சனிக்கிழமை அதிகாலை வந்து இறங்கினவனை எப்போதும் போல் ராகவன் வந்து அழைத்துப்போனான். வீட்டிற்கு சென்றவன், பேச முற்பட்ட தாயிடம், “காலையில பேசிக்கலாம்மா…”, என்று அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.
காலை எட்டு மணிக்கெல்லாம் கிளம்பித் தயாராக வந்தவன், அண்ணி, பிள்ளைகளைகளிடம் பேசியவாறே காப்பியை குடித்துவிட்டு, ஒரு பையை எடுத்துக்கொண்டு மனைவி மகனைப் பார்த்துவிட்டு இரவு வருவதாய் சொல்லிச் சென்றான்.
விக்ரம் பர்வதம்மாவிடம் பேசாமல் தப்பிப்பது மாலினிக்குப் புரிந்தது. இது எப்படிப் போகிறது என்று பார்க்கலாம் என்று நினைத்தாள். ராகவன் இரண்டு நாட்களாய்க் கொஞ்சி, கெஞ்சி மலையிறக்கியிருந்தான் மாலினியை.
வேதாவின் தாய் வீட்டை அடையும்போதே, ராஜேந்திரன் வாசலில் வரவேற்றான். உள்ளே வந்ததும், வரவேற்ற அவள் பெற்றோர், “நீங்க குழந்தைய பார்த்துட்டு வாங்க மாப்பிள்ளை, நாம சாவகாசமா டிபன் சாப்டுட்டு பேசலாம்.”, என்று சொன்னதும் , மனைவியைத் தேடி அவள் அறைக்குள் நுழைந்தான்.
குழந்தையை தோளிலிட்டு தட்டிக்கொண்டிருந்தாள் வேதா. அவனைக் கண்டதும் பளிச் சென்று ப்ரகாசமாய் புன்னகை பூத்தது அவள் முகம். மெல்ல அணைத்து அவளை உச்சி முகர்ந்தான். “தேனு…”. அவனை முட்டியவள்,
“உக்காருங்க, குழந்தையை மடியில வெக்கிறேன்.”, என்றாள்.
அவனும் கட்டிலில் அமர, அவனுக்கு வாகாய் குழந்தையைக் கொடுத்தாள். சித்துவைத் தூக்கிப் பழக்கமிருந்ததால், விக்ரம் பயப்படவில்லை. பிள்ளையை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.
“வீரு, என்ன பிள்ளையை ஆடிட் பண்ணறீங்களா, எத்தனை கண், மூக்கு, காதுன்னு..”, சீண்டினாள்.
“உன்னை மாதிரி ஒரு பொண்ணு வேணும்னு கேட்டா, நீ என்னை மாதிரி ஒரு பையனை பெத்துக் குடுக்கற…”
“என் ஆசை முதல்ல நிறைவேத்திக்கிட்டேன். அடுத்து உன் ஆசை..ஒகேவா ?”, நகைத்தாள்.
தன் குடும்பம் என்ற உணர்வு நிறைந்திருந்தது விக்ரமிற்கு. சற்று நேரம் அவர்கள் உலகில் சஞ்சரிக்க, “ரொம்ப நேரம் கைல வெச்சிக்கக் கூடாதாம். இருங்க, தூளியில போடறேன். சாப்பிட்டு வந்து, திரும்ப உங்க பிள்ளையைக் கொஞ்சுவீங்களாம்.”.
விக்ரம் வெளியில் வரவும், கோமதி “வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்.”, என்று சாப்பாட்டு மேசைக்கு அழைத்துவிட்டார். மச்சானும் மாமனாரும் காத்திருப்பதால், அவனும் அமர்ந்தான்.
[the_ad id=”6605″]
வெளியில் வந்த வேதா, “மா, நீ பாப்பாகிட்ட இரு. நான் அவங்களுக்கு பரிமாறிக்கறேன்.”, என்று விக்ரம் அருகில் நின்றாள்.
நீண்ட நாட்களுக்குப்பின் மனைவி கையால் உணவு. சற்று நிறையவே உண்டான். தொட்டில் குறித்த விஷயங்களைப் பேசியபடியே உண்டனர். விக்ரம் அவளையும் அமரச் சொல்லி சாப்பிட வைத்தான்.
“முப்பதுக்குத்தான் தொட்டில் போடற வழக்கம் மாப்பிள்ளை. ராஜா சொன்னான், மறுபடி லீவ் எடுக்கமுடியாது உங்களுக்குன்னு. அதான், பதினொறாம் நாள் வெச்சிட்டோம். மார்கழின்னவும் பக்கத்துல ஹால் கிடைச்சிது வசதியா போச்சு. சாப்பாடும் சொல்லிட்டா, வந்து அவங்களே சர்வ் பண்ணிடறாங்க..” சௌந்தர்ராஜன் சொன்னவற்றைக் கேட்டு ஆமோதித்தாலும், கவனம் மனைவியின் தட்டில்தான் இருந்தது. அன்று முழுவதும் அவர்களோடே சென்றது. குழந்தைக்கு, வீட்டுக்கு, அவளுக்கென்று வாங்கியதைக் கொடுத்தான்.
அதில் முக்கியமானது, அவன் போட்ட வளையல்களுக்கு தோதாய் ரூபி, எமரால்ட் காதணிகள்.
அதைக் கொடுத்தவன், “பொண்ணு பெத்து குடுத்திருந்தா நெக்லஸ் வாங்கலாம்னு இருந்தேன். பையன்னவே, கம்மல் போறும் உனக்கு.”, என்று வம்பிழுத்தவாறே கொடுத்தான்.
அதற்கே மகிழ்ந்தவள். “சும்மா எனக்குன்னு சொல்லி, பொண்ணுக்காக வாங்கிருப்பீங்க. இது எனக்கே எனக்கு. அதனால குமுதா ஹாப்பிதான் அண்ணாச்சி.”, என்று கண்ணடித்தாள்.
குழந்தைக்காக அவள் வாட்சப்பில் பார்த்து தேர்ந்தெடுத்த செயின், காப்பு என்று காண்பித்தான். அவளும் எல்லாவற்றையும் அவள் அண்ணன், பெற்றொரிடம் காட்டினாள். குழந்தைக்கு அவர்கள் சார்பாக வாங்கியிருந்த தங்க அரைஞாண் கொடி, கழுத்துச் சங்கலியைக் காட்டினாள்.
அன்று முழுதும் வேதா, குழந்தையோடு கழித்தான் விக்ரம். பேர் முடிவு செய்வதிலிருந்து, அவளுக்கு புடவை எடுக்க செல்வது, நண்பர்கள் யாரைக் கூப்பிடுவது என்று பொழுது சென்றது. இடையில் ராஜேந்திரனும் குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லாமல் விட்டது குறித்து மன்னிப்புக் கேட்டிருந்தான்.
இரவு படுக்கத்தான் வீட்டிற்கு வந்தான் விக்ரம். காலையில் ஒரிரு வார்த்தை தொட்டில் போடுவது பற்றிப் பேசியவன், குழந்தைக்கான நகைகளை தாயிடம் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
மறு நாளும், சிந்துவிற்கு ஸ்விம்மிங் கிளாஸ் முடிந்ததும் அவனுடனே வேதாவின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சிந்துவும் சமர்த்தாய் சாப்பிட்டு, பாப்பாவுடன் விளையாடினாள். சற்று நேரம் பொறுத்து, மாமனார், மச்சானுடன் விக்ரம் பேசிக்கொண்டிருக்கையில், உள் அறையில் இருந்த வேதாவிடம் வந்த சிந்து,
“சித்தி, சித்தா ரொம்ப bad ‘, என்று புகார் வாசித்தாள் வேதாவிடம்.
“ஏன் செல்லம்?”
“கேம் விளையாட சித்தா போன் கேட்டனா ? அதுல அவர் வெச்சிருந்த போட்டோ பார்த்து ஷாக் ஆகிட்டேன்.”, கண் விரித்து சிந்து சொல்லவும், அச்சசோ… இந்த மனுஷன் ஏடா கூடமா எதயாச்சம் வெச்சிருந்தாரோ, என்று பயந்தாள் வேதா. கூடவே, நம்மாள் அப்படியெல்லாம் கிடையாதே, என்று ஒரு சிறு நம்பிக்கை.
“அப்படியா, எங்க காமி ?”, என்று போனை வாங்கினாள்.
“பாருங்க சித்தி, வால்பேப்பர்ல என்ன வெச்சிருக்காருன்னு…”, என்று, போன் லாக்கை திறந்து தரவும்,
“ஓ.. உனக்கு அவர் போன் ஒபன் பண்ண தெரியுமா ?”, என்றாள் கையில் வாங்கியவாறே.
அவளை ஒரு பார்வை பார்த்த சிந்து, “ பாட்டர்ன் (pattern) செட் பண்ணிக் குடுத்ததே நாந்தான். போனை பாருங்க சித்தி.”
பார்த்தவள் முகத்தில் சிரிப்பும் கோவமும் சேர்ந்து வந்தது. அம்புலிமாமா புத்தகத்தில் வரும் விக்ரமாதித்ய ராஜாவும், முதுகில் நீண்ட வெள்ளை முடியும், சிவந்த கண்களூம் கொண்ட வேதாளம் தொற்றியிருக்கும் கார்ட்டூன் புகைப்படம் ! அப்பாடா என்றானது வேதாவிற்கு.
“ரொம்பத்தான் குளிர் விட்டுப் போச்சு உங்க சித்தப்பாவுக்கு. கூப்புடு அவரை.”
அடுத்த நிமிடம் விக்ரமை இழுத்து வந்தாள். முறைத்தவாறே, “விக்ரம், என்னதிது என்று வேதா காட்டவும், பார்த்து ஜெர்க்கானவன், சிந்துவிடம் திரும்பி, “ஏய், இதுக்குத்தான் போனை வாங்கினியா ? வேதாமா… இவதான் மாத்திவிட்டிருக்காடா… நான் செய்வனா ?”, என்று சரண்டர் ஆனான்.
“சித்தா, உனக்கு தைரியமில்லைனா, எதுக்கு இந்த போட்டோ வெச்ச, இப்ப சின்ன பொண்ணு மேல பழி போடுற ?”, பாவமாய் முகத்தை வைத்துக் சிந்து கேட்கவும்,
“ஏண்டி சில்வண்டு, இப்படி மாட்டிவிடுற ?”, விக்ரம் சிந்துவின் காதை கடித்தான்.
“ஒழுங்கா ஐபாக்கோ கூட்டிட்டு போயிருக்கலாமில்லை ? இப்போ சமாளி.”, உதடு பிதுக்கி, “நான் தாத்தாகிட்ட போறேன் . நீ என்னை திட்ற.”, என்று ஓடிவிட்டாள்.
“தேனூ, அவ தாண்டா ஐஸ் க்ரீம் வாங்கித் தரலைன்னு இப்படி கோர்த்துவிட்டா.”, விக்ரம் அவன் அருகில் அமர்ந்து அணைக்கவும்.
“ நீ வேற வீரு. அவ பாட்டு, நீ ரொம்ப பாட்( bad), உன் போன் பார்த்து ஷாக்கானதா சொல்லி ஒரு நிமிஷம் என் பி.பி. ஏத்தி விட்டுட்டா. என் கற்பனை ஒரு செகண்ட்ல எங்கயோ போயிடுச்சி.”, என்று அவன் தோள் சாய்ந்து சிரிக்கவும்.
“அடிப்பாவி, புருஷன் மேல எவ்வளவு ஒரு நல்லெண்ணம் ? என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு.”, விக்ரம் முறைக்கவும், “அதேதான், அடுத்த செகண்டே, நம்மாள் சாமி கண்ணை குத்திடும்னு பயப்படுற கேசாச்சே, அப்படியெல்லாம் இருக்காதுன்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு.’, என்று கண்ணடித்தாள்.
அவசர இதழொற்றல் ஒன்றை அழுத்திக் கொடுத்தவன், “மாமா வெயிட் பண்றார். இப்ப பொழச்சி போ. உன்னை அப்பறம் பனிஷ் பண்றேன். குழந்தை தூங்கும்போதே நீயும் தூங்கு. நான் சிந்துவை வீட்ல விட்டுட்டு, ஃபங்ஷன் வேலைய கொஞ்சம் பார்க்கணும்.”, என்று சொல்லிச் சென்றான்.
இன்னும் இரண்டு நாட்கள் விக்ரம் இரவு படுப்பதற்கு மட்டுமே வரும் கதை தொடர்ந்தது. பொறுத்துப் பார்த்து, அன்றிரவு பஞ்சாயத்தைக் கூட்டினார் பர்வதம். வீட்டிற்குள் விக்ரம் வரும் போதே மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது.
“வாடா… இப்பத்தான் மாமியார் வீடு விட்டு வரத் தோணுதா ? நானும் பாக்கறேன், வந்த நாளா அவங்க வீடே பழி கிடக்கற ? இங்க ஒரு வார்த்தை பேசறதுக்கே பஞ்சமாயிடுச்சு ?”
“என்னமா பேசணும் ?”, விக்ரம் அமைதியாய்க் கேட்டான், அவன் அன்னை சொன்ன மற்றவற்றை விடுத்து.
[the_ad id=”6605″]
“இப்படி கேட்டா என்னடா அர்த்தம் ? “, எரிச்சலாய்க் கேட்டார் பர்வதம். அவர் குரல் கேட்டு, படுக்கை அறையில் இருந்து ராகவனும், கிட்சனில் வேலை முடித்த மாலினியும் ஹாலுக்கு வந்தனர்.
“நீ என்ன கேக்கறன்னு சொல்லுமா ?”
“என்னடா புரியாத மாதிரி பேசற ? ஏன் முன்ன மாதிரி கலகலப்பாவே இல்லை ?”
“யார் சொன்னா ? இவ்ளோ நேரம் ஃப்ரெண்ட்ஸ் கூட வயறு வலிக்க சிரிச்சிட்டுதான் வந்தேன்.”
“ராகவா…பாருடா…நான் என்ன கேட்கறேன் இவன் என்ன சொல்றான். நம்ம கிட்ட ஏன் பேசலைன்னுதானே கேட்கறேன் ?”
“இல்லையேமா ? இன்னைக்கு அண்ணங்கூட அரை மணி நேரத்துக்கு மேல பேசிட்டு இருந்தேனே, லோன் பத்தி, எப்ப வேதாவைக் கூட்டிக்கப் போறேன்னு…”
“அப்ப எங்கிட்டதான் பேசலையா ? சிந்து குட்டி கூட, நீ அவளை அவ ஸ்விம்மிங் கிளாஸ்லேர்ந்து அப்படியே வெளிய கூட்டிட்டு போனன்னு சொன்னா.”, லேசாய் பல்ப் எரிந்தது.
“மா..நான் படுக்கப் போறேன். என் தூக்கம் கெடக்கூடாதுன்னு நீங்கதான் சொல்லிருக்கீங்க. இப்ப லேட் பண்றீங்க.”, என்று அவன் அறைக்குத் திரும்பப் போனான்.
“என்னடா தூக்கம். இன்னைக்கு ஒரு நாள் தூங்காட்டி பரவாயில்லை. வந்து உக்காரு.”,
“அது எப்படிமா ? என் புள்ளை பிறக்கறதை தெரிஞ்சிக்கறதை விட என் தூக்கம் முக்கியம்னு சொல்லிருக்கீங்க. இப்ப உங்ககிட்ட பேசறதைவிட எனக்கு என் தூக்கம்தான் முக்கியம்.”, இறுகிப் போயிருந்தது விக்ரமின் பார்வை. அவன் அறைக்குத் திரும்பப்போனவனை,
“டேய்… நீ எதை மனசுல வெச்சி இப்படி பேசற ? நீ அங்க தனியா கஷ்டப்படுவியே எதுக்குன்னுதாண்டா சொல்லலை. நாங்க எல்லாரும்தான் கூடவே இருந்தோமே..”, இதுக்கு போய் என்ன என்பதுபோலிருந்தது அவர் குரலும் முகமும்.
“ஓ…அப்ப காயத்ரிக்கு வலி வந்த உடனே அடிச்சி பிடிச்சி மாப்பிள்ளைக்கு போனைப் போட்டு உடனே வாங்க நீங்க பக்கத்துல இருந்தா தைரியமா இருப்பான்னு கூப்பிட்டயே ? அப்ப மாப்பிள்ளை மதுரையிலர்ந்து வர வரை கஷடப்படுவாறேன்னு தெரியலை. இப்ப உன் பொண்ணு மாதிரி வேதாவும் என்னைப் பார்த்தா கொஞ்சம் தெம்பாவான்னும் தோணலை…”
“நீ என்னடா பக்கத்துலயா இருக்க, புறப்பட்டு வர ?”
“ஏன், வீடியோ கால்ல பேசிருப்பேன்…நான் நேர்லதான் வந்து நிக்கணுமா… நீயும் என் மாமியாரும் படுத்தின பாட்ல போன்லதானே நாங்க இத்தனை மாசமா குடித்தனமே பண்றோம் ? “
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தார். ராகவனுமே குற்ற உணர்ச்சியில்தான் இருந்தான். மாலினி அமைதியாய் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மாமியாரையோ, அவள் புருஷனையோ காப்பாற்றப் போவதில்லை என்ற முடிவில் இருந்தாள். அவளுக்கு நன்றாகத் தெரியும் மாமியார் அடுத்து என்ன செய்வார் என்று.
அவள் எதிர்ப்பார்ப்புக்குத் தப்பாமல், “எனக்கு அது தோணவே இல்லைடா. ஏண்டா ராகவா, நீயாச்சம் எனக்கு சொல்லிருக்கலாமில்லை ? பாரு இப்ப புள்ளை வருத்தப்படறான்.”, என்றார்.
“என் நேரம்மா. உங்களைக் கேட்டதுக்கு பதிலா நான் பாட்டுக்கு போன் பண்ணிருக்கணும். நடு ராத்திரி அவனை எழுப்பாதேன்னு நீங்க சொன்னதும் யோசிக்காம உங்க பேச்சைக் கேட்டேன் பார்த்தீங்களா ? அதுக்கும் சேர்த்து எனக்கிந்த பழி தேவைதான்.”, என்றான் வறண்ட குரலில்.
ஒரு ஆழ்ந்த அமைதி நிலவியது.
“மா… இனியாவது எனக்கான முடிவை எடுக்கற சாய்ஸ் எங்கிட்ட குடுங்க. நீங்களா முடிவெடுக்காதீங்க. என் பிள்ளை நாளைக்கு கேட்பான், நான் பொறக்கும் போது என்னப்பா பண்ணிகிட்டு இருந்தேன்னு. எதுவுமே தெரியாம குப்புற படுத்து தூங்கிட்டு இருந்தேன்னு சொன்னா, எப்பவும் அதை சொல்லிக் காட்டப் போறான். ஒரு நாள் தூக்கத்தைக் குடுத்து வாழ்க்கை முழுசுக்கும் எனக்கு இந்த ஒரு வேதனையை குடுத்துட்டீங்க.”
“அப்படி எல்லாம் யோசிக்கலைடா…”, கண்கள் கலங்கிவிட்டது அவருக்கு.
“திரும்ப எதுக்காச்சம் வேதா ஹாஸ்பிடல்ல சேர வேண்டிய நிலைமை வந்தா, தயவு பண்ணி எங்கிட்ட சொல்ல விடுங்க. அவளைவிட எனக்கு வேலை தூக்கம் எதுவும் முக்கியமில்லை.”
“ச்ச…அப்படில்லாம் ஒண்ணும் ஆகாது. நீ ஏண்டா இப்படி பேசற ? மாலினி நீ சொல்லுமா ?”, அடுத்து அவளை உள்ளே இழுத்தார்.
[the_ad id=”6605″]
“என்ன சொல்ல ? நம்ம பண்ணது முட்டாத்தனம். ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேக்கறதுதான் வழி. என்னை எழுப்பியிருந்தா கண்டிப்பா சொல்லிருப்பேன். இவர் எனக்கு போட்ட மாதிரி மெசேஜ் போட்டிருந்தா அவனுக்கு பொறக்கறதுக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடியாவது தெரிஞ்சிருக்கும். சொல்லாம இருந்திருக்க மாட்டீங்கன்னு நானும் தப்பு கணக்குப் போட்டுட்டேன். ராஜா கேட்டப்பவும் தடுத்துட்டீங்களாம். அப்போ விக்ரம் வேதனையில பேசினா கேட்டுக்க வேண்டியதுதான் அத்தை. நீங்க உங்க மூத்த பிள்ளை மேல பழி போட்டாலும், இல்லைன்னால்லும் எல்லாரும் தப்பு பண்ணிருக்கோம்.”, ராகவனின் மேல் பழியைத் தூக்கி போட்டதற்கும் மாமியாருக்கு ஒரு குட்டு வைத்தவள்,
“மன்னிச்சுடு விக்ரம், இது சரி செய்ய முடியாத தப்புதான்.”, வருத்தமாய்க் கூறினாள் மாலினி.
“விடுங்க அண்ணி. இதுல உங்களையோ, அண்ணனையோ நான் குறை சொல்லமுடியாது. வேதா சொன்ன மாதிரி, இந்த காலத்துல எந்த அண்ணா, அண்ணி இவ்வளவு தூரம் தம்பிக்கு செய்யறாங்க ? தேவையில்லாம மூக்கை நுழைச்சது அம்மா. நான்…”
“விக்ரம்… நான் உன்னைப்பத்திதான் யோசிச்சேன் விக்ரம்…நீ கஷ்டபடப்போறியேன்னுதான் வேண்டாம்னு சொன்னேன்டா…”, அவன் பேசிக்கொண்டிருக்கையிலேயே இடைமறித்தார் பர்வதம்.
“காயத்ரியை தூக்கி வெச்சி, எங்களைப் பிச்சி பிடுங்கி அவளுக்கு செய்வீங்க. இப்ப அது எங்க வந்து நிக்குது ? அவ என்னை எடுத்தெறிஞ்சி பேசும் போதே நீங்க திட்டி சரி பண்ணிருந்தா, இன்னைக்கு அவஅரக்க பரக்க வேலைக்கு போகவேண்டியிருக்காது. அவளுக்கு பணத்தை உடனே குடுக்கணும்னு என்னை நச்சரிக்கவும்தான் வெளி நாட்டு வேலைக்கே ஒத்துக்கிட்டேன். நானும் வேதாவும் அப்படி பிரிஞ்சிருந்து சம்பாரிச்ச பணம் இப்ப மாமா அக்கவுண்ட்ல தூங்குது.
உங்களுக்கும் காயத்ரிக்கும் தவிர வேறு யாருக்கும் அந்த பணத்தை வாங்கிக்க அவசரமில்லை. ரகு மாமா என் கல்யாணத்தப்ப சொன்னாரு, “இதுக்காகன்னு சிங்கப்பூர் போகாதடா, அவசரமில்லை அப்பறம் கூட பார்த்துக்கலாம்னு”. ஆனா உங்களுக்கோ, உங்க மகளுக்கோ வேதா அங்க வந்தா, நான் சேக்கற பணம் கம்மியாகிடும்னு அவளை வேலைக்கு போக சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப நான் பணத்தைக் கொடுத்திட்டதால என்ன மதிப்பு கூடிடுச்சு? அதுனால காயத்ரிக்கு கஷ்டம்தான் வந்திருக்கு. நீங்களும்தானே உங்க சம்மந்தியம்மாகிட்ட பேச்சு வாங்கனீங்க ? பணத்தைக் கொடுத்ததுனாலே உங்க பொண்ணை பெருமையாவா பேசினாங்க ? போறுமா இன்னும் சொல்லணுமா ?” பொரிந்து தள்ளினான் விக்ரம்.
விக்ரமா இப்படி பேசுவது என்றிருந்தது எல்லோருக்கும். அவன் சொன்னது எதுவுமே மறுக்க முடியாத உண்மை. என்ன பதில் சொல்ல முடியும் ?
“விக்ரம்…”, பாவமாய் அழைத்தார் பர்வதம்.
கையை உயர்த்தி நிறுத்தச் சொன்னவன், “எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம்மா. என் விஷயத்துல நீங்க இனி எந்த முடிவும் எடுக்காம இருங்க போறும். நான் கேட்டா உங்க அட்வைஸ் குடுங்க. அதோட விட்டுடுங்க. நல்லதோ கெட்டதோ நான் முடிவு செய்துக்கறேன். இதை நீங்க எனக்கு செஞ்சாலே போறும்.”, முடிவாய் சொல்லிவிட்டு அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.
சட்டென்று மழை நின்ற ஒரு நிசப்தம் நிலவியது. தலையை தொங்கப்போட்டு அமர்ந்திருந்த அவன் அன்னையைப் பார்க்கும்படி கண்களால் ராகவனுக்கு சைகை செய்த மாலினி, அவள் அறைக்குத் திரும்பினாள்.
அன்னையின் அருகே அமர்ந்த ராகவன், அவர் கையைப் பிடித்து, “அம்மா, சில நேரம் உண்மை முகத்துல அறையும் போது கஷ்டமாத்தான் இருக்கும். அதை ஒத்துக்காம தப்பிக்கத்தான் தோணும். ஆனா, தப்பை ஏத்துக்கிட்டு, மறுபடி அப்படி நடக்காம இருக்க நம்மை சரி செய்துக்கறதுதான் நம்மளை உயர்த்தும். இது நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு இல்லை. நம்ம எல்லாரையும்விட சின்னவன் விக்ரம். எவ்வளவு யோசிச்சிருந்தா, உங்களோட கோணம், அதுனால மத்தவங்களுக்கான எதிர் வினை, அதோட ரிசல்ட்ன்னு இப்படி பேசிருப்பான் ? “
“அவன் சின்னப் பிள்ளைன்னே இருந்துட்டேன் ராகவா… இவ்வளவு யோசிப்பான்னே நினைக்கலை.”, மெதுவாய் அவன் முகம் பார்த்துச் சொன்னார்.
“அப்பா இருந்த வரைக்கும்தான்மா அவன் சின்னப்பிள்ளை. அதுக்கப்பறம் அவன் சீரியஸ் பிள்ளையாகிட்டான். ஆனா உனக்கு காயத்ரியை கரை சேர்க்கற கவலை கண்ணை மறைக்கவும் அவனை விட்டுட்ட. பணப் பிரச்சனையில நானும் விட்டுட்டேன். காயத்ரிக்கு அவளைத்தவிர எதுவும் எப்பவும் கவனத்துல இருந்ததில்லை. மாலினி வந்து கவனிக்கவும்தான் கொஞ்சம் சரியானான். அவ சொல்லவும்தான் எனக்கே தெரிஞ்சுது. உன் இடத்துல அவ இருந்து அவனுக்கு வேண்டிய பாசத்தையும் வழிகாட்டலையும் குடுக்கவும் சீரானான். இல்லாட்டி அவன் உருப்படாம போயிருப்பான்.”
“யாருக்கு எப்ப, என்ன நல்லது செஞ்சோமோ, மாலினி இந்த வீட்டுக்கு வந்தா.”, உண்மையான நன்றியோடு கூறினார் பர்வதம்.
“அதை அவகிட்ட சொல்லுங்கம்மா. இத்தனை வருஷம் கழிச்சி உங்ககிட்ட இப்படி ஒரு பாராட்டு கிடைச்சா ரொம்ப சந்தோஷப்படுவா. , என்று மகன் சொன்னதைக்கேட்டு ஒரு கண்ணீர்ப் புன்னைகையோடு ஆமோதித்தார்.
“மாலினி நம்ம குடும்பத்துக்கு செஞ்சதுக்கெல்லாம் என்னால எப்பவுமே திருப்பி செய்யமுடியாது. இருந்தாலும் இனியாச்சம், அவளுக்குன்னு கொஞ்சமாவது செய்ய ஆசைபடறேன். பார்க்கலாம் எனக்கு வாய்க்குதான்னு.”, என்று முடித்தான் ராகவன்.
“நல்லபடியே செய்யுடா….”, என்றார்.
“நீ போய் படும்மா. விக்ரம் சொன்னதை யோசி. அவனுக்கு உன் மேல கோவமில்லை, வருத்தம்தான். சரியாகிடுவான். “, என்று விடை பெற்றான்.