நான் தான் சொல்றேன்! வட்டிக்கு விடுறது என்னோட தொழில் தான்!
ஆனா அது நான் வாழ வேற வழி தெரியாம எடுத்துகிட்ட தொழில், உங்கப்பா செத்துப் போனவுடனே!
எனக்கு உங்க அத்தை மாதிரி பக்குவமா வீட்டு வேலையோ, இல்ல வயக்காட்டு வேலையோ ஒண்ணுமே தெரியாது!
நான் அப்படியே வளர்ந்துட்டேன்!
உங்கப்பா போனவுடன், எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம, இருக்கிற நகைகளை எல்லாம் வித்துட்டு, அந்த பணத்தை சின்ன சின்ன வியாபாரிங்க, நம்மள மாதிரி இருக்கிற கீழ்த்தட்டு ஆளுங்களுக்கு வட்டிக்கு விட ஆரம்பிச்சேன்.
அதுக்கு அப்புறம் தான் இந்த அடாவடி பேச்சு, ஓங்கின குரல் எல்லாம் வரவழைச்சுக்கிட்டேன்!
ஏன்னா.. கொஞ்சம் நல்லா பேசினா கூட வட்டிய கொடுக்காம ஏமாத்திடுவாங்க!
அப்புறம் அதுவே என் சுபாவமா போய்டுச்சு!
என்னோட சூழ்நிலை நான் அப்படி மாற வேண்டியதா போய்டுச்சு.
ஆனா உனக்கென்னடி குறைச்சல்! உன் மேல ஆசையா இருக்கிற புருஷன்! அப்பிராணி மாமியார்! போட்டி போடாத நாத்தனார்!
இருந்து இருந்தும் அவ கல்யாணத்தைப் போய் கெடுத்து விட்டிருக்கியேடி!
ஏதோ வீட்டு செலவு காசை மிச்சப்படுத்தி வட்டிக்கு விட சொன்னே விட்டேன்!
ஆனா உன் புருஷன் அவன் தங்கச்சி கல்யாணத்துக்காக நகையை திருப்ப சொன்ன காசை கொண்டு வந்து, என் புருசன் எனக்கு தெரியாம சேர்த்து வச்சிருந்த காசுன்னு சொல்லி என் கிட்ட கொடுத்து, வட்டிக்கு விட்டு..
மகி கல்யாணத்தை கெடுக்க அதுங்க இன்னமும் எதாச்சும் திட்டம் போட்டுட்டு இருக்குங்க போல!
உன்னையும் கூட்டு சேர்க்க தான் கூப்பிடுதுங்க போல! பார்த்து நடந்துக்கோ!
இனி உன்னால என் தங்கச்சி கல்யாணத்துல ஏதாச்சும் பிரச்சினை வந்துச்சு.
நீ அப்படியே உன் அம்மா வீட்டுக்கு நடைய கட்டிட வேண்டியது தான்!
பாப்பாவ என் அம்மா பார்த்துக்கும்!” என்றான் கோபமாக!
“நான் இனி அப்படி எதுவும் செய்ய மாட்டேன்ங்க. நம்புங்க” என்றாள் கங்கா.
“இந்தா பேசு” என்று போனைக் கொடுத்தான்.
வாங்கிய கங்கா அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டாள்.
“ஹலோ.. கங்கா.. நான் ப்ரியா பேசுறேன்!”
“ம்ம்.. சொல்லுங்க..”
“என்னத்தை சொல்ல.. நீ என்ன தான் பண்ணிட்டு இருக்க?” என்றாள் ப்ரியா கோபமாக.
“என்ன பண்ண சொல்றீங்க?”
“என்ன பண்ணனுமா? உன் நாத்தனார் கல்யாண செலவுக்கு பணம் வச்சுருக்கியா?
இல்ல உன் புருசன கடன் வாங்க வைக்க போறியா?”
“நாங்க கடன் வாங்குறோம், இல்ல என்னமோ பண்றோம். உங்களுக்கு என்ன வந்துச்சு?”
“என்ன இப்படி பேசுற.. சரி தான்.
அப்போ உனக்கும் என் தம்பி இன்னமும் சொத்தோட தான் இருக்கான்னு தெரிஞ்சுருக்கு!
அப்புறம் எங்க அம்மாவே வந்து திரும்பவும் பொண்ணு கேட்டதாலே, செலவு இல்லாம உன் நாத்தானார் கல்யாணத்தை முடிச்சுக்கலாம்னு நினைக்கிற போல!” என்றாள் ப்ரியா நக்கலாக!
“ம்ம் சரி.. அப்படியே வச்சுக்கோ. ஏன்.. நீ எப்படி உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணின?
அப்படியே உன் புருஷன் உழைச்சி கொண்டு வந்து கொட்டுன காசுலயா? எல்லாம் எங்க மாப்பிள்ளை காசு தானே!
அக்கா பொண்ணுக்கே செலவு பண்ணும் போது, அவர் கல்யாணத்துக்கு பண்ணினா என்ன தப்பு?” என்றாள் கங்காவும் விடாமல்!
உங்க கல்யாண செலவே மாப்பிள்ளை தான் பண்ணினார்ன்னு எனக்கும் தெரியும்!
உன் புருஷன் உங்க கல்யாணத்துக்கு உங்க அப்பாவ ஒத்த ரூபா கூட செலவழிக்க விடாம வச்சு, ராஜுவையே எல்லா செலவும் பண்ண வச்சுட்டு அப்புறமா காசா வாங்கி பேங்குல போட்டுகிட்டார்ல!
அந்த மாதிரி எங்களையும் நினைச்சுட்டீங்களா?
வேண்டாம்.. வீணா என் வாயை கிளறினா, இன்னமும் ராஜுவுக்கு தெரியாத உங்க வண்டவாளம் எல்லாம் வெளியே வந்துடும்!”
“ஓ.. எங்கள மீறி எப்படி இந்த கல்யாணம் நடக்கிறதுன்னு நான் பார்க்கிறேன்!
நாத்தி முடிச்சு போட நான் தானே வரணும்?” என்றாள் ப்ரியா காட்டமாக!
“ஓ.. நீ இல்லாட்டி, என்ன இப்போ? நானே ராஜுவுக்கு கூட பிறந்தவளா நின்னு அந்த நாத்தி முடிச்ச நான் போட்டுட்டு போறேன் என்ன இப்போ?
நீயெல்லாம் கல்யாணத்துக்கு வந்திடாத!
அப்புறம் அந்த முருகன் அவர் கையில் இருக்கும் வேலை வைத்து உன் கண்ணை நோண்டி, தள்ளி விட்டுடுவார் ஜாக்கிரதை! வை போனை!” என்று கத்தி போனை வைத்து விட்டாள் கங்கா!
“என்னடா இவளும் இப்படி மாறிட்டா!” என்றாள் ப்ரியா.
“ஆனால் கோபத்தில் முருகன் கோவில் தான் கல்யாணம் என்று சொல்லிட்டா அந்த கங்கா!
அப்ப ஸ்வாமிமலை முருகன் கோவிலில், இல்லைனா வயலூர் முருகன் கோவிலில் , ரெண்டு இடத்துல தான் எங்கியோ கல்யாணம் போல!” என்றாள் மேலும்.
“ஆனா அதை கூட உங்கம்மா வாயில் இருந்து வாங்க முடியலையே!” என்றாள் வனிதா!
ஆமாம்! ராமுவும் கமலா அம்மாவிடம் ஒரு டிராமாவை அரங்கேற்றி தான் பார்த்திருந்தான்!
ஆனால் பாவம் பருப்பு வேகவில்லை அவரிடம்!
“தாய்க்கு தலை பிள்ளை தான் கொள்ளி போடணும்! நீ இப்படியே இருந்திடுவியா?” என்று கூட சொல்லி பார்த்து விட்டான்!
“அடப் போடா.. இப்போது எல்லாம் எலெக்ட்ரிக் மயானம் தான்!
அதில எவன் வச்சா என்ன? அதும் இல்லாம நானே போன பின்னே அதெல்லாம் பார்த்துட்டா இருக்க போறேன்! விடுவியா” என்றே சொல்லி விட்டார் கமலா!
கடைசி வரை பேசிப் பார்த்தும், அவர் வாயில் இருந்து கல்யாணம் என்றைக்கு என்றோ, அல்லது எங்கு வைத்து என்றோ அறிந்து கொள்ளவே முடியவில்லை!
ஆனால் வனிதா, அந்த மாதம் மிச்சமிருந்த மூன்று முகூர்த்ததில் எது வென்று, மணமக்களின் நட்சத்திரங்களைக் கொண்டு
அவள் அப்பாவின் துணையுடன் எப்படியோ கல்யாண தேதியை ஊகித்து தெரிந்து கொண்டு விட்டாள்!
முதல் இரண்டு முஹூர்த்த நாட்களில் ராஜுவை சில இடங்களில் பார்த்து விட்டு,
கடைசி முகூர்த்த நாள் தான் அவர்கள் திருமணம் என்று அறிந்து கொண்டு விட்டார்கள்!
திருமண நாள் வந்தது!
ராமு, வனிதா இருவரும், நால்வரும் ஸ்வாமிமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.
ப்ரியாவும் வேல்முருகனும் வயலூர் சென்றனர்!
அன்று நிறைய திருமணங்கள் அந்த இரு கோவில்களிலும்!
கோவில் முழுவதும் சுற்றிப் பார்த்தும் யாரையும் காணவில்லை!
எப்படியாவது கல்யாணத்திற்கு சென்று, வாழ்த்துவது போல நன்கு பேசி விட்டு, மன்னிப்பு கேட்டுக்கொண்டு,
ராஜு மகியை கமலா அம்மாவோடு திரும்ப உறையூர் வீட்டுக்கே அழைத்து வந்து விடுவது என்பது அவர்களின் ப்ளான் பி!
ப்ளான் ஏ – எப்படியாவது கல்யாணம் நடக்க விடாமல் செய்வது!
ப்ளான் பி – எல்லாவற்றையும் மீறி கல்யாணம் நடந்து விட்டால், ராஜுவிடம் உள்ளம் உருக பேசி, அவர்களை வீட்டுக்கே அழைத்து வந்து,
பின் ராஜுவை எப்படியாவது மீண்டும் துபாய் அனுப்பி விட்டு, இங்கே மகியை பேசியே துரத்தி விடுவது!
ப்ளான் ஏ – தோற்றுப்போன காரணத்தால், இப்போது ப்ளான் பி ஐ தான் செயல் படுத்த துடித்துக் கொண்டிருந்தார்கள் அந்த நல்லவர்கள் நால்வரும்!
ஆனால் கமலா அம்மா கில்லாடி! அந்த ராமுவையே பெற்றவர் அவர்!
நடிகர் விவேக் சொன்ன தமிழ்நாடு ஆட்டோ மாதிரி, ஒரு லெஃப்ட்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் ஹேன்ட் சிக்னல் காட்டி நேராக போய் குழப்பி விடுவது போல,
அவர் ராஜு மகி திருமணத்தை சமயபுரம் மாரியம்மன் கோவில் வைத்து நடத்தி விட்டார், மிகவும் எளிமையாக!
கங்கா சொன்னது போல அவளே நாத்தி முடிச்சு போட்டு விட்டாள் மகியின் கழுத்தில்!
பின் எல்லோரும் ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் போய் ஸ்பெசல் மீல் ஆர்டர் பண்ணி இனிப்புடன் விருந்து சாப்பிட்டனர்!
இங்கே இலையில் பாயாசம்! அங்கே ராமு அன்ட் கோ விற்கு அல்வா!