காதல் 1
மதுரை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது
என்ற வரவேற்பு வாசகத்துடன் நம்மை அகன்ற பெரிய தோரண வாயில் வரவேற்க.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே ஐந்து மாடி கட்டிடமாக உயர்ந்து நின்றது கலை அரங்கம் ஒன்று.
அதன் நுழைவு வாயிலில் அன்றைய நாளுக்கான போட்டிகளை பற்றிய தகவல்கள் அடங்கிய பதாகைகளும் அவற்றுள் அன்றைய தினத்திற்கான சிறப்பு விருந்தினர் பற்றிய தகவலும் புகைப்படத்துடன் காட்சிப்படுத்தபட்டு
இருந்தது.
அவற்றை கடந்து உள்ளே செல்ல வழி இல்லாது கூட்டம் அலைமோத. அவ்விடம் முழுதும் பல குட்டி கிருஷ்ணர்களும்,பல ராதையரும் தோன்றி கண்களை நிறைக்க.
செயற்கையாக அழகுபடுத்தபட்ட பிருந்தாவன அமைப்பும்,யசோதை,
நந்தகோபன்,கோபியர் சூழ கோபியர் கொஞ்சும் ரமணனாய் நடுவே வாயில் வெண்ணெய் ஒழுக,இடையில் புல்லாகுழல் சுமந்து அன்னையிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் அழகு பிள்ளையாய் திருட்டு முழியுடன் நின்றிருந்தான் கோகுலக் கண்ணன்,
மால்மணிவண்ணன்,யசோதை இளஞ்சிங்கம்.
பலர் பிருந்தாவன அமைப்பின் எழிலில் மயங்கி தங்கள் பிள்ளைகளுடன் கூடி நின்றும்,நண்பர்கள் குழாமுடன் இணைந்து நின்றும்,குடும்பமாய் நின்றும்,தங்கள் குழுவுடன் இணைந்தும் என்று சுயமிகளை எடுத்து கொள்ள அவ்விடமே மக்கள் தலைகளால் நிரம்பி வழிந்தது.
அந்நேரம் வாயிலில் வந்து நின்றது ஒரு ஷேர் ஆட்டோ.அதிலிருந்து வயது வாரியாய் வரிசையாக கண்ணன், பலராமன், நண்பர்கள் வேடமிட்டு சிறுவர்களும்,ராதை மற்றும் கோபியரின் வேடம் தரித்த சிறுமியர்களும் இறங்கினர்.
அவர்கள் இறங்கிய பிறகு கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து ஆட்டோ ஓட்டுநரிடம் பேரம் பேசி அவரை சரிகட்டி பணம் கொடுத்து அனுப்பிவிட்டு.
உடன் வந்த தோழியையும் தாத்தாவையும் அழைத்துக் கொண்டு கண்ணன் ராதை என்று பிருந்தாவன மாந்தர்கள் புடை சூழ அந்த பெரிய கட்டிடத்தை நிமிர்ந்து ஆச்சர்யம் காட்டிய குழுவுடன் முகத்தில் எதனையும் வெளியிடாது நடந்துவந்தாள் ரிதம்.
"அடியேய் ரிதம் இது என்னடி இனிப்ப மொய்க்கிற ஈ மாதிரி இம்புட்டு கூட்டம் (இவ்வளவு கூட்டம்).இதுக்குள்ள முண்டிகிட்டு போய் வெளிய வர்றதுக்குள்ள நசுங்கி நாரா போய்டுவோம்டி இவளே!"
கூட்டத்தை கண்டு மலைப்பாய் கூறினாள் நிவேதா ரிதமின் நெருங்கிய தோழி.
"ஏத்தா நிவேதா இது நம்ம பிள்ளையார் பட்டி பிள்ளையார் ஊர்வலத்துக்கு வர்ற கூட்டத்தை விட கொறச்சலா (குறைவாக) தானத்தா இருக்கு.இதுக்கு போய் இந்த பயம் பயப்புடுற!"
அதுவரை கூட்டத்தை நோட்டம் விட்டிருந்த ரிதமின் தாத்தா வேல் தான் பேத்தியாய், எதிரியாய்,டார்லிங்காய் கருதும் நிவேதாவிடம் எடுத்தியிம்பினார்.
"தாத்தா நீயா இவ்வளவு தெளிவா பேசுறது நம்பவே முடியலையே!" தன் வாய் சவடாலை அவரிடம் ஆரம்பித்துவிட்டாள் கொஞ்சமே கொஞ்சம் வாயாடியான(!) நிவேதா.
"ஏத்தா அப்படி சொல்ற இந்தா பாரு நீ கேட்டேன்னு பாப்புமாக்கிட்ட சொல்லி உனக்கு தலைல வைக்கிற பூ போட்ட கிளிப்பு வாங்கி வச்சுருக்கேன் பார்த்தியா!?"
தன் கால் சட்டையின் பைக்குள் இருந்து சிறுமிகள் விரும்பி அணியும் தலைமாட்டி ஒன்றை எடுத்து காண்பிக்க.
கூட்டத்தில் நின்ற குழந்தைகள் எல்லாம் பெண்ணவளை பார்த்து சிரிக்க.
நிவேதாவோ,"உன்னை நம்பினேன் பாரு!" என்ற ரீதியில் தாத்தாவை முறைத்திருந்தாள்.
"இப்படி என்ன பொடுசுங்க முன்னுக்க கவுத்திட்டியே டார்லிங்!" உள்ளுக்குள்ளே பொறுமல் வேறு.
காரணம் தாத்தாவிற்கு மனதானது அனைத்து நேரமும் ஒரே நிலையில் இல்லாது போனது தான்.
ஒரு நேரம் வயதிற்கு ஏற்ற இயல்புடன் இருப்பவர் பல நேரங்களில் பல ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளுக்கு தாவி விடுவார்.
சில நேரம் அவரின் இளமை கால கல்லூரி பருவ காலத்திற்கும் கூட சென்று விடுவார்.
இதோ இப்பொழுது கூட என்றோ சிறு வயதில் நிவேதா கேட்ட தலைமாட்டி நினைவு வர வாங்கி அவளிடம் நீட்ட.
சிறுமியர் அணியும் வகையான தலைமாட்டியை இப்பொழுது வந்து நீட்டினால்,"பாவம்! அவளும் தான் என் செய்வாள்?"
கடந்த ஆறுமாதமாக தான் யார் என்பதே மறந்துவிடுகிறார் வேல் தாத்தா.அதனால் தான் பிள்ளைகளோடு பிள்ளையாக தன் தாத்தாவையும் கையுடன் அழைத்து வந்திருந்தாள் ரிதம்.
தாத்தாவின் இந்நிலைக்கு காரணம் எதுவென்பதை அவள் அறிந்தே. இருந்தாலும் ஒன்றும் செய்ய இயலாத தன் கையறு நிலையை எண்ணி அவள் வருத்தமுறா நாளில்லை எனலாம்.
தனி ஒருவராய் ஒரு பெண் குழந்தையை வளர்த்து படிப்பறிவு புகட்டி ஒழுக்கத்துடன் பண்பாய் வளர்ப்பது ஒன்றும் சாதாரண காரியம் அல்லவே!
ஆனால் தாத்தா எத்தகைய சூழலில் தன்னை காப்பாற்றி அழைத்து வந்தார். எப்படி தன்னை வளர்க்க பாடுபட்டார் என்பதை உணர்ந்தவள் என்பதால் இப்பொழுது அவரை பிள்ளை போலே பேணுவதை அவள் தாத்தாவிற்கு செய்யும் நன்றிகடனாகவும், கடமையாகவும்
ஏற்று மனநிறைவுடன் செய்கிறாள்.
சில அசௌகரியங்கள் அதில் வந்தாலும் முகம் சுழியாது கடப்பதில் அவளுக்கு நிகர் அவளே!
எண்ணச்சிதறலோடு நடந்த ரிதம் தாத்தா, நிவேதாவின் சலசலப்பு குழந்தைகளின் கலகலப்பில் கடந்தகால நினைவில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டுவர
இன்று தனி ஒருவளாய் தாத்தாவையும்,
குழந்தைகளையும் கவனிப்பது கடினம். தாத்தாவை தனியே வீட்டிலும் விட இயலாத சூழல் என்பதால் அவரையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.
தாத்தாவை நிவே பார்த்துக்கொள்வாள் அதில் அணுவளவும் சந்தேகம் இல்லை.
அதனால் தான் தோழியான தனக்காக அவளின் ஒரு நாள் வேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறாள்.
"இவளும்,இவள் அன்னையும் மட்டும் இல்லை என்றால்!?" என்ற வினா தோன்றிய நொடி தன் தோழியின் முகத்தை ஏறிட்டாள் ரிதம்.
அவள் முகம் புன்னகையில் தோய்ந்திருந்தது.எந்த கடினச் சூழலையும் இயல்பாக்கும் நகைச்சுவை நயகரா அவள்.
அவளின் புன்னகை நிரம்பிய வதனம் கண்டு ரிதம் முகமும் கூட புன்னகை சிந்தும்.
எந்த அளவிற்கு புன்னகை உள்ளதோ அதே அளவிற்கு கோபமும் வரும் அவள் ஒரு முன்கோப முல்லை.
ரிதம் சென்று தங்கள் குழுவின் பெயரை பதிவு செய்து பதிவு எண் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள்.
எல்லாம் கண்ணன் மீது பெரும் பற்று கொண்ட இந்த கலை அரங்கின் உரிமையாளர் வருடாவருடம் நடத்தும் நிகழ்வு தான் இது.
ஆனால், இந்த ஆண்டு தான் முதன் முறையாக ரிதம் தன் திறமையை வெளிப்படுத்த வந்திருக்கிறாள்.
கோகுலாஷ்டமி வருவதால் அதனை முன்னிறுத்தி கிருஷ்ண லீலா என்ற தலைப்பில் நடனம்,நாட்டியம், நாடகம் பாட்டுபோட்டி என்று சிறுவர் சிறுமியருக்கு போட்டிகளும் பரிசுகளும் முதல் பரிசு என்று குறிப்பிட்ட தொகையை அறிவித்து இருந்தனர்.
அத்துடன் கண்ணை கவர்ந்து கருத்தை நிறைக்கும் விதமாக பிருந்தாவன தோரணையில் அலங்காரங்கள் எல்லாம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அளவிற்கு நிறுவி மனதை பறித்திருந்தனர்.
உள்ளே செல்லும் வழி இன்னும் திறக்கப்படாது இருந்தது.அரங்கத்தின் இடது புற பக்கவாட்டில் தான் பதிவு செய்து நுழைவு சீட்டு வருகை பதிவேடு எல்லாம் நடந்துகொண்டிருந்தது.
பேச்சினுடே தாத்தாவிற்கு இயற்கை அழைக்க கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவனில் பொறுப்பான ஒருவனை அழைத்து தாத்தாவுடன் சென்றுவருமாறு கூறி வழியை காண்பிக்க.
தாத்தாவோ சிறுவனுக்கு தான் துணையாக செல்வதை போல மீசையை முறுக்கிக் கொண்டு முன்னால் சென்றார்.
"வரவர தாத்தா லீலை கிருஷ்ணா லீலைய மிஞ்சுதுடி ரிதம். பாரு! இவருக்கு துணைக்கு அவனை அனுப்பினா;ஏதோ அவனுக்கு துணைக்கு இவரு போற மாதிரி போறாரு ரவசு கொஞ்சநஞ்சமில்லடி உன்ற தாத்தனுக்கு!" தாத்தாவின் செயலில் வெகுண்டெழுந்தாள் நிவேதா.
"விடு நிவே,அவரு இப்படி இருக்கதை பார்க்க தானே இவ்வளவு பாடும்" என்றவள் உள்ளே செல்ல அனுமதித்து கதவை திறக்கப்படும் என்று அறிவிப்பு ஒலிக்கப்பட.
நுழைவு சீட்டை காண்பித்து அனைவரும் வரிசையில் வருமாறு கொடுக்கப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து குழந்தைகளை நிவேதா உடன் அனுப்பிவிட்டு தாத்தாவின் வரவிற்கு காத்திருக்க.
நொடிகள் கடக்க அதற்கு மேல் பொறுமை இழந்து 'என்ன ஆனதோ?' என்ற பயமும் தோன்றிட.
வெளிப்புறம் இருந்த கழிவறை நோக்கி செல்ல செல்லும் வழியிலேயே வாட்டசாட்டமாய் கண்களில் குளிர் கண்ணாடியும் அடிமுதல் நுனி வரை 'கச்சிதம்!' என்ற சொல்லிற்கு சான்றாக நின்றிருந்தான் ஒருவன்.
ஆறடிக்கு மேல் வளர்ந்திருந்த அந்த ரோமன் சிலையைக் கண்டு வியந்தாலும் அவன் அடுத்து செய்த செயல் "கோபுரம் கண்ட காகிதம் காற்றில் மிதந்து குப்பையை அடைவது போல்!" இருந்தது.
ரிதம் அங்கே சென்ற போது, தாத்தா அந்த ரோமன் சிலையை நெருங்க.
அவனோ தன்னை சுற்றி காதுகளில் கருப்பு நிற வயர்லெஸ் அணிந்து, கரிய நிற உடை அணிந்து வாக்கி டாக்கி சகிதம் ஆஜானுபாகுவாக நின்றிருந்த பாதுகாவலர்கள் மூலம் வயதில் 'முதிர்ந்தவர்' என்றும் பாராது தள்ளிவிட்டு காற்றாய் கடந்தான்.
"எப்படி வாழ்ந்தவர்!?" என்ற சுய பட்சாதாபம் தோன்றி கண்களை நீரால் நிறைக்க தாத்தா உடன் வந்த சிறுவன் அவருக்கு உதவ முன்வர
'தாத்தா' என்ற அலறலுடன் அவரை நெருங்க.
அவரோ புன்னகையோடு எழுந்து நின்றவர் "ம்மா அப்பாக்கு ஒன்னும் இல்லைடா. தங்கம் பாரு அப்பா நல்லா இருக்கேன்டா" என்றார்.
அவருக்கு சில நேரம் பேத்தி, பல நேரம் மகளாய் கண்களுக்கு அவளே காட்சி தர.
எந்நேரம் எப்படி அழைத்தாலும் அவளின் மீது தன் உயிரை வைத்து அன்பை வைத்து காத்தவர் வேலன்.
அதுதான் தாத்தாவின் நாமம்.
"சரிங்கப்பா நீங்க எழுந்துக்கோங்க நம்ம இப்போ உள்ள போகலாம்"
அவர் இயல்பில் அவருக்கு சந்தேகம் வராதவாறு அவருடன் பேத்தி,மகள் என இரண்டு கதாபாத்திரங்களை கனகச்சிதமாக கையாண்டு,"தனக்கு எதுவும் நோயா!?" என்ற சந்தேக விதைகள் அவருக்குள் விழாத அளவிற்கு பிள்ளை போலே தாங்குகிறாள்.
"ஆமாம் தங்கம் எங்க போறோம் நம்ம!?" இருக்கும் இடம் வந்த காரணம் மறந்து போனார் அவர்.
"ஐயோ! சொல்ல மறந்துட்டேன் பாருங்க நாம காம்படிஷன் வந்திருக்கோம்பா வாங்க உள்ள போகலாம்"என்றவாறு அழைத்து செல்ல.
"தங்கம் அப்பா சொல்றேன் கோச்சுக்காதமா (கோபப்படாதே) வரவர உனக்கு மறதி அதிகமா வருது தங்கம் அதை என்னனு பாரு!" என்றாரே பார்க்கலாம்.
உடன் வந்த சிறுவன் சிரித்துவிட அவனுடன் இணைந்து சிரித்துக் கொண்டே நடந்தார் வேல் தாத்தா.
உள்ளே முன்பு சென்ற இவளின் குழுவில் உள்ள சிறுவர்கள்,"ரிதம் அக்கா இங்க வாங்க!" என்று கையசைக்க அவர்களுடன் சென்று சேர்ந்து கொண்டனர்.
'அவன் யார் !?'
'இந்த ரிதம் யார்!?'
'இங்கே தொடங்கும் இந்த பந்தம் எங்கே சென்று சேரும் !?'
"விடை அறியா விதியின் விதைகள் வளர வளரத் தான் விதையின் தரம் தெரியும்!
அதுபோல் வாழ்வு வாழ வாழத்தான் நம் வாழ்வின் பாதை தெரியும் பார்க்கலாம் இவர்கள் எங்கே சேருகின்றனர் என்று!!!"
Attachments
Last edited by a moderator: