என் காதல் கனா 20
“இதே மாதிரி விவேக்கிட்டையும் பேசலாமான்னு ஒரு நிமிஷம் யோசிச்சேன்..” என தலையை சற்றே சாய்த்தவாக்கில் சுஜி மொழிய சதீஷிற்கு திக்கென்று ஆகிப்போனது.
“அய்யய்யோ அப்படி இப்படி ஏதாவது உளறிவச்சியா என்ன?”என சற்றே படபடப்புடன் வினவினான்.
“நான் ஒன்னும் அவ்ளோ முட்டாள் இல்லை. அப்படி பேசலாமான்னு யோசிச்சேன்னு தான் சொன்னேன். அப்படி பேசினேன்னா சொன்னேன்?” என சுஜி மொழிந்த பின்பு தான் சாந்தமானான்.
“குட்.. விவேக் என்ன மாதிரி இந்த விஷயத்தை ஈஸியா எடுத்துக்க மாட்டான். சரியா… தத்துபித்துன்னு உன்ன பிடிச்சிருக்கு.. ஆனா ஜஸ்ட் friends அப்படின்னு தயவு செஞ்சு சொல்லிடாத.. உன் நல்லதுக்கு தான் சொல்லறேன்.”
“நீ பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னாலே அதை லவ், கல்யாணம், லைஃப்னு கொண்டு போயிருவான்.. அவனுக்கு எல்லாமே ப்ளாக் அண்ட் வெயிட் தான். நடுவுல க்ரே ஏரியான்னு ஒன்னு இல்லவே இல்லை. ஒண்ணு பிடிச்சிருக்கு, இல்லையா பிடிக்கலை… நான் சொல்லறதை சொல்லிட்டேன். அப்பறம் உன் இஷ்டம்” என சொல்லி தன் பேச்சை முடித்துக் கொண்டான்.
“நல்ல வேளை.. எதுவும் உளறிடலை.. அவன பத்தி நாம ஒரளவு கெஸ் பண்ண அது கரெக்டா தான் இருக்கு..நானும் பஸ்ட் எனக்கு உன்ன பிடிச்சிருக்கு பிரண்ட்சா பழகலாம் அப்படின்னு சொல்ல நினைச்சேன்.” என வெளியே முனுமுனுத்தாள்.
“பிடிச்சிருக்குன்னு இந்த வார்த்தையை சொல்லி இருந்தா, அவன் அதை மட்டும் போக்கஸ் பண்ணி நான் அவனை லவ் பண்றேன் ப்ரொபோஸ் பண்ணறேன்னு நினைச்சுட்டு இருந்திருப்பான். நல்லவேளை அந்த முட்டாள்தனத்தை நான் செய்யல” என தன்னைத்தானே சொல்லிக் கொண்டு சுஜி சதீஷுடன் அத்துடன் விவேக்கின் பேச்சை விட்டிருந்தாள்.
அவளது டிப்ஸ் பணத்தை சதீஷின் அறிவுரைப்படி ஷேர்ஸ், மிட்யூவல் ஃபண்ட் என சேமித்திருந்தாள். சிறிது நேரம் அதைப் பற்றி விவாதித்தனர். அன்றைய மாலை இனிமையாவே கழிந்தது. ஒரு மணி நேரம் எப்படி கடந்தது என்றே தெரியவில்லை;
[the_ad id=”6605″]
இருவருக்கும் அடுத்த வாரம் சந்திப்பதாக சொல்லி விடைபெற்றுக்கொண்டு அவரவர் வழியில் சென்றிருந்தனர். சுஜிக்கு சதீஷ் உடனான இந்த ஏற்பாடு மிகவும் ஏதுவாக இருந்தது சதீஷின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்தது.
ஆனால் தன்னுடைய கடமைகளும் படிப்பும் தன் அன்னையும் அவள் நினைவில் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்க இந்த ஈர்ப்பை நட்பு என்ற அளவில் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்க்கமான முடிவிற்கு சுஜியின் மனம் பக்குவப்பட்டு இருந்தது.
அடுத்து வந்த இரண்டு மாதங்கள் தொய்வில்லாமல் கழிந்தன. சதீஷும் சுஜியும் தெளிவான இந்த ஏற்பாட்டில் நின்றிருக்க விவேக்கின் மனமோ சுஜி இப்போதெல்லாம் தன்னுடன் வெகு இயல்பாக பேசுவதையும் பழகுவதையும் மனதினுள் தப்பர்த்தம் கற்பித்துக்கொண்டு சென்றிருந்தது.
“என்னை வரவர அவளுக்கு பிடிக்க ஆரம்பிக்குது. பிடிக்காமையா என் கூட இவ்வளவு தூரம் நல்லா பேசுறா..?” என தன் மனதிற்குள்ளேயே எண்ணி மருகி போனான். சதீஷிடம் சுஜி பேசிய பெரும்பாலான விஷயங்களை பற்றி முன்பெல்லாம் பகிர்ந்து கொள்வான்.
சுஜியின் மனநிலையும், “நல்ல நண்பன்” என்ற அளவிலேயே விவேக்கைப் பற்றிய அவளது கணிப்பு என்பதும் சதீஷ்க்கு தெரிந்து இருந்தபடியால் விவேக் சுஜியைப் பற்றி கூறும் விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பட்டும்படாமலேயே பதில் சொல்லி வந்தான் சதிஷ்.
நாளடைவில் விவேக்கிற்கு சதீஷிடம் சொல்லும் ஆர்வம் பெருமளவு குறைந்து விட்டிருந்தது. “இவன் என்ன? எப்ப நான் என்ன சொன்னாலும்.. அந்த பொண்ணு அப்படி எல்லாம் எதுவும் சொல்லியிருக்காதுடா.. இப்படி எல்லாம் எதுவும் இல்லடா நீ ஏன்டா கற்பனை பண்ணிக்கிறன்னு இப்படியே தப்பா தான் எனக்கு சொல்றான்…”
“ஒருநாள்கூட ஆமாண்டா சுஜியும் உன்ன லவ் பண்றாப்ல தான் தெரியுது.. அப்படின்னு பாசிட்டிவா சதீஷ் சொன்னதே இல்லை. எதுக்கு தேவையில்லாம இவ்வளவு சொல்லணும்? சுஜி பத்தி சொல்லறதை குறைச்சுக்கறது தான் நல்லது” என நினைத்த விவேக் சுஜி பேசும் நிறைய விஷயங்களை சதீஷ் இடம் சொல்லாமல் இருக்கப் பழகிக் கொண்டான்.
இந்த நிலையில்தான் சதீஷின் அண்ணன் கிஷோரின் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தேறத் துவங்கின. அன்றைய தினம் சதீஷ் தனது தாய் தந்தையரிடம் தொலைபேசியில் பேசும் பொழுது சதீஷின் அன்னை தன் மகிழ்ச்சியை இளைய மகனிடம் பகிர்ந்து கொண்டார்.
“டேய் சதீஷ் ரொம்ப ஹாப்பியா இருக்குடா.. கிஷோருக்கும் அந்த பொண்ணுக்கும் எட்டு பொருத்தம் சரியா இருக்கு… பொண்ணு நியூஜெர்சியில் வேலை பார்க்கிறா… அவங்க வீடு இங்க மாம்பாக்கத்தில..”
“ஓகேம்மா.. கிஷோருக்கு புடிச்சிருக்கா? அவன் என்ன சொன்னான்?”
“அவனுக்குப் பிடிக்காமலா… ஃபர்ஸ்ட் பொண்ணு போட்டோவ பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு அப்புறமா தான் எல்லாமே முடிவு பண்ணோம்… ஜாதகம் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் பரவாயில்லைன்னு நினைச்சோம்.. ஆனா பாரு,,8 பொருத்தம் இருக்கு ரெண்டு பேர்த்துக்கும்..”
“ம்ம்ம்… சந்தோஷம்மா..”
“அப்பா சாயந்தரமா, நம்ம கிட்டு ஜோஷியர போய் பார்த்துட்டு வந்தார்… இரு அப்பாட்ட தர்றேன்” என்று கைப்பேசியை கணவரிடம் கொடுத்தார்.
“சதீஷ்… பொண்ணு பேமிலி நல்ல மாதிரியா தெரியுது. நம்ம ஆதிசேஷன் அங்கிளுக்கு தூரத்து சொந்தம் வேற…அப்பறம் எங்களுக்கும் விசா பிராசஸ் எல்லாமே ஸ்டார்ட் பண்ணிட்டோம்”
“சரிப்பா… இங்க இப்போ வந்துட்டு விண்டர் ஆரம்பிக்கறகுள்ள திரும்ப இந்தியா போறது பெட்டர்.. சிவியர் விண்டர் இங்க..
“சரி சதீஷ்.. நீ அங்க பத்திரமா இருக்கேல்ல.. விசா ப்ராசஸ் ஆனதும் சொல்லறேன்..”
“ஓகேப்பா.. நேரா பில்டெல்பியா போறீங்களா இல்ல இங்க வரீங்களா? என்ன பிளான்?”
“அதெல்லாம் எனக்கு தெரியலடா.. டிக்கெட் போடுறப்போ தான் தெரியும்”
“சரிப்பா..அப்பறம் அம்மாட்ட சொல்லுங்க.. வத்தல், வடகம்னு எதையும் தூக்கிட்டு வந்து…அதுக்கு ஃபைன் கட்டி இமிகரேஷன்ல மாட்டிக்கிட்டு முழிக்காதீங்க ரெண்டு பேரும்… இங்கேயே எல்லாமே கிடைக்குது..
“நான் சொன்னா அப்படியே உங்க அம்மா கேட்ருவா பாரு..”
“எதையும் தூக்கிட்டு வராதீங்க…இங்கே எல்லாமே கிடைக்குதுன்னு சொல்லுங்க..கிஷோருக்கும் பக்கத்தில நிறைய இந்தியன் ஸ்டேர்ஸ் இருக்கு..” என சதீஷ் சொல்லிக் கொண்டிருக்க, பின்னால அவனது அன்னையிடம் இருந்து “கொண்டு வந்தா நாலு நாள்ல தீர்த்துடரான்.. அப்போ தெரியலையாமா கிஷோருக்கு..இருக்கட்டும் சாயந்தரம் ஃபோன் பண்ணாறப்போ பார்த்துக்கறேன்..” என சத்தம் கேட்டது.
“சரிடா எதுவும் கொண்டு வரல.. உனக்கு ஏதாவது புக்ஸ் வேணுமா இங்க இருந்து? இப்பவே தேவையானதெல்லாம் வாங்க ஆரம்பிச்சா தான் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுக்க முடியும். இல்லனா கடைசியில உங்க அம்மா மிளகாய்தூளுக்கு இடம் பத்தலைன்னு புக்க தூக்கி தூரப் போட்ருவா..”
[the_ad id=”6605″]
“புக்ஸ் கொஞ்சம் பேர் சொல்லறேன்.. ட்ரிப்ளிகேன்ல கிடைக்கும்.. இருந்தா பாருங்க..”
“சரி சரி..அப்படியே அந்த பொண்ணுகிட்ட கேட்டு அவளுக்கு ஏதாவது கொண்டு வரணுமா அப்படின்னு கேட்டு சொல்லு” என கைப்பேசியை தந்தையிடமிருந்து பிடுங்கியிருந்த அவனது அன்னை மொழியை, சட்டென ஒரு நிமிடம் சதீஷ் அமைதியாகிப் போனான்.
ஏனென்றால் இதுவரையில் சுஜியை பற்றி எதுவுமே தன் தாய் தந்தையரிடம் சதீஷ் பகிர்ந்து கொண்டதில்லை. அப்படி இருக்கும் பொழுது ஏர்போர்ட்டில் தான் சந்தித்த ஒரே காரணத்திற்காக தனக்கும் அவளுக்கும் பழக்கம் என எதை வைத்து தனது தாய் நினைத்துக் கொண்டிருக்கிறார்?” என சதீஷ் ஆச்சரியப்பட்டான்.
“மா.. யாரை சொல்றீங்க?” என ஒன்றும் தெரியாதவன் போல் திரும்ப தன் தாயிடமே வினவினான். “என்னடா புதுசா கேக்குற? அதுதான் அந்த பொண்ணு சுஜி.. சுஜினி” என தன் தாய் ஏதோ நீண்ட நாள் பழக்கப்பட்ட பெண்ணை போல பேசியது இன்னமும் சதீஷ்க்கு ஆச்சரியமூட்டியது.
இடையில் எதுவும் நடந்திருக்க வேண்டும் என்று மட்டும் அவனது மூளை சுட்டிக்காட்டியது. தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு, “அந்த பொண்ணுகிட்ட என்னமா கேக்கணும்?” என திரும்பவும் ஒன்றும் அறியாதவன் போலவே தொடர்ந்தான்.
“சரி விடு… நீ எதுவும் கேட்க வேண்டாம்.. பரவால்ல… லட்சுமி அம்மா அடுத்த வாரம் இங்க வரேன்னு தான் சொல்லி இருக்காங்க. அவங்க வர்றப்போ அவங்க கிட்டயே கேட்டு சுஜிக்கு என்ன வேண்டுமோ அவர்களை செஞ்சு கொடுக்க சொல்லி வாங்கிட்டு வரேன். இதை மட்டும் சொல்லிரு சுஜிகிட்ட..” என மிகவும் உரிமையாக பதிலளித்தார் அவனது அன்னை.
சதீஷ்க்கு பயங்கர குழப்பமாக இருந்தது. “ஒருவேளை சுஜி, என்னோட அப்பா அம்மாகிட்ட டெய்லி பேசிகிட்டு இருக்காளோ இல்ல.. இவங்ககிட்ட பேசறதைப் பத்தி ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல? இதில் மறைக்க என்ன இருக்கு?” என மூளை வேகவேகமாக பல்வேறு கணக்குகளை தொடங்கியிருந்தன.
நல்லவேளையாக அவனை நீண்டநேரம் குழம்ப விடாமல் அவனது அன்னையே அதற்கும் பதிலளித்திருந்தார். “சரி அடுத்த வாரம் சுஜியோட அம்மா நம்ம வீட்டுக்கு வருவாங்க.. அப்போ நானே கேட்டுக்கறேன்..”
“நம்ம வீட்டுக்கா? நம்ம வீட்டுக்கு எதுக்கு?” என நம்பமுடியாமல் அவன் வினவ, “சதீஷ் அவங்க மாசத்துல ஒரு தடவையாவது என்னையும் அப்பாவையும் பார்க்க வருவாங்க… போன முறை பேசறப்போ கூட நான் சொன்னேனே.. லக்ஷமியம்மா வந்திருக்காங்கன்னு” என நினைவூட்டினார்.
சதிஷிற்கு லேசாக நினைவில் இருந்தது. ஒருவேளை சுஜினியின் அன்னை லக்ஷமி என சொல்லியிருந்தால் கண்டிப்பாக நினைவில் நின்றிருக்கும். வெறுமனே லக்ஷ்மியம்மா எனவும் அன்னைக்குத் தெரிந்த யாரோ என்னும் அளவில் சதிஷின் காதில் விழுந்த செய்தி கருத்தில் பதியவில்லை.
“ஆனாலும் இவகிட்ட அவங்க அம்மா சொல்லியிருப்பாங்க தானே… இவ சொல்லாம எப்படி மறச்சிருக்கா?” எனத் திரும்ப சுஜி தன்னிடம் சொல்லாதது குறித்தே ஆத்திரம் கொண்டது சதீஷின் மனம்.
“எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. அது கூடவா உனக்கு ஞாபகமில்லை” என பதிலளித்த அன்னை, “ அப்பா உன்கிட்ட பேசணும்மாம்” என சொல்லி அவர் தன் கணவரிடம் கைப்பேசியை கொடுத்தார்.
தந்தையின் குரல் கேட்டதுமே,”அப்பா! என் அப்பா? இந்த அம்மா புதுசு புதுசா ஏதோ சொல்றாங்க? சுஜியோட அம்மா நம்ம வீட்டுக்கு வராங்களா அடிக்கடி?”
“ஆமா சதீஷ்.. அன்னைக்கு ஏர்போர்ட்ல பார்த்து மீட் பண்ணோம்ல அதுல அம்மாவுக்கு அவங்க ஃப்ரெண்ட் ஆயிட்டாங்க. மாசத்துல ஒரு நாள் ஏதாவதொரு சாட்டர்டே சண்டே இங்க வருவாங்க. வத்த குழம்பு கருவடாம், அரைச்சு விட்ட சாம்பார்ன்னு ஏதாவது ஒன்னு செஞ்சு கண்டிப்பா கொண்டு வருவாங்க… அதுலையும் அந்த வத்த குழம்பு ருசி இருக்கே.. அடடடடா….” என்றவர்,
அந்த வத்த குழம்பை எப்படி சுடு சோற்றில் ஊற்றி நடுவில் குழி பறித்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட வேண்டும் என்ற பக்குவம் வரைக்கும் சதீஷிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இது எதுவுமே சதீஷின் மண்டையில் ஏறவே இல்லை. அவனது எண்ணம் முழுக்க “சுஜியோட அம்மா என் அப்பா அம்மா கூட இவ்வளவு க்ளோஸ்னா கண்டிப்பா சுஜிகிட்ட அதை பத்தி சொல்லி இருப்பாங்க? ஆனால் இவ ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல? என்ன ப்ளான் பண்ணற சுஜி..” என திரும்ப திரும்ப தன்னிடம் சுஜி ஏன் மறைத்தாள் என்ற கேள்வியிலேயே சதீஷ் என் மனம் உழன்று கொண்டிருந்தது.
மேலும் சிறிது நேரம் தந்தையிடம் விசா பற்றிய செய்திகளை விசாரித்துவிட்டு கைபேசியை அணைத்தான். சதீஷ் தன் தாய் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்த விஷயத்தைப் பற்றி, அடுத்த முறை சுஜியைப் பார்க்கும் பொழுது நிச்சயமாக கேட்டுவிட வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டான்.
அத்தோடு மட்டுமில்லாமல் “எக்காரணத்தைக் கொண்டும் சுஜியோட அம்மா என் அப்பா அம்மா கூட நல்லா பேசி பேசி நட்பு பாராட்டுறாங்க அப்படிங்கற விஷயம் விவேக்குக்கு தெரியப்படுத்த கூடாது, இதை சுஜிக்கும் சொல்லி வைக்கறது நல்லது” என நினைத்துக்கொண்டான்.
[the_ad id=”6605″]
இது விவேக்கிற்கு தெரிவதால் என்ன பெரிய துன்பம் வந்து விடப் போகிறது என்றெல்லாம் அப்போதைக்கு அவன் மனம் யோசிக்க வில்லை. தன் அன்னையிடம் பேசிவிட்டு கைபேசியை அணைத்து சதீஷ் அடுத்ததாக தன் தமையன் கிஷோருக்கு அழைத்தான்.
“டேய் என்னடா! கல்யாண மாப்பிள்ளை! என்கிட்ட சொல்லாமையே நிட்சயதார்த்தம் வரைக்கும் கொண்டு வந்துட்ட…நான்லாம் அந்த சுபாஷினி என்னை லவ் பண்றேன்னு சொன்ன நிமிஷத்துல இருந்து, நின்னது நடந்ததுன்னு உன்கிட்ட எவ்வளவு விஷயம் சொல்லி இருக்கேன்?”
“டே சதீஷ்.. என்னைக் கொஞ்சம் பேச விடுடா..”
“நீ என்னடான்னா அந்த பொண்ணு போட்டோவுல பார்த்திருக்க… போன்ல பேசி இருக்க… அடுத்த வாரம் மீட் பண்ண போற,,,,, இவ்வளவு விஷயம் நடந்திருக்கு இதெல்லாம் ஒன்னு கூட என்கிட்ட சொல்லல துரோகிடா நீ..”என கிஷோர் கைபேசி எடுத்ததுமே வினவினான் சதீஷ்.
“டேய் டேய் டேய்..! இரு இரு! கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோ.. தயவுசெஞ்சு உன்னோட மெசேஜ் எடுத்து பாரு… உன்ன ரீச் பண்ணறதுக்கு எவளோ கால் பண்ணேன்னு..நான் ஒருவாரம் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்.. எப்ப பேசினாலும் என் கால் உடனே வாய்ஸ் மெயிலுக்கு தான் போகுது..”
“சாரிடா கிஷோர்.. போன் எடுத்தாலே நச்சுன்னு நச்சுன்னு எப்ப பாரு படிச்சியா தீசிஸ் என்ன யோசிச்சன்னு டிஸ்டர்ப் பண்ணுவல நீ..
“அதனால?”
“அவன் என்ன தீசஸ் பண்றான் இவன் என்ன பண்றான்..அப்படின்னு ரொம்ப அறிவுபூர்வமாக பேசி என்ன டார்ச்சர் பண்ணுவியா.. அதனால அன்னைக்கு ஏதோ ஒரு கோபத்தில் உன் போன் வந்தாலே அது வாய்ஸ் மெயிலுக்கு அனுப்பி வெச்சேன்… ரிவோக் பண்ண மறந்துட்டேன்..சாரிடா..இப்போ சொல்லு உன் வருங்கால வைஃப் பத்தி…என்ன பண்றாங்க?” என தமையனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தன் பேச்சைத் தொடர்ந்தான்.