நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சூடான மசால் வடை மற்றும் டீயுடன் தோட்டத்திற்கு வந்தார் வள்ளி.
அந்த வாசனை காற்றில் மிதந்து சென்று வீட்டிலிருந்த மதுமிதா, மதுசுதன் இருவது நாசியையும் தொட இருவரும் வாசம் பிடித்தவாறு தோட்டத்திற்கு வந்தனர்.
சிதம்பரம் வள்ளி இருவரும் அங்கு உட்கார்ந்திருந்தனர்.
மதுமிதா, மதுசூதன் இருவரையும் பார்த்த வள்ளி
“இப்பதான் உங்க ரெண்டு பேரையும் கூப்பிடலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.” என்றார்.
“இந்த மாதிரி சாப்பிடற விஷயத்துக்கெல்லாம் என்னை கூப்பிட வேண்டாம். நானே வந்து உட்கார்ந்து விடுவேன்.” என்று கூறினான் மதுசூதன்.
“ஆமாம் ஆமாம். நீங்க எதுக்கு கூப்பிட்டு எனர்ஜியை வேஸ்ட் பண்ணனும்? அதான் மசால் வடை வாசனை வீட்டு வாசல் வரைக்கும் வருதே. அதுவே எங்க ரெண்டு பேரையும் கட்டி இழுத்துகிட்டு இங்க வந்துடுச்சு.” என்றாள் மகள்.
“இப்படியே நான் செய்யற சாப்பாட்டை புகழ்ந்து கிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டே இருக்க. எதையும் கத்துக்க மாட்டேங்குற.” என்றார் வள்ளி.
“நல்லா சொல்லுங்க அம்மா. சமையல் கற்றுக்கொண்டு வீட்ல இருக்குறவங்களுக்கு சமைச்சு போட்டா தானே நல்லா இருக்கும்.” என்றான் மதுசூதன்.
“டேய் அண்ணா. உன்னோட பிளான் என்னன்னு எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு. நான் கஷ்டப்பட்டு சமையல் கற்றுக்கொண்டு விதவிதமா உனக்கு சமைத்து போடணும். சார் எல்லாத்தையும் ரசிச்சு ருசிச்சு என்ஜாய் பண்ணனும். இதுதானே உன்னோட பிளான்?” என்று அவனைப் பார்த்து இடுப்பில் கை வைத்து முறைத்தாள் மதுமிதா.
“ஆமா நீ சமைச்சு போட்டு தான் நான் விதவிதமா சாப்பிடனுமா? அதான் அம்மா எனக்கு விதவிதமா செஞ்சு போடுறாங்களே. போடி வேலைய பாத்துட்டு.
சமையல் கத்துக்கிட்டா உனக்கு நல்லது. அதுக்கு தான் . கத்துக்கிட்டா கத்துக்கோ கற்றுக் கொள்ளவில்லை என்றால் போ. அது உன்னோட இஷ்டம். உன் புருஷனோட கஷ்டம்.” என்றான் மதுசுதன்.
“சமையல் பொண்ணுங்க தான் கத்துக்கணும்னு ஒரு கட்டாயமும் கிடையாது. ஆம்பளைங்களும் கத்துகிட்டு பண்ணலாம். அதனால நாம ரெண்டு பேரும் சேர்ந்து நாளையில இருந்து சமையல் கத்துக்கலாம்.” என்று அவனையும் துணைக்கு அழைத்தாள் மதுமிதா.
“அம்மா தாயே நீ சமையல் கத்துக்கோ கற்காமல் போ, என்னை இந்த விஷயத்தில் இழுக்காத. “
“இப்படி தான் டா எல்லாரும் கல்யாணத்துக்கு முன்னாடி சொல்வீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் பாரு. பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் விதவிதமா சமைச்சு போடுவீங்க.” என்று மகளையும் மகனையும் பார்த்து கூறினார் வள்ளி.
“சரிமா விடுங்க விடுங்க. அதையெல்லாம் அந்த ஆக்சிடென்ட் நடந்ததற்கு அப்புறம் பாத்துக்கலாம்.” என்றான் மதுசூதன்.
“எந்த ஆக்சிடென்ட்?” என்று புரியாமல் கேட்டார் வள்ளி.
“அம்மா உங்களுக்கு புரியலையா? மக்கு அண்ணன் என்ன சொல்ல வர்றான்னா? கல்யாணம் நடக்கிறது ஆக்சிடென்ட் க்கு சமம்னு சொல்றான்.”
“அப்படியா தம்பி! அந்த ஆக்சிடென்ட் உனக்கு நாங்க பண்ணவே மாட்டோம். சரியா? சந்தோஷமா?” என்றார் சிதம்பரம்.
“ஐயையோ. நான் அப்படி சொல்லல அப்பா. சும்மா என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அப்படி தான் கிண்டல் பண்ணுவாங்க. அதான் தெரியாமல் இங்கேயும் அப்படியே சொல்லிட்டேன். இதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு எனக்கு பொண்ணு பார்க்காம விட்டுடாதீங்க .”என்றான் மதுசூதனன்.
“நான் எதுக்குடா கஷ்டப்பட்டு ஒரு பொன்னை தேடி உனக்கு கல்யாணம் இல்லையில்லை ஆக்சிடன்ட் பண்ணி வைக்கணும்? என்னால முடியாது. நீயே பார்த்துக்கோ.” என்றார் சிதம்பரம் நக்கலாக.
“நீங்க பார்க்கலைன்னா என்ன? என் பையன் அழகுக்கும் திறமைக்கும் பொண்ணுங்க நான் நீனு போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க. என் பையன் லவ் மேரேஜ் தான் பண்ணுவான்” என்றார் வள்ளி.
“அம்மா ஒரு பொண்ணு பின்னாடி ஆலஞ்சி லவ் சொல்லி அவள் அதுக்கு ஓகே சொல்லி நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டமான வேலை. எனக்கு அதெல்லாம் வரவே வராது. நீங்களா போனா போகட்டும்னு ஒரு அழகான பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுங்க. அதுக்கு முன்னாடி இந்த குட்டிபிசாசு கல்யாணத்தை முடிங்க.” என்றான் மதுசூதன்.
“கல்யாணம்னு சொல்லும்போது தான் எனக்கு ஞாபகம் வருது. இருங்க.” என்று எழுந்து உள்ளே சென்றார் சிதம்பரம்.
மற்றவர்கள் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அவர் ஒரு பத்திரிக்கையை கையில் எடுத்துக் கொண்டு அங்கு வந்தார்.
வடபழனி கோவிலில் இருந்து வெளியே வரும்பொழுது அண்ணாமலை வந்து அவசரமாக அவரிடம் பத்திரிக்கை கொடுத்து விட்டு விழாவிற்கு குடும்பத்துடன் வருமாறு அழைத்து விட்டு சென்றார்.
“யார் பத்திரிக்கை?”. என்று முதலில் கேட்டது மது சுதன் தான்
“என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் அண்ணாமலையின் அறுபதாம் கல்யாணம் பத்திரிக்கை.”
“என்னது க்ளோஸ் ஃப்ரெண்ட் அண்ணாமலையா? இதுக்கு முன்னாடி நீங்க இந்த பெயரை சொல்லி நான் கேள்விப்பட்டதே கிடையாது. அப்படி இருக்கும்போது க்ளோஸ் ஃப்ரெண்ட் திடீர்னு எப்படி வந்தார்?” என்று நம்ப முடியாமல் கேட்டான் மதுசூதன்.
“நீ எங்க கூட வடபழனி கோயிலுக்கு வரலை இல்லையா? அதனால தான் இப்படி கேக்குற. போன கிருத்திகை அன்னிக்கி நான், உங்க அம்மா, மதுமிதா மூணு பேரும் கோயிலுக்கு போய் இருந்தோம் இல்லையா அப்போ என்னோட காலேஜ் பிரிண்ட் அண்ணாமலையை பார்த்தேன். அவன் நான் அன்னிக்கு பார்த்த மாதிரி அப்படியே இருக்கான்.”
“அவ்ளோ இளமையாக இருக்கிறாரா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் மதுசூதன்.
“அப்படி இல்லைடா. அதே மனசோட அப்படியே இருக்கான். அதை சொல்ல வந்தேன். . திருச்சியில் இருக்காங்க . அவனோட குடும்பத்தை பத்தி அவன் சொல்லும்போது எனக்கு எவ்வளவு ஆச்சரியமா இருக்கு தெரியுமா? இந்த காலத்துல அவங்க வீட்டில எல்லாரும் கூட்டுக்குடும்பமா இருக்காங்க. வீட்டு மருமகளை பற்றி பெருமையாக பேசினான். அவனுக்கு இரண்டு பையன் ஒரு பொண்ணு இருக்காங்க. பொண்ணு காலேஜ் படிச்சிட்டு இருக்கா. இரண்டாவது பையனுக்கு பொண்ணு தேடிக்கிட்டு இருக்காங்க போல இருக்கு.
பத்திரிக்கை வைத்து விட்டு குடும்பத்தோடு வர சொல்லி சொன்னான். நாம எல்லோரும் குடும்பத்துடன் போயிட்டு வரலாம்.” என்றார் சிதம்பரம்.
“அப்பா எனக்கு நிறைய வேலை இருக்கு. அவ்வளவு தூரம் போகணும்னா ஒரு நாள் முன்னாடியே போகணும். அப்போ எனக்கு 2, 3 நாள் வேலை பாதிக்கும்.” என்றாள் மதுமிதா.
“பரவாயில்லை மது. எவ்வளவு வேலை இருந்தாலும் நீ என்கூட வா. எனக்கு அந்த குடும்பத்தை, அவங்க வீட்டை நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு. அப்புறம் இன்னொரு ஆசை இருக்கு அதை நானே நேரம் வரும் போது சொல்றேன்.” என்று புதிர் போட்டார் சிதம்பரம்.
ஆனால் இவரது பேச்சை கவனித்த வள்ளிக்கு அவரது மனம் புரிந்து விட்டது. லேசாக அவரைப் பார்த்து புன்னகை செய்தார்.
“என்னடா சுதா? நீ என்ன சொல்ற? உனக்கு ஆபிஸ்ல லீவு கிடைக்குமா ?”
“நான் கேட்டுப் பார்க்கிறேன் அப்பா. “
“ட்ரை பண்ணி பாரு சுதா. நாம இந்த கல்யாணத்துக்கு குடும்பமா போகனும்னு நான் நினைக்கிறேன்.” என்று முடித்தார் சிதம்பரம்.
“அம்மா நான் கீதா கூட ஷாப்பிங் போயிட்டு வரேன்.” என்று கூறினாள் மதுமிதா.
“மது அந்த லைட் கிரீன் சில்க் சாரி இருக்கு இல்ல? வாங்கி அப்படியே பீரோவில் வைத்திருக்கிறாயே. அந்த புடவையோட பிளவுசை அழகா டிசைன் பண்ணி தைத்து ரெடியா வச்சுக்கோ. அந்த புடவை ரொம்ப அழகா இருக்கும்.”
“எனக்கு இருக்கிற வேலையில் இதை வேற நான் செய்யணுமா?” என்று சலிப்புடன் கேட்டாள் மதுமிதா.
“ஆமாம் நீ இத செஞ்சு தான் ஆகணும். அழகா ரெடி பண்ணி வச்சுக்கோ. அவ்வளவுதான். அதுக்கு தேவையானதை வாங்கிட்டு வந்துரு.” என்றார் கறாராக.
“சரிமா. என்னமோ நம்ம வீட்டு கல்யாணம் மாதிரி கொஞ்சம் ஓவரா தான் சீன் போடுறீங்க.” என்று போகிற போக்கில் கூறி விட்டு சென்றாள் மதுமிதா.
டி நகர் ரங்கநாதன் தெரு கூட்டத்தின் நடுவில் இருவரும் கைகோர்த்தபடி நடந்து கொண்டிருந்தனர்.
“மது இந்த ஜிமிக்கியை பாரு. எவ்வளவு அழகா இருக்கு?” என்று அந்த தெருவில் போட்டிருந்த கடையில் தொங்கிக் கொண்டிருந்த ஜிமிக்கிகளை பார்த்து கூறினாள் கீதா.
“ஆமாம் கீதா. ரொம்ப அழகா இருக்கு உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு வாங்கிக் கொள்ளலாம். ஓகேவா?” என்றவள் இருவருக்கும் பணத்தை கொடுத்து வாங்கினாள்.
“இந்த கடையில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் வரியா?”
என்று மதுமிதா கீதா கூப்பிட
இருவரும் அந்த கடைக்குள் நுழைந்தனர்.
இருவருக்கும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் சொல்லிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் எதிரெதிராக அமர்ந்தனர்.
கீதாவின் கைபேசி ஒலித்தது. எடுத்து பேச ஆரம்பித்தாள் கீதா.
அவள் பேசும் விதத்தை பார்த்த மதுமிதாவுக்கு அவள் சுரேஷுடன் பேசுகிறாள் என்பது புரிந்து போயிற்று.
எனவே பார்வையை அவள் பக்கம் இருந்து திருப்பி அந்த ஐஸ்கிரீம் கடையில் இருந்த மற்றவர்கள் மீது செலுத்தினாள்.
அப்போது அங்கு ஒருவன் நீலநிற சட்டை அணிந்திருந்ததை பார்த்தாள். அவளது நினைவு அவனிடம் சென்றது.
இரண்டு ஐஸ்க்ரீம் கப்புகளை வைத்து விட்டு சென்றான் அந்த சர்வர்
ஐஸ்க்ரீம் உருகுவதை கவனித்த கீதா ஏதோ கூறி கைபேசியின் தொடர்பை துண்டித்துவிட்டு மதுமிதாவை பார்த்தாள்.