கோகுல் அரக்கப்பறக்க தனது அப்பார்ட்மென்ட் தளத்தின் படிகளை மூன்று மூன்றாக மூச்சு வாங்க தாவிக்கொண்டிருந்தான்.
‘நான் அவசரமா வரும்போது தான், லிப்ட் சதி பண்ணும்’ புலம்பிக்கொண்டே அவன் தளத்தை அடைந்து, வீட்டின் கதவை திறக்க,
‘வாழ்க்கை நாடகமா?
என் பொறப்பு பொய்க்கணக்கா?
தினந்தோறும் வெறும் கனவா?
என் விதியை எழுதையிலே அந்த சாமியும் உறங்கியதே!’
மொபைலில் பாட்டு ஓட, தன் கையை தலைக்கு கொடுத்து, ஒருக்களித்து, விட்டத்தை பார்த்து ‘விதியே’ என படுத்திருந்தான் ஆதித்யதேவ்.
வந்த வேகத்தில் கோகுல், பாட்டை நிறுத்திவிட்டு, “டேய்…! எந்திரிடா” என்றான் அவன் தோள்த்தட்டி!
சோகமே உருவாய் உருண்டு எழுந்து அமர்ந்த ஆதி, தலையை தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்திருக்க, அவன் அருகே சம்மணமிட்டு அமர்ந்துக்கொண்ட கோகுல், “போன் பண்ணி ரெண்டு அப்பாக்கும் பலவருஷ சண்டைன்னு சொன்னியே, அதுக்கு பிறகு ஏதாவது தெளிவா பேசுனியா நீ?” என்று அதட்டினான்.
ஆதி, “……”
கோகுல், “டேய் ஆபிஸ்ல இருக்கவே முடிலடா என்னால, என்ன பிரச்சனையா இருக்குமோன்னு உன் கதையே மண்டை முழுக்க ஓடுது! இதுல உன் ஆளு வேற, ‘ஆதி எங்க? ஆதி எங்க?’ன்னு என்னை போட்டு பாடா படுத்திட்டாங்க!!! எப்போடா வீட்டுக்கு வருவோம்ன்னு அடிச்சு பிடிச்சு ஓடி வரேன்” என்று புலம்பினான்.
ஆதி, “…….”
கோகுல், “இப்போ நீ என்ன நடந்துச்சுன்னு சொல்றியா இல்லையா?”
ஆதி, “ப்ச்… போடா” என்று சலிக்க, “என்னடா சலிச்சுக்குற? கோர்ட்ல என்ன ஆச்சு? உன் அப்பா உன்னை பார்த்தாரா இல்லையா?” என்றான் கோகுல்.
“அந்த ஆளு கண்ணுல நான் சிக்காம, ஓரமா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்… என் மாமனார் மட்டும் உள்ளே போனாரு…” என ஆதி சொல்ல, “பரவால்ல தப்பிச்ச! என்ன கேஸு டா நடக்குது ரெண்டு பேருக்கும் நடுல?” என வினவினான் கோகுல்.
பெரிதாய் சலித்துக்கொண்டு பெருமூச்சு விட்ட ஆதி, “அது ஒரு வாய்க்கா தகராறு மச்சான்” என்றான் அலுப்பாய்.
“ஐ…யோஓஓ!!! எல்லாத்துலையும் விளையாட்டுத்தனம் தானா டா உனக்கு? நான் எவ்ளோ சீரியஸா கேட்டுக்கிட்டு இருக்கேன்?” கோகுல் ஆதங்கமாய் அவனை அதட்ட,
“நானும் சீரியஸா தான்டா சொல்றேன்… ரெண்டு பேருக்கும் நடுவுல நிஜமாவே வாய்க்கா தகராறு தான் பல வருஷமா ஓடிக்கிட்டு இருக்கு” என்றான் ஆதி.
கோகுல், “என்னடா சொல்ற?”
“என்னத்த சொல்ல? ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ரொம்ப நெருங்கின பிரண்ட்ஸாம்… எந்த அளவுக்கு க்ளோஸ்ன்னா ஒரே தட்டுல….” என்று ஆதி தொடங்க,
“ஒரே தட்டுல சாப்பிட்டு ஒரே பாயில தூங்கி, ஒரே டவுசரை போட்டுன்னு பழைய டெம்ப்ளேட்டை பாடாத! நேரா விசயத்துக்கு வா” என்றான் உசாராய்.
“நீ குறுக்க குறுக்க வராத! ஒரு ப்லொவ்ல சொன்னா தான் எனக்கு கதை வரும்” என முரண்டு பிடித்தான் ஆதி.
“இந்த கதையே வேண்டாம் ராசா! அப்பறம் இந்த பிளாஷ்பேக்கை நாலு நாள் ஆனாலும் முடிக்காம இழுத்துட்டு இருப்ப! மரியாதையா என்ன விஷயமோ அதை மட்டும் சொல்லு” என்றான் கோகுல் கறாராக.
‘பயபுள்ள உஷாராகிட்டானே’ என மனம் சுணங்கினாலும், அவன் அறிய முற்பட்ட விசயத்தை சொல்ல தொடங்கினான் ஆதி.
[the_ad id=”6605″]
“ரெண்டு பேரும் சேர்ந்து, நாலு ஏக்கர் நிலத்தை அவங்க ஊரிலேயே வாங்கி, ஆளுக்கு ரெண்டு ஏக்கரை அவங்க அவங்க பேருல ரெஜிஸ்டர் பண்ணிருக்காங்க! ரெண்டு நிலத்துக்கும் பொதுவா ஒரு வாய்க்கால் வெட்டி விவசாயமும் பார்த்துட்டு இருந்துருக்காங்க! எல்லாம் நல்லா தான் போச்சு, ரெண்டு பேருக்கும் சண்டை வர வரைக்கும்” என ஆதி நிறுத்த,
“இப்ப சண்டை வந்ததால என்ன ஆச்சு?” என்றான் கோகுல்.
“என்ன ஆச்சா? ஒருத்தருக்கொருத்தர் சண்டை முத்திப்போய் பிரிஞ்சதுக்கு பிறகு, அந்த ‘வாய்க்கால்’ யாருக்கு சொந்தம்ன்னு அடிச்சுக்க ஆரம்பிச்சுருக்காங்க! ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருந்த கோவத்துல விட்டுக்குடுக்காம பேச, ஊர் பஞ்சாயத்துல பிரச்சனை தீர்க்க முடியாம, கோர்டுக்கு போயிருக்கு! அப்போ இருந்து ‘வாய்க்கால் பிரச்சனை’க்கு ‘வாய்தா, வாய்தா’ன்னு வாங்கி இத்தனை வருஷம் ஆகிருக்கு! இதுக்கு நடுல ரெண்டு முறை கேஸை டிஸ்கவுன்ட் வேற பண்ணிருக்காங்க!”
கோகுல், “எது? டிஸ்கவுண்டா?”
ஆதி, “அதான்டா! தள்ளுபடி பண்ணிட்டதா சொல்லுவாங்கல்ல! அததான் இங்க்லீஷ்ல சொன்னேன்” என பல்லைக்காட்டினான்.
“ஹும்… ரொம்ப முக்கியம்” என நெற்றியில் தட்டிக்கொண்ட கோகுல், “ஏன்டா, அதான் ஆளாளுக்கு கோடி கணக்குல சொத்து சேர்த்துட்டாங்கல்ல? இன்னமும் அந்த பத்தடி வாய்க்காலுக்கு மல்லுக்கு நிக்கனுமா?” என்றான்.
“அது பத்தடியா நூறடியாங்குறது முக்கியம் இல்லை இங்க! இதுல தான் அவங்களோட தன்மானம், கெளரவம், மரியாதை எல்…….லாம் அடங்கி இருக்காம்” என ஆதி சொல்ல,
“எது? இந்த வாய்க்காலுக்குள்ளையா?” என முறைத்தான் கோகுல்.
“உள்ளயோ, வெளியையோ!? ஒருத்தர் இன்னொருத்தருக்கு விட்டுக்குடுக்க கூடாதுங்குறதுல மட்டும் உறுதியா இருக்காங்க” என்றான் ஆதி.
“இப்ப இந்த கேஸை முடிக்க என்ன தான் வழி?” என்ற கோகுலுக்கு, “ஒரே வழி, ரெண்டு பேரையும் ‘பழம்’ விட வைக்குறது தான்” என்றான் ஆதி.
[the_ad id=”6605″]
“அதுக்கு முதல்ல அவங்க எதுக்கு ‘டூ’ விட்டுக்கிட்டாங்கன்னு தெரியனும்ல?”
ஆதி, “அதான் எனக்கு தெரியுமே!”
“உனக்கு எப்படிடா தெரியும்?” என ஆச்சர்யப்பட்டான் கோகுல்.
“இவ்ளோ நேரம் நான் சொன்ன கதையை எனக்கு யாரு சொன்னாங்களோ, அவங்களே தான் இதையும் சொன்னாங்க!” என ஆதி தோள் குலுக்க, “என்னை கேள்வி கேட்க வைக்காம நீயே முழு கதையும் சொல்லேன்டா… முடியல!” என அலுத்துப்போனான் கோகுல்.
“சொல்றேன் சொல்றேன்” என்ற ஆதி, “கோர்ட்ல நடந்ததை எல்லாம் முழுசா தெரிஞ்சுக்கிட்ட அடுத்த நிமிஷமே என் அம்மாவுக்கு தான் கால் பண்ணேன்! சுருக்கமா என்னோட லவ்வையும், அதுக்கு அவங்க புருஷன் வச்சுருக்க ஆப்பையும் நான் சொன்னதும், அம்மாவே கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டாங்க” என்று சோகமானான்.
பின்னே, “இத்தனை வருஷமா முட்டிக்கிட்டு இருக்கவங்களை உங்க கல்யாணத்து மூலமா சேர்த்து வச்சுடலாம்ன்னு எனக்கு தைரியம் சொன்னாங்கடா! நானும் கொஞ்சம் கான்பிடன்ட்டோட, அதுக்கான வேலையை ஆரம்பிப்போம்ன்னு முடிவு செஞ்சு, ரெண்டு பேருக்கும் எதனால சண்டைன்னு கேட்டேன்… அதுக்கு எங்க அம்மா சொன்ன கதையை கேட்டு மெர்சலாகி வண்டியை எடுத்துட்டு கிளம்பி வீட்டுக்கு வந்தவன் தான் நான், இன்னும் எனக்கு அந்த ஷாக் குறையல!” என பில்டப் குடுத்தான் ஆதி.
ஆதியை சந்தேகமாய் பார்த்த கோகுல், “நீ ஷாக் ஆகுற அளவுக்கு அப்படி என்ன சண்டையாம் ரெண்டு பேருக்கும்?” என்றான் கோகுல்.
ஆதி, “அதை ஏன்டா கேட்குற? இதுவரைக்கும் நான் எத்தனையோ விதமான சண்டையை பார்த்துருக்கேன்!!! ஆனா, இப்படி ஒரு சண்டையை…….” என நிறுத்தி, “ம்ம்ஹும்!!!” என தலையசைத்தான், ‘பார்த்ததில்லை’ என்பது போல்!
“அப்படி என்னடா சண்ட?” கோகுலுக்கு தெரிந்துக்கொள்ளும் ஆவல் அதிகமானது.
கொசுவர்த்தி சுருள் மேலே வட்டமடித்தது…!!!
நெல்லும் கோதுமையும் எங்களை ‘அள்ளிக்கொள்’ என காற்றிடம் போட்டிப்போட்டு போக்குக்காட்டி ஆடிக்கொண்டிருந்தது. இரண்டு நிலத்துக்கும் மத்தியில் இருக்கும் வாய்க்காலில் நீர் சன்னமாய் பாய்ந்துக்கொண்டிருக்க, மாலை நேர சிலுசிலுப்பை உள்வாங்கிக்கொண்டு உள்ளம் மகிழ்ச்சியில் நிர்மலமாய் இருக்க, வாய்க்கால் மேட்டில் அமர்ந்திருந்தார் இளவயது இராஜகோபால்.
[the_ad id=”6605″]
சுட சுட டீக்கடையில் போட்ட பருப்பு வடையை ஒரு மாதம் பழைய செய்தித்தாளில் கடைக்காரன் வைத்துக்கொடுக்க, அதை எடுத்துக்கொண்டு வயலை நோக்கி நண்பனை காண வந்துக்கொண்டிருந்தார் அப்போதைய ஜெயதேவன்.
ராஜகோபாலை நெருங்கி அவர் அருகே அமர்ந்த ஜெயதேவ், “முக்கு கடைல இன்னைக்கு மசால் வடை போட்டாங்க ராஜா, உனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிட்டு ஓடி வந்தேன்” என்றார் மெலிதாய் மூச்சுவாங்க.
நண்பனை ஆதூரமாய் பார்த்த ராஜகோபால், “எனக்காக ஏன் ஜெயா மூச்சு வாங்க ஓடி வந்த? உனக்கு எப்படி வியர்த்திருக்கு பாரு?” என்றார் தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து ஜெயதேவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் வியர்த்திருந்த துடைத்துவிட்டபடி.
“என்ன ராஜா இப்படி கேட்டுட்ட? என் நண்பனுக்காக இது கூட செய்ய மாட்டேனா?” என்றார் ஜெயதேவன்.
“நான் அப்டி என்னடா உனக்கு செஞ்சுட்டேன்?” ராஜகோபால் எப்போதும் போல ஆச்சர்ய பிரியத்துடன் வினவ, “நீ என் கூட இருக்குறதை விட வேற என்னடா பெருசா செய்யணும் எனக்கு?” என வழமையாய் சொல்லும் பதிலையே ஜெயதேவனும் சொல்ல, நண்பனின் தோளை கெட்டியாய் அணைத்துக்கொண்டார் ராஜகோபால்.
“டேய் டேய் டேய்… ஒரு நிமிஷன் ‘வெய்ட்டீஸ்’டா மச்சான்” என அவசரமாய் உள்ளே புகுந்தான் கோகுல்.
கதையை கோர்வையாய் சொல்லிக்கொண்டிருந்த ஆதிக்கு, ப்லோவ் கெட்டதில் சிறு கடுப்பாகி, “என்னடா?” என முறைக்க, “உங்க டேடீஸ் பிரண்ட்ஷிப் பார்த்து எனக்கு கண்ணு வேர்க்குது மச்சி… இரு ஒரு பொசிஷன்ல நின்னுக்குறேன்” என வடிவேல் பாணியில் கண்ணைத்துடைத்துக்கொண்டு ஓரிடத்தில் வாகாய் அமர்ந்துக்கொண்ட கோகுல், “கன்டின்யூ” என கதை தொடர அனுமதிக்கொடுத்தான்.