சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
அவளது தொடு உணர்வில் எழுந்த லட்சுமி
“என்னமா இன்னிக்கும் உன்னால பிரெண்ட் வீட்டுக்கு போக முடியலைன்னு கவலையா இருக்கா?”
“அந்தக் கவலை இருக்குதான். அதை நான் எப்படியாவது சமாளிச்சுக்கறேன். உங்கள பார்த்தா தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. காலையிலிருந்து இவ்வளவு நேரமா இவ்வளவு வேலை செஞ்சிட்டு இருக்கீங்க. அவங்க எது சொன்னாலும் கேட்கிறீங்க. எவ்வளவு வேலை சொன்னாலும் செய்கிறீர்கள். கால் வலிச்சா கால் வலிக்குதுன்னு சொல்ல வேண்டியதுதானே ? ஏமா இப்படி கஷ்ட படுறீங்க?” என்று கண் கலங்கினாள் வெண்மதி.
“வெண்மதி இதுக்கெல்லாம் நீ ஏன் கண் கலங்குகிற ? இந்த வேலை செய்வதில் எல்லாம் எனக்கு ஒரு கஷ்டமும் கிடையாது. சின்ன வயசுல இருந்தே எனக்கு உடலுழைப்பு பழகிப்போன ஒரு விஷயம். இதைவிட அதிகமா நான் வேலை செஞ்சிருக்கேன்.”
“அம்மா அப்போ உங்களுக்கு சின்ன வயசு. அதனால அந்த வேலை எல்லாம் பண்ண முடிஞ்சது. இப்போ உங்களுக்கு வயசு ஆயிடுச்சு. இன்னும் அதே மாதிரி வேலை செய்யணும்னு நினைக்காதீங்க. இல்லமா நான் நல்லா தான் இருக்கேன். எனக்கு இதெல்லாம் ஒரு கஷ்டம் கிடையாது. இதையெல்லாம் போட்டு மனசை குழப்பிக்காம நீ போய் ஒழுங்கா படி. வேலை செய்யாம ஒரு இடத்தில இருக்க சொன்னாதான் எனக்கு கஷ்டமா இருக்கும்.”
“அப்புறம் ஏன் மா இவ்ளோ டயர்டா தெரிகிறீர்கள்?”
“இன்னிக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தியா இருந்துச்சு. அதனால தான் டயர்டா இருக்கு. படுத்து தூங்கி எழுந்தால் நாளைக்கு சரியாயிடும். நீ போய் தூங்கு மா. இந்த வீட்டில் இருந்தால் தான் உன்னை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும். அதனால நாம இதையெல்லாம் பொறுத்து போய் தான் ஆக வேண்டும்.
“இப்போ என்னோட கல்யாணம் ரொம்ப முக்கியமா? அதுக்காக நீங்க கஷ்டப்படணுமா?” என்று ஆரம்பித்த மகளை
“கால் அமுக்கி விட்டது போதும். எனக்கு கால் வலி சரியாயிடுச்சு. நீ போய் தூங்கு” என்று மகளை ஓய்வெடுக்க அனுப்பினார் லட்சுமி. தன் அறைக்கு திரும்பிய வெண்மதி கவிதாவுக்கு தொடர்பு கொண்டு தான் வர முடியாத காரணத்தை கூறிவிட்டு உறங்கினாள்.
அடுத்த நாள் காலை கல்லூரியில் விரிவுரையாளர்
“எல்லோரும் இன்னிக்கு ப்ராஜெக்ட் பிளான் ரெடி பண்ணிட்டீங்களா? எடுத்துட்டு வந்து என்னோட டேபிளில் வைங்க.” என்று கூற மாணவர்கள் அவரவர் ப்ராஜெக்ட் பிளான் எடுத்துக்கொண்டு வந்து அங்கு வைத்தனர். “யாராவது இன்னைக்கு முடிக்காமல் வந்திருக்கீங்களா? அப்படி இருந்தா அவங்க மட்டும் எழுந்திரிங்க.”
வெண்மதி கவிதா எழுந்து நின்றனர். வேறு யாரும் எழுந்திருக்கவில்லை. கவிதா “என்னடி இது அதிசயமா இருக்கு? இன்னைக்கு பார்த்து எல்லாம் முடிச்சிட்டு வந்துட்டாங்க. நாம மட்டும் தனியா இந்த சிடுமூஞ்சி சீதா கிட்ட மாட்டிகிட்டோம்.” என்று மெல்லிய குரலில் வெண்மதியிடம் கூறினாள்.
சீதா “பிராஜக்ட் பிளான் ரெடி பண்ணலையா? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உங்களுக்கு? என்ன ரெண்டு பேரும் நல்ல மார்க் எடுத்து வச்சிட்டு இந்த மாதிரி கேர்லசா இருக்கீங்க.”
“சாரி மேடம். சுத்தமா டைம் இல்ல.”
“என்ன டைம் இல்லையா? இரண்டு நாள் லீவுல என்ன பண்ணிங்க?
நீங்க ரெண்டு பேரும் லஞ்ச் டைம்ல என்ன வந்து ஸ்டாப் ரூம்ல மீட் பண்ணுங்க.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் விரிவுரையாளர்.
மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட்டு முடித்ததும் வெண்மதி, கவிதா இருவரும் விரிவுரையாளரை பார்க்க அவரை தேடி சென்றார்கள். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
“சாரி மேடம். நாங்க அப்புறமா வருகிறோம்” என்று கூறிக்கொண்டு திரும்பிய இருவரையும் நிறுத்தினார் சீதா.
“இல்ல மேடம் நீங்க சாப்பிடற வரைக்கும் நாங்க வெயிட் பண்றோம். நீங்க ப்ரீயா சாப்பிடுங்க.”
“எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது. நான் உங்ககிட்ட பேசிக்கிட்டே கூட சாப்பிடுவேன். உட்காருங்க.” என்று முன்னாடி இருந்த இரண்டு நாற்காலியை காண்பித்தார் சீதா.
இருவரும் அமர்ந்தனர்.
“கவிதா, வெண்மதி ஏன் ப்ராஜெக்ட் பிளான் ரெடி பண்ணல?” என்று விசாரித்தார் அக்கறையாக.
“கவிதா உங்க அப்பாவை எனக்கு நல்லா தெரியும். நான் அவருக்கு போன் பண்ணி கேட்கட்டுமா?’
“ஐயயோ அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க மேடம். என்னாலதான் கவிதாவால் பிளான் ரெடி பண்ண முடியல.”
“என்ன ஆச்சு நீ என்ன பண்ண?”
“நான் அவ வீட்டுக்கு போயி ரெண்டு பேரும் சேர்ந்து பிளான் பண்ணலாம்னு நினைச்சு கிட்டு இருந்தோம். ஆனால் “என்று நிறுத்திவிட்டாள் வெண்மதி .
“ஆனா என்ன ஆச்சு?” என்றார் சீதா.
“நான் சொல்றேன் மேடம். இவளோட பெரியம்மா கோயிலுக்கு போகணும்னு கூட்டிட்டு போயிட்டாங்க. அதனால சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வர முடியல.”
“சரி ஞாயிற்றுக்கிழமை முடித்து இருக்கலாமே ?”
“இல்ல மேடம் அன்னைக்கும் இவங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்துட்டாங்க. அதனால அன்னிக்கும் இவ ரொம்ப பிசியா இருந்தா.”
“சரிதான். இந்த மாதிரி ஏதாவது ரீசன் சொல்லிக்கிட்டே இருந்தா, எப்போ தான் பிராஜக்ட் பிளான் ரெடி பண்ணுவீங்க? எந்த கம்பெனியில் பண்ண போறீங்கன்னு முடிவு பண்ணிட்டீங்களா ?”
“நோ மேடம்.” என்று இருவரும் சேர்ந்து கூறினர்.
“உங்களுக்கு ஏதாவது கம்பெனி தெரியுமா மேடம்?”
“எனக்கு ஒரு கம்பெனி தெரியும். இந்தாங்க இந்த கார்டை வச்சுக்கோங்க. இந்த கம்பெனியில நானே உங்களுக்காக பேசி நீங்க அங்க ப்ராஜெக்ட் பண்றதுக்கு ஏற்பாடு பண்றேன். மத்த லக்சரர் கிட்ட பேசி உங்களுக்கு தினமும் டூ ஹவர்ஸ் பர்மிஷன் வாங்கி தரேன். அந்த டைம்ல இந்த ப்ராஜெக்ட் ப்ளான் ரெடி பண்ணி ஃப்ரைடே சப்மிட் பண்ணிடுங்க. ஓகே?” என்று கேட்க
“தேங்க்யூ வெரி மச் மேடம்.” என்று இருவரும் உற்சாகமாக கூறிவிட்டு அங்கிருந்து வந்தனர்.
அடுத்த நாள் காலை கிளம்பும் பொழுது வெண்மதி
“அம்மா நான் இன்னைக்கு வீட்டுக்கு ஒன் ஹவர் லேட்டாதான் வருவேன். தேடாதீங்க.” என்று தாயிடம் விஷயத்தை கூறி விட்டு சென்றாள். விரிவுரையாளர் சீதா சொன்னது போலவே கடைசி இரண்டு மணிநேரம் அவர்களுக்கு கிடைத்தது. அந்த இரண்டு மணி நேரம் மற்றும் கூடுதலாக ஒரு மணி நேரம் கல்லூரியிலேயே இருந்து ப்ராஜெக்ட் பிளான் தயார் செய்தனர்.
அன்று மாலை வீட்டுக்குள் நுழைந்த வெண்மதியை பார்த்த லலிதா
“என்ன நீ நாலு நாளா லேட்டா வீட்டுக்கு வர்ற? வயசு பொண்ணு விளக்குவைச்சதுக்கப்புறம் வீட்டுக்கு வர்ற. என்ன பிரண்ட்ஸ் கூட ஊர சுத்த ஆரம்பிச்சுட்டியா?” என்று அலட்சியமாக பேச ஆரம்பித்தார்.
கோபத்தை அடக்கிக்கொண்டு வெண்மதி
“காலேஜ்ல எனக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு பெரியம்மா. அதனாலதான் லேட் ஆயிடுச்சு. காலையிலேயே நான் அம்மாகிட்ட சொல்லிட்டு தான் போனேன். அம்மா இங்க வாங்க.” என்று தாயை சிபாரிசுக்கு அழைத்தாள் வெண்மதி.
லட்சுமி அங்கு வந்து” ஆமாம் அக்கா. வெண்மதி ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டு தான் போனா .”
“அப்போ தினமும் இப்படி லேட்டா தான் வீட்டுக்கு வருவியா? தெருவுல பாக்கறவங்க என்னை தானே கேப்பாங்க.”
‘அதானே பார்த்தேன். எங்கடா பெரியம்மாவுக்கு நம்ம மேல திடீர்னு எங்கிருந்தோ பாசம் வந்துருச்சுன்னு. தெருவுல இருக்குறங்களுக்கு பதில் சொல்லணும்.’ என்று நினைத்துக்கொண்டாள் வெண்மதி.
“இன்னையோட வேலை முடிஞ்சிருச்சு பெரியம்மா. நாளையிலிருந்து நான் எப்போதும் வர்ற டைமுக்கு வந்துருவேன்.”
“சரி சரி. நாளையிலிருந்து சீக்கிரமா வீட்டுக்கு வந்துடு. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. நான் போய் என்னோட வேலையை பார்க்கிறேன்.” என்று கூறிவிட்டு சாப்பிட சென்றாள் லலிதா.
‘ஆமாம் சாப்பிடணும , பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட புரளி பேசணும். அப்புறம் தூங்கணும்.’ இந்த மூன்றும் ரொம்ப முக்கியமான வேலைதான் என்று மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டாள் வெண்மதி.
வெள்ளிக்கிழமை சீதா “எல்லாருடைய பிராஜக்ட் பிளான் என்னோட டேபிளுக்கு வந்துருச்சு. குட் ஜாப் ஸ்டுடென்ட்ஸ். பிளான் பண்ண மாதிரியே எல்லோரும் அவங்கவங்க ப்ராஜெக்ட் வொர்க் பர்ஃபெக்ட்டா பண்ணி முடிச்சு நல்ல மார்க் வாங்கணும். ஆல் த பெஸ்ட். ஹவ் எ ஹாப்பி வீகெண்ட்.”
அன்று மாலை சொன்னபடியே சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் வெண்மதி.
அடுத்த நாள் காலை 11 மணி அளவில் லலிதா அனைவரையும் கூப்பிட்டாள். நாம எல்லாரும் சேர்ந்து சினிமாவுக்கு போய் ரொம்ப நாள் ஆகுது. ‘என்னைக்காவது இவங்க நம்மல சினிமாவுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க எப்பயாவது என்னோட பிரெண்ட்ஸ் கூட போனால்தான் உண்டு. அம்மா அப்பா தான் பாவம். சினிமாவுக்கு போய் ரொம்ப வருஷம் இருக்கும்.’ என்று நினைத்துக்கொண்டாள் வெண்மதி. “போகலாமே.” என்று ஆர்வமாக பதில் கூறினாள்.
கார்த்திகேயன் “டிக்கெட் இவ்வளவு சீக்கிரம் எப்படி கிடைக்கும்?” என்று கேட்க.
“டிக்கெட் ஏற்கனவே வாங்கியாச்சு.” என்று லலிதா கூறினார்.
‘என்ன நடக்குது இங்கே’ என்று வியப்பாக இருந்தது வெண்மதிக்கு. ‘எப்போதுமே பெரியம்மா இப்படி சினிமா, பார்க் ,பீச்’ என்று கூட்டி போனதே கிடையாது. இவ்வளவு பேரையும் கூட்டிக்கொண்டு போனால் வெட்டி செலவு தான்.’ என்று கூறி அவர்கள் மட்டுமே வெளியே செல்வார்கள். அப்படி அவர்கள் செல்வதும் வெண்மதிக்கு மிகவும் பிடித்தமான விஷயமே. ஏனென்றால் அவர்கள் திரும்பி வரும் வரைக்கும் இவள் இவளுடைய பெற்றோர்களுடன் அந்த வீட்டில் நிம்மதியாக சுதந்திரமாக இருக்கலாமே. என்று பெரியம்மா தன்னையும் தாய் தந்தையையும் கூப்பிடுவதை அவளால் நம்ப கூட முடியவில்லை.
“ சூப்பர்!” என்று உற்சாகமாக கூறிவிட்டு
“சீக்கிரம் எல்லோரும் ரெடியாகுங்க. அம்மா மனசு மாறுவதற்குள் கிளம்பிடலாம்.” என்று எல்லோரையும் அவசரப்படுத்தினான் கார்த்திகேயன் .