டீசர் :
காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பிய உதயாதித்தன், “உதய்” என்ற அண்ணாமலையின் குரலில் தேங்கி நின்றான்.“ஒரு பத்து நிமிஷம் உன்கிட்ட பேசணும் ப்பா நேரமிருக்கா..?” என்றார். பின்னே கடந்த மூன்று மாதங்களாகவே தொழிலை சீர்படுத்தும் முயற்சியில் வேலை அவனை நெருக்கி பிடிக்க நேரம் காலம் பாராமல் ஓடிக்கொண்டிருப்பவன் வீட்டிற்கு வருவதே உறங்குவதற்கு மட்டுமே.
“சொல்லுங்க தாத்தா” என்று அவரருகே அமர்ந்தான். அம்பலவாணன் அன்னபூரணி என்று அனைவருமே அங்கே தான் இருந்தனர்.
“இது சக்கரவர்த்தியோட பெண்! நம்ம வீட்டுக்கு கூட வந்திருக்கு நீயும் பார்த்திருப்பன்னு நினைக்கிறேன்” என்று ஒரு பெண்ணின் புகைபடத்தை அவனிடம் கொடுத்தார்.
அமைதியாக வாங்கிகொண்டவன் புகைப்படத்தை பார்க்க அதில் சர்வலட்சணமும் ஒருங்கே அமைந்திருந்த பெண் அவன் கண்களை கவர்ந்திருந்தாள்.
“ஆமா தாத்தா நம்ம வீட்டு விசேஷத்துல பார்த்திருக்கேன், பேசியிருக்கேன்... பேர் கவின்மலர் தானே..?” என்றதில் அனைவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.
“உனக்கு தெரியுமாப்பா.. பேர் கூட சரியா சொல்ற..?” என்று அன்னபூரணி புன்னகையோடு கேட்க..,
“தெரியும் பாட்டி, ரொம்ப நல்ல பொண்ணு... வித்யாசமான அழகான பேர்.. எனக்கு நல்லா நியாபகமிருக்கு...”
“உனக்கு பேசலாம்னு இருக்கோம் உதய்... ஜோசியரையும் பார்த்தாச்சு உங்க ரெண்டு பேரோட ஜாதகமும் அவ்ளோ அம்சமா பொருந்தி இருக்கு அடுத்த மாசம் முகூர்த்த தேதி குறிச்சு கொடுத்திருக்கார்..."
"எங்க எல்லாருக்குமே சம்மதம்... சக்கரவர்த்தி குடும்பத்துக்கும் இதுல முழு சம்மதம் நாளைக்கே கூட பெண் பார்க்க வர சொல்லிட்டாங்க... நிச்சயத்தை கல்யாணத்துக்கு முந்தின நாள் வச்சுக்கலாம்ன்னு இருக்கோம்.. நீ என்னப்பா சொல்ற...?” என்று ஆர்வமாக பேரன் முகத்தை பார்க்க.,
கவின்மலரையே பார்த்திருந்தவன் சில நொடிகளுக்கு பின், “எல்லாருக்கும் சம்மதமா இருக்கும் பட்சத்தில் நான் வேண்டாம்னா சொல்ல போறேன்.. எனக்கும் முழு சம்மதம்! பேசி முடிச்சுடுங்க தாத்தா” என்றான் அவர் கரங்களை பற்றிக்கொண்டு புன்னகையோடு.