“அஜூ..இங்க பாரு..அக்காவை பாருங்க..அஜூ..டேச்சு கண்ணா…”
தொட்டிலில் படுக்க வைத்திருந்த நான்கு மாத குழந்தை அர்ஜுனிடம் கண்களை உருட்டி முகத்தை சுழித்து நிலா அழகு காட்ட அவனும் தன் பொக்கை வாயை திறந்து கைகாலை ஆட்டி அவளுக்கு பதில் சொல்ல என்று அக்காவும் தம்பியும் விளையாடும் அழகை அமைதியாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் உதயா.அதுவாவது தன் தகிக்கும் உள்ளத்தை குளிர்விக்குமா என்ற நப்பாசையோடு..!!
கதவை திறந்து உள்ளே வந்த வெண்பா,
கால்களை மடித்து தன்னோடு கட்டிக்கொண்டு அதன்மீதே தலை சாய்த்து சோக சித்திரமாய் உதயா அமர்ந்திருந்த தோற்றத்தை கண்டு துண்குற்றாலும் அதனை வெளியே காட்டாது நிலாவிடம்,
“இந்தா போனை பிடி நிலா..யாராவது கால் பண்ணினால் எடுத்துட்டு வா..எங்கேயாவது வைச்சுட்டு தேடுறதே எனக்கு வேலையா போச்சு…அப்புறம் தம்பி கூடவே இரு..அழுதா கொண்டா சித்திட்ட சொல்லு..சரியா..”
என்றவள் உதயாவிடம்,
“உதயா..நீ பாட்டுக்கு எப்போதும் போல இன்னைக்கும் குளிச்சு ட்ரெஸ் மாத்திறாத..இன்னைக்கு உனக்கு நலங்கு ஞாபகம் இருக்குல்ல..உன் அத்தைங்க எல்லாம் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க..அவங்க நலங்கு வைச்சு குளிக்க வைப்பாங்க..அப்புறம் இந்த சேரி..ஜொவெல் எல்லாம் இங்க வைக்கிறேன்..”
என்று பேசியபடி அலமாரியில் அவள் குளித்தபின் நலங்கு வைக்கும் போது அணிய வேண்டிய உடையை வைக்க நிமிர்ந்து அவளை பார்த்தாலும் பதில் பேசவில்லை.
‘எனக்கேவா..’ என்று கிண்டலாய் நினைத்தாலும் ஒருபக்கம் மனம் அவளை சமாதானம் படுத்த விழைந்தது தான்.ஆனால் தான் இறங்கி போனால் மீண்டும் அவள் பழைய பல்லவியே தொடர்வாள் என்பதால் கல்யாணம் முடியும் வரை அமைதி காக்கும் முடிவோடு அறையை விட்டு வெளியே சென்றாள் வெண்பா.
இன்னும் இரண்டு நாட்களில் உதய் குமார் – உதயாவின் திருமணம் இருக்க இன்று மணப்பெண்ணிற்கு நலங்கு வைக்கும் வைபோகம்..!!!
அவர்கள் குடும்பத்தினர் மட்டும் இருந்தாலே அதகளப்படும் வீடு, திருமணத்திற்காக வந்திருந்த நெருங்கிய உறவினர்களால் அத்தனை ஆர்பாட்டமாய் கலைக் கட்டியது.நிற்க நேரம் இல்லாமல் எல்லோரும் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க மணமகளோ யாருக்கு வைக்கும் விருந்தோ என்பது போல் பற்றின்றி திரிந்தாள்.அதுவும் வெண்பா உதயாவை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்த அன்றில் இருந்து அவளோடு பேசுவதை நிறுத்திவிட்டாள்.
சம்மதிக்க மாட்டேன் என்று பிடிவாதமாய் நின்றவளை,
“என் வார்த்தைக்கு மதிப்பில்லாத வீட்டில் நானும் இருக்க மாட்டேன்..”
என்ற வெண்பாவின் அதிரடியான மிரட்டல் அசைத்தது. சும்மா பூச்சாண்டி காட்டுகிறாள் என்று ஒதுக்க முடியாதபடி வெண்பா தன் பிடியில் உறுதியாய் நிற்க எங்கே மீண்டும் அண்ணன் அண்ணி இடையில் பிரிவு வந்திடுமோ என்ற காரணத்திற்காகவே சம்மதித்தாள்.ஆனால் எதிலும் மனம் ஒப்பவே இல்லை.பிடித்தவனோடு தான் கல்யாணம் என்றாலும் எதுவுமே அவளுக்கு பிடிக்கவில்லை.
தன் விரலில் இருந்த நிச்சய மோதிரத்தை திருகியவளுக்கு அதனை அவன் அணிவிக்கும் போது பார்த்த நக்கல் பார்வையும் காதருகே குனிந்து ‘வசனம் பேசுனீங்களே உதயா..எல்லாம் அவ்வளவு தானா..” என்ற அவனது கிண்டல் மொழியும் இப்பொழுது நினைத்தாலும் கூட பற்றிக் கொண்டு வந்தது. நான் அவனை காதலிக்கிறேன் என்ற எண்ணத்தால் வந்த இளக்காரம் தானே அது..அதனை முறியடிக்கவே இப்போதாவது எதாவது செய்து இந்த கல்யாணத்தை நிறுத்தினால் என்ன என்று தோன்றிய அடுத்த நொடியே,
’நிறுத்தி…?அதனால யாருக்கு என்ன லாபம்..ஊரை கூட்டி இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்தை வைச்சிக்கிட்டு இப்படி பண்ணினால் எவ்வளவு பெரிய தலை இரக்கம்…எண்ணெய் சட்டிக்கு பயந்து அடுப்பில விழுந்த கதையா..?’
என்று அறிவு இடித்துரைக்க விரக்தியாய் மூச்சை இழுத்து விட்டாள்.
“அத்த…..!!!”
திடீரென நிலா கத்தவும் திடுக்கிட்டு, “ஏண்டி கத்துற..”
என்க,
“உனக்கு அந்த சத்தம் கேட்கலையா..காதுக் கொடுத்து நல்லா கவனி..”
என்று சீரியஸாய் சொல்லவும் அவளும் காதை தீட்டி கவனித்தவள் புரிந்துக் கொண்டதன் அறிகுறியாய் விழிகள் பெரிதாக தலையை மேலும் கீழு ஆட்டினாள்.
“அந்த அந்நிய சக்தி நம்மை தாக்க தான் வருதுனு நினைக்கிறேன்…”
என்று நிலா கலவரமாய் சொன்ன அதே நேரம் கதவு படாரென்று திறக்கப்பட திபுதிபுவென்று ஏழேடு இளம்பெண்கள், “டார்லிங் உதயா..” என்ற கூச்சலோடு ஓடிவந்து அவளை சூழ மூச்சு முட்டியது அவளுக்கு..
அதில் ஒருத்தி, “நைஸ் ரூம் யா..” என்று அறையை அளக்க, மற்றொருத்தி கையில் கேமராவோடு, “ஃபைனலி வியார் ஹியர்..அன்ட் திஸ் இஸ் அவர் ப்ரைட்..மோஸ்ட் பியூட்டிஃபுல் உதயா..” என்று தொகுப்பாளினியாய் வசனம் பேச இரண்டு பேர் நிலாவின் இரண்டு கன்னத்தையும் ஆளுக்கு ஒன்றா பிடித்துக் கொண்டு,
“ஹோ..நிலா பேபி..எப்டி இருக்க…”
என கொஞ்சுகிறேன் என்று கன்னத்தை பிய்த்து எடுக்க சில நிமிடங்களில் அவ்விடமே அல்லோல்கல்லோல் பட்டது.
அனைவரும் உதயாவின் அத்தைகளின் மகள்கள் தான்.உதயாவிற்கு சொந்த அத்தையோ தாய்மாமனோ இல்லையே தவிர ஒன்றுவிட்ட அத்தைகளும் மாமன்களும் ஏராளம்..அந்த அத்தைகளுக்கு மகள்களின் எண்ணிக்கையும் தாராளம்…எல்லாரும் வெவ்வேறு மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் செட்டில் ஆகி இருக்க இவர்கள் சந்திப்பு என்பது மிகவும் அபூர்வம் தான் எனினும் முக்கியமான விசேஷங்களில் சந்திக்க நேரும் போது அனைவரும் சேர்ந்து கூட்டும் ஏழரைகளுக்கு ச்சே ச்சே அலப்பறைகளுக்கு அளவே இல்லை.உதயாவும் அவர்களோடு சேர்ந்து கொட்டம் அடிப்பவள் தான் என்றாலும் இன்று தான் அல்லவோ பலியாடு..!!
தன் மீது பாச மழையை பொழிந்த இருவரிடமும்
“ஸ்ஸ்..ஃபைன் சித்தி..”
என்ற நிலா வலியில் பல்லை கடித்துக்கொண்டு அவர்கள் பிடியில் இருந்து விடுப்படுவதற்குள் போதும் போதும் என்றானது.
அவளை கொஞ்சி முடித்து,
“ஹேய்..அர்ஜு..”
என்று அடுத்த டார்கெட்டாய் அவர்கள் அர்ஜூனை பார்க்கும் போதே குறுக்கே பாய்ந்த நிலா, “சித்தி..கண்ணாலே கொஞ்சிக்கோங்க..நோ டச்சிங்..டச்சிங்..”
என்றாள்.எங்கே தன் தம்பியையும் கிள்ளி வைத்து விடுவார்களோ என்ற பயத்தில்..!!
”ஹிஹி..ஸோ ஸ்வீட் ஆஃப் யூ பேபி..” என்று மீண்டும் ஒரு கிள்ளு கிள்ளி உதயாவிடம் செல்ல, “பிசாசுங்க..” என்று கன்னத்தை தாங்கியபடி முணுமுணுத்தாள்.
“கல்யாண பொண்ணே..என்ன ஒரே சைலண்ட் ஆஃப் இந்தியாவா இருக்க..எங்க உதயாவா இது..”
“அதானே..என்ன மேடம்..எனி டைம் ட்ரீம்ஸ் தானா..நாங்க எல்லாம் கண்ணுக்கே தெரியலையா..ஆன்லைன் கூட வர மாட்டேங்கிற அவ்வளவு பிஸியா..”
“எப்படி வருவாங்க…ஃபுயூச்சர் லைஃப் பாட்னர் பத்தி பேசினாலே எல்லாரையும் கிண்டல் பண்ணிட்டு இப்போ மேடம்ல ஃபர்ஸ்ட் மேரேஜ் பண்ண போறாங்க..நாம எல்லாம் ரிவெஞ் எடுப்போம்னு தெரியாதா..அதான்..எஸ்கேப் ஆகிறா..விட்றுவோமா..தேடி வந்துட்டோம்ல..”
அவளுக்கு பேச சந்தர்ப்பமே கொடுக்காமல் ஆளாளுக்கு பேச,
“அப்படி எல்லாம்..” என்று ஆரம்பிக்கும் போதே மற்றோருவள்,
“எஸ் திடீர்னு மேரெஸ்..அதுவும் மாப்பிள்ளை வெண்பா அக்காவோட ப்ரதர்..சம்திங் ஃபிஸ்ஸி..சொல்லு மச்சி..லவ்வா..”
என்று இரகசிய குரலில் குறும்பாய் இழுத்தாள்.
விளையாட்டாய் கேட்டாலும் எல்லாருக்கும் ஆச்சரியம் தான்.இருக்குடும்பத்திற்கும் இடையிலான பிரச்சனை எல்லா உறவினர்களையும் சாட்சியாய் கொண்டு தானே அரங்கேறியது.
அதனால் எல்லாமும் எல்லாருக்கும் தெரியும்..இத்தனை ஆண்டுகள் அவர்களோடு உறவு இல்லை என்றும் தெரியும்.ஆனால் இப்பொழுது திடீரென உதய்-உதயாவின் திருமணம் என்றபோது எல்லாருக்கும் ‘எப்படி எதனால்..” என்ற கேள்வி தான்.அதுவும் உதய் பேசிய பேச்சுகள்..!!!
இதனை பற்றி கேட்டால் ஆழிக்கண்ணன்,
“பெண் கேட்டார்கள்…ஜாதகம் பொருந்தியது..மாப்பிள்ளையை பார்த்தப்போ எனக்கும் திருப்தி..அதான் சம்மதித்து விட்டேன்..” என்று இரத்தின சுருக்கமாய் முடித்துவிட மேற்கொண்டு எதுவும் கேட்க முடியாமல் போனது.
“அடியேய்..நீயா கிளப்பி விடாதே..அப்படி எல்லாம் எதுவும் இல்ல..”
“நம்புறா மாதிரி இல்லையே..சரி உன்னவர் எப்படி..??உங்க என்கேஜ்மெண்ட் போட்டோ பார்த்தேன்..ஜோடி பொருத்தம் பிரமாதம்..”
“பார்க்க மட்டுமா..நேம்லையும் தான்..உதயா – உதய்..அதாவது உதயாவின் சரிபாதி உதய்னு சிம்பாளிக்கா சொல்றா மாதிரி..ஹவ் ரொமாண்டிக்..?”
“என்னை வைச்சு செய்யணும்னு முடிவோட வந்திருக்கீங்கனு நல்லா தெரியுது..அதுக்குனு வந்ததுமே ஆரம்பிக்காதீங்கடி..உங்களுக்கு அவரை பற்றி தெரியணும்னா இதோ இவளிடம் கேளுங்க..அவங்க மாமா பெருமையை அள்ளி விடுவா..என்னை ஆள விடுங்க..”
என்று நிலாவை கைக்காட்டினாள்.அங்கே அவர்கள் வீட்டில் ஒரு வாரம் இருந்துவிட்டு வந்தபின் ஒரே உதய் புராணம் தான் ‘மாமா இப்படி’ ‘மாமா அது செஞ்சாங்க..’ ‘மாமா அப்படி..’ என்று உதய்யின் ப்ராண்ட் அம்பாஸிட்டர் ஆகவே மாறி விட்டாள். இப்பொழுதும் இவர்களிடம் சலிக்காமல் தம் மாமனின் வீர தீர பராகிரமங்களை எடுத்துவிட ‘ஹப்பாடி என்னை விட்டால் சரி..’ என்று ஆசுவாசமானாள்.அப்படி எல்லாம் உன்னை நிம்மதியடைய விட்டுவிடுவேனா என்பதுபோல் நிலா பேச்சின் ஊடே,
“அத்தை நடிச்ச ஷார்ட் ஃப்லீம் எடுத்ததே என் மாமா தான்..” என்று பெருமையாய் கூற, “ரியலீ..” என்று அவர்கள் போட்ட சத்ததில் தொட்டிலில் இருந்த குழந்தை திடுக்கிட்டு அழ தொடங்க உதயா தூக்கி சமாதானம் படுத்த முயன்றும் அழுகை குறைந்தபாடில்லை.அதன்பின் நிலா ஓடிபோய் லாவண்யாவை அழைத்துவர தாயிடம் சென்றதும் தான் அமைதியானது.
தூங்க வைக்கிறேன் என்று லாவண்யா பிள்ளையோடு சென்றுவிட உதயாவை கோர்த்துவிட்டவளோ விளையாட போகிறேன் என்று நழுவி விட சிங்கிளாய் சிக்கினாள் நம் சிங்கபெண்.
“சொல்லுங்க..சொல்லுங்க..சொல்லுங்க..நீங்க யாரு..ஷூட்டிங்க அப்போ என்ன நடந்தது…?”
“ஒன்னும் நடக்கலை..கற்பனையை கண்டபடி ஓட்டாதீங்க..”
“அவ சொல்ல மாட்டா டி..நான் சொல்றேன் பார்..அந்த ஷூட்டிங் அப்போ இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்து இருக்கும்…ரெண்டு ஃபேமிலிக்கும் தான் ஆகாதே..ஸோ பூவெல்லாம் கேட்டுப்பார் ஸ்டைலில் போராடி அவங்களை சமாதானம் படுத்தி..லாஸ்டா கல்யாணத்தில் கொண்டு வந்து நிறுத்திட்டீங்க..தி ஹேப்பி எண்டிங்..ட்ட்டாஆஆன்…”
திரைகதை,வசனம், டைரக்ஷன் எல்லாம் அவர்களே செய்து மினி சினிமாவே ஓட்ட, ‘தெய்வமே..என் மேல கருணையே இல்லையா..” என்று வானை நோக்கி புலம்பினாள்.
“கருணை நிறையவே இருக்கு குழந்தாய்..” என்று இறைவன் பதில் சொல்லும் வண்ணம் ஜெகனை ஆபத்தபாண்டவனாய் அனுப்பி வைத்தார்.
“அடேய் குல விளக்குகளாஆஆ….இது தாத்தா காலத்து வீடுமா..நீங்க போடும் சத்த்ததில் லேசா ஆட்டம் கண்டுடும் போல..என்னமோ ஏதோனு பதறியடிச்சு ஓடிவரேன்..வொய் கேள்ஸ்..வொய்..”
“கல்யாண வீட்டில் இந்த சத்தம் கூட இல்லாட்டி எப்படி அத்தான்..”
என்று ஒருத்தி சிரிக்க,
“சத்தம் கேட்டு தானே..எங்களை பார்க்க வந்தீங்க..இல்லேனா வந்திருப்பீங்களா..?? நாங்க வந்ததில் இருந்து தேடுறோம்..கண்ணிலே சிக்க மாட்டேங்கிறீங்களே…”
என்று ஒருத்தி குறும்பாய் கண்சிமிட்டினாள்.
“பொண்ணோட அண்ணனா சும்மாவா..? ஆயிரம் வேலை இருக்காது..??”
என்றான் காலரை உயர்த்தி கெத்தாக..
ஜெகனால் நிச்சயத்திற்கு வர முடியவில்லை என்றாலும் அவன் விடுமுறையை கணக்கில் கொண்டு தான் திருமணதேதி குறிக்க முந்தைய தினம் தான் வந்திருந்தான்.வந்ததில் இருந்தே கல்யாண வேலை அவனையும் இழுத்துக் கொண்டது.
“தங்கச்சி கல்யாணம் முடிய போகுது..அடுத்தது உங்களுக்கு தான்..என்ன அத்தான் ரெடியா..”
“உன் மைண்ட் வாய்ஸை கேச் பண்ணிட்டேன்..அதுக்கு நான் ஆளு இல்ல தங்கங்களா..கண்டிப்பா உங்களில் யாரையும் கட்டிக்க மாட்டேன்..”
“ஹான்..இதெல்லாம் போங்காட்டம்..தயா அத்தான்..இப்படி தான் ஏமாத்திட்டாங்க..உங்களையும் அப்படி விட்டுவிட முடியாது..அப்புறம் அத்தை பொண்ணுங்கனு எதுக்கு இத்தனை பேர் இருக்கோமாம்..?
“சரி அதை அப்புறம் பூவா தலையா போட்டு முடிவு பண்ணுவோம்..இப்ப எல்லாம் கீழ ஓடுங்க..கூப்பிடுறாங்க..”
என்று கூறி அனைவரையும் அனுப்பிய பின் புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது.
“ஹப்பாடி..எப்படி தான் இதுங்களை வீட்டில் வைத்து சமாளிக்கிறாங்களோ..”
“நடிக்காதடா..சும்மா வெளியே ஸீன் போட்டாலும் சைட் அடிக்க தானே வந்த..”
தன் அண்ணனை அறிந்தவளாய் உதயா சொல்ல,
“ஹிஹி.. கண்டுபிடிச்சிட்டியா..ரைட்டு விடு..” என்று அசடு வழிந்தவனை கண்டு புன்னகைத்தாலும் அதில் ஜீவனில்லை.
“ஏன் எப்பவும் டல்லாவே இருக்க உதயா..கல்யாண பொண்ணு மாதிரியா இருக்க…”
“காரணம் உனக்கு தெரியாதா..?போ நீ வேற கடுப்பை கிளப்பாத..”
ஜெகனிடம் அவள் எதையுமே மறைக்கவில்லை.அவனோடு அலைபேசியில் பேசியது உட்பட..எனவே அவன்,
“உனக்கு உதய்யை கல்யாணம் பண்ணிக்கிறது பிரச்சனையா..இல்லை அவனிடம் மேரெஜ் நிறுத்துறேன் சவால் விட்டுட்டு அதில் ஜெயிக்க முடியாதது பிரச்சனையா..?”
என்று நேரடியாய் கேட்க அதற்கு அவளிடம் பதில் இல்லை.உம்மென்ற முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவளை,
“உன்னோட இந்த கோபம் இருக்கு பாத்தியா அது டெம்பரவரி தான்..பட் இந்த மொமண்ட் எல்லாம் அப்படி கிடையாது..உன் தற்காலிக கோவத்திற்காக காலம் பூரா அழியாம நிலைச்சு நிற்க போகிற இந்த தருணங்களை கெடுத்துப்பியா.?ஸோ மை டியர் அஞ்சலி பாப்பா..சிரிச்ச முகத்தோட எழுந்து வருவீங்களாம்..”
என்று அவள் கையை பற்றி கீழே அழைத்து சென்றான்.அதன் பின் அன்றைய சடங்குகள் அனைத்தும் சிறப்பாய் நடந்தது.
மாலை அணிவித்து கன்னங்களில் நலங்கு பூசப்பட்டு மனையில் மணக்கோலத்தில் அமர்ந்திருப்பது போல் அத்தனை அழகாய் இருந்த உதயாவை கண்டு மதியின் கண்கள் கலங்கி போனது.
“அண்ணா..என்னாச்சு..”
தங்கையவள் பதற அவள் தலையை வருடி கொடுத்த மதி,
“ரொம்ப அழகா இருக்க உதயா..உன்னை இப்படி பார்க்க அம்மாவுக்கு கொடுத்து வைக்கலேயே..??”
என்ற போதே அவன் குரல் கமற தாயின் நினைவில் உதயாவிற்கும் அழுகை வந்தது.
“என்ன அண்ணா..நீங்களே கலங்கினா எப்படி..”
என்றபடி அருகில் வந்த ஜெகன் மதியின் தோளில் கைவைக்க மறுபுறம் தயாளன் உதயாவின் கண்ணீரை துடைத்து,
“அம்மா…எப்பவும் நம்ம கூடவே தான் இருப்பாங்க..”
என நெகிழ்ச்சியாய் சொல்ல என்று அண்ணன்கள் சூழ உதயா அமர்ந்திருந்த காட்சி அத்தனை கவிதையாய் இருக்க சுற்றி இருந்தோரின் மனமும் நெகிழ்ந்தது.
அவர்களையே உதட்டில் உறைந்த புன்னைகையோடு பார்த்து நின்ற வெண்பா,
“ஓய் லாவண்யா..அப்படியே ஃபோட்டோ எடேன்..”
என்று அருகில் நின்றவளிடம் அவசரமாய் சொல்ல அவளும் தன் அலைபேசியை உயிர்ப்பித்து அத்தருணத்தை க்ளிக்கினாள்.
“அஞ்சு விரல்கள கோர்த்து நாம
பத்து விரலா ஆனோம்
மணகோலத்தில் பார்த்தா
அந்த சின்ன பொண்ண காணோம்
சில நாளில் நீ என் தாயே
சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும்போது
அந்த வானம் விரிக்கும் பாயே..
நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாரேனே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே..”
பின்னனியில் இளசுகள் போட்ட கோரஸில்,
“போங்கடி..” என்று வெட்க சிணுங்களோடு உதயா தலையை சிலுப்ப அவர்கள் கேலியில் மற்றவர்கள் வாய்விட்டு சிரித்தனர்.
“தாயில்லாத போதும் கூட பொறந்தவக ஒற்றுமையா இருக்கிறதை பார்க்கும் போது..என் கண்ணே பட்டுடும் போல..ஏ வெண்பா புள்ள..எல்லாத்தை உட்காத்தி வைச்சு சுத்தி போடு..”
ஆழிக்கண்ணனின் சிற்றன்னை ஒருவர் பாசமாய் கூற,
“சரிங்க ஆச்சி..”
விரிந்த புன்னகையோடு அவள் தலையாட்ட,
“மருமகளுங்க ஒத்துமையா இருக்கிற வரை அண்ணன் தம்பிங்களுக்கு வீட்டில சண்டை எங்கேந்து வர போகுது..அதில் எல்லாம் வெண்பாவை அடிச்சிக்கவே முடியாது..கெட்டிகாரித்தேன்..”
என்று ஒருவர் சொல்லவும் மற்றொருவர்,
“அதில் மட்டுமா..எல்லாத்திலையும் தான்..வாயில்லாத பிள்ளைனு நினைச்சேன்..ஆனால் அண்ணன் மனசையும் மாத்தி பல வருஷம் பகையா இருந்த ரெண்டு குடும்பத்தையுமே சேர்த்து..இதோ தன் தம்பிக்கே உதயாவை முடிச்சிட்டாலே..கெட்டிக்காரியே தான்..”
என்று விளையாட்டை கூறினாலும் அதில் பொதிந்திருந்த குத்தலை அவள் அறியாமல் இல்லை.
அதற்கும் புன்னகை மாறாமல் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் தன் போக்கில் தன் வேலையை தொடர,
‘அதானே..இவ வாயை பிடுங்க முடியுமா..”
என்று முணுமுணுப்போடு அவர் அடுத்த கதையை பேச தொடங்கினார்.
“ஏன் க்கா..அந்த அத்தை பேசுறது உங்களுக்கு புரியலையா..?? எனக்கே கடுப்பா வருது..நீங்க சிரிக்கிறீங்க..”
லாவண்யா வெண்பாவை புரியாமல் பார்க்க அதற்கும் ஒரு சிரிப்பு தான்.
“அக்கா..எல்லாத்துக்கும் சிரிக்காதீங்க எனக்கு கன்ஃபுயூஸ் ஆகுது..”
பாவமாய் அவளை பார்த்த லாவண்யாவிடம்,
“நான் ரியாக்ட் பண்ணனும்னு எதிர்பார்த்து தான் அந்த அத்தை அப்படி பேசினாங்க..அவங்க எதிர்பார்த்தது நடக்கலை என்றதும் அடுத்த வேலையை பார்த்துட்டு போயிட்டாங்கல்ல..அவ்வளவு தான்..இப்படி நிமிசத்துல முடிஞ்சு போகிற விசயத்துக்கு எல்லாம் வாதம் பண்ணி சும்மா இருக்கிற வாயிக்கு எல்லாம் அவல் ஆக கூடாது…புரியுதா..??”
என்று சொல்ல, “இப்படி ஒன்னு இருக்குதோ..ஹப்பாடி..நீங்க வேற லெவல் போங்க..”
என்று வியந்து சிரித்தாள் லாவண்யா.
நேரம் யாருக்காகவும் நிற்காமல் ஓட அதோ இதோ என்று திருமண நாளும் அழகாய் விடிந்தது.