என் காதல் கனா – epilogue
ஒன்னரை வருடங்கள் கழித்து,
நியுயார்க் நகரம் – Dec 31 மாலை 6 மணி
பனிப்போர்வை போட்டு மூடப்பட்டிந்த அந்த ரெட் ஸ்டோன் பில்டிங்கின் ஆறாவது மாடியின் பால்கனியில் சுஜினி நின்றிருந்தாள். சக்கரை துகள்கள் போல் பனி தூவிக் கொண்டிருந்தது. அணிந்திருந்த ஸ்வெரட்டரை இன்னமும் உடம்புடன் இருக்கிக் கொண்டாள். குளிருக்கு இதமாக ஹாட் சாக்லேட் பருகியபடிக்கு பால்கனியில் வேடிக்கை பார்ப்பது அவ்வளவு பிடித்தமாயிருந்தது சுஜிக்கு.
கல்லூரி முடித்ததும் முன்னரே முடிவெடுத்திருந்தபடிக்கு அனைவரிடமும் நல்ல முறையிலேயே விடை பெற்றாள். தோழிகளுக்கு எந்த ஒரு சந்தேகமும் தோன்றவில்லை. வித்யாவிற்கு அவளது அக்கா கணவரது உதவியுடன் டெக்ஸாசில் வேலை கிடைத்திருந்தது.
எம்மாவும் ரானும் எங்கோ ஒரு மலையில், ஸ்கையிங் ரிசார்ட்டில் ஒரு வாரமும், அதனை அடுத்து அங்கிருந்து கிராஸ் கண்டரி ட்ரிப் என பல மாகாணங்களை சுற்றிப் பார்க்கவும் முடிவெடுத்திருந்தனர்.
விவேக் சொன்னது சொன்னபடிக்கு நடந்து கொண்டான். சதீஷுடன் பேசிவிட்டானா, அவனை மன்னித்து விட்டானா என்றெல்லாம் சுஜிக்கு அறிந்து கொள்ளத் தோன்றவில்லை. சதீஷ் சுஜியிடம் தானாகவே ஒதுக்கம் காட்டினான். மீதி இருந்த ஆறுமாத கல்லூரி காலத்தில் சுஜியிடம் பேச முயற்சிக்கவில்லை.
கல்லூரி முடியும் நேரம், பெரும்பாலானா இந்திய மாணவர்கள் அமெரிக்க கம்பெனியில் வேலை தேடிக் கொள்வது சகஜம். இல்லையென்றால் படிக்கும் காலத்தில் ஏடுத்திருந்த விசா சொல்லுபடியாமல் போய்விடும்.
விவேக்கிற்கு, சதீஷின் அண்ணன் கிஷோரின் உதவியால் நிஷாவின் கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது. சதீஷும் முயன்றிருந்தால், அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் நிட்சயமாக வேலை சம்பாரித்துக் கொண்டிருக்க இயலும். ஆனால் அவனுக்கு இங்கிருக்க விருப்பமில்லை என்பதை தெளிவாக உணர்ந்திருந்தான்.
உயிர் நண்பன் யாரோ போல் பார்ப்பதும், பேசுவதும், நம்பிய ஒருத்தியை சந்தர்ப்ப சூழல் காரணமாக அவளுடன் துணையிருக்க முடியாமல் போன பச்சாதாபமும், அவனை இவர்களிடம் இருந்து விரட்டின எனலாம். இந்தியா திரும்புவதிலேயே குறியாக இருந்தான். அதிலும் அவனது அண்ணன் திருமணம் வேறு நெருங்குவதால், அவனது பெற்றோருக்கும் அவன் இந்தியா வருவது குறித்து மகிழ்ச்சியே.
விவேக் சதீஷிடம் பழைய படிக்கு உரிமையாக பேசாவிடினும், அவனை ஒரேயடியாக வெறுத்து ஒதுக்கிவிடவில்லை. தேவையான விஷயங்களை மட்டும் அவ்வப்போது பேசிக் கொண்டான். அதுவும் கூட சுஜி சொல்லியதற்காக என்றும் இல்லை. சொல்லப் போனால், இதில் சுஜி சொல்ல எதுவும் இருக்கவில்லை.
விவேக்கின் கோபம் எல்லாம், சதீஷ் சுஜியை விரும்புகிறான் என்பது அல்லவே, அவனால் தான் முட்டாளாக்கப் பட்டுவிட்டோமே என்ற ஆத்திரம் தான். ஆனால், அது நீண்ட நாட்கள் மனதில் நிலைக்கவில்லை. தன் மனம் புண்பட்டுவிடாதவாறு எப்படி சொல்வது என்று யோசித்து தான் சதீஷ் அப்படி நடந்து கொண்டுள்ளான் என்பதை விவேக்கால் புரிந்து கொள்ள முடிந்தது.
சண்டை நடந்த அன்றும் கூட அவன் சுஜியை சமாதானப்படுத்தவோ அவள் சார்பாக பேசவோ செய்யவில்லை. தனக்கு நிலைமையை விளக்கிவிட வேண்டும் என்றே முனைந்தான். அவனது பெற்றோருடனான அந்த பரபரப்பு பேச்சு அதனை புரியவைத்திருந்தது.
இதில் சதீஷின் மனநிலை தான் மிகவும் மோசமானதாக இருந்தது. ஒரு பக்கம் நண்பனையும் இழந்தாயிற்று. அவனுக்கு புரியவைக்க விளைகிறேன் பேர்வழி என அவனை எதிர்பார்த்து நின்றவளையும் ஒதுக்கியாயிற்று.
அதை விடவும், தன்னால் தான் சுஜி அவளது அம்மாவிடம் பேச முடியாமல் போய்விட்டது என்ற பெரும் குற்ற உணர்வு. இனி எப்படி சுஜி தன்னை மன்னிப்பாளோ என்ற கவலை பூதாகரமாக மனதில் அழுத்தியது. “போச்சு அவளோ தான்.. அவ என்னை விட்டு போயிட்டே இருப்பா” என அவன் அச்சப்பட்டது போலேயே சுஜியும் நடந்து கொண்டாள்.
இந்தியாவிலிருந்து வந்ததில் இருந்தே பெருதும் ஒதுக்கம் காட்டினாள். “கொஞ்ச நாள் போனா சரியாகிடும்” என தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான். மூன்று மாதம் கழித்து எதார்த்தமாக கிராசரி ஸ்டோரில் அவளைக் காணவும், அவனையும் மீறி சிரித்து விட்டிருந்தான். சுஜியோ, யாரோ எவரோ என்பது போல், முன் பின் தெரியாதவனைக் கண்டது போல் எந்த உணர்ச்சியும் காட்டாது போய்விட்டிருந்தாள்.
கோபமாக முறைத்தோ, நான்கு வார்த்தை திட்டியிருந்தால் கூட அவனுக்கு இந்த அளவு வலித்திருக்காது. ஆனால் இந்த ஒதுக்கம் அவனை மேலும் மேலும் வாட்டியது. அவள் கண்களை விட்டு மறைந்து விட வேண்டும் என்ற அளவிற்கு. அவளை இனிமேல் நினைக்கக் கூடாது என்ற அளவிற்கு. ஆனால் அதையும் சரிவர செய்ய இயலவில்லை.
உடன் இருந்த போது, எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் இருக்கும் போது ஒரு அலட்சியப் போக்கு இருந்தது. ஆனால் இனி அவளை தொடர்பு கொள்ள இயலாது, தன் வாழ்வில் அவள் இல்லை, போய்விட்டாள் என்ற எண்ணத்தை கையாள முடியவில்லை. மனம் முழுக்க வலித்தது. எதையும் செய்யப் பிடிக்கவில்லை. என்ன உண்டோம் என்று உணராமல், ருசி மறந்து, ஆசைகள் மறந்து திரிந்தான்.
விவேக் சற்றே மாறியிருப்பது போல் தோன்றியது ஒன்றே பெரும் ஆறுதலாக இருந்தது சதீஷிற்கு. எங்கே தவறிழைத்தோம் என புரிபடவில்லை.
நண்பன் வேண்டும், காதலியும் வேண்டும், இருவரையும் மற்றவருக்காக இழக்கப் பிடிக்கவில்லை என நினைப்பது எப்படி தவறாகும். இவளை விடுத்து அவனையோ, நண்பனை விடுத்து இவள் மட்டும் இருந்தாலோ, எப்படியும் தன் மனதின் ஒருபாகம் எங்கோ இருப்பது போல் அல்லவா இருக்கும். இரண்டிற்கும் ஆசைப்பட்டு, இப்போதோ இரண்டையும் இழந்துவிட்ட நிலையில் அல்லவா இருக்கிறான்.
வெறுத்துப்போய் தான் சுற்றிக் கொண்டிருந்தான். எப்போதடா இந்தியா செல்வோம் எனக் காத்திருந்தான். விவேக்கிற்கு தன் அண்ணன் கிஷோரின் மூலம் வேலை கிடைத்த விஷயம் கேள்விப்படவும் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு. “அவன் வீட்டு கஷ்டம்லாம் தீர்ந்துச்சு….” என மனதாற நினைத்தான்.
“டே, விவேக்கு நிஷா கம்பெனில ஜாப் கிடைக்சிருக்கு.. நீ எங்கையாவது அப்ளை பண்ணியாடா? என்னதாண்டா உன் ப்ளான்?” என நிறைய தடவை கிஷோர் கேட்டாயிற்று. “ஒண்ணும் ப்ளான் இல்லை.. உன் கல்யாணத்துக்கு இண்டியா வரணும் எப்படியும்.. அது முடிச்சதும் யோசிக்கலாம்” என பட்டும் படாமல் பதில் சொல்லிக் கொள்வான்.
அதே போன்று கல்லூரி முடியவும், ஆளாளுக்கு ஒருபக்கம் சென்று விட, சதீஷ் இந்தியா திரும்பி விட்டான். அடுத்த மூன்று மாதத்தில் கிஷோரின் திருமணம் நடந்தேறியது. விவேக் திருமணத்திற்கு வருவான் என பெரிதும் எதிர்பார்த்தான். ஆனால் புதிய வேலையில் அப்போது தான் சேர்ந்திருந்த படியால் உடனே விடுப்பு எடுத்துக் கொள்ள இயலவில்லை விவேக்கால் என்று கிஷோரின் வாயிலாக தெரிந்து கொண்டான்.
திருமணத்திற்கு அழைக்க, சுஜியின் மாமாவீட்டிற்குச் சென்ற போதும் வேண்டுமென்றே தன் தந்தையுடன் ஒட்டிக் கொண்டான். எதார்த்தமாக வினவுவது போல் “சுஜி எப்படி இருக்கிறாள்? ஃபோன் செய்வாளா?””என அவள் மாமாவிடம் வினவி, அவளது புது முகவரி கிடைக்குமா என்று கூட தேடிப் பார்த்தான்.
அவள் மாமா கொடுத்தது அவளது பழைய தொலைப்பேசி எண்ணும், ஒரு பழைய முகவரியும். அந்த முகவரியே அவளது தோழிகளான, எம்மாவும் வித்யாவும் அவனுக்குக் கொடுத்தனர். அந்த குறிப்பிட்ட முகவரியில் அவள் இல்லை என்பதும், அந்த தொலைப்பேசி எண்ணும் போலி என்பதும் சதீஷ் நேரில் சென்று கண்டறிந்த உண்மைகள்.
சுஜினி என்னவானாள், எங்கே சென்றாள் என ஒரு தடயமும் விட்டு வைக்கவில்லை அவள். விவேக்கிற்கு ஏதோ விஷயம் தெரியும் என்பது மட்டில் சதீஷிற்குப் புரிந்தது. வெட்கத்தை விட்டு அவனிடம் கேட்டே விடலாமா என்று கூட யோசித்தான். ஒரு முறை கேட்கவும் செய்தான். விவேக்கும் அதே பழைய எண்ணையும், போலி முகவரியையுமே அவனிடம் கொடுத்தான்.
ஃபேஸ்புக், டிவிட்டர் என எதிலுமே அவள் இருக்கவில்லை. மாயமாய் மறைந்து போய்விட்டிருந்தாள். ஆறு மாதங்களுக்கும் மேலாக இதே போல் கழித்தவன், கிஷோரின் வர்புறுத்தலின் பேரில் அமெரிக்காவில் வேலை தேடிக் கொண்டான். ப்ரூக்லினில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்து சில மாதங்கள் உருண்டோடி விட்டன.
கிஷோருக்கு பெண் மகவு பிறந்திருக்க, குழந்தையைக் காண அவனது பெற்றோர் வந்திருந்தனர். அதற்காக ஃபிலடெல்பியா சென்ற சமயம், நீண்ட நாட்கள் கழித்து, விவேக்குடன் பேசும் சூழல் வாய்த்தது.
சதீஷின் மெலிந்து போன தேகமும், ஒட்டிய கன்னமும், தூக்கம் மறந்த கண்களும் விவேக்கிற்கு நிறைய விஷயங்களைக் காட்டிக் கொடுத்தன. அதிலும், நீண்ட நேரமாக ஆளுக்கு கையில் ஒரு பியரை வைத்துக் கொண்டு அருகருகே அமர்ந்திருந்தார்கள். விவேக் எதுவும் பேசாமல் குற்ற உணர்வுடன் அமர்ந்திருக்கும் நண்பனிடம், “டே” என ஒரு வார்த்தை தான் பேசினான்.
கையில் இருந்த கண்ணாடியை கீழே வைத்த சதீஷ் சட்டென நண்பனை கட்டிக் கொண்டான். “செத்தரலாம் போல இருக்குடா…நீயும் இல்லாம, அவளும் இல்லாம.. அவளோ வெறுமையா இருக்கு” என கண்களில் கண்ணீர் வழிய தோளில் முகம் புதைத்தவனை தானும் கட்டிக் கொண்டான் விவேக்.
பொறுக்கமாட்டாமல், “சதீஷ் சுஜி எங்க இருக்கான்னு நிட்சயமாவே எனக்குத் தெரியாது. ஆனா அவ நீ திரும்பிப் போனா உன்னை மன்னிக்கற மனநிலையோட தான் உன்னை விட்டுப் பிரிஞ்சு போனா. அது மட்டும் நிட்சயமாத் தெரியும்” என கடலூரில் சுஜி தன்னிடம் பேசிய விஷயங்களை ஒன்றுவிடாமல் சதீஷிடம் சொல்லியிருந்தான் விவேக்.
“உண்மையா தான் சொல்லறியா? உண்மையாவா?” என திரும்பத் திரும்பக் கேட்டவனின் கண்களில் அப்படி ஒரு ஒளி மின்னியது. அவனது உயிரே அவனது கண்களின் வழியே மின்னுவது போல் உணர்ந்தான் விவேக்.
“நீ எப்படி கண்டு பிடிப்பியோ தெரியலை.. ஆனா கண்டு பிடிச்சுருவன்னு மட்டும் தெரியும்” என நண்பனின் தோளில் மெல்லமாக இடித்தான். அடுத்து வந்த வாரங்கள் சதீஷ் வாழ் நாளைப் பொறுத்த வரைக்கும் “வாரணம் ஆயிரம்” நாட்கள் தான். கல்லூரி துவங்கி அவள் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரிடமும் விசாரித்து கடைசியாக, அவளது கல்லூரித் தோழியான சரண்யாவிடம் பேசினான்.
அமெரிக்கா வந்த புதிதில் இந்த கல்லூரித் தோழி சரண்யாவின் மாமா வீட்டில் தான் சுஜி முதலில் தங்கியிருந்தாள். அமெரிக்காவிள் அவளுக்கு பரிட்சயமான நபர் எனில் அது இந்த சரண்யாவாக இருக்கக் கூடும் எனக் கணித்து, அவளிடம் சுஜியைப் பற்றி கேட்டறிந்து அவளது புதிய முகவரியைப் பெற்றுக் கொண்டான்.
பெரிய பரிசு பொருள் கிடைத்து விட்டதைப் போன்ற மகிழ்ச்சி அவனுக்கு. “கடவுளே இதே முகவரியில் அவள் இருக்க வேண்டுமே” என இதுவரையில் எதற்குமே துணைக்கு அழைக்காத கடவுளை வேறு கூட்டு சேர்த்துக் கொண்டான்.
நியூயார்க் நகரில் down town மேன்ஹேட்டன் பகுதியில் இருந்த முகவரியை தேடிச் சென்றான். உள்ளே உடனே சென்று விட அவ்வளவு தயக்கம். அதனால், சுஜி வெளியே வருகிறாளா என அப்பார்ட்மெண்டின் வெளியே காவல் நிற்க ஆரம்பித்தான்.
அவளது முகவரி கிடைத்தது ஒரு நவம்பர் மாதத்தில், அன்றில் இருந்து வேலைக்கு செல்லும் நேரம் தவிர, அவள் அப்பார்மெண்ட் வாயிலில் தவமிருக்கலானான். சுஜியை சந்தித்த அந்த மாலை நேரத்தை அவன் கனவிலும் மறக்க முடியாது. அவளது அப்பார்ட்மெண்டின் கதவுகளைத் தள்ளிக் கொண்டு, அணிந்திருந்த கோட்டை இறுக்கமாக பிடித்தபடிக்கு, எதிர்சாரியில் செல்லும் பெண்ணை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் செல்லும் வரையிலும், ஏன் அவள் அந்த வீதியில் இருந்து மறைந்து விட்ட போதிலும் கூட இருந்த இடத்தை விட்டு நகராமல் சிலை போல் கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நவம்பர் மாத மாலையில் இருந்து அவனுடைய வேலையே அந்த வீட்டின் வாயிலில் சென்று நின்று கொள்வது தான்.
தூர இருந்தே அவளைப் பின் தொடர்வான். அவள் வேலைசெய்யும் அலுவலகம். வழக்கமாக சாப்பிடும் உணவகம், செல்லும் புத்தகக் கடை, காய்கறி வாங்கும் தள்ளுவண்டி என அவள் சம்பந்தமான அனைத்தையும் மெளனமாக கிரகித்துக் கொண்டான்.
அவனது பெரிய கவலையெல்லாம், “இந்த ஒன்னரை வருடத்தில் யாரையேனும் காதலித்துத் தொலைத்திருப்பாளோ?” என்பது மட்டுமே. ஆனால் அப்படி ஏதேனும் இருந்தால், இந்த ஒன்னரை மாதமாக பின் தொடர்ந்ததில் தெரிந்து போயிருக்குமே என்ற நம்பிக்கை வேறு.
சுஜியை கண்டு பிடித்துவிட்ட விஷயத்தை விவேக்கிடம் பகிர்ந்து கொண்டான். “போய் பேசு டா.. நான் தான் சொல்லறேனே.. நீயா வந்து பேசினா, அவ மனசு சீக்கரம் மாறிடும். அவ அந்த நம்பிக்கையில தான் போனா” என நண்பனுக்கு உற்சாகமூட்டினான். ஆனால் எங்கே தானாக சென்று பேசி, இங்கிருந்து ஓடிச் சென்று விடுவாளோ என சதீஷ் பெரிதும் பயந்ததால் தூர இருந்தே அவளைக் காண்பது இப்போதைக்கு போதும் என நிம்மதி அடைந்து கொண்டான்.
அன்று நியு இயர் ஈவ். நகரமே மகிழ்ச்சியாக, ஆரவாரமாக காட்சியளித்தது. சுஜி அவளது பால்கனியில் நின்று வெளியே விழும் பனியை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளது வீட்டில் இருந்து அரை மணி நேர தூரத்தில் டைம்ஸ் ஸ்குவேயர் இருந்தது. அங்கே நள்ளிரவு நியூ இயரின் போது “பால் டிராப்” என்னும் நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவிவதுண்டு.
சுஜிக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். ஆனால் தனியே செல்ல அச்சமாகவும், எரிச்சலாகவும் இருந்தபடியால் செல்ல வேண்டாம் என முடிவெடுத்திருந்தாள். ஆனாலும் அவளால் வீட்டில் அமைதியாக அமர்ந்திருக்க முடியவில்லை. சற்றே உலாத்தி விட்டேனும் வரலாம் என கோட்டை மாட்டிக் கொண்டு கீழே இறங்கினாள். நேரம் பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
பனியில் மெல்ல நடைப் போட்டவள், அவளது அப்பார்ட்மெண்டின் அருகே விளக்கு வெளிச்சத்தில் நின்றிருந்த உருவத்தைப் பார்த்து சட்டென திகைத்து விட்டிருந்தாள். அந்த விளக்கொளியில், நின்றிருந்தது விவேக்கும், அவன் கையணைப்பில் நின்றிருந்த வித்யாவையும் பார்த்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.
“ஏ..” என பனியில் கால்கள் புதைய ஓடியவள் இருவரையும் ஒரு சேர கட்டிக் கொண்டாள். “கைஸ்….வித்யா.. விவேக்.. என்னால நம்பவே முடியலை.. நீங்க எங்க இங்க.. அதும் என் அப்பார்மெண்ட் வாசல் முன்னாடி, அதும் கை கோர்த்துக்கிட்டு, வாட் இஸ் ஹேப்பனிங்க” என சரமாரியாக கேள்விகளாய் தொடுக்க, “அதெல்லாம் இருக்கட்டும், திடீர்ன்னு எங்க ஓடிப்போன?ம்ம்ம்” என வித்யா வலுவாக சுஜியின் கைகளைப் பிடித்து திருகினாள்.
“ஹே ஹே.. வலிக்குது விடுடீ.. என்ன விவேக்கை கட்டி பிடிச்சுட்டு நிக்கற. அப்போ உன் அப்பாவோட அந்த அமெரிக்க மாப்பிள்ளை என்ன ஆனான்?”
“அவன் தான் இவன்.. இந்த மாதிரி ஒரு நல்லவன் இருக்கான். எனக்கு அவனை பிடிச்சிருக்கு, உங்களுக்கும் ஒ.கேன்னா நான் அவங்கிட்ட பேசலாமான்னு அப்பாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் விவேக்கிட்ட ப்ரபோஸ் பண்ணேன்” என விவேக்கின் நெஞ்சில் லேசாகக் குத்தினாள் வித்யா. “அதெல்லாம் பெரிய கதை. அப்பறமா சொல்லறேன்…நீ எப்படி இருக்க? அதை சொல்லு..” என வித்யா ஆர்வமாக வினவினாள்.
“சே, வா.. உள்ள போய் பேசலாம்.. மேல தான் என் அப்பார்ட்மெண்ட்..” என சொல்லிக் கொண்டே போன சுஜி, சட்டென நிறுத்தி, “வெயிட்.. என் அப்பார்ட்மெண்ட் இதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என கச்சிதமாக அந்தக் கேள்வியைக் கேட்க, விவேக் அதற்கு பதிலாக எதிர்சாரியில் நின்றிருந்த உருவத்தைக் கைகாட்டினான்.
இருளில் இருந்து வீதி விளக்கின் வெளிச்சத்திற்கு வந்த சதீஷ், தன் ஆக்மார்க் ராயல் சல்யூட்டை வைத்து, இதழ் பிரிக்காமல் சுஜியை நோக்கி புன்னகைத்தான். சுஜி நின்ற இடத்தில் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டிருந்தாள். பக்கவாட்டில் நின்றிருந்த விவேக்,
“சதீஷ் ரெண்டு மாசமா இதே வேலையா அலைஞ்சான். உன் வீடு, ஆபீஸ்னு நீ எங்க போனாலும் உன் பின்னாடியே திரிஞ்சான் ரெண்டு மாசமா. நியு இயர் அன்னைக்கு அவ தனியா இருப்பா, நீங்களாவது போய் பேசுங்கன்னு எங்களை கூட்டிட்டு வந்ததும் அவன் தான்” என விவேக் சொல்லிக் கொண்டிருந்த விஷயம் சுஜியின் காதுகளில் விழுந்ததா எனத் தெரியவில்லை.
அவளது முகத்தை விட்டு கண்களை விலக்காமல், சதீஷ் ரோட்டைக் கடந்து அவள் அருகில் நடந்து வந்தான். வந்தவன் நேரே அவள் நின்றிருந்த இடத்தில், இரண்டடி விட்டு தரையில் மண்டியிட்டவன், ஒரு அழகிய சிவப்பு நிற ரோஜாவை அவளிடம் நீட்டினான். சுஜிக்கு பூவை வாங்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. சதீஷையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஐம் சாரி,,, ஃபார் எவ்ரிதிங் சுஜினி. என்னை மன்னிச்சுருடீ.. கம் பேக் டு மி.. ஐ காண்ட் லிவ் வித் அவுட் யூ டீ””என தடுமாற்றத்துடன் பேசியவனை மறுபேச்சில்லாமல் இறுக கட்டிக் கொண்டாள்.
அவன் கைகள் சுஜியை சுற்றி வாகாக பற்றிக் கொண்டது. “ஐம் சாரி டூ… ரியலி.. என்னை விட்டுப் போயிடாத இனிமே.. ஐ ஃபீல் வெரி லோன்லி சத்தீஷ்..” என அவன் நெஞ்சோடு இன்னமும் இன்னமும் புதைந்து கொண்டாள். அவள் முகத்தை நிமிர்த்திய சதீஷின் கண்களும் கலங்கிப் போயிருந்தன.
அவன் என்னவோ சொல்ல வாய் திறக்க, சுஜி அவன் காலின் மேல் தன் கால்களை கொண்டு ஏறி நின்று, அவனது உதட்டில் தன் உதடுகளைப் பதித்துக் கொண்டாள். சதீஷின் கைகள் அவளது கன்னத்திலும் இடையிலும் பாதுகாப்பாய் அணைத்துக் கொண்டன. சில நொடிகளில் மூச்சு வாங்க வாய் திறக்க முடிந்தவனை, திரும்பவும் இழுத்துப் பிடித்துக் கொள்ள, “ஈஸி ஈஸி பேபி.. எங்கயும் போயிட மாட்டேன் உன்னை விட்டு… ப்ராமிஸ் பேபி..” என அவளது காதுகளில் முனுமுனுத்தான்.
சுஜி அவனை இன்னமும் இறுக அணைத்துக் கொண்டாள். சற்று தள்ளி நின்றிருந்த விவேக்கும் வித்யாவும், ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். விவேக்கின் கைகளை வித்யா மென்மையாக அழுத்த, விவேக் வித்யாவை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.
இரண்டு ஜோடிகளும் நிறைய சண்டை சச்சரவுகளுடன், மகிழ்ச்சியாக நீண்ட நாட்கள் வாழ்ந்தனர் என்பதையும் நான் சொல்லவேண்டுமா என்ன?
கனா அனுதினமும் தொடர்ந்ததாம்.