அவள் பார்வை அங்கு உட்கார்ந்திருந்த நீலநிற சட்டை அணிந்திருந்த ஒருவன் மீது இருந்ததை பார்த்ததும் ஓரளவு அவள் யாரைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறாள் என்று கணித்தாள்.
“மது, மதுமிதா” என்று உரக்க அழைத்தாள்.
மதுமிதா “என்ன என்ன?” என்று கீதா பக்கம் திரும்பினாள்.
“இங்க பாரு ஐஸ்கிரீம் உருகி போயிட்டு இருக்கு. நீ அந்த ப்ளூ சட்டையை பார்த்துகிட்டு இருக்க. என்ன திரும்பவும் ஆரம்பிச்சிட்டியா?” என்று கேட்டாள் சிறு சலிப்புடன்.
“ஆமாண்டி. நானும் நினைக்க கூடாதுனு தான் நினைக்கிறேன். ஆனால் முடிய மாட்டேங்குது. எங்க போனாலும் அவன் ஞாபகம் தான் வருது. அன்னிக்கி வடபழனி கோயிலுக்கு முன்னாடி கூட ஒருத்தன் கிட்டத்தட்ட அவன மாதிரியே இருந்தான்.”
“என்ன சொல்ற மது? நீதான் அவனை பார்க்கவே இல்லையே. அப்புறம் எப்படி அவனை மாதிரினு சொல்ற?” என்று புரியாமல் கேட்டாள்.
“கீதா அவன் முகத்தை நான் பார்க்கல. ஆனா அவன் போட்டிருந்த சட்டை, ஹேர் ஸ்டைல், உயரம், அகலம் எல்லாம் எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு. வடபழனி கோயில் பார்க்கிங்கில் பார்த்தவன் அப்படியே திருவிழாவில் ப்ளூ ஷர்ட் போட்டு இருந்தான் இல்லை அவனை மாதிரியே இருந்தான்.
முகம் மட்டும் நான் அப்பவும் பாக்கல. இப்பவும் பார்க்கல. உயரம், அகலம், எல்லாமே அப்படியே இருந்தது.”
“என்னடி உளர்ற? மது ஒழுங்கா எக்சர்சைஸ் பண்ற எல்லோரும் அப்படித்தான் இருப்பாங்க. அப்புறம் அந்த ப்ளூ ஷர்ட், சுரேஷ் கூட ஒன்னு அதேமாதிரி வச்சிருக்கான். அதுக்காக சுரேஷ் அவன் ஆகிவிடுவானா?
அப்புறம் அதே ஹேர் ஸ்டைல் தான்என் தம்பி வச்சிருக்கான். அதுக்காக என் தம்பி அவன் ஆகிட முடியுமா? இதையெல்லாம் வச்சு இவன்தான் அவன் என சொல்ல முடியாது. நீ அவனைப் பற்றியே நினைச்சிக்கிட்டு இருக்கிறதால உனக்கு பார்க்கிறவர்கள் எல்லோரும் அவனை மாதிரியே தெரியுது.
நீ முதலில் யாரை பார்த்தாலும் அவன் கூட கம்பேர் பண்றதை நிறுத்து.
அப்பதான் உனக்கு கண்ணில் படுகிற எல்லாரும் அவனை மாதிரி தெரிய மாட்டாங்க.
நாளைக்கு உன்னை யாராவது பெண் பார்க்க வந்தால் அந்த மாப்பிள்ளையை கூட சந்தேக படுவாய் போல இருக்கே.” என்றாள் கீதா.
“ஒருவேளை அப்படி எனக்கு சந்தேகம் வந்தால் உன்னிடம் தான் கூட்டிட்டு வருவேன். நீ தான் அவனைப் பார்த்திருக்கிறாய் இல்லையா? நீயே எனக்கு பாக்குற மாப்பிள்ளையையும் பார்த்து அவன் இல்லைனு சொல்லு அப்ப தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். சரியா?” என்று கேட்டாள் மதுமிதா.
“சரிடி. நான் பார்த்து சொல்றேன். அப்போ உன்னோட கல்யாணம் என் கையிலதான்னு சொல்லு.” என்றாள் கீதா சிரித்தபடி.
“ஆமாம் கீதா. உண்மை தான் என்னோட கல்யாணம் உன்னோட கையில் மட்டும் இல்லை கண், சொல் எல்லாத்துலேயும் இருக்கு.”
அன்று இரவு தங்களது அறை படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தார் சிதம்பரம்.
“வள்ளி, நம்ம பொண்ணு மதுமிதாவுக்கும் அண்ணாமலையின் ரெண்டாவது பையன் மாதவனுக்கும் கல்யாணம் பண்ணனும்னு எனக்கு ஆசையா இருக்கு. நீ என்ன சொல்ற?” என்று மனைவியின் முகத்தைப் பார்த்து கேட்டார் சிதம்பரம்.
ஏற்கனவே ஓரளவிற்கு இதனை எதிர்பார்த்திருந்த வள்ளி
“எனக்கு அப்பவே உங்க மனசு புரிஞ்சுபோச்சு. எனக்கும் அதில் இஷ்டம்தான். அண்ணாமலையை பற்றி எனக்கு நல்லாவே தெரியும். அவர் குடும்பம் நல்ல குடும்பம் தான். இந்த கல்யாணத்துக்கு நாம குடும்பத்தோடு போய் கலந்துக்கிட்டு அவங்க குடும்பத்தை வீட்டை, தொழிலை எல்லாத்தையும் பார்ப்போம். நமக்கு திருப்தியா இருந்தா யார் மூலமாவது பேசிப் பார்க்கலாம்.” என்றார் வள்ளி.
“ஆமாம் இந்த இடம் அமைந்தால் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும். நான் நினைச்ச மாதிரி என் பொண்ணுக்கு நிறைய உறவுகள் கிடைப்பாங்க. நம்ம ஊரு பக்கம் ஆகவும் இருக்கும். அநேகமா இந்த கல்யாணத்துக்கு எங்க அப்பா அம்மா கூட வருவாங்கன்னு நினைக்கிறேன். நம்ம கல்யாணத்துல பிரிஞ்சு போன நம்ம சொந்தம் எல்லாமே இந்த கல்யாணத்தில் சேர்ந்திடும்னு தோணுது.” என்றார் சிதம்பரம்.
“ஆனால் எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான். அவ்வளவு தூரம் பெண்ணை கொடுக்கணுமா? அவளை பார்க்காமல் நான் எப்படி இருப்பது?” என்று சோகம் காட்டி கேட்டார் வள்ளி.
“அந்த கவலை எனக்கும் இருக்கு தான். ஆனால் எனக்கு இன்னொரு பிளான் இருக்கு. இந்த கல்யாணம் நடந்தா எங்க அப்பா அம்மாவோட உறவு கூட நமக்கு கிடைக்கும். அதுக்கப்புறம் நாம குடும்பத்தோடு தஞ்சாவூர் பக்கம் போய் செட்டில் ஆயிடலாம். ஆனால் அதுக்கு எங்க அப்பா அம்மா கோபம் மறந்து என்னை ஏத்துக்கணும். இவ்வளவு நாளா ஏற்றுக்கொள்ளாமல் இறந்துட்டாங்க. இனிமேலும் அப்படியே இருக்க விடாமல் நாம அவங்களை போய் பார்த்து நம்ம உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும். அவங்களுக்கும் வயசு ஆகுது இல்லையா? மனமிரங்கி நம்மளை ஏத்துக்குவாங்கன்னு தோணுது. நீ என்ன சொல்ற வள்ளி?”
“நீங்க சொல்ற மாதிரி நடந்தா நல்லா தான் இருக்கும்.” என்றார் வள்ளி.
“நாமளும் அங்கேயே போயிட்டா நாம மதுமிதாவை அடிக்கடி பார்த்துக்கலாம். அண்ணாமலையின் சம்பந்தி ஆயிட்டா நம்மள யாரும் ஒதுக்க முடியாது. நீங்க சொல்றது கரெக்டு தான். முருகன் தான் நமக்கு நல்ல வழி காட்டணும். மாதவனுக்கு மதுமிதாவை பிடிக்கணும் மதுமிதாவுக்கு மாதவனை பிடிக்கணும்.”
“ஆமாம் வள்ளி அண்ணாமலை ரொம்ப நல்லவன் அவனுக்கு கண்டிப்பா மதுமிதாவை பிடிக்கும். அவங்க வீட்டில இருக்க மற்ற எல்லோருக்கும் அவளை பிடிக்கனும். பார்ப்போம் முருகன் நமக்கு நல்லதே செய்வான்னு நம்புவோம். எனக்கு என்னமோ அந்த மாதவனை பார்த்ததும் பிடிச்சுப் போச்சு. அதுவும் வடபழனி முருகன் கோவிலில் வைத்து அவனை பார்த்ததில் எனக்கு ரொம்ப திருப்தி. ஏதோ முருகனே அவனை எனக்கு மதுமிதாவுக்காக காட்டினது போல இருந்தது.”