அன்று விடிந்ததில் இருந்து, வித்யாவிற்கு மனசே சரியில்லாமல் இருந்தது. தேவையில்லாத மனக்குழப்பம் அவருக்கு. ஏதோ விரும்பத்தகாத ஒன்று நடக்கப் போகிறது என்பதைப் போன்ற பிரம்மை அவருக்கு.
“என்ன வித்யா யோசனை..? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றார் சுரேஷ் கவலையுடன்.
“என்னன்னு தெரியலைங்க..! ஆனா மனசு ஒருநிலையில் இல்லை. என்னமோ செய்து. யாருக்கோ ஏதோ பிரச்சனை வரப்போற மாதிரி..!” என்றார் வித்யா.
“இங்க யாருக்கு என்ன பிரச்சனை வரப் போகுது. தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பிக்காம, மனசைத் தெளிவா வை. முகமும் ஆட்டோமேட்டிக்கா தெளிவாயிடும்..!” என்றார் சுரேஷ்.
“இல்லைங்க…! எனக்கு என்னமோ, ஏதோ சரியா படலை.கோவிலுக்குப் போயிட்டு வரலாமாங்க..!” என்றார்.
“நோ வே..! இன்னைக்கு முக்கியமான வேலை நிறைய இருக்கு. துளசியும் இன்னைக்கு ஆபீஸ் வரலை. சோ என்னால கண்டிப்பா முடியாது..!” என்றார்.
“நீங்க என்கூட கோவிலுக்கு வந்துட்டு ஆபீஸ் போங்க..!பிளீஸ்..!” என்றார் வித்யா.
கொஞ்சம் யோசித்தவர், வித்யாவின் முகம் வாடுவதைக் கண்டு பொறுக்க முடியாமல், “சரி..! ஆனா சீக்கிரம் கிளம்பனும்..!” என்றார்.
“சரிங்க..!” என்ற வித்யா,
“துளசி ஏன் இன்னைக்கு ஆபீஸ் வரலைன்னு சொன்னா..?” என்றார் யோசனையுடன். அவருக்கு முதல் நாள் பிரவீண் சொன்னதும், விஜய் சொன்னதும் நியாபகத்திற்கு வந்தது.
“துளசியும்,ரோஸ்லினும் இன்னைக்கு வெளிய போறாங்களாம்..! நேத்தே சொல்லிட்டா என் பொண்ணு..!” என்றார் சுரேஷ்.
“ஆனா, என்கிட்டே எதுவுமே சொல்லலையே..?” என்றவருக்கு கண்கள் கூட கொஞ்சம் கலங்கி இருந்தது.
துளசிக்கு எல்லா விஷயத்திலும் அப்பா தான் வேண்டும். சுரேஷுடன் இருந்த ஒட்டுதல் வித்யாவிடம் ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு இருந்ததில்லை.பெண் பிள்ளைகள் தந்தையைத் தான் அதிகம் விரும்புவார்கள் என்பதையும் தாண்டி, அவள் தந்தையை மட்டுமே சார்ந்திருந்தாள்.
வித்யா, இதை ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் துளசி வளர வளர, அவளின் ஒதுக்கத்தைக் கண்டு கொண்டார் வித்யா. அவளும் வேண்டும் என்று செய்யவில்லை. சொல்லப் போனால் வித்யா கவனித்த இந்த அளவிற்கு கூட துளசி யோசித்தது கூட இல்லை. அவளைப் பொறுத்தவரை அவளின் அப்பா அவளுக்கு என்ற எண்ணம் மட்டுமே. அதற்காக அம்மா பிடிக்காது என்று சொல்வதற்கு இல்லை.
“எல்லாத்துக்கும் உனக்கு அப்பா தான் வேணுமா…? நான் வேண்டாமா..?” என்று வித்யா விளையாட்டைப் போல் கேட்டு வைக்க,
“இத்தனை வயசாகியும் இன்னும் நீங்க உங்கப்பா சொல்றதைத்தான் கேட்குறிங்க. நானும் எங்கப்பா சொல்றதைக் கேட்குறதுல என்ன தப்பிருக்கு. உங்களுக்கு உங்கப்பா பெருசுன்னா.., எனக்கு எங்கப்பா…!” என்று பட்டென்று சொல்லிவிட்டாள்.
வித்யா அதற்கும் கண் கலங்க…உடனே அவரை அணைத்துக் கொண்டவள்,
“ஐயோ அம்மா..! நான் அப்பா செல்லம் தான். அதுக்காக உங்களைப் பிடிக்காதுன்னு சொன்னேனா. பிரவீண் கூடத்தான் அம்மா செல்லம். அப்பா அவன் கூட சண்டைக்கு வந்தாரா..? டேக் இட் ஈசி மாம்..!” என்றாள்.
அதை இப்போது நினைத்த வித்யாவிற்கு கொஞ்சம் சிரிப்பு வந்தாலும், ஏனோ கொஞ்சம் ஏக்கமாகவும் இருக்கும்.
“நான் உன்னைக் கிளம்ப சொன்னேன் வித்யா. நீ கண்ணைத் திறந்து வச்சுகிட்டே கனவு கண்டுகிட்டு இருக்க…! அப்பறம் டைம் ஆச்சுன்னா என்னை சொல்லக் கூடாது.!” என்று சொல்ல,
“இதோ போறேங்க..!” என்றபடி சென்றார் வித்யா.
வித்யா சென்றவுடன், வித்யாவைப் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷின் மனதில் பல கவலையான எண்ணங்கள். அடிப்படையில் சுரேஷ் மாதிரியான ஒரு மனிதனைப் பார்ப்பது கடினம். அவ்வளவு வசதி இருந்தும் மனைவிக்காக அவள் வீட்டில் ஒரு கணவன் தங்குவது என்பது அரிதான காரியம். அதையும் வித்யாவிற்காக செய்தார் சுரேஷ்.
ஆனால் கொஞ்ச காலமாக துளசியின் நச்சரிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது அவருக்கு. அந்த வீட்டில் இருந்து சென்றே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள் துளசி.
பிரவீண் சொன்னது சரியே என்பதைப் போல, சரியாக சுரேஷிடம் பேசியிருந்தாள் துளசி. இதை அறியாத வித்யா, மகள் மறந்து விட்டாள் என்று நினைத்திருந்தார்.
காலையில் எழுந்து குளித்து, சுறுசுறுப்பாக வந்த பவித்ரா கோலம் போட்டுக் கொண்டிருக்க, அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அருகில் உட்கார்ந்திருந்தான் அருண்.
“என்ன பவி..? மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா..? பத்து நாள்… முழுசா பத்து நாள் உன்னோட கோலத்துல இருந்து இந்த வாசலுக்கு விடுதலை கிடைச்சு இருந்தது. மறுபடியும் வந்து கோலம் என்ற பேர்ல கொலை பண்ணிட்டு இருக்க..!” என்றான் அருண்.
இடுப்பில் கையை வைத்தபடி அவனை முறைத்த பவித்ரா…
“டேய் அண்ணா..! வேண்டாம். நான் இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கேன். வீணா என்கிட்டே வம்பு வளர்க்காத..!” என்றாள் முறைத்தபடி.
“ஆமா..! எனக்கு ஆசை பாரு. நீ போட்ட கோலத்தை, கோலம்ன்னு நீயே சொன்னாத்தான் சுத்தி இருக்கவங்க கூட நம்புவாங்க…! அன்னைக்கு வீட்டுக்கு வந்த என் பிரண்ட் கூட கேட்டான்ல. நீயும் இருந்த தானே. அவன் இந்த மாடன் ஆர்ட்லாம் யாரு வாசல்ல வரஞ்சதுன்னு கேட்டான்..!” என்றான் சிரிக்காமல்.
“மாடர்ன் ஆர்ட் அளவுக்கு என் கோலம் நல்லா இருந்திருக்கும்..!” என்றாள் கெத்தை விட்டுக் கொடுக்காமல்.
“மாடர்ன் ஆர்ட் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் புரியாது தங்கம்..!” என்று அவன் சொல்ல,
“இப்ப ஒழுங்கா போய்டு. இல்ல மூஞ்சி முழுக்க கோல மாவை அப்பி விட்ருவேன்..!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்தா நீலா.
“காலங்காத்தாலையேவா…?” என்று முறைத்தவர்,
“அருண்..! உனக்கு இங்க என்ன வேலை..!” என்று அதட்ட,
“சும்மா கடுப்பைக் கிளப்பாதிங்கம்மா..! இந்த அடைச்ச பங்களாவுல உடைச்ச சோடா கூட வாங்க முடியாது.! என் பிரண்ட் வீடு இருக்குற தெருவுல, காலைல எல்லார் வீட்டு முன்னாடியும் கலர் கலர் கோலம்ஸ்…கலர் கலர் பிகர்ஸ். ம்ம்ம்.. ஆனா இங்க? வருஷமெல்லாம் தங்கச்சி போடுற இந்த தண்டத்தைப் பார்க்க வேண்டியதா இருக்கு. என் கஷ்டம் யாருக்குப் புரியுது…” என்று புலம்ப,
“அங்க நீ எப்ப போன..? தாத்தாக்கு தெரியுமா..? “ என்று நீலா ஆரம்பிக்க,
“தெய்வமே..! இங்கயும் தாத்தாவா…?என் வாலிப வயசு சாபமெல்லாம் அவரை சும்மா விடாது..!” என்றபடி உள்ளே போகப் போக,
“ஜாகிங் போகலையா அருண் அண்ணா..?” என்றாள் பவி.
“அம்மா தாயே..! பிரவீண் வரட்டும் போறேன்..!” என்றவன் சொல்லிவிட்டு நிமிர, வந்தான் பிரவீண்.
பட்டியாலா பேண்ட்டும், டாப்பும், தலையில் கட்டிய துண்டுடன் இருந்த பவித்ராவை பார்த்தும் பார்க்காததைப் போல் பார்த்துக் கொண்டான் பிரவீண்.
“நான் பார்க்கலை..!” என்றான் அருண்.
“என்ன நீ பார்க்கலை..!” என்றான் பிரவீண்.
“நீ பார்த்ததை நான் பார்க்கலை..!” என்று அருண், நமட்டு சிரிப்புடன்.
“டேய்..!” என்று பல்லைக் கடித்தவன்,
“போகலாமா அருண்..!” என்றான்.
“போலாமே..!” என்றான் அவனும்.
“என்ன ரெண்டு பெரும் மார்க்கமா சிரிக்கிறிங்க..?” என்றாள் பவித்ரா.
“அது வந்து பவி..!” என்று அருண் ஏதோ சொல்ல வர,
“அது ஒண்ணுமில்லை பவி. ஆமா நீ எப்போ வந்த…? யாரும் ஒன்னும் சொல்லவே இல்லை..!” என்றான் பிரவீண்.
“இந்த வீட்ல எல்லாரும் ரொம்ப பிஸி. யார் எப்ப போறீங்க, எப்ப வரீங்கன்னு கூடத் தெரியலை. இதுல நான் எல்லாம் ஒரு ஆளா..?” என்றாள் பவித்ரா.
அவர்களின் பேச்சை நீலா ரசிக்கவில்லை என்பது அவரின் முகத்திலேயே தெரிந்தது.
“பவி உள்ள போ..! நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க..!” என்றார் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல். ஆனால் பிரவீணின் முகம் கொஞ்சம் சுருங்கியது. அருணைக் கூட பொருட்படுத்தாமல் கிளம்பிவிட்டான் பிரவீண்.
“பிரவீண் நில்லு..!” என்ற அருணின் பேச்சு காத்தோடு போனது.
“இப்ப என்னம்மா உங்க பிரச்சனை. நானும் கொஞ்ச நாளா பார்க்குறேன். பிரவீண் பேசுனாலே உங்களுக்கு ஆகலை. அப்படி என்ன பண்ணான் அவன்..!” என்றான் அருண்.
“முதல்ல அவன் இவன்னு சொல்றதை நிறுத்து அருண். அவனுக்கு விஜய் வயசு..!” என்றார் நீலா.
“அதுக்கு நான் என்ன பண்ண…? சின்ன வயசுல இருந்து கூப்பிட்டது. அப்படி டக்குன்னு எல்லாம் மாத்த முடியாது. நான் என்ன கேட்டேன்..? நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க..?” என்றான்.
ஆனால் அவனை சட்டையே செய்யாமல் சென்றார் நீலா. பவித்ராவுக்கும் ஒன்றும் புரியவில்லை.
“இவங்களுக்கு என்ன ஆச்சு..?” என்றாள் பவித்ரா.
“என்னைக் கேட்டா..? வர வர அம்மா நடவடிக்கையே சரி இல்லை..!” என்றான் அருண்.
“அப்பத் தூக்கிடுவோமா..?” என்ற குரலில் இருவரும் திரும்ப விஷ்வ துளசி நின்றிருந்தாள்.
“அம்மாவைத் தூக்குறதுக்கு முன்னாடி நம்ம வேலுவையும் வள்ளியையும் தூக்கணும்..!” என்றன அருண் சீரியசாக.
“அடப்பாவி..!” என்பதைப் போல் பார்த்து வைத்தனர் துளசியும்,பவித்ராவும்.
“என்ன மேடம்..? இன்னைக்கு இவ்வளவு நேரத்துல.. அதுவும் இங்க..?” என்றான் அருண்.
“ஆப்டர் லாங் கேப்… இன்னைக்கு ஊரு சுத்தப்போறேன் ரோசு கூட..!” என்றாள் துளசி சிரிப்புடன்.
“ஹேய் துளசி சொல்லவே இல்ல. அந்த பப்ளியா இருப்பாளே அந்த ரோசு தான….?” என்றான்.
“அருண் அண்ணா..! வழியுது துடை..” என்றார் பவித்ரா.
“என்ன துளசி பொண்ணுங்க ரெண்டு பேரும் தனியா போறேன்னு சொல்றிங்க…! காலம் கிடக்குற கிடைக்கு எப்படி உங்களைத் தனியா அனுப்ப முடியும்…?” என்று சொல்ல…
“அதுக்கு…!” என்றனர் இருவரும் கோரசாய்.
“நான் துணைக்கு வரேன்னு சொல்ல வந்தேன்..!” என்று அவன் சொல்ல,
“ஆணியே புடுங்க வேண்டாம்..!” என்றாள் துளசி.
“போங்களேன்..! எனக்கென்ன..? உங்க பிரியம். உங்க பாதுகாப்புக்காகத்தான் சொன்னேன்..!” என்று அந்த ‘உங்க’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொன்னான்.
“யப்பா ராசா… நீ யாரு…? உன்னோட நோக்கம் என்ன..? வண்டவாளம் என்ன..? இப்படி எல்லாமே எனக்குத் தெரியும். அதனால நீ கிளம்பு..!” என்றாள் துளசி.
“இந்த கன்னிப் பையன் சாபம் உன்னை சும்மா விடாது..!” என்றவன் கிளம்பிவிட்டான்.
“இதுக்கு மேல இவன் ஜாகிங் போனா என்ன? போகாட்டி என்ன…?” என்று இருவரும் சிரிக்க,