Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அதே கண்கள் - வதனி

Advertisement

இரண்டு மனங்களும் அருகருகே இருப்பதால் ஆசையா லவ் பண்ணும் பொழுது மெதுவாக பேசுறோம்
கோபமா சண்டை போடும் பொழுது
கத்திப் பேசுறோம்
காரணம் மனசு தூரமா இருக்கும்
இதெல்லாமே உண்மைதான்
ரொம்ப அழகான நிதர்சனமான வரிகள்
சூப்பர், வதனி டியர்
 
அதே கண்கள்... ❤


கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கேள்வியோடு தலையை உயர்த்திக் கடிகாரத்தைப் பார்த்தான் ரமேஷ். மணி இரவு பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. உள்ளறையில் ரம்யா ஏதையோ புரட்டிக் கொண்டிருந்தாள். இன்னும் தூங்கவில்லை. சன்னல் வழியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டும், இருட்டு சார்ந்த இடங்களுமாய் இருந்தது. தெருவிளக்குகள் இரவின் அடர்த்தியை ஆங்காங்கே அழித்திருந்தன. தெருநாய்களில் சில இரவின் அமைதியைக் தவணை முறையில் கலைத்துக் கொண்டிருந்தன.

டொக்…டொக்…. கதவு மென்மையாய் தட்டப்பட்டது.

ரமேஷ் கதவை நெருங்கி, கதவில் பொருத்தப்பட்டிருந்த கோலி சைஸ் கண்ணாடியில் கண்ணை வைத்து வெளியே பார்த்தான்.

வெளியே ஒரு இளம் பெண். அழகான இளம் பெண் ! அவளுக்குப் பின்னால் யாரேனும் இருக்கிறார்களோ ? கதவைத் திறந்ததும் அடித்துப் போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் பிடுங்கி விட்டு ஓடிவிடுவார்களோ ? இப்போதெல்லாம் திருட்டு தினம் தினம் புதிது புதிதாய் அவதாரம் எடுத்துக் கொண்டே இருக்கிறது. ரமேஷின் மனம் சிந்தனையைக் கிளறியது. வேறு யாரும் தென்படவில்லை.

முதல் வேலையாக வெளியே மின் விளக்கைப் போட்டான். அந்தப் பெண் இப்போது வெளிச்சத்தில் குளித்தாள். இன்னும் அழகாய்த் தெரிந்தாள்.

சங்கிலியைக் கதவிலிருந்து விலக்காமல் கதவை ஒரு முப்பது டிகிரி அளவுக்குத் திறந்து வெளியே மெல்ல முகம் நீட்டினான்.

யெஸ்… யாரைப் பாக்கணும் ?

இது உங்களுதா பாருங்க ?

அந்த இளம் பெண் கையில் வைத்திருந்த அந்த சின்னப் பையை நீட்டினாள். அந்தப் பையைப் பார்த்ததும் சட்டென சங்கிலியை விலக்கி கதவை முழுசாய்த் திறந்தான் ரமேஷ். அதற்குள், ‘யாருங்க அங்கே’ எனும் கேள்வியோடு ரம்யாவும் வந்து சேர்ந்தாள்.

இல்ல… நம்ம பை ஒண்ணை மிஸ் பண்ணியியிருக்கோம்.. அதான் இவங்க…. ஓ..சாரி, பிளீஸ் கம் இன்.

அந்தப் பெண் உள்ளே நுழைந்தாள்.

இது எங்க பை தான்…

ஆமா தெரியும். அதனால தான் உங்க கிட்டே கொண்டு வந்தேன். ஏகப்பட்ட பணம் வெச்சிருக்கீங்க, முக்கியமா உங்க பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், கிரடிட் கார்ட்ன்னு சர்வமும் வெச்சிருக்கீங்க. அதான் கையோடு குடுத்துட்டு போயிடலாமேன்னு வந்தேன்.

ஓ… ரொம்ப ரொம்ப நன்றி. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. எப்படி இதை மிஸ் பண்ணினேன்னே எனக்கு ஞாபகம் இல்லை… இது உங்ககிட்டே எப்படி ?

நீங்க வந்த அதே ஃபிளைட்ல தான் நானும் வந்தேன். நீங்க என்னைக் கவனிச்சிருக்க மாட்டீங்க. ஆனா நான் பார்த்தேன். வெளியே பாகேஜ் கிளெய்ம் ஏரியால நீங்க இந்த பையை இன்னொரு ட்ராலி மேல தவறுதலா வெச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன். மே பி உங்களுக்கு நிறைய செக் இன் இருந்திருக்கலாம்.

ஆமா.. நாலஞ்சு பெட்டி, கைப் பை எல்லாம் வெச்சிருந்தோம்.. ரமேஷ் அசடு வழிந்தான்.

நீங்க விட்டுட்டுப் போறதைப் பாத்தேன். உங்க கிட்டே குடுக்கலாம்ன்னு வேகமா வந்தேன். ஆனா அதுக்குள்ள நீங்க வெளியே வந்துட்டீங்க. செக்யூரிடி செக் கிராஸ் பண்ணி வெளியே வந்தா நீங்க இல்லை. சரி, செக்யூரிடி ஆபீசர் கிட்டே குடுக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா அதுக்கு முன்னாடி உள்ளே என்னதான் இருக்குன்னு பாக்கலாமேன்னு ஒரு கியூரியாசிடி. பேட் ஹேபிட் ஐ நோ. பட், பார்த்தா கணிசமான யூரோ வெச்சிருந்தீங்க. பாஸ்போர்ட், கார்ட் அது இதுன்னு ஏகப்பட்ட விஷயங்கள். ஒருவேளை உங்களுக்கு சரியான நேரத்துல இது கிடைக்கலேன்னா தவிச்சு போயிடுவீங்களேன்னு தான், வீடு தேடி வந்தேன்.

படபடவென பேசிவிட்டு, பையைக் கொடுத்து விட்டு எழும்பினாள் அவள்.

நீங்க.. எங்கே தங்கியிருக்கீங்க ?

இனிமே தான் பாக்கணும். இப்போ தான் வந்திருக்கேன். ஒரு வாரம் சென்னை வாசம் தான். அப்புறம் மறுபடியும் ஜெர்மன் போயிடுவேன். ஒரு புராஜக்ட் வர்க், ஃபீல்ட் வர்க். சிரித்தாள்.

இந்த நட்ட நடு ராத்திரில எங்க போவீங்க ? உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, யூ கேன் ஸ்டே வித் அஸ் டுடே…

ஓ.. நோ.. யாரை வேணுமானாலும் தொந்தரவு பண்ணலாம். ஆனா ஒரு இளம் ஜோடியை தொந்தரவு பண்ணக் கூடாது, நான் வரேன்.

நோ…நோ… பிளீஸ்… நாளைக்கு நானே உங்களை எங்க வேணுமோ டிராப் பண்றேன். நைட் ஈஸ் நாட் சேஃப். அதுவும் வெளியூர் பொண்ணுங்களுக்கு. ரமேஷ் அவசரமாய்ச் சொன்னான்.

ஆமா.. இன்னிக்கு இங்கே தங்குங்களேன். எங்களுக்கு சிரமம் ஏதும் இல்லை, நீங்க பண்ணினதை விட பெரிய உதவியா நாங்க பண்ணப் போறோம். ரம்யாவும் தன் பங்குங்கு அழுத்தம் கொடுத்தாள்.

கடைசியில் வலது பக்கம் இருந்த படுக்கை அறை பரபரவென ஒழுங்கு படுத்தப்பட்டு அவளுக்காகத் தயாரானது. தரையில் சிந்திக் கிடந்த புத்தகங்களை ரமேஷ் அள்ளினான். நடுவில் இருந்த மேஜையை ஓரமாய்த் தள்ளி, அதன் மீது புத்தகங்களை வரிசையாய் வைத்தான். படுக்கைக்கு மேல் கிடந்த பழைய பொருட்களையெல்லாம் ரம்யா அள்ளி ஓரமாய் ஒரு இடத்தில் வைத்தாள். அறை சுத்தமாய்த் தான் இருந்தது. ஒரு புது படுக்கை விரிப்பை விரித்து, அதன் மீது தலையணை வைத்து, ஏசியை ஆன் பண்ணியதும் அறை பளிச் என்றானது !

குட் நைட். நாளைக்கு காலைல உங்களை நானே டிராப் பண்றேன். டோன்ட் வர்ரி, ஃபீல் அட் ஹோம்… சொல்லிவிட்டு ஸ்நேகமாய்ப் புன்னகைத்தான் ரமேஷ்.

படுக்கையறையில் போய் கதவை மூடியபோது ரம்யா சொன்னாள்.

ரமேஷ்… எனக்கென்னவோ இந்தப் பொண்ணை எங்கேயோ பாத்த மாதிரியே இருக்கு.

ஏர்போர்ட்ல பாத்திருப்பே.

நோ.. நோ… வேற எங்கயோ பார்த்தேன். இந்த தீர்க்கமான கண்களை என்னால மறக்க முடியல. சம்திங் ஈஸ் தெயர்.. ரம்யா தலையைச் சொறிந்தாள்.

சரி, நீ ஆர அமர யோசிச்சுட்டு காலைல நான் எழும்பினதும் சொல்லு, எனக்குத் தூக்கம் வருது. சொல்லிக் கொண்டே பொத் என மெத்தையில் சரிந்தான் ரமேஷ். மெத்தை மெல்லிய தாள லயத்தோடு ஆடி அடங்கியது !

அந்த இரவு மெல்ல மெல்ல எல்லாருக்கும் தூக்கத்தை இமைகளில் இறக்கி வைத்தது.

காலையில் அலாரம் அடித்த போது மணி எட்டு !

மெதுவாகக் கண்களைத் திறந்த ரம்யாவின் மனதில் இரண்டு செகண்ட்களுக்குப் பிறகு தான் சட்டென நினைவுக்கு வந்தாள் அந்தப் பெண். !

சட்டென போர்வை விலக்கி பக்கத்துப் படுக்கையறைக்குப் போனாள். அறைக் கதவு திறந்திருந்தது. அந்தப் பெண்ணைக் காணோம்,

ஒருவேளை எதையாவது சுருட்டிக் கொண்டு போயிருப்பாளோ ? அந்த எண்ணமே சட்டென அவளுக்குள் ஒருவித கிலியைப் பரப்பியது. சே,… அப்படிப்பட்டவ ஏன் வீடு தேடி வந்து பையைத் தரணும். ஒருவேளைச் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற டெக்னிக்கோ ?

பதட்டத்துடன் வெளியே வந்தாள் ரம்யா. அறையிலிருந்து வெளியே வந்த ரமேஷும் அவளுடைய பதட்டத்தைக் கொஞ்சம் கண்களில் வாங்கினான்.

ஹேய்.. குட்மார்ணிங்…. வெளியிலிருந்து குரல் கேட்டது. அவள் தான் ! அவளே தான். ரொம்பவே பிரஷ் ஆக இருந்தாள்.

கு…குட் மார்ணிங்… சீக்கிரம் எழும்பிட்டீங்க போல !

ஆமாமா.. அஞ்சுமணி ஆச்சுன்னா போதும் என்னோட பயாலஜிகல் கிளாக் என்னை படுக்கையில இருந்து உருட்டித் தள்ளிடும். அப்புறம் என்னால தூங்கவே முடியாது. விக்கி கிட்டேயிருந்து கத்துகிட்ட கெட்டபழக்கத்துல இது ஒண்ணு.. சிரித்தாள்.

விக்கி ?

ஓ.. யா.. ஹீ ஈஸ் மை ஹஸ்பன்ட்.. விக்னேஷ். சுறுசுறுப்புக்கு எறும்பு கூட அவன் கிட்டே டிரெயிங் எடுக்கணும். அஞ்சு மணிக்கு எழும்புவான். ஷூவைக் கால்ல கட்டிகிட்டு ஹெட்போனைக் காதுல மாட்டிக்கிட்டு ஓடுவான். காதுல சுப்ரபாதம் ஓடும், கால் தரையில ஓடும். நான் ஓடமாட்டேன்பா… ‘வினோ.. டெய்லி ஓடணும்மா.. ஒடினா தான் லைஃப் ஓடும்’ ன்னு சொல்லுவான்.

வினோ ?

ஓ.. சாரி, தட்ஸ் மி. வினோதினி.. சுருக்கமா வினோ.

நல்ல பெயர் பொருத்தம், விக்கி வினோ ! லவ் மேரேஜா ?

யா… லவ் அன்ட்… மேரேஜ் அப்புறம் மேரேஜ் அன்ட் லவ். நீங்க கூட ரமேஷ் ரம்யா… ஏதோ கதைக்காக எழுதற பெயர் மாதிரி இருக்கு ! லவ்வா ?

யா… இட்ஸ்… யா.. லவ் மேரேஜ் தான். பேசிட்டே இருக்கேன்.. உங்களுக்கு ஒரு காபி கூட குடுக்கல, பிளீஸ் வெயிட்… ஒரு அஞ்சு நிமிஷம் குடுங்க. சொல்லிக் கொண்டே சமையலறை நோக்கிப் போனாள் ரம்யா.

ஹேய்… என்னது இது… யாரு காபி போட்டது ? – ரம்யாவின் குரல் சமையலறையில் இருந்து ஒலித்தது.

சாரி,, அதுவும் நான் தான். கொஞ்சம் எக்ஸ்ட்ரா உரிமை எடுத்துகிட்டேன் போல. நானும் விக்கியும் டெய்லி போட்டி வெச்சுப்போம். யாரு முதல்ல காஃபி போடறதுன்னு. அவன் ரொம்ப ஸ்மார்ட்.. அடிக்கடி என்னைத் தோக்கடிச்சுடுவான். நான் அசந்து தூங்கும்போ காபி குடுத்து குட்மார்ணிங் சொல்லுவான். வாட் எ லவ்லி வே டு ஸ்டார்ட் எ டே… ! இன்னிக்கு நான் எழும்பினேன், என் ரொமான்டிக் ராஸ்கல் ஈஸ் நாட் ஹோம். அதான் உங்களைத் தோக்கடிப்போம்ன்னு காஃபி, பிரட் சான்ட்விச் பண்ணினேன். தப்புன்னா… மன்னிச்சுக்கோங்க.

சே..சே.. அப்படியில்லை.. உங்களுக்கு நாங்க தரணும், நீங்க என்னன்னா.. எங்களுக்கு காபி போட்டு தரீங்க.

அட.. இதுல என்ன இருக்கு. நீங்க தான் ஃபீல் அட் ஹோம் ன்னு சொன்னீங்க. அப்படின்னா, இப்படி தான். சிரித்தாள்.

உங்க லைஃப் ரொம்ப ஜாலியான லைஃப் ஆ இருக்கும் போல ! ரம்யா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

ஓ யெஸ்.. அவனை ஒரு நாள் பிரியறதே கஷ்டமான விஷயம். அவனுக்காக உயிரைக் கூட குடுப்பேன். அவ்ளோ லவ்லி அவன். இந்த ஒரு வாரத்தோட வேலையை முடிச்சுட்டு எப்படா போவோம்ன்னு இருக்கு. ஐ ஆம் ஆல்ரெடி மிஸ்ஸிங் ஹிம்.

அவரு என்ன பண்றாரு.

லவ் தான்…

இல்ல என்ன வேலைன்னு.

ஸீ.. என்னை பொறுத்தவரை அவன் என்ன வேலை பண்றாங்கறது எனக்கு முக்கியமில்லாத விஷயம். அவன் லவ் பண்ணணும். பண்ணிட்டே இருக்கணும். அதான் எனக்கு முக்கியம். நான் ரொம்ப ஓவரா பேசறேனோ ?

இல்ல, சுவாரஸ்யமா பேசறீங்க !

இந்த ஒரு வார்த்தையே போதும், நான் கிளம்பறேன். உங்களை ஒரு நாள் டிஸ்டர்ப் பண்ணினது போதும்.


எங்கே போறீங்க ?

ஹோட்டல்.

ஒண்ணு சொன்னா கோச்சுக்கமாட்டீங்களே ? ரம்யா கேட்டாள்

சொல்லுங்க

ஒரு வாரம் தானே ? எங்க கூட தங்கிக்கலாமே ?

சே..சே.. ஒரு நாள் தங்கினதே அதிகம். இளம் தம்பதியர் வாழ்க்கைல ஒரு கரடி சுத்திட்டு இருக்கக் கூடாது.

நோ..நோ.. பிளீஸ்… எங்களுக்கு ஒரு தொந்தரவும் இல்லை. ரொம்ப லோன்லியா இருக்கு, நீங்க ஒரு வாரம் தங்கிக்கோங்க. எங்களுக்கும் ஒரு துணையா இருக்கும்.

ரம்யாவும், ரமேஷும் மாறி மாறி வற்புறுத்தியபின் வினோதினியால் மறுக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டாள். சிரித்துக் கொண்டே ரம்யாவை வினோ பார்த்தாள். அந்த பார்வையைச் சந்தித்தபோது ரம்யா மனசுக்குள் மீண்டும் சொல்லிக் கொண்டாள் !

‘இந்த கண்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன்’ எங்கே.. எங்கே ?

கேள்விகளுடன், ஆளாளுக்கு அவரவர் வேலை பார்க்கக் கிளம்பிவிட்டார்கள் !

மாலையில் வினோதினி வீடு திரும்பிய போது ரம்யாவும், ரமேஷும் தீவிரமான வாக்குவாதத்தில் இருந்தார்கள்.

ஹலோ….. எனிபடி ஹோம் ! குரல் கொடுத்தாள் வினோ.

சட்டென உள்ளறை அமைதிக்குள் தாவ, ரம்யா வெளியே வந்தாள், கண்கள் கலங்கியிருந்தன.

ஏய்.. என்னாச்சு ? எனிதிங் ராங் ? கேட்டுக்கொண்டே வீட்டில் நுழைந்தாள் வினோ.

இல்ல.. சின்ன ஒரு சண்டை.

ம்ம்.. சின்னச் சின்ன சண்டைகள் வாழ்க்கைய ரொம்ப அழகாக்கும். ஒரு தோட்டத்துல மலர்கிற சின்னச் சின்ன புற்களைப் போல. அதே நேரம் சின்னச் சின்னச் சண்டைகள் நம்ம வாழ்க்கையையே நாசமாக்கவும் செய்யும்… படகில விழற ஓட்டை மாதிரி. முதல்ல அடைக்கிறது ஈசி, அப்புறம் தண்ணீர் நிறைஞ்சுடும். ஓட்டையைக் கண்டு பிடிக்கிறதே பெரும்பாடா இருக்கும். தண்ணீரை இறைக்கிறதே தலைவலியாகும். தண்ணீரை இறைச்சு ஓட்டையைக் கண்டுபிடிச்சு அடைக்கிறதுக்குள்ள நாம முழுசா மூழ்கிப் போகவும் செய்வோம்.

ம்ம்… தலையாட்டினாள் ரம்யா.

நானும் விக்கியும் ஒரு உடன்படிக்கை போட்டுட்டோம். சண்டைல யாரு முதல்ல மன்னிப்புக் கேக்கறதோ அவங்க தான் வின்னர். அவன் தான் அடிக்கடி ஜெயிப்பான். அவன் கூட போட்டி போட்டு நானும் ஜெயிப்பேன். நீங்களும் சண்டை போடுங்க. குட்டிக் குட்டியா. ஆனா ஒரே ஒரு அக்ரீமென்ட். நைட் தூங்கப் போறதுக்குள்ள சமாதானமாயிடணும். சூரியன் மறையும்போ உங்க கோபமும் போகணும். மறு நாள் புதுசா விடியணும். அதான் முக்கியம் !

நீங்க நல்லா பேசறீங்க, சுவாமிஜி மாதிரி – ரமேஷ் சிரித்தான்.

நான் அப்படி தான். தோணறதை பேசிட்டே இருக்கிற லொடக்கு வாய். எதையும் மறச்சு வைக்க மாட்டேன். அன்பு இருந்தா அதை அப்படியே காட்டுவேன். வெறுப்பு இருந்தா அதையும் காட்டுவேன். ஆனா எல்லாத்த விடயும் விக்கி கூட அன்பா இருக்கிறது தான் முக்கியம்ன்னு எப்பவுமே நினைச்சுப்பேன். என்னதான் கோபம் இருந்தாலும் விட்டிடுவேன். அவன் செய்த நல்லது மட்டுமே நெனச்சுப்பேன். எல்லாருக்குமே நினைச்சுப் பாக்க நிச்சயம் நல்ல விஷயம் நிறைய இருக்கும் இல்லையா ?

ம்ம்….

நியூட்டனின் மூணாவது விதி மாதிரி, நல்லதுக்கு சமமா கெட்டதும் இருக்கும். ஏன் கெட்டதை எடுக்கிறீங்க ? வய் நாட் குட் திங்க்ஸ் ! ? நல்ல விஷயங்களை மட்டுமே நாம பாக்கப் பழகினா, நம்மைச் சுற்றி நல்லது நிறைஞ்சுட்டே இருக்கும். லைட் போட்டதும் இருட்டு போயிடுதுல்ல ! கட்டிலுக்குக் கீழே இன்னும் இருட்டு இருக்கே ன்னு நினைக்காம, கட்டிலுக்கு மேலே வெளிச்சம் இருக்கேன்னு நினைக்கலாம்ல !

வினோவின் மனம் திறந்த உரையாடல் அவர்களுக்குள்ளே ஏதோ ஒரு சின்ன சிந்தனையைத் தூண்டி விட்டிருக்க வேண்டும். அதன் பின் அடுத்த நாள் சண்டையின் குரல் ஏதும் இல்லை. வெளியே போலாமா என்று அவர்கள் ஒன்றாக அழைத்த போது வினோவுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

கடற்கரை மணலில் கடலை கொறித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள் மூவரும். அவர்களிடையே அன்னியோன்யம் அதிகரித்திருந்தது.

நான் ஒரு குட்டிக் கதை படிச்சேன். வழக்கம் போல வினோதான் ஆரம்பித்தாள்.

சொல்லுங்க.

இரண்டு பேர் ஏன் சண்டை போடும்போ கத்திக் கத்திப் பேசறாங்க தெரியுமா ?

எரிச்சல்னால,

கோபத்தினால

ம்ம்… அதே நேரம் லவ் பண்றவங்களைக் கவனிச்சிருக்கீங்களா ? போனுக்கே கேக்காத மாதிரி பேசுவாங்க. மணிக்கணக்கா காது கடிப்பாங்க. மூச்சுக்கே கேக்காத மாதிரி முணு முணுப்பாங்க. காரணம் என்ன தெரியுமா ? சிம்பிள். லவ் பண்ணும்போ இரண்டு மனசும் ரொம்ப நெருக்கமா இருக்கும். அவங்க மெல்லப் பேசினாலே கேக்கும். அவங்க மௌனமா இருந்தா கூட கேக்கும். அதே நேரம் வெறுப்பு வந்துச்சுன்னா இரண்டு மனசும் விலகிப் போகும். அதனாலதான் கத்திக் கத்திப் பேச வேண்டியிருக்கு. சண்டைக்காரங்க இரண்டு பேர் பக்கத்துல இருந்தா கூட கத்திப் பேசினா தான் கேக்கும். காரணம் உடல் பக்கத்துல இருக்கு, பட் மனசு ரொம்ப ரொம்ப தூரமா இருக்கு !

வாவ்… லவ்லி !

நான் சண்டை போடும்போ நெனச்சுப்பேன். ‘அடேய் வினோ.. உன் மனசு தூரமா போவுதுடி.. கொஞ்சம் கிட்ட வா’ ன்னு. சிரித்தாள் வினோ.

உண்மை தான் வினோ. லைஃப்ல உன்னதமான விஷயம் அன்பு தான். அன்பு செய்யப் படுகிறோம் என்கிற ஒரு சின்ன பீலிங் இருக்கே. அது தான் வாழ்க்கையை ரொம்பவே அழகாக்குது. அந்த அன்புக்காகத் தானே ஒவ்வொருத்தரும் ஏங்கறோம். பணமா, வசதியா, செல்வமா ? எது நமக்கு நிம்மதி தரும். கையைப் புடிச்சிட்டு.. டேய்.. நான் உனக்காக இருக்கேன்டா.. ங்கற ஒரு அன்பான தொடுதல் தானே – ரம்யா சொல்லும் போதே கண்கள் கலங்கின.

ரமேஷும் தலையாட்டினான்.

உண்மை தான். குடும்பத்துல நடக்கிற சண்டைகளுக்கெல்லாம் காரணம், அன்பு வேண்டாங்கற சண்டையல்ல. அன்பு வேணும்ங்கற சண்டை. எனக்கு அன்பு போதலைங்கற சண்டை. என் கூட அன்பு செலுத்த இன்னும் நிறைய நேரம் வேணும்ங்கற சண்டை. அதை நிறைய பேரு புரிஞ்சுக்கறதில்லை. அந்த உண்மையான அன்பைப் புரியாம இருக்கும்போ நாம வெறுப்போட கூட்டணி வைக்கிறோம். வெறுப்புங்கறது கேன்சர் மாதிரி, அது கொஞ்சம் கொஞ்சமா நம்மை அரிச்சே கொன்னுடும்.

நீங்க இப்ப சொன்னீங்களே, அது நூற்றுக்கு நூறு உண்மை வினோ ! “எனக்கு அன்பு போதலை.. இன்னும் வேணும்” ங்கறது தான் குடும்ப மனஸ்தாபங்களோட அடிப்படை. அன்பு நல்ல விஷயம் தானே. அதைச் சொல்ல, அதைச் செய்ய, அதை வெளிக்காட்ட ஏன் தயங்கணும். வெரி நைஸ். இந்த சின்ன வயசிலயே வாழ்க்கையை ரொம்ப நல்லா புரிஞ்சு வெச்சிருக்கீங்க. ரியலி நைஸ்.

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை ரம்யா. ஒரு குழந்தையைப் பாக்கும்போ ஆத்மார்த்தமா அள்ளிக் கொஞ்சறோம். அந்த ஆத்மார்த்த அன்பு ஒவ்வொரு செயலிலயும் இருக்கணும்ன்னு நினைக்கிறவ நான். அட்லாஸ்ட்.. லைஃப் ஈஸ் டு லவ் அன்ட் டு பி லவ்ட்… அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும் தான் இல்லையா ? !

அவர்களுடைய உரையாடல் எவ்வளவு நேரம் போனதென்றே தெரியவில்லை. கடிகாரத்தை பார்க்க மறந்தார்கள். ஆனால் சூரியன் எதையும் மறக்கவில்லை. வழக்கம் போல தூங்கப் போய்விட்டான். இனிமே வீட்டுக்குப் போவோம் என்று ஆடைகளில் இருந்த மண்ணைத் தட்டிக் கொண்டே எழுந்தார்கள் மூவரும்.

சில விஷயங்களை இப்படி மணலைத் தட்டற மாதிரி சிம்பிளா தட்டிட்டுப் போனா எவ்ளோ நல்லா இருக்கும் !

அது நடக்கிற விஷயமா ?

ஏன் முடியாது. அதுக்கெல்லாம் மனசு தான் காரணம். அன்புக்கு முன்னாடி ஈகோவைத் தூக்கி எறிஞ்சீங்கன்னா, தேவையில்லாத மணலைத் தூக்கிச் சுமக்க வேண்டியதில்லை.

மறு நாள் !

காலையில் எழும்பியபோது வினோ தயாராய் இருந்தாள்.

தாங்க்யூ சோ மச். ஒரு வாரம் என்னைச் சகிச்சுக்கிட்டீங்க. ஐ ஆம் லீவிங்.

சகிச்சு கிட்டதா, ரொம்ப ரசிச்சுகிட்டோம். நிறைய கத்துகிட்டோம். ரமேஷ் சிரித்தான்.

இல்ல இல்ல, இது எனக்கு தான் ஒரு அற்புதமான அனுபவம். நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். சொல்லிக் கொண்டே வினோ ரம்யாவின் கண்களைப் பார்த்தாள்.

அதே கண்கள் ! எங்கேயோ பாத்திரிக்கேன்… இன்னிக்கு கேட்டுடுவோம். ரம்யாவின் மனசு தவித்தது.

வினோ, ஒண்ணு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே !

கேளுங்க.

நாம இதுக்கு முன்னாடி சந்திச்சிருக்கோமா ? ஃபார் சம் ரீசன் உங்க கண்ணைப் பாக்கும்போதெல்லாம் எனக்கு அந்த ஃபீலிங் வருது.

வினோ சிரித்தாள். எஸ்.. ஒரு தடவை சந்திச்சிருக்கோம். பார்த்திருக்கோம். பட் பேசினதில்லை.

வாட்…. ? எங்கே.. எப்போ …. ரம்யாவும், ரமேஷும் ஆர்வமானார்கள்.

ம்ஹூம்.. இப்போ சொல்ல மாட்டேன். நெக்ஸ்ட் டைம் என் கண்ணைப் பாருங்க, அப்போ சொல்றேன்.

சொல்லிக் கொண்டே கதவைத் தாண்டி வெளியேறினாள் வினோ,

வினோ வெயிட், ஐ வில் டிராப் யூ… என ரமேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வீட்டைத் தாண்டி, சாலையில் இறங்கி நடக்கத் துவங்கினாள்.

ரமேஷ் ரம்யாவைப் பார்த்தான். அவனுடைய பார்வையில் வார்த்தைகள் மிதந்தன. எதையோ சொல்ல வேண்டும் போல அவனுடைய இமைகள் தயங்கின.

சொல்லுங்க.

ஒண்ணு சொல்றேன்… நீ, யோசிச்சு சொல்லு.

ம்ம்.. சொல்லுங்க

நாம, டைவர்ஸ் பண்ணித் தான் ஆகணுமா ? யோசிச்சு பாத்தா நமக்குள்ள பெரிய பிரச்சினை ஏதும் இல்லை, நாம தான் மாறி மாறி….

ரமேஷ் பேசிக்கொண்டிருக்கும் போதே ரம்யா தாவி வந்து ரமேஷை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவளிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. வெறுமனே தேம்பல் மட்டுமே வந்து கொண்டிருந்தது.

ஐ ஆம் சாரி…

நோ..நோ… ஐ ஆம் சாரி..

அந்த மௌனத்தின் நிமிடங்கள் மெல்ல மெல்ல இயல்பாகிக் கொண்டிருந்த போது பேப்பர் காரன் வீசிய பேப்பர் அவர்களுடைய கதவைத் தாண்டி வந்து விழுந்தது. ஒரு குட்டி அரைவட்டம் அடித்து அமைதியானது.

அந்த பேப்பரின் முதல் பக்கத்தைப் பார்த்த ரம்யாவும் ரமேஷும் அதிர்ந்து போனார்கள்.

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. எழுத்துகளுக்குக் கீழே பளீரென சிரித்துக் கொண்டிருந்தாள் வினோதினி !

வாட்… முதலாம் ஆண்டு ? இது அந்தப் பெண் தானே ! பெயர் கூட வினோதினி … நடுக்கத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

ரம்யா மீண்டும் அந்தப் புகைபடத்தைப் பார்த்தாள். அந்தக் கண்களைப் பார்த்தாள்.

ரமேஷ்… ஐ.. ஐ.. ரிமம்பர் நௌ. இப்போ ஞாபகம் வருது. இவங்களை எங்கே பார்த்தேன்னு…

ரமேஷ் அவளுடைய கண்களை ஏறிட்டான். சொல்லு என்பது போல நெற்றி சுருக்கினான்.

ஜெர்மனில பெர்லின்ல காபி ஷாப்ல பாத்தேன். நாம ரெண்டு பேரும் கொஞ்சம் சண்டை போட்டுகிட்டு இருந்தோம். டைவர்ஸ் பண்ணிக்கலாம்ன்னு முதல்ல அன்னிக்கு தான் பேசினோம். நான் அழுதிட்டிருந்தேன். தூரத்துல இன்னொரு டேபிள்ல இவங்க இருந்தாங்க. ஒரு ஆண் கூட. மே பி ஹி ஈஸ் விக்கி. என்னையே உத்துப் பாத்திட்டிருந்த அந்த கண்கள். அதான் எனக்கு அந்தக் கண் ரொம்ப நல்ல பரிச்சயமா தெரிஞ்சுது. கண்டிப்பா, அந்தக் கண் தான். இதெப்படி இதுவரை எனக்கு ஞாபகம் வராம போச்சு !!! அப்படின்னா.. நாம ஒரு ஆவி கூடயா ஒரு வாரம்… சொல்லும் போதே ரம்யாவுக்கு நா குழறியது. விரல்கள் நடுங்கின.

வினோதினி தங்கியிருந்த அறையை நோக்கினான் ரமேஷ். தடுமாறும் கால்களுடன் சென்று கதவைத் திறந்தான். அதிர்ந்தான். ஒரு வாரத்துக்கு முன்னால் அந்த அறை எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. புத்தகங்கள் தரையில் சிந்தியிருந்தன. அறையின் நடுவே ஒரு டேபிள் இருக்க, ஓரமாய்க் கிடந்த படுக்கையில் பழைய பொருட்கள் குவிந்து கிடந்தன.

ரமேஷ் ஒரு வினாடி யோசித்தான். படபடப்புடன். பத்திரிகை அலுவலகத்துக்குப் போன் பண்ணினான். ஒரு நான்கைந்து போன்கால்களுக்குப் பின் அவனுக்கு விக்கியின் போன் நம்பர் கிடைத்தது. டயல் பண்ணினான்.

ஹலோ…

கேன் ஐ ஸ்பீக் டு விக்கி.

எஸ்.. விக்கி தான் பேசறேன்.

சார், பேப்பர்ல வினோதினியோட முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பார்த்தோம்…

ம்ம்.யா.. கூப்பிட்டதுக்கு நன்றி. நீங்க…

எப்படி நடந்துது ?

ஜெர்மனில வெச்சு ஒரு ஆக்சிடன்ட். ஸ்நோ டைம் அது. ஒரு கார் ஸ்லிப் ஆகி வேகமா வந்துது. நான் கவனிக்கல. காருக்கு அடில விழவேண்டியது நான். வினோ என்னை ஓரமா இழுத்தாங்க, பட்… அவங்க ஸ்லிப் ஆயிட்டாங்க. என்னைக் காப்பாத்திட்டு அவ இறந்துட்டா… இதுக்கு பதிலா… விக்கியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

சாரி… அப்புறம் நீங்க இந்தியா வந்துட்டீங்களா ?

ஆமா.. வினோ இல்லாத பெர்லின் ரொம்ப கொடுமையா இருந்துச்சு. சென்னைக்கே வந்துட்டேன்.

சென்னைலயா !

ஆமா.. வடபழனி. சரி, வினோ வை உங்களுக்கு எப்படித் தெரியும்.

ஜெர்மனில தான் தெரியும். நிறைய சொல்லியிருக்காங்க. நீங்க விடியற்காலத்திலயே எழுந்து காபி போடறது, சுப்ரபாதம் கேட்டுட்டே ஜாகிங் போறது, சண்டை போட்டா மன்னிப்பு கேக்கறது இப்படி ஏகப்பட்ட விஷயம் சொல்லியிருக்காங்க. இன்னிக்கு தான் அவங்க இல்லேங்கற விஷயம் தெரிஞ்சுது. ரியலி சாரி… ரமேஷ்… மெதுவாகச் சொன்னான்.

மறு முனையில் விக்கி அமைதியாய் இருந்தான். தொண்டையை மெல்ல இருமி, சகஜ குரலில் பேச முயற்சித்தான். ‘ஒரு நாள் வீட்டுக்கு வாங்களேன்’

யா.. கண்டிப்பா… நிறைய பேசணும். குறிப்பா, அவங்க எங்களுக்கு செய்த பெரிய உதவியைப் பற்றி. அவங்க எங்க கூட தங்கின ஒரு வார வாழ்க்கையைப் பற்றி.

வினோ உங்க கூட ஒரு வாரம் தங்கினாங்களா ? எப்போ ? எங்கே..

எல்லாம் நேர்ல வந்து சொல்றேன்.

ம்…

ரமேஷ் போனை வைத்து விட்டு ரம்யாவைப் பார்த்தான். அவர்களுக்குள் பயமா, திகிலா, மகிழ்ச்சியா, பிரம்மையா என்று புரியாத ஒரு உணர்வு மேலோங்கியிருந்தது.

இப்படியெல்லாம் நடந்துதுன்னு சொன்னா நம்மை பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க. லாஜிக் இல்லாம கதை உடறான்னு நெனப்பாங்க. ரமேஷ் உதடு கடித்துக் கொண்டே சொன்னான். ரம்யா தலையாட்டினாள். அவளுடைய கைகள் ரமேஷின் கரங்களை இறுக்கமாய்ப் பற்றியிருந்தன. முன்பெப்போதும் இல்லாத அன்பின் இறுக்கம் ...❤ ❤

முற்றும் ?View attachment 201
wow, very nice thoughts and awesome way of narration.
 
Top