Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 9:

கண்ட கனவின் நினைவுகள் மறையும் முன்னரே அடுத்த பிரச்சனை காத்திருந்தது மதிக்கு.

தன்னை அழைக்க வந்த அப்பாவின் முகத்தில் இருந்த கவலையும், வருத்தமும்,ஒரு வித சோர்வும் அவளை யோசனைக்கு உள்ளாக்கியது.

“என்னாச்சுப்பா..? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்று மதி கேட்க..

“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..!” என்று அவர் சொன்னதில் இருந்தே..ஏதோ ஒன்று பெரிதாய் நடந்திருக்கிறது... என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மதி.

“ஒன்னுமில்லைன்னு உங்க வாய் தான் சொல்லுது..ஆனா முகம் வேற கதை சொல்லுது..!” என்று அவள் சொல்ல...

அவர்கள் சென்று கொண்டிருக்கும் போதே..தைரியமாக வந்து வண்டியை மறித்து நின்றான் முத்து.

அவன் எதற்காக வண்டியை மறைத்து நிற்கிறான் என்று புரியாமல்... அப்பாவும்,மகளும் முழிக்க...

“உங்க கூட கொஞ்சம் பேசணும் மாமா..!” என்றான்.

‘என்கிட்டே நீ என்னப்பா பேச போற..?”என்று அவர் கேட்க..

“உங்க மக கிட்ட தான் பேசணும்..! ஆனா நீங்க விட மாட்டிங்களே..! அதான் உங்ககிட்டயே பேசிடலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்...! என்று முத்து பேச...

“பேசுறதுக்கு இப்ப நேரமில்ல...நாங்க உடனே போயாகனும்..!” என்று மனோகரன் சொல்ல..

“ஊர் தலைவர் வீட்டுக்கு தான போறீங்க..! அதுக்கு முன்னாடி நான் பேசுறதைக் கொஞ்சம் கேட்டுட்டு போங்க..!” என்று முத்து போட்டு உடைக்க..
“ஊர் தலைவர் வீட்டுக்கா..?” என்றாள் மதி சந்தேகமாய்.

அவள் கேள்வியில் முழித்தவனுக்கு அப்போது தான் தெரிந்தது அவளுக்கு விஷயமே தெரியாதென்று.

“உனக்கு விஷயமே தெரியாதா..?” என்றான்.

“என்ன விஷயம்..? நாங்க எதுக்கு அங்க போகணும்..? என்னப்பா பிரச்சனை..?” என்று மதி புரியாமல் கேள்வி கேட்க...

“முத்து இப்ப நீ கிளம்ப போறியா இல்லையா..? இது எங்க குடும்ப விஷயம்..!” என்று மனோகரன் எரிச்சலுடன் சொல்ல..

“எது மாமா உங்க குடும்ப விஷயம்..! இப்படி சொல்லி சொல்லி தான் என் வாழ்க்கையையே அழிச்சுட்டிங்களே..?இன்னமும் என்ன பாக்கி இருக்கு..!” என்று அவன் எகிற..

“வார்த்தையை அளந்து பேசு முத்து...உன் வாழ்க்கையை எங்கப்பா அழிச்சாரா..உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு...?” என்று மதி கோபம் கொண்டு கத்த...

“இப்ப பேச நேரமில்லை...மதி வண்டியில ஏறுமா..!” என்றபடி அவர் மதியைக் கிளப்பிக் கொண்டு போக...முத்துவிற்கு தான் மூக்குடைந்து போனது.

“என்னப்பா பிரச்சனை..?” மதி.

“அது ஒன்னுமில்லைம்ம்மா...ஊர் தலைவர் வீட்ல...கூட்டம் போட்ருக்காங்க..! என் அண்ணனுங்க தான்...நாலு பேரைக் கூட்டி வச்சு...பஞ்சாயத்து பேசி முடிச்சு,சொத்தைப் பிரிச்சிக்கலாம்ன்னு இதை ஏற்பாடு பண்ணிருக்கானுக..! பகல்லையே பேசி முடிக்கணும்ன்னு சொன்னாங்க..! நான் தான் நீ வராம பேச கூடாதுன்னு சொல்லிட்டேன்..!” என்று அவர் சொல்ல..

“இப்ப இதுக்கு என்ன அவசரமும்,அவசியமும் வந்துச்சு..!” என்று அவள் கேட்க..

“பையனைப் பெத்தவங்க..! பையனுக்கு கல்யாணம் பண்ணனுமாம்...” என்று மனோகரன் முடித்துக் கொண்டார்.ஏனோ இன்னொரு விஷயத்தை அவரால் மகளிடம் சொல்ல முடியவில்லை.

வீட்டிற்கு சென்றவளிடம் பார்வதியும் முகத்தைக் காட்ட...மதிக்கு பைத்தியமே பிடித்து விடுவதைப் போல் இருந்தது.

“உனக்கு ஏதும் தெரியுமா சுமதி..?” என்று சுமதியைத் தள்ளிக் கொண்டு வெளியே சென்று நைசாகக் கேட்டுப் பார்த்தாள்.ஆனால் அவளுக்கும் தெரியவில்லை என்று சொல்ல...மதிக்கு எரிச்சலாய் வந்தது.

“இப்ப எதுக்கும்மா இப்படி உம்முன்னு இருக்கீங்க..? என்னதான் பிரச்சனை உங்களுக்கு..?” என்று கேட்க..

“இந்த டீயைக் குடிச்சுட்டு கிளம்பு..” என்று மட்டும் சொன்னார்.

“இவங்ககிட்ட கேட்குறதுக்கு..அங்கயே போய்..என்ன விஷயம்ன்னு பார்த்துடலாம்...” என்று எண்ணியவள்...பார்வதி குடுத்த டீயைக் குடித்து விட்டு...ஓரு குளியலைப் போட்டுவிட்டு வந்தாள்.

பஞ்சாயத்துக் கூட்டம் என்றாலே..அவளுக்கு இப்போதும் கை கால்கள் நடுங்கும்.அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சென்றாள் மதி.

அங்கே ஊர் தலைவர் வீட்டின் முன்...பல முக்கிய மனிதர்கள் கூடியிருக்க...சில பெண்களும் அங்கே இருந்தனர்.அவர்கள் அருகில் செல்ல செல்ல மதிக்கு உதறல் எடுத்தது எனவோ உண்மைதான்.அப்போது தான் நன்கு கவனித்தாள் அங்கு நின்றிருந்தவர்களை.

அவளின் முதல் பெரியப்பா....வடிவேல் மற்றும் அவரது மனைவி அரசி...அவரின் மகன்கள்..தனபாண்டி மற்றும் குணப்பாண்டி.

அவளின் இரண்டாவது பெரியப்பா கணபதி மற்றும் அவரின் மனைவி திலகா..அவரின் பிள்ளைகள் துரைப்பாண்டி,துர்கா.

அவளின் சித்தப்பா கோபி மற்றும் அவரின் மனைவி லட்சுமி...அவரின் பிள்ளைகள் அச்சுதன் மற்றும் ராணி.

இப்படி குடும்பம் குடும்பமாக அனைவரும் நிற்க...மதிக்கு எரிச்சல் தான் வந்தது.மறுபடியும் முதலில் இருந்தா..? என்று எண்ணாமல் அவளால் இருக்க முடியவில்லை.

இப்போது மனோகரன்-பார்வதி..அவரின் பிள்ளைகள் வண்ணமதி,சுமதி என்று அவர்களும் ஒரு குடும்பமாய் அங்கு சென்று நிற்க...

அவர்கள் குடும்பமாய் வருவதைப் பார்த்த திலகாவிற்கு எரிச்சல் பொங்கியது.

“வராளுங்க பாரு..ஆத்தாளும்,பிள்ளைங்களும்...எல்லார் பொழப்பையும் கெடுக்குறைதையே வேலையா வச்சுகிட்டு..!” என்று மனதிற்கு நொடிக்க...அவர் மனதில் பேசிய மொழிகள் எல்லாம் முகத்திலும் தெரிந்ததோ என்னவோ..மதி அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டே நின்றாள்.

“என்னப்பா எல்லாரும் வந்துட்டிங்களா..?” என்று நடுவில் இருந்த பெரியவர் ஒருவர் கேட்க...அப்போது தான் கவனித்தாள் மதி.முகிலனின் அப்பா பெரியசாமியும் அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தார்.

“ஹோ..! இவரும் பஞ்சாயத்து பேசப் போறாராமா..? ம்ம் பெரிய மனுஷன்..!” என்று மனதிற்குள் நினைக்க...அப்போது ஒருவர் பேச ஆரம்பித்தார்.

“இப்ப பிரச்சனை என்னானா...?உங்க குடும்ப சொத்து பல வருஷ காலமா..பிரிக்காம அப்படியே தரிசு நிலமா கிடக்கு...இருக்குற பிரச்சனையைப் பேசி சரி பண்ணி...அதைப் பிரிக்கனும்ன்னு பெரியவன் வடிவேல் சொல்லியிருக்காப்ல..அதனால...என்ன பிரச்சனை இருந்தாலும்..இங்கனயே பேசி முடுச்சு...இருக்குற சொத்து பத்தை..ஆளுக்கு கொஞ்சமா பிரிச்சு வெள்ளாமை (விவசாயம்) வைக்குற வழியைப் பாருங்க..!” என்று அவர் சொல்ல..

“இதைத்தான பல வருஷமா நாங்களும் சொல்றோம்..!” என்று முதன் முறையாக வாயைத் திறந்தார் கோபி.

வடிவேல்,கணபதி அளவுக்கு இவர் கல் நெஞ்சம் கொண்டவர் இல்லை.இவர் மனைவியும் அப்படியே.ஆனால் இவர் மகள் ராணி ஊரையே வித்து விடுவாள்.அந்த அளவிற்கு வித்தாரம்.

“நீ சொல்றது நியாயம் தான் கோபி.ஆனா நம்ம ஊர்ல பொம்பளைப் பிள்ளைங்களுக்கு நிலத்துல பங்கு குடுக்குறது வழக்கம் இல்லை..இப்ப மனோகரனுக்கு இருக்குறது ரெண்டும் பொம்பளைப் பிள்ளைங்க..! அதனால தான் இப்போ பஞ்சாயத்தே..!” என்று ஒருவர் சொல்ல...

“நீங்க எங்களுக்கு பிரிச்சு குடுக்க வேணாம்.எங்கப்பாவுக்கு வர வேண்டியதைக் குடுங்க..! பெரியப்பா,சித்தப்பா பேர்ல தான பிரிச்சு குடுப்பிங்க..! அப்படிப் பார்த்தா எங்கப்பாவும் அவங்களோட பிறந்தவர் தான்..! அதனால் அவருக்கும் பிரிச்சு குடுத்துடுங்க..! அதுக்கு அப்பறம் அந்த சொத்தை என்ன செய்றதுன்னு எங்க அப்பா முடிவு பண்ணுவார்..!” என்று மதி சொல்ல..

பெரியசாமி நிமிர்ந்து அவளை ஆச்சர்யமாகப் பார்த்தார்.பொதுவாக அவள் அப்படி பேசும் ரகம் இல்லை.

“பொம்பளைப் பிள்ளைங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க..!” என்று ஒருவர் சொல்ல..

“இதோ பாருங்க..! எங்கப்பாவுக்கு ஆம்பிளைப் பையன்,பொம்பளைப் பிள்ளை..எல்லாமே நான்தான்.எதைப் பேசுறதா இருந்தாலும் என்கிட்டே பேசுங்க...!” என்று மதி பட்டென்று சொல்ல..

“என்ன மனோகரா..உன் பொண்ணு இப்படி பேசுது..? வேடிக்கைப் பார்த்துட்டு நிக்குற..?” என்று ஒருவர் சத்தம் போட..

“என் பொண்ணு சரியா தான் பேசுது..! அதான் நாங்க அமைதியா இருக்கோம்..!” என்று அவர் சொல்ல...அவருடைய அண்ணன்களுக்கும்,அண்ணிகளுக்கும் அப்படி ஒரு கோபம்.

“வாரிசத்தவனுக்கு பேச்சைப் பாரு..!” என்று திலகா நொடிக்க..

“வாரிசு இல்லாதவனுக்கு..உங்க வீட்டு வாரீசு யாரும் வந்து கொள்ளி போட வேண்டாம்.எங்கப்பாவுக்கு என்ன செய்யனும்ன்னு எங்களுக்குத் தெரியும்..!” என்றாள் மதி பட்டென்று.
 
“மதி..!” என்று பார்வதி அதட்ட..

“என்னம்மா நீங்க..! அவங்க அப்படி பேசிகிட்டே போறாங்க..என்னைய வேடிக்கைப் பார்க்க சொல்றிங்களா..?” என்று அம்மாவிடம் எகிற..

“ஆம்பிள்ளை செய்ற எல்லா வேலையும் உன்னால செய்ய முடியாது..வெட்டிப் போடுவேன் வெட்டி” என்று துரைப்பாண்டி எகிறிக் கொண்டு வர..

“ஏன் அருவா நீ வெட்டுனா தான் வெட்டுமா..நான் வெட்டுனாலும் வெட்டும்டா..!” என்றாள் கோபமாய்.
அவளின் கோபத்தில்...ஆங்காரத்தில்...சற்றே மட்டுப் பட்டான் துரைப்பாண்டி.

“இதோ பாருங்க..! யாரோ என்னமோ செய்ங்க...! எனக்கு வர பங்க மட்டும் பிரிச்சு விடுங்க..!” என்று கோபி கேட்க..
“என்ன ஜென்மம்யா நீயெல்லாம்..!” என்று நினைக்கத் தோன்றியது மதிக்கு.

“இங்க பாரு மனோகரா..! உன் பொண்ணுகளுக்கு செய்ய வேண்டிய சீர் செனத்தி எல்லாம்..அண்ணன்கள் முறையில் இருந்து இவங்க நாலு பேரும் செய்வாங்க..! பேசாம சொத்தை அவங்க பேருக்கு மாத்திக் குடுத்துடுப்பா..!” என்று ஒருத்தர் சொல்ல..

“இங்க பாருங்க வளவளன்னு பேசாதிங்க..! எங்களுக்கு எந்த வெண்ணையும் செய்ய வேண்டாம்.அதெல்லாம் எங்கப்பா பார்த்துப்பாரு.சொத்தை நாலு பங்கா போடுங்க..இல்லை முடியாதுன்னா சொல்லிடுங்க..! நான் கோர்ட்ல பார்த்துக்கறேன்.சட்டப்படி சொத்துல எங்களுக்கும் உரிமை இருக்கு.

நாங்க யாரோ சொத்துக்கு எல்லாம் ஆசைப்படல.எங்கப்பாவுக்கு சேர வேண்டிய பங்கை தான் கேட்குறோம்..!” என்று மதி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேச...அங்கிருந்தவர்கள் வாயடைத்து நின்றனர்.

“என்னம்மா கோர்ட்,கேஸ்ன்னு பேசுற..படிச்ச திமிரா..?” என்று அவளின் பெரியம்மா அரசி கேட்க...

“உங்க அகராதியில இது திமிர்ன்னா...ஆமா திமிர் தான்..!” என்றாள்.சுமதி கூட வாயடைத்து போய் நின்றாள்...மதியின் பேச்சைக் கேட்டு.

மதியின் பேச்சைக் கேட்டு மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டார் பெரிசாமி.அவரால் மனதிற்குள் மட்டும் தான் மெச்சிக் கொள்ள முடியும்.வாய்விட்டு சொன்னால் அவர் கதி அதோ கதி தான்.

அவருக்கு நான்கு மச்சினன்களின் உறவும் வேண்டுமே..!அவருக்கு முக்கியமோ இல்லையோ..மலருக்கு முக்கியம்.அதனால் அமைதி காத்தார்.

“அப்படி எல்லாம் குடுக்க முடியாது..!” என்று திலகா சொல்ல..

“ஏன் அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை..?” என்று கேட்டது மதி இல்லை குணப்பாண்டி.

“டேய் குணப்பாண்டி..! பேசாம இருடா..!” என்று தனபாண்டி சொல்ல..

“நீ பேசாம இருடா..! இவனுகளுக்கு இதே பொழப்பா போய்டுச்சு..எப்ப பார்த்தாலும் அந்த புள்ளை கூட சண்டைக்கு போயிட்டு...என்னைக்காவது ஒரு நாள்...அந்த பிள்ள கூட பாசமா பேசியிருப்பானுகளா...?எப்ப பார்த்தாலும் கரிச்சு கொட்டிகிட்டே இருந்தா அதுக்கு எப்படி நம்ம மேல பாசம் வரும்..?” என்று குழறலாய் சொல்ல...அவன் பேச்சிலேயே தெரிந்தது....அவன் குடித்திருக்கிறான் என்று.

அவன் குடித்திருக்கும் போது..தன பாண்டி மட்டும் சும்மாவா இருப்பான்.அவனும் தான் குடித்திருந்தான்.
“இப்ப என்னடா சொல்ல வர..?” என்று தனபாண்டி கேட்க...

“அந்த பிள்ளை சொன்ன மாதிரி..யாருக்கு எவ்வளவு வருதோ..அதை சரி சமமா பிரிச்சுக்கிட்டு போய் சந்தோஷமா இருங்கடா..” என்றான் ஒரே போடாய்.

“குடிச்சுட்டு பேசுனாலும் சரியா பேசுறானுக..இல்லையாக்கா..?” என்று சுமதி அக்காவின் காதைக் கடிக்க...
“அது என்னவோ உண்மைதான்..” என்று மதி சொல்ல..

“டேய்! பேசாம இருங்கடா...!” என்று அரசி அவர்களை அடக்கிக் கொண்டிருந்தார்.

“எங்களை எதுக்கு அடக்க வரீங்க...? அடுத்தவங்க பொழப்பை கெடுக்காதிங்க...! அது நல்லதுக்கே இல்லை..அப்பறம் எங்க வாழ்க்கை தான் பாதிக்கப்படும்...இல்லையா தனபாண்டி..” என்றான் குணப்பாண்டி.

“ஆமா..ஆமா..! இப்போவே பொண்ணு கெடைக்கலையே....நாம யாரு கிட்ட போயி சொல்லுவோம்...” என்று போதையில் சிவாஜி பாணியில் பேச...மதிக்கு சிரிப்பை அடக்குவது பெரும் பாடாய் போனது.

சிரிப்பை அடக்க முடியாமல்...சற்று பின்னால் திரும்பி நிற்க..அப்போது தான் கவனித்தாள் அங்கு முகிலனும் அவன் அம்மா மலரும் தன்னையே பார்த்துக் கொண்டு நிற்பதை.

அவனின் கண்களில்..தான் எத்தனை அன்பும்,காதலும்....ஆனால் அது மதிக்கு தெரியவே இல்லை.அத்தனை நேரம் இருந்த இலகுத் தன்மை மறைந்து..மீண்டும் மூஞ்சியை உர்ரென்று வைக்க...அவளின் ஒவ்வொரு மாற்றமும்..முகிலனின் கண்களுக்கு தப்பாமல் விழுந்தது.

“நீங்க என்ன சொல்றிங்க..?” என்று கணபதியையும்,திலகாவையும் பார்த்து கேட்க..

“அதெல்லாம் முடியவே முடியாது...நாலு பங்குக்கு வாய்ப்பே இல்லை..!” என்று திலகா முந்திக் கொண்டு சொல்ல...
“அதை நீங்க சொல்ல கூடாது....”என்று மதி சொல்ல..

“இதென்ன உங்கப்பன் வீட்டு சொத்தா..?” என்று அவரும் சண்டைக்கு தயாராக..

“சொன்னாலும் சொல்லாட்டியும் இது எங்கப்பன் வீட்டு சொத்து தான்...நான் திருப்பிக் கேட்குறேன்..இது உங்க அப்பா வீட்டு சொத்தா..?” என்றாள் மதி.

வாயடைத்து போனார் திலகா.அது அவர் அப்பா வீட்டு சொத்து இல்லையே.ஆனால் அவ்வளவு சீக்கிரம் திலகா தன் தோல்வியை ஒப்புக் கொள்பவர் இல்லையே..!

“என்ன பார்வதி..? பொண்ண பேச விட்டு வேடிக்கை பார்க்குறியா..? இதுல இருந்தே தெரியலை..நீ பொண்ணை வளர்த்த லட்சணம்..!” என்று திலகா குறி பார்த்து அடிக்க..

“ஏன்..? என் வளர்ப்புக்கு என்ன குறைய கண்டீங்க..?” என்று எகத்தாளமாய் கேட்ட பார்வதி....அவர்களின் ஆண் வாரிசுகளை பார்வையால் பார்க்க..

அந்த பார்வை..”இவங்களை விட என் பெண்களை நல்லாவே வளர்த்திருக்கிறேன்..” என்ற அர்த்தத்தில் பார்த்தது.

“இதுக்கு என்னதான் முடிவு..? என் பையன்களுக்கு பொண்ணு பார்க்க போனா..எல்லாரும் சொத்து பத்தை தான் விசாரிக்கிறாங்க...அதனால் ஏதாவது ஒரு முடிவைப் பண்ணி..பிரிச்சு விடுங்க..!” என்று அரசி...அரைமனதாய் கீழிறங்கி வர..

மதிக்கு கூட ஒரு மாதிரியாகப் போனது.பேசாமல் சொத்தே வேண்டாம்.ஆளைவிடுங்க..! என்று சொல்வதற்கு அவள் வாயைத் திறக்க போன வினாடி..

“நீங்க எதுக்குக்கா இறங்கி போறீங்க..? பொம்பளைப் பிள்ளைங்களைப் பெத்து ஊர் மேய விட்ருக்க அவளுக்கே இவ்வளவு திமிரும், தெனாவெட்டும் இருக்கும் போது...அம்பளை சிங்கத்தைப் பெத்து வச்சிருக்கோம்...நமக்கு எவ்வளவு இருக்கணும்..” என்று திலகா வார்த்தையில் விஷத்தை தடவ..

“நாக்க அடக்கி பேசுங்க..!” என்று பொறுக்க மாட்டாமல் பார்வதி கத்த..

“உண்மையை சொன்ன உடனே கோபம் வருதோ..! நான் என் பொண்ணுக்கு பேசி முடிச்ச சம்மந்தம்ன்னு தெரிஞ்சுதான...உன் பொண்ண மருமக பையன் கூட பைக்ல அனுப்பி மயக்க பார்த்த..?” என்று திலகா விடாமால் நஞ்சைத் தடவ...

“என்னம்மா திலகா பேச்சு ஒரு தினுசா போகுது..?” என்று பெரிசாமியும் அதிர்ந்து கேட்க..

“உண்மையைத் தானன்னே சொன்னேன்..! உங்ககிட்ட கூட வந்து சொன்னேனே...! அது தற்செயலா நடந்திருக்காது...எல்லாம் திட்டம் போட்டுப் பண்ணியிருப்பாளுங்க..!” என்று திலகா சொல்ல..

பார்வதிக்கு கண்கள் கலங்க...மதிக்கோ..உடம்பில் உள்ள அத்தனை நரம்புகளும் விடைத்தது.மூக்கு நுனி சிவக்க..அவள் நின்ற கோலம் பார்த்து அனைவருக்கும் பாவமாய் போக..திலகாவிற்கு அப்படி எல்லாம் இல்லை.அவர் பேசிக்கொண்டே இருந்தார்.

“நிறுத்துங்க மதினி..! நான் தான் பஸ் வரலைன்னு முகிலன் தம்பி கூட அனுப்பி விட்டேன்..!” என்று மனோகரன் கோபமாய் சொல்ல...

“பார்த்திங்களா...? நான் தான் சொன்னேனே..அவங்கப்பனே கூட்டிக் குடுத்திருக்கான்..!” என்று வாய் கூசாமல் வார்த்தைகளை அள்ளி வீச...

தன் இரு காதுகளையும் பொத்திக் கொண்டாள் மதி.முகிலனுக்கு கோபம் எல்லை மீற...அவனைக் கையைப் பிடித்து தடுத்துக் கொண்டிருந்தார் மலர்.அவருக்குமே திலகா பேசியது அநியாயம் என்று தோணியது.

“அபாண்டமா பேசாதிங்க மதினி..!” என்று மலர் சொல்ல..

“என்ன மலரு..! உனக்கும் படிச்ச மருமக வேணும்ன்னு தொணிடுச்சா...அவங்களுக்கு சாதகமா பேசுற..?” என்றார்.

“நான் யாருக்கும் சாதகமா பேசலை...உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கா..மறந்துடாதிங்க..!” என்று சொல்ல...
“ஏண்டி என் மகன் கூட போனன்னு..? அவளைக் கேட்க துப்பில்லை உங்களுக்கு..என் பொண்ணைப் பத்தி பேசுறிங்க..! நான் கண்ட கழுதைங்க மாதிரி பொண்ணை வளர்க்கலை..!” என்று திலகா சொல்ல...

“நீங்க இப்படி பேசுறதால என் பையனுக்கும் தான் கெட்ட பேரு..அதை மறந்துட்டு பேசாதிங்க..!” என்று மலர் சொல்ல..

“நான் மருமவனை எல்லாம் ஒன்னும் சொல்லலை மதினி...ஆனா இந்த மேனா மினுக்கியை நம்ப முடியாது பாருங்க..!” என்று திலகா அப்படியே ஜகா வாங்கினார்.

முகிலனைப் பகைத்துக் கொள்ள கூடாது என்ற எண்ணம் தான் அவரை அப்படி செய்ய தூண்டியது.

“கொஞ்சம் எல்லாரும் நிறுத்துறிங்களா...?” என்று தொண்டை கிழிய கத்தினாள் மதி.

எல்லாரும் அவளையே பார்க்க...அதுவரை அவளின் கோபத்தை ரசித்துக் கொண்டிருந்தவன்..எதற்காக..எந்த தருணத்திற்காக காத்திருந்தானோ....அந்த தருணத்தில் இருந்தான்.

மதியை தப்பாக பேச பேச..அவனுக்குள் கோபம் எரிமலையாய் வெடிக்க..சில காரண காரியம் பொருட்டு அமைதி காத்தான்.அந்த நிமிடமும் வந்து விட்டது.

“மதி..! பேசாம இரு..!” என்று பார்வதி சொல்ல...அப்போது வேகமாய் அங்கு வந்து சேர்ந்தான் முத்து.
நீங்க பேசாம இருங்கம்மா..! என்று சொன்னவள்....

“என்ன சொன்னிங்க..? என்ன சொன்னிங்க..? அவரை மயக்க..அவர் கூட போனேனா..?” என்று மதி கேட்க..

“இதுல உனக்கு சந்தேகம் வேறயா..?” என்று திலகா சொல்ல...முத்து அவள் முகத்தையே பயத்துடன் பார்த்திருந்தான்.

“சபாஷ்..! எவ்வளவு நல்ல பேரு எனக்கு..?” என்று முகிலனைப் பார்த்து உக்கிரமாய் முறைக்க...அவளைப் பார்த்து கண்ணடித்து வைத்தான் அந்த கள்வன்.

“ரொம்ப நடிக்காத..முன்னாடி இந்த முத்து பய...இப்ப முகிலனா..?” என்று திலகா கேட்க...

“கொஞ்சம் நிறுத்துறிங்களா....? கட்டுன புருஷனை..அதுவும் என் புருஷனை எதுக்கு நான் மயக்கனும்..?” என்று காட்டுக் கத்து கத்த...

அதைக்கேட்டு அனைவரும் திகைத்து நிற்க...முத்துவின் முகத்தில் எரிச்சல் மண்டிக் கிடக்க....முகிலனின் முகத்திலோ..ஜென்ம சாபல்யம் தீர்ந்தது போன்ற ஒரு விடுதலை உணர்வு.அவன் எதிர்பார்த்திருந்த அந்த தருணம்.வந்து விட்டது.அவனைத் தேடி வந்துவிட்டது.

“சொல்லுங்க..? என் புருஷனை எதுக்காக நான் மயக்கனும்...அவர் கூட பைக்கில் நான் போனா என்ன தப்பு..?” என்று மீண்டும் கத்த...அவளையே காதலுடன் பார்த்திருந்தான் முகிலன் என்ற மணி முகிலன்.

காதல் வளரும்...


 
Top