முதல் இரு வாரங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அறிமுகம், உயர் மற்றும் உச்சநீதிமன்ற செயல்பாடு, பாராளுமன்ற செயல்பாடுகள், குடியுரிமை, உரிமைகள், விதிகள், அவள் சார்ந்திருக்கும் மாவட்டம் குறித்த தகவல்கள் என்று அதிலேயே கழிந்ததில் யாழிக்கு பெரிதாக கடினமாக இருந்து விடவில்லை… கற்கும் ஆவலை விட அதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லபோகும் உற்சாகத்தில் வேகமாகவே படித்து முடித்து ஆங்கிலம் தமிழ் கலந்து பேசி வீடியோக்களை முடித்திருந்தாள்.
இப்போது ஆன்லைன் வகுப்புகளில் மூன்று மணி நேரம் பாடங்களை கவனிப்பவளுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அறிவியல், கணிதம் அத்தனை எளிதாக வசப்படவில்லை… இந்திய வரலாறு, நிலவியல் எல்லாம் கூட ஓரளவு அவளால் எளிதாக கற்று கொண்டு செயல்பட முடிந்தது ஆனால் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி புள்ளிவிவரங்கள் எல்லாம் அவளை கொஞ்சம் கிடுகிடுக்க வைத்தது.
மாலையில் அவளுக்காகவே சீக்கிரம் வீடு வரும் அதிர்துடியன் பொருளாதாரத்தை அவளுக்கு புரியும் வகையில் விளக்கிட, ஆராதனா அறிவியல், கணிதத்தை அவளுக்கு எளிமையாக்கி தந்திருந்தாள்.
மகேஷ்வரன் இரவில் செய்திகளை பார்க்க அமர்ந்தாலே விஷ்ணுவும் யாழியும் அலறி அடித்து கொண்டு தட்டோடு வெளியில் சென்று போனை பார்த்து கொண்டே சாப்பிட்டு முடிப்பர், மனைவியை பற்றி அறிந்திருந்ததில் எங்கே முதலிலேயே சொல்லி இருந்தால் படிப்பில் அவள் நாட்டம் குறைந்து போகுமோ என்றே அதி அவள் ஓரளவு படிப்பின் மேன்மையை உணர்ந்த தருணத்தில் செய்திகளின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லி இப்போது படிப்பினூடே தினமும் அவளை செய்திகளை பார்க்க செய்திருந்தான்…
ஆங்கில மற்றும் தமிழ் தினசரிகளை படிக்க சொல்லி ஊக்குவித்தவன் அது குறித்து ஆராதனாவுடன் அவளை விவாதிக்க செய்திருந்ததோடு இல்லாமல் வீட்டிற்கு வந்த பின்பு அவனும் செய்திகளை அவளோடு அலச துவங்கி இருந்தான்.
முன்பு அவளை அவள் அழகை போற்றி புகழவில்லை என்று குறை சொன்னவளுக்கு இப்போது அவனுடனான பேச்சுக்கள் அது எந்த தலைப்பில் இருந்தால் என்ன அது பற்றி கவலை கொள்ளாமல் உற்சாகத்துடன் உரையாடி கொண்டிருந்தாள்.
அன்று பால்கனியில் யாழி நின்றிருக்க கீழே என்றும் போல தோட்டத்தில் சாரு குழந்தையோடு இருந்தாள். அங்கே வந்த ப்ரித்வி குழந்தையை கொஞ்சி விட்டு வழக்கம் போல சில நொடிகள் தயங்கி நின்று பின் சாருவிடம் பேசாமல் கிளம்புவதை கண்டவளுக்கு இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்பது போல உடனே இறங்கி சாருவிடம் சென்றிருந்தாள்.
‘அக்கா உங்க கிட்ட ஒன்னு கேட்கணும், கேட்கட்டா..??’
‘என்ன யாழி கேளு’
‘கேட்டா திட்ட மாட்டீங்களே..??’
‘அப்படி என்ன கேட்க போற..?? எதுவா இருந்தாலும் திட்ட மாட்டேன் நீ சும்மா கேளு’ என்றாள் புன்னகையோடு.
‘நீங்களும் ப்ரித்வி மாமாவும் பேசி நான் பார்த்ததே இல்லை.., எப்பவும் இப்படி குழந்தையை கொஞ்சிட்டு கிளம்பிடுறாங்க ஆனா நீங்க பை கூட சொல்ல மாட்டேங்கிறீங்க., ஏன் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிறதில்லை உங்களுக்குள்ள சண்டையா..??’
‘இது தான் உன் கேள்வியா..??’ என்று கண்களில் வலியோடு செல்லும் ப்ரித்வியை பார்த்து நின்றவள் நெடிய மூச்சை எடுத்து விட்டு,
‘காதல்ன்னு சொல்லி அவசரவசரமா ஒன்னு சேர்ந்து காதலை தொலைச்ச நாங்க இப்போ நிதானமா எங்களுக்குள்ள அந்த காதலை தேடிட்டு இருக்கோம்’ என்றாள் விரக்தியான குரலில்.
‘என்னக்கா சொல்றீங்க புரியலை’
‘யாழி நாங்க ரெண்டு பேரும் அறிமுகமாகி ரெண்டு மாசத்துலயே லவ் ப்ரொபோஸ் பண்ணி அடுத்த மூணு மாசத்துலயே கல்யாணம் பண்ணிகிட்டவங்க ஆனா காதல்ன்னா உருக்கமா கவிதை சொல்றது, உயிரையே கொடுப்பேன்னு நெஞ்சை தொடுற மாதிரி பேசுறது, அழகை ஆராதிக்கிறது, ஊர் சுத்துறது, செலவழிக்கிறது, ஒண்ணா போட்டோஸ் எடுத்து சோஷியல் மீடியாவை கலக்குறது அப்படின்னு நெனச்சிட்டு நேரம் காலம் இல்லாம ரெண்டு பேரும் எங்கெங்கெல்லாமோ சுத்தினோம், ஒரு கட்டத்துல இனியும் பிரிஞ்சிருக்க முடியாதுன்னு உடனே கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணோம்.
இது லவ் மேரேஜ்ங்கிறதால ஒருவழியா ரெண்டு பக்க பெற்றோரையும் சரி கட்டி ஒத்து வச்சோம் ஆனா அவருக்கு முன்னாடி அதி மாமா இருக்கிறதால எங்களுக்கு உடனே கல்யாணம் பண்ண முடியாது சொல்லிட்டாங்க.., எங்க வீட்லயோ எனக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க அதை பார்த்து இவர் எனக்காக கையை கிழிச்சிட்டு உடனே கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கட்டாயபடுத்தி ஒரு வழியா அதி மாமா எல்லாரையும் சமாதானபடுத்தி அவரே முன்ன நின்னு எங்களுக்கு கல்யாணம் செய்து வச்சார்.
‘எப்படி வேகமா ப்ரொபோஸ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டோமோ அதே வேகத்தோட ஹனிமூன்க்கு மால்டீவ்ஸ் கிளம்பினோம் .., சாப்பிடும் போது தூங்கும் போது குளிக்கும் போதுன்னு எப்பவும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியாம கொண்டாடி தீர்த்தோம்.. சரியா சொல்லனும்ன்னா அவருக்கு என் மேல எவ்ளோ காதல்ன்னு நான் பூரிச்சு போயிருந்த தருணங்கள் அது..!!
‘அதோட ஹனிமூன்ல நாங்க ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிக்க காட்டின வேகத்துல கொஞ்சம் கூட எங்களை நாங்க புரிஞ்சிக்கிறதுல காட்டவே இல்லை..’,
‘தெரிஞ்சிகிறது புரிஞ்சிக்கிறது இரண்டும் ஒன்னு தானே ஏன் இப்படி சொல்றாங்கன்னு’ யாழி யோசிக்க அவள் சிந்தனையை தடை செய்து சாரு தொடர்ந்தாள்.
ஹனிமூன் முடிஞ்சி நேரா தனி குடித்தனம் போயிட்டோம்.
‘தனிக்குடித்தனமா..?? அப்புறம் எப்படி இங்க..’
‘சொல்றேன் இரு.., இந்த தனி குடித்தன முடிவும் என்னோடது தான் அதுக்கு காரணம் என்னோட பிரெண்ட்ஸ் அவங்க சொன்னதை வச்சி நானும் என் புருஷனும் மட்டுமேயான உலகத்துல வேற யாரோட தொல்லையும் இல்லாம வாழணும்ன்னு சொல்லி நானே தான் கல்யாணத்துக்கு முன்னாடியே இதை கேட்டிருந்தேன்…. அதுல என்னோட பெத்தவங்க அத்தை மாமா யாருக்கும் பெருசா விருப்பம் இல்லை அப்படி இருந்தும் எங்க ஆசைக்காக சம்மதிச்சாங்க’
‘ஆனா அப்போ என் புருஷன் மட்டும் போதும்ன்னு இருந்த நான் மத்த யாரையும் அவங்களோட உணர்ச்சியையும் மதிக்கலை அது எவ்ளோ பெரிய தப்புன்னு பின்னாடி கஷ்டம் அனுபவிக்கும் போது தான் புரிஞ்சது ..’,
‘தனி குடித்தனம் கஷ்டமா..??’ என்று இப்போதுதான் புதிதாக கேள்வி படும் யாழி ஆச்சர்யமாக கேட்க,
‘ஆமா யாழி டேட்ஸ் லிட்டில் பிரின்செஸ்ஸா வளர்ந்த எனக்கு ஒரு குடும்பத்தை நிர்வகிக்க தெரியலை.., பெருசா எந்த வேலையும் செய்யாமயே வளர்ந்துட்ட நான் கல்யாணத்துக்கு அப்புறம் வீட்டு பொறுப்பை பார்த்து பயந்தேன் இது ஏன் இப்படி இருக்கு, ஏன் இதை செய்யலைன்னு கேட்டப்போ என்னோட இயலாமையை மறைக்க அவர் கூட சண்டை போட ஆரம்பிச்சேன் எப்பவும் சமையல் செய்யாம வெளியே ஆர்டர் போட சொன்னதுல அவருக்கு செம கடுப்பு, ஏன் சமைக்கலைன்னு கேட்டதுக்கு ஏன் என்னை கேட்கிற நீ சமைக்க வேண்டியது தானேன்னு அதுக்கும் சண்டை பிடிச்சேன்..’
இப்படி இது தான் காரணம்ன்னு இல்லாம தொட்டத்துக்கு எல்லாம் சண்டை.., இதுல அவருக்கு குடி பழக்கம் இருக்கிறதே எனக்கு அப்போ தான் தெரிஞ்சது, சரியா வேலைக்கு போகாம எந்நேரமும் பிரெண்ட்ஸ் ஆன்லைன் கேம்ஸ்ன்னு இருப்பார்.., காதலிக்கும் போது இது எதையும் நானும் கேட்கலை அவரும் சொல்லலை சுத்தமா ஒருத்தரோட விருப்பு வெறுப்பை பத்தின கவலையே எங்க ரெண்டு பேருக்கும் இல்லை ஆனா கூட வாழும் போது தான் அவர் பக்க குறைகள் எனக்கும் என் பக்கம் இருக்கும் குறைகள் அவருக்கும் தெரிஞ்சது.
“போதாததுக்கு கல்யாணம் ஆன ரெண்டு மாசத்துல குழந்தை வேற வந்துடுச்சி இதை எதிர்பார்க்காத அவர் அதை கலைக்க சொல்ல நான் முடியாதுன்னு சொல்ல வார்த்தை தடிச்சி ஒருத்தரை ஒருத்தர் வரைமுறையே இல்லாம வார்த்தையால காயபடுத்தி பிரச்சனை வெடிச்சு பெருசாகி இனி அவர் கூட வாழ்வே கூடாது என்ற முடிவோட நான் என் அம்மா வீட்டுக்கு போயிட்டேன்”.
“என்னக்கா சொல்றீங்க..?? எப்படி லவ் பண்ண மாமாவை உங்களால ரெண்டு மாசத்துல விட்டுட்டு போக முடிஞ்சது” என்று கேட்டபோதே யாழிக்கு பதைபதைத்து போனது நிச்சயம் என்ன ஆனாலும் எத்தனை பெரிய சூழல் என்றாலும் அவளால் அதிர்துடியனை விட்டு போக முடியாது ஆனால் இவர் என்ன குழந்தையை வைத்து கொண்டு சென்றிருக்கிறாரே என்ற திகைப்பு..!!
“தெரியலை யாழி எல்லாத்தையும் நாங்க ரெண்டு பேருமே ரொம்ப ஈசியா டேக் இட் பார் கிராண்டட்டா எடுத்துகிட்டோம் இப்போ யோசிக்கும் போது தான் தெரியுது எனக்கு அவர் கிட்ட எதிர்பார்ப்பு இருக்க மாதிரி அவருக்கும் என் கிட்ட எதிர்பார்ப்பு இருக்கும் தானே ஆனா நாங்க சேர்ந்து இருந்தப்போ ரெண்டு பேராலயும் அடுத்தவங்க எக்ஸ்பெக்டேஷன்ஸ் மீட் பண்ண முடியலை அதனால தான் சண்டை சண்டை ஓயாத சண்டை..”
எங்க வீட்டுக்கு வந்ததும் எங்க அப்பா அம்மா வார்த்தையை மதிக்காம நான் முதல் வேலையா அவருக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்ப அவரும் கையெழுத்து போட்டு கொடுத்துட்டார்.
‘மாமாவா..??’ என்று நம்ப முடியாமல் யாழி கேட்க,
‘ஆமா நான் தான் சொன்னேனே எங்க வாழ்க்கை அவசரமா தொடங்கி அவசரமா முடிய இருந்தது.., எங்கே டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பினா அவர் என்னை தேடி வந்து கெஞ்சி கூட்டிட்டு போவார்ன்னு நான் எதிர்பார்த்திருக்க அவரோ போனவ அவளே வரணும்ன்னு இருந்திருக்கார்..’,
இங்க எங்களோட காதலையோ, குழந்தையையோ, எங்க எதிர்காலத்தையோ இல்லாம ஈகோவை முன்னாடி நிறுத்தி எங்க வாழ்க்கையை நாங்களே சிக்கல் ஆக்கிகிட்டோம்.
“அதோட குழந்தை வயித்துல இருக்கப்பவே நான் சியூசைட்க்கு ட்ரை பண்ணேன்” என்று இடியாய் அடுத்த செய்தியை இறக்க,
‘என்னது..??’ என்று அதிர்வோடு யாழி,
“ஆமா நான் நினைச்ச மாதிரி இல்ல வாழ்க்கை அதனுடைய ஏற்ற இறக்கங்களின் போது எனக்கு அதை எதிர்கொள்ள தெரியலை.., கூட இருக்க பிரெண்ட்ஸ் முன்னாடி அவமானம் எங்கயும் தலை காட்ட முடியல எதுக்கு இருக்கணும்ன்னு ஒரு விதமான விரக்தி சூழலை கையாள தெரியாம எடுத்த முடிவே அது, ஆனா நல்ல வேலை அன்னைக்கு எங்க அண்ணன் என்னை காப்பாத்தி உடனே அதி மாமாக்கு தகவல் கொடுத்தார்”
எங்க வீட்டுக்கு வந்த மாமாக்கு பெரிய அதிர்ச்சி..!! உடனே அவருக்கு கால் பண்ணி வர சொன்னவர் அவர் வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் ஓங்கி அறைஞ்சிட்டார்.., ஏன்னா நாங்க தனி குடித்தனம் இருந்ததால எங்களுக்குள்ள நடந்த எதுவும் யாருக்கும் தெரியாது எதுவா இருந்தாலும் என்னோட முயற்சிக்கு அவர் தம்பி தானே காரணம் அந்த கோபம் மாமாக்கு.
‘அப்புறம் அவர் எங்க ரெண்டு பேர் தரப்பையும் கேட்டுட்டு எங்களை சமாதனபடுத்தி டிவோர்ஸ் பேப்பர்ஸ் திரும்ப வாங்க வச்சி குழந்தை பிறக்கிற வரை நீ இங்கயே இரு ரெண்டு பேருக்கும் பிரிவு பல விஷயத்தை உணர்த்தும்னு சொன்னவர் மறக்காம என்கிட்டே எந்த தப்பான முடிவும் எடுக்க கூடாதுன்னு உறுதி வாங்கிட்டார்’.
உடனே அவர் அப்பாக்கும் கூப்பிட்டு பேசினவர் அத்தை ஏற்கனவே பிபி பேஷன்ட்ங்கிறதால அவங்க கிட்ட மட்டும் இதை பத்தி சொல்லலை ஆனா கடைசியா கிளம்பும் போது ‘நீ நினைக்கிற மாதிரி என் தம்பி மாறி திரும்ப வந்தா ஏத்துப்பியாம்மானு’ கேட்டு நான் சம்மதிக்கவும் அவரோட பொறுப்பை முழுசா மாமா ஏத்துகிட்டார்.
ஆனா அப்பவும் அவர் வீம்போட குழந்தை பிறக்கிற வரை என்னை தேடி வரல குழந்தை பிறந்தப்போ மாமா கூட வந்த அவரை அதே வீம்போட எங்களை பார்க்க நான் அனுமதிக்கலை,
ஆனா குழந்தை பிறந்து மூணாவது மாசம் அதி மாமா என்னை சமாதானபடுத்தி இங்க கூட்டிட்டு வந்தார்.., சொல்லபோனா இன்னைக்கு ஓரளவு நல்லபடியா மன நிம்மதியோட நான் இருக்க காரணமே இந்த குடும்பம் தான் இவங்க இல்லன்னா நிச்சயம் நீ இந்த சாருவை நீ பார்த்திருக்க முடியாது…
‘எப்பவும் புருஷன் நம்ம கூடவே இருக்கனும்ன்னு எதிர்பார்த்து நம்மையும் அறியாம அவங்களை மட்டுமே சார்ந்து மற்ற உறவுகளை ஒதுக்கிடுறோம்… ஆனா பிரச்சனையே அங்க தான்னு நாம புரிஞ்சிகிறது இல்ல யாழி’
‘எப்போ அதி மாமா என்னை எங்க வீட்ல இருந்து கூட்டிட்டு வந்து இங்க சேர்த்தாரோ அப்போ இவங்க கூட பழக ஆரம்பிச்சு குழந்தை, ஆரு, அத்தை, மாமான்னு கொஞ்சம் கொஞ்சமா டீவியேட் ஆகி எப்படி வாழணும்ன்னு கத்துகிட்டு இருக்கேன்..’ என்று கூற யாழிக்கு இப்படியும் நடக்குமா..?? என்று ஆச்சர்யமாக இருந்தது.
‘அத்தை ரொம்ப தங்கமானவங்க நான் தனி குடித்தனம் போனதுல வருத்தம் இருந்தாலும் திரும்ப வந்தப்போ எதையும் கிளறாம என்னை குத்தி காட்டாம சந்தோஷமா வரவேற்றாங்க…, என்னோட நிலையை புரிஞ்சிட்டு கொஞ்சம் கொஞ்சமா கத்து கொடுத்தாங்க’
‘ஒன்னு மட்டும் தெரிஞ்சிட்டேன் யாழி எப்பவும் புற அழகை விட அகஅழகு ரொம்ப முக்கியம்..!! ஆனா லவ் பண்ணின அப்போ எனக்கு அது தெரியலை… எந்நேரமும் அவரை இம்ப்ரெஸ் பண்ண பார்லர், மேக் அப், டிரேசிங்ன்னு இருந்தேனே தவிர ஒரு குடும்ப தலைவி ஆகபோகிற நான் வேற எதையும் உருப்படியா கத்துக்கலை, அதோட பிரெண்ட்ஸ், சோஷியல் மீடியா அது இதுன்னு பார்க்கிறது கேட்கிறது எல்லாமே நிஜம்ன்னு நம்பி என்னோட லைபை நானே க்ரிடிக்கல் ஆக்கிகிட்டேன்.. ஆனா உன்னை பார்த்து எனக்கு பிரமிப்பா இருக்கு’ என்று சாரு நிறுத்த,
‘நானா…??’ என்று யாழி அதிர்வோடு பார்க்க,
“ஆமா யாழி சின்ன பொண்ணா இருந்தாலும் உன்னோட இலட்சியத்தையும் பெர்சனல் லைப்பையும் போட்டு குழப்பிக்காம ரெண்டையும் அழகா பேலன்ஸ் பன்றியே..”
“என்னக்கா சொல்றீங்க புரியலை”
“இதோ ஐஏஎஸ் க்கு படிச்சாலும் இந்த வீட்டு மருமகளா உன்னோட பொறுப்பை உணர்ந்து ரெண்டுக்கும் சரியான நேரம் ஒதுக்கி அத்தை மாமா மனசை கஷ்டபடுத்தாம இருக்கியே இது, இந்த பக்குவம் எனக்கு அப்போ இல்ல, மாமனார் மாமியார்னாலே எதிரிங்கன்னு நெனச்சிட்டு அவங்க கூட இருக்க கூடாதுன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே தனி குடித்தனம் போக நினைச்ச என்னோட முட்டாள் தனத்தை என்ன சொல்ல..??” என்று அவள் வேதனையுடன் பேச,
“யாழிக்கோ தானும் அப்படி தானே நினைத்தோம் என்று தோன்றாமல் இல்லை அதே நேரம் சாரு சொல்வது நிஜமா..??” என்ற கேள்வி முளைத்தது யாழியிடம்..,
‘வேறு என்ன..?? அவளை பொறுப்பானவள் என்று கூறுகிறாளே நிஜமாகவே தான் பொறுப்பானவளா..?? அன்று அன்னை கூறிய பொறுப்பு இது தானா..??’ என்று !!
‘நீ நல்ல மருமகள் மட்டும் இல்ல, நல்ல வைப்பும் கூட’
‘அப்படியா..??’ என்று விழிகள் விரித்து பார்த்த யாழியிடம்,
“நிஜமாவே உன்னை மாதிரி அன்பான, பாசமான வைப் கிடைச்ச அதி மாமா ரொம்பவே லக்கி, என்னை விட சின்ன பொண்ணா இருந்தாலும் எப்படி இருக்கனும்ன்னு நான் உன்கிட்ட இருந்து கத்துட்டு இருக்கேன் யாழி” என்றாள்.