“ம்ம்..ஏன் சொல்ல மாட்டீங்க…. சரி வந்து எங்களோட வாசல்ல பன்னீர் தெளிக்க நில்லுங்க.”
“நீங்கதான் இருக்கீங்களே ? நான் வேற எதுக்கு நிக்கணும் ?”
“ நாங்க எல்லாரும் குட்டீஸ்ன்னு யாரும் மதிச்சி எங்ககிட்ட வரமாட்டேங்கறாங்க ? நாங்களா கூப்பிட்டு தெளிக்கறோம். நீங்க வந்து நில்லுங்க கூட.”, வம்படியாய் இழுத்துக்கொண்டு போனாள்.
‘அம்மா பார்த்தா தொலஞ்சேன்.’, என்று நினைத்தவாறே வாசலில் இருந்து மேசையருகில் வந்தாள். முகூர்த்த நேரம் நெருங்குவதால் பெரும்பாலானோர் ஏற்கனவே வந்துவிட்டனர்.
பிள்ளைகளோடு இவள் பேசுவதைப் பார்த்து இனிதாய் அதிர்ந்து நின்றவனை மஞ்சு பார்க்கவில்லை.
‘ஹை, நம்மாளு. இங்க என்ன பண்றா ? ப்ரெண்டா, சொந்தாமா ?’, என்று யோசித்தவன் அருகே சென்று,“மஞ்சரி, வாங்க. பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?”
திடீரென்று குரல் கேட்டு திரும்பியவள், “யாரு நீங்க”, என்றாள்.
ஒரே நொடியில் கேட்டவனின் ஃப்யூசை பிடுங்கிவிட்டாள் மஞ்சரி.
“ஓ, உங்களுக்கு என்னை தெரியாதா ? சரி.”, என்று கோபத்துடன் திரும்பினான்.
கேட்ட அதே நொடி, அவன் யாரென்று உண்ர்ந்துகொண்டாலும் கேட்டது கேட்டதுதானே.
“சார்… சார். நில்லுங்க”, அவசரமாய் அவன் அருகே வந்து நின்றாள்.
“இப்போ தெரிஞ்சுதா என்னை ?”, திரும்பி புருவம் உயர்த்திக் கேட்டான்.
“ஆபிஸ்ல பார்த்ததுக்கும், இங்க திடீர்ன்னு பட்டு வேட்டி சட்டைல பார்க்கவும் ஒரு செகண்ட் அடையாளம் தெரியலை. ஒரு ரிஃப்லெக்ஸ்ல கேட்டுட்டேன், சாரி”, வருத்தமாய் சொன்னாள்.
“ சாரில்லாம் வேண்டாங்க, உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலைன்னதும் கோவபட்டுட்டேன். நாந்தான் சாரி கேக்கணும். நீங்க மாப்பிள்ளை வீடா ?”
“அட, அப்போ சொந்தக்காரங்களாகிட்டோமா நம்ம ?”, அவள் சந்தோஷம் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது.
புன்சிரிப்புடன் ஆமோதித்தவனை மேலும் கடலை போட விடாமல் கைபேசி தொல்லையிட்டது.
“சாரிங்க, அம்மா கூப்பிடறாங்க. அப்பறம் பார்க்கலாம். மூகூர்த்த நேரமாகப் போகுதே, நீங்க பசங்களை கூட்டிட்டு உள்ள வாங்க.”, என்றவன் வேக நடையிட்டுகூட்டத்தில் மறைந்தான்.
சற்று நேரத்தில் தாலி கட்ட இருப்பதால், எல்லோர் கவனமும் அதில் இருந்தது. மறுகூரைப் புடவை அணிந்து, அழகே உருவாய் மணப்பெண் நடந்து வந்தமர்ந்தாள். ஐயர் சொன்ன மந்திரத்தைப் பாதியில் விட்டு, மணப்பெண்ணின் வரவில் லயத்திருந்தான் மணமகன். அடர் சிகப்பில், தங்கசரிகையிட்ட பட்டுப்புடவையும், அதற்கேற்ற அணிகலங்களும் அணிந்து, அளவான அலங்காரத்தில், அழகாய் அவன் அகமுடையாள்.
“விக்ரம் தம்பி”, என்று கவனம் கலைத்தார் சீனு ஐயர். அதற்குள் வேதா, அவன் அருகில் வந்தமர்ந்திருந்தாள். நமட்டுப்புன்னகையுடன், “மந்திரத்தை சொலுங்கோ, சீக்கிரமே தாலி கட்டிடலாம்.” என்றார். ஒரப்பார்வை பார்த்து, புன்னகைத்தாள் அவன் மனையாள்.
அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்து, ஐயரைப் பின்பற்றினான் விக்ரம். சற்று நேரத்தில், சீனு ஐய்யர் தாலி எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி வேதாவின் புறம் திரும்பியவனுக்கு, கடந்த இருபது நாட்கள் கனவாய்த் தோன்றியது. இருவரின் மன மகிழ்ச்சியும் முகத்தில் மின்ன, மூன்று முடிச்சிட்டு மனையாள் ஆக்கிக்கொண்டான் அவன் தேவதையை.
அக்னியை வலம் வர, நினைவு அவள் சம்மதம் சொன்ன நிமிடத்திற்குச் சென்றது.
“வேண்டாம்னு சொல்லப்போறியா ?”, என்று நெஞ்சடைக்க கேட்டதும், அவள் அவன் கன்னம் தொட்டு, இல்லை என்று தலையசைத்தும்தான், சுவாசம் மீண்டது.
“ சரின்னு சொல்லுவோமா ?” என்று கேட்டாள்.
“ஹ…அப்போ குழந்தை ?”, விக்ரம் இன்னும் தடுமாற்றத்தில் இருந்தான்.
“வந்தா, சமாளிக்கலாம். உங்க சப்போர்ட் இருந்தா. அவங்க சொன்ன மாதிரி, போன்லயாச்சம் ஆறுதலாய் இருப்பீங்கல்ல ? “, என்று பழைய குறும்புடன் கேட்டாள். பாவம், என்னவெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கும் என்று தெரியாமல் ஒரு குருட்டுத் தைரியத்தில் பேசினாள்.
விக்ரமிற்கு போன உயிர் மீண்டதுபோல் இருந்தது. “கட்டாயம் இருப்பேன். இன்னொரு ப்ராமிஸ்ஸும் பண்றேன். கண்டிப்பா உன் படிப்பு, வேலை பத்தின கனவை நான் கலையாம பார்த்துக்குவேன்.” என்று வாக்களித்தான். ‘வாக்களிக்கறது ஈசி ப்ரதர். காப்பாத்தத்தான் கஷ்டப்படணும்’, வேறு யார், விதிதான் கமெண்ட் அடித்தது.
அதன்பின், எல்லாமே துரிதகதியில் நடந்தது. அக்காவிற்கு இரண்டாவது பகுதியாக கொடுப்பதற்கு சேர்த்து வைத்த பணத்தை கல்யாண செலவிற்கு அண்ணனிடம் கொடுத்துவிட்டான். பெண்ணிற்கு இவர்கள் பங்காக செய்யவேண்டிய தாலிக்கொடியிலிருந்து, மணமகள் சேலை, அம்மா, அண்ணன், அக்கா குடும்பத்தினருக்கு எடுத்த துணிமணிகள் என்று எல்லாம் இவன் பணமே.
கல்யாணத்திற்கு முன் புது வீடு புகுமனை விழாவும் ஒரு வாரம் முன்னர் முடித்திருந்தனர். மேல் மாடி வேலை கொஞ்சம் பாக்கியிருந்தாலும், கீழே எல்லாம் முடிந்ததால், ஒரு வாரம் இடைவிடாது சில்லரைப் பணிகளை செய்து முடித்துவிட்டிருந்தனர். இப்போதிருக்கும் வாடகை வீட்டில், கல்யாணம் முடிந்து, இவர்களுக்கு இரண்டாவது படுக்கை அறையை கொடுத்துவிட்டால், சிந்துவும், அவன் அம்மாவும் ஹாலில்தான் படுக்கவேண்டும். அதெல்லாம் சரி வராது என்று, புது வீட்டை ரெடி செய்துவிட்டார்கள். ராகவன், லோன் இன்ஸ்டால்மெண்ட் வந்ததும் அடைத்துக்கொள்ளலாம் என்று கடன் வாங்கிச் சமாளித்திருந்தான்.
மதிய விருந்திற்குப் பின் மணமகள் வீட்டிற்கு சென்று, பின், இவர்கள் புது வீட்டிற்கு மாலை வந்து சேர்ந்தார்கள். வேதாவுடன் சிந்துவும், சித்துவும் ஒட்டிக்கொண்டிருக்க, மனையாளை தூர நின்று ரசித்தவாறே, மீதமிருந்த நெருங்கிய சொந்தங்களுடன் பேசிக்கொண்டிருந்தான். வேதாவின் கண்களும் அவ்வப்போது விக்ரமைத் தழுவிச்சென்றது.
வேதாவிற்கும் தான் சம்மதம் சொன்ன நிமிடங்களுக்குத்தான் எண்ணம் சென்றது. வாழ்க்கையே முடிந்தது போல இருண்ட முகமும், நம்பிக்கையற்றுப்போன கண்களும் பார்த்தவளுக்கு இதயம் வயற்றை நோக்கி கீழே விழுவது போலிருந்தது. அவன் துயர் போக்க மட்டுமே தவித்தது அவள் மனது. என்னவானாலும் சரி, இவன் வேண்டும், இவனின் இந்த மொத்த அன்பும் எனக்கு மட்டுமே வேண்டும் என்று தோன்றிய நொடி, “ சரின்னு சொல்லுவோமா ?” என்று சம்மதிக்கச் சொன்னது.
இவர்கள் சந்தித்துப் பேசியது என்னவோ சொற்ப நேரமே. அதற்குள் அவனுக்கு என் மேல் இப்படி ஒரு காதலா? எனக்குமே, இப்படி ஒரு பாசமா, நம்பிக்கையா இவன் மீது? விக்ரம் மீது வேதவிற்கு இருப்பது காதலா என்று அவளுக்குத் தெரியவில்லை, அவனை மிக மிகப் பிடித்திருந்தது. அவனுமே அவள் மீது காதல் என்று சொல்லவில்லை ஆனால் அவளுக்குப் புரிந்தது. இந்த இரு வாரங்களில், கைபேசியில்தான் பேசிக்கொள்ள முடிந்தது. அவன் அளவு இல்லையென்றாலும் தன் நேசத்தை அவனுக்கு முடிந்தவரை உணர்த்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
“ அக்கா.., காயத்ரி அத்தை கூப்பிட்றாங்க பாருங்க..” என்ற சிந்துவின் குரலில் கவனம் கலைந்தாள்.
“அக்கா இல்லை சிந்து…சித்தின்னு சொல்லு.”, காயத்ரி திருத்தினாள்.
“அப்பறம்…”, என்று வந்த வேலையைவிட்டு கதை கேட்டாள் காயத்ரி.
“திடீர்ன்னு, இனிமே அக்கா இல்லை, உனக்கு அவங்க சித்திங்கறாங்க…எத்தன வாட்டிதான் மாத்தி மாத்தி நான் ஃபிக்ஸ் பண்றது ?”, கைகளை விரித்து பாவமாய் கேட்ட தோரணையில் சிரித்து விட்டார்கள் வேதாவும் காயத்ரியும்.
“சரி நீ பொறுமையாவே மாத்தி ஃபிக்ஸ் பண்ணு. நான் ஒண்ணும் சொல்லலை”, என்றவள், “உங்க வீட்டாளுங்கல்லாம் வந்துட்டாங்க பாரு. அவங்களுக்கு வேணுங்கறதைப் பாரு வேதா.”, என்று ஆர்டர் போட்டுவிட்டுப் போனாள் அவள் நாத்தனார் காய்த்ரி. வேதாவும் வரவேற்பரைக்கு சித்துவை தூக்கிக்கொண்டு சென்றாள்.
உள்ளே வந்த ராஜேந்திரனின் கண்கள் மஞ்சரியைத்தான் தேடியது. கல்யாண மண்டபத்தில் வேலை நெட்டி முறிக்கவும், அவ்வப்போது அவளை பார்த்து புன்னகைக்கமட்டும்தான் முடிந்தது. சில நேரம் அவள் அம்மா இருக்கையில் கவனமாக அவனைப் பார்ப்பதை தவிர்ப்பது தெரிந்தது.
மஞ்சரியின் தாயை பார்த்ததும், வேதாவிடம் மெதுவாக, “அது யார் வேதா, அந்த மஞ்சள் சேலையில ஒரு அம்மா நிக்கறாங்களே ?”
“அது இவரோட அத்தைண்ணா. பேரு காஞ்சனா. அவங்க பொண்ணு மஞ்சரி ரொம்ப ஸ்வீட். எங்கிட்ட நல்லா பேசிட்டு இருந்தா. இந்தம்மா கொஞ்சம் கறார் போல. என் மாமியாரைக் கூட அதட்டிதான் பேசறாங்க.”
‘ நாத்தனாரை உனக்கு பிடிச்சிருக்கா தங்கம் ? நல்ல விஷயமாச்சே. எனக்கு வேலை வெக்காம மஞ்சரியே கவர் பண்ணிட்டாளே’, என்று சந்தோஷப்பட்டான். இவன் இன்னும் மஞ்சரியிடம் இவனின் பிடித்தம் பற்றி சொன்னதில்லை என்பதெல்லாம் நினைவில் இல்லை.
“ஓ, அவங்க வீட்டுக்காரர் எப்படி ? அவரும் இருக்காரா ?”, உள்ளே ஓடிய எண்ணங்கள் எதுவும் தெரியாது முகத்தை சாதாரணமாக வைத்தபடி கேட்டுக்கொண்டிருந்தான்.
“ விக்ரம் அறிமுகப்படுத்தினார். ம்ம்..அவர் பேர் கூட .. கைலாசம். நல்லாரும்மான்னு ஆசீர்வாதம் பண்ணார், வேற ஒண்ணும் பெருசா பேசிக்கலை.”
விக்ரம் மூலமாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். மஞ்சரியை தேடிப் போனான்.
வாசலில், விக்ரமை பிடித்து, கையோடு கேட்டிற்கு அழைத்துச் சென்றார் அவர்கள் குல தெய்வக்கோவிலின் பூசாரி தங்கப்பன்.
“தம்பி, நான் கிளம்பறேன். நாளைக்கு காலம்பற வெள்ளனவே வந்துடுங்க. புள்ள பிறக்கன்னு சில சாங்கியம் பண்ணி நம்ம கோவில் அரச மரத்துல தொட்டில் கட்டி , அம்மனுக்கு அபிஷேகம் பண்ணனும். அதுக்கு முக்கியமா, இண்ணைக்கு சாந்தி முகூர்த்தம் கண்டிப்பா நடக்கணும். நாளைக்கு புதுப்பொண்ணா வரக்கூடாது, எல்லா வகையிலும் உங்க பொண்டாடியாதான் வரணும். புரியுதுங்களா ?”, என்று சொல்ல விக்ரம் கண்கள் தெரிக்க அவரைப் பார்த்தான்.
அவருக்கு அவன் பார்வை என்ன சொன்னதோ, “இல்ல தம்பி, கல்யாண அலுப்பில அப்பறம் பார்த்துக்கலாம்னு தூங்கிடாதீங்கனுதான் முங்கூட்டியே சொல்லிடறேன். வரட்டுங்களா ?”, என்று கிளம்பினார்.
நல்ல வேளை கிளம்பினார், இல்லை, அவர் சட்டையைப் பிடித்திருப்பான். காதில் புகை வராத குறைதான். அதுவும், தூங்கிடாதீங்க என்று சொன்னது மகா கடுப்பைக் கிளறிவிட்டது. ‘போறவன் வரவனெல்லாம் வெச்சி செய்யறாங்க’, என்று திட்டியவாறே நேராய் அவன் அம்மாவைத் தேடிச் சென்றான்.