என் காதல் கனா 21
“ரிவோக் பண்ண மறந்துட்டேன்..சாரிடா..இப்போ சொல்லு உன் வருங்கால வைஃப் பத்தி…என்ன பண்றாங்க?” என தமையனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தன் பேச்சைத் தொடர்ந்தான்.
“உன் மேல தப்புனா அது சின்ன விஷயமாக தூசுதட்டி.. அடுத்த விஷயத்துக்கு போயிடுவடா நீ..” என மொழிந்த கிஷோர், “இதே தப்ப நான் பண்ணி இருந்தா சும்மாவா விடுவ நீ?” என சதீஷிடம் சிரிப்புடன் வினவினான்.
“சரிடா சரிடா.. நாளைக்கு நமக்குள்ள சொத்து தகராறு வந்தா, நம்ம ரெண்டு பேரும் எப்படி அடிச்சுக்குவோம்னு ஒரு சின்ன ரிகர்சல் மாதிரின்னு வச்சுக்கோ..சரி இனி விஷயத்துக்கு வா.. அண்ணி பேரு என்ன? என்ன பண்றாங்க?’
“பார்ரா.. அதுகுள்ள அண்ணிக்கு கோப்பு போட ஆரம்பிச்சுட்ட.. பேரு நிஷா டா. நியூஜெர்சியில் ஒரு எம்.என்.சில வர்க் பண்றா. ரெண்டு மூணு வாட்டி போன்ல பேசினேன். அப்புறம், ஒரு வீகெண்ட் நேர்ல மீட் பண்ணலாமா அப்படின்னு கேட்டிருக்கா.” என கிசோர் சொல்லி நிறுத்த, சதீஷ் ஊஊ என மெல்ல விசிலடித்தான்.
“இன்னும் சரியா பிளான் பண்ணல எப்ப போகலாம் என்ன ஏதுன்னு அதுக்கப்புறம் சொல்றேன் டா..”
“நீயாடா இப்படி பேசற..ஏதாவது பொண்ணு உன்ன பார்த்தா நீ மண்ணை பார்த்து நடக்கிறவன் ஆச்சேடா… நமீதா டீவில டான்ஸ் ஆடுனா கூட நாமச்சிவாயம் போற்றின்னு கண்ணமூடிக்கற நீயாடா டேட் போகப்போற?”
“சொல்றா.. சொல்றா.. என்ன வேணா சொல்றா.. எத்தனை நாள் தாண்டா அப்படியே சுத்திட்டு இருக்கிறது… நீலாம் ஸ்கூல், காலேஜ்னு வகை வகையா லவ்பண்ணி எஞ்சாய் பண்ணிட்ட லைஃப, என்னைய இப்பவாச்சும் லவ் பண்ண விடுடா..” என சிறிது வெட்கத்துடனும் சிரிப்புடனும் பேசினான் கிஷோர்.
இன்னும் சிறிது நேரம் தன் தமையனிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு தன் தந்தையிடம் பேசி பெற்றோர் எங்கே வருவது என்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டு தன்னிடம் தெரிவிக்குமாறு கூறி கைபேசியை அணைத்தான் சதீஷ்.
கிஷோரிடம் பேசிய பிறகு சதீஷின் மனம் சற்று அமைதி அடைந்திருந்தது. சுஜியை பற்றி, சுஜியின் அன்னை தன் பெற்றோரிடம் நட்பாக பழகுவது குறித்து சட்டென உருவாகியிருந்த படபடப்பு லேசாக மறைந்து, மனம் இயல்பான நிலையை எட்டியிருந்தது.
பெற்றோர் சொல்லியது போல சுஜியிடம் அவளுக்கு இந்தியாவிலிருந்து ஏதேனும் தேவையா என கேட்டறிய வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. “அவகிட்ட நான் எதுக்கு கேட்கணும்?அவங்க அம்மா எங்க அம்மா கூட கிளோஸ் அப்படிங்கிறது என்கிட்ட சொல்லல.. ஏதோ ஒரு காரணத்துக்காக அவ மறைச்சிருக்கா தானே.”
“தனக்கு ஏதாவது வேணும்னா அதை அவங்க அம்மாட்ட சொல்லியிருப்பா. அவங்க அம்மா கண்டிப்பா என் மம்மி டாடி யுஎஸ் வராங்கனு தெரியறப்போ அவங்க கையில கொடுத்து சுஜி கிட்ட கொடுக்க சொல்லுவாங்க…”
“அது அவங்களோட பிரச்சினை. நான் இதுல தலையிட எதுவும் இல்லை” என தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தான். அதே நேரம் விவேக்கிடம் இதே கேள்வியைத்தான் கேட்கும் நிர்பந்தத்தில் இருக்கிறோம் என்பது தெரிந்தது.
“அவனுக்கு ஏதாவது இந்தியால இருந்து வேணுமான்னு கேட்கணும். விவேக்கு ஏதாவது வேணும் அப்படின்னா அவங்க அம்மா ஏதாவது கொடுக்க சொல்லி கொடுத்தா அதை என் அம்மா கிட்ட சொல்லி கொண்டு வர சொல்லலாம். இல்ல சென்னையில கிடைக்கிற பொருள்னா அப்பாவையே வாங்கிட்டு வரவும் சொல்லலாம் என முடிவெடுத்தான் சதீஷ்.
[the_ad id=”6605″]
நாட்கள் எவருக்கும் எவருக்காகவும் காத்திராது வேகவேகமாக ஓடிக்கொண்டிருந்தன. இரண்டு மாதங்களில் இதேபோன்று கழிந்தன. சுஜியுடன் செலவிடும் அந்த வெள்ளிக்கிழமைக்காகவே அவனது வாரம் முழுவதும் காத்திருப்பது போன்ற எண்ணம் சதீஷ்க்கு தோன்றியிருந்தது.
ஒரு நாள் இரவு, விவேக் தன் அறையில் படுத்திருக்க, பொதுவாக பேசும் பொழுது குடும்பக் கட்டமைப்புக் குறித்து பேச்சு எழுந்தது. ரானிடம் அதுவரையில் தன் வீட்டைப் பற்றியோ தன் சூழ்நிலைகளைப் பற்றியோ விவேக் பெரிதாக காட்டிக் கொண்டதில்லை.
எப்போதுமே தோண்டி துருவாத ரான், தனி நபரின் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சற்று ஒதுங்கியே பழகுவான். எப்போது சற்றே கலகலப்பாக தென்படும் ரான், அன்று வெகு சோர்வாக காணப்பட்டான்.
விவேக் எதார்த்தமாக காரணம் கேட்ட பொழுது எம்மா உடன் ஏதோ சிறிய மனஸ்தாபம் என்று என்றும் தன் அன்னையை வெகுவாக மிஸ் செய்கிறான் என்று மட்டும் பதில் உரைத்தான்.
விவேக் நண்பனின் மன வருத்தத்தைப் போக்கும் விதமாக, அவனை பேசவைக்க தன் வீட்டினரைப் பற்றிய கலகலப்பான விஷயங்களை கூறி ரானை சமாதானப்படுத்த எண்ணினான்.
“எங்க வீட்ல நான் அம்மா என்னோட தம்பி ஒன்னு தங்கச்சி ஒன்னு அப்புறம் சின்னம்மா பொண்ணுங்க ரெண்டு அப்படின்னு நிறைய ஆளுங்க… எப்ப பாரு ஒரு சின்ன அங்கன்வாடி ஸ்கூல் மாதிரி இருக்கும்..” என விவேக் சொல்லிக் கொண்டிருக்க, ரான் திருதிருவென முழித்துக் கொண்டு விவேக்கை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் தான் தமிழில் அவனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறோம் என்ற விஷயம் விவேக்கிற்கு உரைத்தது.” சாரி சாரி “ என வேகவேகமாக மொழிபெயர்த்தான்.
“ஓகே ஓகே அப்ப பெரிய ஃபேமிலி நீங்க மிஸ் பண்ற இல்லையா..” என ரான் வினவ, அமெரிக்கா வந்ததிலிருந்து ஒருமுறைகூட தன் வீட்டினர் உடன் இல்லையே என்ற எண்ணம் தனக்கு உண்டாகவே இல்லை என்று அப்போது தான் விவேக்கிற்கு தோன்றியது.
“உனக்கு நான் ஒரு உண்மையை சொல்லட்டா ரான். நிஜமாகவே எனக்கு நான் இந்தியால இல்ல.. என் ஃபேமிலி என்கூட இல்லங்கற எண்ணமே தோணலை.”
“அது எப்படி இவ்ளோ பெரிய குடும்பத்தில ஒருத்தர் கூடவா நீ மிஸ் பண்ணல?”
“எனக்கு தெரியல ரான். சில நேரம் என் அம்மா கூட இல்லன்னு தோணும். ஆனா அவங்க என்னைக்குமே என்கூட ரொம்ப அட்டாச்டு இல்லை. அவங்களோட ஒரு நம்பிக்கையாத் தான் என்ன பார்த்தாங்க…”
“புரியலை விவேக்”
“சிம்பிளா சொன்னா ஒரு இன்வெஸ்ட்மென்ட்..” என சொல்லிய விவேக், ஏன் தனக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றியது என தன்னை நினைத்தே சற்றே வெட்கப்பட்டுக் கொண்டான்.
ஆனால் இதற்கும் மேலாக பலதரப்பட்ட மனிதர்களை ஒரு நிலையான குடும்பம் என்பது இல்லாமலேயே வளர்ந்து இருந்த ரானிற்கு விவேக்கின் மனநிலை புரியத்தான் செய்தது.
“கூல் விவேக்..ஐ வோண்ட் ஐட்ஜ் யு.. நீ நினைக்கறது தப்பு இல்ல. நான் வளர்ந்த இடத்தில் ரெண்டு மூணு இந்தியன் பேமிலிஸ் இருந்தாங்க. அவங்களை நான் பார்த்து இருக்கேன். அவங்களோட வாழ்க்கை அந்தக் குழந்தைகள் மட்டும் தான்.”
“கரெக்டா இந்தியன்ஸ் மோஸ்ட்லி அப்படித்தான். இந்தியன்ஸ் மட்டுமில்லை எல்லா நாட்டுக்காரர்களுக்கு மே தன்னோட குழந்தைகள் தானே எல்லாம்”
“யூ ஆர் ராங். இங்க நிறைய பேரு அடுத்தவர்களுக்காக வாழ மாட்டாங்க.. உதாரணத்துக்கு சொல்லனும்னா, தன்னோட வாழ்க்கையை தான் முக்கியம்னு நினைப்பாங்க. இன்னும் சொல்லப் போனா ஒரு குழந்தை தன் அப்பா அம்மா கூட ஒரு வயசுக்கு மேல தங்கியிருந்தாலே அதை கொஞ்சம் கேவலமா தான் இங்கே பார்க்கப்படும் தெரியுமா?”
“உங்களுக்கு பிரைவசி வேணும்னு நீங்க உங்க வீட்டை விட்டு போறீங்க அவ்ளோ தானே”
“பிரைவசி மட்டும் காரணம் இல்லை விவேக். இங்கே ஒரு வயசுக்கு மேல எந்த அப்பா அம்மாவும் தன் குழந்தைக்கு எதுவும் செய்யமாட்டார்கள் பினான்சியலாவும் குழந்தைக்காக சொத்து சேர்த்த மாட்டாங்க. முக்கியமா ஸ்கூல் வரைக்கும் இங்க எடுக்கேஷன் கவர்மெண்ட் கொடுத்திருக்கு.”
“அதுக்கு அப்புறமா எஜுகேஷன் அதாவது காலேஜ் டிகிரி அப்படிங்கறது இங்கே நிறைய பேத்துக்கு கிடையாது. ஏன்னா முக்கியமான காரணம் எந்த அப்பா அம்மாவும் தன் குழந்தையோடு டிகிரிக்கு காசு செலவு பண்ண மாட்டாங்க”
“டேய் என்னடா சொல்ற? கடைசி காலத்தில் அந்த குழந்தைங்க தான பெத்தவங்களை பார்த்துக்கணும்”
“இந்த ஊர்ல கடைசி காலத்தில் எந்த குழந்தையும் அப்பா அம்மாவை கவனிக்கப் போவதில்லை.. இன் ஃபேக்ட் நான் எங்க அம்மாவை பார்த்து ரெண்டு வருஷம் ஆச்சு அப்படின்னு சொன்னா நீ நம்புவியா..?”
“இங்கிருந்து ரெண்டு மணி நேரத்துல ஊருக்கு போகலாம்னு சொல்லியிருக்கியேடா..”
“அதுக்காக நான் வாரா வாரம் போய் எங்க அம்மாவ பார்த்தா, என் அம்மாவே என்னை வராதன்னு சொல்லிடுவாங்க.. அதனால கிறிஸ்மஸ், தாங்ஸ் கிவிங், நியூ இயர் இப்படி ஏதாவது ஒரு நாள், இரண்டு நாள் போய் மட்டும் தான் என் அம்மாவோட வீட்டில் தங்க முடியும்.”
“அம்மாவோட வீடுன்னு சொல்றா… அதுதானேடா உன்னோட வீடும்..”
“அது என் வீடு கிடையாது. அது என் அம்மாவோட வீடு. நான் சொல்றது புரியுதா?” என ரான் ஆங்கிலத்தில் வினவ, “புரியுது புரியுது.. ஆனா இதெல்லாம் உங்க ஊரு சங்கதி. இதெல்லாம் இந்தியாவில் கொஞ்சம்கூட செல்லுபடியாகாது. அங்க இருக்கிற பொற்றோருக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை, அவங்க வாழ்வாதாரம் அவங்களோட குழந்தை மட்டும்தான்”
“என்னோட அம்மாவும் அதே மாதிரிதான் ரான். அவங்க நம்பிக்கை நட்சத்திரம் நான் தான். என் மேல பெரிய நம்பிக்கை வச்சு இருக்காங்க..
“கரெக்ட்…. விவேக் உங்க ஊரு படி நீ இருக்க… ஆனா நீ அவ்வளவு உங்க ஃபேமிலி கூட அட்டாச்சுடா இருக்கிற மாதிரி எனக்குத் தெரியல.. டோன்ட் மிஸ்டேக் மி.. ஜஸ்ட் உன்னோட பேச்சிலிருந்து நீ யாரையுமே மிஸ் பண்ணல அப்படிங்கறது எனக்கு தெரியுது” என இதை ஒரு கேள்வியாக கேட்காமல் ஒரு செய்தி போல் பாவித்து கூறியிருந்தான் ரான்.
[the_ad id=”6605″]
அதற்கு மேல் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதி காத்த விவேகின் எண்ணங்கள், தனது அன்னை, தனது வீடு, இவற்றையெல்லாம் சுற்றிக்கொண்டு கடைசியாக சுஜியிடம் வந்து நின்றிருந்தது.
மனதில் சுஜி பற்றி தோன்றியிருந்த ஆசைகளை தன் வீட்டுடன் ஒப்பிட்டு நோக்கி கொண்டான். “கண்டிப்பா அம்மா இதுக்கு சம்மதிக்க போவதில்லை. அப்படியே சம்மதிச்சாலும் இவ்வளவு பெரிய குடும்பத்தோட பொறுப்பு தனக்கு இருக்குன்னு தெரிஞ்சா சுஜி இதை எப்படி எடுத்துக்குவா? நா அவங்க நாலு பேத்தையும் கரைசேர்க்கனும். தம்பி இப்பதான் காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறான்.. சித்தி பொண்ணு ரெண்டும் அதைவிடவும் சின்ன குழந்தைகள்.. இவ்வளவு பேரோட படிப்பு செலவை நான் பாத்துக்கணும்..” என தன் குடும்ப கஷ்டங்களை தன் பொறுப்புகளை நினைத்து பார்த்தவனுக்கு தனக்கும் சுஜினிக்கும் எந்த வகையிலும் ஒத்துவராது என்பது தெளிவாகத் தெரிந்தது.
அதை விடவும் தன் பொறுப்புகளை துறந்துவிட்டு சுஜியின் படிப்பு முடிந்த உடனேயே திருமணம் செய்து கொள்வதும் நடவாத காரியம் என்பது விவேக் உணர்ந்திருந்தான்.
இத்தனை பொறுப்புகளுக்கும் நடுவில் சுஜியின் சிரிப்பும் பேச்சும் தனக்கு ஏன் தோன்றுகிறது என தன்னைத்தானே நொந்து கொண்டான். இதிலிருந்து எப்படியாவது மீண்டு விட வழி இருந்தாl அதை முயற்சித்துப் பார்க்கவும் அவனது மனம் எண்ணியது.
ஒருபக்கம் சுஜி தனக்கு வேண்டும் என்ற எண்ணமும் இருந்து கொண்டே இருக்க, நடைமுறைக்கு இது எந்த அளவு சாத்தியம் என்பதை எண்ணிய விவேக் “இது எங்கே சென்று முடியும்?” என்ற ஒரு கவலையுடன் தன் நாட்களை கழித்தான்.
சதீஷின் பெற்றோருக்கு விசா கிடைத்து விட்டது என்றும், அடுத்த வாரம் நேராகவே ஆரிகன் மாநிலம் வந்து சதீஷை சந்தித்து விட்டு அதன் பிறகே கிஷோர் இருக்குமிடம் செல்வது என்று முடிவு எடுத்து இருந்தனர்.
“எங்க எல்லாருக்குமே பொண்ணை புடிச்சிருக்கு சதீஷ், அதனால நேரா நாங்க உன்ன வந்து பாத்துட்டு, நீ ப்ரீயா இருந்தா உன்னையும் கூட அழைச்சுட்டு போறோம்”
“ம்மா.. நீங்க போயிட்டு வாங்க.. நான் எதுக்கு?”
“என்ன நீ எதுக்கெடுத்தாலும் அபசகுனமாக பேசிட்டு! உனக்கு வரப்போற வருங்கால அண்ணிய பார்க்கூட வரமாட்டியா? ரொம்ப நாள் கழிச்சு, நம்ம வீட்டுல நடக்கற நல்லகாரியம். இப்பவே இப்படி பண்ற நீ, நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனா எங்கள எல்லாம் திரும்பி கூட பாக்க மாட்டடா” என அவனது அன்னை தேவையில்லாத ராகம் பாடத் துவங்கினார்.
“அப்படிலாம் இல்ல மா.. எனக்கு அடுத்த வருஷத்துக்கான தீஸிஸ்க்கு என்ன பண்ணணுமோ அதோட இன்ட்ரோ பற்றி சப்மிட் பண்ணனுமா. கொஞ்சம் வேலை இருக்கும்மா.. அதான்.”
“இருக்கட்டும் டா.. என்னவோ இருந்துட்டு போகட்டும்.. அதுக்காக ஒரு நல்லது கெட்துக்கு கூட வரமாட்டேன்னா எப்படிடா. உனக்கான தானேடா சண்டேவா பார்த்து ஃபன்ஷன் முடிவு பண்ணி இருக்கோம்”
“ம்மா சும்மா எனக்காக பீலா விடாதே. உன் வருங்கால மருமகளுக்கு சாட்டர்டே சண்டே தான் லீவு. அதனால எந்த நல்லது கெட்டதுனாலும் அந்த ரெண்டு நாள்ல பண்ணா மட்டும் தான் முடியும். அந்தளவு கூட புரியாத மக்காம்மா நான்?”
“சரி சரி நீ என்ன பண்ணுவியோ எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ எங்க கூட வர்ற. அவ்ளோதான்” என தீர்க்கமாக சொல்லியிருந்தார் அன்னை. சதீஷும், வேறு வழியில்லாமல் சம்மதித்தான்.
சதீஷிற்கும் எப்படியும் கிஷோரை சென்று சந்திக்க வேண்டி இருந்தது. அமெரிக்கா வந்ததிலிருந்து ஒரு முறை கூட அண்ணனின் வசிப்பிடத்திற்கு சென்று பார்க்கவே இல்லை என்ற குற்ற உணர்வு இருக்கவே செய்தது. அதிலும் தாய்தந்தையர் வரும் சமயம் அவர்களுடன் கழிக்க சதீஷ் நினைத்தான்.
அடுத்த வாரத்தில் அமெரிக்கா வந்திறங்கிய சதீஷின் பெற்றோர். சதீஷிடம் சுஜியையும் விவேக்கையும் காண ஆசைப்படுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
“டேய் அப்பா அம்மா வராங்க. ஏர்போர்ட் போகனும்டா..நீ வரேல்ல?” என அன்றைய காலை விவேக்கிடம் கேட்டிருந்தான்.
“டேய் இதெல்லாம் சொல்லனுமா டா? அவங்க வர்றாங்கண்னாலே நம்ம தானடா ரிசீவ் பண்ண போகணும்” என மொழிந்த விவேக்கை செல்லமாக தோளில் குத்திவிட்டு சென்றான் சதீஷ்.
அதேபோன்று அந்த வார வெள்ளிக்கிழமை சுஜியை சந்திக்கச் செல்லும்போது அவளிடம் அடுத்த நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஏர்போர்ட் வர முடியுமா என வினவினான்.
சுஜிக்கு அவளது உணவகத்தில் வேலை சற்று அதிகமாக இருந்தது. “ரியலி சாரி சத்தீஷ். என்னோட ஓனர்க்கு கொஞ்சம் உடம்பு முடியல. சோ பில்லிங் அண்ட் சர்வீஸும் இரண்டு நாளா நானே பார்க்கிறேன். கொஞ்சம் கஷ்டம் சதீஷ்” என தன்னால் விடுப்பு எடுத்துக் கொள்ள இயலாத நிலைமையை விளக்கினாள் சுஜி.
“சரி ஓகே சுஜி. ஒன்னும் பிராப்ளம் இல்ல. அப்பாவும் அம்மாவும் உன்ன பாக்கணும் நினைச்சாங்க. அதனால கேட்டேன்.”
“நானுமே உங்க அம்மாவை மீட் பண்ணனும்.” என்றவள் அப்போதும் கூட தன் தாயும் அவனது தாயும் நன்றாகப் பேசிப் பழகியுள்ளனர் என தெரிவிக்கவில்லை.
[the_ad id=”6605″]
“ஒன்னு பண்ணு சத்தீஷ்.. எப்படியும் அவங்க கொஞ்ச நாள் இங்க இருப்பாங்க இல்லையா? அவங்கள நீ ரெஸ்டாரென்ட் கூட்டிட்டு வரியா? நைட்டு ஆங்க சாப்பிட்ட மாதிரி இருக்கும். நானும் உங்கள மீட் பண்ணிக்குவேன்” என கண்களை அகல விரித்து வினவியவளிடம்,
“ஓகே சுஜி. நல்லா ஐடியாதான். நான் கூட்டிட்டு வரேன்” என சம்மதித்திருந்தான் சதீஷ். அப்போதும் சுஜி தன் அன்னையுடன் பழக்கம் இருப்பது குறித்து ஏதேணும் பேசுவாளோ என நினைத்த படிக்கே ஒரு சில நொடிகள் மெளனம் காத்தான் சதீஷ்.
ஆனால் சுஜி அவளது அன்னையின் நட்பு பற்றியோ, அல்லது அவனது அன்னையைப் பார்க்கப் போகும் விஷயம் பற்றியோ எதையுமே இப்போது வரை வாய்திறக்கவில்லை. எதனால் இப்படி இருக்கிறாள், இந்த விஷயத்தில் ரகசியம் காப்பது அவசியமா என்ற கேள்வி அவனுள் தோன்றிக் கொண்டே இருந்தது.
“எப்படியும் அப்பளம், பருப்பு பொடி, ஊறுகாய்னு தன் பொண்ணுன்னு அவங்க குடுத்து அனுப்பாமலா இருந்திருபாங்க.. அதை அம்மா இவகிட்ட குடுக்கறப்போ கையும் களவுமா பிடிச்சு கேட்கலாம். அப்போ என்ன பதில் சொல்லறான்னு பார்ப்போம்” என நினைத்தான்.
இதை சொல்லாமல் தட்டிக் கழிக்கிறாள் என்றால் இதில் ஏதோ விஷயமிருக்கிறது என்ற மட்டில் அவனுக்குப் புரிந்தது. அவளாக சொல்லும் வரையிலும் வாய் திறக்கப் போவதில்லை என்று மட்டும் முடிவெடுத்துக் கொண்டான்.