என் காதல் கனா
8
ஈடன் ஸ்குவேர் என்று பொதுவில் அழைக்கப்பட்ட கடைவீதிகளைக் கடந்து, போக்குவரத்து நெரிசல்கள் அவ்வளவாக இல்லாத வீதிகளைக் கடந்து கார், “ஹாலிடே இன்”என்று மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்த அந்த சிறிய தங்கும் விடுதியின் பார்க்கிங்கில் நின்றது. சதீஷை எழுப்பி, மூவரும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த அந்த விடுதியின் அறையினுள் தங்கள் உடைமைகளுடன் நகர்ந்தனர்.
“எங்களை பேசாம கேம்பஸில ட்ராப் பண்ணிடேன். நீ ஏன் இவ்வளோ சிரமப்படற கிஷோர்…” என்று விவேக் மொழிந்தான். கிஷோர் தான் வேலை செய்யும் ஒக்லஹாமாவில் இருந்து ஆர்கன் மாகாணத்திற்கு ஏழு மணி நேரங்களுக்கும் மேலாக காரை செலுத்திக் கொண்டு வந்திருந்தான்.
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. வீக்கெண்ட் தான. ஐ ஹேவ் நோ ப்ளான்ஸ்…. அதுவுமில்லாம உங்களுக்கு நாளைக்கு மதியமா தான் டார்மிட்டரி ரூம் அலகேட் ஆகும். அதுவரைக்கும் என்ன பண்ணுவீங்க” என்று அந்த அறையில் போடப்பட்டிருந்த கவுச்சில் தொப்பென விழுந்த கிஷோர் பதிலளித்தான்.
“நான் என்ன சின்ன பப்பாவா? காணாம போறதுக்கு…”என்று சதீஷ் முனுமுனுத்தது மற்ற இருவர் காதிலுமே தெளிவாக விழுந்தது. சதீஷிற்கு தன்னை சிறுவன் போல் நடத்துவது பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
“சரி,,முதல்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம். ஒரு பதினொரு மணிவாக்கில உங்களை காலேஜ் டார்ம்ல விட்டுட்டு நான் திரும்ப ஒக்லஹாமா போகணூம்….எப்படியும் ராத்திரி ஆகிடும். ஐ நீட் சம் எனர்ஜி டு டிரைவ்…..குட் நைட் கைஸ்”என்று சதீஷ் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிஷோர் அந்த கவுச்சிலேயே மல்லாந்து படுத்து, சில நொடிகளிலேயே உறங்கத் துவங்கியிருந்தான். விவேக் அங்கிருந்த கட்டிலில் ஒருபக்கமாக சாய்ந்துவிட, சதீஷிற்குத் தான் உடனே உறக்கம் வரவில்லை.
விமானத்திலும் நன்றாக உறங்கியாயிற்று, காரில் வரும் வழியிலும் நல்ல தூக்கம் வேறு. அதனால் மீண்டும் உறங்கப் பிடிக்காமல், அந்த அறையின் சிறிய பால்கனியைத் திறந்து வெளியே நின்றான். உரைபனி கோட்டைக் கடந்து, உடைகளைக் கிழித்து, எலும்புகளை சில்லிட வைத்தது. சதீஷ் சில நிமிடம் அமைதியாக உறங்கும் சுற்றுப்புறத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கார் பார்கிங்கும், அதனை அடுத்து சில வீதிகளும், விளக்குத் தூண்களும் தென்பட்டன. அதன் பின்னர், கண்களுக்கு எட்டியவரை வெறும் கும்மிருட்டு மட்டுமே காட்சியளித்தது.
சதீஷின் நினைவுகள் தன்னை விட்டுப்போன காதலியை எண்ணி வருந்தத்துவங்கியது. தனிமை தந்த மெளனம் சதீஷை சுட்டெரிக்க, நினைவுகள் சுபாஷினியிடம் மெல்ல சென்று சேர்ந்தன. இன்றுடன் சுபாஷினி சதீஷை விட்டுப் பிரிந்து ஒன்னரை மாதங்கள் ஆகின்றன. கைப்பேசி எண், ஃபேஸ்புக், வாட்ஸப் என சகலத்தையும் முடக்கிவிட்டாள். சுபா தன் பெற்றோரிடம் சதீஷைப் பற்றி கூறினாளோ அன்றே சதீஷின் பிரிவு தொடங்கிவிட்டிருந்தது.
“அப்பா அம்மா என்ன சொன்னாங்க….ஏதாவது பேசுடி…வந்ததில இருந்து உம்முன்னே இருந்தா எப்படி? என்ன தான் சொன்னாங்க?”என்று அடுத்ததினம் தன்னைக் காணவேண்டும் என்று குறுன்செய்தி அனுப்பிய சுபாஷினியிடம் மொழிந்தான் சதீஷ்.
[the_ad id=”6605″]
“நமக்குள்ள ஒத்துவராது சதீஷ். இது வேண்டாம். லெட்ஸ் ப்ரேக்கப்”என்று அழுகையினூடே திக்கிக் திக்கிப் பேசிய சுபாவின் கன்னத்தில் பளாரென்று அறைய வேண்டும் போல் ஆத்திரம் எழுந்தது சதீஷிற்கு.
“என்ன சொன்னாங்கன்னு கேட்டா, சம்மந்தமேயில்லாம ப்ரேக்கப்னு சொல்லற…. என்ன தாண்டீ சொன்னாங்க”
“தற்கொலை செய்துக்குவோம்னு மிரட்டுறாங்க….”என்றாள் கிரீச் குரலில்.
“அதெல்லாம் சும்மா சுபா…அப்படியெல்லாம் ஒன்னும் செய்துக்கமாட்டாங்க…. எந்த பேரண்ட்ஸும் எடுத்த உடனே லவ்வுக்கு ஒத்துக்க மாட்டாங்க… கொஞ்சம் முரண்டு பிடிப்பாங்க…. இதுக்கெல்லாம் போய் ப்ரேக்கப்பா….” என்று நிலைமையை லகுவாக்க எண்ணி சிரிப்புடனேயே பதில் கூறினான்.
“இல்லை சதீஷ்…தே ஆர் சீரியஸ்…ஏற்கனவே எனக்கு அப்பாவோட ரிலேஷன்ல ஒரு பையனை பார்த்திருக்காங்களாம். அவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கனுமாம். அவங்க வாக்கு கொடுத்துட்டாகளாம்… அதன்படி நடக்கலைன்னா, அவங்க மரியாதை போயிருமாம்….இப்படி நிறைய சொன்னாங்க….”
“நீ எல்லாத்துக்கும் சரின்னு தலையை ஆட்டிட்டே நின்னுட்டு இருந்தியா? என்னடீ இது சைல்டிஷ்ஷா இருக்கு. அப்பா அம்மான்னா அப்படிதான் பேசுவாங்க…நாம எவ்வளவு தூரம் ஸ்டாராங்கா இருக்கோம்னு டெஸ்ட் பண்ணுவாங்க..கொஞ்ச நாள் கோவிசுப்பாங்க, பேசமாட்டாங்க, அப்பறமா நீ கஷ்டப்படறதைப் பார்த்து மனசு மாறி ஏத்துக்குவாங்க சுபா”
“அது எனக்கும் தெரியும் சதீஷ்..ஆனா அவங்க மனசு மாற கொஞ்சம் டைம் ஆகும்….அந்த டைம் அவங்க உன்னை பார்க்கணும் பேசணும்னு சொன்னா நீ இந்த நாட்லையே இருக்க மாட்ட…படிக்கணும்னு யு.எஸ் போயிடுவ….நான் மட்டும் தனியா என்ன பண்ணுவேன்?”
“ஏ, லூசு, இதெல்லாமா ஒரு பிரச்சனை…. ஸ்கைப், வாட்ஸப்னு எவ்வளோ இருக்கு. அப்படி பார்த்துக்கவே முடியாத வேற்றுகிரகத்துக்கா நான் போறேன்?”
“நேர்ல பேசினாலே கன்வின்ஸ் பண்ணறது கஷ்டம்…இதுல ஸ்கைப் கால்ல பேசினா விடிஞ்சிரும். பொறுப்பில்லாதவனை லவ் பண்ணியிருக்கேன்னு நினைக்கமாட்டாங்களா?”
“அதெல்லாம் ஒன்னும் நினைக்கமாட்டாங்க….மாப்ளை எவ்வளோ அறிவாளி, யு.எஸ்ஸில படிக்க மெரிட்ல போயிருக்காருன்னு நினைப்பாங்க….”என்று அந்த நிலைமையிலும் லகுவாக சுபாவிற்கு புரியவைத்துவிடலாம் என்ற எண்ணத்திலேயே சதீஷ் பேசினான்.
ஆனால் சுபாஷினி அவ்வளவு லகுவாக புரிந்து கொள்பவளாக இல்லை. தன் முடிவில் தீர்மானமாக இருப்பது போலவே தெரிந்தது.“இல்லை சதீஷ். என் பேரண்ட்ஸ் அப்படி இல்லை… அதுவுமில்லாம, இன்னும் ஒரு மாசத்தில நீ யு.எஸ் போயிடுவ, அப்பறமா நான் என்ன பண்ணுவேன். உன்னால என்னை உடனே கல்யாணமும் செய்துக்கமுடியாது. கேட்டா அண்ணா இருக்கான்னு கதை சொல்லுவ”
“அண்ணா இருக்கான்னு கதை சொல்லறேனா? ஏண்டி இதெல்லாம் நீ லவ் ப்ரபோஸ் பண்ண அன்னைக்கே உங்கிட்ட நான் சொல்லலை.. படிச்சு முடிச்ச உடனே கல்யாணம் பண்ணிக்கமுடியாதுன்னு தெளிவா சொன்னேனே…அப்போலாம் தலைய தலைய ஆட்டின”
“சதீஷ் ப்ளீஸ். நானா உங்கிட்ட ப்ரபோஸ் பண்ணேன்னு என்னை சீப்பா பேசாதா”
“ஏ சுபா…அப்படியில்லைம்மா, நான் உன்னை சீப்பா நினைக்கவும் இல்லை, பேசவும் இல்லை. என் நிலைமையைப் புரிஞ்சுக்கோ. அண்ணா இருக்கறப்போ என்னால கல்யாணம் பண்ணிக்கமுடியாது. அதுவுமில்லாம, என் வீட்டில நான் யு.எஸ் போறதில தீவிரமா இருக்காங்க… அவங்களையும் டிஸப்பாயிண்ட் பண்ண முடியாது…ஒரு டூ யியர்ஸ் தானடா…. நிமிஷத்தில ஓடிரும்…”
“அப்பா அம்மாவை டிஸ்ப்பாயிண்ட் பண்ணக்கூடாது, ஆனா என்னை ஹர்ட் பண்ணலாம் அப்படித்தான….உனக்கு எப்படி உன் பேரண்ட்ஸ் முக்கியமோ அப்படித்தான் எனக்கு என் பேரண்ட்ஸ்…”
“ஏ, நான் அப்படி சொல்லலை சுபா… என் ஃப்யூசருக்கு நல்லதுன்னு தான யு.எஸ் போக சொல்லறாங்க….அங்க படிச்சா ஈசியா அங்கையே வேலைகிடைக்கும்…”
“ஆமா உன் ஃப்யூச்சர் தான் உனக்கு இம்பார்ட்டண்ட்….. நான் என்ன ஆனா உனக்கு என்ன?”
“புரிஞ்சுக்காம உளறாதடீ…. நீ படிச்சுமுடிச்சு ஒருவருஷம் ஆச்சு. ஒரு வேலைக்குப் போக தொடங்கியிருந்தா இவ்வளோ ப்ராப்ளம்ஸே இல்லை…படிப்பு முடிஞ்சு பொண்ணு வேலைக்குப் போகாம வீட்டில இருந்தா பேரண்ட்ஸ் கண்டிப்பா கல்யாணம் பண்ணி வச்சிடனும்தான் யோசிப்பாங்க”
“ஓ, எனக்கு உன்னை மாதிரி வேலை கிடைக்கலைன்னு குத்திகாட்டரியா இப்போ”
“காட்..ஏண்டி, எதுக்கெடுத்தாலும் தப்பாவே பேசற… இப்போ என்ன தான் சொல்ல வர்ற?”
“என்ன சொல்லவர்றேன்… உனக்கும் எனக்கும் ஒத்துவராதுன்னு சொல்லவர்றேன்….உன்னால எப்படி உன் பேரண்ட்ஸை டிஸப்பாயிண்ட் பண்ண முடியாதோ அப்படித்தான் எனக்கும். முடிஞ்சா நீ எங்கையும் போகாம, இங்கையே இருந்து என் பேரண்ட்ஸை கன்வின்ஸ் பண்ணு. இல்லை யு.எஸ் கண்டிப்பா போகணும்னு சொன்னா, என்னை விட்று….” என்று அமைதியாக ஆனால தீர்மானமாக சுபாஷினி பேசி முடித்தாள்.
சதீஷ் எவ்வளவு யோசித்துப் பேசியும், சுபாவின் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அடுத்த செமஸ்டரில் படித்துக் கொள்கிறேன், அதுவரையில் உன் வீட்டில் பேசி சம்மதம் பெறுகிறேன் என்று கூட சொல்லிப் பார்த்தான். சுபா மனம் இறங்கவில்லை.
[the_ad id=”6605″]
“உன் முடிவு இது தானா? எந்த மாற்றமும் இல்லையே? ஏன்னா நம்ம ரிலேஷன்ஷிப்ல நீ தான் டிபெண்டண்ட்..உனக்கு என்னோட சப்போர்ட் எப்பவுமே தேவைப்படும்…நான் இல்லாம நீ கொஞ்சம் திண்டாடித்தான் போவ….” என்று சுபாவை சீண்டும் விதமாக சதீஷ் மொழிய, அப்போது அதன் அந்த சவுக்கடியை சுபாஷினி வீசினாள்.
“என்னைப் பத்தி ரொம்ப நல்ல அபிப்பராயம் வச்சிருக்க சதீஷ். ரொம்ப தேங்க்ஸ்….ஆனா, உன்னை நான் டிபெண்ட் பண்ண இனி எனக்கு அவசியம் இல்லை. என் அப்பா அம்மா பார்த்திருக்கற மாப்ளையை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்….இனிமே அவனை டிபெண்ட் பண்ணி நான் இருந்துக்குவேன்…நீ கவலைப்படவேண்டாம்”என கொஞ்சம் அழுத்தமாக மொழிய, சதிஷ் ஒருகணம் ஸ்தம்பித்துப் போனான்.
“உண்மையா தான் சொல்லறியா சுபா…. என்னை விட்டு இருந்துருவியா?”என கேட்கும் முன்னரே குரல் மெல்லிசாக பிசிரடிக்கத் துவங்கியது.
“நீ இல்லைன்னா என் உலகம் முழுகிப் போயிடாது. உனக்குத் தான் என் அருமை தெரியலை. என்னை விட்டு யு.எஸ் போறது உனக்கு முக்கியமா போச்சு….. ஃபைன்…..குட்லக்…..”என்று கலங்கிய கண்களுடன் மொழிந்தவள், கொஞ்சம் நகர்ந்து, சதீஷை திரும்பிப் பார்த்து, “ நீ மட்டும் யு.எஸ் போற அறிவாளின்னு நினைக்காத, எனக்கு பார்த்திருக்கற மாப்ளையும் யு.எஸ் தான்….குட்பை சதீஷ்”என குரலில் கொஞ்சம் கர்வத்துடன் விடைபெற்றுச் சென்றாள்.
அன்றைய தினத்திற்குப் பின்னர் சதீஷ் எத்தனை முறை முயன்றும் சுபாவுடம் பேச இயலவில்லை. ஒவ்வொரு முறையும் சதீஷின் அழைப்புகள் அவளது தந்தையின் கைப்பேசிக்கே சென்றன. ஒருகட்டத்தில் சதீஷ் அழைப்பதை நிறுத்திக் கொண்டான். மூன்று முறைக்கு மேல அவளது இல்லம் தேடிச் சென்றும் சுபாவை சந்திக்க இயலவில்லை. இந்த இரண்டு மாத இடைவெளியில் இருவரது பொதுவான தோழி ஒருத்தியின் மூலமாக, சுபாஷினிக்கு வீட்டளவில் நிட்சயதார்த்தம் முடிந்துவிட்டிருக்கிறது என்ற செய்தி மட்டுமே வந்திருந்தது. செய்தியை கேட்ட போது ஏற்பட்ட துன்பமும் வருத்தமும் சில தினங்களிலேயே வடிந்து விட்டிருந்தன.
இப்போதைய மன நிலையில் சதீஷிற்கு சுபாஷினியின் மேல் துளி காதலோ, அக்கரையோ இருக்கவில்லை. சதீஷை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் விவேக்கிற்கு இருக்கவில்லை. மற்ற ஆண்களைப் போல் குடித்துவிட்டு சோககீதம் பாடிக் கொண்டிருக்கவில்லை. இரண்டொரு நாட்களிலேயே தன்னை நேர்படுத்திக் கொண்டான்.
“ப்ளான் பண்ணி செமையா ஏமாத்தியிருக்கா மச்சி…. ஏற்கனவே மாப்ளை பார்த்தாச்சுன்னு சொல்லறா… நான் அமேரிக்கா போறதுல துளி இஷ்டம் இல்லை விவேக் அவளுக்கு. அவ பின்னாலையே சுத்திகிட்டு, அவ சொல்லற இடத்துக்கு எல்லாம் கூட்டிட்டுப் போயிட்டு, ஒரு பாடிகார்ட் மாதிரி இருக்கணும்னு எதிர்பார்த்திருக்கா…..ஒரு விதத்தில, அவ தானா விட்டுட்டு போனது நல்லது மச்சி…..இல்லைன்னா, ஒரு முன்னேற்றமே இல்லாம,அதே இருபதாயிரம் சம்பளத்தில அப்படியே இருக்க வேண்டியது தான்”என தன்னை சமாதானப்படுத்தவந்த விவேக்கை, சதீஷ் சமாதானப்படுத்தியது வேடிக்கை தான்.
[the_ad id=”6605″]
ஒரு மாதத்திலேயே அமெரிக்கா செல்ல வேண்டியிருந்ததால் விவேக்கிற்கும், சதீஷிற்கும் அலுவலக வேலைகளை முடித்துத் தரவேண்டிய நிர்பந்தங்கள் இருந்தன. அலுவலக வேலைகள் முடித்து வந்த பின் பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யவும், தேவையான பொருட்கள் புத்தகங்கள் வாங்குவது என கவனிக்க வேண்டிய கடமைகள் நிறைய இருந்ததால், சுபாஷினியின் பிரிவைப் பற்றி கவலைப்பட சமயம் இருக்கவில்லை.
இந்த பொழுது புலர்ந்து கொண்டிருந்த அழகான அமெரிக்க காலையில், இந்தக் குளிரில் நின்று தான் கடந்து வந்த பாதையையும் தன் நினைவுகளையும் அசைப்போட்ட போது, சுபாஷினியைப் இழந்துவிட்டோமே என்ற எண்ணம் கொஞ்சம் கூட சதீஷிற்கு எழவில்லை.
“ரெண்டு மாசத்தில அவளை எப்படி இந்தளவு மறக்க முடியுது? இதான் சார் உங்க லவ்வா?”என மனசாட்சி கேள்விகேட்ட போதும், சதீஷின் உணர்வுகள் சுபாஷினியை மறந்துவிட்டிருந்தன என்பதே நிஜம். ஆழமான மூச்சை இழுத்து தூய்மையான காற்றையை நெஞ்சு முழுவதும் நிரப்பிக் கொண்ட சதீஷ், அமெரிக்கா தனக்கு தரவிருக்கும் இரண்டு வருட அனுபவங்களை எதிர் நோக்கத் தயாரானான்.