பின்னால் வந்த ரதி தேவி தன் மீது மோத.. ஒரு அடி முன் சென்று நின்றவள் தானாகவே “சந்திரன்” என உதடுகளை அசைத்தாள். இதை அறியாத ரதிதேவி மீண்டும் வீட்டிற்குள் அழைக்க, அசையாது அங்கேயே நின்றாள் ஆரதி. இரு பெண்களின் பேச்சு சத்தத்தைக் கூட காதில் வாங்காமல் மைக்கேலின் மகன் அங்கிருக்கும் தோட்டத்தின் புறம் ஒருபாதி திரும்பி நின்று கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க, அதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் ஆரதி. மூளையின் செயல்பாடுகள் மின்னல் வேகத்தில் செய்தி உரைக்க, இது சந்திரன் தான் என்ற பெரும் உறுதி உருவாகியது. இந்த முறை சத்தமாக வாய்விட்டு அழைத்தாள் , “அனிதா.”
உதிர்த்த சத்தத்தில் வார்த்தைகளை உதிர்க்க முடியாமல் உள்ளிழுத்து அதிர்ந்த முகத்தோடு சட்டென திரும்பியவனின் பார்வை ஒரு நொடி சுழன்று ஆரதியிடம் நிற்க,
“சந்திரன்…”
அதிர்ந்த முகத்தோடு… ” இல்லை” என்றவன் பின் நகர, முன்சென்ற ஆரதி மீண்டும் , “சந்திர தாஸ்.” என்றழைக்க,
வேகமாக அங்கிருந்து ஓட ஆரம்பித்தான் மைக்கேலின் மூத்த மகன் சந்திர தாஸ்.
அவன் பின்னே துரத்திக் கொண்டு ஆரதியும் ஓட… இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரதிதேவி வீட்டில் உள்ளவர்களை சத்தமாக அழைக்க ஆரம்பித்தாள். அவளின் அழைப்பில் உள்ளிருந்த கண்ணனும் சித்துவும் வேகமாக வர நடந்ததைக் கூறினாள்.
எப்போதும் மூடி இருக்கும் கதவு நிச்சயதார்த்தத்திற்காக விருந்தினரின் வருகையால் திறந்திருக்க சந்திரனுக்கு வசதியாக இருந்தது. கேட் தாண்டி பைக்கை எடுக்க சென்றவனை லாவகமாக கீழே தள்ளி விட்டவள்… “அனிதாவை காதலிச்சது நீ தானடா…?” எனக்கேட்டு விழுந்தவனின் வயிற்றில் மிதிக்க, கட்டியிருந்த சேலை தடையாக இருந்தது அவளுக்கு. அதை ஆடவன் பயன்படுத்தி அங்கிருந்து எழுந்து ஓட, துரத்த ஆரம்பித்தாள் ஆரதி.
வெளியில் வந்த கண்ணன் ஓடும் ஆரதியை கண்டு பின்னால் ஓட, அதற்குள் சித்து தன் பைக்கில் ஏறி இருந்தான். திடீரென மூவரும் வீட்டிலிருந்து ஓட வீட்டில் உள்ளவர்களோ புரியாது அரண்டு இருந்தனர்.
தெரு முனையை தாண்டி வேகமாக ஓட்டம் பிடித்தவனை…இரு ஆடவர்களின் வருகைக்கு முன்னரே மீண்டும் பிடித்து இருந்தாள் . இந்த முறை சேலை தடையாக இல்லாமல் உதவ, பிடித்தவனை கீழே தள்ளி.. சட்டையை பின்பக்கமாக கழற்றி …. கையில் பிடித்தப்படி பின் முதுகில் காலால் மிதிக்க , அவளிடம் இருந்து தப்பிக்க போராடிக் கொண்டிருந்தான் சந்திரன். அந்த நேரம் சித்து பைக்கிலும், கண்ணன் ஓடியும் வந்து சேர… மூவர் கையிலும் தானாக நிச்சயதார்த்த விருந்தாக சிக்கினான் சந்திர தாஸ்.
அப்போதுதான் முகத்தைப் பார்த்த சித்து, ஆதி!! இவன எதுக்காக துரத்திட்டு வந்த? இவன் என்ன பார்க்க வந்த கிளைன்ட். உன்கிட்ட ஏதாச்சும் பிரச்சனை பண்ணினா?”
ஆரதியின் வார்த்தையில் திடுக்கிட்டு சந்திரனின் முகத்தை காண அன்று வீடியோ பதிவில் பார்த்த முகத்தின் பாதி சாயல் பிடிபட்டவன் இடம் இருந்தது. அதை உறுதி செய்யும் விதமாக “சந்திரனா நீ…”கேட்க,
“இல்ல சார் சத்தியமா இல்ல. இவங்கதான் சம்பந்தமே இல்லாம என்னை துரத்திட்டு வந்தாங்க. நான் என்னோட அப்பா விஷயமா உங்களை சந்திக்க வந்தேன்.”
சந்திரனின் வார்த்தையில் கோபமாகிய ஆரதி, “அப்புறம் எதுக்குடா அனிதா பேர சொன்னதும் அப்படி ஷாக்காகி திரும்பின?” கேட்டு…, கண்ணனின் கையில் சிக்கி இருப்பவனை கன்னத்தில் அறைய ஆரம்பித்தாள்.
அவளின் அடியில் வலி பொருக்க முடியாமல், “ஏய்! இன்னொரு தடவை அடிச்ச… உயிரோடு இருக்க மாட்ட….டி ” ஆவேசமாக மிரட்டுபவனின் வாயில் ஒரு குத்து விட்டான் கண்ணன். “யாருடா உயிரோடு இருக்கமாட்டா… யாரு உயிரு போகும்னு இன்னைக்கு தெரிஞ்சுடும்…” என்றவன் தலையைப் பிடித்து மீண்டும் வாயில் குத்த முன்னிருக்கும் நான்கு பற்களில் ஒன்று மட்டும் மண்ணில் விழுந்து.. ரத்தத்தை வெளியேற்ற ஆரம்பித்தது.
குபு குபு என வாயில் ரத்தம் ஊற்ற, ஆடை முழுதும் அதில் வர்ணமாக மாறும் அளவிற்கு வேகமாக அண்ணனும் தம்பியும் அடித்து கொண்டிருந்தனர்.அதற்குள் வேலை விஷயமாக தாமதமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்த தினேஷும் வந்து சேர…, அதன்பின் நால்வரின் கை ஜாலத்தில் இழுத்துச் செல்லப்பட்டான் சந்திரன்.
வீட்டில் இருப்பவர்கள் தொடர்ந்து மூவருக்கும் போன் செய்ய அதை மூவரும் நிராகரித்து கொண்டிருந்தனர். நிச்சயம் முடிந்த கையோடு வீட்டிலிருந்த சந்தோஷமும் அவர்கள் பின்னே சென்றிருக்க மற்றவர்களுக்கு பதற்றத்தில் வேர்க்க ஆரம்பித்திருந்தது. திடீரென ஆரதி ஓடியதில் அதுவும் ஆண் ஒருவனை துரத்தி ஓடியதில் வானதிக்கு சந்தேகத்தை கிளப்பி இருக்க, அவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த தினேஷ் அங்கு உள்ளவர்களிடம், “மூணு பேரும் ஒரு கேஸ் விஷயமா போயிருக்காங்க. வீட்டுக்கு வர நேரமாகும். யாரும் பதட்டப்பட வேண்டாம் னு சொல்ல சொன்னாங்க. ஆதி மேடம்க்கு டிரஸ் மட்டும் ஒரு செட் வேணும். ரதிதேவியை எடுத்து கொடுக்கச் சொன்னாங்க.”
“என்னப்பா இது… இன்னைக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருக்கு. இப்ப கூட வேலை வேலைன்னு போகணுமா? காலையில இருந்த சந்தோஷம் இப்போ கொஞ்சம் கூட இல்லை. எவ்ளோ பதட்டமா இருக்கோம்னு தெரியுமா? ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா என்ன! கொஞ்சம் கூட இந்த பசங்களுக்கு அக்கறை இல்லை எங்க மேல!” சண்முகம்.
“அப்படி இல்லை சார். எதிர்பார்க்காம நடந்த விஷயம் இது. போக வேண்டிய கட்டாயம். இதுனால உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. எதையும் சொல்ல கூடிய நிலைமையில இப்போ அவங்களும் இல்ல நானும் இல்லை. கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க சார் ” என்றவன் உடையை எடுத்துக் கொண்டு வரும் ரதிதேவியிடம் வாங்க கை நீட்ட,
அவளோ, அதை தினேஷின் கைக்கு தராமல் பக்கத்தில் நின்று இருக்கும் மஹாலட்சுமியிடம் கொடுத்து, கொடுக்கும் படி சைகை செய்தாள். அதில் குறுஞ்சிரிப்பு சிந்திய தினேஷ் வாங்கிக் கொண்டு நகர, அவன் பின்னால் சென்ற வானதி வெளியில் வந்ததும்..,
“சார்! ஆதி அக்கா யார துரத்திட்டு போனாங்க? அக்காவை பத்தி ஏதாச்சும் விஷயமா? நானும் உங்க கூட வரவா சார்! ப்ளீஸ்!”
“இல்லமா இப்போ எதையும் சொல்ல முடியாது. நீ கூட வந்தா எங்க விசாரணை சரியாக நடக்காது. உள்ள சொன்னது தான் உனக்கும் பொறுமையா இரு.” என்றவன் அங்கிருந்து கேட்டை நோக்கி செல்ல, இருவரும் பேசிக் கொண்டிருப்பதை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ரதிதேவி.
பிடிபட்டவனை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லாத கண்ணன்… தினேஷின் வீட்டில் சிறை வைத்து இருக்க, மூவரும் அவனை சுற்றி நின்று இருந்தனர். இதற்கிடையில் சித்து தன் ஜூனியருக்கு போன் செய்து எந்த காரணத்துக்காக சந்திரன் பார்க்க வந்தான் என்ற தகவலும் கேட்டு தெரிந்து கொண்டான். ஆதிக்கு இவன் சந்திரன் என்பது உறுதியாக தெரிந்தாலும் அவனே சொல்லும் வரை தன் பொறுமையை பிடித்து வைத்திருந்தாள்.
“சொல்லுங்க சந்திர தாஸ்… அனிதா எங்க? “
எனக்கு நீங்க சொல்ற பொண்ணு யாருன்னு தெரியாது. யாரோன்னு நினைச்சி என்னை கூட்டிட்டு வந்து விசாரிச்சுட்டு இருக்கீங்க. நான் யாருன்னு தெரியாம விளையாடாதீங்க. நான் எம்எல்ஏ க்கு வேண்டப்பட்டவன். தேவையில்லாம என்கிட்ட பிரச்சனை பண்ணி வாழ்க்கையில இருக்க நிம்மதியை இழந்துடாதிங்க.”
சந்திரனின் வார்த்தையில் கோபமாகி கண்ணன் அடிக்க கை ஓங்க, அதை தடுத்த ஆரதி…” இரு ஆழி. இப்பவே அடிச்சுட்டா எப்படி! கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் இரு.”
“அப்போ உனக்கு அனிதா யாருன்னு தெரியாது அப்படி தான!”
“ஆமா தெரியாது.”
“சரி எதுக்காக சித்துவை பார்க்க வந்த?”
“என்னோட அப்பா கேஸ் சம்பந்தமா பார்க்க வந்தேன். வந்த இடத்துல தான் நான் யாருன்னு தெரியாம புடிச்சு வச்சிருக்கீங்க.”
“உன் அப்பனே ஒரு பெரிய பிராடு. அவனை விட நீ பெரிய பிராடா இருப்ப போல…”என கூறிக் கொண்டே உள்ளே வந்த சித்து, “இவன் அந்த மைக்கேல் மூத்த பையன். எம்எல்ஏ கிட்டே டிரைவரா வேலை பார்க்கிறான். விசாரிச்சு பார்த்ததுல அப்பனை மாதிரியே திருட்டு வேலை நல்லா செய்வான்னு தகவல் வந்திருக்கு. எனக்கு தெரிஞ்சி இவன் கிட்ட பேசினா வேலைக்கு ஆகாது. ஆதி நீ கொஞ்ச நேரம் வெளியே இரு. நாங்க ரெண்டு பேரும் நடத்துற விதத்துல தானா உண்மையைச் சொல்லிடுவான். இல்லனா அப்பனை மாதிரியே நம்ம மூணு பேரையும் ஓட வைப்பான்.”
“ஆமா ரதி. இருக்க ஆதாரத்தை ஒவ்வொன்னா காட்டி விசாரிச்சா இவன் இல்லன்னு தான் சொல்ல போறான். அடி உதவுற மாதிரி எதுவும் உதவாது. நீ கொஞ்ச நேரம் வெளியே இரு.”
“நான் எதுக்காக வெளியே இருக்கணும் ஆழி. எனக்கு உறுதியா தெரியும் இவன் தான்னு. எத்தனை நாள் ராத்திரி தூங்காம இவனுடைய ஒரு பக்கம் முகத்தை மட்டும் பார்த்து இருக்கேன் தெரியுமா? இந்த நாய தேடி தெருத்தெருவா அலஞ்சி இருக்கேன். நான் இங்கேயே இருக்க… இவனும் இவன் அப்பனும் சேர்ந்துதான் இந்த வேலைய பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். நீங்க நடத்துங்க நான் இங்கே இருக்க.” என்றவள் அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்து கொள்ள, அதற்குள் தினேஷும் வந்து உடையை கொடுக்க, மாற்றி வந்து மீண்டும் உட்கார்ந்தாள்.
ஆடைகளை கழற்றி விட்டு வெறும் உடம்பில் சந்திரனை நிற்க வைத்து கண்ணனும், சித்துவும் அன்று படித்த ரிப்போர்ட்டை மனதில் கொண்டு அடி பின்னி எடுக்க, மரண வலியில் கத்த ஆரம்பித்தான் அவன். ஒரு கட்டத்தில் மயங்கி சரிந்தவனை தெளிய வைத்த ஆதி, “இங்க பாரு…. என்ன நினைச்சி நீ இவ்ளோ தைரியமா வாயத் திறக்காம இருக்குன்னு தெரியும். அனிதா இறந்த விஷயம் எங்களுக்கு தெரியாதுன்னு தான…” என ஆரதி கேட்க, வலியை தாண்டி ஒரு வித உடல்நடுக்கம் ஆரம்பித்தது சந்திரனின் உடம்பில். அதை கவனித்த ஆரதி சிரிப்புடன்,” என்னடா அப்பாகாக பேசப் போனோம். இப்படி பிடிச்சிட்டு வந்து அடிக்கிறாங்க. நம்மளை எப்படி கண்டுபிடிச்சாங்க? இவங்களுக்கு நடந்தது தெரியுமா தெரியாதான்னு யோசிச்சிட்டு இருக்கன்னு தெரியுது. உன்னை இப்ப இல்ல கிட்டத்தட்ட ஒன்றரை மாசமா தேடிக்கிட்டு இருக்கோம். நீ யாரு? என்ன?.. சொல்லப்போனா உன்னோட பேரு கூட தெரியாம தேடி இருக்கோம். “
“இதுல நான் எதிர்பார்க்காதது என் வீட்ல நீ இருந்ததுதான். வாழ்க்கை முழுக்க உன்னை மறக்கவே மாட்டேன். நிச்சயதார்த்த பரிசா நான் தேடிட்டு இருந்தை கடவுள் கொடுத்து இருக்காரே…. ஊர் ஊரா தேடுனேன் கடைசில நீயே வந்து நின்னுட்ட… சந்திரன்.”
“அட! ஆதி இரு இரு… சார்க்கு புரியுற மாதிரி சொல்லு. அப்போ தான அவரை விட நம்ம அறிவாளிங்கன்னு தெரியும்.” என்ற சித்து காயம் பட்ட கன்னத்துலே திருகி… வேகமாக தட்ட , அலறி துடித்தான் சந்திரன்.
” என்ன வலிக்குதா…? சந்திர தாஸ். என் தம்பி இப்படி தான்.. என்ன தவிர மிச்ச எல்லாரையும் கொடுமை பண்ணுவான். நீ என்ன பண்ற நல்ல பிள்ளையா நடந்ததை சொல்லிடு. இல்லன்னா இன்னும் மோசமா அனுபவிக்க வேண்டியிருக்கும். “
“சார் சொல்லு சொல்லுனா என்ன சார் சொல்லுவாங்க!. எதைப் பத்தி தெளிவா சொல்லுங்க.” தினேஷ்.
“ஹ்ம்ம் நீங்க சொல்றதும் கரெக்ட்தான் தினேஷ். தானா வலையில வந்து மாட்டுன இந்த அதி புத்திசாலிக்கு எப்படி வலை விரிச்சோம்’னு சொல்லிடலாம்.” என்ற ஆரதி.. ராசாத்தி கண்டது முதல் அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரை ஒவ்வொன்றாக கூற, அதற்கோ அங்கிருந்த மூவரும் பரிசாக உடம்பில் தழும்புகளை பதித்து கொண்டிருந்தனர். ஆரதி சொல்லும் ஒவ்வொரு விஷயத்திற்கும் கண்ணில் பயம் கூடிக் கொண்டே போக உடம்பிலும் மரண வலி அதிகரித்தது. யாருக்கும் தெரியாமல், யாருக்கும் தெரியாது என சாமர்த்தியமாக மறைத்ததை கண்டுபிடித்தது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிலும் தானே வந்து மாட்டிக் கொண்ட முட்டாள்தனத்தை நினைத்து பெரும் அதிர்வாக இருந்தது. ஆரதி சொல்லி முடித்ததும் அடிகள் மட்டும் நின்றபாடில்லை. அதிலும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பற்றி சொல்லும் பொழுது… ஒன்று இரண்டாக மாறி இருந்தது. அன்று அனுபவித்த வலி மொத்தமும் அதைக் கொடுத்தவனிடமே இறக்கி வைக்கும் முடிவுடன் இருந்தனர் அங்கிருந்தவர்கள்.
கை வலியில் சித்து, தினேஷ் இருவரும் நிறுத்தி இருக்க கண்ணன் மட்டும் விடாமல் தன் மன அழுத்தத்தை காட்டிக் கொண்டிருந்தான் அடிகளால். அவனை தடுக்க யாரும் முன்வராமல் இருக்க அடிவாங்கியவனே சரணடைந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டான்
“அப்பா பண்ற வேலை எனக்கும் பிடிக்காது. வயசு பையனா போகப்போக செலவுக்கு பணம் தேவைப்பட்டது. அப்போ அப்பா தான் காசு கொடுத்து சந்தோஷமா இருக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தாரு. கொஞ்ச நாள்ல எனக்கு அந்த போதை பிடித்திருந்தது. முன்னாடி இருந்ததை விட அதிகமா பிரண்ட்ஸ் கூட சேர்ந்து எல்லா பழக்கத்தையும் பண்ண ஆரம்பிச்சேன். அதுல ஒன்னு தான் பெண்கள் கூட சகவாசம் ஏற்பட்டுச்சு. போதையை விட இந்த வழி என் மனச மொத்தமா மாத்திடுச்சி. அதுவும் யாரும் கேள்வி கேட்க ஆள் இல்லாத குடும்ப பின்னணியில இருக்க பொண்ணுங்கள பார்த்து தான் பழகுவேன். இந்த விஷயம் என் அப்பாக்கு தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி இருந்தாரு. அம்மாக்கு எதுவும் தெரியாது. தம்பிங்க இரண்டு பேரும் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறாங்க. அதனால அவங்களுக்கு தெரியாது.
வேலை செய்ய போன இடத்துல வேலை கிடைக்கல. அதுக்கு பதிலா நண்பர்கள் கிடைச்சாங்க. அவங்க கூட சேர்ந்து அடிக்கடி ஊர் சுற்றுவேன். அப்படி ஒரு நாள் தான் முதல் முதல்ல அனிதா வேலை செஞ்சு கடைக்கு போனோம். அங்க நடந்த கலவரத்துல அனிதா ரொம்ப அழுதுக்கிட்டே… நான் ஊரை விட்டு வந்து வேலை பார்க்கிறேன். இந்த வேலை ரொம்ப முக்கியம். காசு இல்லைன்னா என் குடும்பம் ரொம்ப கஷ்டப்படும் ன்னு சொன்னாள். அத கேட்டதும் என்னோ பார்வை வேறயா மாறுச்சி அனிதா மேல. கொஞ்ச நாள் கழிச்சு…
அனிதாவை பார்க்கப் போனேன். என் ஃப்ரென்ட்ஸ் பண்ண தப்புக்கு சாரியும் கேட்டேன். அதுக்கு அவ திட்டிட்டு போய்ட்டா. அவளை அப்படியே விட மனசில்லை… தொடர்ந்து தினமும் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல என்னை அனிதாவும் கவனிக்க ஆரம்பிச்சாள். முதல்ல அவளுக்கான எல்லா செலவும் நான் தான் பார்த்தேன். போகப் போக அவளும் செலவு பண்ண ஆரம்பிச்சாள்.
நாட்கள் நகர என்னை அதிகமா காதலிக்க ஆரம்பிச்சா சார். மத்த பொண்ணுங்க மாதிரி ஈசியா நெருங்க முடியல அனிதா கிட்ட. நிறைய நாள் எதிர்பார்த்து நடக்காம போச்சி. என்ன பண்ணாலும் காதலா பேசுவாளே தவிர கிட்ட நெருங்க விட மாட்டா. அதுவே எனக்கு பெரிய ஏமாற்றமாயிருந்தது. எப்படியாது அனிதாவை அடையனும்’னு ரொம்ப பொறுமையா ஒவ்வொன்னும் பண்ணேன் சார். ஒரு நாள் அவங்க அம்மா போன் பண்ணி முன்ன மாதிரி காசு தரது இல்லைன்னு சண்டை போட்டாங்க. அனிதாவும் பதிலுக்குச் சண்டை போட்டுட்டு போனை வைச்சிட்டாள். அந்த டென்ஷன் ல என்னை பார்க்க வரதா சொல்லி வேலைக்கு லீவு போட்டுட்டா. மறுநாள் போனதும் ஓனர் திட்டி இருப்பாரு போல வேலையை விட்டு நின்னுட்டாள். எனக்கு போன் பண்ணி வேலை இல்லன்னு சொன்னதும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்க நினைச்சி, பிரெண்ட் வீட்டுல தங்கவைக்க ஏற்பாடு பண்ணேன். அனிதாவும் அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து இருக்கறதால நம்பி வர சம்மதிச்சா. அங்க போனதும்… வழக்கம்போல எனக்கு சாதகமா ஏதாச்சும் நடக்கும்’னு எதிர்பார்த்தேன். ஆனா அனிதா சம்மதிக்கவே இல்லை. பொறுமை இழந்து நாலாவது நாள் சண்டை போட ஆரம்பிச்சேன்.
என்ன நம்ப மாட்ற. உனக்கு என் மேல சந்தேகம். நீ என்ன உண்மையா காதலிக்கல னு சண்டை போட்டேன். அதுல அனிதா ரொம்ப எமோஷனல் ஆகிட்டா. பலநாள் எதிர்பார்த்த விஷயம் எங்களுக்குள்ள அன்னைக்கு நடந்துச்சு. இன்னைக்கும் அனிதா சம்மதிக்க மாட்டான்னு நினைச்சி எந்த முன்னேற்பாடும் பண்ணாம அவ கூட இருந்துட்டேன். நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் ஒரே அழுகை. என்கூட சண்டை போட்டு உடனே கல்யாணம் பண்ண சொன்னாள். என் வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கன்னு …ரெண்டு மாசம் டைம் கேட்டேன். முடியவே முடியாதுன்னு சொல்லி ஒரே சண்டை. நானும் சண்டையில இரண்டு நாள் கழிச்சு அவள போ’ னு சொல்லிட்டேன். அனிதாவும் முன்னாடி வேலை செஞ்ச இடத்துக்கு வேலைக்கு போயிட்டா சார். இருந்தாலும் நான் பண்ண தப்பு பின்னாடி எனக்கு பிரச்சனையா மாறும்னு இதை என் அப்பாகிட்ட சொன்னேன். அவரும் ரொம்ப திட்டினாரு. அந்த பொண்ணு கிட்ட தொடர்ந்து பேசிக் கிட்டே இரு… குழந்தை ஏதாச்சும் வந்தா அதை கலைச்சி விடலாம்னு ஐடியா கொடுத்தாரு சார். அதனாலதான் ஒரு வாரம் கழிச்சு நான் திரும்ப அனிதா கிட்ட பேசினேன். பார்க்க வர சொல்லி கேட்டேன். திரும்ப கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிட்டன்னு நினைச்சு அவளும் வந்தாள் லீவு போட்டுட்டு. அதனால கோபமான ஓனர் திரும்பவும் வேலையை விட்டு அனுப்பிட்டாரு. என்னோட காரியம் முடிந்ததால அவள திரும்ப தங்க வைக்க விருப்பம் இல்லை. இதை மறைமுகமாக சொல்லி புரியவைக்க முயற்சி பண்ணேன். ஓரளவுக்கு புரிஞ்சுகிட்ட அனிதாவும் முன்னாடி தங்கியிருந்த அதே இடத்துல ஓனருக்கு தெரியாம தங்க ஆரம்பித்தாள். பிரச்சனை ஓரளவுக்கு முடிஞ்சுதுன்னு நினைச்சுட்டு இருக்கும்போதுதான் ஒரு நாள் அனிதா போன் பண்ணா…..” நிறுத்தி அவர்களை காண…..