என் காதல் கனா 32
கடலூர் வீட்டிற்கு சுஜி வந்து அன்றோடு மூன்றாம் நாள் முடிந்திருந்தது. பழைய காலத்து ஓட்டு வீடு தான். பெரிய தாழ்வாரமும் அதனைச் சுற்றி மூன்று அறைகளும். ஒன்று சமையல் அறை. மற்ற இரண்டும் படுக்கை அறைகள். பெண்கள் உள்ளறையில் படுத்துக் கொள்ள, ஒரு அறை “விவேக் அண்ணாவிற்கு” உண்டானது.
சுஜி பெண்கள் உறங்கும் அறையில் தங்கவைக்கப்பட்டாள். பெட்டி மற்றும் சாதனங்கள் அறையில் இருந்த போதும், மற்ற சிறுவர்களுடன் தாழ்வாரத்தில் பொழுது கழிக்கவே விரும்பினாள்.
“சுஜிக்கா, சுஜிக்கா” என விவேக்கின் சின்னம்மா பிள்ளைகள் சடுதியில் அவளுடன் ஒட்டுக் கொண்டனர். கல்லூரி படிக்கும் சகோதரன் சற்றே ஒதுக்கம் காட்டினான். அவன் வயதுக்கே உண்டான கூச்சம். விவேக்கின் தங்கை “சிட்டு” என அழைக்கப்படும் சித்ரா அம்மா ராதாவுடன் ஒட்டுக் கொண்டே திரிந்தாள். சுஜியிடம் பேச இஷ்டமில்லை என்பது போல், கேட்ட கேள்விக்கு மட்டுமே பதிலுரைத்தாள்.
இப்படி கலகலவென பேசிக் கொண்டிருக்கும் வீட்டில் தான் பேசாவிடினும், நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருப்பதே பெரிய பொழுது போக்காக இருந்தது சுஜிக்கு. விவேக்கின் அன்னை ராதாவைக் காண்கையில் பிரமிப்பாக இருந்தது.
ஒற்றைப் பெண்மணி, ஒற்றை வருமானம். இத்தனை வயிறுகள் வாடாமல் பார்த்துக் கொள்ளும் கடமை. முடிந்த அளவு வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு, மற்ற வேலைகளை சின்னம்மா தேவியிடம் ஒப்படைத்துவிட்டு செல்லும் பாங்கு ரசிக்கும் படிக்கு இருந்தது.
சின்னம்மா தேவி வெகுளியாய், வீட்டு வேலைகளை சலிக்காமல் செய்து கொண்டு, “ராதாக்கா…இன்னைக்கு சாம்பாருக்கு முருங்கக்காயா, முள்ளங்கியா?” என சின்ன சின்ன விஷயங்களுக்கும் ராதாவின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டு நடப்பது என அந்த வீட்டில் ஒரு வித உயிர்பான வாழ்க்கைச் சக்கரம் பிசிறில்லாமல் சுழல்வது போல் தோன்றியது சுஜிக்கு.
விவேக் சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களை தன் அறையிலேயே கழித்தான். மாலை 4 மணிக்கு டீ குடித்துவிட்டு வெளியே சென்றால், வீடு திரும்ப இரவு எட்டாகியிருக்கும். நேரே தன் அறையில் சென்று முடங்கிக் கொள்வான். இரவுச் சாப்பாட்டை அனைவரும் தாழ்வாரத்தில் அமர்ந்து உண்பது அழகாக இருந்தது .
பொடுசுகள் தங்களின் அன்றாட பள்ளி நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள, தேவி அந்த வீதியில் யார் வீட்டில் என்னவாயிற்று என செய்தி வாசிப்பார். குடும்பம் முழுக்க ஏதாவது பேசிக் கொண்டே சாப்பிடும் நேரம் சுஜியின் மகிழ்வான சில மணித்துளிகள்.
அன்றைக்கும், அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க, சின்னம்மா தேவியின் கடைக்குட்டி வாண்டு சுகன்யா, “பெரிம்மா..ராதா பெரீம்மா… இந்த 2 வீடு தள்ளி இருக்கற மாரியம்மா பாட்டி, முக்கு வீட்டு மஞ்சுஅக்கா, கடைக்கார ஜோதி அத்தையும் நான் ஸ்கூல் முடிஞ்சு வர்றப்போ என்னை பிடிச்சு வச்சுகிட்டாங்க..”
“ஓ… எதுக்கு?” என சாதத்தை பிசைந்து கொண்டே வினவினார் ராதா.
“நம்ம வீட்டில இருக்கற புது அக்கா யாருன்னு கேட்டாங்க?”
“நீ என்ன சொன்ன?”
“சுஜி அக்கா என் விவேக் அண்ணா ஃப்ரெண்டு.. ஊர்ல இருந்து வந்திருக்காங்கன்னு சொன்னேன்”
“அதுக்கு அவங்க, அக்கான்னா கூப்பிடற.. உங்க விவேக் அண்ணா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டானான்னுல நினைச்சேன் அமெரிக்கால இருந்து? உங்க பெரியம்மா ஏன் அந்த பொண்ணை வெளிய விடாம வீட்டுக்குள்ள பொத்தி பொத்து வச்சுக்கறா? நாங்க கண்ணு வச்சிருவோம்னா அப்படின்னு கேட்டாங்க… நான் பதில் சொல்லாம ஓடி வந்துட்டேன்” என 8 வயது சிறுமி, தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளை வார்த்தை மாறாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். ராதாவிற்கு கோபமாக இருந்தது.
“இந்த கிழவிக்கு இதே வேலை. அடுத்தவ வீட்டில என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க என்ன ஒரு ஆர்வம். இத பாரு சுகன்யா, இனி அந்த கிழவி கூப்பிட்டா, நிக்காத, அப்படியும் எதாச்சும் கேட்டா, எங்க பெரியம்மாட்ட கேட்டுக்கோங்கன்னு சொல்லிடனும். நின்னு பதில் சொல்லக் கூடாது சரியா?”
“சரி பெரியம்மா..” என சொல்லி அடுத்த விஷயத்திற்கு தாவியிருந்தாள் சுகன்யா. ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுஜிக்கு சங்கடமாக இருந்தது. தன்னால் இவர்களுக்கு கெட்ட பெயர் வந்துவிடுமோ என நினைத்தாள். விவேக்கின் முகத்தில் இருந்து எதுவும் கணிக்க முடியவில்லை.
இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவனது அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டான். சுஜி சற்று நேரம் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்துவிட்டு, அவளும் படுக்கச் சென்றுவிட்டாள். அவளுடன் துணைக்கு சின்னம்மா தேவியின் பிள்ளைகள் இருவரும் படுத்துக் கொண்டனர்.
விவேக்கின் தம்பி விவேக்குடன் படுத்துக் கொள்ள, ராதா, தேவி மற்றும் சிட்டுவும் தாழ்வாரத்தில் பாய் விரித்தனர். நீண்ட நேரமாகியும் சுஜிக்கு உறக்கம் வரவில்லை. கூடத்தில் மெல்லிய குரலில் தேவியும், ராதாவும் பேசிக் கொண்டிருந்தது தெளிவாகவே அறைக்குள் கேட்டது.
“ராதாக்கா, கேட்டா கோவிச்சுக்காம பதிலு சொல்லுவியா?”
“நான் ஏன் கோவிக்க போறேன் தேவி?”
“இல்லை, அந்த பொண்ணு அம்மா தவறிட்டாங்க, அதனால தனியா இருக்க வேணாமேன்னு இங்க கூட்டியாந்தீங்க.. அது தெரியும்..ஆனா?”
“ஆனா என்ன தேவி?”
“நம்ம தம்பிக்கும் அந்த பொண்ணுக்கும் எதாவதா? காதல் கீதல் அந்த மாதிரி?”
“உண்மைய சொல்லனும்னா எனக்கும் தெரியலை தேவி. விவேக் என்னைக்கு நம்ம கிட்ட அவன் மனசில நினைக்கறதை சொல்லியிருக்கான் சொல்லு. அவனா வாய்திறந்து எதுவுமே சொல்லலை இந்த பொண்ணைப் பத்தி. அமெரிக்கால இருந்து வந்த அன்னைக்கு காலையில 3 மணிக்கு ஃபோன் பண்ணான்”
“ஃப்ரெண்டேட அம்மா தவறிட்டாங்க, அதனால கிளம்பி சென்னை வாங்கன்னு சொல்லிட்டு வச்சிட்டான். யாரு என்னனு விசாரிச்சதுக்கு, அமெரிக்கா கிளம்பறப்போ ஏர்போட்டில நீங்க பார்ந்தீங்களே ஒரு பொண்ணும், அவ அம்மாவும், அவங்கன்னு சொன்னான்”
“ராதாக்கா.. நீங்க என்ன நினைக்கறீங்க? அவங்க காதலிக்கறாங்கன்னா?”
“அதெப்படி என்னால சொல்ல முடியும் தேவி? பொண்ணு அழகா சிவப்பா பப்பாளி பழமாட்டம் இருக்கா. இவனுக்கு பிடிச்சிருக்கோ என்னவோ? அவனா சொன்னா தானே தெரியும். அதுவுமில்லாம, அந்த பொண்ணு விரும்பம்னு ஒண்ணு இருக்கில்லையா? அவளுக்கு விவேக்கை பிடிக்கணும் இல்லையா?”
“ஏன்..இப்படி சொல்லறீங்க, நம்ம தம்பிக்கு என்ன குறைச்சல், கருப்பா களையா ஐயனார் சிலை மாதிரில இருக்கான். ரோட்டில போறப்போ வீதி முழுக்க அவனை எப்படி பார்க்குது தெரியுமா. தங்கமான குணம் உங்களைப் போலவே. அமெரிக்கால படிக்கறான். இதுக்கு மேல என்ன வேணுமாம்.”
“அதெல்லாம் சரிதான் தேவி. ஆனா அந்த பொண்ணு என்ன நினைக்குது? அவன் என்ன விருப்பபடறான்னு தெரியாம, நாமளா எதும் யோசிக்க கூடாது அதுவுமில்லாம, விவேக் முகம் வாட்டமாவே இல்லை ரெண்டு மூனு நாளா. கவனிச்சியா.”
“நான் நினைக்கறேன் நம்ம தம்பி அந்த பொண்ணை விரும்பறான்னு. நம்ம கிட்ட எப்படி சொல்லறதுன்னு கூச்சப்பட்டுகிட்ட அமைதியா இருக்கறோ என்னவோ? நான் வேணூம்னா நாளைக்கு லேசு பாசா அந்த பொண்ணுகிட்ட கேட்டுப் பார்க்கவா? அதும் என்கிட்ட ஆண்ட்டி ஆண்ட்டின்னு அன்பா பேசுது.இன்னைக்கு நான் சமையலுக்கு எதாச்சும் ஹெல்ப் பண்ணவா ஆண்ட்டின்னு கூட கேட்டுச்சு”
“வேணாம் தேவி… நாம எதும் கேட்க வேண்டாம். எதாச்சும் இருந்தா நம்மகிட்ட விவேக் சொல்லத் தானே போறான். பார்க்கலாம்…”
“ஊர்ல நாலு பேர் நாலு விதமா பேசுறான்களே”
“ஊர் பேசறதை என்னைக்கு நாம மதிச்சிருக்கோம். உன்னை இந்த வீட்டில வச்சுகிட்டப்ப இந்த ஊர் பேசாத பேச்சா?”
“அதும் சரி தான் ராதாக்கா.. ஊர் வாயை நம்மால மூட முடியாது. பேசற வரை பேசிட்டு அடுத்த கதை பேச போயிடும்…சரிக்கா தூக்கம் வருது, தூங்கலாம்”
அடுத்து ஏதேணும் பேசுவார்களோ என சுஜி அமைதியாக கேட்டுக் கொண்டு படுத்திருந்தாள். ஆனால் வெளியே நிசப்தம் மட்டுமே நீட்டித்தது. சுஜி நடந்த சம்பாஷனையை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.
விவேக் எத்தனை நல்லவன். சதீஷைப் போல் துளி திமிரோ அகங்காரமோ கிடையாது. அடிமட்ட நிலையில் இருந்து தன் படிப்பால் தன் திறமையால் முன்னுக்கு வரவேண்டி எவ்வளவு பாடு படுகிறான். அவனை விடவும் அவன் குடும்பம், முக்கியமாக அவன் அன்னை. தன் மகனின் கனவுகளுக்காக, எப்படி அயராது உழைத்து கனவுகளை நிறைவேற்ற எத்தனிக்கிறார்.
இந்த அம்மாக்கள் தான் எத்தனை ரகம். தன் மகளின் படிப்பிற்காக, தன் தமையனிடம் சண்டை போட்ட அவளது அன்னை. தன் மகனின் காதலுக்காக, முன்பின் அறியாத பொண்ணிடம் உரிமையாக பாசமாக நடந்து கொண்ட சதீஷின் அன்னை. தன் மகனின் கனவிற்காக, என்ன கஷ்டம் வேண்டுமானலும் படுகிறேன், நீ படித்து ஆளாய் உயர்ந்து, தம்பி தங்கைகளை காப்பாற்று என அயராது பாடுபடும் விவேக்கின் அன்னை, என அன்னைகளின் பன்முகங்கள் வானளவு உயர்ந்துவிட்டிருந்தன.
சின்னம்மா தேவி விவேக்கைப் பற்றி சொல்லிய கருத்துக்களையும் எடை போட்டாள் சுஜி. “ஆரம்பம் முதலே சதீஷிடம் தோன்றிய காதலும் ஈர்ப்பும், விவேக்கிடம் தோன்றியிருந்தால் எப்படி இருக்கும்? விவேக், சதீஷ் போல் நண்பனுக்காக என அவளை உதறியிருப்பானா? அல்லது அவனுக்காக நண்பன் சதீஷை இழந்திருப்பானா?”
ஆனால் சதீஷிடம் உண்டான ஈர்ப்பு விவேக்கிடம் ஒரு நாளும் தோன்றியதில்லை என்பதே நிஜம். நல்ல நண்பனாக, சிறத்த மனிதனாக பார்க்க முயன்றதே தவிர, காதல் கொண்டு அவனை சுஜி ஒரு போதும் நினைத்ததில்லை. வேண்டுமானால், விவேக், பின்னாளில் மதிப்பான கணவனாக, பாசமான, கடமையுணர்வு மிக்க தந்தையாக மாறக் கூடும்.
என்றைக்கும் மயக்கும் காதலனாக தனக்கு தோன்றாது என்பதை சுஜி நன்கு உணர்ந்தாள். இப்படி சகலமும் யோசித்துக் கொண்டு உறங்கியும் போனாள். அடுத்த தினம் மாலை வழக்கம் போல் விவேக் 4 மணிக்கு வெளியே கிளம்ப எத்தனிக்க, “தம்பி, பீச்சுக்கா போற?” என அன்னை ராதாவின் குரல் தடுத்தது.
“ஆமாம்மா..” என விவேக் பதிலளித்தான்.
“அப்போ சுஜியையும் தங்கச்சிகளையும் கூட கூட்டிட்டுப் போப்பா.. பாவம் அதுகளும் எங்க வெளிய போகுதுக, அந்த பொண்ணுக்கும் மனசுக்கு நல்லா இருக்கும்..” என ராதா கூறினார்.
சுஜி என்ன சொல்வாளோ என விவேக் அவள் முகம் பார்க்க, அவள் மறுப்பேதும் சொல்லாமல அமைதியாகவே இருந்தாள். தம்பி வரவில்லை என மறுத்துவிட, சிட்டு மற்றும் தேவியின் பிள்ளைகளுடன் சுஜியையும் அழைத்துக் கொண்டு பீச் சென்றான். பெண்கள் அனைவரும் ஆட்டோவில் ஏறிக் கொள்ள, தம்பியின் பைக்கில் அவர்களுடன் சென்ற விவேக்கை அந்த வீதி முழுக்கவே வேடிக்கை பார்த்தது எனலாம்.
ராதா இதை ஏன் செய்தார் என விவேக் ஒருவாறு யூகித்தான். சுஜியை வீட்டினுள்ளேயே இருக்கச் செய்வதால் மற்றவர்களுக்கு வாயை மெல்ல அவல் கிடைத்தது போல் இருக்கும். அதுவே அவர்கள் மத்தியில், சுஜியும் போக வர இருந்தால், இரண்டொரு நாளில் இந்தப் பேச்சு சலிப்பு தட்டிப் போயிருக்கும். இதை கருத்தில் கொண்டு தான் ராதா, சுஜியை வெளியே அனுப்பினார்.
கடற்கரையில் குழந்தைகள் மணல்வீடு கட்டியும், தண்ணீரில் கால் நனைத்தும் விளையாட, சிட்டு அவர்களை மேற்பார்வை பார்க்கும் பணியை செவ்வனே மேற்கொண்டாள். மணலில் சிறிது இடைவெளி விட்டு சுஜியும், விவேக்கும் அமர்ந்து கொண்டனர்.
எதுவுமே பேசாத மெளனம் அமைதியாக நிம்மதியாக இருந்தது. சுஜியின் மனதிற்கு இந்த கடற்கரை காற்று பெரிய ஆறுதலாக இருந்தது. நீண்ட நேரமாக இருவரும் பேசாமல் ஆர்ப்பரிக்கும் கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, விவேக், “நேத்து அம்மா பேசினது எதுவும் மனசில வச்சுக்காத.” என பொதுப்படையாக மொழிந்தான்.
அவனது அம்மா இரவு பேசிய விஷயங்களை இவனும் கேட்டிருக்கிறான் என்று சுஜிக்கு புரிந்தது. நீண்ட நேரம் அவன் வார்த்தைக்கு பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்த சுஜினி, “விவேக்.. நீ தப்பா நினைக்கலைன்னா ஒன்னு சொல்லவா?”
“ம்ம்..சொல்லு”
“நீ ரொம்ப நல்லவன் விவேக். இதையெல்லாம் உங்கிட்ட நான் சொல்லுவேன்னு நினைச்சதில்லை. பட் இப்போ சொல்லத் தோணுது.”
எது நான் நல்லவங்கற விஷயத்தையா? அதான் எனக்கே தெரியுமே” என சுஜியின் மனதை லகுவாக்க மென்மையாக சிரித்தான். விவேக்கை இன்னும் இன்னும் சுஜிக்கு பிடித்துப் போனது.
“நீ ரொம்ப சாஃப்டானவன், உன்னை ரொம்ப அழகா வளர்த்தியிருக்காங்க.. உன்னை ஒரு நண்பனா, ஒரு கம்பானியனா ரொம்ப பிடிக்கும் எனக்கு. உன்னை கல்யாணம் பண்ணிற எந்த பொண்ணுமே சந்தோஷமா இருப்பா. ஏன்னா நீ அவளை மதிப்போட, சந்தோஷமா பார்த்துக்குவ. பட்..” எனக் கூறி அவன் முகம் பார்த்தாள் சுஜி.
“பட்.. இந்த நல்லவன் உனக்கான நல்லவன் இல்லை, அதானே சுஜி.” என விவேக் கேட்ட கேள்வி, சுஜியின் மனதை லேசாக அசைத்துப் பார்த்தது. அவன் வார்த்தைகளில் தொனித்த வருத்தம் அதை அவளுக்கு உணர்த்தியது. அடுத்து அவன் எதுவுமே பேசவில்லை. திரும்ப தன்னுள் இறுகிப் போயிருந்தான்.
அவனை சமாதானப்படுத்தும் கடமை தனக்கு இருப்பதை சுஜி உணர்ந்தாள். “விவேக். ப்ளீஸ் டோண்ட் கெட் மீ ராங்க். எனக்கு உன் மேல மதிப்பு இருக்கு, அக்கரை இருக்கு, ஆஸ் ஏ ஃப்ரெண்ட் நீ நல்லா வரணும்னு எண்ணம் இருக்கு. பட், அந்த ஈர்ப்போ, காதலோ, ஏன் உன்னை ரொமேண்டிக் ஆங்கிள் வச்சு பார்க்கவோ என்னால முடியலை.”
“ ஐம் சாரி விவேக். இது உன் மேல தப்பு இல்லை. என்னோட தப்பு தான். ஒரு நல்லவனை ஏத்துக்க முடியலை, ஆனா ஒரு கெட்டவனை, ஒரு கோழையை, காதலிக்கறோம்னு கூட மனசாற சொல்ல விருப்பம் இல்லாத ஒரு ஈகோ பிடிச்சவனை, ஏன் நான் விரும்பறேன்னு எனக்கு தெரியலை.”
“உன்னை சதீஷ் கூட கம்பேர் பண்ணறேன்னு தப்பா நினைக்காத ப்ளீஸ் விவேக். கம்பாரிசனே இல்லாம, அவனை விட நீ எல்லா விதத்திலேயும் நல்லவன். நம்பகமானவன். ஆனா அவன் எவளோ கெட்டவனா இருந்தாலும் என்னை ஈர்த்தவன், என்னோட காதல்ங்கற செடியில பூ பூக்கவச்சவன்.”
“சதீஷ் அவளோ கெட்டவன் இல்லை சுஜி… அவன் ஒரு நல்ல நண்பன், நட்புக்காக என்னவேணாலும் பண்ணறவன். “நண்பேண்டான்னு.. என்ன ஆனாலும் நான் இருக்கேண்டான்னு” வாய் வார்த்தைக்கு சொல்லறவன் இல்லை. அப்படி அவன் இதுவரை சொன்னதும் இல்ல, ஆனா அப்படி தான் நடந்துக்குவான்.”
“ஃப்ரெண்ட விட்டுத் தராம பேசற விவேக்…”
“விட்டுக் குடுக்க அவன் என்ன பெரிய தப்பு பண்ணிட்டான்னு நானும் யோசிச்சுட்டு தான் இருக்கேன் இந்த வாரம் முழுக்க. தன்னோட காதலைக் கூட எனக்கு ஹர்ட் ஆகாம எப்படி சொல்லறதுன்னு யோசுச்சதால தான் அவன் மறைச்சிருக்கான். அது எனக்கு புரியுது. ஆனா நானும் மனுஷன் தான் இல்லையா? எனக்கும் கோபம் வருத்தம் ஏமாற்றம்னு இருக்கத்தானே செய்யும். அதை நான் காட்டறேன். அவ்வளோ தான்.”
“விவேக், உன் நட்பை பத்தியோ, என் காதலைப் பத்தியோ நான் இப்போ யோசிக்க விரும்பலை. இப்போதைக்கு என் மனசில இதெல்லாம் இல்ல, உன்னை நான் ஹர்ட் பண்ணியிருந்தா, எந்த விதத்திலையாவது கஷ்டப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிரு. ஐ டின்ட் மீன் இட் பர்பஸ்லி..”
“இத நீ சொல்லனும்னு அவசியம் இல்ல சுஜி. ஐ கேன் கெட் யு. எனக்கு உன்னையும் புரியும், சதீஷையும் அதைவிட நல்லா புரியும். அதனால தான் கோவப்படவேண்டிய நேரத்தில கூட அவனோட ஆங்கில்ல இருந்து யோசிக்க மனசு வருது. இங்க யார் மேலையும் தப்பில்லை. எல்லாருக்கும் அவங்க அவங்க நியாயம் பெருசா தோணுது. அடுத்தவங்க பக்கம் என்னனு நாம யோசிக்க மறந்திடறோம்.”
“ட்ரூ. இப்போ வரை சதீஷ் மேல கோபம் வருத்தம். என் கூட இருக்க வேண்டிய நேரத்தில அவன் இல்லையேன்னு ஆத்திரம், ஏமாற்றம்னு எனக்குள் கலவையான எண்ணங்கள் தான் இருக்கு. ஆனா அதே எண்ணத்தோட சேர்ந்து, அவனோட சின்ன ராயல் சல்யூட்டும், அவனோட அந்த நக்கல் சிரிப்பும், அவன் கூட இருக்கறப்போ நான் ஃபீல் பண்ண கம்ஃப்ர்ட்னஸ்ஸும் மறக்கமுடியலை.”
“சுஜி, தேரிஸ் ஏ சேயிங்க… நமக்கு பிடிச்சவங்க மேல நாம என்ன கோபத்தில வெறுப்பில இருந்தாலும், அவங்களை நாம மன்னிச்சுடுவோம்மாம். சைக்காலஜி ஃபேக்ட். உனக்கு எப்படியோ, எனக்கும் அப்படித்தான். ஹி இஸ் மை பெஸ்ட் மேன், மை ஒன்லி ஃப்ரெண்ட். அவன் என்கிட்ட சொல்லலைன்னு எனக்கு கோபம். நான் முட்டாளாக்கப்பட்டுடனேன்னு ஆத்தரம் இருக்கு தான், அதுக்காக அவன் ஃப்ரெண்டே இல்லைன்னு தூக்கிப் போட முடியாதில்லையா?”
“அப்போ சதீஷை நீங்க மன்னிச்சிட்டியா விவேக். அமெரிக்கா போனதும் பழைய மாதிரி ஆகிடுவீங்க தானே?”
“சுஜி.. இது மனசு… நிமிஷத்துக்கு நிமிஷத்துக்கு நகர்ந்துட்டே போற கடிகார முள் இல்ல, உடனே மறந்துட்டேன்னு சொல்லி அவன்கூட பேச முடியாது, டைம் எடுக்கும், காலம் மாற்றும் எல்லாத்தையும். தோ, இப்போ கூட, உன்னோட இதெல்லாம் பேசுவேன்னு நான் நினைக்கலை. ஆனா பேசற சூழல். இந்த நிமிஷம் நாம இந்தியால அதும், இப்படி கடைக்கோடி கடற்கரையில உட்கார்ந்து பேசுவோம்னு நினைச்சு பார்த்திருப்போமா? இல்லையே.. தானா அதுவா நடக்கும். அதுவரைக்கும் காத்திருக்கற பக்குவம் வேணும்.”
“உண்மை தான் விவேக்.. என்னால என் அம்மா இல்லைங்கறதை ஜீரணிக்க முடியலை தான். ஆனா மனசு கொஞ்ச கொஞ்சமா அதை ஏத்துக்க பழகுது. நாளைக்கே என் அம்மாவோட இழப்பை மறந்துட்டு வேலைக்கு போயிடுவேன்னு சொல்ல வரலை. இந்த இழப்பு எனக்குள்ள இருக்கும் தான், ஆனா இந்த வலியோட சேர்ந்து வாழப் பழகிடுவேன் இல்லையா விவேக்.”
“நீ சொல்லறதைப் பார்த்தா, திரும்ப சதீஷ் கூட பேசமாட்ட அப்படிங்கற மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது. ஏன் சுஜி அப்படி?” என விவேக் அவள் சொல்ல வந்த விஷயத்தில் நாடியைப் படித்திருந்தான்.
சுஜினி மெல்லமாக தனக்குள் சிரித்தாள். “கரெக்ட். நான் பேச வந்தது அதைப் பத்தி தான். சதீஷை மன்னிச்சுட்டேன்னு என்னால பொய் சொல்ல முடியாது. அவனால தான் அன்னைக்கு நான் ஃபோனை ஆஃப் பண்ணி வச்கேன்.”
“ஆனா சுஜி, அதுக்கும் உன் அம்மா இறந்ததுக்கும் லிங்க இல்லை சுஜி. அவன்.. “ என விவேக் சொல்லிக் கொண்டிருக்க, அவனை இடைமறித்துப் பேசினாள் சுஜினி. “எனக்கு தெரியும் விவேக்.. ஐ மீன் என் அறிவுக்கு மூளைக்கும், என் அம்மாவுக்கு வந்தது ஹார்ட் அட்டாக். அதனால தான் அவங்க இறந்தாங்கன்னு தெரியும்.. ஆனா என் மனசு அந்த கோபத்தை, அந்த துக்கத்தை சதீஷ் மேல தான் கொண்டு போய் போடுது, என்னால அவனை மறக்கவும் முடியலை.மன்னிக்கவும் முடியலை.”
“சுஜி… கொஞ்சம் யோசுச்சேன்னா உனக்கே புரியும் சுஜி.”
“புரியறதுனால தான் இவளோ யோசிக்கறேன் விவேக். எனக்கு ஒரே ஒரு ப்ராமிஸ் பண்ணிக் குடுக்கனும் நீங்க. கண்டிப்பா இதை நீங்க செய்வீங்கன்னு நான் நம்பறேன்”
“ம்ம்ம்”
“அமெரிக்கா போனதும், என்னோட இருக்கற எல்லா காண்டாக்ட்ஸையும் நீங்க கட் பண்ணிடனும், ஐமீன் நீங்க, சதீஷ், எம்மா, வித்யா எல்லாமே. எனக்கு இது எல்லார்த்துல இருந்தும் ப்ரேக் வேணும். இண்டிபெண்டன்சி வேணும்.”
“நான், சதீஷ் ஒகே.. எங்க கூட காண்டக்ட் வேண்டாம்னு நீ நினைக்கற நியாயம் கூட நான் ஏத்துக்குவேன். பட், எம்மாவும் வித்யாவும் உன்னோட ஃப்ரெண்ட்ஸ்.. அவங்ககூட இப்போ உன் கூட இருக்கறது அவசியம் சுஜி. நீ வேண்டாம்னு நினைச்சாலும், உன்னோட மெண்டல் வெல் பீயிங்குக்கு அவங்க அவசியம் உனக்கு”
“தெரியும் விவேக். அதனால தான் கேட்கறேன், இன்னும் கோர்ஸ் முடிய ஆறு மாசம் இருக்கு, அது வரைக்கும் எம்மா, வித்யாவும் எங்கூட இருப்பாங்க தான்… அப்பறம் அவங்க கோர்ஸ் முடிஞ்சு ஆளாளுக்கு ஒரு ஒரு திசையில போயிடுவோம். ஆனா அந்த ஆறு மாசம் கூட எனக்கு உங்க ரெண்டு பேர் கூடையும் காண்டாக்ட் வேண்டாம்.” எனக் கூறி நிறுத்தினாள் சுஜி.
“புரியுது சுஜி.. உன் மனசு மாற தேவையான அளவு டைம் எடுத்துக்கோ, ஆனா திரும்பி வந்திடு, ஒரு காதலனா உங்கூட, லைஃப் பார்ட்னரா எனக்கு குடுத்து வைக்கலை. பட், ஒரு வெல் விஷரா என்னைக்குமே உனக்கு நான் இருப்பேன். யு கேன் டிரஸ்ட் மை வேர்ட்ஸ்..”
“ஐ நோ விவேக்… அண்ட் ஐ டிரஸ்ட் யூ கம்ப்ளீட்லி. என்னோட ப்ராமிஸ் இதான். என்னால நீங்களும் சதீஷும் பிரிஞ்சதா இருக்கக் கூடாது. என்னை மிஞ்சிப் போனா ஒன்னரை வருஷமா தானே தெரியும். உங்க ரெண்டு பேர்த்துக்கும் நடுவுல இருக்கற ஃப்ரெண்ட் ஷிப் ரொம்ப அழகானது. ஆழமானது. என்ன ஆனாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் இருக்கீங்கற நம்பிக்கை எல்லாம் அவ்வளவு சீக்கரம் யாருக்கும் அமையாது. ஐ என்வி தட். “
“உன்னால நாங்க பிரிஞ்சிட்டோம்னு யார் சொன்னா சுஜி.. இதுக்காகவெல்லாம் நீ எங்களை அவாய்ட் பண்ணனும்னு அவசியம் இல்லையே..”
“பிரிஞ்சுட்டீங்கன்னு சொல்லலை.. பிரிஞ்சட கூடாதுன்னு கவலைப் படறேன். ஐ டோண்ட் லவ் யு. பட் ஐ லைக் யு. அதே நேரம் ஐ ஹேட் சதீஷ் நை. பட் அவனை என்னால மறக்க முடியலை.”
“பட்..”
“இருங்க விவேக்.. நான் சொல்லி முடிச்சுக்கறனே..இதெல்லாம் மாறும். அதானே சொல்லப் போறீங்க.. எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு விவேக். அவனை நான் மறந்து போகலாம்.ஏன் மன்னிச்சிடலாம். இல்லை புதுசா யாரையாவது மீட் பண்ணறப்போ அவங்க மேல எனக்கு காதல் வரலாம்.”
“இப்படி என்ன வேணா ஆகலாம். ஆனா அதுக்காக உங்க கூடவே இருந்து, இந்த நெருப்பை அணைய விடாம மெயிண்டெயின் பண்ணறதில எனக்கு உடன்பாடில்லை. நெருப்பு பெருசாகாம இருக்க என்ன பண்ணும் தெரியுமா?”
“தண்ணி ஊத்தி அணைக்கணும் சுஜி”
“அது மட்டும் போதாது, பக்கத்தில நெருப்பு பிடிக்கற மாதிரி இருக்கற இன்ஃப்லேமபில் பொருட்களை நீக்கிடணும். நெருப்பு விழுங்க இரை இல்லைன்னா தானாவே அணஞ்சிடும். தண்ணி ஊத்தனும்னு அவசியம் இல்லை.. அதான் நான் விரும்பறதும். எனக்கு டைம் வேணும். முக்கியமா ஸ்பேஸ் வேணும்.”
“சுஜி இது எல்லாமே நீ விலகிப் போய் தான் உனக்கு கிடைக்கனுமா?”
“சதீஷ் என்னை நிட்சயம் காண்டேக்ட் பண்ண நினைப்பான். இன்னைக்கும் இல்லைன்னாலும் இன்னும் கொஞ்ச நாள்ல.. பட், எனக்கா அவனை பார்க்கணும் பேசணும்னு தோணினா நான் திரும்ப வருவேன். என் மனசு அவனை மன்னிக்காம, அவனோட முகத்துக்காக இப்போ நான் இதை செஞ்சா, காலம் பூரா என்னால அவனை மன்னிக்க முடியாம போயிடும் விவேக்”
“ம்ம்ம்..புரியுது சுஜி”
“உங்களுக்கு புரியும்னு தெரியும் விவேக். யு ஆர் தட் மேக்..” என மெளனமாக புன்னகைத்தாள். ஓரடி தள்ளி அமர்ந்திருவனின் கைகளை மென்மையாக அழுத்தியவள், “தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் விவேக்.. ஐ வாண்ட் யு டு டிராவல் வித் மீ ஆல்வேஸ்.” என தன் நன்றியை தெரிவித்தாள்.
அங்கிருந்து எழுந்து கொண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த அலைகளில் சென்று தானும் அவர்களுடன் கைபிடித்து நின்று கொண்டாள். மனம் சற்றே தெளிவுற்றிருந்தது. அவளது பெருமூச்சு கடல்காற்றுடன் சேர்ந்து வெளிப்பட்டது. மனதை அழுத்திய பாரத்தை கடல் தன் அலைகளால் மெல்ல மெல்ல அரித்து எடுத்துக் கொண்டது போல் தோன்றியது.
இவளது கைகளைப் பற்றியிருந்த சுகன்யா, “சுஜிக்கா, ஜாலியா இருக்குல்ல கடல்ல நிக்கறது. நாளைக்கும் வரலாமா?” என ஆர்வமாக இவள் முகம் பார்த்துவினவினாள்.
“நான் ஊருக்கு போற வரைக்கும் தினமும் வரலாம். கடல் நம்ம மனசோட அழுக்குகளை அரிச்சு எடுத்துக்குமாம்.” என இவள் சொல்ல, அது புரிந்தது போல் சுகன்யா வாண்டும், “அப்போ நாம குளிக்க வேணாம். கடல் நம்மளை சுத்தமாக்கிடும்ல டெய்லி வந்தா” என சிரிக்காமல் மொழிய, சுஜியின் முகத்தில் மெல்ல புன்னகை பூத்தது. சில அடி தொலைவில் அமர்ந்து கடலையும், சுஜியையும் ஒரு சேரப் பார்த்துக் கொண்டிருந்த விவேக்கின் மனமோ,
“கடல் நுரையால செஞ்ச சிற்பம். காதலியா, மனைவியா தான் இருக்கணும்னு அவசியம் இல்லையே, உனக்கு ஒரு நல்ல சினேகிதனா, நட்பா இருக்கறதும் எனக்கு மகிழ்ச்சியே சுஜினி. நீ கேட்ட ப்ராமிஸ் படி, உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்.”
“ஆனா நீ சதீஷை தேடி வருவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ அவனுக்காக வருவேங்கற நம்பிக்கையை அவனுக்கு நான் நிட்சயமா குடுப்பேன் சுஜி. என் நண்பன் நல்லா இருக்கணும்னு எனக்கு நிறைய ஆசை இருக்கு. நீயும் தான்.” என மனதில் சொல்லிக் கொண்ட விவேக், சுஜியின் உருவத்தைத் தாண்டி அஸ்தனமாகும் சூரியனை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த நல்லவன்.