இந்த ஒரு வாரமாய் சந்தோஷமாய் இருந்தாள் வேதா. மாலினி சொல்லியிருந்த சின்னச் சின்ன மாற்றங்களை செய்யவும், இப்போது படிப்பு இலகுவானது. முதல் வேலையாக, அவள் கருவுற்றிப்பதை அவள் ஆசிரியர்களிடமும், சக மாணவர்களிடமும் சாக்லேட் கொடுத்து சொல்லவைத்தாள். அதன் பின் ராஜ உபசாரம் வேதாவிற்கு. போன் மூலம் பாடம் நடத்துவதை வீடியோ எடுக்க எல்லா பிரொஃபசர்களுமே அனுமதித்தனர். கிளாசில் தூக்கம் தள்ளினாலும், பின் மாலை நேரத்தில் சிரத்தையாக பதிவு செய்ததை போட்டுக் கேட்டாள். சந்தேகங்களை மறு நாள் மதியத்திற்கு மேல், அவள் தெளிவாய் இருக்கும் போது சென்று கேட்டாள், இன்முகமாக சொல்லித்தந்தார்கள். இவளோடு படிப்பில் எப்பவும் போட்டி போடும் சக மாணவன் சுஜித், அவன் எடுக்கும் நோட்சை அவள் கேக்காமலேயே ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தான். கான்டீன் செல்லும்போதெல்லாம் அவளுக்கு குடிக்க எதுவும் வாங்கி வர வேண்டுமா என்று கேட்டுச் சென்றனர் உடன் படிக்கும் நண்பர்கள்.
இதற்கெல்லாம் மேலாக, மாலினி கோமதியிடம் தெளிவாய் சொல்லிவிட்டாள். “ இந்த நேரம் வேதா சந்தோஷமா இருக்கணும். ஏற்கனவே விக்ரம் கூட இல்லை. படிக்கறது அவளுக்கு அடுத்த சந்தோஷம். அதையாவது அவள அனுபவிக்க விடுங்க. சும்மா அவள, உனக்கு முடியாது, படிப்ப விடுன்னு சொல்லிட்டே இருக்கறது அவளுக்கு தேவை இல்லாத அழுத்தத்தை குடுக்குது. இதுனால ஒரு லாபமும் இல்லை. இல்லாட்டி நாங்களே கூட்டிட்டு போய் வெச்சிகிறோம். நீங்க பார்த்துகறேன்னு சொல்லவேதான் சரின்னோம். வேதா ஸ்ட்ரெஸ் ஆகி, டாக்டர் கீதா திட்டினா, என்னால விக்ரமுக்கு பதில் சொல்ல முடியாது.”
ராஜேந்திரனும் அவன் பங்குக்கு எகிறி இருந்தான். அதன்பின் கோமதி வாயே திறக்கவில்லை. விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து இவள் படிக்க உட்கார்ந்தால், அவளிடம் சண்டையிடாமல், ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்துவிட்டுப் போனார். ஆறு மணிவரை படித்து, ஒரு மணி நேரம் மீண்டும் படுத்து, பின் கல்லூரி சென்று விடுவாள். போகும் வழியிலும், பாடங்கள் எடுத்த வீடியோக்களை கேட்டாள். கல்லூரி முடிந்தும் ஒரு மணி நேரம் லைப்ரரியில் படிக்கவோ, அல்லது ஆசிரியர்களிடம் சந்தேகம் கேக்கவும் செய்தாள். உடன் வாணி இருந்தாள். வீட்டிற்கு வந்தும் மசக்கை ஆரம்பிக்கும் வரை படிப்பது, அசைன்மெண்ட் என்று போகும்.
விக்ரமிடம் இதெல்லாம் சொல்லிச் சிரித்தாள். “மாசமா இருக்கும்போது முடிஞ்சவரை அட்வான்டேஜ் எடுத்துக்கோன்னு மாலினி அக்கா சொல்லும்போது நான் நம்பலை. காலேஜ்ல சொன்னப்பறம் எவ்ளோ சலுகை தெரியுமா ? திட்டின அந்த மனுஷன் வந்து சாரிம்மா, உன்னை திட்டிடேன். நீ முன்னமே சொல்லிருக்கலாமேன்னு எங்கிட்ட வருத்தப்பட்டுட்டு போனார்.”
அவள் மகிழ்ச்சியே அவன் மகிழ்ச்சியாய் இருந்தது. அவனும் சும்மாயிருக்கவில்லை. சனிக்கிழமைகளில், இரண்டு இடங்களில் பார்ட்-டைம் கணக்குகளை சரிபார்க்கும் ஆடிட் வேலை செய்ய ஆரம்பித்திருந்தான். அடுத்த மாதம், ஞாயிறு காலைகளிலும் ஒரு கடையில் அந்த வாரம் நடக்கும் வியாபர வரவு செலவுகளை சரியாக கணக்கிட வருவதாக ஒப்புக்கொண்டிருந்தான். மூன்று இடங்களிலும் வரும் பணமே அவன் செலவு போக, வீடுக்கடன் செலுத்தியும் மிச்சமிருந்தது. அவன் அலுவலகச் சம்பளம் அப்படியே அக்காவிற்காக சேமித்தான்.
மசக்கை மட்டுப்பட்டு, ஆறாம் மாதம் முடிவில் நன்கு தேறியிருந்தாள் வேதா. குழந்தையும் அவளும் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஸ்கைப் மூலம் அவள் தோற்றப்பொலிவையும், மேடிட்ட வயற்றையும் பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டான் விக்ரம். குழந்தை அசைவதை உணர முடியாதது வருத்தம்தான். இருவரும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. ஸ்கான் செய்து பார்க்கும்போதெல்லாம், அவனுக்கு காண்பிக்க , ஸ்கான் புகைப்படத்தை வாங்கிவருவாள். ஈமெயில் அனுப்பிவைப்பாள். இப்படியாக அவனும் முடிந்தவரை குழந்தையின் வளர்த்தியினைப் பார்த்து வந்தான்.
ஒன்பதாம் மாதம் தொடக்கத்தில் சீமந்தம் என்று முடிவு செய்தார் பர்வதம்மா. அவளுக்கு பரீட்சை நேரம் என்பதெல்லாம் அவர் கணக்கில் இல்லை. நம் வழக்கம், ஒன்பது தொடங்கியதும் செய்யவேண்டும் என்று விட்டார். மற்றுமொறு வாக்குவாதம் வேண்டாம் என்று வேதாவே அவள் பரீட்சை அட்டவணை பொருத்து ஒரு வெள்ளிக்கிழமையை தேர்வு செய்தாள். ஒன்பதாம் மாதம் துவங்கி மூன்றாம் நாள் வந்தது. அடுத்து, வீட்டில்தான் செய்யவேண்டும் என்றார். அதற்கும் யாரும் மறுப்பு சொல்லவில்லை.
“ரொம்பல்லாம் செலவு வேண்டாம். வீட்டு மட்டோடு செய்யலாம்.”, என்று பர்வதம்மா மிச்சம் பிடிக்க யோசிக்கவும், ராகவன் கறாராகச் சொல்லிவிட்டான்.
[the_ad id=”6605″]
“உங்க கடைசீ மருமகளுக்கு சீமந்தம். அவ புருஷன் செலவு செய்யப்போறான், அதுவும் வெளி நாட்ல சம்பாதிக்கிறான். உங்க சம்மந்தி உங்களை மதிக்கணும்ன்னா, இதுல சிக்கனம் பார்க்கமாட்டீங்க. ரெண்டு பக்கமும் நெருங்கின சொந்தம்னு கூப்பிட்டா கூட ஒரு நூறு பேர் தேறும். அதுக்கு குறைஞ்சி செஞ்சா உங்களைத்தான் பேசுவாங்கம்மா.” அதன்பின்தான் அடங்கினார் பர்வதம்மா.
சாப்பாடு வெளியில் சொல்லிவிடலாம், மொட்டைமாடியில் ஷாமியானா போட்டு உணவு பரிமாரிவிடலாம் என்று ராகவனும் விக்ரமும் முடிவு செய்தனர். விழாவிற்கான செலவு முழுவதும் விக்ரம் அனுப்புவதாக சொல்லிவிட்டான். வேதாவிற்கும் , சிந்து, சித்துவிற்கு, அக்கா பிள்ளைகளுக்கும் புத்தாடை வாங்க அவள் வங்கிக் கணக்கிற்கு தனியாக அனுப்பிவிட்டான்.
மறு வாரம் பேசும்போது, “இதுக்கெல்லாம் நீ செலவுபண்ணி வரவேண்டாம் விக்ரம். சீமந்தமே பெண்கள் ஃபங்க்ஷன். நீ வந்து என்ன செய்யப்போற ?” என்றார்.
விக்ரம் பதிலே சொல்லவில்லை. தனியாக வேதாவிடம் சொல்லிவிட்டான். “நான் வெள்ளிக்கிழமை விடிய காலைல வருவேன் தேனு. நீ யாருக்கும் சொல்லவேண்டாம். உன்னோட மூணு நாள் இருந்துட்டு ஞாயிறு நைட் கிளம்பிடுறேன். அண்ணாக்கு கூட இரண்டு நாள் முன்னாடி நானே சொல்லிக்கறேன்.”
பரீட்சை இருந்ததால், அவள் இரு வீட்டாரும் தர வேண்டிய புடவையை மட்டும் மாலினியோடு சென்று எடுத்திருந்தாள். பிடித்ததை எடு, பணத்தைப் பார்க்காதே என்று விக்ரமும் அவள் அண்ணனும் சொல்லியிருந்தார்கள்.
அம்மாவீட்டுப் புடவை பதினைந்தாயிரத்தில் இருக்க, மாமியார் வீட்டுப் புடவை பதிமூன்றாயிரம். தலை தீபாவளிக்கே புடவை வேண்டாம் என்று இரு வீட்டிலும் சல்வார் எடுத்துக்கொண்டாள். விக்ரம் உடன் இல்லாததால், ஒன்றும் பெரிதாக செய்யவில்லை. ஆக மாமியார் வீட்டிலிருந்து எடுக்கும் முதல் பட்டுப்புடவை. அதனால் பர்வதம்மாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
மற்ற எல்லா வேலைகளும் துரிதமாக நடந்தது. வேதா எதிலும் தலையிடவில்லை. அவள் உண்டு, கல்லூரி உண்டு என்று இருந்துகொண்டாள். புதன் பரீட்சை முடியவும், வியாழன் காலையில் மாமியார் வீடு வந்துவிட்டாள். அடுத்த பரீட்சை அடுத்த செவ்வாய் என்பதால், வீட்டிலிருந்தபடியே படித்துக்கொண்டிருந்தாள்.
விக்ரம் வருகிறான் என்று வியாழன் இரவுதான் பர்வதம்மாவிற்கு தெரியவந்தது. எள்ளும் கொள்ளுமாய் வெடித்துக்கொண்டிருந்தார். அந்தப்பக்கம், கோமதி மாப்பிள்ளையின் வரவைக் கேட்டுக்கொண்டிருந்தார். லீவ், டிக்கெட் என்று அதுவரை கதை சொல்லி சமாளித்த ராஜெந்திரன், விக்ரம் வருவதை உறுதி செய்தான்.
வெள்ளி விடியற்காலையில் வந்து சேர்ந்தான் விக்ரம். அவன் வரவும், பெண்கள் மூவருமே ஹாலில் இருந்தனர்.
[the_ad id=”6605″]
நலம் விசாரித்து முடித்ததும் ஆரம்பித்துவிட்டார் பர்வதம். “நாந்தான் சொனேன் இல்லடா, குழந்தை பொறந்ததும் ஒரே எட்டா வந்துக்கோன்னு. இப்ப இருக்கிற செலவோட நீ வந்துபோற செலவு வேற. உங்கக்காவுக்கு பணத்தை சீக்கிரம் குடுக்கணுமில்லை ?”
சீ …என்றானது கேட்டவர்கள் அனைவருக்கும். அவனை சென்று அழைத்துவந்த ராகவன், “மா…வந்த பிள்ளைக்கு காபி டீ வேணுமான்னு கேக்கலை, காயத்ரிக்கு பணம் குடுக்கறது அவ்ளோ முக்கியமா ?”, சீறினான்.
முகமே மலர்ந்துவிட்டது பர்வதம்மாவிற்கு. “மொத்தமுமா ? அதுக்குள்ள அவ்வளவு சேர்த்துட்டியா ?”
[the_ad id=”6605″]
“இல்ல, அங்க பாங்க்ல கடன் வாங்கிருக்கேன். மாசா மாசம் கட்டிக்குவேன். அங்க பாங்க்காரன் இப்படி என்ன வந்ததும் வராததுமா, நிக்கவெச்சி கேக்கமாட்டான். என் பொண்டாட்டி சீமந்தம், அவ வாழ்க்கையிலேயே ஒருதரம்தான் வரும். அதைக்கூட பார்க்க வராம, அந்த காசையும் சேர்த்து உங்க பொண்ணுக்கு தரணும். அப்படி ஒரு தல போற அவசரமும் கூட இல்லை அவங்களுக்கு. நீங்க ஏன்தான் இப்படி இருக்கீங்களோ ? இனியோரு வாட்டி காயத்ரிக்கு காசுன்னு எங்கிட்ட சொல்லாதீங்கம்மா. இன்னையோட இந்த கடன தீர்த்துடறேன்.”, எரிச்சலாய், காட்டமாய் பதிலளித்தான்.
முகமே விழுந்துவிட்டது பர்வதம்மாவிற்கு. “டேய், நான் அதுக்கு…”
போறும் என்று சைகை செய்து விட்டு, வேதா கைபிடித்து அவன் ரூமுக்குள் அழைத்துச் சென்றுவிட்டான்.
ராகவனும் சென்றுவிட, மாலினி விக்ரமிற்கு காபி போட கிட்ச்சனுக்குள் புகுந்துகொண்டாள். பர்வதம்மா தனியே நின்றார். தான் எல்லை மீறி பேசிவிட்டோமோ என்று அப்போதுதான் உரைத்தது போலும் அவருக்கு.
உள்ளே சென்ற விக்ரம் கட்டிலில் அமர்ந்து, அவளை அணைத்து, சேலை விலக்கி, வயிற்றில் முத்தமிட்டு கன்னம் பதித்தான். சட்டென்று எதுவோ பட்டது போலிருக்க, அவசரமாய் நிமிர்ந்தான். “ம்ம்.. உங்க பிள்ளைதான். இவ்ளோ லேட்டா அவனுக்கு முத்தம் குடுத்ததுக்கு எட்டி உதைக்கிறான்.”, கன்னம் பிடித்து சிரித்தாள்.
“என் பொண்ணு, நான் வந்ததும் ஹலோ சொல்றாள்.”, மீண்டும் முத்தமிட்டான். அவன் வருவான் என்றே நைட்டி தவிர்த்து காட்டன் சேலையிலிருந்தாள்.
“விக்ரம்”, என்று மாலினி குரல் கேட்கவும், அவளை படுக்கச் சொல்லி, இவன் வெளியில் வந்தான். இந்தா உனக்கு காபி, வேதாக்கு ஹார்லிக்ஸ். சீக்கிரமே எழுந்தது அவளுக்கு பசிக்கும். நான் படுக்க போறேன். எதுவும் வேணும்னா, கூப்பிடு என்று சென்றுவிட்டாள். அவன் அம்மா சோபாவில் அமர்ந்திருந்தாலும், இருவருமே கண்டுகொள்ளவில்லை.
[the_ad id=”6605″]
விக்ரம் தூங்கி , குளித்து பத்து மணி போல் வெளியே வர, அவன் அக்கா குடும்பம் வந்து இறங்கியது. எல்லோரையும் விசாரித்து, பிள்ளைகளுக்கு அவன் வாங்கி வந்த சாக்லேட்களை சமமாய் பிரித்துக் கொடுத்தான்.
“என்னடா, அவ்ளோதானா ? மாமா சிங்கபூர்லந்து அது வாங்கிட்டு வருவார், இது வாங்கிட்டு வருவார்னு என் பிள்ளைங்க சொல்லிகிட்டு இருந்தாங்க ?நீ நாலு சாக்லேட் டப்பாவ நீட்ற ?”, காயத்ரி ஆரம்பித்து வைத்தாள்.
“திடீர்னு முடிவு பண்ணி கிளம்பவும், நேரமில்லைக்கா….”, என்று உள்ளே பொருமினாலும் வெளியே காட்டாது, இலகுவாகவே கூறினான்.
“நாங்க எப்பமா மாமா வாங்கிட்டு வருவாங்கன்னு பேசினோம் ? அவர் வர போறதே தெரியாதே ?”, பெரியவன் கணேஷ் உண்மையை போட்டுடைத்தான்.
மணி பார்த்தவன், ஒரு நிமிஷம் என்று உள்ளே சென்று, இரண்டு செக்குகளோடு வந்தான்.
“அம்மா, நீங்களே அக்காகிட்ட குடுத்துடுங்க, அவளுக்கு சேர வேண்டிய மிச்ச பணத்தை. “, என்று அவரிடம் கொடுத்தான். இப்போதுதான் அவரிடம் பேசுகிறான்.
“விகரம், நீயே குடு பா.”, என்றார் பர்வதம். மகன் தன்னிடம் பேசிவிட்டான் என்ற சந்தோஷத்துடன்.
“உன் சொத்துமா, அதுக்கான ஷேர், உன் பொண்ணுக்கு குடுக்கற. அப்பா இடத்துலர்ந்து, நீ செய்யறதுதான் சரி.”
“நல்லபடியே இரும்மா”, என்று வாழ்த்தி. செக்குகளைக் கொடுத்தார் மகளிடம்.
வாங்கியவள், “விக்ரம், செக் பாசாகுமில்ல ? “, என்று கிண்டலாய் கேட்டாள். விக்ரம் முகம் இறுகியது என்றால் வேதாவின் முகம் வாடியது. எரிச்சலான ராகவனோ அவள் கணவர் வீட்டார் முன் கோவத்தைக் காட்ட முடியாது அமைதி காத்தான். மாலினியும் அதே சிக்கலில் அதிருப்தியை முகத்தில் மட்டும் காட்டினாள்.
“காயத்ரி…”, அழுத்தமாய் வந்தது காயத்ரியின் கணவன் ரகுராமின் குரல்.
“ஹி ஹி…கிண்டலுக்கு கேட்டேங்க…”
“யாரும் சிரிக்கலை…உள்ள போ.”, அவளை முறைக்கவும், சோபாவில் அமர்ந்து இதையெல்லாம் வேடிக்கை பார்த்திருந்த அவள் மாமனார், மாமியாரிடம் கொண்டு வந்து செக்கைக் கொடுத்தாள் காயத்ரி.
“சந்தோஷம்மா, சாமிகிட்ட வெச்சிட்டு ரகுகிட்ட கேட்டு உள்ள பத்திரமா வை.” என்று முடித்துக்கொண்டார் அவள் மாமியார். கையில் வாங்கவில்லை. அவள் பேசியது அவர்களுக்கும்மே பிடிக்கவில்லை.
அவள் தலை மறைந்ததும் ரகு, “மன்னிச்சிக்கோ விக்ரம். இங்க வந்தாலே இப்படி ஆகிடறா. நீ தப்பா எடுத்துக்காத. உன் குடும்பத்தை விட்டுட்டு நீ கஷ்டப்பட்டு சேர்த்த பணம். அதுக்கான மரியாதை கூட தெரியலை என் பொண்டாடிக்கு. வெளிய போய் நாலு காசு சம்பாதிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும் .”, வருத்தமான குரலில் கூறினான். பர்வதம்மா சங்கடத்துடன் நெளிந்தார்.