பாகம் – 15
இடம்: லண்டன் & ஐல் ஆப் வையிட் சுற்றுலா தளம்
நேரம்: காதலில் கசிந்துருகும் நேரம்
அடுத்த நாள், மாலை நேரம்
கடையில் முக்கியமான வேலையாக, அலுலக அறையில் இருந்தேன். எதோ சத்தம் கேட்டு திரும்பினால், பின்பக்கம் அர்ஜூன்.
குப்பென வேர்த்தது எனக்கு.
‘’இங்க எதுக்கு வந்தீங்க’’ என்றேன்.
‘’இப்படித்தான் கடைக்கு வர்ற வாடிக்கையாளரிடம் எதுக்கு வந்தீங்கன்னு கேட்பீங்களா மிஸ். அமுதினி?’’ என்றான்.
‘’மிஸ்? ம்ம்ம்… கடைக்கு வர்ற வாடிக்கையாளர், அலுவலக அறை வரை தேடி வருவதற்கான காரணம் என்ன மிஸ்டர். அர்ஜூன்?’’
‘’அடிங்க, பேர் சொல்லிக் கூப்பிடுவியா?’’ என்றபடி என் தலையில் ஒரு கொட்டு வைத்தான்.
‘’ஸ்ஸா… வலிக்குது’’ என்று நான் தலையைத் தடவ கை ஓங்கும் முன்னே, அவன் கை, அடிபட்ட இடத்தில் தடவித் தந்தது.
‘ஓ… இதுதான் அடிக்கிற கை அணைக்கும் என்பதா!
இருவர் பார்வைகளும் தழுவிக்கொள்ளும் நேரம், மீனாக்கா வரும் அரவம் கேட்டு, சகஜ நிலைக்குத் திரும்பி, விற்பனைபிரிவுக்கு நகர்ந்தோம்.
நண்பனுக்கு உதவுவதற்காக, அர்ஜூன் கைக்குழந்தையை பொறுப்பேற்றதில், மீனாக்காவுக்கு, அவனை ரொம்ப பிடித்துவிட்டது. ‘’இந்த தம்பிக்கு நல்ல மனசும்மா, பொறுப்பான பையன்’’ என்று மனதாரப் பாராட்டுவார்.
பல வருடங்களாக லண்டன் கலாச்சாரத்தை பார்த்து வாழ்ந்ததால் என்னவோ, இதுவரைக்கும் நானும் அர்ஜூனும் பழகுவதை ஒரு நாளும் தப்பான எண்ணத்தில் பார்க்காமல். கடை முதலாளியான மலரக்காவிடமும் போட்டுக் குடுக்காமல், ‘இப்ப இருக்கற புள்ளைங்க, புத்திசாலிங்க. தங்கள் வாழ்க்கையை நல்லாவிதமா அமைச்சுக்கத் தெரியும்’ என்று அடிக்கடி சொல்லும் மீனாக்காவை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
அர்ஜூன் மீதிருக்கும் நல்லெண்ணத்தில் தான், அலுவலக அறைவரை, மீனாக்கா அனுப்பி வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
பட்டு வேட்டி சட்டையும், பட்டுப் புடவையும் வேண்டுமென கடைப் பணியாளர்களிடம் அவன் சொன்னதும் எனக்கு ஆச்சரியமானது. பட்டுப் புடவை, வேட்டி வாங்கி என்ன செய்யப் போகிறான்? பெரிசா ஏதோ பிளான் பண்ணறான்! பார்ப்போம் என்று அமைதியாகக் கவனித்தேன்.
எடுத்துப் போட்ட அனைத்துப் புடவைகளையும் களைத்து வைத்தவன், ‘இதுக்கு என்ன பேரு, இந்தப் புடவை எதுக்கு கட்டுவாங்க’ என்று ஏகப்பட்ட கேள்வி கேட்டதில், சோர்ந்து போன மீனாக்கா,
‘’அமுதினியம்மாவை கேட்டுக்கங்க தம்பி. அவங்கதான் நடை பழகிய காலத்தில் இருந்தே ஜவுளிக்கடையில் இருக்காங்க’’ என்று என்னை மாட்டி விட்டார்.
‘இவன் சும்மாவே சாமியாடுவான். இதுல மீனாக்கா வேற சலங்கை கட்டி விட்டிருக்காங்க. கேட்கவா வேண்டும்??’ என்றது என் மனசாட்சி
‘’எந்த மாதிரியான புடவை, எந்த நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதிரி வேண்டும்?’’ என்றேன்.
‘’வருங்கால பொண்டாட்டிக்கு பரிசு தரனும். உங்களுக்கு எந்த புடவை புடிக்குமோ அதையே எடுத்துதாங்க. அவளுக்கும் அது புடிக்கும்’’ என்றான்.
பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி, ‘’ரொம்ப பழைய டெக்னிக், எனக்கு புடவையே பிடிக்காது, குர்த்தா தான் போடுவேன்’’ என்றேன்.
முகம் வாடிப்போய், ‘’ வெறுப்பேத்தாதே, உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்னு தெரியுதுல்ல, கிளம்பி வா. எங்கேயாவது போகலாம்’’ என்றான்.
‘’பத்து நிமிசம் இருங்க, வந்திடறேன்’’ என்று அவனை காக்க வைத்துவிட்டு, மிச்சமிருந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பும் போது, மீனாக்கா
‘’ காலையில் 5 மணிக்கு போன் பண்ணறேன், ரெடியா இருங்கம்மா’’ என்றார்.
‘’என்ன, எதுக்கு?’’ என்றான் அர்ஜூன்.
‘’அதுவா தம்பி, இந்த புள்ளைங்க வெளியில் கூட்டிப் போகச் சொல்லி நச்சரிக்கிறாங்க, அதான் நாளைக்கு காலையில் வேன் எடுத்திட்டு ஐ லாப் வெயிட் தீவுக்கு போறோம், அமுதினிம்மாவும் எங்க கூட வராங்க.’’ என்றார் மீனாக்கா.
நான் அர்ஜூன் முகத்தைப் பார்த்தேன், தீவிரமா யோசிக்கிற மாதிரி இருந்தது. ரைட்டு, ஏதோ பிளான் பண்ணறான்!
‘’ஐ லாப் வெயிட்டா? ரொம்ப நல்லாயிருக்குமாம், எனக்குக் கூட போகனும்ன்னு ஆசை. ஆனா தனியா போக புடிக்காது’’ என்றான் அர்ஜூன்.
‘’அப்படியா, எங்க கூட வாங்க தம்பி, சீட் இருக்கு. எங்களுக்கும் துணையா இருக்கும், வாங்க தம்பி’’ என்றார் மீனாக்கா.
‘’யக்கோவ், நீங்க கூப்பிடாவிட்டாலும் எதாவது சொல்லி, கூட வர்றதுக்கு அவன் பிளான் பண்ணிட்டான். அங்க 2 தடவை போய்ட்டு வந்து இங்க சீன் போடுறான், நீங்க வேற’’ என்று மீனாக்காவை மனதுக்குள் குட்டினேன்.
‘’சரிங்க்கா, நீங்க சொல்றதால, உங்களுக்கு துணையா வர்றேன்’’ என்றபடி என்னைப் பார்த்து கண் சிமிட்டினான்.
‘அடங்கமாட்டியா’ என்ற ரீதியில் ஒரு பார்வைப் பார்த்தால், ‘நீதான் அடக்கி ஆளேன்’ என்ற ரீதியில் அவன் என்னைப் பார்த்தான்.
ஸ்ஸப்பா…
அடுத்த நாள், காலை 5 மணிக்கெல்லாம் அர்ஜூன் என் வீட்டிற்கு வந்து விட்டான். ஈஸ்டர் விடுமுறையில் ஓரளவு வெயில் அடிக்கும் என்பதால் ¾ பேண்ட் அணிந்து கருப்புநிற தேநிர் சட்டை அணிந்திருந்தான். அய்யோ… ஸ்சோ ஹாட்.
மீனாக்கா மற்றும் அவங்களுக்கு தெரிந்தவங்க வீட்டில் இருந்தவர்களை ஏற்றிக் கொண்டு, வேன் என் வீட்டிற்கு வரும் போது, பிள்ளைகள் பெரியவர்கள் எல்லாம் முன் சீட்டில் அமர்ந்துவிட்டதால், காலியாக இருந்த, பின்பக்க இருக்கைகளில் நாங்கள் அமர்ந்தோம்.
அர்ஜூனோடு ஒரே படுக்கையில் தூங்கியிருந்தாலும், அருகில் நெருங்கி அமர்வது, ஒருமாதிரியாய் இருக்க, முடிந்தளவு இடைவெளிவிட்டு, ஜன்னலோரம் அமர்ந்தேன்.
விடியற்காலை போக்குவரத்து நெரிசல் இல்லாததால் வேன் அதிவேகத்தில் ஓடியது. இதான் வாய்ப்பென என்னருகில் நெருங்கி அமர்ந்தான் அர்ஜூன்.
‘’தள்ளி உட்காருங்க. அதான் இடம் இருக்கில்ல’’ என்றேன்.
‘’நான் என்னடி பண்ணினேன், வண்டி ஓடற வேகம், என்னைத் தள்ளுது’’ என்றான்.
ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று அமைதியானது என் மனசு. ஆனால் அந்த எண்ணம் தப்பென்று புரியவைத்தான் அர்ஜூன்.
நெருங்கி அமர்ந்தவன், என் தோளைச் சுற்றி கைப்போட்டான். முறைத்துப் பார்த்ததும்,
‘’ கைவைக்க வசதியா இடமில்லை, தப்பா?சரிவிடு’’ என்றபடி தோளில் இருந்த கையை எடுத்து, என் இடுப்பைச் சுற்றி வைத்ததும், ஜில்லென ஆனது என் தேகம்.
சத்தியமா இது என் அர்ஜூனல்ல! ஒரே அறையில் இருந்தபோதும் ஏன், என் மடியிலிருந்து லயாக்குட்டியை தூக்கும் போது கூட, தப்பான எண்ணத்தில் தொடாதவன், இன்று நடந்து கொள்ளும் முறையில் ஆச்சரியமானேன்.
‘இவனுக்கு என்னமோ ஆகிடுச்சு’ என்று யோசித்தாலும் முதல் முறையாய் அர்ஜூனுடன் இருக்கும் இந்த நெருக்கம் பிடித்திருந்தது. அவனுக்கென்றிருக்கும் பிரத்யோக வாசம் என்னை தொல்லை செய்ய ஆரம்பித்தது.
விடியற்காலை வெளிச்சமும், அமைதியான சாலையும் அந்த தருணத்தை மிக அழகாகின.
.அன்று முழுக்க நிழல் போல அர்ஜூன் கூடவே திரிந்தேன். ஏற்கனவே அவன், அங்கு சென்றிருந்ததால், தனக்குப் பிடித்த இடங்களை எனக்குக் காட்டினான். முதன் முதலாக இருவரும் அன்றுதான் செல்பி எடுத்துக்கொண்டோம். என்னை விதவிதமாய் புகைப்படம் எடுத்துத் தள்ளினான்.
அன்று ஐல் ஆப் வெயிட்-யில் என்ன பார்த்தேன் என்று கேட்டால், சத்தியமாய் சொல்லத் தெரியாது. ஆனால் ஒன்று தெளிவாய் தெரிந்தது. அர்ஜூன் என்னை மனமார நேசிக்கிறான். அவன் தொடுகையில் அன்பும் அக்கறையும் மட்டுமே இருந்தது.
மதிய உணவின் போது, பிளாஸ்டிக் தட்டு குறைவாக இருப்பதாக, மீனாக்கா சொல்ல, வெட்கமே இல்லாமல், நானும் அமுதினியும் ஒரே தட்டில் சாப்பிடுகிறோம் என்று சொன்னான். அடேய்!
கடற்கரையில் அலைகளோடு ஆட்டம் போட்டது,, விழுந்துவிடக் கூடாதென்ன என்னைத் தாங்கிப் பிடித்தது என ஒருகணமும் என்னைவிட்டுப் பிரியாமல் இருந்தான்.
இப்படி நெருங்கி நின்றால், அவன் மேல் காதலாகி கசிந்துருக மாட்டேனா என்று யோசிக்கும் போது
‘’அய்யோ அம்மு, அல்ரெடி நீ அவன் மேல காதல் மயக்கத்தில்தான் இருக்கிறாய். இல்லாட்டி ஹாஸ்பிட்டலில் அவன் உன் இடுப்பைத் தொடும் போதே, செவுள்ல ஒன்று தந்திருப்பாய். அர்ஜூன் மேல காதல் இருப்பதால்தான் முதல்நாளே வீட்டுக்குள்ள விட்டாய். அவன் .’டி’ என்றபோது ரசித்தாய், ஒரே அறையில் தங்கினாய்’’ என்றது என் மனது.
யெஸ் ஐ லவ் ஹிம். ஐ லவ் அர்ஜூன் அத்தான்.
அன்றே திரும்ப திட்டமிட்டதால் ஐந்து மணியளவில் அங்கிருந்து கிளம்பினோம்.
இப்போது, நானும் அர்ஜூனோடு நெருக்கமாய் சேர்ந்து அமர்ந்தேன். இடது கையால் என்னை தன் தோளோடு சேர்த்து அணைத்தவன் வலது கையை என் கைக்குள் கோர்த்துக் கொண்டான். பயணக்களைப்பில், உரிமையாய் அவன் நெஞ்சில் சாய்ந்து தூங்கினேன்.
போக்குவரத்து நெரிசலில், வேன் என் வீடு வந்து சேர இரவு 10.30 ஆனது. அர்ஜூனும் தூக்க கலக்கத்தில் இருக்கவே, இதற்குமேல் அவன் வீட்டிற்கு அனுப்ப எனக்கு மனமில்லை.
‘’நைட் இங்கியே படுங்க. காலையில் எழுந்து போகலாம்’’ என்றேன்.
வீட்டிற்குள் வந்ததும் அப்படியே சோபாவில் சரிந்து விழுந்தவனுக்கு தலையனை, போர்வை தந்துவிட்டு என் அறைக்குச் செல்லும் போது,
‘’இனி ‘’ என்று அழைத்தான். நான் திரும்பி பார்த்ததும் என்னருகில் வந்து,
‘ குட் நைட்’ என்றவன், சட்டெனக் கட்டிப்பிடித்தான். எலும்பெல்லாம் உடைந்துவிடும் போலிருந்தது அந்த அணைப்பு. இது காமமல்ல. எங்கே அம்மா தன்னைவிட்டுப் போய்விடுவாள் என்ற பயத்தில் குழந்தை இறுக்கி பிடிக்குமே அந்த பிடிப்பு. உன்னை பிரிய விருப்பமில்லை என்ற தவிப்பு.
காதல் வளரும்