இளாக்கு, அவனின் நிலை புரிகிறதுதான்.. ஆனால், நாளையின் பொறுப்புகளும் தெரிகிறதே… இவனின் விளையாட்டு தனம்.. என எண்ணியது இப்போது சீரியஸான செயலாகத் தெரிந்தது அந்த அண்ணனுக்கு.
எனவே, அமைதியாக இருந்தான். இந்த தொழில் விஷயத்தை இப்போது பேசியிருக்க கூடாதோ.. அவன் நிதானத்தில் இல்லையோ.. என எண்ணினான் இளா.
ஆனாலும், ‘நாளை.. நான், கிளம்ப வேண்டும்.. எப்படி சொல்லி புரிய வைப்பது இவனிடம்’ என எண்ணினான்.
GM பார்ப்பார்தான்.. ‘என்ன இருந்தாலும்.. படித்தவன் இருக்கிறான்.. உடையவன் பார்த்தால்.. ஒரு ஈடுபாடு வரும் வேலை செய்பவர்களுக்கு’ என எண்ணிக் கொண்டே அங்கும் இங்கும் நடந்தான் இளா.
லிங்காக்கு, அண்ணனின் இந்த சிந்தனை பார்த்து குதூகலமானது.. “ம்… யோசி ண்ணா.. யோசி.. உன் தம்பி, உனக்கு முக்கியம் இல்லையா… நாளைக்கு எனக்கு, அவளை.. நிச்சையம் பண்ணிட்டு நீ, போ. அதுக்கப்புறம் நான், நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்” என்றான் கால்களை விரித்து படுத்த படியே.. தனது கைகளை தலைக்கு கொடுத்து கொண்டு.. சீலிங்கை பார்த்த படியே.. அலட்டாமல் சொன்னான் தம்பி.
இவன், என்ன ‘கத்துனா.. குத்துவேன்.. குத்துனா கத்துவேன்ற ரேஞ்சில் பேசுறான்’ எனத்தான் தோன்றியது இளாக்கு, கூடவே கோவம் வந்தது ‘எனக்கு உதவி செய்வான் என எதிர்பார்த்தால்.. இவன் என்னை மிரட்டுறான். நாளைக்கு, வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்கவே எனக்கு நேரமில்லை. இதில், ஒன்றுக்கும் ஆகாத இவன் பஞ்சாயத்து வேறயா என கோவம் வந்தது.
“நீ வரவே வேண்டாம் டா… நான் பார்த்துக்கிறேன்.. போ.. இப்படியே குடிச்சி என்னவோ ஆயிட்டு போ… ஆனா, வீட்டில் வைச்சிக்காத… இப்படி நாளைக்கு உன்னை பார்த்தேன்… வெளியே தொரத்தி விட்டுடுவேன்.. ஜாக்கிரதை” என எச்சரித்தவன்.. வெளியேற நினைக்க..
லிங்கம் “ஆமாம்.. இவரே.. சென்னை போறாராம்.. இதில் என்னை துரத்தறாராம்..” என முனகிய படியே திரும்பிப் படுத்துக் கொண்டான். இதை காதில் வாங்கி கொண்டு.. தலையில் அடித்துக் கொண்டே.. வெளியே சென்றான் இளா.
மனம் எல்லாம் அழுத்தமாகதான் தனதறைக்கு சென்றான் இளா. ஒன்றும் புரியாத நிலை.. நம்ம ஊரு பொண்ணா இருந்தா கூட துணிஞ்சி இறங்கலாம்.. அத்தோட, நம்ம பொழப்ப பார்க்கவே நேரம் இல்லை.. இதில் பொண்ணு, பிரச்சனைன்னு அலையனும்மா…’ மனதை எல்லா பக்கம் ஓட்டி பார்த்துக் கொண்டே வந்தான் தனதறைக்கு.
லலிதா, இரு குழந்தைகளுக்கும் நடுவில் படுத்துக் கொண்டு.. போனை பார்த்துக் கொண்டே விழித்துக் கொண்டிருந்தாள்.. கணவனுக்காக.
[the_ad id=”6605″]
இளா, வந்து ரெஸ்ட் ரூம் சென்று.. தன் மகனை சுவற்றின் ஓரம் எடுத்து விட்டு.. மகளை, அவன் பக்கம் நகர்த்திக் கொண்டே “தூங்கலையா லதா..” என்றான்.
“ம்.. கூம்.. என்ன ஆச்சு, ஏன்.. தம்பிகிட்ட, என்ன இவ்வளோ நேரம் பேச்சு… “ என்றாள்.. அத்தனையும் அறிந்தாக வேண்டிய.. மருமகளாக.
இளா “ச்சு.. சும்மாதான்..” என்றான்.
தன் போனின் வெளிச்சத்தை அவனின் முகத்தின் மீது பாய்ச்சி.. “ம்கூம்.. நம்பிட்டேன்..” என்றாள் ராகமாக.
இளா, கட்டிலின் ஓரத்தில் படுத்துக் கொண்டு.. தன் மனைவியை அணைத்தவாறே.. “தம்பி கூட பேசிட்டு வரது தப்பா… அதுக்கு இத்தனை கேள்வி கேட்கிற” என்றான்.
“அது பேசற நேரத்தை பொறுத்து… இந்த நேரத்தில், அதுவும் இவ்ளோ நேரம் என்ன பேச்சு…
காவ்யா வேற… லிங்கா, எங்கையோ விழுந்துட்டார்ன்னு சொன்னா… என்னாச்சு” என்றாள்.
லேசாக சிரித்த படியே “தெரியுமா.. அப்போ அதத்தான் முதலில் கேட்டிருக்கணும் நீ. ஆனா, ஏன் பேசுனேன்னு கேட்குற” என்றான் மனைவியை குற்றம் சொல்லியும், சொல்லாமலும்.
“ச்சு.. நான் போனேன்… தம்பி ரூமுக்கு… கதவை தட்டினேன்.. அவர் திறக்கல.. விட்டுட்டேன்..” என்றாள்.
“சரி விடு.. காலையில் பார்த்துக்கலாம்..” என உறங்க முற்பட…
“என்னாச்சு..” என்றாள் சீரியஸ் குரலில்.
“ஒண்ணுமில்ல டி” என்றான் இளாவும்.
“இல்ல.. நீங்க, உங்க தம்பிய எதுவும் சொல்ல மாட்டீங்களே.. என்னாச்சு.. சத்தம் கேட்டுதே.. ஏதோ லிங்கம் கத்தினாரே…” என்றாள் மீண்டும்.
“அது எப்படி டி.. கல்யாணம் ஆகும் போது ஒண்ணுமே தெரியாம இருந்த… இந்த ஆறு வருஷத்தில்.. கண்.. காதுலேர்ந்து… ஏழாம் அறிவு வரை.. வேலை செய்து உனக்கு” என அவளின் காதை கடித்த படி.. கிண்டல் குரலில் கணவன் கேட்க.
“அது இளா, வைப் இல்லையா.. அதான் ஸ்பெஷல் பவர்.. என்னாச்சுன்னு கேட்கறேன்” என்றாள் தன் காரியத்திலேயே கண்ணாக.
[the_ad id=”6605″]
“ஒண்ணுமில்ல டி.. அவன் ஒரு பொண்ண, லவ் பண்ணினான்.. அதுக்கு வேற கல்யாணம் பிக்ஸ் ஆகிடிச்சி.. சார்.. துக்கம் கொண்டாடுறார்.. அவ்ளோதான்” என்றான், ஏதோ ஹாப்பி பர்த்டே கொண்டாட்டம் போல.
“ஹய்யோ.. அப்போ என் ஒன்னு விட்ட சித்தப்பா பொண்ண.. லிங்கத்துக்கு பார்க்கலாம்ன்னு சொன்னீங்க…” என்றாள் அவசரமாக.
“பார்க்கலாம் டி.. சொத்து எவ்ளோ தேறும்” என்றான் கணவன் விளையாட்டாய்.
“ம்… ம்… இப்போ, உங்க தம்பிக்கு பொண்ணு கொடுக்கிறதே பெருசு.. இதில் சொத்து வேற கொடுப்பாங்க.. முன்னாடியாவது.. ஏதாவது சொல்லி வாங்கலாம்.. இப்போ நானே வேணாம்னு சொல்லிடுவேன்.. பொண்ண மட்டும் கொடுங்கன்னு கெத்தா சொல்லிடுவேன்…” என்றாள்.
“ம்.. சொல்லுவ சொல்லுவ… இப்படி யாரையாவது காதலிச்சி, தோத்து போனா தான், வரவளை தங்கமா பார்த்துப்பானுங்க பசங்க… அதனால, கவலை படாத.. நல்லாவே பார்த்துப்பான் என் தம்பி. அதனால, சொத்து முக்கியம்.” என்றான், குடும்பஸ்தன்… குறும்பாக..
லலிதா, திரும்பி கணவன் முகம் பார்த்துப் படுத்து கொண்டாள் “நீ… நீங்க எத்தனை பேரை.. கா…காதலிச்சு தோத்து போனீங்க” என்றாள். தயக்கமாக.. ஆர்வமாக.. இதுவரை இருந்த மருமகள் எண்ணம் போய், அக்மார்க் மனைவி எண்ணம் வந்தது லலிதாவினுள்.
இளா, முகம் அர்த்த ராத்திரியில் ஒளிர்ந்தது… “ம்… அப்போ நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேன்… அப்படிதானே” என்றான்.
லலிதா “ம்… அ.. அது…அதுக்கு பதில் சொல்லல நீங்க.. சீட் பண்றீங்க” என்றாள் சினுங்களாக..
“அடி போடி.. யாரு, சீட் பண்றா..” என்றபடி அவளை அணைத்துக் கொண்டான் ஆசையுடன்.. அதன்பின் சத்தமே இல்லை.. சந்தோஷ சாரல்கள் மட்டுமே.
காலை எப்போதும் போல, குழந்தைகளால் கலகலப்பானது வீடு. இளங்கோவின் மகன்.. தீபக் ukg படிக்கிறான். பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.
அவன் ஒருவன் கிளம்ப வீடே வேலை செய்தது. ஏதோ.. திருவிழாக்கு செய்வது போல.
லலிதா.. கிச்சனில் அவனுக்கு உணவு எடுத்துக் கொண்டிருந்தாள். பாட்டி, ஸ்நாக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். தாத்தா, பேத்தியுடன் ஐக்கியம் ஆகி இருந்தார்..
காவ்யா.. சாக்ஸ் போட்டுக் கொண்டிருந்தாள், தீபக்கு. இளங்கோ.. முன்னிருந்த தோட்டத்தில்.. நடந்துக் கொண்டே போன் பேசிக் கொண்டிந்தான்.
லிங்கம், இப்போதுதான் எழுந்து குளித்து வந்தான்.. கீழே. வீடே.. பரபரப்பாக இருந்தது தீபக்குக்காக.
லிங்கா “ம்மா.. காமாட்சி காபி” என்றான்.
தீபக் “சித்தப்பா… என்ன லேட் இன்னிக்கு” என்றான்.
“ச்சு.. சும்மாதான்… என்ன சத்தமே இல்லாம கிளம்பிட்ட… டெஸ்ட் எதுவும் இல்லையா” என்றான் ரகசிய குரலில்.
“இல்ல.. இன்னிக்கு.. வர்ஷினி பர்த்டே… அதான்.. சாக்லெட் தருவா.. எனக்கு மட்டும் பைவ் ஸ்டார்.. ஸ்பெஷல்…” என்றான் அவனும் ரகசிய குரலில்.
லிங்கம், “ஹேய்…” என ஹை பைவ்.. தந்தான் சிறுவனுக்கு.. “என் இனமடா நீ..” என குதுகலமாய் சொல்லிய படியே, மகனை கட்டிக் கொண்டு, சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
காமாட்சி “இந்தா டா…” என்றார் காபியை அவனிடம் தந்து. ஏதோ ஒரு குதூகலம் தொற்ற.. “என்ன கமா, இன்னிக்கு என்ன டிபன்..” என்றான்.
நல்ல எடுப்பான மெரூன் நிற புல் ஹன்ட் ஷர்ட் அணிந்து.. கம்பீரமாக அமர்ந்திருந்தான்.. லிங்கா. ஏதோ, பொண்ணு கேட்க போகும் தோரணையில்தான் அமர்ந்திருந்தான். கேட்ட உடன் அவனின் தாய்.. மேலும் கீழும் அவனை பார்த்து.. “ஈஷ்வர்.. சின்னவன் பார்க்கறான் பாரு… உன்னை பார்த்து, அவனும் லதான்னு பேர் சொல்றான்.. அவ அம்மாவ. ஒழுங்கா அம்மான்னு சொல்லு” என்ற படி உள்ளே சென்றார் அன்னை.
லிங்கம், தீபக்கிடம் “அப்படியா டா” என கேட்டுக் கொண்டிருக்க..
[the_ad id=”6605″]
அது ‘இல்லை’ என தலையாட்டியது.. “நீ, கூப்பிடு டா..” என ரகசியமாக, கண்ணடித்து சொன்னான் சித்தப்பா.
இளங்கோ, உள்ளே வந்தான். லிங்கத்தின், எடுப்பான தோற்றமும், சிரித்த முகமும்.. அவனுக்கு, பயத்தை தந்தது.. ‘இவன் தேர இழுத்து, தெருவில் விடாம, இருக்க மாட்டான் போலவே…’ என எண்ணிய படியே வந்து அமர்ந்தான்.
காவ்யா, தீபக்குக்கு ஊட்டி. விட்டு, அவனை.. வேனில் ஏற்றி அனுப்பி வந்தாள். அதுவரை.. இளங்கோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.
லிங்கம், இப்போது தன் அண்ணனை முறைத்த படியே இருந்தான். இளா கண்டும் காணாமல் தன் வேலையை பார்க்க.. ஒரு வழியாக பேசி முடித்தான் போனை.
இளா தந்தையிடம் “ப்பா, நான் சென்னை போறேன்.. நாலு நாள் ஆகும் வர, நீங்க, லிங்கா.. இங்க பார்த்துக்கோங்க..” என்றான்.. தம்பியை ஒரு பார்வை, பார்த்த படியே.
லிங்கா “என்னால முடியாது ப்பா… எனக்கு வேலையிருக்கு..” என்றான் பட்டென.
சத்தியமூர்த்தி “என்ன டா, என்ன வேலை…” என்றார் பொறுமையாக.
இளா அமைதியாக, லிங்கம் மாட்டிக் கொண்டான்.
லிங்கா “இரண்டு நாள், நான் ட்ரிப் போறேன்…” என்றான்.
சத்தியமூர்த்தி “எங்க.. இப்போ என்ன… தீபாவளி வேற வருது, அவன் வெளியூர் போறான்.. நீ வேலைய பாரு.. இல்ல, சென்னை நீ போ.. இந்த வேலைய முடி.. என்ன இளங்கோ.. இவன போக சொல்லு.. பார்த்துட்டு வரட்டும்..” என்றார்.
இளாக்கு.. ஏனோ நிம்மதியானது. இது நல்ல ஐடியாவா இருக்கே… சென்னை போயிட்டா.. ‘எங்க போய் பொண்ணு கேட்பானோன்னு’ பயப்பட வேண்டாம்.. அத்தோட, அந்த மினிஸ்டர் PA கிட்ட சொல்லி, தம்பிய அனுப்பறேன்னு சொல்லலாம்,.. என்ன, நம்ம.. ஆள் யாராவது இருக்கனும்… ‘ என எண்ணிக் கொண்டே.. தாடையை வருடிய படியே, தம்பியை பார்த்தார் இளா.
லிங்கம் அமைதியாக இருந்தான். தந்தை “எப்போ டிக்கெட் போட்டிருக்க..” என்றார் பெரியவனிடம்.
“ஈவ்னிங்..” என்றான் பொறுப்பாய்.
“அப்புறம் என்ன.. போயிட்டு வாடா.. இவன் இங்க இருக்கட்டும்.. என்ன இளங்கோ, யாரு.. நம்ம.. முருகதாசன் தானே… ” என்றார்.
தலையசைத்தான் தலைமகன்.
“என்ன டா.. சும்மா.. உட்கார்ந்துட்டு வா… அந்த அப்ப்ருவலுக்கு.. ஒரு சைன் வாங்கி வா… எல்லாம் இவன் பேசிட்டான்… நீ போய், சைன் வாங்கி வந்திடு. அப்போதான் அந்த ஆர்டர் அனுப்ப முடியும்… புரியுதா… சும்மா போய் உட்கார் போது.. எல்லாம் இவன் கவனிச்சிருப்பான்” என பொறுப்பாக சொல்லியவர், கடைசியில் நக்கலாகவும் சொன்னார்.
லிங்கா, தன் அண்ணனை முறைத்த படியே “நான் கேட்டது…” என்றான்.
“போயிட்டு வாடா.. பதில் சொல்றேன்” என்றான் அண்ணன் கொஞ்சம் அனுசரணையாக.
லிங்கா, கிளம்பினான் சென்னைக்கு.