பகுதி – 9
ஒரு நாளிலேயே ஜெனி மிகவும் ஒய்ந்து போய் விட்டது போல் இருந்தாள். அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. மாலை வந்த ப்ரித்வி ஜெனி எங்கே என்று கேட்டதற்கு,
“அவளுக்கு உடம்பு சரியில்லைங்க படுத்திருக்கா...” புனிதா சமாளிக்க...
இரவு வீட்டிற்கு வந்த ஸ்டீபனும் சாதாரணமாக இருந்ததால்... ப்ரித்விக்கு எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை... சாப்பிட்டு விட்டு அவன் அறைக்குச் சென்று விட்டான்.
“புனிதா எனக்கு நாளை மறுநாள்ல இருந்து சென்னையில இருக்கிற ஆபீஸ்க்கு போகணும். ரெண்டு வாரம்தான் லீவ் எடுத்தேன். மீதி இருக்கிற மூன்னு வாரம் இங்க இருந்து வொர்க் பண்ணனும்.”
“நம்ம வீட்ல இருந்தா... போயிட்டு வர வசதியா இருக்கும். நாளைக்குக் காலையில இங்கிருந்து கிளம்புவோமா...” தங்கள் அறையில் ப்ரித்வி புனிதாவை பார்த்து கேட்க... புனிதா பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“என்ன ஆச்சு புனிதா?”
“இல்லை ஜெனிக்கு உடம்பு சரியில்லை... இப்ப எப்படி விட்டுட்டு வர்றது? நான் மட்டும் வேணா இங்க ரெண்டு நாள் இருந்திட்டு வரட்டுமா...” ப்ரித்வி திட்டுவானோ என்று புனிதா பயந்து கொண்டு கேட்க...
“ஹே... இதைச் சொல்ல ஏன் இவ்வளவு பயம்? நீ இல்லாமல் இருக்கக் கஷ்ட்டமா தான் இருக்கும். ஆனா US போன பிறகு நாம தனியாத் தானே இருக்கப் போறோம். அதனால பரவாயில்லை நான் சமாளிச்சிகிறேன்.” ப்ரித்வி சொன்னதும், புனிதா நிம்மதியாக உணர்ந்தாள்.
மறுநாள் காலை உணவிற்குப் பிறகு ப்ரித்வி ஜெனியை பார்க்க... அவள் அறைக்குச் சென்றான். ஜெனி சிறிது நேரத்திற்கு முன்பு தான் குளித்து விட்டு வந்து மீண்டும் கட்டிலில் படுத்திருந்தாள்.
கண்கள் கலங்கி இருக்க... எதையோ நினைத்தபடி படுத்திருந்தவள், அவள் அறைக்கு யாரோ வரும் சத்தம் கேட்டு... யாரையும் பார்க்க பிடிக்காமல் கண்களை மூடிக்கொண்டாள்.
ப்ரித்வி ஜெனியின் கட்டிலின் அருகே செல்ல... அவன் பின்னே புனிதாவும் வந்தாள். புனிதாவிற்கு ஒரே பயம் ப்ரித்வி எதுவும் கண்டுபிடித்து விடுவானோ என்று....
“ஜெனி...” ப்ரித்வி மெதுவாக அழைக்க...
ப்ரித்வியின் குரல் கேட்டு ஜெனி மெதுவாகக் கண் திறந்தாள். அவளின் சிவந்த விழிகளையும், வெளுத்த முகத்தையும் பார்த் ப்ரித்வி உண்மையிலேயே அவளுக்குக் காய்ச்சல் என்று நம்பி விட்டான்.
“இப்ப எப்படி ஜெனி இருக்கு? பரவாயில்லையா...”
ஜெனிக்கு ஒன்றும் புரியவில்லை... இருந்தாலும் அவள் தலை அசைக்க...
“சரி ரெஸ்ட் எடு... உங்க அக்கா உன்னோட இருக்க ஆசைப்பட்டா... அதனால நான் மட்டும் இன்னைக்குக் கிளம்புறேன்.” என்று ப்ரித்வி விடைபெற... ஜெனி சோர்வாகக் கண்களை மூடிக் கொண்டாள். அதுவரை என்ன ஆகுமோ என்று உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்த புனிதா... அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியே விட்டாள்.
ப்ரித்வி வீட்டில் இருந்து அவனை அழைத்துச் செல்ல கார் வந்தது. அவனும் அதில் கிளம்பி சென்றான்.
ஜெப்ரியும் முன் தினம் மாலைதான் தன் மனைவியுடன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான். எப்போதும் கலகலப்பாக இருக்கும் விஜய் உர்ரென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு திரிந்தான்.
காலை தாமதமாக எழுந்து வந்தவன், இன்றும் அமைதியாக இருக்க... ஜெப்ரிக்கு பொறுக்கவில்லை...
“என்ன டா நீயெல்லாம் அமைதி ஆகிட்ட?... நாடு தாங்காது பார்த்துக்கோ...” ஜெப்ரி பேசியது காதில் விழாதது போல்... விஜய் தன் சத்து மாவு கஞ்சியைப் பருக...
“என்ன ஆச்சு விஜய்? ஜெனியை பார்க்க முடியலைன்னு சோகமா இருக்கியா...” ஜெப்ரி விடாமல் வம்பிழுக்க...விஜய் அவனைப் பார்த்து முறைத்தான்.
விஜய் பதில் சொல்லவில்லை என்றதும் ஜெப்ரி தன் அம்மாவிடம் “பாவம்மா ஜெனியை பார்க்க முடியலைன்னு பீலிங்ஸ் போலிருக்கு... நீங்க எதாவது செய்யக் கூடாதா...” என்றதும், செல்வராணி தன் இரு மகன்களையும் பார்த்து சிரிக்க...
“நீ சும்மா இருக்க மாட்டியா...” ஜெப்ரியை பார்த்து சொன்ன விஜய் தொடர்ந்து “நான் உன்கிட்ட வந்து ஜெனியை லவ் பண்றேன்னு சொன்னேன்னா... நீயா ஏன் ஓவரா கற்பனை பண்ற..” என்றான் கோபமாக...
“ஓ... நீ ஜெனியை லவ் பண்ணலையா... அப்ப உனக்கும் லின்சிக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணலாமா...” ஜெப்ரி கடுப்படிக்க...
“இந்த உலகத்தில ஜெனியும் லின்சியும் மட்டும் தானே பொண்ணுங்க... ஏன் வேற யாரும் இல்லை பாரு.....” என்ற விஜய் தொடர்ந்து “அம்மா எனக்கு நீங்களே ஒரு அழகான பொண்ணு பாருங்கம்மா... இவளுங்க ரெண்டு போரையும் விட ரொம்ப அழகா இருக்கணும்.” என்றவன்
“இவளுங்களை விட்டா எனக்கு வேற பெண்ணே கிடைக்காது பாரு...” என்று முனங்கியபடி அங்கிருந்து எழுந்து சென்றான். ஜெப்ரியும், செல்வராணியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
விஜய் எழுந்து சென்றதும் “என்ன ஆச்சு மா இவனுக்கு. இவன் தானே என் கல்யாணத்தில ஜெனி பின்னாடியே சுத்திட்டு இருந்தான். டிரஸ் வேற வாங்கிக் கொடுத்தான்.” ஜெப்ரி குழம்ப...
“இவன் வேகத்துக்கு எல்லோரும் ஆடுவாங்களா... ஜெனி ரொம்ப அமைதி.... இவன்தான் எதாவது அவசரப்பட்டிருப்பான். அவ பயந்திருப்பா... இவனுக்குக் கோபம் வந்திருக்கும்” செல்வராணி நடந்ததை ஓரளவு சரியாகவே உயுகித்தார்.
ஓ... அம்மா சொல்ற மாதிரி இருக்குமோ... என்பது போல் ஜெப்ரி பார்த்திருந்தான்.
விஜய் வழக்கம் போல் காலை தன் ஹோட்டலுக்குச் சென்று விட்டு வந்தவன், குளித்துத் தயாராகி அறையில் இருந்து வெளியே வந்த போது ப்ரித்வியும் வந்திருந்தான்.
ப்ரித்வியைப் பார்த்ததும் புன்னகைத்த விஜய் அவன் அருகில் சென்று உட்கார்ந்தவன், அப்போது தான் அங்கே புனிதா இல்லாததைக் கவனித்தான்.
“எங்கண்ணா அண்ணி?”
“ஷப்பா... எல்லோரும் வந்ததுல இருந்து அவளைத் தான்டா கேட்கறீங்க.” போலியாக அலுத்துக்கொண்ட ப்ரித்வி “ஜெனிக்கு உடம்பு சரி இல்லை... அதனால ரெண்டு நாள் கழிச்சு வரேன்னு சொன்னா...” என்றதும், விஜய்யின் முகம் நொடியில் மாறியது.
“என்னவாம்...” ஜெனிக்கு உடம்புக்கு என்ன என்ற அர்த்தத்தில் விஜய் கேட்க...
“அதுதான் சொன்னேன்ல ரெண்டு நாள் கழிச்சு வருவான்னு...” புரியாமல் ப்ரித்வி பதில் சொல்ல... அவர்கள் பேசுவதைக் கேட்டுகொண்டிருந்த ஜெப்ரி சிரித்தான்.
“நீ ஏன்டா சிரிக்கிற?” ப்ரித்வி ஜெப்ரியை கேட்க...
“அவனுக்கு அண்ணி வந்தா என்ன? வரலைன்னா என்ன? அவன் அதையா கேட்டான். ஜெனிக்கு உடம்புக்கு என்னன்னு கேட்கிறான் இல்லையா பிரதர்...” ஜெப்ரி கிண்டலாக விஜய்யை பார்க்க...
“நீ காலையில இருந்து என்னைச் சீன்டிட்டே இருக்க... கல்யாணம் ஆகிடுச்சுன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்... வச்சு மொத்திடுவேன்.” விஜய் ஜெப்ரியை மிரட்ட...
“உண்மைய சொன்னா உனக்கு ஏன் கோபம் வருது?” ஜெப்ரியும் பதிலுக்கு முறைக்க... விட்டால் இரண்டு பேரும் அடித்துக் கொள்வார்கள் போல் இருந்தது.
“டேய் ஆரம்பிச்சிடீங்களா.... இன்னும் சண்டை வரலையேன்னு நினைச்சேன். விஜய் உனக்கு டைம் ஆகலை... நீ சாப்பிட வா...” செல்வராணி மகன்களை அதட்ட...
ஜெப்ரியை பார்த்து முறைத்துக்கொண்டே விஜய் சாப்பிடாமலே ஹோட்டல் கிளம்பி சென்றான்.
“என்ன டா ஆச்சு?... எதோ விளையாட்டுக்கு பேசுறீங்கன்னு நினைச்சேன். திடிர்ன்னு ரெண்டு பேரும் சீரியஸ் ஆகிடீங்க. பாரு அவன் கோபத்தில சாப்பிடாமலே போய்டான்.” ப்ரித்வி ஜெப்ரியிடம் சொல்ல...
“அவன் ஒன்னும் என் மேல இருக்கிற கோபத்தில சாப்பிடாம போகலை... ஜெனிக்கு உடம்பு முடியலைன்னு வருத்ததில சாப்பிடாம போய்ட்டான். இது கூடப் புரியலையே... நீங்க இன்னும் வளரனும் பிரதர்.” ஜெப்ரி கிண்டலாகச் சிரிக்க...
“டேய்... நீயா எதாவது உளறாத....” என்றான் ப்ரித்வி கடுப்புடன்.
“நான் ஒன்னும் உளறலை பிரதர்... நீங்க வேணா அம்மா கிட்டயே கேட்டுக் கன்பார்ம் பண்ணிக்கோங்க. நான் என் பொண்டாட்டிய பார்த்து ரொம்ப நேரம் ஆச்சு.” என்ற ஜெப்ரி ப்ரின்சியைத் தேடி செல்ல... ப்ரித்வி தன் அம்மாவை கேள்வியாகப் பார்த்தான்.
செல்வராணி ஆரம்பத்தில் இருந்து நடந்த அனைத்தையும் சொல்ல...
“ஓ.... எனக்குத் தெரியாம இவ்வளவு நடந்திருக்கா...”என்றான் ப்ரித்வி புன்னகையுடன். செல்வராணியும் பதிலுக்குப் புன்னகைத்தார்.
சிறிது நேரம் சென்று ப்ரித்வியும், ஜெப்ரியும் தங்கள் தம்பியை சமாதானம் செய்ய அவனுடைய ஹோட்டலுக்குச் செல்ல... தன் அண்ணன்களைப் பார்த்தும் விஜய் புன்னகையுடன் எழுந்து வந்து வரவேற்றான்.
ப்ரித்வியும், ஜெப்ரியும் ஜெனியை பற்றிப் பேசாமல் கவனமாக வேறு விஷயங்கள் பேச... விஜய்யும் இயல்பாக இருந்தான். வெகு நாட்கள் கழித்து உடன்பிறப்புகள் மூவரும் மட்டும் இருந்ததால்... சேர்ந்து பேசி அரட்டை அடித்தபடி அங்கேயே சாப்பிட்டனர்.
இரண்டு நாட்கள் எந்தப் பிரச்சனையும் இன்றிச் சுமுகமாகச் சென்றது. ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்டீபனின் குடும்பம் வழக்கம் போல் தேவாலையம் சென்றனர். ஜெனிக்கு அங்கே சென்றதும் ராஜேஷின் நினைவுதான் வந்தது. கடந்த இருமுறை அவனை அங்கே சந்தித்ததை நினைத்து பார்த்தவளின் விழிகள் கலங்க... அவளையும் அறியாமல் அவள் விழிகள் ராஜேஷ் எங்காவது தென்படுகிறானா என்று தேடவே செய்தது.
காரில் வந்து ஏறும்வரை ஜெனியின் விழிகள் ராஜேஷை தேடி அலைபாய்ந்த படியே இருந்தது. அதைப் புனிதாவும் ஸ்டீபனும் கவனித்தனர்.
வீட்டிற்கு வந்ததும் புனிதா ஜெனியின் அறைக்கு வந்தவள் “தப்பு பண்ற ஜெனி... இவ்வளவு பட்டும் நீ திருந்தலை...” என்று கோபப்பட...
“ராஜேஷை நான் தான் தேடி போய்ப் பேசினேன். நான் போய்ப் பேசலைன்னா அவனுக்கு என்னை யாருன்னே தெரிஞ்சிருக்காது. நான் அவனை ஆசை காட்டி ஏம்மாத்திடேன்னு தோணுது... அவன்கிட்ட ஒரு சாரியாவது கேட்கணும்.” ஜெனி அவள் பக்கத்து நியாயத்தைச் சொல்ல...
“நீ அவனுக்காகப் பார்தா... நம்ம குடும்பத்தை யார் பார்க்கிறது? அப்பா அவங்க வீட்ல போய்ப் பேசிட்டு வந்திட்டார். இப்ப எல்லாம் சுமுகமா முடிஞ்சிட்டது. ராஜேஷ் புரிஞ்சிப்பான். நீ மறுபடியும் எதையும் ஆரம்பிக்காத...” ஜெனியை எச்சரித்து விட்டு புனிதா அங்கிருந்து சென்றாள்.
புனிதாவை தனியே அழைத்துச் சென்று ஸ்டீபன் விசாரிக்க... புனிதா ஜெனி பேசியதை அப்படியே சொன்னாள். அவளுக்குத் தன் தந்தையிடம் மறைத்து மேலும் எதுவும் சிக்கல் வந்து விடக் கூடாது என்று நினைத்தாள். அவள் சொன்னதைக் கேட்ட ஸ்டீபன் யோசித்தார்.
அன்று மதிய உணவு அருந்த ஜெனி டைனிங் ஹாலுக்குத்தான் வரவேண்டும் என்று லீனா அவளை வற்புறுத்தி அழைத்துச் சென்றார். ஜெனிக்கு உணவே செல்லவில்லை... ஸ்டீபன்னுக்குப் பயந்து கஷ்டப்பட்டு விழுங்கி வைத்தாள்.
ஜெனி சாப்பிட்டு விட்டு எழுந்து செல்லும் போது ஸ்டீபன் அவளை அழைத்தார். ஜெனி சென்று அவர் எதிரில் இருந்த சோபாவில் பயந்து கொண்டே உட்கார....
“நான் அந்தப் பையன் வீட்டுக்கு போய் இருந்தேன். என்னோட உன் காலேஜ் ப்ரொபசர் ஆல்பர்ட்டும் வந்திருந்தார்.”
“அந்தப் பையனோட அப்பா என்னை ரொம்பக் கேவலமா பார்த்தார். உன் பொண்ணை ஒழுங்கா வளர்க்க துப்பில்லை... நீ என் பையனை பத்தி பேச வந்துடியான்னு கேட்டார்.”
“பிறகு நான் ரொம்பச் சொன்னதும், அவனோட அம்மா என் பையன் உங்க பொண்ணு பின்னாடி வர மாட்டான். அதே போல உங்க பொண்ணும் எங்க பையன் பின்னால வராம பார்த்துக்கோங்க. வந்தா ரொம்ப அசிங்கமாகிடும்னு சொன்னாங்க.”
இப்படிச் சொன்னால்தான் ஜெனி ராஜேஷை திரும்பவும் பார்க்க நினைக்க மாட்டாள் என்று ஸ்டீபன் வேண்டுமென்றே நடந்ததை மாற்றிச் சொல்ல... அவளுக்கு ராஜேஷ் குடும்பத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதனால் ஸ்டீபன் சொன்னதை நம்பி விட்டாள்.
ஜெனிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. தனக்கே இப்படியென்றால் தன் தந்தைக்கு எவ்வளவு மனகஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்தாள்.