“ ம்ம்ம் பெரிய பிரச்சனையாச்சு. உங்கம்மா போன பண்ணி, எங்க ஜோசியர் கிட்ட ஜாதகத்தைக் கொடுத்தோம். உங்க பொண்ணுக்கு செவ்வாய் தோஷம், அதுனால இந்த சம்மந்தம் வேண்டாம்னு சொல்லிட்டார். நீங்க வேற வரன் பார்துக்கோங்க உங்க பொண்ணுக்குன்னு சொல்லிட்டாங்க.”, அழுகையை அடக்கப் பாடுபடுகிறாள் என்று தெளிவாக உணர முடிந்தது அவனால்.
“உன் ஜாதகம் எப்படி அவங்க கிட்ட போச்சு? நேத்திக்குதானே, உன்னை கல்யாண்ம் பண்ண விரும்பறேன்னு சொன்னேன் அவங்க கிட்ட ?”, ராஜேந்திரனுக்கு புரியவில்லை, காலையில் அவன் கிளம்பும்போது கூட, ஜாதகம் வாங்குவது பற்றி எதுவும் பேசவில்லை அவன் அம்மா.
“எனக்கும் தெரியாது. அப்பாவும் நானும் ஆபிஸ் கிளம்பிட்டோம். அப்பறம் போன் பண்ணி உங்கம்மா, அந்த ஜோசியர் இன்னைக்கு நைட் அவர் பொண்ணு பிரசவத்துக்கு அமெரிக்கா போறாராம். வர ஆறு மாசமாகுமாம். நீங்க உடனே ஜாதகத்தைக் குடுங்கன்னு கேட்டாங்களாம். உங்கப்பா வந்து வாங்கிட்டு போனாராம். “
“அப்பவே எனக்கு சொல்ல வேண்டியதுதானே ?”, இடை மறித்தான்.
“உங்க வீட்ல உங்களுக்கு சொன்னாங்களா ? அதே கதைதான் எனக்கும். இல்லாட்டி நான் மதியம் பேசறச்சே சொல்லிருக்கமாட்டேனா ?”, எரிச்சலாய் சொன்னாள்.
“ மேலே சொல்லு.”, பொறுமை காத்தான்.
[the_ad id=”6605″]
“நான் சாயந்திரம் வரவும், பின்னாடியே உங்க அம்மா போன். என் அம்மாவும், ‘ஒரு வருஷமா விரும்பறேன்னு சொல்றாங்க. நீங்க சாதாரணமா வேற வரன் பாருங்கன்னு சொல்றீங்க. நாம் வேற ஜோசியரைக் கேக்கலாம். என் பொண்ணுக்கு தோஷம் எதுவும் இல்லை’ன்னு சொன்னாங்க. உங்கம்மா பேச, எங்கம்மா பேச, கடைசீல, உங்களுக்கு பிடிக்கலைன்னா, பிடிக்கலைன்னு சொல்லுங்க. என் பொண்ணுக்கு செவ்வாய் தோஷம்னு பழி போடாதீங்கன்னு சொல்லி வெச்சிட்டாங்க எங்க அம்மா.”
“கடவுளே !”, தலையில் கைவைத்தான் ராஜேந்திரன். டிரைவர் திரும்பிப் பார்க்கவும், அவரிடம் ஒன்றும் இல்லை என்று சைகை செய்தவாறு, “எதுவும் இப்பத்திக்கு பேசாதே. எங்க வீட்லர்ந்து போன் வந்தாலும் எடுக்காதே. உங்கம்மா அவங்ககிட்ட பேசணும்னு சொன்னாலும் பேச விடாதே. நான் வீடு போய் சேர ஒரு மணி நேரமாவது ஆகும். நான் எங்கம்மாகிட்ட நேரா போய் பேசிக்கறேன். உங்க வீட்ல எது கேட்டாலும், நான் பார்த்துக்கறேன்னு சொன்னேன்னு மட்டும் சொல்லு. நான் நைட் பத்து மணிக்கு மேல கூப்பிடறேன். தைரியமா இரு.”, என்று சொல்லி வைத்துவிட்டான். ஆனால் அவனுக்குத்தான் அடி வயிறு கலங்கியது.
எப்படியும் அவன் அம்மா ஜோசியரைப் பார்க்கவேண்டும் என்று சொல்லுவார் என்பது தெரியும். அவன் மாமா கணேசனின் பெண், ஒரு தெலுங்கு பையனை விரும்பியதும், மனப் பொருத்தம் இருந்தால் போதும், ஜாதகம் பார்க்கத்தேவையில்லை என்று சொல்லி அந்த மாமா திருமணத்தை செய்து வைத்தார். அதைப்போன்றே செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தான். இப்படி அவன் அம்மா எல்லாவற்றையும் தவிடு பொடியாக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை.
ஜோசியர் சுந்தரமூர்த்தி வேண்டாம் என்று சொல்லியபின் அவன் அம்மாவை மாற்றுவது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போயிருந்தான்.
“சார்…சார் வீடு வந்திடுச்சு சார். “, உரக்கக் கேட்ட டிரைவரின் குரல் அவனை சிந்தனையிலிருந்து உலுக்கி எழுப்பியது.
“ஹான். நாளைக்கு பில்லை கடைக்கு அனுப்புங்க. இதை வெச்சிக்கங்க. தாங்கஸ் பாண்டியன்.”, என்று அவருக்கு பேட்டாவைக் குடுத்துவிட்டு இறங்கினான்.
கதவைத் திறந்த அவன் தந்தை, “வாப்பா.“, என்று ஒரு பார்வை அவனைப் பார்த்துவிட்டு, மீண்டும் கதவை தாளிட்டு சோஃபாவில் சென்று அமர்ந்தார்.
ஒன்றும் சொல்லாமல், அவர் சொன்னதைச் செய்து, சாப்பிட அமர்ந்தான். என்னதான் சொல்கிறார்கள் பார்க்கலாம் என்று அமைதி காத்தான்.
அவர் வைத்த அரிசி உப்புமாவையும் சட்னி, ஊர்காய் தொட்டு உள்ளே தள்ளினான் வேண்டா வெறுப்பாய். இந்தக் களேபரத்தில் மஞ்சரி சாப்பிட்டிருக்க மாட்டாள். அதுவேறு மனதை அரித்தது.
“இன்னும் கொஞ்சம் வெச்சிக்கோயேன் ராஜா”, என்றார் கோமதி.
“போறும். பசியில்லை, நெறைய டீ ஆச்சு இன்னைக்கு.”, என்று கை கழுவி வந்து அமர்ந்தான், அவனின் தந்தையருகில்.
கோமதியும் எதிரில் அமர்ந்தவர், “ ராஜா, நம்ம ஜோசியர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்க காலையில் போன் போட்ட போதுதான் அந்த ரங்கசாமி, இன்னைக்கு ராத்திரி அவர் அமெரிக்கா போற விஷயத்தைச் சொன்னாண்டா. அதான் அவசர அவசரமா அந்த பொண்ணோட ஜாதகத்தை வாங்கி கொண்டுபோய் குடுத்தார் அப்பா.”
“எதுக்கு இவ்வளவு அவசரமாய் செய்யணும் ? அதுவும் எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம ?”, கூர்மையாய்ப் பார்த்தான் இருவரையும்.
“நான் சொன்னேன்டா. உங்கம்மாதான், அவர் போயிட்டு வர ஆறு மாசமாகும். பொருத்தம் பார்த்துட்டா, நம்ம வேலைய நாம பாட்டு செய்யலாம்ன்னு என்னை விரட்டினா.”, தன் கடமையை தான் சரிவர செய்துவிட்டதாய்ச் சொல்லி நகர்ந்துகொண்டார் சௌந்தர்ராஜன்.
“இப்படி ஆகும்னு யார் கண்டா? பார்த்த ரெண்டாவது நிமிஷமே, கொஞ்சம் செவ்வாய் தோஷமிருக்கு, வேற வரன் பார்க்கலாம்னு போட்டுட்டாராம், ரங்கசாமி சொன்னான். அதை அந்தம்மாகிட்ட சொன்னா என்னா பேச்சு பேசுது ? “, கோமதி விளக்கினார்.
“பதிலுக்கு நீங்க என்ன பேசினீங்க ?”
[the_ad id=”6605″]
“என்னடா, விசாரண பண்ற ? அதுக்குள்ள அந்த பொண்ணு சொல்லிட்டாளா ?”, கோமதி தான் பேசியது கொஞ்சம் அதிகம் என்று போனை வைத்தபின்தான் உணர்ந்தார். கோபத்தில் பேசியாகிவிட்டது. சமாளிக்க வேண்டியதுதான் என்று திட்டமிட்டிருந்தார்.
“அந்த பொண்ணு பேரு மஞ்சரி. பேர சொல்லுங்க, சும்மா அந்த பொண்ணு அந்த பொண்ணுன்னு சொல்லிகிட்டு.”, சிடுசிடுத்தவன், “ சரி ஜோசியர் வேண்டாம்னு சொன்னா, உடனே உங்களை யாரு அவங்களுக்கு போன் போட சொன்னது ? அதையாவது எங்கிட்ட கேட்டிருக்கலாம் இல்லை ? எனக்கு ஒரு போன் பண்ணமுடியலையா உங்களுக்கு ?”., பொறுமையாக பேசவேண்டும் என்று நினைத்தாலும், குரல் சற்று உயர்ந்தது.
“அதையும் நான் சொன்னேன். வழக்கம்போல உங்கம்மா, நீங்க சும்மா இருங்க. வேண்டாம்னு சொல்லிட்டார்னா, எதுக்கு இழுத்தடிப்பானே. நாமே சொல்லிடலாம்னு போனப் போட்டாப்பா.”, புகார் வாசித்தார் அவன் தந்தை, மனைவியின் முறைப்பைப் பெற்றுக்கொண்டே.
“இதப்பார்றா..நான் வேணும்னு எதுவும் சொல்லலை. வேற வரன் பார்த்துக்கோங்கன்னுதான் சொன்னேன். அந்தம்மாதான் என் பொண்ணு ஒரு வருஷமா உங்க பிள்ளைய விரும்பியிருக்கா நீங்க பாட்டு வேற வரன் பாருங்கன்னு சொல்றீங்களேன்னு பேசவும், என்ன கேட்டா விருப்பப்பட்டா ? தோஷமுள்ள பொண்ணை எங்க தலையில் கட்டப் பாக்கறீங்களான்னு கேட்டுட்டேன். அதுக்கு அந்தம்மா பேச, வெச்சிட்டேன் போனை.”
“ஒரு வருஷமா மஞ்சரி மட்டுமில்லை, நானும்தான் அவளை விரும்பறேன். வேற வரன் பார்த்துடுவீங்களா எனக்கும் ?”, கோபம் கொப்பளிக்கக் கேட்டான் ராஜேந்திரன்.
“டேய், செவ்வாய் தோஷத்தோடல்லாம் விளையாடக் கூடாது. நீ எங்களுக்கு ஒரே பிள்ளைடா . உனக்கு கஷடமாத்தான் இருக்கும் அதுக்காக அவளை கட்ட முடியாது. கொஞ்ச நாள் போகட்டும். உனக்கு மனசு மாறட்டும். அப்பறமா வேற நல்ல பொண்ணா பார்க்கலாம். “
“நான் சொன்னா உனக்கு உரைக்காது. இருந்தாலும் சொல்றேன். உன் புள்ளையோட உறவு உனக்கு நிலைக்கணும்னா, உன் ஜோசியப் பைத்தியத்தை விட்டுடு. இல்லாட்டி எல்லாருக்கும் கஷ்டம் குடுத்து நீ எதுவுமே சாதிக்கப்போறதில்லை.”, வறண்ட குரலில் சொன்னார் சௌந்தர்ராஜன்.
“உங்க புள்ளையானா எனக்கு அறிவில்லையான்னு கேக்கறான், நீங்க பைத்தியம்னு பட்டம் கட்றீங்க ? அந்தப் பொண்ணு வீட்டுக்கு வரதுக்கு முன்னயே இப்படி சண்டையாகுது ? அதுதான் ஜோசியர் உடனே வேண்டாம்னு சொல்லிட்டார் போல. நீங்க போய் படுங்க. எனக்குத் தெரியும் எப்படி சமாளிக்கன்னு.”, தன் ஆற்றாமையை கணவனிடம் எரிச்சலாய்க் கொட்டினார் கோமதி.
“ம். ஆச்சு. அப்பா கிட்டயே இருந்து சாப்பிட வெச்சார். அதிருக்கட்டும் . உங்கம்மா என்ன சொன்னாங்க ?”
“அதே ஜோசிய புராணம்தான் பாடுறாங்க. கொஞ்சம் ஆரப்போடுவோம் விஷயத்தை. அவங்களுக்கு ஒரு மருமக வேணும்னா, அது நீ மட்டும்தான்னு சொல்லிட்டு வந்துருக்கேன். யோசிக்கட்டும்.”
“ஹோ…சரி.”, அவன் சொல்லியதில் என்னவோ அவ்வளவு திடம் வந்தது மஞ்சரியிடம்.
[the_ad id=”6605″]
“இங்க எங்கம்மா, உங்க ஜாதகத்தைக் கேட்டு குதிக்கறாங்க. அவங்க நாளைக்கு வேற ஜோசியரைப் பார்க்கப் போறாங்களாம். நானே கேக்கறேன்னு சொல்லி சமாளிச்சு வெச்சிருக்கேன்.”, பாவமாய்க் கூறினாள்.
“ம்ம்… அவங்க பொருந்துதுன்னு சொன்னா, விஷயம் திரும்புதான்னு பார்க்கலாம். ஆனா, அவங்களும் பொருந்தலைன்னுட்டா தீர்ந்தோம். அந்த விஷப் பரீட்சை வேணுமா ?“, அவனின் குரலிலும் கவலை இருந்தது.
“உங்களுக்கு முன்னாடி, எங்கப்பா இதை கேட்டார். அதுக்கு அம்மா, நாம பார்க்கலாம். அப்படி இல்லைன்னு சொன்னா, அதுபத்தி ஒண்ணும் சொல்லிக்கவேணாம். எப்படியும் நமக்கு இதுல நம்பிக்கை இல்லைதானே ? ஏதோ உங்கப்பா எழுதி வெச்சார். அது இருக்கு. அது சரியா தப்பான்னு கூட நமக்குத் தெரியாதுதானேன்னு கேட்டாங்க. அப்பறம்தான், சரி நீ கேளும்மான்னு எங்கிட்ட சொன்னார்.”
“சரி வாட்ஸப்ல அனுப்பறேன். அதையும் பார்த்துடுவோம்.”, என்ன வந்தாலும் சமாளிப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
மறு நாள் மதியம் ஒரு சைட்டிற்கு சென்று லோடெல்லாம் வந்து இறங்கியதை பார்வையிட்டு வந்து கொண்டிருந்த வேளையில், போன் வரவும், பைக்கை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு, அழைப்பை எடுத்தான்.
“சொல்லு மஞ்சரி. என்னாச்சு ?”
“நீங்க, உடனே உங்க வீட்டுக்குப் போங்க. எங்கம்மாவும் அப்பாவும் வந்துகிட்டு இருக்காங்க. மூணு ஜோசியருங்க பார்த்துட்டு ஏழு பொருத்தம் பொருந்தி வருது, பொண்ணுக்கு செவ்வாய் தோஷம்னு எல்லாம் சொல்ல முடியாது. தாராளமா பண்ணலாம்னு சொல்றாங்களாம். அப்பறம் பேசிக்கலாம்னு அப்பா சொன்னாலும் கேக்காம அம்மா ஒரே சண்டை. எதுவும் ப்ரெச்சனை ஆகிடப்போதுன்னு அப்பாவும் வரார். உங்களையும் கூப்பிட்டார்.”
“ஐயோ.. எதுக்கிந்த வேலை உங்கம்மாவுக்கு. என்கிட்ட சொன்னா போறாதா ? நீ சொல்லமாட்டியா வேண்டாம்னு ?”, அவளிடம் எரிந்தான்.
“அப்பா சொல்லியே கேட்கலை, உங்கம்மா நேத்து பேசின பேச்சு அப்படி ? நீங்க உடனே போங்க. நாம அப்பறம் சண்டை போடலாம்.”
“சரி , நீ வை. ஆண்டவா…”, புலம்பியவாறே வைத்தவன், பைக்கைப் பறக்கவிட்டு வந்து சேர்ந்தான் வீட்டுக்கு. உள்ளே நுழைந்ததுமே தெரிந்தது ஒரு சங்கடமான மௌனம் நிலவியது. மஞ்சரியின் அப்பா அம்மாவைப் பார்த்தவன், வணக்கம் வைத்து, “ வாங்க மாமா, வாங்க அத்தை “, எனவும், அவர்கள் முகம் மலர்ந்தது.
கோமதியின் முகம் முள்ளு பூத்ததை கவனித்தாலும், அதை புறக்கணித்து, அவர்கள் எதிரில் அமர்ந்தான்.
கோமதி, “பாருங்கம்மா, நாங்க பொண்ணு குடுத்த சம்மந்திங்களோட நெருங்கின உறவுன்னவேதான், நானும் பொறுமையா பேசறேன். இந்த சம்மந்தம் சரி வராது. உங்க பொண்ணு ஜாதகம் சுத்த ஜாதகமாவே இருக்கட்டும். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, எத்தனை ஜோசியர் என்ன சொன்னாலும், எங்க குடும்பத்துக்குன்னு பார்த்து சொல்ற எங்க ஜோசியர் வேண்டாம்னு சொன்னப்பறம் அதை நான் மீறமாட்டேன். நீங்க வேற இடம் பாருங்க.”, என்றார் கறாராக.
திட்டம் போட்டு வெறுப்பேத்த நினைத்திருந்தால் கூட முடியாத காரியம், திட்டமே இல்லாமல் ஜோராய் நடந்தேறியது. பர்வதம்மா சம்மந்தத்தை கூறி, அதனால்தான் உங்களுக்கு மரியாதை என்பது போலப் பேசியது, காஞ்சனாவின் ஆத்திரத்தை முற்றிலும் கிளப்பிவிட்டது. ராஜேந்திரன் எதுவும் சொல்லும் முன்னரே,
“இதுக்குத்தான் நான் வேண்டாம்னு சொன்னேன். கேட்டீங்களா அப்பாவும் பொண்ணும். என் பொண்ணுக்கு என்ன இல்லை ? அழகில்லையா, படிப்பில்லையா, வசதியில்லையா ? இப்படியா லவ் பண்ணறேன்னு இந்தக் குட்டையில் வந்து விழணும். தலை எழுத்து. “, தலையில் அடித்துக்கொண்டு எழுந்தார்.
“யாரைப் பார்த்து குட்டை அது இதுன்னு பேசறீங்க ?”, கோமதி ஆரம்பிக்கவும், “மா…”, இரைந்தான் ராஜேந்திரன்.
“எல்லாரும் ரொம்ப பேசியாச்சு. போறும், உள்ள போங்க. வலுக்கட்டாயமாக அவரைக் கைப்பிடித்து அவர் அறையில் விட்டுவிட்டு வந்தான்.
ராஜேந்திரன் திரும்பி வரும்போது அதைத்தான் பார்த்தான். அவர் சொன்னதைக் கேட்டு மனசு வலித்தது. கைலாசம், “அவர் கைகளைப் பிடித்து இறக்கி, பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாங்க. நாங்களுமே மன்னிப்பு கேட்கணும். காஞ்சனா பேசினதும் தப்புதான். பெண்களைப் பேசவிட்டு நாம வேடிக்கைப்பார்த்தோம் இல்லையா ? அதனால், நம்மதான் ஒருத்தருக்கொருத்தர் மன்னிப்பு கேட்டுக்கணும்.”
“மாமா…”, ராஜேந்திரன் இரங்கிய குரலில் அழைக்கவும்,
“மன்னிச்சிக்கப்பா…உங்களை மாப்பிள்ளையா ஏத்துக்க ரொம்பவே ஆசையா இருந்தேன். ஆனா, உங்க அம்மா சுயரூபம் பார்த்து, வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். மஞ்சரியை… ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம். உங்கம்மா ஏச்சு பேச்சுக்களையெல்லாம் தாங்கமாட்டா என் பொண்ணு.”, ராஜேந்திரன் மறுப்பாய் சொல்ல வர, அவனை தடுத்தவர்,
“நான் பார்த்துக்கறேன்னு சொன்னாலும், முக்கால்வாசி நேரம், அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் இருக்கணும். இவ்வளவு கண்மூடித்தனமா ஜோசியத்தை நம்பறாங்க, நாளைக்கு எது ஒண்ணுன்னாலும், அது என் மகளோட ராசியினாலதான்னு வந்து விடியும். பெத்தவங்க பார்த்து வெச்சாலே,மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒத்துப் போகலை. இங்க ஆரம்பமே பிடிக்காம போயிடிச்சு. வேண்டாம்பா. கல்யாணம் பண்ணி தினம் தினம் கஷ்டப்படுறதைவிட, விரும்பினவன் கிடைக்கலைன்ற ஒரு கவலையோட போகட்டும்.”, வருத்தமாய் கூறியவர், தலையசைத்து விடைபெற்றுச் சென்றே விட்டார்.
ஒன்றுமே பேசத்தோன்றாமல் வாயடைத்துபோய் வாயிலையே பார்த்து நின்றான். பெண்ணைப் பெற்றவர். அவர் சொல்வதும் நியாயம்தானே. ஆனால், மஞ்சரி இல்லாத ஒரு வாழ்க்கையை தன்னால் வாழமுடியுமா ?
“என்ன சொன்னாங்கப்பா அம்மா, நான் வரதுக்கு முன்னாடி? அவர் ஏச்சு பேச்செல்லாம் தாங்கமாட்டான்னு சொல்லிட்டு போறார் ?”
“ஏன் ஜாதகத்தை மாத்தி எழுதிட்டீங்களா ? நேத்து இருந்த செவ்வாய் தோஷம் இன்னைக்கு இல்லைன்னு சொல்றாங்கன்னு நக்கலா கேக்கறாடா உங்கம்மா ? அதுக்கும் அந்த மனுஷன், பொறுமையா இல்லம்மா உங்க கிட்ட குடுத்த அதே ஜாதகம்தான் . நீங்க வேணா உங்ககிட்ட இருக்க காப்பியை கொண்டுவாங்க, அதே ஜோசியர்கிட்ட போகலாம், உங்க எதிரையே அவர் பார்த்துட்டு சொல்லட்டும்னு சொன்னா. அதெல்லாம் காசுக்கு என்ன வேணாலும் சொல்ற ஜோசியருங்க நெறைய பேர் இருக்காங்க. நான் எதுக்குங்க அங்கெல்லாம் வந்துகிட்டுன்னு எளக்காரமா கேக்கறா. நான் தேவையில்லாம பேசாதன்னு சொன்னதுக்கும் அவங்க முன்னாடியே என்னை எடுத்தெரிஞ்சு பேசினா. அதான், அவர் அப்படி சொல்லிட்டுப் போறார்.”
“நீ மஞ்சரியைக் கல்யாணம் பண்ணிகிட்டு தனியா போயிடு ராஜா. அது ஒண்ணுதான் வழி. நாய் வாலை நிமிர்த்த முடியாது. அவ மாறணும்னு நெனச்சா, அந்த பொண்ணுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்துடுவாங்க. நீ தனிக்குடித்தனம் போறேன்னு சொன்னாலாவது மனுஷன் பொண்ணு குடுக்கறாரா பாரு. “, சௌந்தர்ராஜன் விரக்தியாய்க் கூறினார்.
ஒற்றை மகன். எப்படி தாய் தந்தையை விட்டு செல்லமுடியும் ? இன்னொரு அண்ணன் தம்பி இருந்தாலாவது, தைரியமாகக் கிளம்பிவிடுவான். இல்லாவிட்டால் இவன் சொந்தமெல்லாம் மஞ்சரியைத்தான் பேசும். பேச வைப்பார் கோமதி. தாங்குவாளா அவள் ? அப்படி ஒரு கெட்ட பெயரை அவளுக்குத் தான் தர வேண்டுமா ? பித்துப் பிடிக்காத குறையாய் அவன் அறைக்குச் சென்றான்.