என் காதல் கனா 25
சுபாஷினி என அறிமுகப்படுத்தப்பட்ட பெண்ணை சுஜி சற்றே கூர்ந்து நோக்கினாள். “ஒருவேளை சதீஷ் லவ்வரா இருக்குமோ? அந்தப் பேரைத் தானே விவேக் ஒரு முறை சொல்லியிருக்கான்” என்ற அசட்டுத் தனமான எண்ணம் தோன்றியது.
“ஊர்ல ஆயிரம் சுபாஷினி இருப்பாங்க.” என தனக்குள் எண்ணிக் கொண்டாள். நிஷா தன் தோழிகளிடம் சுஜியை அமர்த்தி விட்டு வெளியே சென்று விட்டிருந்தாள். அந்த பெண்கள் இருவரும் சுஜி இடம் சம்பிரதாயமான கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தனர். “எந்த ஊரு? என்ன படிக்கிற? என்ன கோர்ஸ்?” என கேட்ட கேள்விகளுக்கு சுஜி பதில் சொல்லிக்கொண்டே இருக்க, சுஜியின் எதிர்பக்கம் அமர்ந்திருந்த சுபாஷினியின் பார்வை சுஜியின் முகத்தைக் கடந்து அவளுக்கு பின்னால் அப்பொழுது உள்ளே நுழைந்த சதீஷிடம் நிலைத்திருந்தது.
நிஷாவுடன் சென்ற சுஜி என்னவானாளோ என பார்த்து செல்ல வந்த சதீஷிற்கு அந்த அறையில் சுஜியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சுபாஷினியை கண்டு ஒரு நிமிடம் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. “இவ எங்க இங்க வந்தா?” என்ற எண்ணமும், “ கருமம் போயும் போயும் இவளையா பார்க்கணும். அதும் இன்னைக்கு” என்ற எரிச்சலும் தோன்றியது.
வாயிலில் கதவுகளின் மேல் ஒரு கையை வைத்துக்கொண்ட சதீஷ் நொடிப் பொழுதில் தன்னை நிலைபடுத்திக் கொண்டான். “வேண்டாம்னு ஓடிப்போன அவ தானே டென்ஷன் ஆகனும். நல்ல வேளை டீ நீ என்னை விட்டுட்ட, தேங்கஸ்னு சொல்லிடலாமா?” என பரபராவென கண்கள் ஒளிபெற சுபாவை ஒரு சின்ன சிரிப்புடன் எதிர் கொண்டான்.
தன் அசட்டையான திமிருடன் நின்றிருந்த சதீஷை கண்டவுடன் சுபாஷினி தன்னையும் அறியாமல் எழுந்து நின்றிருந்தாள். முதலில் ஆச்சரியமாக தோற்றமளித்த முகம் சடுதியில் கருப்படிந்து போயிருந்தது. இதை பார்த்துக் கொண்டிருந்த சுஜிக்கோ “சதீஷின் முன்னாள் காதலி சுபாஷினி இவள்” என்ற பதிலை சொல்லிக் கொண்டிருந்தது சுபாவின் முகம். அறையில் எவருமே எதுவும் பேசிக் கொள்ளாமல் போக, நிலைமையை சகஜமாக்க எண்ணிய சுஜி, “என்ன சத்தீஷ்? ஆண்ட்டி கூப்பிடுறாங்களா?” என இயல்பாக சதீஷிடம் பேசிக்கொண்டு பெண்கள் இருவரிடமும் தலையசைத்து விடைபெற்றுச் செல்ல எத்தனித்தாள்.
அதற்குள் சுபாஷினி “எப்படி இருக்கீங்க?” என குரலில் அநியாயத்திற்கும் வெறுப்பை வரவழைத்துக்கொண்டு சதீஷிடம் வினவினாள். இதற்கெல்லாம் சதீஷ் கொஞ்சம்கூட அசருபவன் இல்லையே. “ஓ, என்கிட்ட பேசற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கா? வெரி குட்.” என்று நக்கலாக மொழிந்தான்.
“வாட் இஸ் ஹேப்பனிங்க் ஹியர். உனக்கு இவரை ஏற்கனவே தெரியுமா?” என நடந்தவை எல்லாம் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணான மதுமிதாவுக்கு குழப்பமாக வினவினாள். சுஜி தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது புரிந்தாலும் தன் ஆதரவை காட்டும் விதமாக சதீஷின் அருகே சென்று நின்று கொண்டாள்.
மதுமிதாவும் செய்வதறியாது ஒரு ஓரமாக நின்று விட, சதீஷ் தன் பொறுமையை சிறிதும் இழக்காமல், “நீ எப்படி இருக்க? அமெரிக்கா வாழ்க்கை எப்படி இருக்கு?” என சற்றே நக்கலாக வினவினான். சுபாஷினியின் படபடப்பு உடல்மொழியில் நன்றாகவே தெரிந்தது. “எங்கே சதீஷ் ஏதேனும் வில்லங்கமாக சொல்லி விடுவானோ?” என்ற அச்சம் அவள் முகத்தில் படியத் துவங்கியிருந்தது.
சுஜிக்கு சுபாஷினியின் பதட்டத்தைக் காண பாவமாகவும் இருந்தது. “சதீஷ் கீழ போலாம். பங்க்ஷன் ஆரம்பிச்சுடுவாங்க” என மெல்ல அவன் கையைப் பற்றி இழுத்து அவ்விடம் விட்டு நகர்த்துவதில் முனைந்தாள்.
[the_ad id=”6605″]
ஆனால் சதீஷ் இருக்கு சுபாஷினி அவ்வளவு லேசில் விட்டுவிட்டு செல்ல விருப்பமில்லை. “எத்தனை ஃபோன் கால்? எத்தனை அவமானம்? இவகிட்ட பேச எப்படி திரிஞ்சேன்?” என அவளைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அவன் கண்முன்னே விரிந்தன. எத்தனை முறை அவள் வீட்டிற்கு சென்று அவமானப்பட்டு திரும்பி இருப்பான். அதெல்லாம் சட்டென சதீஷ் மறந்து போய்விட முடியவில்லை.
“இந்த சொகுசான அமெரிக்கா வாழ்க்கைக்காக தானே ஓடி வந்த? நல்லாஆஆ இருக்கியா இப்போ?” என குரலில் கொஞ்சம் காட்டத்தோடு வினவினான். சுபாஷினி தன்னிட்சையாக பின்னால் ஓரடி நகர்ந்திருந்தாள். இதற்குள் என்னவென்று பார்க்க நிஷாவும் மேலே வந்து விட்டிருந்தாள். “என்ன? என்ன ஆச்சு சதீஷ்? ஏதாவது ப்ராப்ளமா?” என கொஞ்சம் படபடப்புடன் வினவிய நிஷாவிடம்,
சுஜி “அதெல்லாம் ஒன்னும் இல்ல நிஷா. சதீஷும் உங்க ஃப்ரெண்ட் சுபாஷியும் ஏற்கனவே தெரிஞ்சவங்க போல. அதனால பேசிக்கிட்டு இருக்காங்க. வேற ஒன்னும் இல்ல. நீ வா சத்தீஷ் கீழ போலாம்” என சதீஷ் அதற்குமேல் எதுவும் பேச விடாமல் அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மாடிப் படியில் இறங்கி கீழே ஹாலுக்கு வந்து விட்டிருந்தாள்.
நிஷாவும் அவர்களுடனேயே இறங்கி இருந்தாள். கீழே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்கத் துவங்கியிருந்தன. தாம்பூலம் மட்டும் இப்போதைக்கு மாற்றிக்கொள்வது என பெரியவர்கள் அனைவரும் முடிவெடுத்திருந்தனர். சுபாஷினி மதுமிதாவும் கீழே இறங்கி வராததை கண்ட நிஷா தன் தோழிகளை கீழே அழைத்து வர திரும்ப மேலே விரைந்தாள்.
அங்கே அறையில் சுபாஷிணி வழக்கம்போல் தன் கண்ணீரால் கப்பலை கவிழ்க்கத் துவங்கியிருந்தாள். “இவனை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. மது உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் இல்ல. என்னை வேணாம்னு சொல்லி ஏமாத்திட்டான் என் காலேஜ் ஃப்ரெண்ட்ன்னு..அது இவன் தான்” என கண்ணீருடன் மதுமிதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொல்லிக் கொண்டிருந்தாள்.
மது என்று அழைக்கப்பட்ட மதுமிதாவிற்கு அவர்கள் வீட்டின் அருகில் குடிவந்த புதுமணத் தம்பதிகள் திரு. விஷால், திருமதி சுபாஷினி விஷாலை அவ்வளவாக முன்னர் பழக்கம் இருக்கவில்லை.
நிஷாவின் மூலமாகவே சுபாஷினி பழக்கமானாள் மதுவிற்கு. பழகிய கொஞ்ச நாட்களில் சுபாஷினியைப் பற்றி அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் தோன்றியிருக்கவில்லை. சுபாஷினி அமெரிக்க வந்தென்னவோ 6 மாதங்கள் முன்பு தான். ஆனால் இங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவள் போல் அவ்வளவு அலட்டல்.
“இவ அவளோட கணவர் விஷாலை லவ் பண்னறதை விட அமெரிக்காவை ரொம்ப லவ் பண்ணறாளே?” என பலமுறை மது யோசித்ததுண்டு. தன் எண்ணத்தை தன் தோழி நிஷாவிடம் சொன்னதும் உண்டு. நிஷா இயல்பாகவே எல்லோரிடமும் நல்ல விஷயங்களை மட்டுமே காண்பாள். அதனாலேயே மதுமிதா சுபாவைப் பற்றி சொல்லும் போதெல்லாம், “விடு மது. அவங்க கேரக்டர் அது. பெருசு பண்ணாத” என பெருந்தன்மையாக சொல்லிவிடுவாள்.
மதுமிதா இப்போதும் அழுது கொண்டிருக்கும் சுபாஷினி ஒரு வித அசூசையுடன் சமாதானம் பண்ணிக் கொண்டிருந்தாள். “அழாத ப்ளீஸ். யாராச்சும் பார்த்தா என்ன சொல்லுவாங்க. நல்ல காரியம் நடக்கறப்போ அபசகுணம் மாதிரி இருக்கும். என்ன இருக்கு அழுக இதுல. அவன் தான் எதுவுமே சொல்லலியே. போயிடாரே” என சுபாஷினியிடம் பேசினாள் மதுமிதா.
ஆன போதும், “அப்படி அவன் ஏமாத்திட்டான்னா, இவ தானே அவனைப் பார்த்து கோபப்படனும், ஆனா அவன் கோபப்படறான். இவ பயப்படறா? அப்போ இவ ஏமாத்தினாளா? இல்ல அவனா?” என்ற குழப்பமான சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது மதுமிதாவின் மனதில்.
சரியாக அந்த நேரம் நிஷா அறையினுள் வந்திருந்தாள். நிஷாவைக் கண்டதும் இன்னமும் சற்றே பெரிதாக விம்மிய சுபா, “ஸாரி நிஷா. உன் கொழுந்தனார் ஆக போறான் அந்த சதீஷ். அவனைப் பத்தி நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு. அவன் ரொம்ப நல்லவன் இல்ல நிஷா. பொறுக்கி. பயங்கரமான சுயநலவாதி.” என பொருமத் துவங்கினாள்.
“ஹே..அதெல்லாம் ஒண்ணுமில்லை நிஷா. நீ போய் வந்தவங்களை கவனி” என மதுமிதா தடுக்கப் பார்த்தாள்.
“இட்ஸ் ஃபைன் மது.. நீ சொல்லு சுபா.. என்னாச்சு?.. யார் உன்ன என்ன சொன்னாங்க? பொறுமையா பேசு.” என்று நிஷா சுபாவை சாந்தப்படுத்த எண்ணினாள்.
இது தான் வாய்ப்பு என உணர்ந்த சுபா, “நாலு வருஷம் காதலிக்கிறேன்னு என் பின்னாலே சுத்துனான் நிஷா. நானும் அப்பா அம்மாகிட்ட கல்யாணத்துக்காக பேசு அப்படின்னு சொன்ன போ, தன்னோட அண்ணாவோட கல்யாணத்தை காரணம் காமிச்சு என்ன கழட்டிவிடத்தான் பார்த்தான்.”
“அடுத்ததா யுஸ்ல படிக்கப் போறேன் அப்படின்னு ஆரம்பிச்சான். என்னை ஏமாத்திட்டு, வேண்டாம்னு சொல்லிட்டு இங்க வந்துட்டான்.” என முன்னுக்குப் பின் சம்பந்தமில்லாமல் மொழிய மதுமிதா மட்டும் சற்றே நம்பமாட்டாமல் சுபாவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிஷா எந்த அளவிற்கு சுபாஷினியின் கூற்றை ஏற்றாள் என மதுவிற்குத் தெரியவில்லை. நிஷாவும் சொன்னதை எல்லாமே நம்பும் ரகம் அல்ல. மனிதர்களின் நல்ல குணங்களை முதன்மைப்படுத்தும் பாங்கு இருந்தாலும், சொன்னதையெல்லாம் நம்பிவிடும் அப்பாவி ரகமெல்லாம் இல்லை நிஷா என்பது தெரிந்து மது நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சுபாஷினி இன்னமும் கண்ணீருடன் பேசிக் கொண்டிருந்தாள். “சாரி நிஷா உன்னோட நிட்சயத்தை நான் கெடுக்க நினைக்கலை. ஐம் சாரி” என இன்னமும் அழுதாளே தவிர அழுகையை நிறுத்தும்பாட்டைக் காணவில்லை. மதுமிதா சற்றே ஆத்திரத்துடன் பேச எத்தனிக்க, நிஷா தன் தோழியை கையமர்த்தினாள்.
“அழாத.. விடு..அதுலாம் உன்னோட பாஸ்ட். இப்போ உனக்கும் விஷாலுக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு பேரும் ஹாப்பியா இருக்கீங்க. இப்ப பழசை பத்தி தேவையில்லாம பேசி காம்பிளிகேட் பண்ணிக்க கூடாது.” என தன்மையாக நிஷா தன் பக்கத்து வீட்டு தோழியான சுபாஷினிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் தான் மறந்து வைத்துவிட்டு சென்ற தனது கைப்பேசியை எடுத்து செல்ல வந்தவள் சுஜி. வாயிலில் நின்று சுபாஷினி பேசிக்கொண்டிருந்தவற்றை கேட்டுக் கொண்டிருந்தாள். நிஷாவின் தன்மையான பேச்சைக் கேட்ட சுஜி, இப்போது உள்ளே சென்றால் இன்னமும் பிரச்சனையாகுமோ என எண்ணி, நிஷா பேசியவற்றை மட்டும் கேட்டுக் கொண்டு தன் கைபேசியை எடுக்காமல் திரும்பி கீழே சென்று விட்டிருந்தாள்.
நல்லவேளையாக வேறு பெரிய விஷயங்கள் எதுவும் நடவாமல் நல்லமுறையில் தாம்பூலம் மாற்றிக் கொள்ளப்பட்டிருந்தது. அனைவரும் உணவு உண்டு முடித்து சற்றே ஆசுவாசமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
நிஷா கிஷோருடன் தனியாகப் பேசும்பொருட்டு அருகிலிருந்த பார்க் வரை சென்று வரலாமா என கிஷோரிடம் வினவினாள். அவனும் ஒப்புக் கொள்ள கிஷோரும் நிஷாவும் அவரவர் வீட்டில் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டு வெளியே சென்றிருந்தனர்.
சதீஷ் தன் கைபேசியுடன் சோபாவில் ஐக்கியமாகியிருந்தான். காலையில் வீட்டிலிருந்து கிளம்பிய போது இருந்த மகிழ்வான மனநிலை சற்று தடைபட்டு விட்டது போலத் தோன்றியது. “போயும் போயும் இவளை நான் இன்னைக்கு பாக்கணும் தலையெழுத்து பாரு..சே. காலைல எவ்வளவு ஹாப்பியா இருந்தேன். ஏன் தான் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குதோ?” என நொந்து கொண்டே தன் கைபேசியில் பப்ஜி விளையாடிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
சுஜி தன் கைபேசியுடன் வெளியே சென்று அமர்ந்தாள். நிஷாவின் வீடு மிகவும் அழகாக இருந்தது. இரண்டு அடுக்குகள் கொண்ட வீட்டை சுற்றி புல்வெளி அமைத்து அதில் பல வண்ண மலர் செடிகளை வளர்த்திருந்தனர். அங்கே இருந்த ரோஸ்வுட் மரத்தின் அடியில் சிறிய மரப்பலகை பெஞ்ச் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சென்று அமர்ந்து கொண்டாள்.
கைப்பேசியை எடுத்து அதில் சதீஷ் ஆன்லைனில் இருக்கிறானா எனப் பார்த்தாள். வாட்ஸ் அப் ஆன்லைன் என்று காட்டியது. சுபாவைப் பற்றிய எண்ணவோட்டத்தில் மூழ்கியிருப்பானோ என நினைத்தவளுக்கு அவன் இவள் எண்ணுக்கு ஏதோ எழுதுவதும் பின்பு அழிப்பதும் திரும்ப எழுதுவதுமாக இருந்தான்.
“குழப்பத்தில இருக்கானோ.. பேசலாமா?” என நினைத்தவள், “ஷேல் ஐ கால்?” என குறுன்செய்தி அனுப்பினாள். இவள் அழைக்கும் முன்னர், அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ம்ம்ம் சொல்லு.. எங்க இருக்க?” என்றான். குரலில் இருந்து அவன் என்ன மனநிலையிலிருக்கிறான் என கண்டு கொள்ள முடியவில்லை.
“நான் வெளிய லான்ல ஒரு பெஞ்ச் இருக்கு.. அங்க உட்கார்ந்திருக்கேன்” என்றாள்.
“வரவா அங்க..” என்றவனிடம், “வேண்டாம்.. வேண்டாம்.. ஜஸ்ட் பேசணும்னு தோணுச்சு.. அதான் கூப்பிட்டேன்” என்றாள். அவன் சுபாவை நினைத்து உருகி தத்தளித்து காதலித்த கதைகளை கேட்கும் நேரம் இதுவன்று எனத் தோன்றியது சுஜிக்கு.
[the_ad id=”6605″]
ஆனால் அவனோ, “இரு நான் வர்றேன்” என்றபடிக்கு கைப்பேசியை அணைத்தான். சில நிமிடத்தில் வீட்டின் வாயிலில் இருந்து வெளிப்பட்டவன், அசட்டையான நடையுடன், சட்டையை மடித்து விடப்பட்டிருந்த கை முஷ்ட்டி அருகே நீவிவிட்டபடிக்கு நடந்து வந்தான். அவனது கோடிட்ட நீலச் சட்டையும், கருப்பு கூலர்சூம் வெகு ஸ்டைலிஷாகக் காட்டின. சுஜி அமர்ந்திருந்த இடத்தில் வந்து அமர்ந்தவன், பென்சின் பின்னால் லகுவாக கைகளை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.
“என்ன சொல்லு..” என்றவனது கண்கள் சிரிப்புடன் தான் வினவின.
“இல்ல.. ஜஸ்ட் சும்மா.. “ என்றவள், அவன் தலைசாய்த்து ஒரு பக்கமாக அமர்ந்திருந்த நிழல் வடிவம் தன் மனதில் புதைமணலில் சிக்கிய கட்டெறும்பு போல அமிழ்ந்து கொண்டிருந்ததை கவனித்தாள். அவனது தோற்றம் தந்த கிரக்கம், அவனது அருகாமை காலையில் சுஜி எடுத்திருந்த முடிவுகளை சற்றே அசைத்துப் பார்ப்பதையும் உணர்ந்தாள்.
“சொல்லு என்ன விஷயம்?” என்றான் அணிந்திருந்த கூலர்ஸைக் கழற்றி, சட்டையின் மேல் சொருகியபடிக்கு.
“ஆர் யூ ஆல்ரைட்?”
“எஸ்.. அப்சலியூட்லி.. இதென்ன ஒரு கேள்வி..?”
“இல்ல.. வந்து.. சுபா உன் என்ஸ் லவர்..”
“ஓ..அதனால ஓவர் ஃபீலிங்கல இருப்பேன்னு நினைச்சியாக்கும்” என சிரிப்புடன் மொழிய, சுஜினி அவளது சிவப்பு கல் பதித்த ஜிமிக்கி அசைய தலையசைத்தாள். ஒரு நிமிடம் சதீஷ் என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்பதையே மறந்து விட்டிருந்தான். வட்ட வடிவ முகம், அதில் நேரெடுத்து பின்னப்பட்ட ஜடை, வெள்ளை நெற்றியில் திருஷ்டி போல் வட்டமான சிவப்பு பொட்டு, கண்களில் லைனர்/மை(என்னவோ ஒன்று), உதட்டில் லேசான உதட்டுச் சாயம், காதுகளுடன் மெல்ல ரகசியம் பேசிக் கொண்டிருந்த ஜிமிக்கி என அவளது முகத்தை அங்குலம் அங்குலமாக அந்த நிமிடங்களில் உள்வாங்கிக் கொண்டிருந்தான்.
கண்சிமிட்டாமல் அவளது முகத்தில் கண்களைப் பதித்திருந்த சதீஷின் விழிகளை சந்திக்க முடியாமல் கன்னங்களில் செம்மை பூக்கத் துவங்கியிருந்தது சுஜிக்கு.
“எதுக்கு இப்படி பார்க்கற. அன்னைக்கு பார்குல இப்படி தான் பார்த்த. அப்பறமா திடீர்னு ஞான உதயம் வந்து நல்லவனா மாறிடுவ..போடா டேய்” என மனதினுள் சொல்லிக் கொண்டாலும், அவனது பார்வையின் தாக்கம் அவளுள் மின்சாரத்தைப் செலுத்திக் கொண்டிருந்தது.
இருவருமே சில நொடி அமைதியாக இருக்க, சுஜி தானே முன்வந்து மெளனத்தைக் கலைத்தாள். “என்னவோ சொல்லிட்டு இருந்தீங்க..”என அவன் முகம் பார்க்க அவனோ சின்ன சிரிப்பை வெளியிட்டான்.
சுஜி சற்றும் எதிர்பாராமல் அவளது காது ஜிமிக்கை ஒரு முறை மெல்ல தட்டியவன், அது திரும்பவும் ஆட, கொஞ்சமும் சிரிப்பு மாறாமல், “உன் ஜிமிக்கி அழகா ஆடுது. சோ க்யூட்” என பட்டென மொழிந்திருந்தான். ஜிமிக்கியை தொடச் சென்ற கைகள் செம்மை பூத்துப் போன கன்னத்தை சில நொடிகள் வருடி விட்டிருந்தன.
சுஜிக்கு மூச்சு விடக்கூட முடியவில்லை. மூச்சு விட வேண்டும் என்ற எண்ணமுமே வரவில்லை. அவன் ஒற்றை விரல் வருடலில் சொக்கிப் போயினும், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
“ம்ம்ம்.. ஏ.. என்ன..” எனத் தொண்டையின் ஆழத்தில் உள்ளே எங்கோ சென்றிருந்த குரலை மீட்டெடுத்து அவனிடம் வினவினாள்.
“உன். ஜிமிக்கி. அழகா. க்யூட்டா இருக்குன்னு. சொன்னேன்” என ஒரு ஒரு வார்த்தையும் மெல்ல மெல்ல அழுத்தமாக உச்சரித்தான். கையோடு திரும்பவும் அவளது ஜிமிக்கியை தொடப் போக சுஜி முகத்தை திருப்பிக் கொள்ள, அவன் கைவிரல்கள் அவளது கன்னத்தை உரசின. சுஜியின் கன்னங்கள் இன்னமும் செம்மை பூப்பதை கண் கொட்டாமல் பார்த்தவன், மெல்ல தன் உதட்டை கடித்தபடிக்கே இதழ் பிரிக்காமல் நகைத்தான்.
இம்முறை அவளுள் தோன்றிய படபடப்பு குறைய நேரமானது. அவள் சமன்படும் வரையில் காத்திருந்தவனைக் காண இயலாமல் பொய்க்கோபம் காட்டினாள் அவள். அவனை திரும்ப அவள் ஜிமிக்கியை தட்டப் போக,
“இப்படி பண்ணா நான் எந்திரிச்சு போயிருவேன் சத்தீஷ்.” என அவள் மொழிய சதீஷும் அவளது பேச்சு புரிந்து கைகளை கீழே இறக்கிக் கொண்டான். “சுபா பத்தி சொல்லாம இருக்க, என்னை ஏமாத்த பாக்கற நீ” என வெளிப்படையாகவே அவள் குற்றம் சாட்டினாள்.
“சீ லூசு மாதிரி யோசிக்காத.. அவளைப் பத்தி மறைக்க பெருசா என்ன இருக்கு சொல்லு. அவளுக்கு இவளோ இம்பார்டென்ஸ் குடுக்கறதே வேஸ்ட் என்னைக் கேட்டா என்றவனின் பதிலைக் கேட்ட சுஜி சமாதானமாகவில்லை என்பதை உணர்ந்து மேலே தொடர்ந்தான்.
“அவளை நான் இங்க கொஞ்சமும் எதிர்பார்கலை தான். ஆனா அதுக்காக நான் அவளை நினைச்சு ஃபீல் பண்ணிட்டு உட்கார்ந்திருப்பேன்னு நீ நினைச்சா உன்னை விட அதிமுட்டாள் யாரும் இல்லை. அவ என்னோட பாஸ்ட். காலேஜில காதல்னா என்னனு புரிதல் வராதப்போ காதலிச்சேன். அவளுக்காக நிறைய சாக்ரிஃபைஸ் பண்ணேன். என்னோட சுயத்தை இழந்திருக்கேன்னு ரொம்ப லேட்டா தான் புரிஞ்சது.”
“அவளைப் பத்தி இப்போ எதுவும் தோணலையா?”
“என்ன தோணனும். இப்போ அவ இன்னொருத்தன் வைஃப். அதுவுமில்லாம, அவளை நான் மிஸ் பண்ணவேயில்லை சுஜி. நீ நம்பலைன்னாலும் அதான் நிஜம்” என அசுரன் பட டயலாக்கை அதே பாணியில் சதீஷ் மொழிய, சுஜி தன்னையும் மீறி பக்கென சிரித்தாள்.
சுஜியின் சிரிப்பை சில நொடி ரசித்தவன், சதீஷ் தொடர்ந்தான். “அவளை என்னோட வாழ்க்கையில வச்சு ஒரு நொடி கூட பொருத்திப் பார்க்க முடியலை தெரியுமா? இப்போ அவளைப் பார்க்கறப்போ கூட அவ யாரோ மாதிரி தான் தோணுச்சு. திட்டக் கூடத் தோணலை.”
“நிஜம்மாவா?”
“உண்மையாவா? அவ மேல கொஞ்சம் கூட லவ் இல்லையா இப்போ?”
“இல்லையே” என பட்டென பதில் சொல்லியிருந்தான். இவன் சோகமாக இருப்பான். கொஞ்சம் சமாதாப்படுத்தலாம் என எண்ணி கைப்பேசியில் அழைத்தால், இவனோ இப்படி பேசிக் கொண்டிருகிறானே எனத் தோன்றியது. முக்கியமாக அவன் பேச்சில் எந்த இடத்திலும் இடரவில்லை.
சுஜியும் அடுத்து என்னக் கேட்பது எனத் தெரியாமல் அமைதியாக இருந்தாள். சுற்றிலும் மெல்லிய காற்று வீசிக் கொண்டிருக்க, சிறிது நேரம் இருவருமே அந்த மெளனத்தில் லயித்திருந்தனர். பேசிக் கொள்ளாத இந்த நிசப்தம் ஒரு வித அமைதியான மனநிலையை இருவருக்குமே உருவாக்கியிருந்தது. அதைச் செற்களால் கலைத்துவிட விருப்பமில்லை இருவருக்கும்.
சிறிது நேரத்தில், சதீஷின் கைப்பேசி சிணுங்கியது. “அம்மா.. சொல்லுங்க. இங்க வெளிய சும்மா. சரி.. தோ வற்ரேன்.” என தன் அன்னையிடம் பேசுகிறான் என்பதை அவனது ஒருபக்க உரையாடல் தெரிவித்தது.
“உள்ள போலாமா? அம்மாவுக்கு ஃபோன்ல நல்ல நாள் கிழமை பார்க்கணுமாம்.” என்ற படிக்கு எழுந்து கொண்டான். சுஜிக்கு இப்போது உள்ளே செல்ல விருப்பமில்லை. கொஞ்சம் தனியாக அமர்ந்தால் நிறைவாக இருக்கும் என எண்ணினாள்.
“நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்றேன். நீங்க போங்க.”என மொழிந்தாள்.
[the_ad id=”6605″]
“ஆர் யு ஸ்யூர்?”
“ம்ம்ம்” என மீண்டும் தலையசைக்க, இம்முறை சுஜி மறுக்கும் முன்னர், “அழகு ஜிமிக்கி பேபி” என தோடுகளை அசைத்துவிட்டு அவளது கன்னத்தையும் ஒரு முறை தட்டிச் சிரிப்புடன் சென்றான். அவன் போகும் திசையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருவளுக்கு அவளையும் மீறி உதட்டில் சிரிப்பு ஒட்டிக் கொண்டது.
“அழகு ஜிமிக்கி பேபி..” என அவன் சொன்னது போலவே திரும்ப சொல்லிக் கொண்டாள். “இப்படி தனியா பொலம்ப விட்டுட்டு, நாளைக்கு நண்பன், நட்பு, நட்புக்காக, நட்புன்னா என்னன்னு தெரியுமா? சூர்யான்னா என்னன்னு தெரியுமான்னு டயலாக் பேசின.. மவனே செத்தன்னு வச்சுக்கோ.” என சதீஷை சிரிப்புடன் திட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
சுத்தமாக ஈரக்காற்றை உள்ளிழுத்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தவளுக்கு, பின்னால் ஏதோ அரவம் கேட்டது. இவள் அமர்ந்திருந்த மரத்திலிருந்து சில அடி தூரத்தில் மலர் செடிகளால் மறைக்கப்பட்டிருந்த இடத்தில் யாரோ வந்து அமரும் சலசலப்பு கேட்டது.
எழுந்து சென்று விடலாமா என சுஜி யோசிக்கும் முன்னர். மலர் செடிகளின் பின்னாலிருந்து மதுமிதாவும் சுபாஷினியும் பேசிக்கொள்வது தெளிவாக கேட்டது. சுஜி எழுந்து கொள்ளாமல் திரும்ப அமர்ந்தாள்.
மதுமிதாவிடன் சுபாஷினி பேசிக்கொண்டிருந்தாள். “எனக்கு சதீஷ் இங்கே பார்க்கவும் படபடப்பா வந்திடுச்சு. அவளோ கோபம். அந்தக் கோபம் தான் அழுகையா வெளிபட்டுடிச்சு..” என்றாள் சுபா.
மதுமிதா பதிலேதும் சொல்லவில்லை. அதனால் சுபாவே தொடர்ந்தாள். “நிஷாகிட்ட எப்படியாவது இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லி நிறுத்திடலாமா மது?”
“என்ன பேசுற சுபா நீ? நிஷாவுக்கு ரொம்ப நாள் கழிச்சு இந்த சம்பந்தம் செட் ஆகியிருக்கு. என்ன காரணம் சொல்லி கல்யாணம் வேணாம்னு சொல்லுவ”
“நிஷாவுக்கு மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு சொன்னா போதுமே. பெருசா என்ன காரணம் வேண்டியிருக்கு”
“உளறாத.. உன் சுயநலத்துக்கு நீ நிஷாவ பலிகடா ஆக்கற தெரியுமா?” என மதுமிதா காட்டமாகவே சொல்லியிருந்தாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுஜிக்கு விசிலடித்துக் கைதட்ட வேண்டும் போல் இருந்தது.
“சே சே .இல்லவே இல்லை.மது, இந்த குடும்பம் சரி இல்ல மது. அவன் ரொம்ப கெட்டவன். தம்பியே இப்படின்னா, அண்ணன் எப்படி நல்லவனா இருப்பான்? அவங்க ஏமாத்திடுவாங்க”
“நீ சொல்லற மாதிரி கிஷோர் தம்பி கெட்டவனாவே இருக்கட்டுமே. அதுக்காக கிஷோரும் கெட்டவனா இருக்கணும்னு அவசியம் இல்லை சுபா. அண்ட் நிஷா ரொம்ப தெளிவானவ. எம்.எஸ் முடிச்சு வேலைக்கு போறவ, பலவகையான மக்களை தினமும் பார்க்கறா. அவளுக்கு மனுஷங்களை ஜட்ஜ் பண்றது ரொம்ப ஈஸி.”
” ஆனா?”
“ஆனாவும் இல்லை ஆவன்னாவும் இல்ல. அவளோட வாழ்க்கைய நீ உள்ள பூந்து முடிவெடுக்க வேண்டாம். நிஷாவுக்கு கிஷோரை பிடிச்சிருக்கு. பிடிக்கலைன்னா அவளே வேண்டாம்னு சொல்லிடுவா.” என சற்றே அழுத்தமாக மொழிந்தாள் மதுமிதா.
“ அப்ப நாளைக்கு இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா, இவங்க எல்லாம் ஒரே ஃபேமிலி ஆயிடுவாங்க. அப்போ நான் இனிமேல் நிஷா கூட பிரண்ட்ஷிப்பை கட் பண்ண வேண்டியதுதான். இதுக்கு வேற வழியே இல்ல” என தனக்குத் தானே சொல்லிக் கொண்ட சுபாஷினியை வித்தியாசமாகப் பார்த்தாள் மதுமிதா.
மறைவில் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த சுஜிக்கோ, “அடப் பைத்தியமே” என்று தோன்றியது. அதையே மதுமிதாவும் மொழிந்திருந்தாள். “ நீ என்ன பைத்தியம் மாதிரி பேசுற சுபா. அவன் தம்பி, கிஷோர் கூடவே இருக்க போவதில்லை. ஈவன் நிஷாவும் கல்யாணத்துக்கப்புறம் பில்டெல்பியா போயிருவா.”
“அப்பிடியா? பிலடெல்ஃபியா போயிருவாளா?”
“ஆமா அவங்க கம்பெனில அங்க பிராஞ்ச் இருக்கு. என்னைக்காவது வந்தா தான் நாமளே மீட் பண்ணப் போறோம். இதுல உனக்கு என்ன பிரச்சனை? நீ அனாவசியமாக ரொம்ப பெருசா யோசிக்கிறன்னு நான் நினைக்கிறேன்” என சற்றே அமைதியாக பேசிக் கொண்டிருந்த மதுமிதாவின் குரலில் சற்றே வெறுப்பு எட்டிப்பார்த்தது.
அதிலும் ஒரு நல்ல நிகழ்வை தன் சுயலாபத்திற்காக தடுக்கப்பார்ப்பது எப்படி சரியாகும்? இவளை ஏனடா இங்கு கூட்டி வந்தோம் என்றே மதுமிதா நினைத்தாள். அக்கம்பக்கம் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் வெளி நாடுகளில் சற்றே ஒட்டுதலாக, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கவேண்டும் பழக வேண்டும் என்ற எண்ணத்தில் புதிதாக குடித்தனம் வந்திருக்கும் சுபாஷினியை அழைத்திருந்தால், இவள் என்ன வேண்டாத வேலை செய்து கொண்டிருக்கிறாள்” என கோபம் கொண்டாள் மதுமிதா.
இதற்கு மேல் பேச்சை வளர்த்த விருப்பமில்லாமல், நாசூக்காக அமைதி காத்தாள். சுபாஷினி அத்தோடு நிறுத்துவதாக தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் அந்த சம்பாஷணையில் சுஜி வலுவில் சென்று ஈடுபட்டிருக்க மாட்டாள்.