அவருக்கு விக்ரமின் மீது மிகுந்த மரியாதை. அதோடு விக்ரமும் தொழிலில் அவ்வளவு நேர்த்தியாக இருப்பான். அதைப் பார்த்து தான் ஹரிணியை அவனுக்குக் கொடுத்தார். அதனால் அவன் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைத்தார்.
ஹரிணி உறங்க தயார் ஆகிக்கொண்டு இருந்த போது விக்ரம் உள்ளே நுழைந்தான். ஹரிணி அவனை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள். எப்பவும் அவளுடன் ஊருக்கு வந்தால்... விட்டுவிட்டு அன்றே கிளம்பிவிடுவான். இந்த முறை தான் கிளம்பவில்லை..... ஒருவேளை நாளை காலையில் கிளம்புவான் என்று நினைத்தாள்.
விக்ரம் இரவு உடை மாற்றிவிட்டு குளியல் அறைக்குள் சென்றுவிட்டு வந்த போது... அவன் கைப்பேசி அழைத்தது. அவன் அப்பா தான் அழைத்தார்.
போச்சு... ஏன் இன்னைக்குக் கிளம்பலைன்னு விக்ரமை திட்ட போறார். ஏற்கனவே அவர்கள் திடிரென்று கிளம்பிய போதே முனங்கிக்கொண்டு தான் சம்மதித்தார்.
அவருக்கு எப்போது பணம் சம்பாதிப்பது ஒன்றே தான் குறிக்கோள்... அதைச் செலவு செய்யவும் மனது வராது. தானும் அனுபவிக்க மாட்டார், மற்றவர்களையும் அனுபவிக்க விட மாட்டார். இப்ப என்ன சொல்ல போறாரோ? ஹரிணி இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே... விக்ரம் அழைப்பை ஏற்றான்.
“என்ன டா கிளம்பிட்டியா...”
“இல்லைப்பா...”
“சரி நாளைக்குக் காலையில வெள்ளனவே கிளம்பி கடை திறக்க வந்திடு சரியா...”
“வர்ற ஞாயிற்றுக்கிழமை ஹரிக்குக் கல்யாணம் வச்சிருக்காங்க. கோவில்ல தான் பண்றாங்க. வீட்டு ஆளுங்க மட்டும் தான்.”
“நான் இல்லைன்னா நல்லா இருக்காது. நடுவுல ரெண்டு நாள் தான் வந்திட்டு போகவும் முடியாது. அதனால நான் இங்கயே இருந்து கல்யாணம் முடிஞ்சதும் ஹரிணியைக் கூடிட்டே வரேன்.”
விக்ரம் சொன்னதைக் கேட்ட ஹரிணிக்கு ஆச்சர்யமாக இருந்தது என்றால்... அந்தப் பக்கம் பேசிக்கொண்டு இருந்த அவன் தந்தைக்குக் கோபத்தைத் தந்தது.
“உன் மச்சினனுக்கு முதல் கல்யாணமா என்ன? அவங்க வீட்ல பார்த்துக்க மாட்டாங்களா... நீ இருந்து என்ன செய்யப் போற?”
“இல்லப்பா... நான் இருக்கணும்.” இந்த முறை விக்ரம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட... அவன் தந்தை அந்தப் பக்கம் திட்டிக்கொண்டே போன்னை வைத்தார்.
இப்படியெல்லாம் பேச்சு கேட்க வேண்டியது வரும் என்று தான் விக்ரம் தனிப்பட்ட முறையில் ஹரிணியோடு எங்கும் கிளம்பமாட்டன். அவன் தந்தை அடிமட்டத்தில் இருந்து முன்னேறியவர். அதனால் அவருக்கு வீடு கடை என்று மட்டும் தான் இருக்க வேண்டும்.
விக்ரம் தன் தந்தையிடம் மறுத்துப் பேசிவிட்டாலும் அவன் முகம் இறுகியே இருந்தது. ஹரிணி அவனைப் பயத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள். அதைக் கவனித்த விக்ரம் இயல்புக்குத் திரும்பினான்.
“ஹே... என்ன என்னைச் சைட் அடிகிறியா?”
“ஆமாம் இவரைச் சைட் அடிச்சிட்டாலும்.” என நொந்து கொண்ட ஹரிணி படுக்கத் தயாராக.... அவளை இழுத்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்த விக்ரம் “குழந்தைங்க எங்க?” என்றான் ஆவலாக.
“அத்வி ஹரியோட இருக்கா... சின்னவன் அம்மாவோட இருக்கான்.” என்றதும், விக்ரம் நிம்மதியாகத் தன் மனைவியைக் கட்டிக்கொண்டான்.
அப்போது ஹரிணியின் செல் அழைத்தது. அவளின் மாமியார் தான் அழைத்தார். அவர் என்ன சொல்வார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
மாமா கோபமா இருக்கார். ஏன் இப்படிப் பண்றீங்க? இங்க எவ்வளவு வேலை கிடக்கு. இப்படி எதாவது பேசி, அவர்கள் முடிவை மாற்றிக்கொள்ள வைத்து விடுவார். ஹரிணி செல்லை எடுக்கும் முன் விக்ரம் எடுத்தான்.
“என்ன மா?”
“ஹரிணி இல்லை....”
“அவ தூங்கிட்டா...”
“அதுக்குள்ளவா.....” அவர் சந்தேகமாக இழுக்க...
“ஆமாம், காலையில சீக்கிரமே கிளம்பி வந்தோம்ல... அதனால. ஆமாம் நீங்க எதுக்கு இந்நேரத்தில போன் பண்ணீங்க?”
“இல்லை... உங்க அப்பா இங்க சத்தம் போடுறார். கல்யாணம் என்னைக்குன்னு தெரிஞ்சிட்டு அன்னைக்கு மட்டும் போனா பத்தாதா... ஏன் இப்படி முன்னாடியே போய் உட்கார்ந்திருக்கான்னு திட்றார்.”
“ரெண்டான் கல்யாணம் தான... நீ இருக்கனுமா காலையில வந்திடேன்.”
“முதல் கல்யாணமோ ரெண்டாவது கல்யாணமோ... நான் இந்த வீட்டு மாப்பிள்ளை. நான் இங்க இருக்கணும்.”
“இப்ப தான் கடையில சுத்தி எல்லாப் பக்கமும் கேமரா வச்சாச்சு இல்ல... நான் இங்க இருந்தே செல்ல... அங்க நடக்கிறதை பார்த்துப்பேன்.”
“கம்ப்யூட்டர்ல பில் போட... எல்லாத்துக்கும் ஆள் இருக்கு.... பிறகு என்ன?”
“நான் எங்கையும் போகாம கடை உள்ளயே கிடக்கணுமா... என் பொண்டாட்டி பிள்ளைங்க என்னோட வெளிய போகணும்னு ஆசை படமாட்டாங்களா.... நானும் இந்த வயசுல அனுபவிக்காம எந்த வயசுல அனுபவிப்பேன்.”
“நாம தான் போறோமேடா தம்பி....”
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் குடும்பத்தோடு கோவிலுக்கோ, சினிமாவுக்கோ செல்வது தான். அப்படியே கடைகரைக்கும் சென்று விட்டு வருவார்கள். அதைத் தான் சொல்கிறார்.
“அதுவும் இதுவும் ஒண்ணா மா....நீங்க அப்பாகிட்ட சொல்லிடுங்க, நான் இனி ஆறு மாசத்துக்கு ஒரு தடவை குடும்பத்தோட எங்கையாவது வெளிய கிளம்பிடுவேன்.” என்றவன், போன்னை வைத்து விட்டான்.
இவங்களா என்னைக்காவது புரிஞ்சிப்பாங்கன்னு நினைச்சா... அது நடக்கவே நடக்காது போலிருக்கு.... நாமா கேட்டாத்தான் உண்டு. நம்ம நிலைமை தெரியாம... இவ என்னவோ என்னை வில்லன் மாதிரி பார்த்து வைக்கிறா.... என நினைத்தவன், ஹரிணியைப் பார்க்க....
நம்ம புருஷனா இது என்பது போல் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு இருந்தவள், கனவு கினவு காண்கிறோமா என்ற எண்ணத்தில் தன் கையையே கிள்ளி பார்த்துக்கொண்டாள். அதைப் பார்த்து விக்ரமிற்குச் சிரிப்பாக வந்தது.
“நாளைக்கு மீனாவுக்குப் புடவை எடுக்கிற வேலையைச் சீக்கிரம் முடிச்சிடு. நாம மட்டும் தனியா வெளிய போவோம். இங்க இருக்கிற ரெண்டு நாள் நல்லா ஊர் சுத்தலாம்.” விக்ரம் ஒரு முடிவுடன் இருந்தான்.
அங்கே அத்திவியோடு தன் அறையில் படுத்திருந்த ஹரி அனியின் நினைப்பாகவே இருந்தான். அத்வி அனிதாவை விட இளையவள், தங்கை மகள் என்ற உறவு வேறு.... இருந்தாலும் அனிதாவிடம் தோன்றிய மகள் என்ற உணர்வு அத்வியிடம் வரவில்லை....
எதையெதையோ யோசித்தவனின் பார்வை பிருந்தாவின் புகைப்படத்தில் வந்து நிலைத்தது. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த ஒரு நாளில் அவள் ஒருமுறை கேட்டிருக்கிறாள்.
நான் செத்து போய்ட்டா... என்னங்க பண்ணுவீங்க? வேற கல்யாணம் செஞ்சுபீங்களா... என்னை மறந்துடுவீங்களா....என்று. அப்போது அவள் குரலில் ஆமாம் என்று சொல்லி விடக்கூடாதே.... என்ற தவிப்பு தெரியும்.
இப்படியெல்லாம் பேசாத.... என ஹரி அவளைத் திட்டுவான். இன்று அவள் சொன்னது பலித்து விட்டது. அதை நினைத்து ஹரி கலங்கியபடி இருந்த போது... மகனின் நிலை உணர்ந்தது போல் வைஷ்ணவி அங்கே வந்தார்.
அவர் வந்ததும் அவரைக் கட்டிலில் உட்கார வைத்து, அவரின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான். அவர் மகனின் தலையைக் கோதி விட்டார்.
“என்ன டா கண்ணா?”
“அம்மா, பிருந்தாவுக்குத் துரோகம் பண்றது போல இருக்குமா...”
“அவ இறந்ததுக்கு நீ காரணமா...”
அவர் கேட்டதற்கு ஹரி இல்லை என்று தலை ஆட்ட...
“அவ இருக்கும் போது... நீ இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டா தான் தப்பு... நாம விரும்புறவங்க சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறது தான் உண்மையான அன்பு.... பிருந்தாவும் அப்படித்தான் நினைப்பா....அதனால எதைப் பத்தியும் யோசிக்காம இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கோ...”
“உன்னை விட மீனா பாவம் டா... அவ வாழ்க்கையில எதையுமே அனுபவிக்களை... இனியாவது அவ வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்.”
“நீ இந்த வீட்ல இருந்தா... பிருந்தாவையே நினைச்சிட்டு இருப்ப... இங்க இருக்கிற ஒவ்வொன்னும் உனக்கு அவளைத் தான் நியாபக படுத்தும். அதனால நீ நம்ப வீட்டுக்கு போய்டு...”
“அங்க இருக்கிறவங்களை நான் காலி பண்ண சொல்லிட்டேன். முதல்ல ரெண்டு மாசம் டைம் கேட்டாங்க. இப்ப அவங்களுக்கு எதோ நல்ல வீடு கிடைச்சிடுச்சாம். அதனால உடனே காலி பண்றாங்க. அதுவும் நல்லது தான்.”
“கல்யாணம் முடிஞ்சதும் நாம நேரா அங்க போய்டலாம்.” என்றவர், அன்று இரவு மகனுடனே படுத்துக்கொண்டார். தன் தாய் அருகில் இருந்ததால்… ஹரியும் வேறு எதையும் நினைக்காமல் உறங்கினான்.