வீட்டின் அமைதியை கலைத்தது கார் வந்து நிற்கும் சப்தம். ஜோசியரைப் பார்க்கச் சென்ற கோமதி, பர்வதம், சௌந்தர்ராஜனுடன், அழைத்துச் சென்ற ராஜேன்திரன் என நால்வரும் திரும்ப வந்தனர்.
ராகவன் சென்று அவர்களை வரவேற்க, விக்ரம் அமைதியாக நின்றிருந்தான். மாலினி அனைவருக்கும் பருக நீர் தர, அவர்கள் அருந்தும் வரை யாரும் எதுவும் பேசவில்லை.
அவர்கள் முகம் பார்க்கையிலேயே ஏதோ சரியில்லை என்பது தெரிந்தது. ராகவனே “என்னாச்சு, என்ன சொன்னார் ஜோசியர் ?”, என்று பேச்சை துவங்கினான்.
ஒரு நொடி கோமதி பேசுவாரா என்று பார்த்த ராஜேந்திரன், தான் பேசத் துவங்க, கையசைத்து நிறுத்திய விக்ரம், “அத்தை நீங்க சொல்லுங்க.”, என்றான்.
“அது…அது வந்து மாப்பிள்ளை….”, கோமதி இழுத்தாலும், உதவிக்கு யாரும் வரவில்லை. சாப்பாட்டு மேசை அருகே இருந்த அவர் மகளைப் பார்க்க, அவள் முகமும் துடைத்து வைத்திருந்தார் போல இருந்தது.
“அவர்கிட்ட கேட்டோம். அது என்னவோ குரு ஒரு வீடு பின்ன போகுதாம், என்னமோ வர்கி…ம்ம் வக்ரி ஆகுதாம். அப்ப ஏதோ சுப கிரக பார்வை… பட்டு.. என்னமோ சொன்னார், ஒரு மூணு மாசம் குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு வந்திருக்காம்….”, விட்டு விட்டு கூறினார் கோமதி.
சலனமில்லாமல் அவரையே பார்த்தவன், “ம்ம்… இது ஏன் முன்னாடி தெரியலையாமாம் அவருக்கு ? அடிச்சி சொன்னாருன்னு சொன்னீங்களே, இப்ப இல்லாட்டி ஏழு வருஷம் கிடையாதுன்னு ? அப்ப இந்த வர்கி பிஸ்கெட்டெல்லாம் ஏன் பார்க்கலை ?”
கோமதி தலை குனிய, பர்வதம்மா, “நான் கேட்டேன்டா அவரை… அந்த மனுஷன், நீங்க கண்டிப்பா இப்ப கல்யாணம் முடிக்க முடியாதுன்னு திரும்ப வந்திருந்தீங்கன்னா, இன்னும் கொஞ்சம் ஆழமா பார்த்திருப்பேன். ஆனாலும் இது ஒரு சின்ன காப்தான். அதுக்குள்ள தகையும்னு உறுதியில்லைமான்னு சொல்றார்.”
“இதே மூணு மாசம்தான அப்பவும் சொன்னார் ? …ம்ம்.. ஆக அவர் மேலோட்டமா பார்த்து சொல்ல, அவர் சொன்னதையே வேதவாக்கா பிடிச்சி இப்பவே முடிக்கணும்னு முடிச்சாச்சு ? “, அழுத்தமாய் கேட்டு கோமதியைப் பார்க்க, அவர் விக்ரமை நிமிர்ந்து பார்த்தால்தானே ?
காரிலேயே ராஜேந்திரனின் மண்டகப்படியும், விக்ரம் என்ன சொல்லுவானோ என்கிற பயமுமே அவரை ஒரு வழியாக்கியிருந்தது.
“அதெப்படி …அவ்ளோ சாதாரணமா விடுங்கறீங்க ? கல்யாணமான மறுனாளே குழந்தை வேணும்னு பூஜை வெச்சி…என்னல்லாம் அட்டகாசம் பண்ணீங்க ? மூணாறு போயிட்டு வந்த மறு வாரம் ஏன் குழந்தை உண்டாகலைன்னு கேட்டு அவமானப் படுத்தினதெல்லாம் மறந்துடுச்சா ? “
“உங்க ரெண்டு பேருக்கும் வேண்டியது நடந்துடுச்சில்ல…. மற்றதெல்லாம் பெருசா தெரியாதுதான்… உங்க பொண்ணுக்கு காசை கொடுத்தாச்சு, கல்யாணமானதும் யாரும் ஒரு சொல்லு சொல்றதுக்கு முன்ன பேர பிள்ளை வந்தாச்சு. இதுக்கு நானும் வேதாவும் பட்ட பாடெல்லாம், ஒரு வரில அதனால என்னன்னு முடிச்சிடுவீங்க… நாங்களும் வாய மூடிகிட்டு போகணும்…”, குரலில் உஷ்ணம் கூடிக் கொண்டே போனது விக்ரமிற்கு.
“டேய்…அவர் அப்படி ஏழு வருஷம் குழந்தை பிறக்காதுன்னு சொல்லவும் பயந்துட்டேண்டா….”
“அதான் சொல்றேன். யாரோ எங்கயோ உட்கார்ந்து மேலோட்டமா பார்த்துட்டு எதையாச்சம் சொல்வாரு… அதை அப்படியே பிடிச்சிகிட்டு ஆடறது. அதனால அவஸ்தை படறது உங்க பொண்ணு புள்ளைன்னு ஏன் யோசிக்க மாட்டேங்கறீங்க ?”
“ஏன் அத்தை… குழந்தைக்கு பதினோராம் மாசம் மொட்டை நானும் வேதாவும் பெனாங் முருகன் கோவில்ல போட்டதை வீடியோல பார்த்துட்டு அப்படி அழுதீங்களே, தாய் மாமா மடில வெச்சு பண்ணலை, நான் கூட இல்லையேன்னு… “, என்று நிறுத்தினான்…
[the_ad id=”6605″]
கோமதி விக்ரமை நிமிர்ந்து பார்க்கவும், “ என் குழந்தை வேதா வயித்தில வளரும்போதும், பிறக்கும் போதும், அடுத்த ஆறு மாசமும் கூட இல்லைன்னு நானும் அவளும் துடிச்ச துடிப்பு அதைவிட ஆயிரம் மடங்கு. இழந்த அதெல்லாம் எங்களுக்கு திரும்ப வருமா ?”, வலியும் வேதனையுமாய் வந்தது அவன் கேள்வி.
“கல்யாணம் பண்ண கையோட விட்டுட்டு போனேனே… தலை தீபாவளி, பொங்கல், கல்யாண நாள், பிறந்த நாள்னு தனியா இருக்கமேன்னு நாங்க பட்ட வேதனையெல்லாம் கணக்குல அடங்குமா ? எங்க கண்ணீர், தனிமை, கஷ்டம் எல்லாமே கடைசீல உங்க ஜோசியர்கிட்ட நீங்க மறுபடி போய் கேக்கலைங்கறதனாலன்னு சொல்லி அவர் கை கழுவிட்டார். நீங்க என்ன சொல்லப் போறீங்க ?”, முடிக்கும் தருவாயில், இரும்பாய் இறுகியிருந்தது விக்ரமின் குரலும், முகமும்.
வீடே அமைதியாயிருந்தது… ஒரு வாக்குவாதம் என்றாலே காத தூரம் ஓடும் விக்ரம் காணாமல் போயிருந்தான். நின்று தப்பை அக்கு வேறு ஆணி வேறாக அலசும் இந்த விக்ரமின் அவதாரம் அனைவருக்கும் ப்ரம்மிப்பாய் இருந்தது. கோமதி நடுங்கிப் போயிருந்தார். கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை.
“தப்புதான் மாப்பிள்ளை..… இவளோட ஜாதகப் பைத்தியத்தை முதல்லையே அடக்காம அதுக்கு வளைஞ்சிகுடுத்தே போனோமில்லையா, அதுக்கான தண்டனை எங்களுக்கு வராம…உங்களுக்கும், வேதாவுக்கும் வந்து விடிஞ்சது.”, வேதனையாய்ப் பேசினார் சௌந்தர்ராஜன்.
“ஏன், உங்க பிள்ளைக்கும் மஞ்சரிக்குகூடத்தான் அந்த மனுஷன் சொன்னதால வந்து விடிஞ்சிது… அதையும் சேர்த்து சொல்லுங்க…”, நக்கலாய்க் கூறினான்.
“வாஸ்தவம்தான் மாப்பிள்ளை…. மன்னிச்சுடுங்கன்னு மன்னிப்பு கேக்கறத தவிர என்ன செய்ய முடியும் நாங்க ?”, பாவமாய்ப் பார்த்தார் சௌந்தர்ராஜன்.
“நீங்க எங்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு எதிர்பார்க்கலை மாமா. அது எனக்கு வேணாம்.”
என்ன எதிர்பார்க்கிறான் என்று புரியாமல பார்த்தார்கள் அனைவரும். மாலினி, மஞ்சரி வேதாவைப் பார்க்க… சலனமே இல்லாமல் அவள் தாய் தந்தையரைப் பார்த்திருந்தாள். கண்களில் மட்டும் கண்ணீர்க் கோடுகள்.
“வேற… வேற என்ன வேணும் மாப்பிள்ளை…?”
அவர் கையிலிருந்த அவர்களின் ஜாதக ஃபைலை சைகையால் வாங்கியவன், நிதானமாய் உள்ளிருந்த அவரிகளின் ஜாதகத்தை எடுத்துக் கிழிக்க ஆரம்பித்தான்.
“எங்க ஜாதகத்தை தூக்கிட்டு இனியொரு முறை எவங்கிட்டயும் ஜோசியம் பார்க்கறேன்னு யாரும் போகக் கூடாது. பிறக்கப்போற குழந்தைக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். எங்க வாழ்க்கைக்கான முடிவுகள் எங்களுதாத்தான் இருக்கணும். எவனோ கட்டம் போட்டு அரையும் குறையுமா பார்த்து சொன்னதால இருக்கக் கூடாது.”
“மருமகன், பேரக் குழந்தைங்கன்னு உறவு வேணும்னா…இதை மீற மாட்டீங்க. தெரியாம பார்க்கறேன், அம்மாகிட்ட சொல்லி செய்ய வெக்கலாம்னு நெனச்சா, எங்க உறவு வேணாம்னுதான் நான் அர்த்தம் எடுத்துப்பேன்.”, கிழித்த காகிதங்களை அதே ஃபைலில் வைத்து மேசையில் போட்டான். இதில் மறு பேச்சு கிடையாது என்பது போலிருந்தது அவன் குரலும் உடல் மொழியும்.
அன்னையைப் பார்த்தவன், “உங்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன்மா… ஊர்ல யார் எதை சொன்னாலும் உடனே பிடிச்சிகிட்டு ஆடறதை இத்தோட நிறுத்திக்கங்க … எங்க வாழ்க்கைக்கு இதுதான் சரின்னு நீங்க முடிவெடுக்காதீங்க. எனக்கு தேவைன்னா நானே என்ன செய்யன்னு கேப்பேன். அப்ப உங்க கருத்தை சொல்லுங்க போறும்.”, என்று பர்வதம்மாவிற்கும் மீண்டும் ஒரு கொட்டு வைத்தான்.
கோமதி, “ தப்புதான் மாப்பிள்ளை… அவரை மலையாய் நம்பினேன். எங்கப்பாவுக்கு இந்த ஜோசியமெல்லாம் கொஞ்சம் தெரியும். அவர்கிட்ட நிறைய பேசுவார். ஆனா, இதைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாததுனால, அவர் சொல்றது அப்படியே கேட்டுக்குவேனே தவிர, வேற எதுவும் கேள்வி கேட்டதில்லை. அதுதான், வேதா விஷயத்திலும், ராஜா விஷயத்திலும் ரொம்ப தப்பாயிடுச்சு…”, மெதுவாய் ஒலித்தது அவர் குரல்.
“அதுதான் அத்தை சொல்றேன். அவருக்கு தினப்படி வர நூத்துக்கணக்கான ஜாதகத்துல நீங்க காட்றதும் ஒண்ணு. ஆனா, உங்களுக்கு அவர் சொல்றதுதான் முடிவு. அப்ப யாரு முட்டாளாகறது ? நீங்க அவருக்கு குடுக்கற முக்கியத்துவம், அவர் உங்களுக்கு தரலையே…அதுனால நஷ்டம் நமக்குதான ? “
[the_ad id=”6605″]
“அந்த ஜோசியர் சொன்னது உண்மையான்னு பார்க்க, அவளையேதான வேதா பணயம் வெச்சிருக்கா ? லூப் போடறேன் எங்கிட்ட சொன்னவ, போடாமயே வந்திருப்பா ? அந்த முடிவுக்கும் அப்ப நீங்க பேசின பேச்சுதான் காரணம். இப்ப இருவத்தஞ்சு வயசுல இரண்டாவது குழந்தை வந்தாச்சு. இப்பதான் வேலைல சேர்ந்திருக்கா. விவேக்குக்கு ரெண்டு வயசு கூட முடியலை. எவ்வளவு தூரம் மனசு நொந்திருந்தா…. ?“, குரலில் காரம் கூடிக்கொண்டே சென்றது விக்ரமிற்கு.
“ இனி அவர்கிட்ட போக மாட்டேன் மாப்பிள்ளை.. வேதாம்மா… மன்னிச்சிடுடா அம்மாவை…”, என்று கரகரத்துப் போன குரலில் விக்ரமை இடைமறித்துக் கூறியவாறே மகளிடம் சென்றார்.
அவர் கைப்பிடித்தவள், “ விடுமா… நீங்க வீட்டுக்கு போங்க. நான் ரெண்டு நாள்ள வரேன். அப்ப பேசிக்கலாம். அழாதீங்க.”, அண்ணா என்று சைகை செய்யவும், அவன் வந்து தோளோடு கோமதியை அணைத்துச் சென்றான்.
“மாமா, நான் காயப் படுத்தணும்னு பேசலை. எங்க வாழ்க்கைய எல்லாருமா பந்தாடிய வருத்ததிலதான் பேசினேன். “, எழுந்த சௌந்தர்ராஜனின் கைப்பிடித்து மன்னிப்புக் கேட்டான்.
“இல்லை மாப்பிள்ளை… நீங்க சொன்னதுல எதுவுமே தப்பில்லை. என் பொண்ணு மேல இருக்க பாசத்துலதான பேசனீங்க. அது சந்தோஷம்தான். நாங்க கிளம்பறோம்.”, என்றார்.
இருந்து சாப்பிடச் சொன்ன மாலினியையும் ராகவனையும் மறுத்து, “இன்னொரு நாள் வரோம்மா. “, என்று கூறிக் கிளம்பினர்.
மஞ்சரி செல்கையில், வேதாவின் தோளணைத்து, “ சந்தோஷமா இருக்கணும் இப்ப, அழக்கூடாது. அத்தையை நான் கவனிச்சிக்கறேன், வருத்தப்படாம பார்த்துக்கறேன். சரியா ?”, என்று தேற்றிவிட்டு சென்றாள்.
வீட்டிற்கு வந்தும், கோமதி கண்ணீரை துடைத்துக்கொண்டிருந்தார்.
“உன்னையும்தானே மா அழ வெச்சிட்டேன். நானே என் பசங்களுக்கு நல்லது பண்றேன்னு, அந்த மனுஷனை நம்பி கஷ்டத்தைக் குடுத்துட்டனே.”
[the_ad id=”6605″]
“நீங்க வேணும்னு பண்ணலை. ஆனா இதை ஒரு பாடமா எடுத்துக்கங்க. திரும்ப எங்க ஜாதகத்தை எடுத்துக்கிட்டு போய் அந்த மனுஷன் என்னத்தை சொல்லுவாரோன்னு யோசிக்க வெக்காதீங்க அத்தை. அதுவே போறும் எனக்கு.”, என்றாள் மஞ்சரி.
‘ரணகளத்துலயும் அவ காரியத்தை சாதிக்கறா பாரு ராட்சசி’, என்று மஞ்சரியைப் பார்த்திருந்தான் ராஜேந்திரன். இதே விஷயத்தை எப்படி அம்மாவிடம் சொல்வது என்றுதான் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான் இதுவரையிலுமே. மஞ்சரியோ, அழகாய் பேச்சோடு பேச்சாய் செய்தியை சொல்லிவிட்டிருந்தாள்.
“ கண்டிப்பா இனி போக மாட்டேன் மா. ஆயுசுக்கும் இந்த படிப்பினை போறும் எனக்கு.”, வாக்களித்தார் கோமதி.
“சரி விடுங்க இந்த பேச்சை. உங்களுக்கு உங்க மக மூலமா இன்னொரு பேரக் குழந்தை வரப் போகுது. அதை கொண்டாடலாம். எழுந்து வாங்க.”, என்று கைபிடித்து அழைத்துச் சென்றாள்.
அங்கே வேதாவை மாடிக்கு அழைத்துச் சென்ற விக்ரம், “உங்கம்மாவை பேசிட்டேன்னு வருத்தமா தேனு ?”, என்று கேட்டவாரே கட்டிலில் அமர்த்தினான்.
அவனையும் அமர வைத்து, தோள் சாய்ந்தவள், “ம்ம்..கஷ்டமாத்தான் இருந்துச்சு, ஆனா இது அவங்களுக்கு தேவை. நாங்க யார் சொல்லிருந்தாலும், தட்டிவிட்டுட்டு போயிடுவாங்க. நீ இந்த வாங்கு வாங்கினதுதான் அவங்களை ஆயுசுக்கும் ஜோசியத்துலர்ந்து தெளிய வைக்கும். அது தெரிஞ்சுதான் ராஜனும் அமைதியா இருந்தான். அப்பாவுக்குத்தான் ரொம்ப கஷ்டம், ஆனா நீ அவர்கிட்ட மன்னிப்பு கேட்டது ரொம்ப பிடிச்சுது. ”, எட்டி அவன் கன்னத்தில் முத்திரை பதித்தாள்.
“ஒண்ணு ஓண்ணா நெனக்கவும், என் கோவத்தை என்னாலயே அடக்க முடியலை…”
“ஷ்… பாப்பா வரப்போகுது, இந்த முறை கூடவே இருந்து, மசக்கைக்கு லெமன் ஜூஸ் போட்டு குடு, இடுப்பு , கால் வலிக்கும்போதெல்லாம் பிடிச்சி விடு, விவேக்கை சமர்த்தா பார்த்துகிட்டு எனக்கு ரெஸ்ட் குடு. அப்பறம்… சமைக்குபோது எனக்கு குமட்டும், அதுனால நீயே….”, அவள் அடுக்கிக்கொண்டே போக, விக்ரம் திரு திருவென விழித்தான்.
“அவசரப்பட்டு…அத்தைய பகைச்சிட்டேனா…அன்னிக்கு ஒரு நாளே உன்னை சமாளிக்க முடியலையேடி ?”, என்று அலற,
கலகலவென்று சிரித்தவள், “இன்னும் ஒன்பது மாசம் இருக்கு வீரு, நான் கொஞ்ச கொஞ்சமா ட்ரெய்ன் பண்றேன் உன்னை, சரியா ?”, இரு கன்னமும் பிடித்து கொஞ்சினாள் அவன் தேனு. அவள் முகம் மலர்ந்த சிரிப்பில் மயங்கியவன் எப்போதும் போல அவளுக்குத் தலையாட்டி சம்மதித்தான்.