அமுதங்களால் நிறைந்தேன்…
18
சக்திக்கு லிங்கா அனுப்பிய செய்தி வந்து சேர்ந்தது… அதை அனிச்சையாய் பார்த்தும் விட்டாள். ஆனால், என்ன செய்வது என தெரியவில்லை. பெண் மனதில் இப்போது ஒதுக்கம் வந்தது.. ‘ஏன் பேசனும்..’ என தோன்றியது.. அதனால் அமைதியாகிவிட்டாள்.
ஊட்டியில் இருந்து நேற்றே தன் வீட்டுக்கு வந்திருந்தாள்.. சக்தி. பெரிய நட்பு படையையும் அழைத்து வந்திருந்தாள்.. ஆக, உறவினர்களாலும்.. நட்புகளாலும்.. சக்தி கலகலப்பாக இருந்தாள்.
இந்த நட்புகளின் துணை அவளுள் புது தெம்பை தந்திருந்தது… பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.. ‘அப்பா எனக்கு கெட்டது செய்யமாட்டாங்க..’ என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டாள்.
ஆனால், லிங்காக்கு தன்னை புறக்கணிப்பதாக தோன்றியது.. நீண்ட நேரம் காத்திருந்தான்.. ஏதாவது செய்தி வருமென.. ஒன்றும் வரவில்லை. வேலை விடிய விடிய நடந்தது.. எனவே அவனுக்கு, அந்த நேரம் நீண்டது. தனித்திருக்கிறான்.. காத்திருக்கிறான்.. அவளின் ரெஸ்பான்ஸ்க்காக.
அவனை பொறுத்த வரை.. இது சுதாரிப்பு. முதல்முறை… எதையும் எதிர்பார்க்காமல்… எங்கோ சென்று… நின்றது போல.. இப்போது இல்லை நான் என உணர்ந்தான்.
ஆனால், அவளின் ஒதுக்கம்.. அது உறுத்தியது அவனை. என்னை யாரும் ஒதுக்கியது இல்லை… இல்லை, அப்படி இல்லையோ.. அப்பா என் கூட பேசறது இல்லையே… அப்போ அவரும் ஒதுக்கிட்டாரே.. அப்பாகிட்ட என்ன சொல்றது… நான் தப்புதான் செய்கிறேன்.. ஆனால், அப்பாக்கு தெரியாதே.. அப்பா ஏன் என்னிடம் பேசவில்லை..’ என சிந்திக்க சிந்திக்க தலை வலிக்க தொடங்கியது.. அவனுக்கு.
அந்த அறையிலிருந்து வெளியே வந்து, சற்று நேரம் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான். எதுவும் ஓடவில்லை எங்கு சுற்றினாலும்.. அப்பா பேசலை.. நான் தப்பு செய்யறேன்னு நினைக்கிறாரோ… என அங்கேயே நின்றது மனம்.
அதே சமயம்… சக்தியின் மனதையும் உணரவில்லை… அவன். நான் மெசேஜ் செய்கிறேன்.. ஆன்லைன் என வருகிறது, அதென்ன… பதில் வரலை.. என மீண்டும் முறுக்கிக் கொள்கிறது லிங்காவின் மனம்.
எங்கோ இடையில் சிக்கிக் கொண்ட நிலை லிங்காவது. யாரை பார்ப்பது என தெரியவில்லை.. சக்தி என்பது இப்போதும் பின் சென்றது.. தந்தையின் முன்.
இதில்.. இந்த குழப்பத்தில் லிங்காக்கு, தன்னையும்.. சமாதானப்படுத்த முடியவில்லை.. ‘நான் அப்படித்தான்’ என போகவும் முடியவில்லை.. ‘இல்ல பார்த்துக்கலாம்… என்னால், சமாளிக்க முடியும்..’ என தனியே நிற்க முடியவில்லை… எனவே இடையில் சிக்கிய உணர்வு.
சமாளிக்கலாம்தான்.. இப்போது முன்போல் இல்லை… தாமுவும், உதவி செய்கிறார்… எனவே, சமாளித்து விடுவான்தான்… ஆனால், மனதில் ஏதோ இடறிக் கொண்டே இருந்தது.
அது… அப்பா என்ற பிம்பம்… ‘அவர் பேசுவதில்லை, ஏன்… அப்போ அவருக்கு என்னை பற்றி ஏதோ தெரியுது….’ என அந்த புள்ளியில் சிக்கிக் கொண்டான் லிங்கா.
‘அப்போ இளா, செய்த தப்பை நானும் செய்கிறேனோ… அவனும் யாரிடமும் ஏதும் சொல்லவில்லை.. அப்படி தானே நானும்..’ என மெல்ல மெல்ல அந்த அர்த்த ராத்திரியில் ஞானோதையம் வந்தது லிங்காக்கு.
அன்பு எப்போதும் கேள்வி கேட்கும்… விலகி நிற்கும்.. இது தவறு என சொல்லும்… இப்போது தன் தந்தையின் விலகலில் லிங்கா, எதையோ படிக்க முயன்றான். சரியானதை பற்றிக் கொண்டான்… சரியான நேரத்தில். இதுவும் வரம்தானே.
காலையில் நான்கு மணிக்கு, வீடு வந்தான். சற்று நேரம் உறக்கம் வரவில்லை… மீண்டும் தன் தந்தை குறித்தும்.. தனக்கென வரப்போகிறவள், குறித்தும்… யோசனை… மனதின் அழுத்தம் அதிகமாகியது.. கண்கள் மூடியிருந்தாலும்… உறக்கம் வரவில்லை.
[the_ad id=”6605″]
“அப்பா.. ப்பா… நான் ஏதும் செய்யலைப்பா…” என வாய்விட்டே புலம்பினான்.. அந்த அதிகாலை நேரம் அவனுக்கு அருள் வந்தது போல… சட்டென எழுந்து அமர்ந்தான்.
ஏதோ மடியில் பூனையை கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பவன் கதையாய்.. உறக்கமே வரவில்லை.. இங்கும், அங்கும் நடையாக நடந்தான்… தீரவே இல்லை அவனின் தவிப்பு… ‘நான் தப்பு பண்றேனோ..’ என போராட்டம் அவனுக்குள்… ஒருவழியாக விடியும் நேரத்தில்… அசதியில் தான் உறக்கமே வந்தது லிங்காக்கு.
காலையில் பதினொரு மணிக்குதான் எழுந்தான்.. உறங்கி எழுந்ததும் புது தெம்பு வந்தது.. மனதில் தெளிவு வந்தது.
போனை எடுத்து பார்த்தான், இப்போதும் அவளிடமிருந்து ஏதும் பதிலில்லை… எனவே, ‘சர்தான் போடி’ என எண்ணி கிளம்பி கீழே சென்றான்.
வீட்டில், உறவினர்… தன் பெரியாப்பா.. பெரியம்மா… அத்தை, தாய் மாமா.. என எல்லோரும் வந்திருந்தனர்.. எல்லோரும் ஒரே ஊர், அதனால்.. சும்மா பார்த்து செல்ல வந்தனர்.
லிங்கா அனைவரையும் வரவேற்று அமர்ந்தான். பின், அமைதியாக போன் பேசிக் கொண்டிருந்தான். பொதுவாக லிங்காவின் வாய் ஓயாது.. இப்போது அளந்து பேசினான்.. முகம் இறுக்கமாகவே இருந்தது..
அவனின் தாய்மாமா “லிங்கா அமைதியாகிட்டான் மச்சான்…” என மூர்த்தியிடம் சொல்லவே செய்தார்.
வீட்டில் உறவினர்கள் இருந்ததால்… வீடு பரபரப்பாக இருந்தது.. இவன் மட்டும் எதிலும் ஒட்டாமல் இருந்தான், ஒன்றவும் முடியவில்லை… ஏதோ ஒன்று அவனை குடைந்து கொண்டே இருந்தது… அடிக்கடி தன் தந்தையையே பார்த்திருந்தான்.. போன் பேசியபடியே.
மதியம் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. வீட்டு பெண்மணிகள் எல்லாம் அங்கு நிற்க.. இன்னும் இவன் உண்ணவில்லை.. இளா வந்தான் “டேய் சாப்பிட்டு, இந்த தாடி மீசையை எல்லாம் எடுத்துவிட்டு வா..” என்றான் மெல்லிய குரலில் யாரையும் ஈர்க்காமல்.
லிங்கா தன் அண்ணனை நிமிர்ந்து பார்த்தான் அவ்வளவுதான்… வேறு பாவனையே இல்லாமல் அமர்ந்திருந்தான். இளா அடுத்த வேலையை பார்க்க சென்றான்..
மதியம் உண்டு முடித்து எல்லா உறவுகளும் கிளம்பியது.. எல்லோரும் உள்ளூர்.. எனவே, எப்போதும் இது பழக்கம் தான், யாரும்… யார் வீட்டிலும் தங்குவது இல்லை.. இப்போதும் அப்படியே நடக்க.. மூர்த்தி தன்னறைக்கு ஓய்வுக்கு செல்ல போக…
லிங்கா “ப்பா..” என்றான்.
என்ன என்பதாக பார்த்தார்… லிங்கா “இங்க வாங்களேன்..” என்றான்.
மூர்த்தி “சொல்லு… என்ன.. “ என்றவர் அவனை திரும்பியும் பாராமல் உள்ளே சென்றார்.
லிங்கா கத்தினான் “ஏன், என்கிட்ட பேசமாட்டீங்களா…” என்றான். உள்ளே, தனக்குள்ளே தகித்துக் கொண்டிருப்பதை எப்படி சொல்லுவது என தெரியாமல் கத்தினான்.
உள்ளிருந்து காமாட்சி வந்தார். காவ்யா, அம்முவுடன் வந்தாள்.. லதா.. தன் மாமியார் விட்டுச் சென்ற வேலையை பார்த்தபடி.. காதை மட்டும் இங்கு வைத்திருந்தாள்.
மூர்த்தி உள்ளே சென்றுவிட்டார்… லிங்கா… “பதில் கூட சொல்ல மாட்டீங்களா..” என்றான் மீண்டும்.
அன்னை “என்ன டா, சத்தம் போடற… என்ன வேண்டும் உனக்கு.. போ, உள்ள போய்.. பேசு… இங்கிருந்து சத்தம் போடாத.. பிள்ளைகள் எல்லாம் இருக்கு…” என சொல்ல.
லிங்கா எழவில்லை “அவர் ஏன், என் கூட பேச மாட்டேங்கிறார்… என்ன பண்ணிட்டேன்… எனக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு கேட்டேன்.. அதுக்கு எதுக்கு இப்படி பேசாம இருக்கார்…” என எகிறினான்.
மூர்த்திக்கு புரிந்தது.. அவனின் தந்தை அல்லவா… தாய் எனும் போது உருகிவிடும் அன்பு.. தந்தை எனும் போது அவனின் ஒவ்வொரு செயலுக்கும் உண்டான.. காரண காரியத்தை ஆராய்வது இயல்புதானே.. எனவே மூர்த்தி.. ‘ஏதோ மனசில் வைச்சிருக்கான்.. அதான்.. அதன் கனம் தாங்காமல் குதிக்கிறான்’ என் தந்தையாக புரிந்தது மூர்த்திக்கு.
மூர்த்தி அங்கிருந்தே… “என்ன டா.. நான் என்ன பண்ணனும்.. உன் இஷ்டப்படி எல்லாம் நடக்குதுல்ல… அப்புறம் என்ன.. போ, போய் வேலைய பாரு…” என்றவர், தனது கண்ணாடியை கழற்றி வைத்து படுக்க ஆயுத்தமானார்.
காமாட்சி அங்கு “என்ன டா… என்னாச்சு… ஏன்… என்ன இப்போ… உன் விருப்ப படிதானே நடக்குது…” என அருகில் வந்து அவனின் தலை கோத… மகனுக்கு சங்கடமாக போனது தன் அன்னையின் கையை உதறினான்.. எழுந்து உள்ளே சென்றான்.
தந்தை கட்டிலில் அமர்ந்திருந்தார்.. அவரின் அறை வாயிலில் நின்று கொண்டு.. “ஏன் என் கூட பேசல” என ஒரே இடத்தில் நின்றான்.
மூர்த்தி “ம்…. நீ என்னமோ பண்ற… அத நான் கேட்டேனா… போ வேலைய பார்.. எனக்கு நிறைய வேலையிருக்கு… கிளம்பு” என்றார் அதிகார குரலில்.
லிங்கா “நான் என்ன பண்ணினேன்…” என்றான் மூர்த்தி ஏதும் சொல்லாமல் எழுந்து தனது மூக்கு கண்ணாடியை, தூரமாக இருந்த மேசையில் வைத்தார். மீண்டும் வந்து அமர்ந்தார். மகனுக்கு, அவரின் அலட்சியம், அவனை.. கூறு போட… “என்ன சொல்லுங்க..” என்றான்.
“நீதான் சொல்லனும் எனக்கு என்ன தெரியும் “ என கூறி நிமிர்ந்துப் படுத்து.. தன் இரு கையையும் கோர்த்து நெஞ்சி வைத்துக் கொண்டு கண் மூடிக் கொண்டார்.
கோவம் வந்தது தன் தந்தை மேல்.. நான் இங்கு கத்திக் கொண்டிருக்கிறேன்.. இவர் எவ்வளவு… அசால்ட்டாக இருக்கிறார்.. என கோவம் வந்தது. அந்த அறையின் வாயிலில் நடக்க தொடங்கினான் லிங்கா. சாந்தமான நிர்மலமான மனதுடனும் முகத்துடனும் உறங்க முற்பட்டார் மூர்த்தி…
அங்கிருந்த யாருக்கும் ஏதும் புரியவில்லை. இளா அங்கு இல்லை வெளியே சென்றிருக்கிறான். பெண்கள்தான்.. காமாட்சியும், காவ்யாவும் லிங்காவையே பார்த்திருந்தனர்…
லிங்கா தன் தந்தையின் அறையின் உள்ளே வந்தான்… “நான் பேசிக்கிட்டு இருக்கேன் ப்பா…” என்றான்.
“ம்…” என்றார் கண் திறக்காமல்.
அதற்குள் காமாட்சி “நீ போ காவ்யா… போய் படு…” என்றார்.
லிங்கா “அப்பா…” என்றான் அழுத்தமாக.
மூர்த்தி எழுந்து அமர்ந்தார்.. “அதான் சொல்லனும்னு வந்திட்டேயில்ல.. சொல்லு… என்ன பண்ணின..” என்றார்.
மகன், அவர் எப்போது கேட்பார்… தான், சொல்லலாம்.. என பார்த்திருந்தான் போல… கண்கள் மட்டும்தான் தந்தையை பார்த்தது… உடல் மொழி.. நிமிர்ந்தே இருந்தது… “அ… அது… தாமு அங்கிள்… எ… எனக்கு கொஞ்சம் பணம் உதவி பண்ணார்… அ.. அத்தோட… அவர் பெண்ணை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டார்…” என சொல்ல.. சொல்ல… மூர்த்தி, எழுந்து “பளார்’ என அறைந்திருந்தார் தன் மகனை.
மகன் மரம் போல் நின்றான்… அப்படியே நின்றான்.. இத்தனை நாட்கள் அழுத்திய பாரத்திற்கு முன் அந்த வலி ஒன்றுமேயில்லை என்பதாக நின்றான் லிங்கா.
காமாட்சி உள்ளே வந்தார்… தன்னை கட்டுப்படுத்த முடியாத கோவத்தில்.. தன் மனையாளையும் அறைந்தார் மூர்த்தி… “பையன பார்… ஒருத்தன்… தன்னையே மாய்ச்சிக்கிட்டான்… இன்னொருத்தன் அடுத்தவன கெடுக்கிறான்… என்ன புள்ள வளர்த்தோமோ…” என ஓய்ந்து போய் தன் கட்டிலில் அமர்ந்தார்.
லிங்கா “இளா… நம்ம எல்லா சொத்தையும் அடமானம் வைச்சிருக்கான் ப்பா… எ… எனக்கு வழி தெரியலை… அ…அம்மு… தீபக்… அத்தோட… நம்மளை நம்பி இருக்கிற வொர்கர்ஸ்… “ என ஏதோ சொல்ல…
“எல்லாம் நீங்க பண்ணிட்டு… நியாயம் பேசுற…. தாமுகிட்ட எவ்வளோ வாங்கியிருக்க…” என்றார்.
அந்த பெரும் தொகையை சொன்னான்..
மூர்த்திக்கு யோசனை.. லிங்கா அமைதியாக நின்றான் “அந்த பொண்ணுக்கு, எதுவும் தெரியுமா….” என்றார்.
“எனக்கு தெரியாது ப்பா” என்றான்.. இப்போது மீண்டும் அறைய தோன்றியது.. அமைதியாக நின்றார் தந்தை.
கூடவே “அந்த லோட்.. எப்போ போகுது… எப்போ பணம் வருது…” என ஏதேதோ கணக்கு கேட்டார். லிங்கா எல்லாம் ஒப்புவித்தான்.
[the_ad id=”6605″]
காமாட்சி பிரமிப்பில் இருந்தார்… ஒன்றும் புரியவில்லை… ஆனால், லிங்கா அந்த பெண்ணை விரும்பவில்லை.. இவன் ஏதோ பணத்துக்காக பெண்ணை மணக்கிறான் என புரிந்தது… அங்கேயே நின்றார்.. தந்தை மகன் பேச்சு… தலையை சுற்றியது… அப்படியே வெளியே சென்றார்…
மூர்த்தி “காமு, நில்லு… லதா அங்க இருக்கா… எதுவும் சொல்லாத… புரியுதா…” என்றார் அந்த குடும்பத் தலைவர்.. தலையசைத்து… நகர்ந்தார்.. காமாட்சி.
காவ்யா, அன்னை தந்தை ஏதோ பேசுகிறார்கள் என உள்ளே சென்றிருந்தாள் அப்போதே… எனவே ஹாலில் யாரும் இல்லை..
லதா கிட்சனிலிருந்து வெளியே வரவில்லை, அதனால் அப்படியே அமர்ந்தார் காமாட்சி.. சுதாரிக்க நேரம் வேண்டுமே.
நீண்ட நேரம் சத்தமே இல்லாமல் போகவும்.. மேலும், அந்த கேசரியையும் செய்து முடித்ததால்… லதா வெளியே வந்தாள்… “அத்த… வேலை முடிஞ்சிது… நீங்க போய் படுங்க… அவர் வந்ததும் நான் சாப்பாடு போடறேன்.. நீங்க..” என்றவள் அப்போதுதான் தன் அத்தையை கவனித்தாள்… கன்னம் சிவந்து கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அது வழிந்து கொண்டிருக்க.. இவர் அமர்ந்திருந்த கோலத்தை…
காமாட்சி, யாருக்காக கவலை படுவார்.. என்ற நிலை. வந்தவளுக்கா.. இல்லை வர போகிறவளுக்கா.. யாருக்காக பார்ப்பார்.. இதில் கணவன் வேறு முன் யோசனையாய்.. ஒன்றும் பேசாதே என்ற குறிப்பு வேறு… அப்படியே அமர்ந்திருந்தார்.. அன்னை.
லதா அருகில் வந்து “அத்த… என்ன அத்த…” என கேட்க… அவர் பதில் சொல்லவில்லை.
உள்ளே தன் மாமனார் அறைக்கு சென்றாள் அங்கே லிங்கா நிற்க… மூர்த்தி தன் கைகளை ஊன்றி… அமர்ந்திருந்தார்.. லிங்கா லதாவை பார்த்து பேச்சை நிறுத்த “மாமா.. அத்த..” என.. சொல்ல…
எல்லோரும் வெளியே வந்தனர்.. அதன் பிறகு.. தண்ணீர் கொடுத்து.. லிங்கா அவரை படுக்க வைத்து என காமாட்சியை நேராக்கினர்.. லதா இப்போது “என்ன லிங்கா, என்னாச்சு..” என கேட்க…
இவன் தந்தை முகம் பார்த்தான்… மூர்த்தி “ஒண்ணுமில்ல மா உன் அத்தையை அடிச்சிட்டேன்… அதான் பயந்துட்டா..” என்றார் பொறுப்பாக.
லதா “என்ன மாமா இப்படி… அத்த என்ன பண்ணாங்க… லிங்காதனே உங்க கிட்ட பேசினார்.. நீங்க எதுக்கு அத்தைய அடிச்சீங்க… உங்ககிட்ட எதிர்பார்க்கல மாமா..” என்றவள் லிங்காவிடம் “என்ன லிங்கா என்ன பண்ணீங்க…” என்றாள்.
லிங்கா சுதாரித்தான் “இல்ல அண்ணி, இந்த கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து அப்பா, என் கூட ஏன் பேசலைன்னு… கேட்டுக்கிட்டு இருந்தேன்… அதான்… அப்போ, அம்மா ஏதோ பேச.. அப்பா கோவப்பட்டுட்டார்” என்றான் விளக்கமாக.
லதா “என்ன மாமா… பொண்ணு நல்லா இருக்கு… அமைதியான குணம்… அவங்களும் நல்ல வசதி… எல்லாம் சரியாதானே இருக்கு… நீங்க இன்னும் பழசையே நினைச்சிட்டு இருக்கீங்க மாமா… எல்லாம் சரியாகிடும் மாமா… லிங்கா எல்லாம் சரியாத்தான் செய்வார்… நீங்க எதுக்கு அத்தைய அடிச்சீங்க…” என அதிலேயே நின்றாள்.
மூர்த்தி தன் மகனை பார்த்தார்… அது கடைசியாக அவன் மீதுள்ள நம்பிக்கையை லதா சொன்னதால் கூட இருக்கலாம்.. ஆனால், தந்தையாக ‘இந்த பெண்களுக்காக எதுவும் செய்யலாம்தான்.. ஆனால், வருபவளும் இதே போல்தானே இருப்பாள்’ என தோன்றியது அவரின் மனதில்.
காமாட்சி எழுந்தார் “லதா, விடு லதா… நான் தான், மகனை கண்டிக்கும் போது குறுக்கில் போயிட்டேன்… வேற ஒண்ணுமில்ல… நீ வேலைய முடிச்சிட்டியா… போ போய் படு கொஞ்ச நேரம்… நானும் படுக்கிறேன்… சரி நீங்க பேசிட்டு போய் படுங்க” என தன் கணவனிடமும் சொல்லி, அந்த இடத்தை பழைய நிலைக்கு திருப்பி.. தன் மருமகளுடன் மேலே சென்றார்.
எப்போதும் மேலே போகமாட்டார் காமாட்சி இன்று, கூடவே சென்றார் “லதா… அந்த க்ரீம் ஏதாவது வச்சிருக்கியா… கன்னம் வலிக்குது… ஏதாவது இருந்தா எடுத்து கொடு…” என சொல்லி லதா கூடவே மேலே சென்றார்.
மூர்த்தி “போடா… அதான் எல்லாம் செய்துட்டியே… இன்னும் என்ன… போ… இளாக்கிட்ட ஏதும் சொல்லாத… எந்த இடத்தில் அடமானம் வைச்சிருக்கீங்க… எல்லாம் இன்னும் ஒரு வாரத்தில் விற்க ஏற்பாடு செய்…” என்றார் உத்தரவாக.
லிங்கா “ஏன் ப்பா… மீட்டிடலாம்… இப்போ இந்த அமௌண்ட் வருமில்ல…” என்க.
மூர்த்தி “சொல்றத செய்… கடனில்லாம வாழனும்… பொண்ணு வீட்டில் டௌரி வாங்கி… எனக்கு சொத்து வேண்டாம்… போ… கல்யாணம் முடிந்து அடுத்து இதுதான் உன் வேலை… இளா கிட்ட இப்போ ஏதும் சொல்லாத… புரியுதா… போ…” என்றார்.
லிங்கா அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் மூர்த்தி “போடா… போய்.. இந்த தாடியை எடு… நாளைக்குதான் உனக்கு கல்யாணம் போ… நின்னுகிட்டே இருக்காத..” என்றார் தோரணையாக.
அப்படியொரு நிம்மதி லிங்காக்கு.. எல்லாம் சொல்லிய நிம்மதியில் லிங்கா வெளியே கிளம்பி சென்றான்.
ஆனால், அந்த வயதான மனிதருக்கு.. அப்படி ஒரு வருத்தம்… தான் பிள்ளைகளை சரியாக வளர்க்கவில்லையோ.. என்ற பாரம் மனதில் ஏறியது அவருக்கு.
தன் மனைவியின் வரவுக்காக அங்கேயே அமர்ந்திருந்தார் இதே யோசனையில்.
[the_ad id=”6605″]
நேரம் சென்றது.. சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு… மாமியார் மருமகள் கூட்டணி கீழே வந்தது. வீட்டை மெல்ல மெல்ல இயல்புக்கு கொணர்ந்தார் காமாட்சி..
காவ்யாக்கு ஏதோ புரிந்தும் புரியாத நிலை… சிறு பெண் தான் என்ன கேட்க முடியும் என அமைதியாக வேடிக்கை பார்த்தாள் எல்லாவற்றையும்.
மாலை ஆகியது இளா வர… தன் தந்தையிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான்.
லிங்கா.. வந்தான், ப்ரெஷ்ஷாக இருந்தான்… அடர் மீசை… பியர்ட்.. சற்று மட்டும் கட் செய்த சிகை… என வந்தான்… ஏதோ அந்த நீண்ட நாள் தாடி… சற்று குறைந்திருந்தது அவ்வளவுதான். ஆனால் மனதின் தெளிவு… முகத்தில் தெரிந்தது.
அன்னைக்கு இன்னும் திருப்தியாகவில்லை… “என்ன டா… அந்த தாடிய எடுக்கக் கூடாதா..” என்றார்.
“ச்சு…” என மட்டும் சொல்லி உணவு மேசையில் சென்று அமர்ந்து கொண்டான். அவனின் மௌனம் ஏதோ போல் இருக்க, யாரும் ஏதும் பேசவில்லை.
இளா மட்டும் “இப்போதான்ட… மாப்பிள்ளை மாதிரி இருக்க..” என்றான்.
எல்லோரும் பேசி உண்டு உறங்க சென்றனர். லிங்கா எப்போதும் போல இருந்தான் அழுத்தமாக.