என் காதல் கனா 13
சுஜினிக்கு அன்று விவேக்கின் கைப்பேசி எண்ணை வாங்கிக் கொண்டு உணவகத்தினுள் மீண்டும் நுழையும் போது, வார இறுதியின் பரபரப்புக்கு மத்தியிலும், அவ்வப்போது வந்து சென்ற சதீஷின் உருவத்தை நினைத்து சிரிப்பு எழுந்தது. “மாஞ்சு மாஞ்சு ஒருத்தன் பேச ட்ரை பண்ணறான்…அவனை பத்தி நினைக்காம, பத்தடி தூரத்தில நின்னு ஒன்னு ரெண்டு தடவை திரும்பி பார்த்தவனை இவ்வளோ தூரம் நினைச்சுப்பாக்கற சுஜி…. இதெல்லாம் நியாயமா? அதுலையும் உன் நினைப்பெல்லாம் கொஞ்சம் கூட உராங்குட்டானுக்கு இருக்காது. அவனைப் போய் நினைச்சுகிட்டு இருக்க, அதுவும் வீகெண்ட் கூட்டத்துக்கு நடுவுல என்ன கனவு வேண்டிக் கிடக்கு”என்று தலையை சிலுப்பிக் கொண்டு தன் பணிகளில் மும்மரமானாள்.
அன்றைய தின வேலை முடிய இரவு ஒன்பதாகியிருந்தது. ஒன்பது பத்திற்கு கேம்பஸ் செல்லும் கடைசி ஷட்டில் பஸ் ஒன்று டவுன் ஸ்குவயரில் இருந்து புறப்படும். அந்த நேரத்தை கணக்கிட்ட படிக்கு உணவகத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு வேகமாக நடந்தாள். ஹெட் செஃப், ஸ்டீவ், “டேக் திஸ்….திஸ் இஸ் ஃபார் யு” என்று புறப்படும் சமயம், ஒரு பெரிய சீஸ் பீட்சாவினை கையில் திணித்து அனுப்பினான். உணவகத்தில் வேலை செய்வதில் இது ஒரு கூடுதல் செளகரியம் என மகிழ்ந்தவள், “தேங்க்ஸ் ஸ்டீவ்”என்று நன்றி உரைவிட்டு வந்திருந்தாள். இன்று அந்த வாரத்தின் சம்பளத்துடன் சேர்த்து கணசமான அளவு டிப்ஸ் தொகையும் வந்திருக்க, சுஜினியின் கால்களில் ஒரு துள்ளல் தெரிந்தது. சம்பளப்பணம் கொடுத்த துள்ளலா அல்லது நீண்ட நாட்கள் கழித்து சதீஷைக் கண்ட மகிழ்ச்சியா என புரிபடாமல் போக, ஆகமொத்தம் மனம் நிறைய சந்தோஷத்துடன் பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
பேருந்து கிளம்பும் வரையில் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு, விவேக்கிடம் இருந்து வந்த, “ஹாய்”என்ற குறுஞ்செய்தி கொஞ்சம் நெருடலாக இருந்தது. “ஃபோன் நம்பர் குடுத்து ஒரு மணி நேரத்துக்குள்ள மெசேஜ் அனுப்பனுமா?” என்று மனம் யோசித்த போது, திரும்ப பதில் அனுப்பத்தோன்றவில்லை.
“விவேக் ஏதோ சொல்லிட்டு இருந்தானே, நெக்ஸ்ட் வீக் ஏதோ மால் அவுட்டிங்னு…சரியா காது குடுத்து கேட்டிருக்கலாம்… அதைப் பத்தி கேட்கதான் மெசேஜ் பண்ணியிருக்கானோ?”என கேள்வி எழும்பியது. அதனுடனேயே, “ஆமா, சதீஷ் அப்போ எப்படி பார்த்தான் தெரியுமா? இந்த மைனஸ் டிகரி குளிரில கூட அனலடிக்கற மாதிரி ஒரு பார்வை. எதுக்கு அப்படி உத்து பார்த்தான். அவன் பார்த்ததில கொஞ்சம் குழம்பிப் போய் தானே விவேக் பேசினதை கவனிக்காம போயிட்டேன்…பாவம் விவேக், என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பான்… நாளைக்கு காலையில விவேக்கு ஃபோன் பண்ணி என்ன விஷயம்னு கேட்கணும்…”என மறுகணம் விவேக்கின் மேல் பட்சாதாபம் தோன்ற, தன் எண்ணவோட்டங்கள் சென்ற திசையைக் கண்டு சுஜினி சிரிப்பு எழுந்தது. விவேக்கிடம் தான் நட்பு ரீதியில் பழகுவதும், அதே சமயம் சதீஷிடம் ஒரு உருமை கலந்த கோபம் கொள்வதையும் நினைத்து அவளுக்கு சிரிப்பு வந்தது உண்மையிலேயே.
“இந்தியாவ விட்டு, அம்மாவை பிரிஞ்சு, இவ்வளவு தூரம் இங்க எதுக்கு வந்தோம்னே மறந்துட்டு, தேவையில்லாத வேலைகள்ல மனசை கொண்டு போறடீ சுஜி…”என மனம் எச்சரிக்க, அத்துடன் நில்லாமல், “ஐ ஃபீல் ஹோம்சிக்…அதனால தான் இப்படியெல்லாம் தடுமாறரேனு நினைக்கறேன்”என்று தன் எண்ணங்களுக்கு சுஜினி தானாகவே ஒரு அர்த்தம் கற்பித்துக் கொண்டாள். “சே, இனிமே இந்த விவேக் பத்தியோ, சதீஷ் பத்தியோ கவலைப்படக் கூடாது…இங்க எதுக்கு வந்தேனோ அதுல தெளிவா இருக்கணும். படிச்சு முடிச்சதும், இங்கையே நல்ல வேலை கிடைக்குதான்னு பார்க்கணும், அதுக்கு என்ன தேவையோ அந்த குவாலிட்டீஸை வளர்த்திக்கணும்….”என்று யோசித்தவள், அன்றைய வார சம்பளத்தையும், டிப்ஸையும் என்ன செய்யலாம் என யோசித்தவண்ணம் தன் மீதி பயணத்தைத் தொடர்ந்தாள்.
[the_ad id=”6605″]
அடுத்த தினம் சனிக்கிழமை, உணவகத்தில் முழு நேர வேலை இருந்தது. அதனால் காலையிலேயே கிளம்பிச் சென்றவள், கையுடன் அந்த வார அசைன்மெண்டுகளையும் கொண்டு சென்று, நேரம் கிடைக்கும் போது அதில் கவனத்தை செலுத்தினாள். ஞாயிரன்று சுஜினியின் வார விடுமுறை தினம். கொஞ்சம் மெதுவாக் எழுந்து, தன் மீத வேலைகளைச் செய்வது, லாண்டிரோ மேட் சென்று வருவது, அடுந்த வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் வாங்கி வருவது, மீதி நேரத்தில் தோழிகள் வித்யாவுடனும், எம்மாவுடனும் அரட்டை அடித்துக் கழிப்பது என செலைவிட்டாள்.
அடுத்து வந்த திங்கட்கிழமையும் வழக்கம் போல் கல்லூரி, “சிம்பிளி ஏஸ்யா” வேலை என எந்த ஒரு மாறுதலும் இல்லாம கடக்க, தன் பகுதி வேலையை முடித்துக் கொண்டு உணவகத்தில் இருந்து வெளியேறிய போது, பின்வாசல் அருகில் நின்றிருந்தவனைக் கண்டு ஒருகணம் துணுக்குறாள் சுஜினி.
“ஹாய், விவேக், இங்க என்ன பண்ணறீங்க? சாப்பிட வந்தீங்களா? ஆனா, இப்போ பிஸ்டிரோ க்லோஸிங் டைம் ஆகிடுச்சே…”என மொழிந்தவளை சிரிப்புடன் ஏறிட்டான் விவேக். விவேக்கைக் கண்டதும், அடுத்த நொடி, அருகில் சதீஷ் இருக்கிறானோ என கண்கள் இயல்பாக அலைபாய, முடிந்த மட்டும் தன் ஆர்வத்தை அடக்கிக் கொண்டாள்.
“நான் இங்க “பெஸ்ட் ஆட்டோ பார்ட்ஸ்ல ட்ரெயினியா ஜாயின் பண்ணியிருக்கேன்…இன்னைல இருந்து….”என்று சுஜினியின் கேள்விக்கு பதிலளித்தான் விவேக். சுஜினியின் கண்கள் ஒரு நிமிடம் சுற்றும் முற்றும் தேடுவதை உணர்ந்தவன், “நான், சதீஷ் அப்பறம் ரோனால்ட்ன்னு இன்னொரு ஃப்ரெண்டும் இங்க ஜாயின் பண்ணியிருக்கோம்..”
“ஒ.ஒ.கே…அவங்க எல்லாம் எங்க? இன்னும் வேலை முடியலையா?” என ஆர்வமாக வினவியவளை கொஞ்சம் கேள்வியுடன் ஏறிட்டவன், “அவங்க அப்பவே போயிட்டாங்க…நான் உனக்காக வெயிட் பண்ணலாமேன்னு நின்னேன்”என்று உண்மையான அக்கறையுடன் மொழிய, சுஜினிக்கு ஒரு விதமான சங்கடமாக இருந்தது. “சே, நமக்காக வெயிட் பண்ணறவனை கண்டுக்காம, விட்டுட்டுப் போன ஒருத்தனைத் தேடறது எவ்வளோ முட்டாள்தனம்” என யோசித்தவள், “சோ, நடந்துட்டே பேசலாமா? எப்படி கேம்பஸ் திரும்புவீங்க? பைக் இல்ல கார் இருக்கா? ஏன்னா நைன் ஓ கிளாக் ஒரு ஷட்டில் இருக்கு. நான் யூஸ்வலா அதுல தான் டிராவல் பண்ணுவேன்.” என்று படபடவென்று அடுத்தடுத்த கேள்விகளை அடுக்கியவள், “நானும் இனிமே அதுல தான் டிராவல் பண்ணுவேன்னு நினைக்கறேன்…”என்று அவளது வேக நடைக்கு ஈடு கொடுத்து நடந்த விவேக்கை பக்கவாட்டில் பார்த்துக் கொண்டு மெல்ல சிரித்தாள்.
“உங்க ஃப்ரெண்ட்ஸ் எப்படி போனாங்க?”
“ரான்கிட்ட கார் இருக்கு. அதுல போயிடுவாங்க”
“ஓ, நீங்களும் அதுலையே போயிருக்கலாமே…”என கொஞ்சம் சந்தேகத்துடன், “எனக்காக ஏன் வெயிட் பண்ணீங்க”என்ற கேள்வியை கேட்காமல் விட்டிருந்தாள். விவேக்கிற்கு சுஜினி என்ன கேட்க வருகிறான் என புரியாமல் இல்லை. இதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட, தயாராக நின்றிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டனர். சுஜினியின் அருகே இருக்கையில் அமர்வதா , அல்லது தனி இருக்கையில் அமர வேண்டுமா என மனதிற்குள் சிறிய பட்டிமன்றமே நடந்திருந்தது. நல்ல வேளையாக, சுஜினி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டு, பக்கத்து இருக்கையை தூசு தட்ட, தான் அமர்வதற்கான சமிக்கையாக அதனை பாவித்த விவேக் கொஞ்சம் தயக்கத்துடன் சுஜினியின் அருகில் அமர்ந்துகொண்டான்.
விவேக்கின் மனம் தன்னிலையிலேயே இல்லை. இப்படி சுஜினியுடன் அருகருகே அமர்ந்து பயணிப்பது விவரிக்க இயலாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. “இதுஎன்ன இந்த பொண்ணு மேல இப்படி திடீர்ன்னு ஒரு அட்ராக்ஷன்?”என்ற கேள்வு எழுந்த போதிலும், சுஜினியுடன் அமரும் வாய்ப்பை தவரவிட விவேக் எண்ணவில்லை.
[the_ad id=”6605″]
“சோ, சொல்லுங்க விவேக், உங்க ஃப்ரெண்ட்ஸ் ஏன் தனியா உங்களை விட்டுட்டு போயிட்டாங்க?”என்று விட்ட இடத்தில் இருந்து கேள்விகளைத் தொடுத்தாள். விவேக்கிற்கு தன் நண்பனைப் பற்றி அவதூறு பேச தயக்கமாக இருந்த போதிலும், “நான் ஒன்னும் இல்லாத்தை சொல்லப் போறதில்லையே..அதுவுமில்லாம, சதீஷைப் பத்தி கொஞ்சம் சுஜினி தெரிஞ்சுக்கறதும் நல்லது தான். அவனோட பழக்கங்கள் பத்தி தெரிஞ்சுகிட்டா அவ சதீஷ் மேல காட்டற இன்டிரெஸ்ட் கம்மியாக வாய்ப்பிருக்கு”என குதர்க்கமான எண்ணம் தோன்ற,
“அவங்க நேரா கேம்பஸ் போக மாட்டாங்க.. டவுன் செண்டர் பக்கத்தில ஒரு ஒரு…..” என்று மேலே சொல்லத் தயங்கினான். “கமான் விவேக்…எங்கிட்ட சொல்ல என்ன தயக்கம்”என சுஜினி ஆவலாக கேட்க, அதற்கு மேல் ஒழிவு மறைவு இன்றி பேசலாம் என நம்பிக்கை எழுந்தது.
“டவுன் செண்டர் பக்கதில ஒரு பப் இருக்கு. அங்க ஒரு பீர் அடிச்சுட்டு, பேசிட்டு மெதுவா வருவாங்க…” என்று சிறிது கூச்சத்துடன் மொழிந்தான் விவேக். சுஜினிக்கு ஆச்சர்யமாக இருந்தது. “லக்கி கைஸ்”என்று மனதிற்குள் நினைத்த போதும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சுஜிக்கு இது போல் நிறைய சின்ன சின்ன ஆசைகள் இருந்தன. “அடுத்த ஜென்மத்தில நான் கண்டிப்பா பையனா பொறக்கணும். எல்லா எஞ்சாயிமெண்ட்ஸையும் அனுபவிக்கனும், ஸ்பீடா பைக்ல போறது, லேட் நைட் பார்ட்டி, ஃப்ரெண்ட்ஸ் கூட நினைச்சப்போ வெளிய போறதுன்னு எந்த தடையும் இல்லாம லைஃபை எஞ்சாய் பண்ணனும்”என்ற யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத ரகசிய ஆசைகள் நிறைய உண்டு. அதிலும், “கல்யாணத்துக்கு அப்பறம், முடிஞ்ச அளவு என் ஆசைகளை எல்லாம் செஞ்சு பார்த்திரனும்”என்ற கனவும் உண்டு.
இந்த பதிலைத்தான் சொல்வான் என்ற கணிப்பில் “ஏன் நிங்க குடிக்கமாட்டீங்களா?” என தன் மனதின் கேள்வியை கேட்டிருந்தாள். சுஜினி நினைத்ததைப் போன்றே விவேக் முகத்தில் கொஞ்சம் கர்வம் மின்ன, “சே, சே, நான்…எனக்கு அந்தப் பழக்கம்லாம் இல்லை…ஐம் எ டீ–டோட்டலர்”என்று பெருமையாக சுஜினியைப் பார்த்துக் கொண்டே மொழிய, சுஜினிக்கு ஒரு கணம் சப்பென்று இருந்தது.
“சூப்பர் விவேக்…இந்த காலத்தில இப்படியெல்லாம் நிறைய பேர் இருக்கறதில்லை…யுஆர் பர்ஃபெக்ட்”என்று வார்த்தைகளால் சுஜினி கூறியதைக் கேட்ட விவேக் முகம் மலர்ந்தான். ஆனால் சுஜினியின் மனமோ “பர்ஃபெக்ட் தான்….பட், எனக்கு இவ்வளோ பர்ஃபெக்டா ஒருந்தன் வேண்டவே வேண்டாம். செட்டே ஆகாது….இந்தக் காலத்தில ஒரு தம் கூட அடிக்காம, அப்படி நல்லவனா வாழ்ந்து என்ன செய்ய போறியோ” என்ற ரீதியில் யோசித்தது. சுஜினியின் எண்ணவோட்டத்தை யாரேனும் கேட்டிருந்தால்”இதென்ன இந்த பொண்ணு இப்படி யோசிக்குது?தரங்கெட்ட பொண்ணா இருக்கும் போல” என்று சுஜினியின் மீது தவறான அபிப்பிராயம் கொண்டிருப்பர்.
ஆனால் சுஜினியின் ஆசைகளை, அவளது இடத்தில் இருந்து பார்த்தால் ஒழிய புரிந்து கொள்வது இயலாது. சிறுவயதிலேயே தந்தையை பறிகொடுத்திருந்ததால், சுஜினியின் வாழ்வில் ஆண் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு உருவம் என்பது இருந்ததே இல்லை. மாமா ராமனதன் இருந்தார் தான், ஏன் அத்தை பெற்ற சீமந்த புத்திரன் ஸ்ரீராம் கூட ஒன்றாக வளர்ந்தவள் தானே, இருப்பினும், இத்தனை வருட வாழ்வில், ஒரு நாள் கூட,
”சுஜி சாப்பிட்டியா?”
“சுஜி, உனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லித் தர்றேன். நல்லா ஓட்டிப் பழகினா ஸ்கூட்டி வாங்கித் தர்றேன்”
“ சுஜி, எந்த பையனாவது கிண்டல் பண்ணா சொல்லு, நான் வந்து என்னன்னு கேட்கறேன்,”
[the_ad id=”6605″]
“நைட், இவ்வளோ நேரம் ஆகிடுச்சே, சுஜி எப்படி தனியா டியூஷன் விட்டு வருவா? நான் போய் கூட்டிட்டு வர்றேன்”என ஆண்மைத் தனமான எந்த ஒரு வாக்கியத்தையும் மாமாவோ, மாமாவின் சத்புத்திரன் ஸ்ரீராமோ கூறியதில்லை. அந்த வீட்டில் அத்தை மாமா, மாமா மகன், மகள் என அத்தனை பேர் இருந்தும், சுஜினிக்கு எல்லா காலகட்டங்களிலும் அம்மா மாத்திரமே உடன் நின்றிருக்கிறாள். அம்மா லக்ஷ்மியால் செய்ய முடிந்த அனைத்தையும் தன் மகளுக்கு செய்திருக்கிறாள். இருந்தாலும், தகப்பன் என்ற ஸ்தானமும், ஆண் என்ற நிமிர்வுடன் எதிர்னோக்கும் உருவமும் சுஜினியைப் பொருத்தவரையில் இன்னும் கிட்டவில்லை.
இதனால் தானோ என்னவோ, தனக்கு வரப்போகும் கணவனைப் பற்றிய சில கணிப்புகள் கொண்டிருந்தாள். சிகரெட் குடிக்க வேண்டும். ஆனால் தனக்காக குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது மது அருந்தும் பழக்கம் இருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின் தன்னிடம் கேட்டுக் கொண்டு, தன் அனுமதியுடன் அருந்துதல் வேண்டும்.அதுவும் அளவாக. கொஞ்சம் முங்கோபம் வரவேண்டும். சண்டை போட்டு, நிறைய சமாதானப்படுத்த வேண்டும். இப்படி சுஜினி சிறுக சிறுக யோசித்து ஒரு உருவத்தை வடித்து வைத்திருந்தாள்.
சுஜினி விவேக்கிடம் குதர்க்கமாக ஏதும் சொல்லும் முன்னர், நல்ல வேளையாக இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. பேருந்தில் இருந்து இறங்கி, ரோட்டைக் கடந்து கேம்பஸ் கேட்டின் அருகில் வந்ததும், “சீயூ விவேக்..குட் நைட்” என விவேக்கிடம் விடை பெற்றுக் கொண்டாள். சுஜினியின் டார்மிட்டரி அறையும், விவேக் தங்கியிருந்த அறையும் வேறு வேறு திசைகளில் இருந்தது. வேகவேகமாக தன் டார்மிட்டரி இருந்த திசையை நோக்கி இருளில் கரைந்து செல்லும் உருவத்தைப் பார்த்தவண்ணம் விவேக் சிறிது நேரம் நின்றிருந்தான்.
“ம்ம்ம்ம்ம்”என்று நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன், தன் டார்ம் இருந்த திசையில் நடக்கத் துவங்கினான். டார்மிட்டரி ஹவுஸின் வாசல் அருகே வளந்திருந்த வரிசை செடிகளின் அருகில் சதீஷ், ரோனால்டுடன் நின்றிருந்தது கண்டு, நேரே அறைக்குச் செல்லாமல், நண்பர்களின் அருகில் சென்றான்.
“வாடா ரோமியோ…என்ன ஜுலியட் பேசினாளா? லவ்ஸ் எல்லாம் முடிஞ்சதா”என்று விவேக்கின் தலையைக் கண்டதும் சிரிப்புடன் மொழிந்தான் சதீஷ். “சும்மா ஓட்டாதடா, இன்னைக்கு தான் பேசவே ஆரம்பிச்சிருக்கேன்…அதுக்குள்ள என்னடா”என்று சதீஷின் கேள்விக்கு விட்டேத்தையாக பதிலளித்த போதும், சதீஷ் தன்னையும் சுஜினியையும் இணைத்துப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.
“சாப்பிடப் போலாமா? உனக்காகத் தான் வெயிட்டிங்”என்று ரோனால்டும், சதீஷும், அமர்ந்திருந்த பெஞ்சில் இருந்து எழுந்து கொள்ள, அவர்களுடன் சேர்ந்து டார்மிட்டரி உணவகத்தை நோக்கி விவேக் நடக்கத் துவங்கியிருந்தான்.
“சதீஷ் தண்ணி அடிப்பாங்கற விஷயத்தை சுஜினிட்ட சொல்லியிருக்க வேண்டாமோ. அவனைப் பத்தி தப்பா நினைச்சிருப்பாளோ…”என்று விவேக்கிற்கு யோசித்துக் கொண்டே நண்பர்களுடன் உணவருந்தச் சென்றான்.