வேதா கையிலிருந்த எண்ணைய் பாட்டிலை வாங்கி கொண்டுபோய் வைத்தவன். “உனக்காச்சம் அண்ணி சொன்னாங்க. எனக்கு அந்த பூசாரி என்ன சொன்னான் தெரியுமா ? தூங்கிடாதீங்க, சாந்தி முகூர்த்தம் கண்டிப்பா முடியணும்னு சொல்லி, பத்தாதுன்னு, புரியுதுங்களான்னு வேற கேட்டான்.
சிதறி விழுந்த என் தன்மானத்தை பொறுக்கி எடுத்து பையில போட்டுட்டு சுத்திகிட்டிருக்கேன் மா.” என்று பரிதாபமாகப் பார்க்க, அவன் பாவனையும், சொன்ன சேதியும் அவளை சிரிப்புக் கடலில் ஆழ்த்தியது.
“என் பொழப்பே சிரிப்பா சிரிக்குது, நீயும் சிரிக்கறயா தேனு? எல்லாம் எங்கம்மாவும், அந்த பூசாரியும் பண்ற வேலை. அம்மாகிட்ட இதுதான் முதலும் கடைசியுமா இப்படி பண்றதுன்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டேன்.”
“தேனா ? அது யாரு ?”
“ஹி ஹி நீதான். உன் பேரை எப்படி சுருக்கினாலும் சரியா வரலை, அதான், ஹனின்னு கூப்பிடற மாதிரி தேனுனு வெச்சிட்டேன். உனக்கு பிடிச்சிருக்கா ?”, ஒரு சிரிப்புடன் அவளை கைபிடித்து மெத்தையில் அமர வைத்தான்.
“அறிவு. கரக்டா பாயின்ட புடிக்கற.”, அவள் கன்னம் வழித்தவன். “இது அவங்க எதிர்ல கூப்பிட இல்லை, நம்ம ரெண்டு பேருக்கும் தனியா ஒரு ரகசியப் பேரு.”
“ஓ, இது எப்போ தோணுச்சு ?”, கொஞ்சம் சந்தேகமாகவே கேட்டாள் வேதா.
“ஏன், ஏன் உனக்கு சந்தேகம்… எனக்கு இதெல்லாம் தோணாதா?, நானும் ரெமோ ரேன்ஞ்சுக்கு ரொமான்ஸ் பண்ணுவேன்…”, அடம் பிடிக்கும் குழந்தையாய் தெரிந்தான் அவளுக்கு.
“நீங்க ரொம்ப சமத்துபா, உண்மைய சொன்னா, நான் இந்த ரகசிய பேருக்கு ஒத்துக்குவேன். இல்லாட்டி, எல்லார் முன்னாடியும் கூப்பிடறதனாத்தான் ஒத்துக்குவேன்… எப்படி வசதி ?”, கண்ணடித்துக் கேட்டாள்.
“ஹும்…அவ்ளோ நம்பிக்கை நான் பப்ளிக்கா கூப்பிடமாட்டேன்னு ?” முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு கேட்டான்.
அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவாரே, “அதுக்குள்ள எடை போட்டுட்ட உன் மாமியாரை..” என்று புன்னகைத்தான்.
அவன் கையை எடுத்துவிட்டு, “சரி, பேர் காரணம் இன்னும் வரலயே. அத சொல்லுங்க முதல்ல..”.
படுக்கையின் தலை மாட்டில் சாய்ந்தவாறே, “ நான் சி.ஏ இன்டெர் பரீட்சைக்கு படிச்சிட்டு இருந்தனா, அப்பா கட்டின அந்த பழைய வீட்ல, என் ஜன்னல் கிட்ட வெளிய, திடீர்னு, மயிலுன்னு குரல். அண்ணா குரல்னு புரியவே ஒரு செக்கண்ட் ஆச்சு. அவ்ளோ குழைஞ்சி, உருகி அந்த ஒரு வார்த்தைல அவ்ளோ உணர்ச்சி. அண்ணி ம்ம்னுதான் சொன்னாங்க பட் அதே ஒரு சிணுங்கலா வந்துச்சா, உடனே ஹாலுக்கு ஓடி வந்திட்டேன். கொஞ்ச நேரத்துக்கு அப்பறம்தான் அண்ணி பேரு மாலினியை மயிலுன்னு சுருக்கி கூப்பிடிருக்கார்னு புரிஞ்சுது. அப்பவே டிசைட் பண்ணேன். எனக்கு வரப்போறவளுக்கும் எனக்கே எனக்குனு கூப்பிட ஒரு செல்ல பேரு வெக்கணும்னு. பேர் காரணம் போதுமா தேனு?”, அவள் கைகளை தன் கையில் சிறை பிடித்தவாறே கேட்டான்.
அவன் கூறிய “எனக்கே எனக்குன்னு கூப்பிட..” என்பதிலேயே மயங்கியிருந்தாள் அவன் தேனு. சரி என்று தலை அசைத்த நொடி, பிடித்திருந்த அவள் கைகளை இழுத்து, அவளைத் தன் மேல் சரித்திருந்தான்.
“ஹ திருடா..” என்று வேதா முறைக்க, கண்கள் குறும்பு மின்ன, கள்ளச் சிரிப்பு விக்ரமின் முகத்தை நிறைத்திருந்தது. அவள் கைகளின் அடியில் அவன் இதயத்துடிப்பு, சற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது, அவள் இதயத் துடிப்பையும் அதிகரித்தது.
அவன் கைகள் அவள் கன்னம் பற்றி மெல்ல அருகே இழுக்க, கண்கள் விரிய அவனைத்தான் பார்த்திருந்தாள். அவனுமே. மெல்ல இதழ்கள் இணைந்தது. நொடிகளா, நிமிடங்களா என்று தெரியாத ஒரு நீண்ட முத்தம். அறிமுகமாய் ஆரம்பித்து ஆளுமையாய் முடிந்திருந்தது.
சட்டென்று அவளின் இடுப்பைப் பிடித்து இழுத்து, அவன் அருகே அவளைப் படுக்க வைத்திருந்தான். இருவருக்குமே சற்று மூச்சு வாங்கியது. அவனைப் பார்க்க முடியாது, அவள் கண் மூடியிருக்க, அவள் நாடி பிடித்து, “ முதல் முத்தம் மறக்காதுன்னு சொல்லுவாங்களே, நம்மது உனக்கு மறக்காம இருக்குமா ? பாசானேனா ?”, ரகசியம் பேசினான் விக்ரம்.
சட்டென்று திறந்த தையலின் விழிகள் மையல் நிறைந்திருந்தது. ” எதுக்கும் இன்னொரு வாட்டி ரி-டெஸ்ட் வெச்சிக்குவோமா ? மார்க் போட மறந்திட்டேன்.”, நாணமும் குறும்பும் போட்டி போட்டன அவள் முகத்தில்.
குதூகலமாய், “ எத்தன வாட்டி வேணாலும் டெஸ்ட் எழுதலாமே, சிலபஸ் மட்டும் கொஞ்சம் ஜாஸ்தி பண்ணிக்கலாம் சரியா…” என்று கண்ணடித்தான்.
வேதாவின் முகம் இன்னும் சிகப்பாய் மாற, “தேனு, அந்த பூசாரிக் கடங்காரன் சொன்னதை விடு. உனக்கு ஒகேதான ? இல்லாட்டி அப்பறம் பார்த்துக்கலாம். யாருக்கும் தெரியப்போறதில்லை. “, என்று அவள் முகம் பார்த்துக் கூற,
“ஷ்… “, அவன் உதட்டில் விரல் வைத்து. “ சாமி சமாச்சாரம். பொய் சொன்னா, அதுவே எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியைக் குடுக்கும். இதுல எதிர்த்து ஒண்ணும் சாதிக்கப் போறதில்லை நாம. அதுனால…”, என்று நிறுத்த, புன்னகையுடன், உதட்டில் இருந்த அவள் விரலுக்கு ஒரு முத்தம் வைத்து, சற்று திரும்பியவன், லைட்டை அணைத்து, இரவு விளக்கைப் போட்டுவிட்டவாறே,
“ இப்ப தெரியுது அண்ணன் ஏன் கட்டில் பக்கத்துலயும் டூ வே ஸ்விட்ச் போர்ட் வெக்கணும்னு சொன்னார்னு. நாந்தான் வாசல்கிட்ட மட்டும் இருந்தா போதாதான்னு லூசு மாதிரி வாதாடினேன். அண்ணிகிட்ட சொல்லி சிரிச்சிருப்பாரு.“, என்று இலகுவாகப் பேசினான்.
அதைக்கேட்டு கிளுக்கிச்சிரித்தவளை அணைத்து, ரி-டெஸ்ட் இல்லை, புதிதாக எக்ஸாமே எழுத ஆரம்பித்தான்.
போன் அடிக்கும் சத்தம் கேட்டு முழிப்புதட்டியது இருவருக்கும். தன்னுடன் பின்னிகிடந்தவளை, சற்று விலக்கி, எட்டி, மேசைமேல் இருந்த கைபேசியைய் இயக்கி, “ அண்ணா, எழுந்துட்டோம்ண்ணா…”, என்றான். எதிர்முனை சொல்லியதை கேட்டு “சரிண்ணா”, என்று அணைத்து வைத்தான். அதற்குள் மறுபடி கண்ணயர்ந்திருந்தாள் வேதா.
“தேனும்மா…கிளம்பணும்டா…ஒரு மணி நேரம்தான் இருக்கு.”
“நீங்க போங்க முதல்ல, எனக்கு அரைமணி நேரம் போதும்.”, என்று இன்னும் இறுக்கிக் கட்டிக்கொண்டாள் அவனை.
அவள் செயலில் வந்த சிரிப்பை அடக்கி, கை நீட்டி, மறுபுறம் இருந்த தலையணையை எடுத்து அவளுக்கு கட்டிக்கொள்ளக் கொடுத்து விக்ரம் எழுந்தான்.
‘ம்ம்ம் இது நல்லால்ல நீ வா”, என்று சிணுங்கியவளை லேசாக அடித்து, “நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீ சொல்லி நான் கேக்கறதா இருக்கு… தூங்குடி வரேன்.” என்று கீழே இறைந்துகிடந்த உடைகளில், அவன் வேட்டியை எடுத்து கட்டியவாறே பாத்ரூம் சென்றான்.
அவன் குளித்து வந்து, அவளை அள்ளிக்கொண்டுபோய் குளியலறையில் இறக்கிவிட்டு, படுக்கையை சரி செய்து, துணிகளை மடித்துப்போட்டான். புடவை மடிக்க போராடிக்கொண்டிருக்கையில்,” சோ ஸ்வீட்…” என்று பின்னிருந்து அணைத்திருந்தாள் வேதா.
அவள் கைகளூடே திரும்பியவன், புடவையை அவள் தோள்மேல் போட்டு, என் டயலாக் எல்லாம் நீ சொல்ற, அப்பறம் நீ சிணுங்கவேண்டியதெல்லாம் நாந்தான் செய்யணும் போல ?”
“இந்த கோவில் சமாசாரத்தை முடிச்சிட்டு, சாயந்திரம் கொண்டாடுவோம். சரியா ?”, என்றவாறே, வீட்டை பூட்டிவிட்டு பழைய வீட்டிற்கு கிளம்பினார்கள்.
சரியாக ஆறு மணிக்கு அவர்கள் உள்ளே நுழையவும், காப்பியுடன் மாலினி வரவும் சரியாக இருந்தது.
“கையிலிருக்க ஃப்ளாஸ்க சிங்க்ல போட்டுட்டு, சாமி விளக்கு ஏத்திடு வேதா முதல்ல, காப்பிய குடிச்சதும் கிளம்பலாம்.”, என்றார் பர்வதம். இருவரின் முகம் பார்த்து, ஒரு திருப்தி அவரிடம்.
அவர் பார்வையை தவிர்த்து, மேசைக்கு சென்று காப்பியில் விக்ரம் கவனம் செலுத்த, வேதா, கிட்சனில் இருந்த பூஜை மாடத்தை நோக்கிச் சென்றாள்.
“ அப்பறம் முடிய காய வை வேதா, ட்ரையர் அந்த கப்போர்ட்ல இருக்கு பாரு.”, என்றாள் மாலினி.
“சரிக்கா”,என்றவள் முகம் பார்க்கவில்லை, கூச்சம் தடுத்தது. விக்ரமிடம் தோன்றாத வெக்கம், வீட்டிற்குள் நுழைந்ததும் வந்து ஒட்டிக்கொண்டது.
ஒரு வழியாக, எல்லாரும் கிளம்பினர். மாலினி பிள்ளைகளுடன் வீட்டிலிருக்க, ராகவன், காயத்ரி , பர்வதம் இவர்களுடன் இன்னோவாவில் அமர்ந்தனர். காயத்ரியின் சின்ன மாமியார் வீட்டிற்கு அவள் கணவன் வீட்டினர் நேற்றே சென்றிருந்தனர். அவளின் இரண்டு பிள்ளைகளும் கூட அனுப்பியிருந்தாள். தனியே இவர்களிடம் சிக்கியிருக்குறொமே என்று உதறலில்தான் இருந்தாள் வேதா.
“காயத்ரி கொஞ்சம் எடக்காத்தான் பேசுவா, நீதான் பார்த்து ஹாண்டில் பண்ணனும் வேதா, இவர்கிட்டயும் சொல்லிருக்கேன் , படுத்தினா அவர்கிட்ட போய் நின்னுக்கோ. அவர்ட்ட மட்டும்தான் பயப்படுவா.”, என்று மாலினி வேறு கிளம்பும் முன் காதைக் கடித்திருந்தாள்.
முதலில் ஏறி இவள் பின் சீட்டில் அமர, விக்ரம் அவள் பக்கம் உட்கார்ந்தான். “பொண்டாட்டி பக்கத்துலதான் உக்காருவியோ ?”, என்று அங்கேயே ஆரம்பித்தாள் காயத்ரி.
தோள்களைக் குலுக்கியவன், “நல்லதுக்கே காலமில்லை, பின்னாடி உக்கார உனக்கும் அம்மாக்கும் கஷ்டமாச்சேன்னுதான், நான் பின்னாடி வந்தேங்கா, நீ வரதானா சொல்லு”, என்று எழப்போக, “வேணாம், நீ உக்காரு”, என்று அவசரமாக, ஒரு இருக்கையில் அமர்ந்தாள். “நான் சும்மா கிண்டலாத்தான் சொன்னேன்.”, என்று ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
இது கிண்டலா என்று விக்ரம் பார்த்த வெற்றுப் பார்வையில், முகத்தை திருப்பிக்கொண்டாள் காயத்ரி.
“கண்ணை மூடி தூங்கிடு. செய்யாறு தாண்டி போகணும். ஒண்ணரை மணி நேரமாகும். இல்லாட்டி, இவ வாய புடுங்குவா.”, என்று முணுமுணுத்தான் விக்ரம். வண்டி வேகமெடுக்க, அவன் சொன்னதைச் செய்தாள் வேதா.