பத்து மணியாக காத்திருந்தவர்கள், நெடு நாள் சென்று ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சௌந்தர்ராஜன் தான் சென்று கைலாசத்தை சந்தித்ததையும், அவர் சம்மதம் சொன்னதையும் கூறினார்.
தங்களுக்காக பெற்றோர் எடுத்த முயற்சியை நினைத்து, ராஜேந்திரனுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. இதற்காகத்தானே அவ்வளவு பாடு. இன்னும் ஜோசியரின் தடைக் கல்லைத் தாண்ட வேண்டும். ஆனாலும் நல்லதாய் நடக்கும் என்றே தோன்றியது.
பத்து மணிக்கு போன் செய்து அம்மாவிடம் கொடுத்தான். ஜோசியர் மகள் சங்கரி போன் எடுத்ததும் சற்றி நேரம் குழந்தை பற்றி விசாரித்து, அவள் அம்மாவிடம் பேசி, பின்னர் ஜோசியரைக் கேட்டார். அவர் லைனில் வரவும், சௌந்தர்ராஜனிடம் போன் வந்தது.
சம்ப்ரதாய விசாரிப்புகளுக்குப் பின் சௌந்தர்ராஜன், “ ஐயா, தொந்தரவா நினைக்கலைன்னா ஒரு விஷயம் கேட்கணும்.”, என்றார்.
“சொல்லுங்க சௌந்தர்ராஜன்…”
“ நீங்க அமெரிக்கா கிளம்பற அண்ணைக்கு என் பிள்ளை ராஜாவுக்கு ஒரு பொண்ணோட ஜாதகம், பொருத்தம் பார்க்கக் கொடுத்திருந்தேன்…நீங்க வேண்டாம்னு சொல்லிட்டதா ரங்கசாமி சொன்னார். அதுல பாருங்க, என் பையனும் அந்த பெண்ணும் விரும்பறாங்க. ஆனா, நீங்க வேண்டாம்னு சொன்னதும் கோமதி உங்களை மீறி சம்மதிக்க மாட்டேன்னுட்டா. பிள்ளைகள் ரெண்டும் வாடுதுங்க….”, தயக்கமாய் நிறுத்தினார்.
“ எங்கிட்ட அந்த ஜாதகம் வரும் போது, ரெண்டு பேரும் விரும்பறாங்கன்னு சொல்லலையே ? நீங்க ரங்கசாமிகிட்ட அப்படி சொல்லிருந்தீங்களா ? “, யோசனையாய் வினவினார் ஜோசியர் சுந்தரமூர்த்தி.
“அது, கோமதிதான் போன்ல பேசியிருந்தா ?”, என்று இழுத்தவர் மனைவியைப் பார்க்க, கோமதி சொல்லவில்லை என்பது போல் தலையசைத்தார்.
“அதான். இப்ப புரியுது. எனக்கு ராஜா ஜாதகம்தான் நல்லா தெரியுமே. நீங்க கொண்டு வந்து கொடுத்தப்பவே அவன் கண்டிப்பா காதல் கல்யாணம்தான் பண்ணுவான்னு தெரியும். அதான் ராஜாவுக்கு தெரியுமா ? அவன் கிட்ட கேட்டு செய்ங்கன்னு அப்பவே சொன்னேன். ஒண்ணும் சொல்லாம இந்த ஜாதகம் வரவும், நான் கோமதிதான் ஏதோ வரன் பார்த்திருக்குன்னு, என்ன சொல்லி தட்டலாம்னு பார்த்தேன். லேசா செவ்வாய் தோஷம் இருக்கவும் அதையே சொன்னேன். இருந்த அவசரத்தில , பையன் அவனே முடிவு பண்ணுவான் கல்யாணத்தைன்னு என்னால நேர சொல்லமுடியலை, திரும்பி வந்தப்பறம் கோமதிகிட்ட பக்குவமா சொல்லணும்னு இருந்தேன்.”, ஜோசியர் பொறுமையாக சொல்லவும் ராஜேந்திரனுக்கு பலவித உணர்வுகள் ஒருங்கே தோன்றின. எல்லாவற்றையும் ஒதுக்கி அவர் பேச்சில் கவனமானான்.
“போனை கோமதிகிட்ட குடுங்க .”, என்றார் ஜோசியர்.
“ஸ்பீகர்லதான் போட்டிருக்கேங்க, கேட்டுகிட்டு இருக்கா.”, என்றார் சௌந்தர்ராஜன் எழுந்த கோபத்தை அடக்கி.
“ சொல்லுங்க மாமா…”, என்றார் கோமதி,
“ஏம்மா. அவங்க விரும்பறாங்கன்ற முக்கியமான தகவலை ரங்கசாமிகிட்ட சொல்லணுமா வேண்டாமா ? அப்படி நீ சொல்லிருந்தா, மனப் பொருத்தம் இருந்தா போதும், வேற எதுவும் வேண்டாம்னு அவனே சொல்லிருப்பானே ?”, என்று அங்கலாய்த்தவர், “ உன் பையனுக்கு லவ் மாரேஜ்தான். அமோகமா இருப்பாங்க. ராஜாவுக்கு குடும்பஸ்தானம் ரொம்ப உறுதியா இருக்கு. நீ தாராளமா கட்டி வெக்கலாம். மனப் பொருத்தம் இருந்தா நான் திருமண பொருத்தம் பார்க்க மாட்டேன். உனக்கு வேணும்னா நீ வேற யார்கிட்டயாச்சம் காட்டு. அவங்ககிட்டயும் சொல்லு. அப்பத்தான் பொருத்தம் பார்க்கறவன், சுமாராவாச்சம் பொருந்துதான்னாவது பார்ப்பான். “, என்று உறுதியாய்க் கூறினார்.
“சரிங்க மாமா. நீங்க சொன்னாலே போறும். நாங்க பொண்ணு வீட்டுக்குப் போய் பேசறோம்.”, என்று கோமதி பேசி வைத்தார்.
ஒரு நொடி மயான அமைதி.
[the_ad id=”6605″]
“கொஞ்சங்கூட அறிவுங்கறதே இல்லாம அவசர கோலம் அள்ளி தெளிச்ச கோலம்னு எல்லாரையும் இந்த நாலு மாசம் கஷ்டப்படுத்திட்ட. தேவையா ? எவ்வளவு சொல்லிருப்பேன் அண்ணைக்கு. அவசரப் படாதே. திரும்பி வந்தப்பறம் பொறுமையா பார்த்துக்கலாம்னு. கேட்டியா ? அரையும் குறையுமா சொல்லி எல்லாரும் வேதனைப் பட்டதுதான் மிச்சம்.”, தீயாய் சுட்டார் சௌந்தர்ராஜன்.
ஒன்றும் சொல்லத்தோன்றாமல் முகத்தை கைகளில் புதைத்து அமர்ந்திருந்தான் ராஜேந்திரன். இந்த நான்கு மாதங்களாய் எவ்வளவு வேதனை. தேவையே இல்லாமல. ஒரு நொடியில் எவ்வளவு எளிதாய் சொல்லிவிட்டார், ‘திரும்ப வந்தப்பறம் சொல்லிக்கலாம்னு இருதேன்னு.’ அவன் கடைசியாக பார்த்த மஞ்சரியின் கண்ணீர் ததும்பிய முகம் கண்ணுக்குள் வந்து போனது. எத்தனை இரவுகளை கண்ணீரில் கரைத்திருப்பாளோ ? எப்படி அவளிடம் விளக்குவது ?
தந்தை திட்டுவதும், தாயின் அழுகையுடனான பதிலும் எங்கோ தூரத்தில் கேட்பது போலிருந்தது.
மெதுவாக அவன் அறைக்கு எழுந்து செல்லவும், கோமதி, “ராஜா… நான் வேணும்னு சொல்லாம இல்லைடா… நம்புப்பா….”, என்று வேதனையாய் கூற,
“தெரியும்மா. நாளைக்கு பேசிக்கலாம். படுங்க.”, என்று அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
அன்றிரவு மஞ்சரியிடம் பேசத் துடித்தபோதும், இது நேரில் சென்று பக்குவமாக கையாள வேண்டிய விஷயம் என்று புரிந்து அமைதி காத்தான்.
மறு நாள் காலை லேட்டாக எழுந்தவன், அவசரமாய் குளித்து ரெடியாகி வரவும், வரவேற்பறையில் சௌந்தர்ராஜன், அவனுக்காக காத்திருந்தது கண்டு அமர்ந்தான்.
“ராஜா…இன்னைக்கு நாள் நல்லா இருக்கு. காலையிலயே நான் சம்மந்தி கிட்ட பேசினேன். நாம அவங்க வீட்டுக்கு பத்து மணிக்கு வரதா. அவரும், மஞ்சரியும் லீவ் போட்டுட்டு இருக்கறதாய் சொன்னாங்க. உன் வேலையை நீ ஒதுக்கி கொடுத்துட்டு வந்துடு.”
அவரைப் பார்த்தவன், “அவர் கேக்கலையாபா ? என்ன திடீர்ன்னுன்னு ?”.
“ம்ம்.. ஜோசியர்கிட்ட பேசிட்டதா, இனி தடை எதுவும் நம்ம பக்கம் இல்லைன்னும், அதான் முறையா பொண்ணு கேக்க வரோம்னும் சொன்னேன்.வர சொல்லிட்டார். நம்ம ட்ராவல்ஸ்ல சொல்லி காரை எட்டரைக்கெல்லாம் வர சொல்லிட்டேன். உங்கம்மா கடைக்கு போய் ஏதேதோ வாங்கணும்னு சொல்லிருக்கா. “
“அப்பா… மொத்த விஷயம் தெரிஞ்சதும் அவங்க கோபப் பட நிறைய சான்ஸ் இருக்கு. ரொம்ப எதிர்பாக்காதீங்க. அம்மாகிட்டவும் சொல்லுங்க.”
“ இந்த முறை, பேசப் போறது நானும் கைலாசமும்தான். உங்கம்மா மன்னிப்பு கேட்டப்பறம் வாயே திறக்கமாட்டா. பெரியவங்களுக்குள்ள எதுவும் கசப்பு வராம நாங்க பார்த்துக்குவோம். மஞ்சரியை நீ சமாதானப் படுத்திக்கோ.”, நிதானமாக விளக்கினார் சௌந்தர்ராஜன்.
அங்கே மஞ்சரி வீட்டிலோ, காலை ஏழு மணிபோல் சௌந்தர்ராஜனிடமிருந்து செய்தி வந்ததும், சற்று நேரம் யாருக்கும் எதுவும் ஓடவில்லை. அவர் பேசியதிலிருந்து, ஜோசியர் ஏதோ ஒரு வகையில் ஒப்புதல் அளித்துவிட்டார், அதனால் கோமதியும் சம்மதித்துவிட்டார் என்று புரிந்தது. காஞ்சனா ஏதோ நக்கலாய் வார்த்தையைவிட, ஆடித்தீர்த்துவிட்டார் கைலாசம்.
அதற்குப்பின் காஞ்சனா ஏன் வாயைத் திறக்கப் போகிறார். அமைதியாக வருபவர்களுக்கு உபசரிக்க இனிப்பும், பழரசமும் செய்யப் போனார்.
மகளிடமும், “நீ கவலைப்படாதே மஞ்சு. நானும் ராஜாவோட அப்பாவும் உன் கல்யாணத்தை நல்லபடியா முடிப்போம். நீ ஆபிசுக்கு லீவ் சொல்லிட்டு, எதைப் பத்தியும் கவலைப்படாம ரெடியாகு.” என்று தலையை ஆதுரமாய்த் தடவிச் சென்றார்.
சொன்ன நேரத்திற்கு சரியாக வந்தவர்களை கைலாசமும் காஞ்சனாவும் வரவேற்று உபசரித்தார்கள். ராஜன் தேடினாலும் மஞ்சரி கண்ணில் சிக்கவில்லை.
நல விசாரிப்புகள் முடிய ஒரு நிமிட அமைதி. சௌந்தர்ராஜனே கேட்டார். “மஞ்சு எங்கே ?”, என்று.
“உள்ளதான் இருக்கா… “, கைலாசம் சொல்லவும்.
“வந்து உக்காரச் சொல்லுங்க. நம்பதானே இருக்கோம்.”, சௌந்தர்ராஜன் சொல்லவும், கைலாசம் மனைவியைப் பார்த்தார். காஞ்சனா, பின் அறைக்குச் சென்றவர், மஞ்சரியுடன் வரவும், ராஜனின் கண்கள் அவளை விட்டு அகலவில்லை.
கன்னம் ஒட்டி, கழுத்தெலும்பு தெரிய, கண்டிப்பாய் மூன்று நான்கு கிலோ எடை குறைந்திருப்பாள். கண்கள் சுற்றி லேசான கரு வளையம் தெரிந்தது. சில்க் காட்டன் சேலையில், மிதமான ஒப்பனையுடன் இருந்தாள். ஒரு நொடி அவன் பார்வையை சந்தித்தவள், பின் அவன் தாய் தந்தையைப் பார்த்து வரவேற்று அமைதியாய் அவள் தந்தையின் அருகில் அமர்ந்தாள். முகம் நிர்மலமாய் இருந்தது. அவள் என்ன நினைக்கிறாள் என்று ராஜேதிரனால் ஊகிக்க முடியவில்லை. அதுவே அவன் இதயத் துடிப்பை அதிகரிக்க வைத்தது.
முகம் நிர்மலமாய் இருந்தாலும், மஞ்சரியின் இதயத்துடிப்பும் அதி வேகமாய்த்தான் துடித்துக்கொண்டிருந்தது. அந்த ஒரு நொடிப் பார்வையில் அவன் கண்களில் தெரிந்த ஆவலைக் கண்டிருந்தாள். முகம் கறுத்திருந்தான். இளைத்திருந்தான். அதற்கு மேலும் பார்த்தால் கலங்கிடுவாள் என்று தெரிந்தே அவனை பாராதிருந்தாள். ஆனாலும் அவன் பார்வை தன்னை துளைப்பதை அறிந்தேயிருந்தாள்.
“ நீங்க எல்லாரும் எங்களை மன்னிக்கணும். ஜாதகம் பார்த்ததுல சின்ன குளறுபடி ஆகிட்டது.”, என்று ஆரம்பித்த சௌந்தர்ராஜன், சற்று பூசி மெழுகி நடந்ததை சொன்னார். மனைவி சொல்லாமல் விட்டதை பட்டவர்தனமாகக் கூறாமல், ரங்கசாமி அதை ஜோசியரிடம் சொல்லாமல்விட்டது , கம்யூனிகேஷன் காப் என்பதுபோல முடித்துவிட்டார்.
[the_ad id=”6605″]
“என்ன இருந்தாலும் கோமதி பேசினது சரியில்லை.”, என்று சொல்லி மனைவியைப் பார்க்க, கோமதி, “என்னாலதான் எல்லாருக்கும் வேதனை. மன்னிச்சுடுங்க.”, என்றார், நிலத்தைப் பார்த்தவாறே.
“மன்னிப்பெல்லாம் வேண்டாங்க. அப்படி பார்த்தா காஞ்சனா பேசினதும் தப்புதான்.”, என்ற கைலாசம், மனைவியைப் பார்க்கவும், “ நானுமே அதிகம் பேசிட்டேன். மனசுல வெச்சிக்காதீங்க, என் பொண்ணை சொல்லவும், பேச்சு மேல மேல வளர்ந்துட்டது.”, என்றார் காஞ்சனா, சௌந்தர்ராஜனைப் பார்த்து. கோமதி நிமரவேயில்லை. கணவன் தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசினதே அவருக்கு மேலும் குற்ற உணர்ச்சியைக் கொடுத்தது.
இத்தனைக்கும் ராஜேந்திரனாகட்டும் , மஞ்சரியாகட்டும் எந்த உணர்வும் காட்டாமல் அமைதியாய் இருந்தனர். ராஜேந்திரனுக்கு மஞ்சரியை நினைத்துதான் கலக்கமாக இருந்தது. பெரியவர்கள் கல்யாணம் எப்போது வைக்கலாம், நிச்சயதார்த்தம் வைப்பதா என்பதைப் பற்றிப் பேச, யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்திருந்தாள்.
ஒரு வழியாய் நெருங்கின சொந்தங்களை அழைத்து பெண் வீட்டில் வைத்து ஒப்புத் தாம்பூலம் மாற்றுவது, விக்ரம் வேதா ஊர் திரும்பியதும் வைகாசியில் முகூர்த்தம் என்று முடிவானது. இடையில் மூன்று மாதம் போலிருந்தது.
ராஜேந்திரன் கிளம்பி வாசல் வரையிலும் வந்தும், மஞ்சரி அவன் முகம் பார்க்கவில்லை. இதற்கும் மேல் பொறுக்க முடியாது என்று ராஜேந்திரன், கைலாசத்திடம், “ ஒரு நிமிஷம் மஞ்சரிகிட்ட பேசணும்.”, என்று உள்ளே செல்ல, பெற்றவர்கள் வெளியிலேயே தங்கினர். மஞ்சரி அவனைத் தொடர்ந்து உள்ளே வந்தாள்.
ஹாலில், அவளை மறைத்து அவன் முதுகு மட்டும் வெளியிலிருப்பவர்கள் பார்த்தால் தெரியுமாறு நின்றவன், அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் மெதுவாக, “மஞ்சரி, எதையும் நினைச்சு குழப்பிக்காதே. மதியம் ஆபிஸ் போறேன்னு சொல்லிட்டு மாலுக்கு வா. நான் ஃபுட் கோர்ட்ல ரெண்டு மணிக்கு காத்திருப்பேன். “ என்றான்.
“இல்லை… நான்…”, என்று அவள் கூற வந்ததைத் தடுத்து,
“ப்ளீஸ்… எனக்காக வா. “, என்றவன் விறுவிறு வென்று சென்றுவிட்டான்.
ராஜேந்திரனை அரை மணி நேரம் காக்க வைத்து, மஞ்சரி அவர்கள் எப்போது அமரும் தூண் மறைவிலிருக்கும் அந்த மேஜைக்கு வந்தாள்.
“சம்மந்தமே இல்லாத யாரோ ஒருத்தர், என்னவோ நினைச்சி வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டார். நாலு மாசமா நரக வேதனை. இப்ப சரின்னிருக்கார். அடுத்து வேற யார் வந்து என்ன சொல்லுவாங்களோ ? “, மெலிதாய் வந்தது அவள் பதில்.
துணுக்குற்றான் ராஜேந்திரன். இது மஞ்சரியின் குணமில்லையே.
“மஞ்சரி ? யார் என்ன சொன்னாங்க உன்னை ? ஏன் இப்படி யோசிக்கற ? “
“யாரும் ஒண்ணும் சொல்லலை. நம்ம கல்யாணத்துக்கு ஒரு ப்ரெச்சனையும் இருக்காதுன்னு ரொம்ப தெனாவட்டா இருந்தேன். வாழ்க்கையில கேட்டதெல்லாம் என் இஷடப்படியே கிடைச்சதும் ஒரு காரணம். எல்லாத்துக்கும் சேர்த்து கடவுள் திமிரை அடக்கிகாட்டறேன்னு காட்டிட்டார். யாருக்கு தெரியும் இன்னும் என்ன சிக்கல் வெச்சிருக்காரோ ?”, விரக்தி தொனித்தது அவள் குரலில்.
[the_ad id=”6605″]
“மஞ்சரி ? ஏன் இப்படி நெகடிவ்வா யோசிக்கற ? ஒண்ணும் ஆகாது. பெரியவங்க நல்லபடியே நடத்திக் கொடுப்பாங்க. அதுக்குத்தானேமா இவ்வளவு கஷடமும் பட்டோம் ?”, அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று தடுமாறினான்.
“என்னை கொஞ்சம் நிமிர்ந்து பார்.”, அவள் பார்க்கவும், அவள் கண்களை நோக்கியவன், “ மஞ்சரி, அன்னைக்கு நான் பிரியணும்னு சொன்ன போது நீ புரிஞ்சிகிட்டன்னு நெனச்சேன். இல்லைன்னு இப்பதான் புரியுது. பெத்தவங்க ஆளா ஒரு பக்கம் ஈகோல நின்னபோது, நாம பிடிவாதமா எப்பவும் போல பேசிகிட்டும் பழகிகிட்டும் இருந்தா, அவங்களுக்கு இன்னும் கோபம்தான் வந்திருக்கும். இன்னும் எதிர்ப்பு கிளம்பிருக்கும். ஆனா நாம அவங்களுக்கு மதிப்பு குடுத்து பிரிஞ்சோம்னு தெரியவும்தான், இன்னைக்கு மாறி மாறி மன்னிப்பு கேட்டாங்க.இவ்வளவு சீக்கிரம் எல்லாத்தையும் விட்டு கல்யாண ஏற்பாடு பண்ணறாங்க. இனி நீ பயப்பட வேண்டாம். ஆறு மாசத்துல சரியாகலைன்னா நான் கண்டிப்பா எதிர்த்தாவது கல்யாணம் பண்றேன்னு உறுதி குடுத்தேந்தானே ? என்னை நம்பலையா ?”, வேதனையாய் கேட்டான்.
“சாரி…சாரிங்க… எனக்கு புரியுது. விஸ்வா நீங்க பேசினது ஒரு நாள் ரெக்கார்ட் பண்ணி அனுப்பினார். அதுதான் போன மாசமெல்லாம் எனக்கு தைரியம் குடுத்துச்சு. ஆனாலும் சில நேரம்….”, அவள் தயங்க…
“சொல்லு, சில நேரம் ?”
“கல்யாணத்துக்கு அப்பறமும், உங்கம்மா அவர்கிட்ட ஜோசியம் கேட்கப் போய், அவர் பாட்டுக்கு , நம்ம கொஞ்ச நாள் பிரிஞ்சிருந்தா நல்லது, இல்லை குழந்தை பிறந்த நேரம் சரியில்லைன்னு எதையாச்சம் சொல்லி, மறுபடி ப்ரெச்சனை வந்தா ? அப்பவும் நீங்க வீட்டுக்கு ஒரே பிள்ளை, அம்மாக்காகத்தான் பார்க்க வேண்டியிருக்கும். உங்க அம்மாவும், அந்த ஜோசியர் சொன்னதைத்தான் கேட்பாங்க. இன்னொரு பிரிவு வராதுன்னு என்ன நிச்சயம் ? அந்தாள் சொல்றது பொறுத்து என் வாழ்க்கை இருக்கணுமா ?”
“என்ன மஞ்சரி..நீ இப்படியெல்லாம் விபரீதமா யோசிக்கற ? “, தலையை கையில் ஏந்தி கண்கள் மூடினான் ராஜேந்திரன்.
“சில நேரம் எனக்கே அபத்தமாத்தான் தோணுது. இன்னொரு சமயம், உங்க அம்மா நம்ம ஜாதகத்தை தூக்கிட்டுப் போய் குழந்தை எப்பன்னு பார்க்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் ? அதுக்கு அந்த மனுஷன் திரும்ப எதையாச்சம் ஏடா கூடமா சொல்ல மாட்டாருன்னு என்ன நிச்சயம் ?”
“நிச்சயமில்லைதான். எப்ப குழந்தை பிறக்கும்ன்னு தூக்கிட்டுபோய் காட்டுவாங்கதான். ஆனா, அப்படி அவர் ஏடாகூடமா சொன்னா, நான் கேட்டுக்குவேனா ? வாழ்க்கையில கியாரண்டி கிடையாது மஞ்சரி. நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா பேரன் பேத்தியெல்லாம் எடுப்போம்ங்கற நம்பிக்கையிலதான் கல்யாணம் பண்றோம். என்ன கஷ்டம் வந்தாலும் என் மேல நீயும் உன் மேல நானும் வெச்சிருக்க அன்பும், நம்பிக்கையும் எல்லாத்தையும் தாண்டி நம்ம ஒண்ணா சேர்க்கும்னு நம்பு. இதுக்கு யாருகிட்ட கியாரண்டி கேட்க முடியும் ?”
“ரெண்டாவது, இது எங்கம்மாவுக்கும் ஒரு படிப்பினை. இனி அவ்வளவு சீக்கிரம் அவர் கிட்ட எதுவும் கேக்கமாட்டாங்க. அவங்களுக்குமே அவர் இப்படி சொன்னது அதிர்ச்சிதான். அவர்மேலிருந்த நம்பிக்கை கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கு.”, கொஞ்சம் கிண்டலாய்க் கூறினான்.
லேசாக புன்னகை அரும்பியது மஞ்சரியின் முகத்தில்.
“மேடம் இப்பவாவது கையைக் குடுப்பீங்களா ?”, மறுபடியும் கை நீட்டினான்.
மஞ்சரி மெல்ல அவன் கைமீது தன் கையை வைத்த நொடி, இறுகப் பற்றியவன், தன் இரு கைகளிலும் அவள் கையை ஏந்தி, “மன்னிச்சிடு மஞ்சரி. இந்த நாலு மாசம் எவ்வளவு பேச்சு வாங்கிருப்ப, எவ்வளவு கண்ணீர், வருத்தம்ன்னு முழுசா தெரியாட்டாலும் ஓரளவு என்னால கெஸ் பண்ண முடியும். எல்லாம் எங்கம்மாவோட குருட்டு நம்பிக்கையால வந்தது. அதுக்காக வெறுத்துடாத அவங்களை. நம்ம எல்லாருக்குமே கஷடம்தான். அவங்களும்தான் அவஸ்தைபட்டாங்க. பட் நீ ரொம்பவே காயப்பட்டிருப்ப. “
“ஏன் உங்களுக்கும்தான் இதெல்லாம் இருக்கும். எங்கிட்ட ஏன் மன்னிப்பு கேக்கறீங்க ? சரியான அப்பறமும் லூசுத்தனமா பேசி உங்களை இன்னுமே கஷ்டப்படுத்திட்டேன். சாரி.”, பாவமாய் பார்த்தவளைப் பார்த்து , சிரித்தவன்,
சிரித்தாள். “ம்ம்…உங்களோட சேராம இருந்தேனில்லையா இந்த நாலு மாசம். அதான் லூசாகிட்டேன் போல…”
கனிவாய் அவளைப் பார்த்தவன், “மஞ்சரி, உன் வருத்தமெல்லாம் நான் சரி பண்றேன். நான் இப்ப என்ன சொன்னாலும் சினிமா டயலாக் மாதிரிதான் இருக்கும். அதனால சொல்லலை, செய்யறேன். நம்பிக்கையோட இரு. “
சம்மதமாய் தலையாட்டினாள் மஞ்சரி. ஆனாலும் கண்ணில் எப்போதும் இருக்கும் குறும்பைத்தான் காணவில்லை.