அந்த பார்ச்மென்ட்டை சுற்றி மூவரும் அமர்ந்து இருக்க, அவர்கள் எண்ணங்களோ பல்வேறு இடங்களைச் சுற்றிக் கொண்டிருந்தன. ஆரியன் அந்த பார்ச்மென்ட்டை பல கோணங்களில் ஆராய்ச்சி செய்தும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து, நந்தினி, “ஒவ்வொரு வரிக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கு. நாங்க ஆறு பேரும் தனித்துவம் மிக்கவர்கள், அழியா சக்தி கொண்டு தொடர்ந்து வருவோம்-னு இருக்கு” என்றாள்.
ஆதித்யன், “ஒருவேளை இது அந்தச் சிற்றரசர்கள குறிக்குதா ? ஆனா, மொத்தம் ஏழு சிற்றரசர்கள் தான இருந்தாங்க ?” என்று கேட்க,
ஆரியன், “இதுவாச்சும் பரவால்ல, அடுத்த ரெண்டு லைன்ஸ பாருங்க. மலையில் உருண்டு கீழே வருவோமா ? அப்புறம் வயசு எதைப் பண்ணுமோ அதை பண்ணுவார்களா ? இந்த கேள்வியை உருவாக்குனவன் மட்டும் என் கையில கெடச்சான்…”என்று கூற,
நந்தினி, “ஆனா நமக்குத் தேவையானது வித்தியாசமானது ( Difference ) தான். இந்த இடத்தில் வித்தியாசம்னு எத சொல்றாங்க ? அது மட்டுமில்லாம, இன்னும் தனித்துவமான நாலு பேரும் இவங்க கிட்ட தான் இருக்காங்கனு போட்ருக்கு. ஆனா, இதுல அந்த ஆறு பேரு யாரு ? நாலு பேரு யாருனு ஒரே குழப்பமா இருக்கு” என்று கூறினாள்.
அவர்கள் எவ்வளவு தான் முயன்றும், அந்த வரிகளை ஒன்றுக்கொன்று சம்பந்தப் படுத்தவே முடியவில்லை. முதல் இரண்டு வரிகளை வைத்து யோசித்தால் அடுத்த வரிகளுக்கு அது பொருந்தவில்லை. சுருக்கமாகச் சொன்னால் தலையும் புரியாமல் காலும் புரியாமல் இருந்தனர் மூவரும்.
ஆரியனும் நந்தினியும் நிமிர்ந்து அமர, “முதல்ல ஆறு பேர் ஏதோ ஒரு வகையில் மத்தவங்கள விடத் தனித்துவமானவர்களா இருக்காங்க. இது ஆட்களா இருக்கலாம் இல்லனா கோள்களாகக் (planets) கூட இருக்கலாம். ஆனா ரெண்டாவது லைன்ல இந்த ஆறு பேரும் எப்பவுமே இருப்பாங்கனு இருக்கு. இதுக்கும் மொத லைனுக்கும் தொடர்பில்லையே” என்று கூறினான் ஆதி.
ஆரியன், “இப்ப மட்டும் பொசய்டன் நம்ப கூட இருந்தார்னா, நமக்கு ஏதாவது ஐடியா கொடுத்திருப்பார். இந்த நேரம் பார்த்து இப்படி ஆகிடுச்சே” என்று கூற, வெடுக்கென நிமிர்ந்தாள் நந்தினி.
“இப்போ என்ன சொன்ன ?” என்று நந்தினி கேட்க, அவள் கேட்ட விதத்தில் அவளை வினோதமாகப் பார்த்தவன், “இல்ல நந்து, பொசய்டன் இப்ப இங்க நம்ம கூட இருந்திருந்தா நமக்கு உதவியா இருக்கும்னு சொன்னேன்” என்று கூற,
“இல்ல நீ அப்ப என்ன சொன்னியோ அதே வார்த்தைகளைத் திருப்பி சொல்லு” என்று கூற, ஆரியனும் அவ்வாறே செய்தான். அதைக் கேட்ட பிறகு நந்தினி முகம் மலர்ந்தாள்.
மற்றவர்களைப் பார்த்து, “இவ்வளவு சின்ன விஷயத்தை எப்படி யோசிக்காம விட்டேன்னு தெரியல, தேங்க்ஸ் ஆரி. நீ தான் இந்த விடுகதையோட ஆன்சர கண்டுபிடிக்கிறதுக்கு பெரிய உதவி பண்ணியிருக்க” என்றவுடன்,
மற்ற இருவரும் அவளைப் புரியாமல் பார்க்க, “இன்னமும் புரியலையா. நேரம், அதாவது நம்ப டைம எப்படி சொல்லுவோம் ?” என்று கேட்க, மற்ற இருவரும் ஒரே நேரத்தில், “நம்பர்ஸ்” என்றனர்.
நந்தினி ஆமென்று தலையை அசைத்து, “யெஸ் ! ஏன் அந்த ஆறுன்ற வார்த்தை நம்பர்ஸ குறிக்கக் கூடாது ?” என்று கேட்க,
“அப்ப தனித்துவமான நம்பர்னா, அது கண்டிப்பா ஒரு ஆறு டிஜிட் இருக்குற ஒரு கான்ஸ்டன்ட் (constant)-ஆ தான் இருக்கணும்” என்றான் ஆதித்யன்.
“அது எப்பவுமே மாறாம நிலையா இருக்குற ஒரு நம்பர். இது ரெண்டாவது லைனோட ஒத்துப் போகுது” என்றான் ஆரியன்.
“ஆனா Maths-ல நிறைய constants இருக்கே. இதுல நாம எத தேடறது” என்று ஆதி மலைப்பாகக் கூற,
“அடுத்த லைன்ஸ படிப்போம். Down the hill we roll நம்பர்ஸுக்கும் மலையில உருளுறதுக்கும் என்ன சம்பந்தம் ? அடுத்த லைன்ல வயசு என்ன செய்யுமோ அதை நம்பர் செய்யும்னு போட்ருக்கு ?” என்று கேட்டாள் நந்தினி.
சிறிது நேரம் கழித்து ஆரியன், “இதை ஏன் இப்படிப் பார்க்கக் கூடாது ? வயசு எப்பயும் ஏறிக்கிட்டே போகும். அதே மாதிரி மலையில உருண்டு வரும் போது அதோட உயரம் குறைஞ்சுக்கிட்டே வரும், இல்லையா ? அது மாதிரி இந்த நம்பர் இருக்கலாம்ல ?” என்று கேட்டான்.
“இல்ல ஆரி, இப்ப நமக்குத் தேவை ஒரு constant. அது எப்படி அதிகரிக்கவோ குறையவோ முடியும்” என்று கூறியவளின் மனதில் ஏதோ தோன்ற, திடீரென்று,
“ஆரி, You are brilliant” என்று கத்தினாள். “நீ சொன்ன ரெண்டு விஷயமும் கரெக்ட் தான். ஆனா, அந்த நம்பர் மாறாது” என்று கூறியவளைப் புரியாமல் பார்த்தனர்.
“அதாவது அந்த ஆறு டிஜிட் (digit) நம்பர்ல இருக்குற ஆறு தனித்தனியான நம்பர்ஸையும் அதிகரிக்கும் வரிசையிலும் (Ascending order) குறையும் வரிசையிலும் (Descending order) வச்சு பார்க்கணும்” என்றாள் நந்தினி.
அவள் கூறியதைக் கேட்ட இருவரும் மகிழ, நந்தினி தொடர்ந்தாள். “அடுத்த லைன்ல இருக்குற Difference என்ற வார்த்தை, subtraction (கழித்தல்)-அ குறிக்குது. அடுத்த லைன பார்க்கும் போது, அதுல நாம மாட்டிக்குவோம்னு வருது”என்றாள்.
ஆதி, “சனா, இப்போ ஒரு ஆறு டிஜிட் நம்பர Ascending order- லயும், Descending order- லயும் எழுதி அதை subtract பண்ணா எப்படி ஒரே நம்பர் வரும் ? நமக்குத் தேவையானது ஒரு நிலையான நம்பர் தான ?” என்று கேட்டான் ஆதி.
நந்தினி சிறிது நேரம் கண்மூடி ஆழ்ந்து யோசித்தாள். பின்னர் மெல்லக் கண்களைத் திறந்து, “Kaprekar constant” என்றாள்.
ஆதிக்கு அப்போது தான் அதைப்பற்றி ஞாபகம் வர, மலைத்துப் போய் அமர்ந்தான்.
அது என்னவென்று புரியாத ஆரியன் குழம்ப, நந்தினி, “இதைப் பத்தி சிம்புளா சொல்லணும்னா, ஏதாச்சும் ஒரு த்ரீ ( Three ) டிஜிட் நம்பர மனசுல நினைச்சுக்க. மூணுமே வேற வேற நம்பர்ஸா இருக்கணும். இப்ப சொன்ன மாதிரி அதுல இருக்குற நம்பர்ஸ Ascending order- லயும், Descending order- லயும் நெனச்சுக்கோ.
உதாரணத்திற்கு 351, இந்த நம்பர் 531 என்று Descending order-லயும் 135 என்று Ascending order-லயும் வரும். அந்த இரண்டு நம்பர்ஸையும் கழிச்சு, வர ஆன்சரையும், அதே மாதிரி பண்ணிக்கிட்டே போனா உனக்கு கண்டிப்பா ஒரு ஸ்டெப்ல 495 என்ற நம்பர் வரும். (இதைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள அத்தியாயத்தின் இறுதியில் பார்க்கவும்) அதே நம்பர நீ மறுபடியும் இதே மாதிரி செஞ்சாலும், உனக்கு அப்போதும் 495 (954-459) தான் வரும். இந்த மாதிரி நம்பர்ஸை தான் Kaprekar constant-னு சொல்வோம்” என்றாள்.
“அடப்பாவிகளா இவ்வளவு சின்ன கேள்விக்குப் பின்னாடி இவ்ளோ பெரிய ஆன்சரா ? சரி அப்படினா அந்த ஆறு டிஜிட் எண்களுக்கு இருக்கும் kaprekar constant என்னனு கண்டுபிடிச்சா அதை நாம பயன்படுத்தலாம்ல ?” என்று ஆரியன் கேட்க.
“அங்க தான் பிரச்சனை இருக்கு. ஆறு டிஜிட் நம்பர்ஸுக்கு ரெண்டு kaprekar constants இருக்கு. 5,49,945 மற்றும் 6,31,764. இந்த ரெண்டுத்துல எந்த நம்பர் ஆன்சர் ?” என்று கேட்டான் ஆதி.
“பேசாம ரெண்டுத்தையும் முயற்சி பண்ணி பாக்கலாம்ல ?” என்று ஆரியன் கேட்க,
நந்தினி, அவனை முறைத்துக் கொண்டே, “கடைசி லைன பாரு, ஏதாச்சும் தப்பா எழுதுனா இந்த பாரச்மென்ட் எரிய ஆரம்பிச்சுடும்” என்றவள், மறுபடியும் அந்த வரிகளைப் படித்தாள்.
“ஹேய் ! ஆன்சர் கண்டுபிடிச்சாச்சு” என்று குதூகலித்தாள்.
“எந்த நம்பர் சனா ?” என்று ஆதி ஆவலுடன் கேட்க,
“6,31,764” என்றவள், தொடர்ந்து, “ஏழாவது லைன்ல, எங்களிடம் தனித்துவமான நால்வர்கள் இருக்காங்கன்னு இருக்கு. அப்படின்னா அந்த ஆறு டிஜிட் kaprekar constant-குள்ள நான்கு டிஜிட் kaprekar constant-உம் இருக்கணும். நான்கு டிஜிட் kaprekar constant 6,174. அப்படின்னா நாம தேடுற விடை 6,31,764” என்றாள்.
அவள் கூறியதைக் கேட்ட ஆதித்யன், அவளைக் கைகளில் தூக்கிச் சுற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
“அடுத்து என்ன நந்து, உன் இரத்தத்தால் அந்த நம்பர அப்படியே இந்த பார்ச்மென்ட்ல எழுது” என்றான் ஆரியன்.
நந்தினி ‘பே’ என முழித்து, “டேய் ஆரி, எங்களுக்குக் கேட்கும் விதத்தில் சொல்லுங்கன்னு இருக்கு. அப்படின்னா Morse code-ல இந்த நம்பர எழுது” என்றாள்.
அவள் கூறிய லாஜிக் சரியாக இருக்க, அதை ஆதியும் ஒத்துக்கொண்டான். ஆரியன் அந்தச் சின்ன ஆணி போல இருந்த கருவியைப் பயன்படுத்தி அதில் எண்களைப் எழுத, அந்த பார்ச்மென்டில் இருந்த அனைத்து குறியீடுகளும் மறைந்தன.
“ஆரி, என்னடா பண்ண ? இப்ப மட்டும் இந்த பார்ச்மென்ட்க்கு ஏதாச்சும் ஆகட்டும், அப்புறம் இருக்கு உனக்கு” என்று நந்தினி கோபமாகக் கூற, அதே நேரத்தில் அதில் பல எண்கள் தோன்றின.
உடனே ஆதித்யன் அதைக் குறித்துக் கொண்டான். அவன் எழுதி முடிக்க அந்த எண்களும் மறையவும் சரியாக இருந்தது.
அந்த எண்களைப் பார்த்து ஆரியனும் நந்தினியும் குழம்ப, ஆதி, “இது ஏதோ ஒரு கிரகத்தோட கோ- ஆர்டினேட்ஸ் மாதிரி இருக்கு. இன்னைக்கு தான் பொசய்டன் இதை சொல்லிக் கொடுத்தார்” என்று கூறிக்கொண்டே, ஆதி விண்கல கட்டுப்பாட்டு அறைக்குச் செல்ல, அவர்கள் அவனைப் பின் தொடர்ந்தனர்.
அந்தப் புதுப்பிக்கப்பட்ட விண்கலத்தில் உள்ள ஓரிடத்தில் அந்த எண்களைத் தட்டினான். சில நொடிகளுக்குப் பிறகு திரையில் கிரகம் ‘176C’ என்று காட்டியது. அதற்கு அடியில் ‘தடை செய்யப்பட்ட கோள்’ என்ற எழுத்துகள், சிவப்பு நிறத்தில் மின்னின.
அதைக் கண்ட மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அதைப் பற்றிய செய்திகளைக் கேட்ட போது, அவர்களுக்கு ஆக்சஸ் மறுக்கப்பட்டது.
ஆதி, “இனி நம்மளால செய்ய முடிகிற வேலை ஒன்னே ஒன்னு தான்” என்று கூறியவன்,
சற்று இடைவெளி விட்டு, “நாம அந்தக் கிரகத்துக்கு போய் தான் எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கணும்” என்றான்.
நந்தினியும் ஆரியனும் சம்மதம் தெரிவிக்கவே, ஆதி, அந்த இடத்தை destination-ஆக மாற்றினான். அந்த விண்வெளி வாகனம் தனது பயணத்தின் இறுதியை நோக்கி வேகமாக நீந்த ஆரம்பித்தது.
அதுவரை இல்லாத களைப்பை அவர்கள் அப்போது உணர, மூவரும் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சென்றனர். நந்தினி மட்டும் பொசய்டனைச் சென்று பார்த்தாள்.
அவரது அறையில் எந்த வித உணர்வும் இல்லாமல் படுத்துக் கிடந்த பொசய்டனைப் பார்த்த போது, அவளுக்குள் வேதனை பொங்கியது. பிறகு தனது அறைக்குத் திரும்பியவள் மூமூவைப் பார்த்துக் கொண்டே உறங்கிப் போனாள்.
*******
யோன்… யோன்… யோன்… என்ற ஒலிப்பு சத்தம் அந்த விண்கலத்தை நிறைக்க, ஆதி, நந்தினி மற்றும் ஆரியன் மூவரும் பரபரப்புடன் எழுந்தமர்ந்தனர்.
அவர்கள் அந்த விண்கலத்தின் மையத்திற்கு ஓடி வர, என்ன பிரச்சினை என்று தெரியாமல், நேரே மூவரும் control room- முக்குள் நுழைந்தனர். அங்கே திரையில் ‘Obstruction Ahead’ என்ற எச்சரிக்கை செய்தி ஒளிர, அப்போது தான் திரையில் அந்தக் கோளைப் பார்த்தனர்.
மரகதப் பச்சை நிறத்தில் அந்தக் கோள் அழகாக மிளிர, அதைச் சுற்றி விண்கற்கள் அரணாக நின்றன. உடனே அந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட ஆதித்யன், விண்கலத்தை ‘Auto pilot’-இல் இருந்து, Manual-ஆக மாற்றிவிட்டு, பொசய்டன் கூறியதை நினைவு படுத்திக் கொண்டு, அந்த வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினான்.
ஆரியனும் நந்தினியும் சுற்றி இருக்கும் ஆபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள் என்றால், ஆதித்யன் அந்த விண்கலத்தைச் செலுத்தத் தொடங்கியதும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
அதை எல்லாம் பொருட்படுத்தாமல், ஆதி காரியமே கண்ணாய் இருந்தான். சிறிது சிரமப்பட்டாலும் ஆதி எப்படியோ அந்த விண்கலத்தை 176C கிரகத்தின் காற்று மண்டலத்திற்குள் நுழைத்திருந்தான்.
ஆதித்யன் அந்த விண்கலத்தை ஓர் இடத்தில் பறந்துகொண்டே நிற்குமாறு செய்து விட்டு, அந்த விண்கலத்திலிருந்த ட்ரோன்களை ரிலீஸ் செய்தான்.
பின்னர் மற்ற இருவரிடமும் திரும்பி, “இந்தக் கிரகத்தைப் பற்றித் தெரியாமல், நாம இங்க நுழையுறது நல்லதில்ல. அதனால் தான் அந்த Surveillance Drone-களை அனுப்பினேன். அது கொண்டு வரும் டேட்டாவை வச்சு தான் நாம அடுத்துச் செயல்பட வேண்டியதைக் கவனிக்கலாம்” என்றான்.
அவன் கூற்றை மற்ற இருவரும் ஒத்துக்கொள்ள, நந்தினி, “ஆதி எப்படி இந்த வாகனத்தைப் கன்ட்ரோல் பண்ண கத்துகிட்ட ?” என்று கேட்க,
ஆதி, “இந்த விண்கலத்துல இருக்குற சில பகுதிகளை நான் தான் டிசைன் செஞ்சேன், சனா. அதில் செஞ்ச மாற்றங்களை பொசய்டன் சொன்னப்ப, அதை தெரிஞ்சுக்கிட்டேன். அவ்வளவு தான்” என்றான்.
சில மணி நேரங்களுக்கு அவர்கள் அப்படியே உரையாடிக் கொண்டிருக்க, Surveillance Drone-கள் திரும்பி வந்தன.
அவற்றிலிருந்த டேட்டாக்களை திரையில் வெளிப்படுத்த அந்தக் கிரகத்தைச் சுற்றி எடுக்கப்பட்ட பல்வேறு நிழற்படங்களை அது காட்டியது.
அனைத்தையும் அவர்கள் அலசிப் பார்க்க, அந்தக் கிரகத்தில் எந்த உயிரினமும் இல்லை என்று தெரியவந்தது. மொத்த கிரகமும் நீரால் சூழப்பட்டிருந்தது. அதிலிருந்த ஒரு நிழற்படத்தில் மட்டும் ஏதோ வித்தியாசமாக இருக்க, அதை உற்று நோக்கிப் பார்த்தனர்.
நந்தினி உடனே, “அது ஒரு கோட்டையின் மேல் பகுதி மாதிரி இருக்கு. கயா கிரகத்துல இருந்த மாதிரி இங்கேயும் நீருக்கடியில ஒரு கோட்டை இருக்கும்னு நினைக்கிறேன்” என்றாள்.
அந்த நிழற்படம் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது அறிந்து, மெதுவாக வாகனத்தைக் கீழே இறக்கினான் ஆதி.
பின், “வாங்க, இனிமே அடுத்த இடத்துக்கு போகணும்னா துணிந்து செயல்பட வேண்டும்” என்றான்.
“அடப்பாவி ! அதுக்குன்னு எந்தப் பாதுகாப்பு கவசமும் இல்லாம எப்படி இவ்ளோ ஆழமான தண்ணீர்க்குள்ள போறது ?” என்று கேட்டான் ஆரியன்.
“நாம் பொசய்டனோட நினைவுகளில் இருந்தப்ப, நமக்கு எதுவும் ஆகலைல ? இப்பவும் எதுவும் ஆகாதுனு நம்புவோம்” என்றாள் நந்தினி.
ஆரியன் எவ்வளவு மறுத்தும், அவனை மற்ற இருவரும் இருபுறமும் பிடித்துக்கொண்டு, தண்ணீரில் குதிக்க, நினைவுகளில் அறியாத குளிர்ச்சியை அவர்கள் அப்போது உணர்ந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படத் தொடங்கவும், கன்னத்தில் ஏதோ பிளவு ஏற்பட்டு நீருக்குள் சுவாசிப்பதற்கு உதவின.
அதனால் அவர்கள் நிலத்தில் இருப்பது போலவே உணர்ந்தனர். மற்றவர்களுடைய முகத்தைப் பார்த்து ஆரியன் கத்த, ஆதியும் நந்தினியும் அவனை முறைத்தனர்.
வேக வேகமாக நீந்திய பிறகு, அவர்கள் மெதுவாக அந்தப் பெருங்கடலின் அடியிலிருந்த ஒரு மலையில் இறங்க, அவர்கள் கால் தரையில் பட்டதும், அந்த இடமே ஒளிமயமாக மாறியது. தூரத்தில் ஒரு கோட்டை சர்வ அலங்காரத்துடன் காட்சி அளித்தது. அந்த கோட்டையைச் சுற்றி பவளப் பாறைகள் பாதுகாப்பு வீரர்கள் போல அணிவகுத்து இருந்தன.
அந்த இடத்தில் ஒளி எப்படி வருகின்றது என்று அவர்கள் அதிசயிக்க, அந்தப் பவளப் பாறைகள் தான் ஒளியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது ( Bioluminescence ) தெரிந்தது.
சிறிது நேரம் அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு தங்களைப் பொருத்திக் கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர். திடீரென்று அவர்களது யோசனையைத் தடை செய்யும் விதமாக அனைத்து பவளப் பாறையகளும் எழுந்து நிற்கத் தொடங்கின. முன்னர் பார்க்க பாறை போல இருந்தவர்கள், இப்போது காலில்லாத உயிரினங்களாக மாறி இருந்தன. அவர்கள் கையில் கூர்மையான ஆயுதம் இருக்க, அந்தப் பவளப் பாறை வீரர்கள் இவர்களை நோக்கி, ஊர்ந்து வரத் தொடங்கினர்.
மூவரும் அதே இடத்தில் நின்று விட்டனர். அவர்களைச் சுற்றிலும் உள்ள அனைத்துத் திசைகளிலிருந்தும் அந்த வீரர்கள் அவர்களை நெருங்கத் தொடங்க, தப்பிக்க வழியே இல்லை என்பதை உணர்ந்த மூவரும் பயத்தில் உறைந்து போயினர்.
“நாம் எந்த முன்னேற்பாடும் செய்யாமல் வந்து தவறு செய்து விட்டோமோ ?” என்று ஆதித்யன் யோசிக்க,
நந்தினி அப்போது தான் கவனித்தாள், அந்தப் பவளப் பாறை காவலாளிகளுள் ஆறு பேருடைய கண்கள் மட்டும் தங்க நிறத்தில் ஜொலித்தன. அதே நேரம் அந்தக் காவலாளிகள் அவர்கள் இருந்த மலைக்கு அருகில் வந்து விட, நந்தினிக்கு அந்த பார்ச்மென்டின் முதல் வரி நினைவு வந்தது. (We six you will see unique)
அப்போது தான் நந்தினிக்கு அந்த பார்ச்மென்ட் கூறிய செய்திக்கும் இங்கே கல்லைத் தேடிப் போவதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது புரிந்தது.
உடனடியாக அவள் அடுத்த வரிகளை மனதிற்குள் நினைவு படுத்திக்கொள்ளத் தொடங்கினாள்.
மெதுவாக மற்ற இருவரிடமும், “அந்த பார்ச்மென்ட்ல இருக்குறத வச்சி தான் நாம இங்கிருந்து தப்பிக்கணும்” என்றாள்.
ஆரியன், “அதை வச்சு நாம எப்படி தப்பிக்குறது ?” என்று கேட்க,
நந்தினி, “நாங்க ஆறு பேரும் தனித்துவமானவர்கள்னு அந்த பார்ச்மென்ட்ல குறிப்பிட்டு இருந்தது, அந்தத் தங்க நிற விழிகள் இருக்குற வீரர்கள குறிப்பிட்டு சொல்றதுக்காக தான் பார்ச்மென்ட்ல Differenceனு மென்ஷன் பண்ணிருக்காங்க.
நாம இப்ப நிக்கிறதும் ஒரு மலை உச்சியில் தான். Down the hill we roll-னா நாம இப்ப இறங்கி அவர்கள் மேல் ஏறி உட்காரணும். மறந்துடாதீங்க, தங்க நிற விழிகள் இருக்குற வீரர்கள குறிப்பிட்டு சொல்றதுக்கு தான் பார்ச்மென்ட்ல Difference-னு மென்ஷன் பண்ணியிருக்கணும்” என்றாள்.
அவர்கள் இவர்களைத் தாக்கத் தயாராக, “அவங்களுக்குக் கேட்குற மாதிரி என்ன சொல்றது ?” என்று ஆதி கேட்க,
“அது ஏறுனதுக்கு அப்புறம் தான் தெரியும்” என்று கூறிய நந்தினி, “ஓடுங்க” என்று கத்துவதற்கும், அவர்கள் தாக்கத் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. அவர்களை நோக்கி கூர்மையான முனையுடைய ஆயுதங்கள் எறியப்பட, மூவரும் வளைந்து வளைந்து ஓடி அவற்றிலிருந்து தப்பித்தனர்.
சில நொடிகளில் கடினப்பட்டு அவர்கள் மூவரும் அந்தத் தங்க நிற விழிகளுடைய பவளப் பாறை வீரர்கள் மேல் அமர்ந்திருக்க, அவை உடனே பறக்கத் தொடங்கின. சிறிது நேரத்தில் அந்தப் பவளப் பாறைகள் அவர்களைக் கோட்டைக்குள் கொண்டு வந்து விட்டன.
அந்தக் கோட்டையின் உட்புறம் முழுவதும் ஒளியை வெளிப்படுத்தும் உயிரினங்களால் (Bioluminescent organism) அலங்கரிக்கப்பட்டு இருக்க, நடுவில் ஒரு சிலை இருந்தது. அந்தச் சிலையின் கால்களுக்கு அருகிலிருந்த இரு பெட்டிகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பார்ப்போரைத் தன்வசப்படுத்தும் சக்தியைக் கொண்டிருந்தன அந்த இரு பெட்டிகள்.
அதை நோக்கி நந்தினி நடக்கத் தொடங்க, ஆதித்யன் அவளைப் பிடித்து நிறுத்தினான்.
அப்போது தான் நந்தினி சிலைக்கும், அவர்களுக்கும் இடையே இருந்த இடத்தில், ஏதோ வேற்று மொழி எழுத்துகள் செதுக்கப் பட்டிருந்ததைக் கண்டாள்.
நந்தினிக்கு அது கயா கிரக மொழியோ என்று தோன்ற, அதே நேரம் ‘Tell us in the way we could hear’ என்ற வரியும் நினைவுக்கு வர, தன் நினைவுகளை ஒழுங்குபடுத்தத் தொடங்கினாள். அவள் விழிகள் தங்க நிறத்துக்கு மாறின.
மெல்ல, ‘6 3 1 7 6 4’ என்று கூறிக் கொண்டே ஒவ்வொரு எழுத்தின் மீதும் கால் வைத்துச் சென்றாள். அவள் அந்தப் பக்கம் சென்றதும், ஆதியும் ஆரியனும் கடக்க முயல, அனைத்து எழுத்துகளும் இடம் மாறின. இங்கு இவர்கள் என்ன செய்வது என்று குழம்பி நிற்க, அங்கு நந்தினி அந்தச் சிலையை நோக்கிச் செல்ல, திடீரென்று அந்தச் சிலை உயிர் பெற்று எழுந்து நின்றது.
அதைக் கண்ட மூவரும் அதிர, அந்தச் சிலை பேசத் தொடங்கியது.
“என் பெயர் வல்கன். ஏழு சிற்றரசர்களுள் முதன்மையானவன். உடல் வலிமை மட்டுமே சிறந்தது என்று கருதிய எனக்கு டைட்டன் மன வலிமையையும் அறிவையும் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்தான். அதனால் தான் ஆபத்தான சூழ்நிலையில் உங்கள் அறிவை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா என்பதைச் சோதித்தேன்”.
“இந்தக் கட்டத்தின் இறுதிச் சோதனையாக, இங்கிருக்கும் பெட்டிகளுள் ஒன்றில் அடுத்த சோதனைக்கு வழிநடத்திச் செல்லும் பார்ச்மென்ட் உள்ளது. அது எந்தப் பெட்டி என்று நீங்கள் சரியாகக் கண்டறிய வேண்டும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ! நாம் எப்பொழுது நம்மை நாமே பாராட்டிக் கொள்ள நினைக்கின்றோமோ, அப்போது நம் அழிவும் தொடங்கி விடும்” என்று கயா கிரக மொழியில் கூறிவிட்டு, மறுபடியும் சிலையாக மாறினார்.
அங்கிருந்த பெட்டிகளில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நந்தினி குழம்பினாள்.
“இவ்வளவு தூரம் கடினப் பட்டு வந்துவிட்டோம். இதையும் கடந்து விடலாம்” என்று தோன்ற, இறுதியில் ஒரு பெட்டிக்கு அருகில் சென்று அதைத் தூக்கித் திறந்தாள்.
அதனுள் ஒன்றும் இல்லாமல் இருக்க, அதே நேரம் அந்த இடம் தீப்பிடிக்கத் தொடங்கியது. அப்பொழுது தான் நந்தினிக்கு தான் நின்றிருந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
அவள் நின்றிருந்த இடத்துக்கு அருகில் ஒரு பழைய பெட்டி மண்ணில் பாதி புதைந்தும் பாதி வெளியேயும் தெரிய, நந்தினிக்கு பார்ச்மென்டின் இறுதி இரண்டு வரிகள் நினைவுக்கு வந்தன. ‘Distance to treasure will be near
Beware the wrong causes fire’.
ஆரியனும் ஆதியும் கத்தியதில் சுயநினைவுக்கு வந்தவள், வேகமாக அந்தப் பழைய பெட்டியை எடுத்துக்கொண்டு, அவர்களிடம் வந்தாள்.
“ஒரு சின்ன தப்பு நடந்திடுச்சு. சீக்கிரம் இங்கிருந்து தப்பிக்கணும்” என்று கத்திக்கொண்டே, மேலே செல்லத் தொடங்கினாள்.
அங்கு நடந்த களேபரத்தில் அதிர்ந்து நின்றிருந்த ஆதியும் ஆரியனும், வேகமாகக் காலை உதைத்துக் கொண்டு மேலே செல்லத் தொடங்கினர். சிறியதாகத் தோன்றிய தீ காட்டுத் தீயாக மாறி அந்தக் கோட்டையை அக்னிக்கு இரையாக்க, அடுத்து பவளப் பாறைகளும் எரியத் தொடங்கின.
மூவரும் வேகமாக நீந்தி நீர்மட்டத்திற்கு வந்தனர்.
அவர்களது முகங்கள் பழைய நிலைக்கு மாறிவிட, “என்ன நந்து ? கடைசி நேரத்துல இப்படி ஆகிடுச்சு ?” என்று ஆரியன் கேட்க,
“நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். வல்கன் அவ்வளவு எச்சரிச்சும் நான் அதே தவறை தான் செஞ்சிருக்கேன். எல்லாத்தையும் யோசிச்ச நான் கடைசில அந்தப் பெட்டிகள பார்த்ததும் ஜெயிச்சிட்டோம்னு நினைச்சேன். ஆனா, அதுக்கு அப்புறம் தான் உண்மையான சோதனை இருந்திருக்கு” என்று வருத்தத்துடன் கூறினாள் நந்தினி.
நீரிலும் அதிசயமாக நெருப்புப் பரவத் தொடங்க, அவர்கள் பேச்சை நிறுத்தி விட்டு, வாகனம் பறந்து கொண்டிருந்த இடத்திற்கு வேகமாக நீந்தினர்.
அவர்கள் மூவருக்கும், அக்னி தேவனுக்கும் நீச்சல் பந்தயம் தொடங்க, இறுதியில் சிறு இடைவெளியில் அவர்கள் வென்று, அந்த வாகனத்துக்குள் நுழைந்து பறக்கத் தொடங்கினர்.
நந்தினி இன்னும் வருத்தம் நீங்காமல் இருப்பதைக் கண்ட ஆதி, “இது நமக்கு ஒரு பாடம் தான், சனா. பொசய்டனோட நினைவுகளில் அகஸ்டஸ் கூறியது சரினா, நாம இன்னும் எட்டு சோதனைகளை வெற்றி பெறணும். ஒரு தோல்விக்கே சோர்ந்து போய்ட்டா எப்படி ? இன்னும் நாம கடக்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கு” என்றான்.
அதற்குள் ஆரியன் அந்தப் பெட்டியைத் திறந்து அதில் உள்ள பார்ச்மென்ட்டை எடுத்து நந்தினியிடம் கொடுத்தான். நந்தினியுடைய கைப் பட்டவுடனே, அதில் குறியீடுகள் தோன்றத் தொடங்க, அதை டிகோட் செய்யத் தொடங்கினான் ஆரியன்.
அதற்குள் நந்தினி ஆதியிடம், அந்தச் சிலை கயா கிரக மொழியில் கூறியதைக் கூறினாள்.
முழுவதுமாக முடித்த ஆரியன், சோகமாக, “நந்து இதுல ஏதோ தப்பா எழுதி இருக்கு” என்று கூற மற்ற இருவரும் அதிர்ந்தனர்.
“என்ன ஆச்சு ஆரி ?” என்று நந்தினி கேட்க,
“Twinkle Twinkle little star! How I wonder what you are– னு எழுதியிருக்கு” என்று கூறியவுடன், நந்தினி இதில் என்ன அர்த்தம் மறைந்து இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினாள்.
அதில் ஆரியனும் ஆதித்யனும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர்.
அதற்குப் பிறகுதான் நந்தினி அவர்கள் தன்னைக் கலாய்த்ததை உணர்ந்து, “உங்க ரெண்டு பேரையும்” என்று கூறி, அவர்கள் காதைப் பிடித்து திருகினாள். ஆனால் அவர்கள் சிரிப்பு மட்டும் நிற்கவில்லை.
சிறிது நேரம் கழித்து, நந்தினிக்குத் தான் பழைய நிலைக்குத் திரும்பியது போலிருந்தது.
ஆரம்பத்தில் அவர்கள் தன்னோடு வருவேன் என்று கூறிய போது, தான் அவர்களைத் தடுத்தது நினைவுக்கு வர, சிரித்துக் கொண்டாள்.
பிறகு அவர்கள் மறுபடியும், ஆர்வத்துடன் அந்த விடுகதையைப் படிக்கத் தொடங்கினர்.
சென்ற முறை போலவே இந்த முறையும், எதுவும் புரியவில்லை அவர்களுக்கு. ஆனால், நந்தினி மட்டும் ஒவ்வொரு வார்த்தையையும் தன் மனதில் பதித்து அதன் அர்த்தத்தைத் தேடத் தொடங்கினாள்.
சென்ற முறை செய்த தவறை மறுபடியும் செய்யக்கூடாது என்ற தீர்மானத்துடன் இருந்தாள். இந்த விதமாக நந்தினி முதல் கட்ட சோதனையில் வெற்றியையும் பெற்று, தோல்வியையும் தழுவி இரண்டாவது சோதனைக்கு முன்னேறினாள்.