***இரு நண்பர்களும் அந்த மசால் வடையை ஆளுக்கு பாதியாய் பங்கிட்டு உண்டுக்கொண்டு பல கதைகளை சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டிருக்க, அப்போது, ராஜகோபால் தான் நில விஷயமாய் பேச்சை தொடங்கினார்.
“நெல்லும் கோதுமையும் விளைஞ்சு நிக்குது ஜெயா! அறுவடை முடிஞ்சதும், அடுத்து என்ன போடலாம்ன்னு நீ நெனைக்குற?”
ஜெயதேவ், “விவசாயத்துல எனக்கு என்னடா பெருசா தெரியும்? எல்லாம் நீ சொல்றது தானே எப்பவும்!”
“உனக்கு விவசாயம் பார்க்குறதுல பெரிய ஆர்வம் இல்லன்னு எனக்கு தெரியும் ஜெயா, எனக்காக தான் நீ என்கூட இருக்கன்னும் எனக்கு தெரியும்” என்ற ராஜகோபாலை கண்டு மென்னகை புரிந்த ஜெயதேவ், “உன் ஆசை தான் ராஜா என் விருப்பமும்! எனக்கும் ஏதாவது தொழில் செஞ்சு முன்னுக்கு வரணும்ன்னு ஆசை தான், அதுக்காக உன்னை விட்டுட்டு நான் எப்டி இருப்பேன்?” என்றார் உணர்வுப்பூர்வமாய்.
“எனக்கும் தொழில் செய்ய விருப்பம் தான் ஜெயா, ஆனா, நிலத்தை சும்மா போட முடியாதே!”
ஜெயதேவ், “சும்மா எதுக்கு போடணும் ராஜா, நிலத்தை இங்க யாருக்காவது குத்தகைக்கு விட்டுட்டு அந்த காசை வச்சு நம்ம தொழில் ஆரம்பிக்கலாம்ல?” என அவர் சொல்ல, அவர் முகமே காட்டியது, சுயதொழில் மீதான அவரின் அலாதி ஆர்வத்தை.
அவர் ஆர்வம் கண்டு ஆமோதிப்பாய் தலையசைத்த ராஜகோபால், “நல்ல யோசனை தான் ஜெயா… கண்டிப்பா செய்வோம்!” என சொல்ல, ஜெயதேவின் முகம் பளீறென்றானது.
“ஆனா, எனக்கு வீட்டுல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க… இப்போ போய் விவசாயத்தை விட்டுட்டு, தொழில் தொடங்குனா, பொண்ணு வீட்டுல மாப்பிளை உத்தியோகம் சொல்லிக்குற மாறியா இருக்கும்?” என ராஜா சுணங்கியதுமே ஜெயதேவின் முகமும் வாடியது.
நண்பனின் முகம் வாடுவதைக்கண்டு பொறுக்காத ராஜகோபால், “விடுடா, கல்யாணம் தானே? பொறுத்து ரெண்டு வருஷம் செண்டு பண்ணிக்கலாம்! எனக்கென்ன வயசா ஆகிப்போச்சு? இன்னும் உனக்கே கல்யாண பேச்சு ஆரம்பிக்கல, அதுக்குள்ள எனக்கு அவசரத்தை பாரு” என தன்னையே கேலியாக்கி, தாஜாவாய் பேச, அவர் பேச்சில் சிறு நாணத்துடன் சிரித்தார் ஜெயதேவ்.
“என்னடா ஜெயா சிரிக்குற?”
“கல்யாணம் எல்லாம் அந்த அந்த நேரத்துல பண்ணிடனும் ராஜா” ஜெயதேவன் கொஞ்சம் வெட்கத்துடனே சொல்ல, அவன் நாணம் ராஜகோபாலுக்கு புதியதாய் இருந்தது.
“என்ன ஜெயா புதுசா வெட்கம் எல்லாம் படுற?” என விளையாட்டாய் அவர் இடை கிள்ளினார் ராஜகோபால்.
கூச்சத்தில் சிரித்த ஜெயதேவ், “என்னை நம்பி யாருடா பொண்ணுக்குடுக்கப்போறா?” என யதார்த்தமாய் சொல்ல, “என்னடா இப்படி சொல்லிட்ட? பொண்ணு இருந்தா, நாங்க குடுக்க மாட்டோமா? என் அப்பா அம்மாவே நிறைய முறை சொல்லிருக்காங்க, ஜெயாவை நம்ம வீட்டு மாப்பிள்ளையாக்கனும், அந்த அளவுக்கு தங்கமான பையன்னு! எனக்குமே அந்த ஆசை இருக்கு தெரியுமா?!” என தீவிரமாய் சொல்ல, ஜெயதேவ் திகைத்துப்போனார்.
“என்ன ராஜா சொல்ற?” திகைப்பு நீங்காது அவர் கேட்க,
அவர் அதிர்ச்சியை விநோதமாய் பார்த்தவர், “இதுல நீ அதிர்ச்சியடைய என்ன இருக்கு ஜெயா? நம்ம என்ன நண்பர்கள் மாறி மட்டுமா பழகிருக்கோம்? அதுக்குமேல நம்ம உறவு காலத்துக்கும் நிலைக்கனும்ன்னா, உறவுக்காரங்க ஆனா தானே முடியும்?” என்றார் ராஜகோபால்.
[the_ad id=”6605″]
ஜெயதேவ் என்ன சொல்வதென தெரியாது சங்கடமாய் அமர்ந்திருக்க, அவர் மௌனம் ராஜகோபாலுக்கு துணுக்குற செய்தது.
“என்ன ஜெயா, உனக்கு எங்க வீட்டு மாப்பிள்ளை ஆகுறதுல விருப்பம் இல்லையோ? இப்படி யோசிக்குற?” என்றார் ராஜகோபால்.
ராஜகோபால் அப்படி கேட்டதும், “அது…. நானே உன்கிட்ட சொல்லனும்ன்னு இருந்தேன் ராஜா…” என தயக்கமாய் இழுத்தார் ஜெயதேவன்.
“என்கிட்ட என்ன தயக்கம்? என்னனு சொல்லு”
“அது… போன திருவிழால நம்ம பக்கத்து ஊரு பொண்ணு ஒன்னு என்னை பார்த்து சிரிச்சுதுன்னு சொன்னல நீ?” என ராஜகோபாலை கேட்க, “ஆமா, அது சும்மா அப்போ உன்னை சீண்டுறதுக்காக சொன்னது” என்றார் அவர்.
“ஆனா, அந்த பொண்ணை எனக்கு நிஜமாவே பிடிச்சு போச்சு ராஜா… அந்த பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கலாம்ன்னு தோணுது” என சொல்ல, அமர்ந்திருந்த ராஜகோபால் வேகமாய் எழுந்து நின்றார்.
நண்பன் தன்னை விட்டு நகர்ந்ததும், “என்ன ராஜா எழுந்துட்ட?” என கேட்டுக்கொண்டே தானும் எழுந்தார் ஜெயதேவ்.
“இதை உன்க்கிட்ட நான் எதிர்ப்பார்க்கல ஜெயா! நீ என் சொந்தத்தை வேண்டாம்ன்னு சொல்லுவன்னு சத்தியமா நினைக்கல” என்ற ராஜாவின் குரலில் கோபமும் ஆதங்கமும் போட்டிப்போட்டது.
‘தங்கள் வீட்டுக்கு மாப்பிள்ளையாக விருப்பம் உண்டு’ என ஒரு வார்த்தை ஜெயதேவிடம் இருந்து வர வில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு.
“ராஜா…. அப்படி இல்லடா” என ஜெயதேவ் தொடங்க, கை உயர்த்தி அவரை தடுத்த ராஜகோபால், “பேசாத! என்னைவிட யாரோ ஒரு பொண்ணு உனக்கு முக்கியமா போய்ட்டா! அதனால தானே எங்க வீட்டு மாப்பிள்ளையாக உனக்கு விருப்பம் இல்லை!” என்றார்.
“அப்படி இல்ல ராஜா! யாருக்கு யாரை எப்போ பிடிக்கும்ன்னு யாராலையும் சொல்ல முடியாது! எனக்கு அந்த பொண்ணை பிடிச்சுப்போச்சு! அந்த பொண்ணுக்கும் என்னை பிடிச்சுருக்கு! அவளை கல்யாணம் செஞ்சா நல்லா இருக்கும்ன்னு நினைக்குறேன்” என்ற ஜெயதேவ் திடத்துடன் பேசினார்.
ராஜகோபால் அவரை விநோதமாய் பார்த்து, “என்னையே எடுத்தெறிஞ்சு பேசுறல்ல ஜெயா?” என்றார் ஆதங்கமாய்.
தான் சொல்வதை நண்பன் தவறாக புரிந்துகொள்கிறானே என்ற விரக்தியில், “உனக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும் ராஜா? அந்த பொண்ணு ‘தெய்வானை’ ரொம்ப அமைதியான, அடக்கமான பொண்ணு(!?). என்மேல ரொம்ப பிரியமா இருக்கா! எங்க காதலை உன்கிட்ட சொன்னா, நீயே எங்க வீட்டுல பேசி அனுமதி வாங்கித்தருவன்னு நினைச்சேன்!” என்று சொல்ல,
“போதும் நிறுத்து ஜெயா! நீ செஞ்சது நம்பிக்கை துரோகம்! உன்மேல நான் வச்ச நம்பிக்கைக்கு நீ பாத்திரமா நடந்துக்கல!” என்றார் ராஜகோபால்.
அவர் அவ்வாறு சொன்னதும் ஜெயதேவுக்கும் கோவம் எழுந்தது.
‘நம்பிக்கை துரோகம், அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசாத ராஜா! வார்த்தையை கொட்டுனா அள்ள முடியாது பார்த்துக்க!” என்று விரல் நீட்டி சொல்ல,
“ஏய் அப்படி தான்டா சொல்லுவேன்! நீ ‘நம்பிக்கை துரோகி’ தான்! என் நண்பன் நான் என்ன சொன்னாலும் செய்வான்னு நான் உன்மேல வச்ச நம்பிக்கையை நீ கெடுத்துட்டியே? அதை சொன்னா மட்டும் கோவம் வருதோ?” என்று ராஜகோபால் எகிற,
[the_ad id=”6605″]
“நீ சொல்லி நான் இதுவரை எதைடா கேட்காம போனேன்? என்னவோ பெருசா பேசுற?” என ஜெயதேவும் தன் பங்கிற்கு எகிறினார்.
“இதுவரைக்கும் எல்லாம் கேட்டல்ல? அப்போ இதையும் கேளு! எங்க வீட்டு மாப்பிள்ளையாக சரின்னு சொல்லு” என்றார் ராஜகோபால்.
அவர் அப்படி சொன்ன மறு நொடியே, “அது முடியாது ராஜா, நான் அந்த பொண்ணுக்கு வாக்கு குடுத்துட்டேன்! அவளை தான் கல்யாணம் செய்வேன்” என திண்ணமாய் சொன்னார் ஜெயதேவ்.
“அப்போ நான் உனக்கு முக்கியம் இல்லை! என் வார்த்தை உனக்கு முக்கியம் இல்ல! அப்படி தானே?” என ராஜகோபால் கேட்டதற்கு, பதிலே சொல்லாது நின்றார் ஜெயதேவ்.
அவர் அமைதியே ராஜகோபாலுக்கு உரிய பதிலை கொடுக்க, “ஹும்ம்! முடிவா கேட்குறேன் ஜெயா! என் வீட்டுக்கு மாப்பிள்ளை ஆக சம்மதம் சொல்லாம, யாரோ ஒரு பொண்ணை கட்டப்போறேன்னு வந்து நிக்குற! உனக்கு அந்த பொண்ணு தான் முக்கியம்ன்னா, இந்த நண்பனை…. என்னை…. நீ இந்த நிமிஷமே மறந்துடணும்!” என சொல்ல,
“என் விருப்பத்தை மதிக்காம, உன் விருப்பமே பெருசுன்னு பேசுற நீ, இதனால என்னை விட்டு போறன்னா, அது உன் விருப்பம்! நான் அந்த பொண்ணை தான் கட்டுவேன்!!!” என்றார் ஜெயதேவ்.
அப்போது அடித்த வேகக்காற்று இருவரையும் தழுவி சமாதானம் செய்ய முயன்று தோற்றுப்போக, பல வருட நட்பை மறந்து இரு துருவமென பிரிந்து நின்றவர்களை பாவமாய் பார்த்து சென்றது.
ஜெயதேவை ‘நீ யாரோ?’ என்ற மூன்றாம் மனித பார்வையில் பார்த்த ராஜகோபால், “நீ செஞ்ச இந்த நம்பிக்கை துரோகத்தை என்னைக்குமே நான் மறக்க மாட்டேன்டா! என் நண்பன் நான் சொன்னதை செய்வான்னு நம்புன என் நம்பிக்கைல மண்ணள்ளி போட்டுட்ட நீ!!! இனி உனக்கு ஒரு எதிரி இருக்கான்னா அது நானா தான் இருப்பேன்!” என்றவர், குரோத பார்வையுடன் அங்கிருந்து செல்ல,
“நீ என்னை ‘எதிரி’ன்னு முடிவு பண்ணிட்டா, நானும் இனி ஒருபோதும் உன் நண்பனா இருக்க மாட்டேன் ராஜகோபால்! நீ எனக்கு ‘எதிரி’ன்னா, நான் உனக்கு ‘பரம எதிரி’!” என்று கத்திய ஜெயதேவ், மறுதிசையில் சென்றார்.
ஒரு மந்தையில் இருந்த இரு ஆடுகள் வெவ்வேறு பாதையில் பிரிந்து சென்றன.
கொசுவர்த்தி சுருள் தன் சுருளை சுருட்டிக்கொண்டது.
கன்னத்தை வலக்கரத்தால் தாங்கிக்கொண்டு கதை சொல்லும் ஆதியின் முகத்தையே தீவிரமாய் பார்த்துக்கொண்டிருந்தான் கோகுல்.
பிளாஷ்பேக் முடிந்த பின்பும், கோகுல் அசையாமல் இருப்பதைக்கண்டு, அவன் முகத்தின் முன்னே சொடுக்கிட்டு, “கதை அவ்ளோதான்டா, முடிஞ்சுது” என்றான் ஆதி.
கோகுலோ அதே போஸில் இருந்தபடி, “அது தெரியுது! இப்படி ஒரே ஸீன்ல ரெண்டு பேரும் பிரிஞ்சு போனதை நினைச்சு தான் பீல் பண்ணிட்டு இருக்கேன்” என்றான்.
“ஹும்ம்! அதை நம்ம பீல் பண்ணி என்ன ஆகுறது? பீல் பண்ண வேண்டியவங்க, பகையோட சுத்திட்டு இருக்காங்க” என்றான் ஆதி.
“ரெண்டு பேரும் அப்படி சண்டை போட்டு பிரிஞ்சதுக்கு அப்புறம் தான் வாய்க்கால் தகராறு வந்துச்சா?” என்றான் கோகுல்.
“யெஸ்! அதுல மட்டும் இல்ல! கிடைக்குற எல்லா சந்தர்ப்பத்துலையும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுக்கிட்டே இருந்துருக்காங்க! அப்பறம் எங்கப்பா ஊருல இருந்த கொஞ்ச நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு, எங்கம்மாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டு ஊரை விட்டே வந்துட்டாரு! அதுல என் மாமனார் கோவம் இன்னும் அதிகமாகிடுச்சு போல!” என்றான் ஆதி.
கோகுல், “சோ, உன் அப்பாவும், மாமனாரும் பிரிஞ்சதுக்கு முக்கிய காரணம், ராஜகோபால் சாரோட வீட்டு மாப்பிளையாக உங்கப்பா மறுத்துட்டு, உன் மம்மியை மேரேஜ் பண்ணது தான்… இல்லையா?” என யோசனையாய் கேட்டான் கோகுல்.
“ஹும்! யெஸ்!”
கோகுல் அந்த அறையின் குறுக்கும் நெடுக்கும் சில நிமிடங்கள் நடைப்பயின்றான். விரல்களை காற்றில் ஆட்டி ஆட்டி அவன் ஏதோ திட்டம் போட்டுக்கொண்டிருக்க, அவனை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி.
சட்டென நடையை நிறுத்திவிட்டு ஆதியிடம் ஓடி வந்து அமர்ந்த கோகுல், “ஐடியா மச்சி” என்றான் தலைக்கு மேல் பல்பெறிய!
“என்னன்னு சொல்லு” என ஆதியும் ஆர்வமாக, “இப்போ ராஜகோபால் சாருக்கு என்ன கோவம்? அவர் தங்கச்சியை உன் அப்பா மேரேஜ் பண்ணலன்னு தானே? ஆனா, அதுக்கப்பறம் நல்ல இடமா பார்த்து அவர் தங்கச்சியை கட்டிக்குடுத்துருப்பாங்கல்ல?” என கோகுல் கேட்க, “ம்ம்ம்?” என யோசித்த ஆதி, “மே பீ” என்றான்.
“சோ, இப்ப நம்ம என்ன செய்ய போறோம்ன்னா!? நேரே ராஜகோபால் சார் தங்கச்சியை மீட் பண்ணி, உன் லவ்வையும், பெரியவங்க பிரச்சனையையும் எடுத்து சொல்லி, அவங்களை வச்சே அவங்க அண்ணனை சமாதானம் செய்யப்போறோம்” என்றான் கோகுல்.
அதை கேட்டு சிந்தித்த ஆதி, “அவங்க சொன்னா கன்வின்ஸ் ஆவாரா?” என்று கேட்க, “கண்டிப்பா மச்சான்! நம்ம தங்கச்சி இப்போ இருக்க வாழ்க்கைல சந்தோசமா இருக்கும்போது, நம்ம எதுக்கு ஜெயதேவ் மேல கோவப்படனும்ன்னு புரிஞ்சுப்பாரு!” என்றான் கோகுல் உறுதியாய்.
ஆதி, “ஓஓஓ” என இழுத்தான்.
“சரி ஒகே டா! உடனே தன்யா மேடம்க்கு கால் பண்ணி அவங்க அத்தை அட்ரஸ வாங்கு… குவிக் குவிக்” என பறந்தான் கோகுல்.
ஆதி, “தன்யாவுக்கு அத்தையா?” என கேட்க, “அதான்டா! ராஜகோபால் சார் தங்கச்சி தன்யா மேடம்க்கு அத்தை தானே!!!” என கோகுல் விளக்க, அதற்க்கும், “ஓஹோ…” என இழுத்தான் ஆதி.
“என்னடா ராகம் போட்டுக்கிட்டு இருக்க? சீக்கிரமா அட்ரஸ் கேளு, நம்ம நேருல போய் மீட் பண்ணி பேசுவோம் அவங்கக்கிட்ட” என கோகுல் சொல்ல,
“போகலாம் தான்….” என இழுத்த ஆதி, “ஆனா, அதுக்கு அந்த ‘அத்தை’ இருக்கணுமே!” என்றான் யோசனையாய்.
அவன் சொன்னதை கேட்ட கோகுல் அதிர்ச்சியாகி, “என்னடா சொல்ற? அந்த ‘அத்தை’ போய் சேர்ந்துட்டாங்களா? எப்போடா செத்தாங்க?” என கேட்க,
“உயிரோட இருந்தா தானே டா சாக முடியும் லூசு” என அவன் தலையில் தட்டினான் ஆதி.
கோகுலுக்கு தலையும் புரியவில்லை, வாலும் விளங்கவில்லை.
கோகுல் புரியாமல், “என்ன சொல்ற நீ?” என்றான்.
ஆதி தெளிவாக, “தன்யாவுக்கு அத்தைன்னு யாருமே இல்லடா, அதாவது ராஜகோபால் சார்க்கு அக்கா தங்கச்சின்னு ஒருத்தரும் இல்லை” என்றான்.
அவன் தெளிவாக சொன்ன பின்னே தான் கோகுலின் குழப்பம் இன்னும் அதிகமானது.
“அப்பறம் எப்படிடா அவர் தங்கச்சியை கட்டிக்க சொல்லி உங்க அப்பாக்கிட்ட அவர் சொல்ல முடியும்?”
ஆதியோ, “ஹையோ ஹையோ! அவருக்கு தங்கச்சி இருக்குன்னு கதைல நான் எங்கயாது சொன்னேனா?” என்று கோகுலை கேட்டவன், “ஒருவேளை தங்கச்சி இருந்தா… நோட் திஸ் பாயின்ட்… ‘ஒருவேளை தங்கச்சி இருந்தா, அவளை உனக்கே குடுத்து, எங்க வீட்டு மாப்பிள்ளை ஆக்கிக்கணும்’ன்னு தான் சொன்னாரு” என சொல்ல,
“ஏய் ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்” என கத்திய கோகுல், “அப்போ ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டது, ‘இல்லாத தங்கச்சிக்காக’வா?” என்றான் திகைப்பிலும் மீறிய பாவத்தில்.
ஆதி, “யெஸ்…” என தோள் குலுக்க, “இல்லவே இல்லாத தங்கச்சியை கட்டிக்க சொல்லிதான் ராஜகோபால் சார் சண்டை போட்டாரா?” என்றான் கோகுல் நம்பவே முடியாமல்.
“தங்கச்சி இருக்கோ இல்லையோ! எப்படி அவர் சொன்னப்போ எனக்கு வேற பொண்ணை பிடிச்சுருக்குன்னு எங்கப்பா சொல்லலாம்ன்னு தான் ராஜகோபால் சார்க்கு எங்கப்பா மேல கோவமே! ஒரு வேளை உண்மையிலேயே தங்கச்சி இருந்துருந்தாலும், எங்கப்பா கட்டிக்க மாட்டேன்னு தானே சொல்லிருப்பாரு… அதேமாறிதான், தான் ஒரு பொண்ணை விரும்புறதா சொல்லியும், நண்பன் அதை புரிஞ்சுக்காம அவங்க வீட்டு மாப்பிள்ளை ஆகணும்ன்னு சொல்றானேன்னு எங்கப்பாக்கு அவர் மேல கோவம்” என்றிட, வாயடைத்து போனான் கோகுல்.
கோகுல் இமைக்கக்கூட மறந்து அப்படியே இருக்க, “என்ன மச்சான்! எதுவுமே சொல்ல மாட்டேங்குற? ரெண்டு பேரையும் எப்படிடா சேர்த்து வைக்கிறது?” என்றான் ஆதி.
“உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இல்லையாடா?”
“ஏன்டா….” பாவமாய் கேட்டான் ஆதி.
[the_ad id=”6605″]
“எப்படிடா இப்படி ஒரு மானகெட்ட பிளாஷ்பேக்கை தெரிஞ்சுகிட்ட பிறகும் ரெண்டு பேரையும் சேர்த்து வேற வைக்கணும்ன்னு சிரிக்காம சொல்ற?” என்று கோகுல் ஆச்சர்யப்பட,
“ப்ச்! கதையை கேட்டப்போ எனக்கே காரித்துப்பனும் போல தான் இருந்துச்சு! ஆனா தன்யாவோட முகம் நியாபகம் வந்ததும், எல்லாமே பின்னுக்கு போய்டுச்சு மச்சான்” என்றான் அவள் நினைவில் நெளிந்துக்கொண்டு.
கோகுல் ‘நங்’கென தன் தலையிலேயே அடித்துக்கொண்டான் ஆத்திரத்தில்.
“ஹே! ரெண்டு பேரையும் எப்படி சமாதானப்படுத்துறதுன்னு ஏதாவது ஐடியா சொல்லுடா” என ஆதி கெஞ்ச,
“ரெண்டு மசால் வடை வாங்கிக்குடு! சேர்ந்துடுவாங்க!” என்றான் கடுப்பாய் கோகுல்.
“என்னடா இப்படி சொல்ற!”
கோகுல், “ஹும்ம்! இந்த பிளாஷ்பேக்குக்கு மசால் வடையே அதிகம்… போடாங்….” என டென்ஷனாக, அடுத்த ஐந்தாவது நிமிடம், “ஐ காட் இட்… யெஸ்… யெஸ்… ஐ காட் இட்” என ஐடியா கிடைத்த குஷியில் எழுந்து ஆட ஆரம்பித்தான் ஆதி.
அதைப்பார்த்த கோகுலோ, “ஹும்ம்… மொத்தம் இந்த கதைல எத்தனை பைத்தியம் இருக்குன்னே தெரியல!” என சலித்துக்கொண்டு, “நல்லா இருக்க கோகுலையும், பிரண்ட்ஸ் பட கோவாலா’ மாத்துற வரை இவனுங்க அடங்க மாட்டானுங்க போலயே ஆண்டவா! ஏன்டா இவனுங்க மத்தியில என்னை சிக்க விட்டு வேடிக்கை பார்க்குற?” என தன் போக்கில் தன்னை நினைத்தே புலம்பிக்கொண்டிருக்க,
“இது வெறும் ஆரம்பம் தான்டி… இன்னும் நீ அனுபவிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!!!!” என கிளுக்கி சிரித்தார் காலெண்டரில் இருந்த குறும்புக்கார குமரன்.
-கலாட்டா தொடரும்…