில நிமிடங்களுக்கு பின் வெளியே வந்த ப்ரித்வியிடம் சென்ற விஷ்ணு,
“என்ன பாஸ் உங்க அண்ணன் இப்படி திட்டிட்டே போறாரு அதுவும் சின்ன பையனான என் முன்னாடியே” என்று கேட்க
‘ஏன் விஷ்ணு எங்க அண்ணனுக்கு என்னை திட்ட உரிமை இல்லையா…??’ என்று எதிர் கேள்வி கேட்க,
‘இருக்கு.. ஆனா இப்படியா..?? எப்பபாரு கடுகடுன்னு எங்க கிட்ட தான் நடந்துக்குறாருன்னு பார்த்தா சொந்த தம்பி உங்க கிட்டயுமா..??’
‘அதான் எங்க அண்ணன் அவருக்கு பாசத்தை கூட இப்படி கோபமா கடினமா தான் காட்ட தெரியும்’ என்று புன்னகையோடு கூற,
‘என்னது இது பாசமா..??’ என்ற திகைப்பு விஷ்ணுவிடம்
“இல்லையா பின்னே..?? இதுவும் பாசம் தான் விஷ்ணு, சில நேரம் நம்ம மேல இருக்க அதீத பாசம் இப்படி கோபமா வெளியேறும் அப்படி வரக்கூடிய அவரோட கோபம் என்னோட நல்லதுக்காக தானே இருக்கும் ..??” என்றிட விஷ்ணுவோ புரியாமல் பார்த்திருந்தான்.
“விஷ்ணு இப்போன்னு கிடையாது ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி மூத்தவரான அவர் இருக்க லவ் பண்ண பெண்ணை கட்டிவைங்கன்னு நான் நின்னப்ப கூட எனக்காக என் மனசை பார்த்து என் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் நல்லா இருக்கனும்ன்னு என்னோட உயிரை விட வேற எதுவும் முக்கியமில்லைன்னு சொல்லி எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி எனக்கு கல்யாணம் பண்ணி வச்சவரு எங்கண்ணன்… அவருக்கு என்னை திட்ட மட்டுமில்லை அடிக்கவும் உரிமை இருக்கு” என்றிட
‘என்ன பாஸ் சொல்றீங்க உயிரை விடன்னா..?? என்ன ஆர்த்தம்..??’
கண்களை மூடி சில கணம் நின்றவன், ‘ஆமா விஷ்ணு அண்ணாக்கு முன்னாடி உனக்கு பண்ண முடியாதுன்னு வீட்ல சொன்னப்போ இப்பவே எனக்கு சாரு வேணும் அவளை கல்யாணம் பண்ணி வைக்கலை உயிரை விட்டுடுவேன் சொல்லி சுயநலமா எல்லாரையும் மிரட்டி கையை கிழிச்சின்னு பெரிய ஆர்பாட்டமே பண்ணிட்டேன்’
‘பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..’ என்று அதிர்வோடு அவன் பார்க்க,
‘ஆமாடா ஆனா எனக்காக, என்னோட ஆசைக்காக மட்டுமே பார்த்தவர் அவருக்கு முன்னாடி தம்பியான எனக்கு கல்யாணம் ஆனா அவரை என்ன நினைப்பாங்க அவருக்கு இதனால என்ன பாதிப்பு வரும்ன்னு எதையும் அவர் யோசிக்கவே இல்லை.., அதுக்கு ஏத்த மாதிரி அவருக்கு பெண் பார்க்க போன இடத்துல நிறைய கேள்விகள் ரெண்டு வருஷமா என்னால தான் அவருக்கு கல்யாணம் டிலே ஆகிட்டே வந்தது.. ஆனா ஒரு முறை கூட வீட்ல யாரும் என்னை குறையா பேசலை.., பேசலைங்கிறதை விட என் அண்ணன் பேச விடலை’
“அதுக்கு பேர் பாசம்ன்னா இப்போ பேசினதும் பாசம் தான் என்ன அதை உணர நமக்கு பக்குவம் வேணும்… நம்ம மேல அக்கறை இருந்தா தான் கோபம் வரும் விஷ்ணு ..!!” என்று கூறவும் யாழியும் எப்போதும் அவனை பாராட்டி கொண்டே இருக்க மாட்டாளே அவளிடம் எத்தனை அடி வாங்கி , பேச்சு வாங்கி இருப்பான் அதை நினைத்து பார்த்த விஷ்ணுவின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
“பாசம் எப்பவும் ஒரே விதமா தான் வெளிப்படனும்ன்னு எந்த அவசியமும் இல்ல விஷ்ணு சில நேரம் மௌனமா, சில நேரம் சின்னதா நம்மள தட்டி கொடுக்கறதுல, சில நேரம் திட்டுக்கலா, சில நேரம் ஓங்கி வைக்கிற அறையா.., சில நேரம் கண்டிப்பான பார்வையா, சில நேரம் பாராட்டா, இப்படி பலவிதமா வெளிப்படும் ஆனா அதை புரிஞ்சிக்கிற பக்குவம் நமக்கு இருந்தா அந்த நேரம் நம்ம ஈகோவை முன்னிறுத்தாம அந்த கோபத்தின் காரணத்தை புரிஞ்சிகிட்டா போதும் எந்த குழப்பும் வராது எந்த உறவுடனும் சிக்கல் எழாது..”
“பாஸ் நீங்க வேற லெவல் !! எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க எவ்ளோ பொறுமையா நிதானமா இருக்கீங்க ஆனா உங்க அண்ணன் எப்ப பாரு கை நீட்டறது மிரட்டுறதுன்னு அடாவடியா இருக்காரு” என்று புகார் வாசிக்க,
‘இப்போ நீ சொல்ற இந்த ப்ரித்வி இப்படி இருக்க காரணமே எங்க அண்ணன் தான்டா..’
‘அவரா..?? என்று திகைத்தவன் எப்படி பாஸ்..??’
‘சில வருஷத்துக்கு முன்ன என் கிட்ட இந்த நிதானமும் பொறுமையும் இருந்தது இல்ல, நான் மட்டுமே சரின்னு யாரையும் மதிக்காம தன் போக்கில் இருந்தவன் நான்..!! பெரியவங்களோட வார்த்தையை உதாசினபடுத்தினா தறுதலையா போயிடுவோம் சொல்லுவாங்க ஆனா இப்போ அதுக்கு நானே எடுத்து காட்டா இருக்கேன்… முக்கியமா உன் வயசுல நான் இப்படி இல்ல விஷ்ணு’
‘இப்படின்னா..?? என்ன சொல்றீங்க பாஸ்’
‘இதோ இப்படி பொறுப்பா படிப்பு, உழைப்பு இரண்டின் முக்கியத்துவமும் உணர்ந்து இருக்கிறது..’ என்றான்.
******************************************
ஆணோ பெண்ணோ யாரா இருந்தாலும் செல்ப் ஐடென்டிட்டி இருக்கணும்ன்னு எங்க அப்பா சொல்லிட்டே இருப்பார் ஆனா எனக்கு அப்போ அது புரியலை… மை லைப் மை ரூல்ஸ் யாருக்கும் அதுல தலையிட உரிமை இல்லைன்னு சொல்லி ரெண்டு தலைமுறைக்கு தேவையான அளவு சொத்து அப்பா சேர்த்து வச்சிருக்கப்போ நான் எதுக்கு கஷ்படனும் இது அனுபவிக்கிற வயசுன்னு சொல்லி ஒழுங்கா படிக்காம ஊர் சுத்திட்டு, பிரெண்ட்ஸ் அது இதுன்னு இருந்துட்டேன்…”
“ஆனா அந்த ரெண்டு தலைமுறை சொத்தை கட்டி காப்பாத்த கூட நமக்கு திறமை இருக்கணும் இல்லன்னா எல்லாமே ஒன்னும் இல்லாம போயிடும்ன்னு எனக்கு அப்போ புரியலை…” என்று வருத்தத்தோடு கூற,
‘ஏன் அப்பவே உங்க அண்ணா உங்களை எதுவும் சொல்லலையா..?? இப்போ வந்து திட்டிட்டு இருக்கார்’
“அண்ணா அப்போ ஹையர் ஸ்டடீஸ்க்காக பாரீன் போயிருந்தார் அதோட எனக்கு எங்க அம்மா செல்லம் அதிகம் அண்ணாவோ அப்பாவோ ஏதாவது சொன்னா சப்போர்ட்க்கு எங்க அம்மாவை கூப்பிட்டுப்பேன்.., அண்ணா ப்ளஸ் ஒன் படிக்கிறப்பவே ஸ்கூல் முடிச்சிட்டு குவாரி பேக்டரிக்கு போவார் ஆனா நான் என்ஜாய்மென்ட் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையான்னு சொல்லி பிரெண்ட்ஸ் கூட ஊர் சுத்துறது லவ் பண்றேன்னு பொண்ணுங்க பின்னாடி சுத்துறது அவங்களை மடக்குறது தான் ஹீரோயிசம்ன்னு சொல்லிக்கிட்டு ஒழுங்கா படிக்காம, எதையும் கத்துக்காம உண்மையான காதலையே உணராம என் வைப்கூட காதலங்கிற பேருல சுத்திட்டு இருந்தேன்’
“உன்னை மாதிரி அப்பா கூட நேரம் செலவிடுறதுன்னு நான் இருந்தது இல்லை எப்பவும் பிரெண்ட்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுப்பேன் அதோட எனக்கு டிரிங்கிங் ஹாபிட் இருந்தது அடிக்ஷன் இல்லனாலும் பிரெண்ட்ஸ் வற்புறுத்தலால சேலஞ்க்காக சுயகட்டுபாடு இல்லாம சில நேரம் குடிச்சிருக்கேன் ஆனா அது வீட்டுக்கு தெரியாம பார்த்துப்பேன் கல்யாணத்துக்கு அப்புறம் என் வைப் கிட்ட இருந்து மறைக்க முடியல, அவளால் அதை ஏத்துக்க முடியல அதனால எங்களுக்குள்ள சண்டை அதுக்கு அப்புறம் இது தான் காரணம்ன்னு இல்லாம எல்லாமே காரணமாகி ஒரு கட்டத்துல டிவோர்ஸ்ன்னு போயிட்டோம்..”
‘என்னது டிவோர்சா..??’
‘ஆமா காதல், கல்யாணம்ன்னா என்னனே அர்த்தம் தெரியாம அவசர அவரசமா கல்யாணம் பண்ணி அதே அவசரத்தோட டிவோர்ஸ்ன்னு போயி நின்னோம்’
‘என்ன பாஸ் சொல்றீங்க..??’
‘அது ஒரு பெரிய கதைடா விஷ்ணு இப்போ சொல்ல நேரம் இல்ல ஆனா இன்னொரு நாள் பொறுமையா சொல்றேன், ஏன்னா நான் பண்ணின முட்டாள் தனத்தை யாரும் பண்ணிட கூடாது இல்லையா..??’
‘ஆனா குறைஞ்சது இருபத்தி ஐந்து வயசுக்குள்ள ஒருத்தனுக்கு பொறுப்பு வரலைன்னா எப்பவுமே வராதுன்னு அப்பா அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு.., என்னை கேட்டா தன்னை நம்பி வர பெண்ணுக்கான பொறுப்பை எடுத்துக்கணும் அந்த தைரியம் இல்லாதவன் எந்த வயசா இருந்தாலும் கல்யாணம் பண்ணவே கூடாது’.
“ஒன்னு மட்டும் உறுதியா சொல்லுவேன் விஷ்ணு நீ என் அண்ணன் என்னை திட்டினதை மட்டும் தான் பார்க்கிற ஆனா நான் அவர் திட்டுற அளவுக்கு நம்மையும் அறியாம எப்படி கவனகுறைவா இருந்தோம் அதை அடுத்த முறை ரீப்பீட் ஆகாம எப்படி தடுக்கன்னு யோசிக்கிறேன் ..”
‘நான் தான் சொன்னேனே இதை விட மோசமா நான் இருந்திருக்கேன்.., ஆனா இப்போ நெனச்சி பார்க்கிறப்போ அது என்னோட அறியாமைன்னு புரியுது, எங்க அப்பாகிட்ட பிள்ளையா எனக்கு இருக்க உரிமையை கேட்டு சண்டை போட்ட நான் என்னோட கடமையில இருந்து தவறி இருக்கேன்னு இப்போதான் புரியுது…,குடும்ப தொழில்ன்னு அது பத்தின தெளிவு, தகுதி இல்லாம போய் உட்காந்தா என்ன நடக்கும்ன்னும் பட்டு தெரிஞ்சிருக்கேன்டா இனி அப்படி செய்ய மாட்டேன்..’
‘அதோட நானோ அண்ணனோ அப்பாவோட தொழிலை ஒரு கட்டத்துல எடுத்தாகனும் தானே., அண்ணா பத்தி சொல்ல தேவை இல்ல பொறுப்பா கவனமா இருப்பார் ஆனா இந்த மாதிரி பேச்சு வராத அளவுக்கு பொறுப்பா இருந்து அந்த இடத்துக்கு என்னை தகுதி படுத்திக்கிறது முக்கியம்டா விஷ்ணு அதனால அண்ணாவோட திட்டுல இருந்து என்னை திருத்திக்கிறேன்’ என்று கூற அவனை ஆச்சர்யமாக பார்த்திருந்தான் விஷ்ணு.
‘நம்ம அப்பா அண்ணான்னு யாரையும் டேக் இட் பார் கிராண்டட்டா எடுத்துக்க கூடாது … வேலையை கத்துக்கறப்போ நம்மை திட்டுறதை பாசிடிவ் வேய்ல எடுத்துட்டு திருத்திகிட்டு முன்னேற பார்க்கணுமே தவிர கோபம் ஈகோ இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தா பதிக்கபட போறது நாமளாதான் இருப்போம்.., அப்புறம் நம்ம மேல உண்மையான அக்கறை படவும் சொல்லி திருத்தவும் ஆள் இருக்காது.., இருபத்தி ஆறு வயசுல ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகு தான் நானே இதை உணர்ந்தேன்”
‘பாஸ்’
‘ஆமாடா வயசு நம்மை பக்குவபடுத்துறது இல்லை அனுபவமே பக்குவபடுத்துது’ என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே அதிர்துடியன் வெளியில் வருவதை கண்ட ப்ரித்வி,
‘சரி விஷ்ணு அப்புறம் பார்க்கலாம்’ என்று கிளம்பி இருந்தான்.