ஒரு வழியாய் வெற்றிகரமாய் ப்ராஜெக்டை முடித்து போட்டிக்கு அனுப்பிவிட்டார்கள். குழந்தையும் இப்போது கஞ்சி, செரலாக் என்று சாப்பிடவும், அவளால் கல்லூரிக்கு வார நாட்களில் 3 – 4 நாட்கள் சென்று, முடிக்க முடிந்தது. டிகிரிக்கும் இதே ப்ராஜெக்ட் என்பதால், அதற்கேற்ற நகாசு வேலைகள் மட்டும் செய்து முடித்தால் போதும். இப்போது மீண்டும் வாரம் ஒரு முறை சென்றால் போதுமானது. மிச்ச நேரம் குழந்தையுடன் செலவிட்டாள். மாமியார் வீட்டிற்கும் அவ்வப்போது சென்றாள்.
விக்ரம் மே முதல் வாரம் வந்து, அவளையும் குழந்தையையும் அழைத்துச் செல்வதற்காக டிக்கெட் ஏற்பாடு செய்தான். வேதாவிற்கும், விவேக்கிற்கும் பாஸ்போர்ட் விசா முதலிய ஏற்பாடுகளும் முடிந்தது.
ஏப்ரல் மத்தியில் போட்டிக்கான நேர்காணலும் நடந்தேறியது. போட்டியின் தேர்வாளர்கள் கேட்டவற்றிக்கெல்லாம் இவர்கள் திறம்பட பதிலளித்த விதமும், இவர்களின் மாடலின் வேகமும், துல்லியமுமே இவர்கள் கண்டிப்பாக தமிழ் நாட்டுக் கல்லூரிகள் அளவில் முதலில் வருவார்கள் என்று பறை சாற்றியது.
இறுதி முடிவுகள் மே மத்தியில் தெரியவரும். அதுவரை இருக்கத் தேவையில்லை என்று வேதா நினைத்தாள். ஆனால் சுதீப்பிடம் இவர்களின் வெற்றி வாய்ப்பைப் பற்றிக் கேட்டவன், அவள் இருந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து டிக்கெட்டை தள்ளிப்போட்டான். இறுதிப் போட்டி பரிசளிப்பு விழா எல்லாம் பெங்களூருவில்.
அவன் வந்து குழந்தையையும் அவளையும் அழைத்துப் போவதாய் கூறினான். ஒரு ஆண்டாய் பிரிந்திருந்தவளுக்கு, இந்தப் பத்து நாட்கள் நகரவில்லை. ஊருக்கு கிளம்ப வேண்டியதெல்லாம் மூட்டை கட்டியாயிற்று. அவளை சற்று தேற்ற விக்ரம் சிங்கப்பூர் வந்ததும் படிப்பதற்கு கோர்ஸ் தேட சொன்னான். குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்ல வேதா இஷ்டப்படவில்லை.
[the_ad id=”6605″]
“என்ன தேனூ… கோர்ஸ் எதுவும் பார்த்தியா ? ஒரு வருஷம் சும்மா இருக்கக் கூடாது. நீ எதுவும் படிச்சாதான், நாம திரும்பி வந்தப்பறம் நீ வேலை சேரமுடியும்.”
“ம்ம்..ஸ்டான்ஃபொர்ட் யுனிவெர்சிட்டிது. கேம் தியரி அட்வான்ஸ்டு கோர்ஸ், ஆறு மாசம், இரண்டு லெவல், அப்பறம் பரீட்சை எழுதினா, செர்டிபிகேட் கிடைக்கும்”, ஒப்பித்தாள். பணம்தான் ஒரு லட்சம் தாண்டி கேக்கறான்.”
கட கட வென்று சிரித்தவன், “உலக ராங்க்ல இருக்க யுனிவெர்சிடி, சும்மாவா குடுப்பான். நீ அப்ளை பண்ணு. பணம் கட்டிக்கலாம். ஒண்ணும் ப்ரச்சனையில்லை.”
“இப்ப வேண்டாம். செப்டம்பர்ல ஆரம்பிக்கறேன். அப்பதான் சரி வரும். கொஞ்ச நாள் உங்களோடவும் குட்டியோடவும் இருக்கணும், வேற எந்த நினைப்பும் இல்லாம.”, ஒரே முடிவாய் சொன்னாள்.
இவள் அங்கே வேலைக்கு செல்வாள் என்று நினைத்திருந்த பர்வதம், அவள் படிக்கப் போவதாய் சொல்ல, ஏன் எதற்கு, வெளி நாட்டில் படிப்பென்றால் காசாகுமே என்று புராணம் படித்தார்.
எல்லாவற்றிற்கும் விக்ரம் சொல்லிக்குடுத்தது போல், “ அவர்தான் வேலைக்கு போ வேண்டாம்னு சொல்றார் அத்தை. சும்மா இருக்கறதுக்கு பதிலா, வீட்லருந்தே படிக்கறேன். நீங்க அவர்கிட்டயே கேளுங்க.”, என்று விட்டாள்.
மகனிடம் கேட்கவும் பயம், அதே சமயம் கேட்காமலும் இருக்க முடியவில்லை பர்வதத்தால்.
“ஏன் விக்ரம். வேதாவை வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டியாம் ?”, அவனிடம் மெதுவாய் விசாரித்தார்.
“ஆமாம்மா. குட்டிய யார் பாத்துக்கிறது ? அதனாலதான்.”, அவனும் எதுவும் தெரியாதது போலவே பதிலளித்தான்.
“இல்லைடா, அவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சாளே ? “, இழுத்தார்.
“ஆமாம். அதான் நாங்க திரும்ப சென்னை வந்ததும் வேலைக்கு போகட்டும். இந்த ஒரு வருஷம் இங்கயே இன்னும் கொஞ்சம் படிக்கட்டும்னு சொன்னேன்.”
“திரும்ப வந்துடுவியா ? ஏன் அங்கயே நல்ல சம்பளம்தானே. இங்க அவ்வளவு கிடைக்காதே ?”, கொஞ்சம் அதிர்ந்து கேட்டார்.
“ம்ம்… இருக்கலாம். நீங்க இங்க வந்து எங்களோட தங்கினா அது பத்தி யோசிக்கலாம். ஆனா, சித்து, சிந்துவை விட்டு நீங்க எப்படி இங்க வர முடியும் ? வேதா அப்பா அம்மாக்கும் முடியாது. அதான், நாங்களே வந்துடலாம்னு.”, பொறுமையை இழுத்துப் பிடித்துக் கூறினான்.
“வேலைக்கு ஆள வெச்சிக்கலாமாமே ? அப்படி யாரையாச்சம் …”
“யாரு ? உங்க பொண்ணு சொன்னாளா ? “, இடை மறித்தான்.
“ஆமா… இல்லைடா.. அது பேசிகிட்டு இருக்கும்போது….”, உளறியது தெரிந்து சமாளிக்கப் பார்த்தார்.
“டேய்… உன் நல்லதுக்குத்தானடா ? இந்த வயசுல நாலு காசு சேர்த்து வெச்சா பின்னாடி உதவுமேன்னு சொல்றேன்.”
“காயத்ரி பிள்ளைங்களை வேலைக்காரி வளர்த்தாளா, இல்லை அண்ணா பிள்ளைங்களை வேலைக்காரி வளர்த்தாளா ? ஏன் என் பிள்ளை மட்டும் யார்கிட்டயோ வளரணும் ? அப்படி நாங்க காசு சேர்த்து என்னத்தை சாதிக்கப்போறோம் ? அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே ? காசு மட்டும்தான் தெரியும்…”
என்ன பதில் சொல்லுவார் இதற்கு ? நியாயம்தானே ?
“சிந்து சித்துவோட விவேக்கையும் நீங்கதான் வளர்க்கணும். உதவிக்கு ஆள போட்டுக்கலாம். அப்ப உங்க சின்ன மருமகளும் வேலைக்கு போகலாம். இது ஒண்ணுதான் பண்ண முடியும்.”, முடிவாய் சொன்னான்.
“அதோட, என் பொண்டாட்டிய படிக்க வெக்க நான் என்ன வேணா செலவு செய்வேன். இந்த கணக்கை யாரும் கேக்கவேண்டாம். உங்க பொண்ணுகிட்டயும் சொல்லிடுங்க.”, என்று வைத்துவிட்டான்.
அத்தோடு அந்தப் பேச்சையே விட்டுவிட்டார் பர்வதம்.
இறுதிப்போட்டிக்கு இரண்டு நாள் முன்னர் வந்துவிட்டான் விக்ரம். நான்கு மாதம் கழித்து மகனை கையில் ஏந்த,கண்கள் குளமாகியது. என்னதான் தினமும் ஸ்கைப்பில் பார்த்தாலும், கையில் ஏந்த, ‘அப்பாடி எவ்வளவு வளர்ந்துட்டான்.’ என்றுதான் தோன்றியது.
சிந்துவும் சித்துவும் விளையாட்டு காட்ட, மகன் கஞ்சி சாப்பிட்ட அழகை விடியோ எடுத்து மகிழ்ந்தான். ஒரே நாளில் குழந்தையை பார்த்துக்கொள்ள பழகிக்கொண்டான். இறுதிப்போட்டியின் முன்னாள் இரவு, விமானம் மூலமாக மூவரும் சென்றார்கள். வாணி, சுதீப்பும் அவர்களின் ஆசிரியருடன் மதியமே ரயிலில் வந்தனர்.
போட்டியாளர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இவர்களும் தங்கிக்கொண்டார்கள். வாணியுடன் சேர்ந்து இவளுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் தங்காமல், விக்ரம் எடுத்திருந்த அறையில் தங்கிக்கொண்டாள்.
இறுதிப்போட்டியின் விழா காலையில், கேம் தியரி, டேட்டா அனலடிக்ஸ் தொடர்பான கம்பனிகளின் கருத்தரங்கத்துடன் தொடங்கியது. அந்தக் கம்பனிகள், இறுதிப் போட்டியாளர்களின் திறமையை அறிந்து, அவர்களை தங்களிடம் வேலைக்கு வருவதற்கான வாய்ப்புகளையும் பற்றி இடைவேளைகளில் பேசினார்கள். மாலையில் பரிசளிப்பு விழா. இறுதிப் போட்டியில் பங்கு கொண்ட போட்டியாளர்கள், தங்களது மாடல்களின் சிறப்பு, அதற்கான அல்காரிதம்கள் எந்த அடிப்படையில் உபயோகித்தார்கள் என்று விளக்கவுரைகள் அளித்தார்கள். சில க்ரூப்பில், ஒருவர் மட்டுமே பேசினார்கள். வேதாவின் முறை வந்தபோது, வாணி அறிமுகத்தை தொடங்கி வைக்க, சுதீப்பும், வேதாவும், விளக்கத்தினை அழகாய் முன்னெடுத்துச் சென்றனர். அவ்வளவு பெரிய மேடையில், தடையில்லாமல் வேதா பேசியதைக் கேட்டு அவ்வளவு பூரிப்பு விக்ரமிற்கு. போனில் ரெக்கார்ட் செய்து குடும்பத்தாருக்கு அனுப்பினான். விவேக் சேட்டை செய்யாமல், தோளில் தூங்கியிருந்தான்.
சில புள்ளிகள் வித்தியசத்தில் முதலிடத்தை தவற விட்டாலும், இரண்டாமிடம் வென்றார்கள் வேதா, சுதீப் மற்றும் வாணி. ஆசியப் போட்டியில் இவர்களுடையதும் இடம் பெறும். இந்திய அளவில் வெற்றி பெற்றதற்கு, வெற்றிக் கோப்பையுடன், ஐம்பதாயிரம் பரிசும் வென்றார்கள். வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, இந்த வெற்றி கூடுதல் தகுதியை சேர்க்கும்.
அவர்கள் அறையில் அன்றிரவு குழந்தை உறங்கியதும், தனியே அவளை கொண்டாடித் தீர்த்தான் விக்ரம். பல மாதப் பிரிவின் ஏக்கங்களை சற்று தணித்துக்கொண்டார்கள். வெற்றி தந்த மகிழ்ச்சி இரவை மேலும் மெருகேற்றியது. குழந்தைக்குப்பின்னான வேதாவை மீண்டும் நுணுக்கமாய் அறிந்துகொண்டான்.
மறு நாள் வீட்டிற்கு திரும்பவும், வேதாவை ஆலம் சுற்றி அழைத்துக்கொண்டார் பர்வதம்.
“எவ்ளோ தைரியமா அத்தனை பேர் முன்னாடி இங்கிலிஷ்ல அப்படி பேசின ? ரொம்ப பெருமையா இருந்ததுமா. கல்யாணம் குழந்தைன்னு ஆனாலும், நெனச்சதை வைராக்கியமா சாதிச்சிட்ட வேதா. ”, மனதார மருமகளை வாழ்த்தினார்.
“பொறந்த வீடு, புகுந்த வீடுன்னு இரண்டு பக்கமும் எனக்கு குடுத்த தைரியமும் சப்போர்ட்டுனாலையும்தான் அத்தை முடிஞ்சுது. என் தனிப்பட்ட சாதனை இல்லை இது.”, என்று மாமியாரைப் பார்த்து புன்னகைத்தாள்.
“சாப்பிட்டு, ஒரு எட்டு உங்க வீட்டுக்கும்போயிட்டு வா. அவங்களும் ஆசையா இருப்பாங்க, இந்த மெடல் எல்லாம் பார்க்க.”, என்றார் பர்வதம்.
விக்ரம் குழந்தையோடு வேதா தாய் வீடு செல்ல, அங்கேயும் அவளுக்கு பலமான வரவேற்பு. ராஜேந்திரன் அவளுக்கு பிடித்த மாதிரி ஒரு ஜோடி தங்கக் கம்மல் பரிசளித்தான்.
தேர்ந்தெடுத்தது மஞ்சரி. ஆனால் சொல்லமுடியுமா அதை ? “ஹி ஹி… ஒரு காலேஜ் பொண்ணு இது மாதிரி ஒண்ணு வெச்சி வெச்சி பார்த்துதா, சரி உனக்கும் புடிக்கும்னு அதையே எடுத்தேன்.”, என்று சமாளித்தான்.
“அதானே பார்த்தேன்..”, என்று வேதா ஓட்ட ஆரம்பிக்க, உள்ளுக்குள். அப்பாடா தப்பிச்சேன் என்று நினைத்துக்கொண்டான்.
[the_ad id=”6605″]
ஒரு வழியாய் மாலை கிளம்பி விக்ரம் வீடு சென்றார்கள். பள்ளியிலிருந்து திரும்பியிருந்த சிந்து, ஓடி வந்து கட்டிக்கொண்டாள் வேதாவை.
“சித்தீ… சூப்பர்.. இன்னைக்கு என் ஃப்ரெண்ட்ஸ் கிட்டல்லாம் சொன்னேன். நீங்க எவ்ளோ ஸ்மார்ட்ன்னு. நானும் உங்களை மாதிரி வின் பண்ணுவேன்.”, என்றாள் சிந்து.
“கண்டிப்பா செல்லம். நாங்க செகண்ட்தானே வந்தோம். நீ ஃப்ர்ஸ்ட் வருவ.” அவளை ஒரு சுற்று சுற்றி இறக்கினாள். பின்னேயே வந்து கைதூக்கிய சித்துவையும் அதுபோலவே சுற்ற, “ஆனா சித்தி, மாத்ஸ் இல்லாம வேற எதுனாச்சம்தான் பண்ணணும்.”, என்றாள் சிந்து யோசித்தவாறே.
“ஏன் சிந்துமா ? கணக்கு கஷ்டமில்லைடா…”
“ம்ம்…. எனக்கு நம்பர் வெச்சி செய்யற கணக்கே அப்பப்ப வரமாட்டேங்குது. இதுல a, b, c எல்லாம் வந்தா ? டவுட்தான். அதான் வேற எதாச்சம் இருக்கான்னு கேக்கறேன்.” அவ்வளவு ஐயத்துடன் அவள் கேட்டது கண்டு வீடே சிரித்தது.
“செல்லாக்குட்டி, அந்த நேரம் நமக்கு எது நல்லா வருதோ, அதுல பண்ணலாம்டா. இல்லாட்டி நானே போட்டி வெக்கறேன். உன்னை வின்னராக்கறேன்.”, விக்ரம் வாக்களித்தான்.
“வராத கணக்கை மொதல்ல வர வை . அப்பறமா பார்க்கலாம் எந்த போட்டில சேர்றதுன்னு. “, என்று மாலினி அவளை அனுப்பினாள் வீட்டுப் பாடத்தை முடிக்க.
ராஜேந்திரன் அளித்த கம்மலைப்பார்த்து பர்வதம்மா மகிழ்ச்சியடைந்தார்.
“விக்ரம், நீயும் அவளுக்கு எதாச்சம் நகை வாங்கிக்குடு. சந்தோஷப்படுவா மருமக.”, என்றார்.
“அதுதான் லாப்டாப் வாங்கிக்குடுத்தாரே அத்தை. அதுவே பெரிய பரிசுதான்.”, என்றாள் வேதா.
“ அட… அதை போட்டுக்கவா முடியும் ? நகையா வாங்கிக்கோமா”, என்றார் பர்வதம் .
“அம்மா, எப்பவோ ஒரு நாள் போட்டுகற நகையைவிட நான் வாங்கிக்குடுத்த லாப்டாப் அவளுக்கு ஜாஸ்தி சந்தோஷத்தைக் குடுக்கும். இருந்தாலும், நீங்க சொன்னதுனால, ஊருக்குப்போய் நகையும் வாங்கித்தரேன். போறுமா ?”, சிரித்தான் விக்ரம்.
மறு நாள் மதியம் சிங்கப்பூர் கிளம்புவதால், கடைசி நேர பாக்கிங், உறவினர்களிடம் போன் செய்து விடை பெற என்று பொழுது ஓடியது.
மகள் மருமகன் பேரனை வழியனுப்பிவிட்டு வந்த கோமதி வீட்டில் கண்ணை கசக்கிக் கொண்டிருந்தார்.
“மா, நீ வேதா ஊருக்கு போனதைப் பத்தி வருத்தப்பட்டா மாதிரியே தெரியலை. விவேக்குட்டிக்காகத்தான அழற ? “, ராஜேந்திரன் அவரை கிண்டல் செய்தான்.
“போடா, ஏதோ ஒரு நாள் ரெண்டு நாள் மாமியார் வீட்டுக்கு போகும்போதே வெறிச்சுன்னு இருக்கும். இன்னும் ஒரு வருஷம் கழிச்சு பார்க்கும் போது, பிள்ளை நடந்தே வரும்.”
அதை கேட்டு முகம் மலர ராஜேந்திரனைப் பார்த்த கோமதியைக் கண்டவன், “இரு இரு, உனக்கு வேதாவைப் பார்க்கணும்னா, நான் சிங்கபூருக்கு டிக்கெட் வாங்கி அனுப்பிவெக்கறேன். இதுக்கெல்லாம் எனக்கு கல்யாணம் பண்ணாதே.”, என்றான் சிரித்துக்கொண்டே.
“எனக்கு எங்கையும் போக வேண்டாம். ஆனா உன் கல்யாணம் ரொம்ப தள்ளி போட முடியாது. “, என்றார் கோமதி கறாராக.
வேதா சென்று ஒரு மாதம் போல் ஆகிருக்க, ஒரு நாள், அலுவலகம் முடிந்து எப்பொழுதும் போல் வீடு வந்து சேர்ந்தாள் மஞ்சரி. உடை மாற்றி, முகம் கழுவி, அம்மா கொடுத்த காபியை கையில் வாங்கியவள், “என்னம்மா விசேஷம் இன்னைக்கு ?”, என்று வழக்கம்போல் கேட்டாள்.
“என்னத்த இருக்கு பெருசா சொல்ல ?”, என்று எப்பொழுதும் போல் சலித்துக்கொள்ளாமல். அவள் அன்னை காஞ்சனா, “உனக்கு ஒரு வரன் வந்திருக்குடி. எனக்கும், அப்பாக்கும் பிடிச்சிருக்கு. நீ சரின்னு சொன்னா மேற்கொண்டு பேசலாம்.”, என்றார் ஆர்வமாக.
[the_ad id=”6605″]
உள்ளுக்குள் ஜெர்க்காகினாள் மஞ்சரி. அவள் பெரியம்மா மகள் சங்கீதாவிற்கு வரன் அமைந்ததும் தனக்கு பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார் தான். ஆனால், இப்படி அவளுக்கு தகைந்த ஒரு வாரத்திற்குள் ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
“இப்பவே என்னம்மா ?”, என்று வாய்தா வாங்கப் பார்த்தாள்.
“என்னடி தெரியாத மாதிரி கேக்கற ? சங்கிக்கு அமையணும்னுதானே காத்திட்டு இருந்தோம். அடுத்து உன் வேலைய பார்க்கவேணாமா ? நீயும் வேலைக்கு போக ஆரம்பிச்சு ஒரு வருஷத்துக்கும் மேல ஆகுதில்ல ?”
என்ன செய்யலாம் என்று இவள் யோசிக்கும் போதே, “நல்ல இடம்டி. பையன் MNC la வேலை பாக்கறான். நம்ம விக்ரம் மாதிரி அவரும் C.A. படிச்சிருக்கார். பெரிய போஸ்ட்லதான் இருக்கார். அப்பாக்கு தெரியும் அதெல்லாம். சின்ன குடும்பம்தான். நல்ல வசதி கூட.”, காஞ்சனா அடுக்கிக்கொண்டே போக,
“மா…ஸ்டாப். எனக்கு கொஞ்சம் பேச வேண்டியிருக்கு என் கல்யாணத்தைப் பத்தி.”
இதுவரை அமைதியாயிருந்த அவள் தந்தை கைலாசம், நிமிர்ந்து அவளைப் பார்த்தார்.