முஹூர்த்த சேலை எடுத்த மறு நாள், ராஜன் காலையில் ஆபிஸில் அன்றைய வேலைகளைப் பிரித்துக் கொடுக்கையில், ஒரு அழகிய கூடையில் பலவிதமான சாக்லேட்டுகள் வண்ண சரிகை பேப்பர்கள் சுற்றி, அழகாக அடுக்கப்பட்டு அவன் பெயருக்கு டெலிவரி வந்திருந்தது. “ என் இதயத்தை இனிக்கச் செய்தவருக்கு…இனிப்பான பரிசு”, என்று வந்த அட்டை, அவன் இதயத்தைக் கொள்ளை கொண்டது.
ஆபிஸ் ஸ்டாப் எல்லோரும் கூடையைப் பார்த்ததும் ஹோவென கத்த… அப்போதுதான் அட்டையப் படித்தவனது முகத்தைப் பார்த்துக் கிண்டல் செய்ய, ராஜேந்திரனுக்கும் கொஞ்சம் வெட்கம் எட்டிப் பார்த்தது.
கூடையிலிருந்த ஒரு சாக்லேட் பெட்டியை எடுத்துக்கொடுத்தவன், “ எல்லாரும் எடுத்துக்கங்க. “, என்று அவன் அறைக்குள் கூடையுடன் சென்றான்.
“அண்ணிக்கு எங்க சார்பா தாங்க்ஸ் சொல்லிடுங்க சார்..”, என்ற அசிஸ்டண்டைப் பார்த்து தலையசைத்தவன், “சாப்பிட்டு போய் பாங்க் வேலைய முடிடா…”, என்றவாறே உள்ளே நுழைந்தான்.
“ தாங்க்ஸ்…”, இப்போதுதான் அவன் உணர்ச்சிவசப்பட்டிருப்பது அவளுக்குப் புரிந்தது.
“இதென்ன ஃபார்மாலிட்டி… என் ஆசைக்கு நான் அனுப்பினேங்க…”, மஞ்சரியின் குரல் தழைந்து வந்தது.
“இது சாக்லெட்டுக்கு இல்லை…நீ உனக்குன்னு போட்டிருந்த வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளிய வந்ததுக்கு. என் பழைய மஞ்சரி கொஞ்சம் எட்டிப் பார்த்த மாதிரி இருந்துச்சு… “
“ஐய… எல்லாம் ஒரே மஞ்சரிதான். வட்டமெல்லாம் ஒண்ணுமில்லை… கொஞ்சம் பயம் …அதுவும் போயிடும் சீக்கிரம். என் கேள்விக்கு நீங்க பதிலே சொல்லலை.”
[the_ad id=”6605″]
“ம்ம்.. வந்ததும் ஒரே கலாட்டாதான். ஒரு டப்பாவை அவங்ககிட்ட குடுத்து ஷார் பண்ணிக்க சொன்னேன். அண்ணிக்கு தாங்க்ஸ் சொல்ல சொன்னாங்க பசங்க…”
“ஹான்… அனுப்புன எனக்கு எதுவும் மிச்சம் வெக்கலைன்னா…சாப்டவங்க எல்லாருக்கும் வயத்துவலி வருமாம்…”
மகிழ்ச்சியாய் சிரித்தவன், “உனக்கு எது பிடிக்கும்னு தெரிஞ்சு எடுத்து வெச்சிருக்கேன். சாயந்திரம் உங்க ஆபிஸ் கிட்ட இருக்க ஸ்டார்பக்ஸ்ல காத்துகிட்டு இருப்பேன். வந்துடு, ரெண்டு பேரும் சாப்பிடலாம்.”
“எனக்கு எது பிடிக்குமாம் ?”
“எத்தனை சாக்லேட் இருந்தாலும் காட்பரி சில்க் மாதிரி வருமான்னு, அந்த விளம்பரத்துல வர மாதிரியே வாயக் குவிச்சு ரசிச்சு சாப்பிட்டு, விடியோ கால்ல என்ன வெறுப்பேத்தினியே… இப்ப தைரியமா நேர்ல சாப்பிட்டு காட்டு.”
“ஹோ…உங்களுக்கு நியாபகம் இருக்கா…?”, மஞ்சரியின் குரல் துள்ளலாய் வந்தது.
“அன்னைக்கு நைட்டெல்லாம் தூங்காம புரண்டது எனக்குத்தானே தெரியும். இன்னமும், அப்பப்ப நியாபகம் வரும். “, மிருதுவாய் வந்தது பதில்.
“ஹோ…”, குரல் தேயவும்…
“என்ன மேடம்… குரல் எழும்ப மாட்டேங்குது ? நீ என்னை சீண்டிக் கலாச்சதுக்கெல்லாம் கல்யாணத்துக்கப்பறம் பதில் சொல்லணும். எதுவும் மறக்கலை நான்.”, இன்பமாய் மிரட்டினான் மஞ்சரியை.
“ ராஜன்…நான் வேணா வீட்டுக்கு எடுத்துகிட்டுபோய் சாப்டுக்கறேனே ? நீங்க பாவம்… அப்பறம் கஷ்டப்படுவீங்கதானே…? “, சமாதானப் புறாவாய் அவள் குரல் ஒலித்தது.
“அது நான் பார்த்துக்கறேன்… நீ வேலையைப் பார். காலையில அரட்டை அடிச்சா விஸ்வா என்னைத் திட்டுவான்.”
அவள் திரும்பி தன் ஆபிசுக்கு லிப்டில் ஏறிச் செல்வதைப் பார்த்திருந்தால் இன்னமும் சந்தோஷப்பட்டிருப்பான் ராஜேந்திரன். ஆம் கண்களில் கனவுகளோடு சென்றுகொண்டிருந்தாள் மஞ்சரி.
மாலை, சொன்னபடியே ஸ்டார்பக்ஸில் சந்தித்துக்கொண்டார்கள். சற்று தடுமாற்றத்தில்தான் இருந்தாள் மஞ்சரி.அவனின் செல்ல மிரட்டல் அவ்வப்போது நினைவில் வந்து சென்றது. ஆனாலும் பொது இடம் என்பதில் அவளைவிட அவன் கவனமாக இருப்பான் என்ற ஒரு தைரியம்.
இட வலமாக தலையசைத்தவன், கண்களாலேயே,உண்ணுமாறு சைகை செய்தான்.
அவனை முறைத்தவள். சுற்றியிருந்த சரிகையைப் பிரித்து, நேரடியாகக் கடிக்காமல், ஒரு சதுரத்தைப் பிட்டு வாயில் வைத்தாள். அதன் சுவையில் கண்களை ஒரு நிமிடம் மூடித் திறந்தவள், அவன் முகத்தைப் பார்க்க, ராஜேந்திரனின் கண்களில் அவள் கண்டது காதலும் கனிவும்தான். துளியும் மோகமில்லை.
[the_ad id=”6605″]
அவனையே யோசனையுடன் நோக்க, “இந்த நாலு மாசத்துல நீ இதை கண்ணால கூட பார்த்திருக்க மாட்டேன்னு தெரியும். அதுனாலதான், உன்னை சாப்பிட வெச்சு பாக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்த ஆட் கண்ணில் படும்போதெல்லாம் கஷ்டமா இருக்கும். அப்ப நெனச்சிக்கிட்டேன், இப்ப நிறைவேத்திட்டேன்.”, கனிவும் திருப்தியுமாகக் கூறினான்.
சட்டென்று கண்கள் குளமாகியது மஞ்சரிக்கு. அவனும்தானே வேதனைப் பட்டிருப்பான். தான் அதைப்பற்றி கேட்கவேயில்லை. தன் வேதனைகளைத்தான் கொட்டினோம். சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
“ஏய், மஞ்சரி…என்ன இது கலங்கற ? அதுக்காக சொல்லலை, நீ ஃபீல் பண்ணாதே…”, அவசரமாய்ச் சொன்னான்.
முழங்கையால் கண்ணீரை துடைத்தவள், இன்னொரு சதுரத்தை பிட்டு அவனிடம் நீட்டினாள்.
“சரி, நீங்களும் சாப்பிடுங்க..”
கையில் வாங்குவான் என்று அவள் கொடுக்க, கண்ணிமைக்கும் நேரத்தில், குனிந்து, அவள் கைகளிலிருந்து வாயில் பறித்துக்கொண்டான்.
மீசையின் குறுகுறுப்பும், அவன் உதட்டின் உரசலும்தான் உணர்த்தியது அவன் செய்கையை. உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது மஞ்சரிக்கு.அவனைப் பார்த்து ’நீயா ?’ என்பது போல் முழித்தாள்.
“ஏன் ஷாக்கடிச்சமாதிரி இருக்க… கையை இறக்கு…”, முகம் முழுக்க குறும்பு கொப்பளிக்க, “ இதுக்கே இப்படின்னா, கல்யாணத்துக்கு அப்பறம் நான் சாப்பிடற டெக்னிக்குக்கு நெஞ்சை பிடிச்சுக்குவே போலருக்கே…”, போலியாய் அங்கலாய்த்தான்.
“ஃப்ராடு…நான் எதிர்பார்க்கவேயில்லை… ரொம்ப தைரியம்மாயிட்டுது உங்களுக்கு. ”, பொய்யாய்க் கோபம் கொண்டாள்.
சிவந்திருந்த அவள் முகத்தில் திருப்தியுற்றவனாய், “ நிச்சயமாகிடுச்சு, அந்த தைரியம்தான்.”, கண்ணடித்துச் சொன்னவன், “ காப்பியைக் குடிச்சிட்டே இதைப் பாரு.”, என்று வண்ணமயமான கார் விளம்பர சிற்றேடு (brochure) ஒன்றினைக் காட்டினான்.
“ஹூண்டாய் ஔரா கார்… நல்லாருக்கு. என்ன திடீர்ன்னு ? “, என்றாள் கேள்வியாக.
“ம்ம்ம்… உங்கம்மா வருத்தப்பட்டாங்கன்னு சொன்னியே, எங்கிட்ட ஒரு கார் கூட இல்லைன்னு, அதான், கல்யாணத்துக்கு முன்னாலேயே வாங்கிடலாம்னு…”
“அவங்க சொல்லுவாங்க …அதுக்காக எல்லாம் வேண்டாம் ராஜன். அப்பா கார் வாங்கித் தரட்டுமான்னு, கேட்டதுக்கு நீங்க வேண்டாம்னு சொல்லிட்டீங்கன்னார் ?”
“என் மாமனார் கார் வாங்கித் தந்து அதுல நான் உன்னை கூட்டிட்டு போகணுமா ? “, அவளை முறைத்தான்.
“என்னைவிட உங்கப்பாவுக்குத்தான் கல்யாண செல்வு அதிகம். அவர் மட்டும் வாங்கித் தரலாமா ? இதோ பார் மஞ்சரி, இந்த கார் எனக்கு ஒரு பெரிய விஷயமில்லை. அதுவும் கால் பங்குதான் இப்ப குடுக்கப் போறேன். மிச்சம் பைனான்ஸ்தான். ஆபிஸ்க்கு டாக்ஸ் பெனெஃபிட் வரும். அதெல்லாம் யோசிக்காதே. என்ன கலர் எடுக்கட்டும் அதை சொல்லு.”, பொறுமையாக விளக்கினான்.
‘எல்லாத்தையும் நியாபகம் வெச்சிருக்கார். அம்மா பேசறதெல்லாம் இங்க வந்து உளறாதே மஞ்சரி.’, என்று மனதுக்குள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டு கலர்களைப் பார்த்தாள்.
அவள் சொல்லாவிட்டாலும், ராஜேந்திரனுக்குப் புரிந்தது.
“ஜோசியர் ஒண்ணுதான் அவங்க வீக்னஸ் மஞ்சரி. அதுவும் நான் சரி படுத்தறேன். அதுக்காக அவங்களை வெறுத்திடாதே…ப்ளீஸ்.”, அவன் வருத்தமாய்க் கேட்டதும், பொறுக்க முடியாமல்,
“நீங்க கவலைப்படாதீங்க. அதெல்லாம் நான் அட்ஜட் பண்ணிக்கறேன். யாருக்காக இல்லைன்னாலும் உங்களுக்காக.”, வாக்களித்தாள்.
அன்றிரவு, கோமதியிடமும் சௌந்தர்ராஜனிடமும் கார் வாங்க முடிவு செய்திருப்பதைக் கூறினான். கோமதி இப்போது ஏன் என்று கேட்டதற்கும்,
“இப்பதான் கீழ் வீடு காலி செய்யறாங்களேமா, அவங்க கார் இருக்கவே, நாம வாங்கலை. இப்ப நாமளும் கீழ் வீட்டுக்குப் போயிடுவோம். நம்ம கார் வெச்சிக்கலாம். இந்த வீட்டுக்கு வாடகைக்கு வரவங்க, கார் இருந்தா வெளியதான் நிறுத்தணும்னு சொல்லிக்கலாம்.”, அவருக்குத்தக்கபடி விளக்கினான்.
அந்தப் பேச்சை முடித்து, அடுத்து, சௌந்தர்ராஜன், “ ராஜா, தாலியும் மஞ்சரிக்கு நாம் போடற தாலி செயினும் வாங்கணும், இந்த வியாழக் கிழமை நாள் நல்லாருக்கு. காலையில பத்து மணிக்கா போகலாமானு சம்மந்தியைக் கேட்டேன். அவரும் சரின்னார். மஞ்சரியை ஒரு அரை நாள் லீவ் போட சொல்றேன்னார். நீ எப்படி ? வரியா ? இல்லை நாங்களே பார்த்து எடுத்துடவா ? “