ராஜேந்திரன் பெங்களூர் வந்து இரண்டு நாட்களாகியிருந்தது.. டைல்ஸ் டீலர்ஷிப் எடுக்கும் விஷயமாக வந்திருந்தான். இரவு, மஞ்சரிக்கு விடியோ கால் செய்தான், ஹோட்டல் மெத்தையில் படுத்தவாறே.
“ம்ம்..எப்பவும் போலதான். எப்ப வரீங்க திரும்பி ? போன வேலை முடிஞ்சிதா ?”, வசதியாய் அவளும் படுக்கையில் சாய்ந்து தலையணையை மடிமீது வைத்துக்கொண்டு பேச ரெடியானாள்.
“முடிஞ்ச மாதிரிதான். ஆனாலும் நாளைக்கு தங்கிட்டு, மறு நாள் காலைலதான் வரலாம்னு இருக்கேன்.”
“அது, இந்த இரண்டு நாளா உங்கூட இப்படி விடியோ கால் பேசி பழகிட்டனா ? அதான், கெளம்ப மனசு வரமாட்டிங்குது. வீட்டுக்கு போயிட்டா பேசத்தான் முடியும், இப்படி வீடியோல உன்னை நைட்டில பார்க்கமுடியாதில்ல, அதான்.”, குறும்பாய் சொன்னான் ராஜேந்திரன்.
“என்ன செய்யட்டும். ஹால்ல தூங்கறேன் நான். யார் வருவாங்களோன்னு ஜாஸ்தி பேசக்கூட முடியறதில்லை.”, பெருமூச்சு வந்தது அவனிடம்.
“உங்களை யார் ரூம் வேண்டாம்னு சொல்ல சொன்னா ? ஒழுங்கா கீழ் போர்ஷன்ல நீங்க இருந்திருந்தா, உங்களுக்குன்னு தனி ரூம் இருந்திருக்கும். மேல வாடகைக்கு விட வேண்டியதுதானே ?”
“நான் இப்படி லவ் பண்ணுவேன், வீட்டுக்குத் தெரியாம பேசுவேன்னு நெனச்சா பார்த்தேன். நைட் வரதே லேட். சாப்பிட்டு, சோஃபா பெட் விரிச்சி போட்டோமா, படுத்து தூங்கினமான்னு இருந்தவன். இப்ப ரூம் போட்டு உங்கிட்ட பேசற அளவுக்கு ஆகிட்டேன். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.”, அங்கலாய்த்தான் அவளிடம்.
வாய் விட்டுச் சிரித்தவள், “சரி, நமக்கு கல்யாணமானா அப்பவும் ஹால் தானா ? நான் பாய் போட்டு படுக்கணுமா, சோஃபா கீழ ?”
“சே..என்ன செல்லம் இப்படி சொல்லிட்ட ? கல்யாணம் பேச ஆரம்பிச்சதும், கீழ் வீட்டுகாரன்களை தொரத்திட்டு, புதுசா பெயிண்ட் பண்ணி ரெடி பண்ணிடலாம். மாஸ்டர் பெட்ரூம் நமக்கு. இன்னொரு பாத் அட்டாச்டு பெட்ரூம் அப்பா அம்மாக்கு. மூணாவது வேதா வந்தா தங்கறதுக்கு. நீயே செலக்ட் பண்ணு என்ன கலர் பெயிண்ட் பண்றதுன்னு.”
“ஓ… ப்ளான் எல்லாம் பக்காவா இருக்கு ?”
“ம்ம்… வேதா குழந்தை பிறக்கட்டும். அடுத்தது நம்ம கல்யாண வேலைதான்.”, வரப்போவது தெரியாமல் வாக்களித்தான் ராஜேந்திரன்.
பேச்சு பல திசையிலும் சென்றது. வேதா பற்றி பேசும்போது, “பாவம் வேதாவும் விக்ரமும். மாசக் கணக்கா இப்படி போன்லதான் பேசிக்கணும் இல்லை ? எப்படிதான் சமாளிக்கறாளோ ?” வருத்தப்பட்டாள் மஞ்சரி.
“ஆமா மஞ்சரி. எனக்குமே பாவமாத்தான் இருக்கு. அதுவும் இப்ப மசக்கை வேற. இதுல விக்ரமும் இல்லாம, காலேஜ்க்கும் போயிட்டு வந்து…. எல்லாம் அந்த ஜோசியக் கடங்காரனால வந்தது. உடனே பண்ணாதான் ஆச்சுன்னு சொல்லவும் எங்கம்மா ஒரே பிடியா நின்னுட்டாங்க.”, அவனும் வருத்தப்பட்டான் .
“சரி, ஆனா நான் சொல்ற சல்வார்தான் நீ போட்டு வரணும்.”
இது என்ன புதுசா என்று நினைத்தவள், “ சரி, எதுன்னு சொல்லுங்க ?”
“நான் உன்னை மொதல்ல பார்த்தபோது போட்டிருந்த. வெள்ளை டாப்ஸ், கால்ல பெருசா பலூன் கணக்கா எல்லா கலரும் இருக்க மாதிரி ஒரு பாண்ட்.”
[the_ad id=”6605″]
“பாட்டியாலான்னு பேரு, அதை பலூன்னு சொல்லி கேவலபடுத்தறீங்க. அது ஃபாஷனே போயிடிச்சு.”, முறைத்தாள்.
“எதுவோ, அப்பறம், மெடல்ல பெரிய குடை ஜிமிக்கி, ஒரு கைல ஒரு டஜன் மெட்டல் வளையல், தலைய விரிச்சி, கொஞ்சம் முடி எடுத்து மெட்ல்ல ஒரு க்ளிப்”, அவன் சொல்லிக்கொண்டே இருக்க, ஆச்சரியமாய் கண்கள் விரித்துக் கேட்டுக்கொண்டிருந்தாள் மஞ்சரி.
கொஞ்சம் அசடு வழிந்தவன், “பொண்ணுங்களை ரெண்டாவது பார்வை பார்க்கமாட்டேன் நான். ஆனா ரூமுக்குள்ள வர, நீ நடந்து வரும்போதே பார்த்தவன், நீ ஹலோ சொன்னப்பறம்தான் நினைவுக்கு வந்தேன். எல்லாமே மனசுல பதிஞ்சிது.”
“அச்சோ..அச்சோ…எனக்கு ரொமான்ஸ் வராது வராதுன்னு சொல்லிட்டு இப்படி போட்டு தாக்கறியேப்பா..நான் என்ன பண்ணுவேன். போனை முத்தமிட்டாள்.”
“இரு செல்லம், நேர்ல வந்து வாங்கிக்கறேன். போன்ல குடுக்கறதெல்லாம் செல்லாது.”, செல்லமாய் கோபித்தான்.
“ம்க்கும், எப்ப குடுக்க ? நம்ம பாத்துக்கறதெல்லாம் பொது இடத்துல. கை கூட பிடிக்க மாட்டீங்க. வெறும் பேச்சுதான்பா நீங்க.”, அவனை நக்கலடித்தாள்.
“இரு, எல்லாத்துக்கும் கணக்கு வெச்சிருக்கேன். மீட்டர் வட்டி போட்டு வசூல் பண்றேன், லைசன்ஸ் வாங்கினதும்.”, மீசையை நீவி விட்டு சூளுரைத்தான்.
“அதை அப்ப பார்த்துக்கலாம்.”, அசால்டாக தட்டிவிட்டவள், “நீங்க என்ன போட்டிருந்தீங்க அண்ணைக்கு ? அப்பாடா, இந்த ஆபிஸ்ல பாக்கறா மாதிரி ஒருத்தர் வந்திருக்காரேன்னுதான் பார்த்தேன் உங்களை, ஆனா ட்ரெஸ் எல்லாம் நான் நோட் பண்ணலையே ?” வருத்தமாய் சொன்னாள்.
“நான் என்ன போட்டிருந்தேன்னு எதுக்கு நெனவு வெச்சிருக்கப்போறேன் ?”, அவன் முழித்தான்.
“சரி விடுங்க. எனக்கு நீங்க அந்த கார்கோ பாண்ட் அப்பறம் அந்த வைட்ல யெல்லொ, கரும் பச்சை பெரிய செக்ஸ் போட்ட அந்த ஷர்ட் ரொம்ப பிடிக்கும். அது போட்டு வாங்க.”
“உத்தரவு மேடம். ஏதோ, அண்ணைக்கு கவனிக்கலைன்னாலும், அப்பறமாச்சம் நான் போடறத கவனிச்சிருக்கயே, அதுவே போதும்.”, என்று அவளை கலாய்த்தான். வெகு நேரம் பேச்சு நீண்டது.
ராஜேந்திரன் அதிகப்படியாகத் தங்கிய அந்த ஒரு நாளில், ப்ரச்சனை வெடித்தது அவன் வீட்டில்.
எப்போதும் போல் வேதாவிற்கு போன் செய்த விக்ரம், “ஏன் தேனும்மா, சரியா சாப்பிட மாட்டேங்கரியாம் ? உங்கம்மா போன் பண்ணி எங்கிட்ட கம்ப்ளெய்ன் பண்றாங்க ? “, என்று சொன்னதுதான் தாமதம். இருந்த கோபம், எரிச்சல் எல்லாம் அவன் மேல் கொட்டினாள்.
“ரொம்ப முக்கியம். அவங்க சொன்னாங்கன்னு நீயும் பஞ்சாயத்துக்கு சொம்ப தூக்கிட்டு வந்துட்டியாக்கும். கொல காண்ட்ல இருக்கேன். ஏற்கனவே தூக்கத்த மறைக்க படாதபாடுபட்டுட்டு இருகேன். இதுல க்ளாஸ் நடுவுல என்னை திட்டின அந்த மனுஷன் அசைன்மெண்ட் கொடுத்திருக்கார். எடுத்து பார்த்தா, ஒரு மண்ணும் புரியலை. உனக்கு தெரியுமா, இந்த மாதிரி நான் ஸ்கூல்ல கூட முழிச்சது கிடையாது. இண்ணைக்கு கிளாஸ்ல, எல்லாருக்கும் ஈசியா வருது, எனக்கு பாதிக்குமேல எப்படி போடறதுன்னு தெரியாம முழிக்கறேன். வாணி போட்டு எனக்கு காப்பி பண்ண காமிக்கறா. இதுவரைக்கும் நாந்தான் எல்லாருக்கும் முன்னாடி போட்டு முடிப்பேன். மணி மேடம் “என்னாச்சி இந்த செம் உனக்கு, முன்னமாதிரி ஷார்ப்பா இல்லையே.”,ன்னு , என்கிட்ட பரிதாபப்பட்டுட்டு போறாங்க. நாளைக்கு அசைன்மெண்ட் குடுக்கணும். இன்னும் ரெண்டு மணி நெரத்துல பெரட்ட ஆரம்பிச்சுரும். இப்படியே நாள் போச்சினா, நான் எப்ப படிக்கறது. இந்த வருஷம் போச்சி.”
“கண்ணம்மா, சரியாகிடும் டா…”, என்று இடையில் ஒரு வார்த்தை சமாதானம் சொல்ல, அதையும் பிலு பிலுவென பிடித்துக்கொண்டாள்.
[the_ad id=”6605″]
“நீ என்ன குடுகுடுப்ப காரனா ? என்ன சரியாச்சு? இருக்க இருக்க இன்னும் ஜாஸ்திதானாகுது. அப்பவே உங்கிட்ட சொன்னேன், இதெல்லாம் நான் தனியா பார்க்கணும், என்னால முடியாதுன்னு. கேட்டியா ? கண்ண உருட்டி உருட்டி, பாவமா ஒரு லுக்க விட்டு என்னை ப்ரேய்ன் வாஷ் பண்ணி மண்டையாட்ட வெச்ச…இப்ப சுகமா அங்க உக்கார்ந்துகிட்டு, நோகாம சரியாகிரும்னு சொல்ற. நாளைக்கு நான் என்னத்தை கொண்டுபோய் சப்மிட் பண்ணுவேன். எல்லாருக்காகவும் பார்த்து கடைசீல நாந்தான் சிக்கிட்டு அவஸ்தைபடறேன். பேசாதே எங்கிட்ட, போ.”, என்று போனை அணைத்து தூரப்போட்டாள்.
பேசியவள் பேசிவிட்டாள். கேட்டவந்தான் சின்னாபின்னமாகிவிட்டான். வேதா, கோவத்தில் சொன்னாலும், எல்லாம் உண்மைதானே. அவள் கூட இருந்து ஒரு உதவி செய்ய முடியாதவனாக, பணம் , பணம் என்று இங்கே வந்து அமர்ந்துவிட்டான். அவளை சென்று பார்த்து மனதிலிருப்பதை சொல்லாமலிருந்தால், அவள் பாட்டிற்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தானுண்டு, படிப்புண்டு என்று நிம்மதியாய் இருந்திருப்பாள். குற்ற உணர்ச்சி விக்ரமை திக்குமுக்காடச் செய்துவிட்டது.
திரும்ப வேதாவை அழைக்க, அவள் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. பித்துப்பிடித்து அமர்ந்திருந்தான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு முடிவு எடுத்தவன், மாலினியை அழைத்தான்.
“என்ன விக்ரம், இந்த நேரத்தில் கூப்பிட்ற ?”
மணி பார்த்தவன் அங்கே இரவு எட்டு என்று கணக்கிட்டு, திகைத்தான். கிட்டதட்ட மூன்று மணி நேரமாக யோசனையில் இருந்திருக்கிறான்.
“மணி பார்க்கலை அண்ணி. கொஞ்சம் உங்க ரூமுக்கு போக முடியுமா ? முக்கியமா பேசணும்.”
அவன் பேசும் தொனியே வித்தையாசமாக இருக்க, கிட்சனில் கை வேலையை விட்டு, ரூமிற்கு சென்றாள். போகும் வழியில் ராகவனைப் பார்த்து, குழந்தைகளைக் காட்ட, அவன் ஏதோ அலுவலக போன் என்று எண்ணி, தான் பார்த்துகொள்வதாக கை அசைத்தான்.
[the_ad id=”6605″]
“சொல்லு விக்ரம், ஏன் ஒரு மாதிரி இருக்கு குரல் ?”
“வேதாகிட்ட பேசினேன் அண்ணி, அவ ரொம்ப கஷ்டபடறா போல, இது வரைக்கும் அது ஆழம் தெரியலை. இண்ணைக்கு வெடிச்சிட்டா”, என்று நடந்ததை சொல்லவும்,
“அண்ணி நீங்க அவள பார்த்து கொஞ்சம் பேசுங்க அண்ணி. அவளால ஹாண்டில் பண்ண முடியலைன்னா, குழ…குழந்தைய க..கலச்சிட சொல்லுங்கண்ணி..”, திணறிப் போனான், அவன் முடிவை சொல்ல…