வெள்ளிக்கிழமை காலை எழுந்தது முதல் ஒரே பரபரப்பாக இருந்தாள் அஷ்டலட்சுமி. முதல் நாளே கட்ட வேண்டிய புடவை, போட வேண்டிய நகை என சகலத்தையும் ஒரு முறைக்கு பல்லாயிரம் முறை பார்த்து பார்த்து எடுத்து வைத்துவிட்டாலும், இப்போது அதை அணியும்போது தனக்கு பொருத்தமாய் இருக்கிறதா? இல்லையா? என ஆயிரத்தெட்டு சந்தேகம் வந்து முளைத்தது அவளுக்கு.
நீலாவை அடுக்களைக்குள் நிற்கவே விடாமல் சந்தேகமாய் கேட்டு அவரை பாடாய்படுத்திக்கொண்டிருந்தாள்.
ராகு காலம் பத்தரை முதல் பன்னிரண்டு வரை இருப்பதால் பன்னிரண்டு மணிக்கு மேல் வருவதாய் தரகர் சொன்னது இருவருக்குமே வசதியாய் போனது.
நீலாவுக்கோ, அஷ்டா படுத்தும் பாட்டில் அடுக்களை வேலை அப்படியே நின்றுப்போக, அதை சரிக்கட்ட அவர்கள் தாமதமாய் வருவது வசதியாய் போனது.
அஷ்டாவுக்கோ இன்னும் இரண்டு புடவைகள், சிகையலங்காரம் என தன்னை சோதித்துப்பார்க்க நேரம் கிடைத்தது.
சண்முகம் வீட்டை ஒழுங்கு செய்கிறேன் பேர்விழி என இருப்பதை இடமாற்றுவதும், பின்னே அதை அதே இடத்தில் வைப்பதும் என அல்லாடிக்கொண்டிருக்க, மங்களம் பாட்டி கோவிலுக்கு சென்று பேத்தி பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு வருவதாய் சொல்லி சென்றிருந்தார்.
அஷ்டாவின் முன் கொசுவத்தை கைகளால் மடிப்பெடுத்து நீவிவிட்டபடி, “ஏங்க, சம்பந்தி வீட்டுல சரியா வந்துடுவாங்க தானே? வழி தெரியுதோ என்னவோ? ஒன்னும் அலைக்கழிப்பு இருக்காதே? நீங்க கொஞ்சம் தூரம் போய் அழைச்சுட்டு வந்தா என்னவாம்?” கேள்விகள் கேள்வியாய் இல்லாமல், கெஞ்சலாகவே ஒலித்தது நீலாவிடம் இருந்து.
“எல்லாம் உன் தம்பி பார்த்துப்பான்! ஸ்ரீரங்கம் வரைக்கும் வந்துட்டு போன் பண்ண சொல்லிருக்கேன், அதுக்குமேல சிதம்பரம் கூட்டிக்கிட்டு வந்துடுவான்” என்றான் சண்முகம்.
அதன்பிறகே நீலாவுக்கு நிம்மதியாய் இருந்தது.
“இந்தாடி, எல்லாம் சரியா தான் இருக்கு, இதுக்குமேல இடுப்பு தெரியுது, கொசுவம் தடுக்குதுன்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்த, அவ்ளோதான் சொல்லிட்டேன்” என்ற நீலா, அஷ்டா தலையில் வைத்த இரண்டு முழம் பூவை மீண்டும் சரிசெய்துவிட்டு அடுக்குளைக்குள் நுழைந்தார்.
கண்ணாடி முன்னே அமர்ந்திருந்த அஷ்டாவுக்கு கடிகாரம் நொண்டிக்காலில் நொண்டி நொண்டி செல்வதை போல தோன்றியது.
‘ஒழுங்கா அப்பா காட்டுனப்போவே போட்டோ பார்த்துருக்கலாம்’
மீண்டும் கடிகாரத்தை பார்த்தவள், “ப்ச்! இன்னும் அரைமணி நேரம் இருக்கு, பன்னெண்டுன்னா, பன்னெண்டுக்கு தான் வரணுமா?” என சலித்துக்கொண்டாள்.
‘என் போட்டோ பார்த்து தானே ஓகே சொல்லிருப்பாங்க? நேர்ல பார்த்துட்டு எதுவும் வேண்டான்னு சொல்லிட மாட்டாங்களே” என எண்ணியபடி தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள்.
பெரிதாய் குறை ஒன்றும் தெரியாது போக, ‘ப்ச், ஓவரா குழம்புறோம் போல!’ என்று நினைத்து அமைதியாய் கண்ணை மூடி அமர்ந்துக்கொண்டாள்.
அரைமணி நேரம் கழிய, வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சப்தம் கேட்டதும், அஷ்டாவின் உடலில் சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டது. அவசரமாய் எழுந்தவள் தன்னை கண்ணாடியில் மீண்டுமாய் ஒருமுறை பார்த்துவிட்டு வேகமாய் ஜன்னல் அருகே சென்றாள்.
வெண்ணையில் குழைத்த விக்ரகமென மரூன் நிற மைசூர் சில்க்கில் சிரித்த முகமாய் கைக்கூப்பி நின்றிருந்த விஜயாவை கண்டதும், ‘இதான் என் மாமியாரோ?’ என கூர்ந்து நோக்கலானாள்.
‘மாமியாரே அழகா இருக்காங்கன்………..னா………..?!’ யோசனையாய் வரப்போறவனை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவர் நெற்றியில் இல்லாத குங்குமம், அவளுக்கு மாமனார் இல்லை என சொல்லிவிட, ‘இவங்க மட்டும் தான் வந்துருக்காங்களா? பையன் வரலையோ?’ என சந்தேகம் வந்ததும் சட்டென உள்ளுக்குள் ஒரு சோர்வு வந்துவிட, வாசலில் விஜயாவை வரவேற்றுக்கொண்டிருந்த சண்முகம்,
“தம்பி வரலிங்களா?” என்றார்.
விஜயாவை முந்திக்கொண்ட சிதம்பரம், “ஆட்டோல ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்துட்டு இருந்தேன் மாமா… தெரு முனையில அத்தை வந்துட்டு இருக்குறதை பார்த்து இவங்களுக்கு அறிமுகம் செஞ்சேன்… மூணு பேரா போக வேணாம்ன்னு அத்தை என்னை இறங்கிக்க சொன்னாங்க…
ஆனா, மாப்பிள்ளை தம்பி கேட்கல, என்னை ஆட்டோல அனுப்பிட்டு அத்தைக்கூட பேசிக்கிட்டே நடந்து வராப்பள!” என்றவரின் முகம், பெருமையில் பிரகாசித்தது.
“என்ன சிதம்பரம்? மாப்பிள்ளையை நடக்க விட்டு கூட்டிட்டு வர?” தன் தம்பியை குற்றம் சாட்டும் பார்வையில் கடிந்துக்கொண்டார் நீலா.
விஜயா, “இதுல என்ன அண்ணி இருக்கு? நான் அம்மாவை நடக்காம ஆட்டோல வாங்கன்னு கூப்பிட்டேன், அவங்க நடந்தே வரேன்னு பிடிவாதமா சொல்லவும், வேற வழி இல்லாம அவங்களை நடக்க விட்டுட்டு நாங்க ஆட்டோல வந்துட்டோம், அதுவே சங்கடமா இருக்கு எனக்கு!”
மங்களம் பாட்டியை நடக்க வைத்துவிட்டு தாங்கள் சொகுசாய் வந்துவிட்டோம் என உண்மையிலுமே அவர் வருந்தி பேசுவது முகத்தில் தெரிய, அவரது குணநலன் கண்டு மனம் லேசாக திருப்தியுற்றது பெண்ணை பெற்றோருக்கு.
நீலா, “நிக்குறீங்களே, உள்ள வாங்க”
விஜயா, “த்தோ… கண்ணன் கிட்ட வந்துட்டான், சேர்ந்தே வரோம்” என அவர் வெளியே பார்க்க, அங்கே வீரா… மங்களம் பாட்டியுடன் நடந்து வந்துக்கொண்டிருந்தான்.
‘ஓ! பேரு கண்ணன் ஆ?’ மனதுக்குள் பெயரை வாங்கிக்கொண்டு,
ஜன்னல் அருகே நின்ற எக்கி எக்கி பார்த்தும் அவர் காட்டிய திக்கில் நடந்து வருபவன் அஷ்டாவுக்கு தெரியாது போக, ‘இந்த காம்பவுன்ட்டை எவன் இவ்ளோ பெருசா கட்ட சொன்னதாம்?’ என பதினைந்து வருடங்களுக்கு முன் கட்டிய அந்த வீட்டின் மேல் கடுப்பு கிளம்பியது அவளுக்கு.
சண்முகம் முகம் மலர, “வாங்க… வாங்க… வாங்க…” என கரம் கூப்பி அழைப்பதை கண்டதும், “வந்துட்டாங்க போல” என எண்ணிக்கொண்டாள்.
வாசல் தாண்டி உள்ளே நுழைந்த மங்களம் பாட்டி, “வழியை விடுடா, என் பேராண்டி உள்ள வரட்டும்” என அதட்டலாய் சொல்ல,
‘பாரேன், அதுக்குள்ள பேரன் ஆகியாச்சா?’ என உள்ளுக்குள் உதடு பிதுக்கினாள் அவள்.
“வாங்க தம்பி, நீங்களும் வாங்க” என இருவரையும் அழைத்தவர், வழி விட்டு உள்ளே செல்ல, அவர் பின்னோடு சிதம்பரம், மங்களம் பாட்டி, விஜயா எல்லாரும் செல்ல, அடுத்து வருபவனை காண ஜன்னல் கம்பிகளுக்குள் முகம் அழுத்தி வெகு ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அடியேய்…”
“ஏய்…”
“ப்ச்” தோள் தட்டிய கரத்தை தட்டிவிட்டு அவள் தேடலை தொடர, ‘நங்’கென்று முதுகில் விழுந்தது ஒரு அடி.
‘ஸ்ஸ்.. ஆஆ… என்னம்மா?”
“இப்படியே பராக்கு பார்த்துட்டு நின்னுட்டு இருக்காத! அங்க வந்ததும் எல்லாரும் ‘வணக்கம்’ சொல்லிட்டு அமைதியா நிக்கணும்… ‘உட்காரு’ன்னு சொன்னதும் தான் உட்காரனும்” என நீலா தொடங்க,
“ஐயோஓஓ! யம்மா.. இதையே தானே ரெண்டு நாளா சொல்லி பிளேடு போடுறீங்க? இன்னும் என்ன மிச்சம் இருக்காம்?” என கத்திவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் போனவளுக்கு வெறும் வாசலே காட்சி தர,
“ச்சை… உங்களால நல்ல ஸீனு போய்டுச்சு” என தலை கைவைத்துக்கொண்டவளை… முறைக்க மட்டுமே முடிந்தது நீலாவால்.
“கூப்பிடும் போது வந்து சேரு” என சொல்லிவிட்டு வந்தவர்களை கவனிக்க சென்றுவிட்டார்.
சோபாவில் அமர்ந்த வீரா, பொறுமையாய் வீட்டை கண்களால் சுற்றினான். சற்று எட்டி பார்த்தால் அடுக்களைக்கூட தெரிந்தது.
தேவைக்கு அதிகமாய் பொருட்கள் குவிந்து கிடக்காமல், அளவாக, அதே சமயம் நேர்த்தியாக அடுக்கப்பட்டு வைத்திருந்ததை பார்த்து, பாராட்டாய் அவன் புருவம் உயர்த்த, அந்நேரம் அஷ்டாவின் அறையில் இருந்து வெளி வந்த நீலாவிடம்,
“ஆன்ட்டி? வீட்டை ரொம்ப நல்லா வச்சுருக்கீங்க! சுத்தமா, நேர்த்தியா இருக்கு…
இங்கிருந்து பார்த்தா கிட்சன் கொஞ்சம் தான் தெரியுது! நான் போய் பார்க்கலாமா?” சரளமாய் பேசினான் வீரா.
தன்னிடம் பேசுவான்! அதிலும் இத்தனை பேசுவான்! என எதிர்ப்பார்த்திராத நீலா, இதற்கு என்ன சொல்வது என்று கூட தெரியாது திணறி நிற்க,
வீராவின் கரத்தை அழுத்தி, ‘சும்மா இரு’ என கண்களால் அடக்கினார் விஜயா.
விஜயா, “அவன் எதார்த்தமா கேட்குறான்… நீங்க ஒன்னும் நினைச்சுக்காதீங்க அண்ணி” என்றவர்,
“தரகரும் இன்னைக்கு வரதா தான் சொன்னாரு… அப்பறம் என்னவோ திடீர் வேலை வந்துடுச்சு போல, நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டாரு” என்றார் சண்முகத்திடம்.
“எங்களுக்கும் காலைல தான் தகவல் சொன்னாரு” என்றார் அவர்.
அடுத்து என்ன பேசுவது என பிடிபடவில்லை. அமைதி நீடிக்க, அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வீரா, சட்டென நியாபகம் வர பெற்றவனாய்,
“நீங்க லோட் வண்டி வச்சுருக்கீங்கன்னு சொன்னாங்க!” என ஆரம்பித்தான் சண்முகத்திடம்.
“ஆமா தம்பி”
“அதுக்கு பெட்ரோல், டீசல் எல்லாம் எங்க அடிக்குறீங்க?” என அடுத்து கேட்டதும், விஜயாவுக்கு நெற்றியில் அடித்துக்கொள்ளலாமா என்று இருந்தது.
“அதுக்கு ஆஃபர் எல்லாம் குடுக்குறாங்களா? எங்க ‘பங்க்’ல லிட்டருக்கு 25பைசா குடுப்போம்…” என்று சொல்ல, “வீர்…ரா….” என அழுத்தி அழைத்தார் விஜயா.
விஜயா ‘வீரா’ என சொன்னதிலேயே அவன் ‘கப்சிப்’ என்று ஆகிவிட்டான்.
சூழ்நிலை மாற, சிறுசிறு கிண்ணங்களில் ஸ்பூன் போட்டு கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார் நீலா.
அதை பார்த்ததும், “ஆன்ட்டி, இது என்னது?” என்றான் வீரா.
“கேரெட் அல்வா தம்பி”
“வாவ்!” என்றவன், ஒரு வாய் எடுத்து உண்டுவிட்டு, “ம்ம்… சூப்பரா இருக்கு ஆன்ட்டி” என்றதோடு, “அம்மா நீங்க ஒரு ஸ்பூன் மட்டும் சாப்பிடுங்க… அதுக்கூட ஆன்ட்டி செஞ்சு குடுத்ததுக்காக தான்” என்றான் விஜயாவிடம்.
“ஏன் தம்பி? நல்லா சாப்பிடட்டுமே!”
“ஐயோ ஆன்ட்டி! அம்மாக்கு சுகரும் பி.பியும் போட்டி போட்டுக்கிட்டு நிக்குது! இவ்ளோ சுவீட்டா சாப்பிட்டா நாங்க இங்கிருந்து நேரா எங்க பேமிலி டாக்டரை தான் பார்க்க போனும்” என்று சொல்ல,
“உதைப்படுவ படவா! இவன் சொல்ற அளவுக்கெல்லாம் இல்ல அண்ணி… பிபி கொஞ்சம் இருக்கு… சுகர் மையில்டா இருக்கதால முடிஞ்சவரை ஸ்வீட்ஸ் அவாயிட் பண்ண சொன்னாங்க! அதுக்கு இவனே நான் சக்கரை நோயாளின்னு முடிவு கட்டி இனிப்பை கண்ணுலேயே காட்டுறது இல்ல” என்று மகனை முறைத்துக்கொண்டு குறைப்படித்தார் விஜயா.
சண்முகத்துக்கும் நீலாவுக்கும் இவர்கள் உரையாடலை கண்டு சிரிப்பு வந்தது.
நீலா, “எங்க அத்தைக்கு கூட சுகர் இருக்கு… ஆனாலும் அவங்க இனிப்பு சாப்பிடுவாங்க! சாப்பிட்டுட்டு ஒரு மாத்திரை போட்டா முடிஞ்சுதுன்னு ஈசியா சொல்லிடுவாங்க” என்றதும்,
“பாட்டி எங்க? உள்ள வந்த பிறகு பார்க்கலையே?” என்றான் வீரா.
“அது… பாப்பா உள்ளே தனியா இருக்கான்னு துணைக்கு இருக்காங்க” என்றார் சண்முகம்.
அவர் காட்டிய அறை பக்கம் பார்த்தவன், ‘ஓ! கிழிஞ்ச நோட்டு அதுக்குள்ள தான் பதுங்கி இருக்கா!’ என தெரிந்துகொண்டான்.
அப்போது உள்ளே வந்த சிதம்பரம் சிரித்துக்கொண்டே, “பக்கத்துல ஒரு வீட்டுல வெண்ணை பிஸ்கட் செய்வாங்க! அருமையா இருக்கும்! உங்களுக்கு குடுக்கலாம்ன்னு வாங்கிட்டு வர போனேன்” என்ற தகவலோடு இரு டப்பாக்களை விஜயாவிடம் நீட்டினார்.
பெரியவர்கள் பேச தயங்குவது புரிந்தது வீராவுக்கு. நீலாவுக்கு ஆளுக்கு முந்தி பேச தயக்கம்.
சண்முகத்துக்கு பெண்களிடம் அத்தனை சுலபமாய் பேசி பழக்கமில்லை என்பதால் விஜயாவிடம் பேச தயக்கம்.
விஜயாவுக்கு தானே முன்னெடுத்து சண்முகத்திடம் எதை? என்ன? எப்படி? பேச என தயக்கம்!
அந்த சங்கடமான அமைதிக்கு முடிவு கட்ட எண்ணி தானே பேச ஆரம்பித்தான் வீரா.
“நான் பொறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே திருச்சி தான் அங்கிள்! காலேஜ் முடிக்குற வரைக்கும் அப்பப்ப பங்க்’ பக்கம் போவேன்… படிப்பு முடிஞ்சதும் முழு பொறுப்பும் நானே எடுத்துக்கிட்டேன்” என்றான்.
அவன் கல்லூரி படிப்பு முடியும் வரை பங்க்’கை பார்த்துக்கொண்டது யார் என்று கேட்க அப்போது அவர்களுக்கு தோன்றியிருக்கவில்லை.
“இந்த வயசுல இவ்ளோ பொறுப்பா இருக்கிறது பெருசு தம்பி” என சண்முகம் சொல்ல, லேசாக குறுகுறுப்போடு அனைவரையும் பார்த்த வீரா,
“அங்கிள், நான் ஒன்னு சொல்லுவேன், கோச்சுக்கக்கூடாது” என்றான் பீடிகையாய்.
“சொல்லுங்க தம்பி” என சண்முகம் அவனை ஊக்க,
“என்னை நீங்க ‘வீரா’ன்னே கூப்பிடுங்களேன்! எதுக்கு தம்பி, கம்பி’ன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு?” என்றதும்,
“அது… அது எப்படி?” என திருதிருவென முழித்தார் சண்முகம்.
“எதுக்கு சொல்றேன்னா? நீங்க என்னை தம்பி தம்பின்னு சொல்லி, உங்க பொண்ணு என்னை ‘சித்தப்பா’ன்னு கூப்பிட்டுட கூடாதுல? அதான்!” என்றதும்,
எதையோ எதிர்ப்பார்த்தவருக்கு சத்தியமாய் அவனிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என நினைக்கவில்லை.
முதலில் திகைத்தவர், பின்னே சிரிப்பில் துடிக்கும் உதடுகளை மறைத்தபடி முகத்தை திருப்ப, அவரின் நிலை தான் நீலாவுக்கும்.
ஆனால், இருவரை போல்லல்லாது சிதம்பரம் தாராளமாய் வாய்விட்டே சிரித்தார்.
“அப்ப நான் உங்களை எப்படி கூப்பிடுறதாம்?” சிரித்துக்கொண்டே சிதம்பரம் கேட்க,
“நீங்க என்னை தம்பின்னு சொல்லலாம்… பிரச்சனை இல்லை! ஏன்னா, ஆன்ட்டிக்கு நீங்க தம்பிங்குறப்போ, மாமா முறை தானே வருவீங்க? அப்ப நானும் அதே முறை தானே!” என்றுவிட,
‘டேய், சும்மா இரேன்டா’ என சங்கடமாய் நெளிந்தார் விஜயா.
“ஹாஹாஹா” இம்முறை சிதம்பரத்துடன் சண்முகமும் இணைந்துக்கொண்டார்.
சிதம்பரம் கண்களாலேயே, ‘பையன் எப்படி?’ என தன் அக்காளிடம் கேட்க, அவர் கண்கள் வெகு திருப்தியாய் மூடி திறந்தன.
அதன்பின்னே மனமுவந்து பெண்ணை பையன் கண்ணில் காட்டுவோம் என கருணை கொண்டவராய் சண்முகம் அஷ்டாவை வர சொன்னார்.