ஆயிற்று, இன்றோடு ஒரு மாதம் முடியப்போகிறது இருவரும் பார்த்து, பேசி. இது இப்படியே ஆகிவிடுமோ என்று ஒரு பயம் இப்போதெல்லாம் மஞ்சரியை ஆட்டுவித்தது. அதுவும், இரண்டு நாட்களுக்கு முன் அவள் பிறந்த நாள் அன்று கூட அவனிடமிருந்து ஒரு வகையிலும் வாழ்த்தோ, தகவலோ வராதது, அவளைக் கூறு போட்டது. ஓய்ந்து போய்க்கிடந்த மகளைப் பார்த்து காஞ்சனாவின் அடி வயிறு கனன்றது.
“ஏண்டி இப்படி இருக்க ? அதான் நீ வேண்டாம்னு போயிட்டான் இல்லை ? திரும்பி கூட பார்க்கலைல ? அப்பறம் எதுக்கு நீ இங்க உருகிட்டு இருக்க ? என்னத்த சொக்குப் பொடி போட்டானோ, என் பொண்ண மயக்க… நல்லாருப்பானா ?”, என்று சகட்டு மேனிக்கு பேச ஆரம்பித்துவிட்டார்.
வந்ததே கோபம் மஞ்சரிக்கு. “ தேவையில்லாம அவரை இழுக்காதே ? உங்களுக்கு என்னைவிட உங்க ஈகோ முக்கியம். அவங்களுக்கும் அதே. உங்களுக்கு வேண்டியது நடந்துடுச்சு. அதுக்கு எதுக்கு எங்களை அசிங்கமா பேசற ? போ இன்னும் நாலு பேருக்கு கேக்கறா மாதிரி பேசு, என்னை ஊர் பூரா தூத்தட்டும், உன்னோட மட்டும் ஏன் நிப்பானேன் ? “, அழுகையும் ஆத்திரமுமாய் அவள் அறைக்குச் சென்று அடைந்துகொண்டாள்.
தாயின் பேச்சு தகித்தது. ராஜேந்திரன் மீதும், அவன் அம்மாவின் மீதும் அப்படி ஒரு ஆத்திரம் பொங்கியது. ஒன்றும் செய்ய முடியாத இயலாமை தன்னிரக்கத்தை வரவழைத்தது. அவனால், தான் இல்லாமல் இத்தனை நாள் இருக்க முடியும் என்பதே அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. தன்னைப்போல ஒவ்வொரு நிமிஷமும் அவன் என்னைத் தேடவில்லையா ? அப்போது அவன் அன்பில் ஆழமில்லையா ? எதிர்மறை எண்ணங்கள் அலைகழித்தது.
முயன்று அவன் வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொண்டாள். ஆறு மாதம் டைம். அவன் மீது நம்பிக்கை வைக்கச் சொன்னான். அதுவரை பொறுமை காக்க வேண்டும். சந்தேகப்படக் கூடாது. மீண்டும் மீண்டும் உச்சாடனம் செய்து கொண்டாள். இருந்தாலும், மனம் குரங்காய் இருபுறமும் அலை பாய்ந்தது. அலுவலகத்தில் மேலும் வேலையை இழுத்துவிட்டுக்கொண்டாள். சில நேரம் வீட்டிற்கும் எடுத்து வந்து வித விதமான அனாலிசிஸ் ரிபோர்ட் தயாரித்தாள். விஸ்வாவிற்கும் அவள் தந்தைக்கும் மிகவும் பிடித்துப்போனது.
ராஜேந்திரனின் கணக்கு வழக்குகளை அப்படி ஆராய்ந்தாள். அவனுக்கான பேமெண்ட் செக் அவளே வைத்திருந்தாள். ஆனால் வந்து வாங்கியது அவன் ஆபிசில் வேலை செய்பவன்தான். ராஜேந்திரன் வரவில்லை. சைட்டிற்கு செல்வதாய் எஞ்ஜினியர்கள் பேச்சில் தெரிந்து கொண்டாள்.
எல்லாமாகச் சேர்ந்து அவள் உடலைப் பதம் பார்த்தது. ஒரே மாதத்தில் மெலிந்து, கன்னம் ஒட்டி, கண்கள் சோபை இழந்து, ஏதோ நீண்ட காலமாய் நோய்வாய்பட்டு, இப்போதுதான் நடமாட ஆரம்பித்ததுபோலிருந்தாள். அவளுக்கே தன்னைப் பார்க்க அசிங்கமாக இருந்தது. ஆனால் , சுத்தமாக சாப்பாடு இறங்கவில்லை. இயந்திரத்தனமாக சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. எல்லாம் தன் கை மீறிப் போன சூழ்நிலை, தன் சந்தோஷம் வேறு யார் முடிவிலோ இருக்கிறது, அதுவும் ஒருத்தரில்லை, பலரும் சேர்ந்து, ஒன்று போல் ஒத்துக்கொண்டால்தான் தன் கல்யாணம். இதெல்லாம் நடக்குமா ? நாட்கள் செல்ல செல்ல, மெதுவாக ஆனால் உறுதியாக டிப்ரஷனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள். எல்லாரும் சேர்ந்து அவளை மொத்தமாக மன அழுத்த நோயாளி ஆக்கிவிடுவார்களா ?
எவ்வளவு அபாயகரமான பள்ளத்தை நோக்கி மஞ்சரி சென்று கொண்டிருக்கிறாள் என்று தெரியாமல், ராஜேந்திரன் அவன் வலியை வேலையில் மூழ்கடித்துக்கொண்டிருந்தான். இன்னும் பல ப்ராஜெக்ட்களுக்கு சப்ளைச் செய்ய ஆரம்பித்திருந்தான். முன்பே யோசித்ததுதான், ஆனால் இன்னும் இருவர் ஆள் எடுப்பதாய் இருந்தது. அது இல்லாமல், அந்த மேற்பார்வைகளை தானே ஏற்றிருந்தான். ஒரு நாளைக்கு ஆறேழு இடங்கள் மேற் பார்வையிட, ஆபிஸ் வேலை, மேற்பார்வைகளையும் கவனிக்க. சில நேரம் சப்ளை தரம் சரி பார்க்க என்று லோடு ஏற்றும் இடம் செல்ல, அவனின் டைல்ஸ் வியாபாரமும் சேர, மூச்சு விட நாழியில்லை, இதில் பெற்றவர் எங்கே, உடன் பிறந்தவள் எங்கே ? அவர்கள் யாரும் இல்லாவிடினும், அசதியில் உறக்கம் தழுவும் வேளை, அவன் முதன் முதலில் பார்த்த கோலத்தில் குடை ஜிமிக்கி ஆட, வெள்ளைக் குர்த்தாவில் , குதிரைவால் கொண்டை ஆட அவள் நடந்து வருவாள். அறைக்குள் நுழையும் முன்பே அவன் உறங்கியிருப்பான்.
[the_ad id=”6605″]
அவளைப் பிரிந்த இந்த இரண்டு மாதமாய் உழைக்க ஆரம்பித்ததில் பண வரவு வெகுவாய் அதிகரித்தது. ஆனால் அவனுக்குத்தான் அனுபவிக்கத் தோணவில்லை. அலைந்து திரிந்ததில் உடல் இளைத்து, கருத்திருந்தான். கண்களில் மட்டும் ஒரு தீவிரம் கனன்று கொண்டே இருந்தது. விஸ்வாவை மூன்று வாரங்கள் சென்று அவன் சைட்டில் பார்த்த போது, விஸ்வா பொங்கிவிட்டான் ராஜேந்திரனிடம்.
“என்ன நெனச்சிட்டு இருக்க ராஜா ? அங்க மஞ்சரி அடையாளம் தெரியாத அளவு மெலிஞ்சிட்டே போறா, இங்க நீ இப்படி தேவாங்குக்கு சொந்தக்காரனாட்டம் ஆகிட்டு இருக்க. எதுக்குடா இந்த பிரிவு புல்ஷிட் எல்லாம் ? “
விலுக்கென்று அவன் புறம் திரும்பியவன், கவலையோடு, “ரொம்ப மெலிஞ்சிட்டாளா ? நான்தான் ஆறு மாசத்துல கண்டிப்பா இதுக்கு முடிவு கட்டறேன்னு சொல்லிருந்தேனேடா ? என்னை நம்பலியா அவ ?”, குரல் கமறிக் கரகரத்தது.
“ஆறு மாசத்துல முடிச்சிருவேன்னு சொல்ற நீயே இப்படி இருக்க ? நீ சொன்னதை மட்டும் நம்பி அவ இருக்கணும். வீட்ல எவ்வளவு பிரஷரோ ? யாருக்குத் தெரியும் ?”
விஸ்வாவின் கைகளைப் பிடித்துக்கொண்டவன், “விஸ்வா, அவ கிட்ட சொல்லிருந்தேன், எதுவும் ரொம்ப முக்கியம்னா உங்கிட்ட சொல்ல சொல்லி…எதுவும் சொன்னாளா ?”, அவசரமாய்க் கேட்டான்.
இல்லையென்று தலையசைத்தான் விஸ்வா.
“நீ எனக்காகக் கொஞ்சம் பேசு விஸ்வா. கொஞ்சம் தைரியமா இருக்கச் சொல்லு, ப்ளீஸ். இன்னும் நாலு மாசம்தான். அதுக்குள்ள பெரியவங்க பார்த்து ஸ்டெப் எடுக்கலைன்னா, கண்டிப்பா நான் எடுப்பேன். அவளுக்கு கொஞ்சம் புரிய வை விஸ்வா…”, கெஞ்சாத குறையாகக் கேட்டான் ராஜேந்திரன்.
“அதை நீயே சொல்றதுக்கு என்ன ? அவளுக்கு இன்னும் நம்பிக்கை வருமில்லை ?”, போனை நோண்டிக்கொண்டே கேட்டான்.
“பேசணும்னுதான் ஒவ்வொரு நிமிஷமும் நெனைக்கிறேன். ஆனா ஒரு வாட்டி பேசிட்டா அப்பறம் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது விஸ்வா. அவ அழுகையை கேட்ட அடுத்த நிமிஷம் கோவில்ல வெச்சி தாலி கட்டிடுவேன். “
“ஏன், அப்படி செஞ்சாதான் என்ன ?”
“புரிஞ்சிக்கோடா, அவளைத்தான் எல்லாரும் பழி சொல்லுவாங்க. வாழ்க்கைபூரா அது ஒரு வடுவா அமைஞ்சிரும். எத்தனை வருஷமானாலும், சொந்த பந்தம் இதெல்லாம் மறக்காதுடா. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டவன்னு சொல்லிக்காட்டும். பெத்தவங்களோட போராடியாவது கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி எல்லார் முன்னாடியும் முறையா செய்தாதான் அது மஞ்சரிக்கு மரியாதையைக் கொடுக்கும். அதுக்கு அந்த கடங்கார ஜோசியன் வந்தாத்தான் சரி பண்ணமுடியும். அதுக்குள்ளே பெரியவங்களே இதை சரி செய்ய மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை.“
“சரி. நான் தைரியம் சொல்றேன் மஞ்சரிக்கு. நீ உன்னையும் கொஞ்சம் பார். வேலைக்கு இன்னும் ரெண்டு பேரைப் போடு. ஆறு மாசத்துக்குள்ள நீ ஹாஸ்பிடல்ல படுக்கற ரேஞ்சுக்குப் போயிடாதே !”, தோளைத்தட்டி நண்பனுக்கு அறிவுரை சொல்லிச் சென்றான் விஸ்வா.
அலுவலகம் வந்தவன், முதல் வேலையாக மஞ்சரியை அழைத்தான்.
“சர். கூப்டீங்களா ?”, என்றவளை அமரச் சொல்லி சைகை செய்தவன்,
என்றுமில்லாத திரு நாளாய் இன்று கேட்கவும், என்ன பதில் சொல்வது என்று முழித்தாள் மஞ்சரி.
“நீங்கதான் இப்படின்னா, ராஜா அதுக்கு மேல இருக்கான். “
ராஜேந்திரனின் பெயரைக் கேட்டதும், விரைத்தவள், அவன் முகத்தையே பார்த்தாள், “சர் ?”
“ம்ம்..கறுத்து, அஞ்சாறு கிலோ வெய்ட் குறைஞ்சு எப்படியோ இருக்கான். நீங்களும் இப்படி இருக்கறதை சொன்னா, ரொம்ப கவலைப்பட்டான். நான் சரி செய்வேன்னு நம்பிக்கையில்லையான்னு கேக்கறான் ?”
“அப்படில்லாம் இல்லை சர்.”, விழிகள் தரையை நோக்கினாலும், அவள் அழுகைக்கு தயாராவதை குரல் காட்டிக்கொடுத்தது.
[the_ad id=”6605″]
“கண்ட்ரோல் யுவர்செல்ஃப் மஞ்சு. நானுமே சொன்னேன். நீயே போன் பண்ணி பேசறதுதானே ? என்னை ஏன் அவங்களுக்கு தைரியம் சொல்லச் சொல்றன்னு. அதுக்கு அவன் சொன்ன பதிலை அவனுக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணிருக்கேன். உங்களுக்கு வாட்சப் அனுப்பறேன். எதுக்கும் தனியா போய்க் கேளுங்க. வீட்டுக்குப் போகணும்னா அதுக்கப்பறம் கிளம்புங்க. எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்.”
விழி விரித்து அவன் சொல்வதைக் கேட்டவள், தலையசைத்து எழுந்து சென்றாள். விஸ்வாவிற்கு நன்றி சொல்லக் கூடத் தோன்றாது, பாத்ரூம் நோக்கிச் சென்றாள். வாட்சப்பில் மெசேஜ் வந்ததுக்கான மணி அடித்தது.
உள்ளே சென்று, விஸ்வா அனுப்பியிருந்த ஆடியோ ஃபைலைக் கேட்டாள். முதலில் அவன் குரல் மட்டுமே கேட்டது. சொல்வதை ஒன்றும் கிரகிக்க முடியவில்லை. எத்தனை நாட்களுக்குப் பிறகு கேட்கிறாள். கண்கள் மடை திறந்தன. மறுமுறை ஓடவிட்டு உன்னிப்பாய் கேட்டாள். அவன் சொல்வது புரிந்ததும் அவளையும் மீறி ஒரு கேவல் வெடித்தது. தனக்காக அவன் இவ்வளவு யோசிக்கிறான்,தான் மட்டும் கிழிவிரக்கத்திலும் அவன் மேல் கோபத்திலும் உழன்று கொண்டிருந்தோமே என்று வெட்கினாள்.
முகத்தை அலம்பியவள், மீண்ட உறுதியுடன் திரும்ப விஸ்வாவிடம் வந்தவள்,
“தாங்க்ஸ் சர். ரொம்ப டிப்ரெஸ்டா இருந்தேன். எதிர்பாரா நேரத்தில் நீங்க செஞ்ச உதவி என்னை மீட்டிருக்கு. அவர் கிட்ட ஹெல்த் பார்த்துக்கச் சொன்னேன்னு சொல்லுங்க சர். அவர் வரவரைக்கும் காத்துட்டு இருப்பேன்.”, கண்கள் கலங்கினாலும் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
“வெரி குட் மஞ்சு.”, என்று விடைகொடுத்தவன், போனைக் காதில் வைத்து,
“ராஜா ? கேட்டியா மஞ்சு சொன்னதை ?”, என்றான்.
“ம்ம்…கேட்டேன். என்னைப் பண்ண மாதிரி அவ குரலையும் ரெக்கார்ட் பண்ணி அனுப்பிருக்கலாமில்ல ? திரும்ப திரும்ப கேட்டிருப்பேன்.”, ஏக்கமாக வந்தது ராஜேந்திரனின் குரல்.
வாய் விட்டு சிரித்த விஸ்வா, “தொழிலயே விட்டா மாத்திருவீங்க போலருக்கே ! இது கொஞ்ச நாள் தாங்கும். அதுவரை நல்லா சாப்பிட்டு கொஞ்சம் உடம்பை தேத்து.”, என்று அறிவுரைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தான்.
ஒரு வாரம் போல சென்றிருக்கும். வேலை முடிந்து, மஞ்சு வீட்டிற்கு சென்றபோது, அவள் பெரியம்மா வந்திருந்தார். அவரை வரவேற்று அமர்ந்தவள், “சங்கி எப்படி இருக்கா பெரியம்மா ?”, என்றாள் இயல்பாய்.
“ம்ம்..இருக்கா.”, என்றார் அவள் பெரியம்மா மல்லிகா.
இறுக்கமான சூழ் நிலையை அப்போதுதான் உணர்ந்தாள் மஞ்சரி. தன் பெறோரை ஒரு பார்வை பார்த்தவள், “என்னாச்சு பெரியம்மா ? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க எல்லாரும் ?”
“ஹும்…நம்ம சங்கிய அவ மாமியார் ரொம்ப படுத்தறாங்களாம். அவ எங்கிட்ட ஒரே அழுகை. மாப்பிள்ளையும், அவ அம்மாவை அனுசரிச்சி போக சொல்றாராம். “, அந்தம்மாவிற்கு சொல்லும் போதே குரல் உடைந்தது.
“என்னதான் அவங்களுக்கு ப்ரெச்சனையாம் சங்கி கூட ? என்ன சொன்னாள் ?”
“எல்லாம் அவங்க வீட்டு வழக்கப்படிதான் செய்யணுமாம். இவ ஏதாச்சம் மாத்தி செஞ்சிட்டா , நக்கலடிக்கறாங்களாம். எல்லாம் சரியா பண்ணனும்னு எதிர்பாக்கறாங்களாம். செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிருக்காங்க, இப்ப நான் கட்டிட்டு வந்து மாரடைக்கிறேன்னு இன்னைக்கு யார்கிட்டயோ சொல்லிகிட்டு இருக்காங்களாம். இதுக்கா அவ்வளவு செலவு பண்ணி , கார் வாங்கிக்குடுத்து கல்யாணம் பண்ணேன் நானு ? “, புடவை நுனியில் மூக்கைத் துடைத்தார்.
“மாமியார் கெத்தைக் காட்டுவாங்களா இருக்கும் பெரியம்மா. வளைஞ்சி குடுத்து போகச் சொல்லுங்க நீங்க. காலம் இருக்கு, அப்பறமா அவங்களை வளைச்சிக்கலாம். நீங்களும் அவளுக்கு கொம்பு சீவி விட்டா, அவ சண்டை போட்டுட்டு வந்துடுவா. எல்லாருக்கும் கஷ்டம். அதுக்கு பதிலா, அவ மாமியாரை சுலபமா சமாளிக்க வழி இருக்கு. காலேஜ்ல, எத்தனை உம்மணாமூஞ்சி வாத்தியாருங்களுக்கு ஜின் ஜாக் அடிச்சிருப்பா, அல்ப இன்டெர்னல் மார்க் வாங்க ? அதயே இப்ப மாமியாருக்கு அடிக்க சொல்லுங்க. அவங்களையும் கரெக்ட் பண்ணி , அவ புருஷனையும் கரெக்ட் பண்ணிடலாம். என்ன பெரிய வேலை, சமையல் ? ரெண்டு வாட்டி தப்புச்சுன்னா, மூணாவது வாட்டி சரியா வரப்போகுது.”, ஒரு மணி நேரமாய் பெரியவர்கள் மூவரும் யோசித்துத் தெளியாததை சர்வ சாதாரணமாக தெளிவாக்கினாள்.
“என் செல்லம்.”, அவளை நெட்டி முறித்தார் மல்லிகா.
“உன் தெளிவு அவளுக்கும் இல்லை, எங்களுக்கும் இல்லயேடி. இவ்வளவு நேரம் போட்டு உழப்பிகிட்டு இருந்தோம். நான் சொல்றேன் அவகிட்ட. நீயும் கொஞ்சம் பேசுடி தங்கம் அவகிட்ட.”
“ஆகட்டும் பெரியம்மா. நீங்க தெம்பா இருங்க.”, என்று உடை மாற்ற எழுந்து சென்றாள்.
“சீக்கிரமே அவ நல்ல மனசுக்கு நல்ல குடும்பமா அமையும் காஞ்சனா. புகுந்த வீட்ல மஞ்சு ராஜ்ஜியம்தான் நடக்கும் பாரேன். வேலைக்கு போறதும் நல்லதுதான். அழகா மனுஷங்களை எடை போட கத்துக்கிட்டா பாரேன். நானும் சங்கிய வேலைக்கு அனுப்பியிருக்கணும். கைக்குள்ளயே வெச்சிருந்து தப்பு பண்ணிட்டேன்.”, கொஞ்சம் தெம்பு வந்தவராய்ப் பேசினார் மல்லிகா.
[the_ad id=”6605″]
மஞ்சுவின்பேச்சைக் கேட்டு நீண்ட யோசனைக்குச் சென்றார் கைலாசம். இந்தத் தெளிவை அவர் மகளிடம் எதிர்பார்க்கவில்லை. மகளை இன்னும் சிறுபிள்ளையாகவே நினைத்திருக்கின்றோமோ என்று தோன்றியது.
சகோதரிகள் இருவரும் சமையலறையில் காபி, டிபன் செய்ய, மகளின் வருகைக்காக காத்திருந்தார் கைலாசம். அவள் வந்ததும்,
“என்னம்மா, இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட ?”
“ம்ம்.. வேலை கொஞ்சம் கம்மியா இருந்ததுபா. “
“என்னடாம்மா , ரொம்ப ஈசியா சங்கி ப்ரெச்சனைக்கு தீர்வு சொல்லிட்ட ?”
“ம்ம்…ராஜனோட அம்மா எனக்கு மாமியாரா வந்தா, அவங்களை எப்படி சமாளிக்கணும்னு கொஞ்சம் யோசிச்சு வெச்சிருந்தேன்பா. அதுல ஒண்ணுதான் இது. “, உதட்டை சுழித்து தோளைக் குலுக்கிச் சொன்னாள்.
அதற்கு மேல் என்ன சொல்ல முடியும் கைலாசத்தால். “அப்பா மேல கோவமாம்மா ?”, என்றார் இரங்கிய குரலில்.
பெருமூச்சொன்றை விட்டவள். “ நீங்க எனக்காகப் பாக்கறீங்கன்னு எனக்குப் புரியுதுபா. ஆனா, வாழ்க்கையில் எதுவுமே கியாரண்டி கிடையாதுபா. ஊரெல்லாம் அலசி, இந்த வரனை பிடிச்சாங்க பெரியம்மா. அப்ப தெரியலை அந்தம்மா இப்படின்னு. இப்ப முழிக்கறாங்க. என் விஷயத்துல எனக்கு மாமியாரா வரப்போறவங்க குணம் முன்னாடியே தெரிஞ்சது எனக்கு அட்வான்டேஜ்ன்னு நான் நெனச்சேன். நீங்க அப்படியில்லைன்னு நெனச்சீங்க. இதுல நான் என்ன சொல்ல ?”, அவரை ஒரு பார்வை பார்த்தவள்,
“சங்கி மாப்பிள்ளை மாதிரி, அம்மாவை அனுசரிச்சி போன்னு மட்டும் சொல்லாம, அவங்களை எப்படி சமாளிக்கறதுன்னும் ராஜன் எனக்கு சொல்லுவார், ஏன்னா நான் அவங்க அம்மா பார்த்த பொண்ணில்லை, அவர் பார்த்தது. அப்ப என்னை அவங்க அம்மாவுக்கு பிடிக்க வைக்க அவரும் மெனக்கெடணுமில்லையா ? விடுங்க. அதைப்பத்தி இப்ப என்ன பேச்சு.”, லேசாய் ஒரு புன்னகை சிந்தி, அவள் பெரியம்மாவைத் தேடிச் சென்றாள்.
மகளின் கூற்று தந்தையைக் கூறு போட்டது. அவர் யோசிக்காத பல கோணங்களை மஞ்சு யோசித்திருக்கிறாள். மகள் விஷயத்தில் அவசரப்பட்டு தவறிழைத்துவிட்டோம் என்று புரிந்தது. சரி செய்ய முடியுமா ? இல்லை அதற்கான நேரம் கடந்துவிட்டதா என்று புரியாமல் அமர்ந்திருந்தார்.