என் காதல் கனா 30
அந்த வீட்டின் நடுமத்தியில் வீற்றிருந்த சோஃபாவை சுற்றிலும் நிறைய பேர் அமர்ந்திருந்தனர். பீர் பாட்டிலைச் சுற்றவிட்டு, அது நிற்கும் நபரிடம் “ட்ரூத் ஆர் டேர்” விளையாடி, ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டு ரகளை செய்து கொண்டிருந்தனர்.
விவேக்கும் ஆவலாக என்ன நடக்கிறது என விளையாட்டை கவனிக்கலானான். சதீஷிற்கு பெரிய ஆர்வம் தோன்றவில்லை. “ஆமா, எவன் முதல் யாருக்கு முத்தம் குடுத்தான்? யாரோட காதலியை வேணும்னே சைட் அடிச்சான்னு” இவனுக கேட்கற கேள்வியும், இவனுகளும்..” என நினைத்தவன், ஒரு லகுவான திவானில் சாய்வாக அமர்ந்து பப்ஜி விளையாடத் துவங்கியிருந்தான்.
வித்யாவும் எம்மாவும் கேளிக்கையில் முழுவதுமாக லயித்திருக்க, சுஜி அவ்வப்போது சதீஷை நோட்டம் விடுவதும், தோழிகளுடன் சிரிப்பதும் என இருந்தாள். சதீஷ் தன்னை சுத்தமாக கவனிக்காமல் கைப்பேசியில் ஆழ்ந்திருப்பது பார்க்க கடுப்பாக இருந்தது. “மண்ணாந்தை.. மண்ணாந்தை.. எப்படி எனக்கென்னன்னு உட்கார்ந்து ஃபோன நோண்டிட்டு இருக்க? இன்னைக்கு எனக்கு ரெண்டில ஒண்ணு தெரிஞ்சே ஆகணும்.” என எண்ணியவள், தன் கைப்பேசியை எடுத்து சதீஷின் எண்ணைத் தொடர்பு கொண்டாள்.
தன் விளையாட்டு கலைக்கப்பட்டு அழைப்பு வரவும், அதிலும், அதே அறையில் அமர்ந்திருக்கும் சுஜியிடமிருந்து அழைப்பு வரவும், சதீஷ் கடுப்பானான். “எதுக்கு இப்போ ஃபோன் பண்ணறா? இங்க தானே இருக்கா. ஏதாவது வேணும்னா எந்திரிச்சு வந்து பேச முடியாதாமா?” என நினைத்தவன், அழைப்பை ஏற்காமல் தொடர்பை துண்டித்துவிட்டு, மீண்டும் தன் பப்ஜியில் கவனமானான்.
சதீஷ் தன் அழைப்பை துண்டித்ததைக் கண்டு சுஜினி மீண்டும் சதீஷின் எண்ணிற்கு அழைத்தாள். கண்களை அலைபேசியில் இருந்து விடுவித்து, நிமிர்ந்து சுஜியைக் கண்ட சதீஷ், “என்ன?” என்பது போல் புருவத்தை உயர்த்தினான்.
சுஜினி, வெளியே அதுவரையில் அமர்ந்திருந்த நீச்சல் குளத்தின் கதவினை நோக்கிக் கண்ணசைக்க, சதீஷிற்கு அப்போது எழுந்து கொள்ளத் தோன்றவில்லை. “ச்ச்” என உதட்டை சுழித்துவிட்டு, மீண்டும் தன் கைப்பேசியில் கவனம் குவிக்க, மூன்றாவது முறையாக சுஜியின் அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்றவன், “என்ன இப்போ.. சும்மா எதுக்கு கால் பண்ணிட்டு இருக்க?” என சற்றே சிடுசிடுப்புடன் வினவினான். சதீஷின் தேவையில்லாத கோபமும், சிடுசிடுப்பும் சுஜிக்கு எரிச்சலை விளைவித்தன. இருந்தாலும் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டவள்,
“கொஞ்சம் பேசணும் சதீஷ்.” என முனுமுனுத்தாள். சுஜினி எங்கே என ஒரு முறை அறையைத் தேடியவன், அவள் அந்த அறையில் இல்லாததை கவனித்தான்.
“சொல்லு.. என்ன விஷயம்?” என அறையை துளாவிக் கொண்டே வினவினான்.
“நேர்ல பேசணும்..” என்றாள் சுஜி, மறுமுனையில்.
“எங்க இருக்க?”
“ஸ்விமிங்க் பூல் பக்கத்துல..”
“இரு.. வர்றேன்..” என அழைப்பை துண்டித்துவிட்டு எழுந்து கொண்டான்.சதீஷ் விவேக்கின் தோளைத் தட்டி, “இதோ வந்தற்றேன்” என சொல்லி நீச்சல் குளம் நோக்கி நகர்ந்தான்.
அவ்வப்போது சுஜி எங்கே, என்ன செய்கிறாள் என ஒரு பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த விவேக், அவள் கைப்பேசி அழைப்பை ஏற்று வெளிக் கதவு வழியே செல்வதைக் கண்டிருந்தான். அவள் சென்ற சில நொடிகளில் சதீஷும் அதே வாயிலில் வெளியேற விவேக்கிற்கு என்னவோ நடப்பது போல் தோன்றியது. அவனும் பின்னூடே எழுந்து சென்றான்.
வெளியே நீச்சல் குளத்தில் இருள் பரவி விட்டிருக்க, நீள நிற அலங்கார விளக்குகள் ஒளிர்விடத் துவங்கியிருந்தன. சுஜி குளத்தின் ஒரு பக்கவாட்டில் வளர்ந்திருந்த பெரிய மரத்தினைச் சுற்றி போடப்பட்டிருந்த கருங்கற்களின் மேல் அமர்ந்திருந்தாள். சதீஷ் வரவும் எழுந்து கொண்டாள்.
அவனும் நிதானமான மனநிலையில் இருக்கவில்லை. அதனால், “என்ன விஷயம்?” என கேள்வியுடன் தான் அவளருகில் வந்தான். சுஜிக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என தெரியவில்லை. சற்றே சிரிப்புடன் பேசினால் கூட, இவள் இயல்பாகப் பேசத் துவங்கியிருப்பாள். ஆனால், சண்டை போடும் மன நிலையில் இருக்கிறான் எனத் தெரிந்தே எப்படி பேச்சை வளர்ப்பது என கொஞ்சம் தயங்கினாள்.
அதே நேரம், கிடைத்துவிட்டிருந்த வாய்ப்பை நழுவ விடவும் மனமில்லாமல், “அப்போ ஏன் அப்படி பேசினீங்க சதீஷ்?” என பொதுபடையாக வினவினாள்.
“எதுக்கு எப்படி பேசினேன்?”
“இந்த சாரி ஏன் கட்டினேன்னு கேட்டீங்க? ஏன்?”
“இப்போ இந்த கான்வர்ஷேஷன் அவசியமா?” என கேள்விக்கு பதில் சொல்லாமல் மறுகேள்வி விடுத்தான் அவன். சுஜிக்கு இப்போதே கேட்டுவிடு என்று மனம் சொல்லிக் கொண்டிருந்தது.
“அவசியமா இருக்கப் போய் தானே கேட்கறேன்…சொல்லுங்க.. அப்படி சொல்ல என்னக் காரணம்?”
“ஏன் சுஜி டார்ச்சர் பண்ணற? ஏதோ நினைப்புல சொல்லிட்டேன். விடேன்.. நீ என்ன பேசணும்னு சொன்ன? அதைச் சொல்லு முதல்ல..”
“ஏன் இப்படி எடுத்தெறிஞ்சு பேசறீங்க? உங்க வேர்ட்ஸ் ரொம்ப ஹர்டிங்கா இருக்கு சத்தீஷ்.” என சொல்லிய சுஜியின் கண்களில் கோபம் மின்னிக் கொண்டிருந்தது. சதீஷ்ற்கும் இந்த சம்பாஷனை ரசிக்கவில்லை. ஆயினும் இப்போதைக்கு தவிற்க இயலாது என உணர்ந்தவன், சுஜியின் அருகில் கல்மேடையில் அமர்ந்தான்.
“என்ன உன் பிரச்சனை? சொல்லு..” என சற்றே குரலில் கோபத்தைக் குறைத்து வினவினான்.
“அன்னைக்கு.. அப்பறம் நாம சரியா பேசிக்கவே இல்லை சத்தீஷ்..”
“அப்படியெல்லாம் இல்லை சுஜி… அப்பறம் பேச சந்தர்ப்பம் அமையலை. அவளோ தான். பெருசு படுத்தாத..சில். பீ கேஷுவல்”
“இது அப்படிபட்ட விஷயம் தானா சதீஷ். கேஷுவலான விஷயமா?” என வினவியவளின் கண்கள் கோபத்தில் சற்றே கலங்கத் துவங்கியிருந்தன.
“சுஜி.. ப்ளீஸ் டோண்ட் கெட் எமோஷ்னல்.. இதைப் பத்தி நாம பேசிக்கலை. நிஜம் தான். இதுக்கு இப்போ என்ன அவசரம்? என்ன அவசியம்?” என சதீஷ் வினவ, சுஜியின் உதடுகள் படபடவென துடித்தன. வெளியே வெடவெடக்கும் குளிருக்கும் சுஜியின் உதடு துடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை என சதீஷிற்கும் தெரிந்தே இருந்தது.
அவன் அடுத்து பேசும் முன்னர், சுஜி அவனை கையமர்த்தினாள். “என்ன அவசியம்? இப்போ என்ன அவசியம் இல்லையா சதீஷ்? இதை நீங்க என்கிட்ட கேட்க கூடாது. உங்க அப்பா அம்மாகிட்ட கேட்கணும்?”
“சம்பந்தமில்லாம அவங்களை ஏன் இப்போ இழுத்து பேசற?”
“நான் சம்பந்தமில்லாம பேசலை. நடக்கறது என்னன்னு தெரியாம பேசறது நீங்க தான். உங்க அப்பா அம்மா நேத்து என் வீட்டுக்கு போய் என் அம்மாவை பார்த்து பேசியிருக்காங்க.”
இம்முறை பேச்சடைத்துப் போன சதீஷ், என்ன ஏதென்று சுதாரித்துப் பேசும் முன்னர், “என்ன பேசினாங்க?” என விவேக்கின் குரல் தெளிவாய் அவளருகில் கேட்டது. சுஜியை அறையில் காணாது, அதே நேரம் வெளியே சென்ற நண்பனும் திரும்பி வராததைக் கண்ட விவேக், இருவரையும் தேடிக் கொண்டு வந்திருந்தான்.
விவேக்கிற்கு விஷயம் தெரியாது என்றே சுஜி துளியும் நினைக்கவில்லை. தன் கட்சிக்குப் பேச, நியாயமாக யோசிக்கும் ஒருவன் வந்துவிட்டான் என்றே சுஜி எண்ணினாள். அதனாலேயே சிறிதும் யோசிக்காமல், விவேக் வந்ததும் சட்டென மாறிவிட்ட சதீஷின் உடல் மொழியை கவனித்திற்குக் கொண்டு செல்லாமல், “சதீஷோட அப்பா அம்மா என் அம்மாகிட்ட போய் பொண்ணு கேட்டிருக்காங்க. அதும், நானும் சதீஷும் லவ் பண்ணறோம்னும், கிஷோர் அண்ணா கல்யாணத்தோட சேர்த்து எங்களோட நிட்சயதார்த்தத்தையும் முடிச்சுக்கலாமான்னும் கேட்டிருக்காங்க..” என பட்டென சொல்லி முடித்திருந்தாள்.
விவேக் சதீஷின் முகத்திலேயே கண்களைப் பதித்திருந்தான். சதீஷோ, “இது என்ன கூத்து?” என்பது போல் அவசர அவசரமாகப் பேசினான். “ஏ.. என்ன கண்டதும் உளர்ற… என்ன பேசறோம்னு தெரிஞ்சு தான் பேசறியா? எங்க அப்பா அம்மா உன் வீட்டுக்குப் போனா அதை எங்கிட்ட சொல்லாம போவாங்களா? நீ பேசறது சுத்த பொய்ன்னு உனக்கே தெரியும்.” என படபடத்தான்.
“அதே தான் நானும் கேட்கறேன். உன் அப்பா அம்மா என வீட்டுக்குப் போய் பேசினது உனக்குத் தெரியாம எப்படி நடக்கும்?”
“உனக்கு யார் இதை சொன்னா சுஜி?’ என்றவன், விவேக்கிடம் திரும்பி, “டேய்.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல டா.. என்னமோ உளர்றா..? மொதல்ல உங்க அம்மாக்கு கால் பண்ணு? ஏன் அப்படி சொன்னாங்கன்னு கேளு”
“யாரு.. நான் உளர்றேனா? என் அம்மாகிட்ட ஃபோன் பண்ணி உன்னை நம்ப வைக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. உனக்குத் தேவைன்னா உன் வீட்டுக்கு நீ கால் பண்ணி பேசி தெரிஞ்சுக்கோ” என கைகளை கட்டிக் கொண்டு பதிலளித்தாள்.
மூவரில் விவேக்கின் முகம் தான் இன்னமும் கருத்துப் போயிருந்தது. சுஜி கோபமாக இறுகிப் போய் நின்றுவிட, சதீஷ் வேக வேகமாக தன் கைப்பேசியை எடுத்து இந்தியாவை தொடர்பு கொண்டான்.
அவனது தந்தை பத்மநாபன் அலைபேசியை எடுத்தார். “ஹே சதீஷ்.. என்னடா இந்த நேரத்தில? ஆர் யு ஒ.கே?” என ஆரம்பித்தவர், மகனின் சற்றே பதட்டமான பேச்சைக் கேட்டு, வழக்காமான முகமன்களைத் தவிர்த்துவிட்டு கவனிக்கலானார்.
“அப்பா, நீங்களும் அம்மாவும் சுஜி வீட்டுக்குப் போனீங்களா?” என வினவியவன், மற்ற இருவரும் கேட்கட்டும் என நினைத்து கைப்பேசியை ஸ்பீக்கர் மோடில் வைத்தான்.
“ஆமா சதீஷ்… நானும் அம்மாவும் நேத்து சுஜி அம்மாவைப் பார்க்க அவங்க வீட்டுக்குப் போனோம்பா. ரெண்டு வாரமா லக்ஷ்மிமாவுக்கு கொஞ்சம் மூச்சு திணரலா இருக்குன்னு அம்மாகிட்ட சொல்லியிருக்காங்க. அதனால அம்மா அவங்களைப் போய் பார்க்கணும்னு சொன்னாங்க..”
“அப்பா.. கதை சொல்லாம நேரா விஷயத்தை சொல்லுங்க. அங்க போய் என்ன பேசினீங்க?”
“அது… அவங்க சுஜி பத்தி ரொம்ப வருத்தப்பட்டு பேசினாங்க. அவங்களுக்கு அப்பறம் சுஜி என்ன ஆவாளோன்னு பயந்தாங்க. அம்மா அதனால கிஷோர் அன்னைக்கு ஏர்ப்போட்டில எங்ககிட்ட சொன்ன விஷயத்தை அவங்க அம்மாகிட்ட சொல்லும்படி ஆகிடுச்சு.”
“கிஷோர் சொன்னானா? அவன் என்ன சொன்னான்?”
“நீயும் சுஜியும் விரும்பறீங்கன்னு சொன்னான்.?”
“அப்பா.. என்னப்பா? அவன் எதுக்கு அப்படி சொல்லனும்? அப்படியே சொன்னாலும் அதை நீங்க எங்கிட்ட கேட்டிருக்கணும்ல..நீங்களா என்னவோ செய்திருகீங்க?”
“என்னடா எங்க மேல கோபப்படற.. இங்க பாரு சுலோ.. உன் பையன் என்னமோ சொல்லறான்?” என கைப்பேசியை சதீஷின் அன்னையிடம் சேர்ப்பித்தார் அவன் தந்தை.
“டேய் என்னடா.. சும்மா அவரை மிரட்டற? கிஷோர் அன்னைக்கே சொன்னான், அவங்க லவ் பண்ணறாங்கம்மான்னு. அதுலையும் அவனும் நிஷவும் காதுபட, சுஜி வாயாலயே இந்த விஷயத்தை கேள்விபட்டிருக்காங்க.” என அவன் அன்னை சொல்ல, சதீஷின் கோபப் பார்வை சுஜியிடம் சென்று மீண்டது. அவளும் குழப்பமாகவே கைப்பேசியை ஏறிட்டாள்.
சதீஷின் அன்னை மேலும் தொடர்ந்தார். “சுஜி அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியலைன்னு பார்க்கப் போனோம். அவங்க சுஜி பத்தி ரொம்ப கவலைப்பட்டாங்க. அதனால அவங்களுக்கு ஆறுதலா தெம்பா இருக்குமேன்னு நீங்க விரும்பறீங்கன்னு சொன்னேன். நாங்க எல்லாரும் இருக்கோம் பயப்படாதீங்கன்னு சொன்னேன். இதுல என்ன தப்பு?”
“கிஷோர் கல்யாணத்துல எனக்கு நிட்சயதார்த்தம்னு ஏதாவது சொன்னீங்களா?”
“ஆமாடா. அவங்க அம்மாவுக்கு அப்போ தானே நம்பிக்கை வரும். சும்மா காதலிக்கறாங்கன்னு சொன்னா நல்லாயிருக்காதே. நாம எல்லாரும் சுஜிக்கு இருக்கோம்னு தெரிஞ்சா அவங்களுக்கு நிம்மதியா இருக்கும் இல்லையா?”
“அம்மா.. இவளோ நடந்திருக்கு, எங்கிட்ட நீங்க ஒரு வார்த்தை கூட சொல்லலை?”
“நீ விரும்பற விஷயத்தையே எங்ககிட்ட இன்னும் சொல்லலியேடா. உங்கிட்ட என்ன சொல்லணும்னு சொல்லற?”
“அம்மா அதுவும் இதுவும் ஒண்ணா? என்னம்மா பேசறீங்க?உங்களால இங்க எவளோ குழப்பம் தெரியுமா?அவங்களை போய் உங்களை யார் பார்க்கச் சொன்னா? அதும் எங்கிட்ட எதும் சொல்லாம என்ன என்னவோ பேசிட்டு வந்திருக்கீங்க”
“டே சும்மா எங்களை குறை சொல்லாத, எதும் ப்ளான் பண்ணி பேசலாம் போகலை. எதார்த்தமா பார்க்கப் போனோம். சாதாரணமா தான் பேசினோம். அவளோ தான். நாங்க என்னமோ உன்னைக் கேட்காம தாம்பாளத் தட்டோட போய் முன்ன பின்ன தெரியாத பொண்ணை நிட்சயம் பண்ணிட்டு வந்துட்ட மாதிரி பேசற.. நீ காதலிக்கற பொண்ணு தானேடா. சொல்லப் போனா நீ எங்களுக்கு தேங்கஸ் சொல்லணும். இப்போ இதுனால அங்க என்ன பிரச்சனை? அதை முதல்ல சொல்லு?”
“அது.. நான் அப்பறம் பேசறேன்..” என அன்னைக்கு பதிலளிக்காமல் கைப்பேசியை அணைத்தவன், சுஜியையும் விவேக்கையும் ஏறிட்டான். விவேக்கின் முகம் கல்லென இறுகிப் போயிருந்தது. சுஜிக்கு ஓரளவு விஷயம் புரிந்திருந்தது. அதற்கான விளக்கம் கொடுக்கும் சூழல் இப்போதல்ல என்று உணர்ந்து அமைதியாக இருந்தாள். ஆனாள் சதீன் மனம் கொதி நிலையை அடைந்திருந்தது.
அதிலும் இருவருமே ஒன்றும் பேசாமல், அவன் முகத்தை ஏறிட்டதைப் பார்க்க, ஏதோ அவன் மேல் மட்டுமே தவறு என்பது போல் குற்றம் சட்டும் தோரனைத் தெரிய, கோபமாக சுஜியை ஏறிட்டவன், “சொல்லு.. இதுக்கு என்ன பதில் சொல்லற. அங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசியில நீதான் கிஷோர்டயும் நிஷாகிட்டையும் என்னவோ சொல்லியிருக்க?”
“சதீஷ் ப்ளீஸ் நான் சொல்லறதை கொஞ்சம் பொறுமையா கேளு..அன்னைக்கு சுபாவும் அவ ஃப்ரெண்ட் மதுமிதாவும்..” எனத் துவங்கி சுருக்கமாக அன்று நடந்த சம்பாஷனையை மொழிந்தாள். “நிஜம்மாவே உன்னை அவங்க தப்பா பேசறதை பொறுத்துக்க முடியாம தான் அப்படி பேசினேன். கிஷோர்க்கு இது எப்படி தெரியும்னு எனக்குத் தெரியலை. நான் திரும்ப வரப்போ மதுமிதாகிட்ட உண்மையை சொல்லிட்டு. பிரச்சனையை நேர் பண்ணிட்டு தான் வந்தேன்.”
“சும்மா நடிக்காத சுஜி.. உன்னால தான் இவளோ குழப்பமும்..”
“என்னால என்னாலன்னு சொல்லாத.. அன்னைக்கு நீ மட்டும் ஃப்ளைட்ல..” எனத் துவங்கியவள், விவேக் அருகே நின்றது கண்டு, நாகரீகம் கருதி அமைதியானாள். சுஜியின் தடுமாற்றம் விவேக்கிற்கு அப்பட்டமாகப் புரிந்தது. அவன் மனம் சொல்ல முடியாத பாரத்தில் இருந்தது.
கிடைக்காது என நம்பி ஏங்கிய மனம், கிடைக்குமோ என்ற சிறிய நம்பிக்கை நூலை பற்றிக் கொண்டு, மெல்ல மெல்ல முன்னேறியிருந்தது. மனதின் ஆசை நூல், நாளாக நாளாக இறுக்கமான பின்னலாக மாறியிருக்கும் என நம்பிய வேளையில், அது நூல் கூட அல்ல, வெறும் நூலாம்படை தான் என கண்முன்னால் அரங்கேறிக் கொண்டிருந்த காட்சிகள் உணர்த்தின.
அறிவிற்குப் புரிந்த விஷயம் மனதில் நுழைந்து மேலும் மேலும் பாரத்தை அதிகரித்தது. அவ்விடம் விட்டு சென்று விட வேண்டும் என்ற உந்துதல். சற்றே விவேக் நகரத் துவங்க, “டே, நில்லு… எங்க போற?” என விவேக்கின் கைகளைப் பிடித்து தடுத்திருந்தான் சதீஷ். பிடித்த கைகளை உதறிய விவேக்கின் கோபம் சதீஷிற்கு நியாமானதாகவேப் பட்டது.
சொல்லப் போனால், இந்த நேரம் சுஜியுடன் கை கோர்த்து நின்று, “ஆமா நாங்க காதலிக்கறோம்..” என தெளிவாக கூறியிருக்க கடமைப் பட்டவன், சுஜியை குற்றவாளி போல நோக்கினான்.
“ஃப்ளைட்ல உன் பக்கத்தில உட்கார்ந்து வந்தது உண்மை. அதனால என்ன இப்போ?”
“பக்கத்துல உட்கார்த்துட்டு வந்தியா? அவளோ மட்டும் தானா?”
“சரி… தூக்கத்துல உன் மேல சாஞ்சுட்டு வந்திருக்கலாம்…” என சதீஷ் ஏதோ சொல்லத் துவங்க, சுஜியின் கண்களில் தாரைத் தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்திருந்தது. சுஜியின் முகத்தை ஏறிட்டவனுக்கு அடுத்து பேச வார்த்தைகள் வரவில்லை.
அந்த இடத்தில் நிற்க சிறிதும் பிடிக்காமல், விவேக் அங்கிருந்து நகர முயன்றான்.
“டே. விவேக்.. கொஞ்சம் நான் சொல்லறதைக் கேளு” என நகரும் விவேக்கின் கைகளைப் பற்றி தடுத்தான் சதீஷ்.
“இனி கேட்க ஒண்ணும் இல்லை. கையை விடு” என கைகளை உதறினான் விவேக். “டே” என சதீஷ் துவங்க,
“ப்ளீஸ் என்னை பேசவைக்காத..விட்ரு சதீஷ்..”
“டே.. என்னடா..”
“உன்கிட்ட கேட்டு கேட்டு தான் நான் எல்லாமே செஞ்சேன். அவளை எனக்கு பிடிச்சிருக்குன்னு உனக்கு நல்லாவே தெரியும். இன்ஃபாக்ட், பிலடெல்ஃபியா போறப்போ நைட் கூட, வாடா வந்து அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு. அவளுக்கு உன்னை பிடிக்கும்னு நீ தானேடா அவளோ தூரம் சொன்ன. அவகூட பேச பழக ஹார்ட்வேர் ஸ்டேர்ல வேலைக்கு போன்னு சொன்னது கூட நீதான்”
“டே விவேக், அதெல்லாம் நிஜாமாவே மனசாற தாண்டா சொன்னேன்”
“அப்பறம் எப்படிடா, அவகூட அவளோ க்ளோஸா.. ஃப்ளைட்ல. நம்பினேண்டா உன்னை… நீ சொன்னதை எல்லாமே நம்பினேன். முன்னாடியே எங்கிட்ட சொல்லித் தொலைச்சிருக்கலாம்ல.. என் மனசு என்ன ஸ்விட்ச் போர்டா, நீ வேண்டாம்னு நினைச்சா நான் ஆன் பண்ணிக்க, நீ வேணும்னா நான் ஆஃப் பண்ணிக்க.. இதுக்கெல்லாம் முழு காரணம் நீயில்ல. கண்ணு முன்னால நடக்கறதை நம்பாம, நீ சொன்னதை எல்லாமே மடத்தனமா நம்பின நான். நம்ப வச்சு ஏமாத்திட்டடா..””என விவேக் அழுத்தமான குரலில் சற்றும் இரையாமல் பேசினான்.
அவன் கோபமாக கத்தி, சண்டையிட்டிருந்தால் கூட சதீஷிற்கு பேச ஒரு வாய்ப்பாவது கிடைத்திருக்கும். ஆனால் விவேக்கின் அழுத்தமான, நிதானமான பேச்சு சதீஷை வாய்திறக்க விடவில்லை.
“டே ..அப்படிலாம் ஒண்ணும் இல்லடா. நான் சொல்லறதை கொஞ்சம் முழுசா கேளு.. எங்களுக்குள்ள அப்படி எதும்””என திரும்பிப் பார்க்காமல் நடக்கும் நண்பனை சமாதானப்படுத்த ஏதுவாக சதீஷ் சொல்லிக் கொண்டிருக்க, அவனது கன்னத்தில் தன் ஐவிரல்களையும் பதித்திருந்தாள் சுஜி.
“இன்னொரு தடவை அப்படியெதுமில்ல, ஒண்ணுமில்லைன்னு, நான் உளர்றேன்னு சொன்ன..” என ஆத்திரத்தின் உச்சியில் கண்களில் கண்ணீர் வழிய ஆத்திரமாக பேசினாள். கோபத்தில் வார்த்தைகள் திக்கித்திக்கி வெளிப்பட்டன. “அவனை மட்டும்… மட்டும்… நீ ஏ…ஏ…ஏமாத்தலை. எனக்கு ஏன் நம்பிக்கை குடுத்த? என்னை பிடிச்ச மாதிரி ஏன் நடந்துகிட்ட? யு ஆர் ஏ கவர்ட். கோழை. டேக் சம் ரெ..ரெ..ரெஸ்பான்சிபிளிட்டி ஃபார் யுவர் ஆக்ஷன்.” என திக்கிக் கொண்டே பேசினாள் சுஜினி.
“பி ஏ மேன். பிடிச்சிருந்தா ஆமான்னு சொல்லக் கூட தைரியம் இல்லாத ஒருத்தனையா எனக்கு எப்படி பிடிச்சுது நினைக்கறப்போ, என்னை நினைச்சே எனக்கு…எனக்கு அவமானமா இருக்கு.. என் முஞ்சில முழிக்காத இனிமே… கெட் லாஸ்ட்.. கெட் லாஸ்ட் ஃப்ரம் மை லைஃப். “ என அழுகையினூடே கூறினாள்.
விவேக் திரும்பி நின்று இருவரையும் பார்த்தவன், மறுமொழி சொல்லாது அவ்விடம் விட்டு விடுவிடுவென வெளியேறினான்.
சுஜியும் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை. நேரே வீட்டினுள் சென்று தன் கைப்பையை எடுத்துக் கொண்டவள், தன் தோழிகளிடம் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினாள். சிறிது தூரத்தில் தென்பட்ட டாக்ஸியை அமர்த்திக் கொண்டு தனது கல்லூரி வளாகம் சென்று சேர்ந்தாள்.
முதல் வேலையாக சதீஷின் எண்ணை கைப்பேசியில் இருந்து அழித்தாள். வாட்ஸப், ஃபேஸ்புக் என அனைத்து தொடர்பையும் துண்டித்தாள். அவளது கைப்பேசி விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. ரான், எம்மா, வித்யா, சதீஷ் என மாறி மாறி கைப்பேசியில் அழைத்துக் கொண்டே இருந்தனர். யாருடனும் பேசும் நிலையில் சுஜி அப்போது இருக்கவில்லை.
எரிச்சல் மிகுந்து கைப்பேசியை அணைத்து கைப்பையினுள் திணித்தவள், தனது அறைக்குள் சென்று, கதவை தாளிட்டுவிட்டு கட்டிலில் தொம்மென விழுந்து அழத் துவங்கினாள். தான் இதுவரை இழந்த விஷயங்கள் ஒன்றொன்றாக மனதில் அலை மோதின. அனைவருக்கும் சாதாரணமாகக் கிடைக்கும் தந்தையின் பாசம், அரவணைப்பு, அறிவுரை என தனக்குக் கிட்டாமல் போன விஷயங்களை நினைத்து ஏக்கம் அதிகமானது. அழுகையாக வெடித்தது.
மாமா வீட்டில் விருந்தினர் போல் நடத்தப்பட்ட போது, பள்ளியில், கல்லூரியில் என எங்கேயுமே முழு மன மகிழ்வுடன் தனக்கு வாய்க்காத சின்னச் சின்ன விஷயங்களை நினைத்து மனம் ஏங்கியது. தான் இழந்த அனைத்தையும் நினைத்து தன் மேல் தோன்றிய பச்சாதாபத்தில் கண்கள் தாமாகவே வடியத் துவங்கின.
அழுது கொண்டே, எப்போது தூங்கினாள் எனத் தெரியாமல் உறங்கிப் போயிருந்தாள். அடுத்த தினம் காலை, கண்விழிக்க இயலவில்லை. யாரோ மண்டையில் சம்பட்டியால் அடிப்பது போல் விண் விண்னென்று தலை வலித்தது. உறங்கவும் விடாமல், கதவுகளை படபடவென தட்டும் சத்தம் கேட்டு மெல்ல படுக்கையில் எழுந்து அமர்ந்தாள்.
“சுஜி…சுஜினி..வேக் அப். ஆர்யூ தேர்..” என எம்மா மற்றும் வித்யாவின் குரலும் மாறி மாறிக் கேட்டது. நேற்றைய நிகழ்வுக்கு தன்னை இப்போது சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள் எனப் புரிந்தது. ஆனால் அப்போதைக்கு எழுந்து செல்ல மனமில்லாமல், “கோ அவே… கிவ் மீ சம் பீஸ். தனியா விடுங்க கொஞ்ச நேரம்” என முனங்கினாள்.
இருந்தும் நிறுத்தாமல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, எரிச்சல் மேலோங்க கதவுகளைத் திறந்தவளை, ரான், எம்மா, வித்யாவுடன் நின்றிருந்த சதீஷ் மற்றும் விவேக்கின் முகங்கள் எதிர்கொண்டன. சதீஷைக் கண்டதும் தன்னிட்சையாக கதவுகளை அடைக்க முனைந்தவள், அனைவரின் முகங்களும் பேயறைந்ததைப் போல் இருந்ததைக் கண்டு, “என்னாச்சு?” என மெல்லிய குரலில் வினவினாள்.
முதலில் பேசியது எம்மா தான். “உன் ஃபோன் என்னாச்சு? வை இஸ் இட் ஸ்விச்ட்டு ஆஃப் ஃப்ரம் நைட்?” என வினவினாள்.
“நான் தான் ஆஃப் பண்ணி வச்சேன்.. ஏன்? என்னாச்சு?” எனத் திரும்ப வினவ, வித்யா சுஜியின் தோளை ஆதரவாய் பற்றிக் கொண்டாள். அனைத்து முகங்களிலும் விடை தேடியவள், கண்களை சதீஷின் முகத்தில் பதிக்க, அவனோ மென்மையாக, “உன் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்…” என சப்தம் எழாமல் பதிலளித்தான்.
அதற்குமேல் எதுவுமே சுஜியின் காதுகளில் விழவில்லை. சதீஷ் சொன்ன விஷயம் மனதை சேரும் முன்னரே மயங்கி கீழே சரிந்திருந்தாள் சுஜினி.