என் காதல் கனா 29
ரான் சொன்னது போலவே தடபுடலான பார்டிக்கு ஏற்பாடு செய்திருந்தான். அவனது நண்பன் ஒருவனின் வீட்டில் ஓர் சனிக்கிழமை இரவு கேளிக்கைக்கு ஏற்பாடானது. இந்த இரண்டு வார இடைவெளியில் மூவரின் மனநிலையும் ஒவ்வொரு விதமாக இருந்தது.
தங்களைப் பற்றி சதீஷ் தன் நண்பனிடம் ஏற்கனவே சொல்லிவிட்டிந்தான் என்றே சுஜி திடமாக நம்பினாள். சதீஷோ விவேக்கிடம் தன் மனதைச் சொல்ல சமயம் பார்த்துக் காத்திருந்தான். சொல்லிவிட வேண்டும் என்று நிறைய முறை மனதில் தோன்றிய போதெல்லாம்,
“இப்போலாம் விவேக்கே சுஜி பத்தி பேசறதில்லை. இப்போ அவன்கிட்ட சொன்னா அவன் என்ன பண்ணுவான்னு தெரியலையே. சுஜி பத்தி அவனே மறந்து போயிருக்கற இந்த நேரத்தில, நாம ஏன் குட்டையைக் குழப்பனும்? கங்கிராட்ஸ் டான்னு சொல்லுவானா? இல்லை என்னை துரோகின்னு நினைச்சு பேசறதை நிறுத்திருவானா?” என விவேக்கிடம் பேசப் போகும் தருணங்களில் எல்லாம் இதுவே மனதில் உழன்று கொண்டிருந்தது.
அதனால் இப்போது அப்போது எனத் தன் குற்ற உணர்ச்சி காரணமாக விவேக்கிடம் எதுவும் சொல்லாது நாட்களை கடத்திக் கொண்டே இருந்தான்.
அதே நேரம், சுஜியிடம் இடையில் பேசிய போது, விவேக் தன்னிடம் ஒதுக்கம் காட்டுவதாக அவளுமே கூறியிருந்தாள். “எப்படியோ பிரச்சனையில்லாம எல்லாமே நடந்தா சரி.” என மேம்போக்காக சொல்லியிருந்தாள். எதைப் பற்றி சொல்கிறாள் என பட்டவர்தமாக சதீஷ் கேட்டானில்லை.
அப்போதும் சதீஷிற்கு மனதின் உறுத்தல் பூதகரமாகவே ஆகியிருந்தது. அவ்வளவு ஒன்றி பழகிவிட்டு, அவளிடம் “என்ன நல்லது நடக்கணும்?” என கேட்க வாய் எழவில்லை. அதே நேரம், சுஜியுமே விவேக்கிடம் நம்மைப் பற்றிச் சொன்னாயா என திட்டமாக கேட்கவும் இல்லை. இதை தனக்கு சாதகமாக எண்ணிக் கொண்ட சதீஷ், அப்போதைக்கு பிரச்சனை இல்லையே என்ற சிறிய நிம்மதியில் ஆழ்ந்து போனான்.
விவேக்கின் மனமோ, ரானின் கேளிக்கை விருந்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தது. அதற்கு முன்னர், சதீஷிடம் தன் மனதைப் பற்றிச் சொல்லலாமா என பலமூறை முன்னுக்குப் பின்னாக யோசித்தான். “ஒரு வேளை சுஜி வேண்டாம்னு சொல்லிட்டா, முதல்ல சுஜிகிட்ட பேசிட்டு அவ சொல்லற பதிலைப் பொறுத்து சதீஷ்கிட்ட சொல்லலாம்” என தீர்மானித்தான்.
ரான், சொன்னபடிக்கு தன் நண்பனின் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்திருந்தான். எம்மாவிற்கும் வித்யா மற்றும் சுஜிக்கும் அழைப்புகள் பறந்தன. பெண்கள் மூவரும் செல்வதாக ஒப்புக்கொண்டனர்.
சுஜி அமெரிக்கா வந்த பிறகு பெரிதாக பார்ட்டி டிஸ்கோ என எங்கேயும் சென்றிருக்கவில்லை. விடுதி, கல்லூரி, உணவகம் அதைவிட்டால் தேவையான சாமான்கள் வாங்க கடைத்தெருவிற்கு என அவளது உலகம் இதற்குள் மட்டுமே சுற்றிக் கொண்டிருந்தது. இயல்பாகவே கலகலப்பான குணம் கொண்ட சுஜி ரானின் கொண்டாட்டத்தை வெகுவாக எதிர்பார்த்தாள்.
“ஒரு வேளை இந்த நாளன்று, சதீஷ் தன் காதலை சொல்லுவானோ, காதல் சொல்லாவிட்டால் கூடப் போகிறது. சொல்லிக் கொண்டால் தான் காதலா என்ன? நடந்த நிகழ்வுகளுக்குப் பின் அவன் சொல்லாமல் போனாலும் தனக்குப் புரியாதா? அன்றைய விமானப் பயணத்திற்குப் பின், திரும்ப சதீஷுடன் இனிமையான ஒரு மாலையைக் கழிக்கப் போகிறோம் என்ற எண்ணமே அலாதியாக இருந்தது.
தன்னையே சுற்றிச் சுற்றி வருவானோ? இவள் என்னவள் என அனைவர் முன்னிலும் காட்டிக் கொள்ளாவானா மாட்டானா? தன்னிடம் மட்டுமே பேசிக் கொண்டிருப்பான். தோழிகள் எம்மாவும் வித்யாவும் கிண்டலடித்துக் தன்னை கொல்லப் போகின்றனர் என அவளது கற்பனை கோட்டைகளை பற்பலவிதமாக கட்டிக் கொண்டிருந்தாள் சுஜினி.
அந்த இரண்டு வாரங்களும் வேகமாகச் சுழன்று, அந்தச் சனிக்கிழமை தினமும் வந்திருந்தது. தான் வேலை பார்க்கும் உணவகத்தில் சம்மதம் பெற்றுக் கொண்டு அன்று விடுப்பு எடுத்திருந்தாள் சுஜி. “என்ன டிரஸ் போடலாம்?” என பெண்கள் மதியத்திலிருந்தே ஆராயத் துவங்கியிருந்தனர்.
“ஐய்யோ எங்கிட்ட நல்லதா துணியே இல்லையே?” என மூன்றாவது முறையாக தன் அலமாறியை கீழே கவிழ்த்துப் போட்டு துணிகளுடன் போராடிக் கொண்டிருந்தாள் வித்யா. எம்மா இதற்காகவென்று முதல் வாரம் ஒரு புது சிவப்பு நிற காக்டெயில் டிரஸ் வாங்கியிருந்தபடியால், கொஞ்சம் குழம்பாமல் இருக்கலானாள்.
சுஜிக்கும் பயங்கற குழப்பமே. வெறும் ஜீன் டாப்ஸ் ஸ்வெட்டர்னா ரொம்ப சிம்பிளா இருக்கும். அதற்காக எம்மாவைப் போன்று தொடை தெரியும் காக்டெயில் டிரஸ் போட்டுக் கொள்ளவும் விருப்பமில்லை. அது இது என ஆராய்ந்தவளின் கண்ணில் அன்றைக்கு உடுத்திய அந்தே அடர் பிங்க் சேலை தென்பட்டது.
“இது நல்லா இருக்குன்னு பத்து தடவையாவது சொல்லியிருப்பான்” என மனதில் எண்ணி மகிழ்ந்தவள், வித்யாவையும் தன் கூட்டில் சேர்த்துக் கொண்டாள். “டி, நாம சேலை கட்டினா என்ன? “ என வித்யாவின் ஆசையைத் தூண்டி விட, வித்யாவும் ஒப்புக் கொண்டாள்.
ஒருவழியாகத் தயாராகி பெண்கள் மூவரும் குறிப்பிட்ட முகவரியை அடைந்திருந்தனர். “இன்னமும் அவங்க யாரும் வரல போல இருக்கு. நாம ரொம்ப சீக்கிரம் வந்துட்டோம்” என வித்யா சுஜியிடம் மொழிந்தாள். உண்மையாகவே விவேக்கும் சதீஷும் இன்னமும் வந்து சேரவில்லை. ரானைத் தவிர அந்த வீட்டில் ஒருவரையும் தெரிந்திருக்கவில்லை.
உள்ளே நுழைந்ததுமே ரானிடம் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். எம்மா ரானுடன் பேசுவதில் மும்மரமாகிவிட, அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கா வண்ணம், வித்யாவும் சுஜியும் அந்த வீட்டில் அமையப் பட்டிருந்த பெரிய நீச்சல் குளத்தின் அருகே வந்து அமர்ந்து கொண்டனர்.
“உன் சேலை அழகா இருக்கு வித்து… யு லுக் வெரி ப்ரிட்டி டுடே…” என உண்மையான மகிழ்ச்சியுடன் வித்யாவைப் பாராட்டினாள் சுஜி. எப்போதும் தன் உடை அலங்காரத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத வித்யா, இன்று நிறைய மெனக்கொட்டிருக்கிறாள் என்று சுஜி கேலியாகக் கூற, வித்யா கலகலவென நகைத்தாள்.
வித்யாவின் குடும்பம் பற்றி சுஜி ஏற்கனவே அறிவாள். ஆந்திராவில் அவளது தந்தை பெரிய பணக்காரர். வித்யாவின் அக்காவையும் மேல்படிப்பிற்காக அமெரிக்கா அனுப்பி படிக்க வைத்திருந்தனர்.
அதே போல் திருமணத்தையும் தடபுடலாக நடத்தி வைத்தனர். மேம் போக்காகப் பார்த்தால் வித்யாவிற்கு தனிப்பட்ட முறையில் கவலைகள் என பெரிதாக எதுவும் இருப்பது போல் சுஜிக்குத் தோன்றியதில்லை. “சிலர் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற வாக்கியம் போலவே வித்யாவின் வாழ்க்கை இருந்திருக்கிறது.
கஷ்டம் என்ற சொல்லே தெரியாமல் வளர்ந்து விட்டிருந்தவள் வித்யா. வித்யாவும் தன் வீட்டினரைப் பற்றியும், தன் தந்தையின் குணத்தைப் பற்றியும் நன்றாக அறிந்திருந்தாள். என் அப்பாவுக்கு இந்த காதல் கீதல்லாம் சுத்தாம ஒத்துவராது சுஜி. அதுவும் அப்பா ரொம்பவே ஜாதி பார்ப்பார். நான் படிச்சு முடிச்சதும், எனக்கு இங்கையே அமெரிக்கால எங்க ஜாதி மாப்பிள்ளையை பார்ப்பார் என் அப்பா.. அவனை கல்யாணம் பண்ணிட்டு ஹேப்பியா இருப்பேன்” என வித்யா என்றோ ஒரு முறை கூறியது இப்போது சுஜியின் நினைவுகளில் அலைமோதியது.
“வித்தூ உன் அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காரா?” என சற்றும் சம்பந்தமில்லாமல் வினவினாள் சுஜி.
“ம்ம்.. தெரியலை.. இருக்கலாம். ஏன் கேட்கற?”
“சும்மா தான். ஜஸ்ட் தோணுச்சு..”
“என்னோட அக்காவுக்கும் அப்பா காலேஜ் ஃப்ர்ஸ்ட் இயர் முடிஞ்சதும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சார். ஏன்னா எங்க ஜாதில கல்யாணம் ரொம்ப கிராண்டா பண்ணுவாங்க. அதனால அப்பாக்கு நிறைய டைம் வேணும்.”
“பணமும்..”
“ம்ம். அதுவும் தான். அக்கா வீட்டு சைடில மாப்பிள்ளை இருக்காங்கன்னு அக்கா சொல்லிட்டு இருந்தா. தெரியலை. பார்க்கலாம். நீ ஏன் சம்பந்தமில்லாம இப்போ இதெல்லாம் கேட்கற? மேடம்க்கு கல்யாண ஆசை வந்துருச்சா? சதீஷ்ட்ட நான் வேணா பேசவா?”
“போடி.உனக்கு வேற வேலையில்ல..”என சொல்லும் போதே சுஜியின் முகம் அழகாக சிவந்து போயிருந்தது. அவளுக்கு அம்மாவின் நினைவுகள் எழுந்தன. சென்னையில் அம்மாவும் வித்யாவின் வீட்டினர் போன்று தனக்கும் வரன் தேடிக் கொண்டிருப்பாளோ என்ற கேள்விக்கு சுஜியிடம் பதிலிருக்கவில்லை. சுஜியின் மனக்கவலைப் பற்றி சற்றும் அறியாத வித்யா மேலும் பேசிக் கொண்டிருந்தாள்.
“அப்பாவுக்கும் அம்மாவும் இதே நினைப்புதான் சுஜி. எப்போ ஃபோன் எடுத்தாலும் ஊர்ல யாராவது கல்யாணத்தைப் பத்தியோ, அக்கா வீட்டு சைட் மாப்பிள்ளைப் பத்தியோ தான் ஏதாவது பேசிட்டே இருப்பாங்க..” என வித்யா கூறினாள்.
“உனக்கு அப்போ காதல் கல்யாணத்தில நம்பிக்கையில்லையா வித்தூ?”
“அதெல்லாம் எனக்கு செட்டாகாது சுஜி” என சட்டெனெ மொழிந்தாள் வித்யா.
“ஏன் அப்படி சொல்லற?”
“ஏன்னா என் அப்பா அம்மா பத்தி எனக்கு நல்லா தெரிஞ்சதால. அவங்க கண்டிப்பா லவ் மேரேஜ்க்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க. நான் சொன்னேனே, அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட், ஊர்ல அப்பாக்கு நிறைய நல்ல பேரு, மரியாதை இருக்கு. சோ, வேற ஜாதி, மதம்னு கனவுல கூட நினைக்க மட்டாரு. அதுவுமில்லாம,”
“ம்ம்ம் சொல்லு வித்தூ”
“எனக்கும் அவங்களை எதிர்த்து கல்யாணம் பண்ணனும்னு தோணினதில்லை. எனக்கு என் அக்கா கல்யாணம் மாதிரி கிராண்டா, எல்லா சொந்தகாரங்களும் வந்திருந்து, 7 நாள் கொண்டாட்டமா கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் ஆசை.”
“எதிர்த்து ஏன் பண்ணனும்? அவங்க சம்மதத்தோட நடக்கலாமே”
“அதெல்லாம் இந்த ஜென்மத்தில நடக்காது. எனக்கும் லவ் மேரேஜ்லாம் இண்டிரெஸ்ட் இல்ல. என்னை பத்தி விடு, எனக்கு என் வீட்டில பார்க்கற மாப்பிள்ளை தான். எனக்கும் இதுல மாற்றுக் கருத்து இல்லை. நீ என்ன சொய்யறதா இருக்க?” என வித்யா மொழிய சுஜி அமைதியாக இருந்தாள்.
சுஜிக்கும் தான் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை. “தெரியலை வித்யா. அம்மா இதைப் பத்தியெல்லாம் ஒரு தடவை கூட எங்கிட்ட பேசினதில்லை தெரியுமா? அவங்க மானசில என்ன நினைக்கறாங்கன்னு தெரியலை.”
“உனக்கு ஒரு மாமா பையன் இருக்கான்ல, ஒரு வேளை அவனை..” என வித்யா வாக்கியத்தை முடிக்கும் முன்னர், சுஜி அவசரமாக மறுத்தாள்.
“சே, சே, ஸ்ரீராமை அம்மாவுக்கு கொஞ்சமும் பிடிக்காது. அதுவுமில்லாம, லலிதா அத்தை, ஸ்ரீராமோட அம்மா அவங்க, அவங்களுக்கு என்னையும் அம்மாவையும் கண்டாலே வெறுப்பு. சோ, அப்படிலாம் எதுவும் நடக்க வாய்ப்பில்லை.”
“அப்போ நீயே முடிவெடுப்பன்னு நினைச்சிருப்பாங்களோ?”
“இருக்கலாம்.” என மெதுவாக இழுத்தவள், “நான் என்ன பண்ணட்டும் வித்தூ?” என வித்யாவிடமே திரும்ப மொழிந்தாள்.
“எனக்கு மனசில படறதை சொல்லறேன் சுஜி. என்னைக் கேட்டா, நீ முதல்ல சதீஷ்கிட்ட இதைப் பத்தி. எப்படி இவளோ நாள் எதுவும் பேசாம இருக்கன்னு தெரியலை. உன் மனசை அவன் கிட்ட சொல்லு. அவனோட அப்பா அம்மாவை விட்டு உன் அம்மாகிட்ட பேச சொல்லு. எல்லாமே ஈசியா முடியும்.”
“ரொம்ப சிம்பிளா சொல்லற வித்தூ. ஆனா இந்த சதீஷ் மனசில என்ன இருக்குன்னே சொல்ல மாட்டேங்கறானே.” என சுஜி சிந்தனையில் ஆழ்ந்தாள். அன்றைய தின நிகழ்வுகளை ஒன்றிரண்டாக தோழிகளிடம் ஏற்கனவே சொல்லிவிட்டிருந்தாள்.
“இதோ இப்போ வரை அன்னைக்கு நடந்ததைப் பத்தி அவனா ஒரு வார்த்தை கூட பேசலை தெரியுமா வித்தூ”
“அவன் பேசலைன்னா என்ன சுஜி இப்போ. நீ பேசேன். நீயும் ஏன் பேசாம இருக்க?”
“ஓருவேளை அப்படி எதுவும் இல்லைன்னு சொல்லிட்டா என்ன பண்ணறதுன்னு ஒரு சின்ன பயம் இருந்துட்டே இருக்கு வித்தூ. அதனால அவனே பேசினா பெட்டரா இருக்குமேன்னு வெயிட் பண்ணத் தோணுது.”
“நீ வெயிட் பண்ண வரைக்கும் போதும். அன்னைக்கு நடந்ததுக்கு என்ன பதில் சொல்லற சதீஷ்னு நேரடியா கேட்டுடு சுஜி. அதான் நல்லது. மனசில போட்டு குழப்பிட்டே இருக்காத. இன்னைக்கு பார்டில கேட்ரு. பார்ட்டி மூடில கொஞ்சம் எல்லாருமே ரிலாக்ஸ்டா இருக்கறப்போ சதிஷ்கிட்ட பேசிடு.” என வித்யா திட்டமாகக் கூறினாள்.
சுஜிக்கும் வித்யா சொல்வது சரியென்றே தோன்றியது. எத்தனை நாள் தான் அவனே வந்து சொல்வான் என காத்துக் கொண்டிருப்பது? அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதை சொல்லுவதில் என்ன பிரச்சனை. இன்று அவனாக சொல்லாவிடினும், எப்படியும் அவனிடம் இதுபற்றி பேசி ஒரு முடிவை எட்டிவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் ஆழ்ந்தாள் சுஜி.
“இன்னமும் சதீஷும் விவேக்கும் பார்ட்டிக்கு ஏன் வரலை” என வித்யா சொல்லி முடிக்கும் முன்னர், தோழர்கள் இருவரும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். எம்மாவுடன் பேசிக் கொண்டே வித்யாவும் சுஜியும் அமர்ந்திருந்த நீச்சல் குளத்தை எட்டியிருந்தனர்.
சுஜியின் புடவையைக் கண்ட ஒரு நொடி கால்களில் சிறிய தேக்கத்துடன், மெல்லவே நடை போட்டான் சதீஷ். அவனது இதயம் ஒரு நிமிடம் சட்டென நின்று பின்பு துடித்தது. விவேக் தன்னை கவனிக்கிறானா என சதீஷையும் மீறி அவன் கண்கள் விவேக்கிடம் ஒரு கணம் சென்று மீண்டன.
சதீஷ் மெல்ல பின் தொடர, சுஜியை அடைந்திருந்த விவேக், “ஹலோ வித்யா, ஹாய் சுஜி.. வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா?” என தன்மையாக விசாரித்தான். சதீஷ் சம்பிரதாய வார்த்தைகள் ஏதும் இன்றி வெறுமனே நின்றிருக்க, ரான் தன் நண்பர்களை தேடிக் கொண்டு வந்தான்.
“ஹே கைஸ்… கம் இன்சைட்.. சின்ன சின்ன கேம்ஸ் ஏற்பாடு பண்ணியிருக்கேன். கம் அண்ட் பார்டிசிபேட்” என அனைவரையும் வீட்டினுள்ளே அழைத்துச் சென்றான். மற்றவர்கள் முன்னே நடக்க, தன்னிடம் ஏதேணும் தனியாக பேசுவானோ என்ற ஆசையில் சுஜி சற்றே மெதுவாக நடந்தாள்.
அவள் நினைத்தது போலவே அவள் அருகில் வந்திருந்த சதீஷ், பக்கத்தில் எவருக்கும் கேட்காத வண்ணம் குரலைத் தழைத்துக் கொண்டு, “இந்த சாரி எதுக்கு இப்போ கட்டின. வேற நல்ல பார்ட்டி டிரஸ் இல்லையா உங்கிட்ட?” என சின்ன எரிச்சலுடன் முனுமுனுத்தான். சுஜிக்கு அதுவரையிலும் அழகாக மனதில் உருவாகியிருந்த மகிழ்வான குமிழ் சட்டென உடைந்து போய் விட்டது.
அழகழகான பலூன்களுடன் ஓடி வந்த குழந்தையை, மெல்லிய ஊசி கொண்டு ஒவ்வொன்றாக உடைத்தது போல், அவளுள் பொங்கிய மகிழ்ச்சி நொடியில் மனகுமறலாக மாறிப் போனது. “என்ன இப்படி பேசற சதீஷ்” என வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளைக் கேட்கும் முன்னர் சதீஷ் அவ்விடம் விட்டு வேகமாக நகர்ந்திருந்தான்.
சுஜிக்கு சதீஷின் பேச்சைக் கேட்டு ஆத்திரம் மூண்டிருந்தது. “பத்து தடவை அழகா இருக்குன்னு சொன்னானேன்னு சேலை கட்டிட்டு வந்தா, நல்லா இருக்குன்னு கூட சொல்ல வேணாம், எதுக்கு கட்டிட்டு வந்தன்னு கேட்காம இருந்திருக்கலாம்ல.. உர்ராங்குட்டான். என்ன நினைச்சு இப்படி கேட்டுட்டுப் போன இப்போ?” என சில நொடி பெருமூச்சுகள் எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.
சதீஷின் மனமோ திக்திக்கென்று அடித்துக் கொண்டது. “இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத கன்ஃபியூஷன். நானே எப்படி விவேக்கிட்ட சொல்லறதுன்னு தெரியாம குழம்பிகிட்டு இருக்கேன். இதுல இவ வேற.. அதுலையும் இன்னைக்கு பார்ட்டிக்கு விவேக் கிளம்பின அழகைப் பார்த்ததுமே எனக்கு பக்னு இருந்துச்சு” என நினைத்தவன், விருந்திற்கு வரும் முன்னே நடந்தவற்றை யோசித்தான்.
ரானின் கேளிக்கை கொண்டாட்டத்திற்கு சதீஷும் விவேக்கும் தயாராகிக் கொண்டிருந்தனர். சதீஷ் வழக்கம் போல் மிகவும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஏதோ ஒரு சட்டை, ஏதோ ஒரு ஜீன்ஸ் என அன்றைக்கு அணிந்து கொண்டிருக்கலாம். ஆனால் அன்றைக்கு சதீஷ் அவ்வாறு இருக்கவில்லை. இத்தனை வருட பழக்கத்தில் சதீஷ் எந்த எந்த இடத்திற்கு எப்படிப்பட்ட உடையணிவான் என ஓரளவு விவேக்கிற்கு தெரிந்திருந்தது.
முக்கியமான இன்டர்வியூ, மீட்டிங் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே சதீஷ் சற்றே மெனக்கெட்டு தன்னை அழகு படுத்திக் கொள்வான். அதுவுமே இன்றைக்கு தலைக்கு ஜெல் தடவி கொஞ்சம் ஸ்டைலாக ஸ்பைக் போன்று முடியை வைத்திருந்தது சதீஷ்க்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அவனது திமிரை எடுத்துக் காட்டுவது போலவும் அலட்சியமாக அதேசமயம் நேர்த்தியாக உடையணிந்திருந்தான்.
‘இவ்வளவு நாட்கள் கழித்து சுஜியை பார்க்கப் போறோம்” என மனதில் சிறிய சந்தோஷம் பூத்திருந்தது உண்மை. அவனையும் அறியாமல் தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டிருந்தான். “பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..” என மெல்லமாக விசிலடித்துக் கொண்டே தயாரானான். அந்தச் சட்டையை அணியும் போது கூட, “அவளுக்கு இப்படி கை மடிச்சுவிட்டா பிடிக்கும்… அன்னைக்கு கண்கொட்டாம அப்படி பார்த்தா” என முட்டி வரை சட்டையை மடக்கிக் கொண்டான். அதன் மீது ஸ்வெட்டர் அணிந்து கொண்டான்.
இதையெல்லாம் விவேக்கின் கண்கள் தானாகவே கிரகித்துக் கொண்டிருந்தன. கொஞ்சமே கொஞ்சம் பரபரப்பாக இருக்கிறான் என்பதை அடிக்கடி தரையில் அவன் கால்கள் தாளம் தட்டும் விதத்திலிருந்து விவேக் புரிந்து கொண்டான்.
ஆனால் எதற்காக இந்த எதிர்பார்ப்பு என்பதை விவேக்கால் சட்டென சொல்லிவிட முடியவில்லை. அவன் அறிந்த வரையில் சதீஷிடம் சுஜி அவ்வளவாக பேசுவதில்லை. ஆனாலும் சதீஷின் இந்தப் பரபரப்பு எதனால என யோசித்த விவேக்கின் மனம் குழம்பியது நிஜம்.
சாதாரண நாட்களிலேயே தனது வீட்டின் சூழலை மனதில் கருதி அவ்வளவாக சட்டைத் துணிமணி என ஆடம்பரப் பொருட்கள் எதிலும் செலவிட்டு பழகாத விவேக்கிற்கு சதீஷ் அணிந்திருந்த விலை உயர்ந்த சட்டையும் ஜீன்ஸும் அன்றைக்கு நிறைய பயத்தை மட்டுமே கொடுத்தன.
இதனை பொறாமை என்றோ பயம் என்றோ சொல்லாவிடினும் அவனது தோற்றத்தை கண்டு சற்றே தான் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது போல ஒரு உணர்வு விவேக்கிற்கு தோன்றியது. இந்த எண்ணம் மனதில் தோன்றியதும் விவேக்கின் முகம் சட்டென வாடிவிட்டது. அதுவரையில் தொனத்தொனவென பேசிக்கொண்டிருந்த நண்பன் சட்டென அமைதியாக அதை சதீஷும் கவனத்தில் கொண்டான்.
“என்னடா என்ன ஆச்சு உடம்புக்கு முடியலையா? இவ்வளவு நேரம் நல்லா பேசிட்டு இருந்த? சட்டுன்னு அமைதி ஆயிட்ட?” என நண்பனின் தோளை தொட்டு வினவ விவேக் தான் இருந்த மனநிலையில் தன் தோளில் படிந்த சதீஷின் கையை சட்டென தட்டிவிட்டான். “டேய்.. என்னடா” என கொஞ்சம் பதறிய சதீஷ் இரண்டடி பின்னால் நகர்ந்து இருந்தான்.
விவேக்கிற்கு தன் செய்கை தவறு என அடுத்த நிமிடமே புரிந்து விட்டிருந்தது. ஆனாலும் செய்தது செய்தது தானே. அதை மாற்றி விட முடியாதல்லவா? சரி ஆனது ஆகட்டும் எனத் தன் மனதின் பயத்தை முழுதாக இல்லாவிடினும் சிறிதளவேனும் சதீஷ் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்த விவேக், “இன்னைக்கு எதுக்கு நீ இவ்வளவு ஸ்டைலிஷ்ஷா டிரஸ் பண்ணியிருக்க?” என நண்பனிடம் நேராகவே கேட்டுருந்தான்.
விவேக்கின் கேள்வி சதீஷின் உள் மனதிற்கு புரிந்த போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத சதீஷ், “டேய் இதுல என்னடா இருக்கு? சாதாரண ஒரு சட்டை சாதாரண ஒரு பேண்ட். உனக்கு இந்த சட்ட பிடிச்சிருந்தா நீ வேணா போட்டுக்கிடா” என நொடியில் இறங்கி போய் பேசினான்.
இந்த பேச்சு விவேக்கின் தன்மானத்தை மேலும் சீண்டியிருந்தது. ஆனால் படிக்கும் காலத்தில், சதீஷின் சட்டை ஜீன்ஸ் என பலமுறை அணிந்திருக்கிறான். அப்போதெல்லாம் பெரியதாக தோன்றாத விஷயம், இன்று சதீஷ் அதே வார்த்தையைக் கூறிய போது விவகாரமாகத் தோன்றியது.
இருப்பினும் நல்லவேளையாக மனதில் நினைத்த வார்த்தைகளை அப்படியே கொட்டிவிடாமல் தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டான் விவேக். அப்போது வரையிலும், சதீஷிடம் இன்று தான் சுஜியிடம் பேசப் போகும் விஷயம் பற்றி சொல்லிவிட எண்ணியிருந்தவன், எங்கே வார்த்தைகள் வலுத்துப் போய்விடுமோ என நினைத்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
விவேக் அமைதியாக இருக்கவும் அவனை லகுவாக்கும் பொருட்டு, “ஷர்ட்ட நீயே போட்டுக்கடா.. மாப்பிள்ளை இவர் தான் ஆனா இவர் போட்டிருக்கற ஷர்ட் என்னுதுன்னு நான் யார்ட்டையும் சொல்ல மாட்டேன்” என விளையாட்டாக படையப்பா படத்தின் வசனத்தைக் கூறினான் சதீஷ்.
அதைக் கேட்டதும் விவேக்கிற்கு இன்னமும் கோபம் தலைக்கேறியது. அங்கே இன்னும் ஒரு கணம் நின்றால் தவறாகிவிடும் என அஞ்சியவன், என்ன செய்கிறோம் என்று நிதானம் இல்லாமல் கையில் பிடித்திருந்த கைபேசியை சட்டென மெத்தையின் மேல் வீசிவிட்டு அந்த அறையிலிருந்து வேகமாக வெளியேறினான்.
போகும்பொழுது கதவை மறவாமல் டொம் என அறைந்து சாத்திவிட்டேச் சென்றான். ஒரு சில நொடிகள் சதீஷிற்குத் தான் என்ன பேசினோம்? இவன் எதற்கு இவ்வளவு கோபப்பட்டு செல்கிறான்? என்பதே புரியவில்லை. “நான் சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன். ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?” என தனக்குத் தானே அவன் கேட்டுக்கொண்டு தன் அறையில் ஸ்தம்பித்து நின்றிருந்தான்.
விவேக் இதுபோலெல்லாம் அவசரமாக கோபப்படும் ரகம் அல்ல. அதிலும் சதீஷிடம் இதுநாள் வரையிலும் விவேக் இப்படி நடந்து கொண்டதும் இல்லை. தன் நண்பனின் கோபத்தைக் கண்டு சதீஷிற்கு அச்சமாகவே இருந்தது. என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதே தெரியாமல் போகும் சமயம் ஏற்படும் உருவம் தெரியாத பயம் சூழ்ந்து கொண்டது.
நண்பனைத் தேடிச் சென்று சமாதானம் செய்யவும் தோன்றவில்லை. சதீஷிற்கு அதிகம் தொந்தரவு கொடுக்காமல் சென்ற சிறிது நேரத்திலேயே திரும்ப அறையினுள் பிரவேசித்தான் விவேக். இம்முறை அவனது கோபத்தை கட்டுக்குள் வைத்திருந்தான் என்பது அவனது நிதானமான பேச்சிலேயே தெரிந்தது.
“சாரி மச்சான். கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன். மனசுல வச்சுக்காத.. சாரி டா” என சதீஷின் தோள் தொட்டுப் பேசினான் விவேக். அக்கணமே சதீஷிற்கு கோபம் விடைபெற்றிருந்தது.
“வரவர நீ எதுக்கு கோபவப்படறேன்னே தெரியல டா. நீ என்னை மாதிரி மாறிட்டு வர்ற. நான் உன்ன மாதிரி மாறிட்டு வர்றேன்.”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை.. ரொம்ப யோசிக்காத. அதான் சாரி சொல்லிட்டேன்ல.. வா பார்ட்டிக்கு டைமாச்சு போலாம்.”
“இல்லடா.. எனக்கு மூடே சரியில்ல.. நீ போயிட்டு வா. நான் வரலை” என சற்றே விலகி நிற்க எண்ணிய சதீஷ் விவேக்கிடம் மொழிந்தான்.
“நீ வரலைன்னா என்னால தான்னு எனக்கு உறுத்தலா இருக்கும். ப்ளீஸ்.. நிஜம்மாவே சாரி.. ஏதோ யோசனையில கத்திட்டேன். ப்ளீஸ்டா. வா போலாம்” என சதீஷை வம்படியாக இழுத்துக் கொண்டு பார்ட்டிக்கு வந்தான் விவேக்.
சதீஷ் வரும் வழிமுழுக்கவே, “எதும் பேசி எந்த 71/2யும் கூட்டிறக் கூடாது. போறோம், ரெண்டு பீர் அடிக்கறோம், விவேக் கூட பேசிட்டு, கப்பு சிப்புன்னு திரும்பி வந்திடறோம்.. என்னடா கைப்புள்ள” என மனதினுள் சொல்லிக் கொண்டே தான் சென்றான்.
ஆனால் அங்கே வந்ததுமே, அதிலும் சுஜி உடுத்தியிருந்த அந்தப் புடவையைக் கண்டதுமே சதீஷிற்கு தூக்கி வாரிப் போட்டது. “கண்டிரோல்..சத்தீஷ். கண்டிரோல்” என மனதினுள் சொல்லிக் கொண்டான். இருப்பினும், “இன்னைக்குப் பெருசா என்னவோ நடக்கப் போகுது. போறப்போ ஒன்னு விவேக் என்கூட இருப்பான், இல்லைன்னா சுஜி இருப்பா, ரெண்டு பேர்த்துல யாரோ ஒருத்தரை நான் இன்னைக்கு இழக்கப் போறது உறுதி” என மனதின் மூலையில் அபசகுனம் போல் அந்த எண்ணம் தோன்றியது சதீஷிற்கு.