பூ 21:
விமலின் ஆட்கள் மூலம் வந்தனா கடத்தப்பட்டிருந்தாள். யார் தன்னை கடத்தியிருக்கிறார்கள் என்று தெரியாமலேயே கடத்தப்பட்டிருந்தாள்.
“மாமா..! நம்ம வந்தனாவை கூப்பிட ஹாஸ்ட்டல் போனா, அவ அங்க இல்ல மாமா..! அந்த பையன் கூட ஓடிப் போயிட்டதா தகவல் வருது மாமா..!” என்றான் விமல், கனகவேலிடம் நல்லவன் போல்.
“என்ன சொல்ற விமல்..? வந்தனா நிஜமா அப்படி பண்ணிட்டு போயிட்டாளா..?” என்ற கனகவேலிற்கு கொஞ்சமும் நம்பிக்கை வரவில்லை. அவள் எதற்கெடுத்தாலும் பயப்படுவாள் என்று அவருக்குத் தெரியும்.
“என் பொண்ணை அவன் தான் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போயிருக்கனும். அவன் யாரு என்னன்னு எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும். வந்தனா பிரண்ட் ப்ரீத்தியை விசாரி..! விஷயம் வெளிய தெரிய கூடாது. வெளிய தெரிஞ்சா, என் மானம் மரியாதை எல்லாம் காத்துல பறந்துடும். முக்கியமா தலைவர் வீட்டுக்குத் தெரியவே கூடாது..!” என்றார் கனகவேல்.
“நான் பார்த்துக்கிறேன் மாமா..!” என்று வெற்றி சிரிப்புடன் போனை வைத்தான் விமல். ஆனால் அவனே எதிர்பார்க்காத வகையில் ப்ரீத்தி விஜய்க்கு போன் செய்திருந்தாள்.
“சொல்லு பிரீத்தி..!”
“விஜய், வந்தனாவை எங்க தேடியும் காணோம். ஏதோ கார்ல ஏறிப் போனதா வாட்ச்மேன் சொல்றார்..!” என்றாள்.
“என்ன உளர்ற ப்ரீத்தி..? எங்க போயிருக்க போறா..? அவங்க வீட்ல இருந்து எதுவும் வந்து கூட்டிட்டு போயிருப்பாங்க..!” என்றான்.
“இல்லை விஜய்..! வாய்ப்பே இல்லை. நீங்க போன் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னதுல இருந்து அவ அப்படி ஒரு சந்தோஷத்தில் இருந்தா. கல்யாணம் முடியற வரைக்கும் வீட்டுக்கு போக மாட்டேன். அவங்ககிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்னு தான் சொல்லிட்டு இருந்தா. அது மட்டுமில்லாம, அவங்க வந்து கூட்டிட்டு போயிருந்தா, ஹாஸ்ட்டல் வார்டன்கிட்ட இன்பார்ம் பண்ணியிருப்பாங்க. அப்படி எதுவும் பண்ணலை..!” என்றாள்.
“நீ என்ன சொல்ற..? பர்ஸ்ட் ஒன்னு தெரிஞ்சுக்கோ ப்ரீத்தி. நான் வந்தனாவுக்கு போன் பண்ணவே இல்லை. கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நான் சொல்லவே இல்லை. இவ என்ன லூசா..? இதெல்லாம் போன்ல யாராவது பேசுவாங்களா..?யார் எதை சொன்னாலும் நம்புவாளா..? இவளை நேர்ல வந்து நாலு குடு குடுக்கணும்ன்னு தான் நான் அவசர அவசரமா ஊர்ல இருந்து வந்தேன்” என்று எறிந்து விழுந்தான் விஜய்.
“என்ன சொல்றிங்க விஜய்..? நீங்க போன் பண்ணலையா..? அப்போ உங்களை மாதிரி பேசுனது யாரு..? நான் உங்களுக்கு போன் பண்ணி திட்டும் போது கூட நீங்க அமைதியா தான இருந்திங்க..?” என்றாள்.
“நீ போன் பண்ணும் போது நான் எடுக்கலை. துளசி தான் எடுத்திருக்கா..! அவளுக்கு இது ஷாக். அதை வச்சு பிரச்சனை வேற..? நான் வந்தனாவுக்கு போன் பண்ணவே இல்லை..! மறுபடியும் ஏன் என் உசுரை வாங்குறான்னு தெரியலை..!” என்று கடுப்புடன் சொன்னவன், ப்ரீத்தியின் அமைதியைக் கண்டு கொஞ்சம் நிதானம் காத்தான்.
“எனக்கு என்னவோ எல்லாமே தப்பா தெரியுது விஜய்..!நீங்க முடியாதுன்னு சொன்னப்பவே வந்தனா அதோட விட்டிருக்கணும். இப்போ இவளே இதை பெரிசாக்கிட்டான்னு தான் தோணுது..! இப்ப இவளை எங்கன்னு போய் தேடுறது..? அவங்க அம்மாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லலாம்ன்னு பார்த்தா.. அதுக்கும் முடியலை. எப்ப பண்ணாலும் அவ மாமா அந்த விமல் தான் எடுக்கறார்..!” என்றாள்.
“வந்தனாவோட லவ் விஷயம் உன்னைத் தவிர யாருக்கும் தெரியாது தானே..?” என்றான் விஜய் யோசனையுடன். அப்போது கூட வந்தனாவின் லவ் விஷயம் என்று தான் சொன்னானே தவிர, எங்களுடைய விஷயம் என்று அவன் சேர்த்து சொல்லவில்லை என்பதை குறித்துக் கொண்டாள் ப்ரீத்தி.
“அவ மாமா விமல்க்கு தெரியும் விஜய்..!” என்றாள்.
“வாட்..!!! அவனுக்கு எப்படி தெரியும்..?” என்று அதிர்ந்தான் விஜய்.
“இப்போ நிச்சயம் பண்ண கல்யாணத்தை நிறுத்துறதுக்கு அவர்கிட்ட உதவி கேட்டப்போ தான், இந்த விஷயத்தையும் சொல்ல வேண்டியதாய்டுச்சு..!” என்றாள்.
“அவ என்ன முட்டாளா..? எதை எப்ப எப்படி பேசனும்ன்னு தெரியாதா..? ஒரு சின்ன பிரச்னையை இவ்வளவு சிக்கல் ஆக்கி வச்சிருக்கா..?” என்று ஆத்திரத்தில் கத்தி விட்டான் விஜய்.
“எது விஜய் சின்ன விஷயம்..? நீங்க அவளை ஏமாத்துனதா..?” என்று அவள் கேட்க,
“ஏய்..!!!” என்று பொங்கி விட்டான் விஜய்.
“வார்த்தையை பார்த்து பேசு ப்ரீத்தி..? எல்லாம் தெரிஞ்சுகிட்டே தெரியாத மாதிரி பேச உனக்கு வேணா வரும். ஆனா, எனக்கு அப்படியில்லை..!” என்று அவன் வார்த்தைகளை கடித்துத் துப்ப,
“சாரி விஜய்..! இப்போ என்ன பண்றது..? இந்த ஒரு தடவை ஹெல்ப் பண்ணுங்க பிளீஸ்…!” என்றாள்.
“நீ வை..! நான் பார்த்துக்கிறேன்..!” என்ற விஜய்க்கு தலையெல்லாம் வலித்தது. ஒரு நிமிடம் கண்களை மூடி யோசனை செய்தவனுக்கு, எல்லா கோடும் ஒரே இடத்தில் தான் வந்து நின்றது. அது விமல் தான். அவனுடைய நம்பரை எடுப்பது விஜய்க்கு அவ்வளவு கஷ்ட்டமாக இருக்கவில்லை.
“ஹலோ..!” என்றான் விமல்.
“வந்தனா எங்க..?” என்றான் விஜய்.
“யார் நீ..? எங்க பொண்ணைப் பத்தி எங்க கிட்டயே விசாரிக்கிற..?” என்றான் விமல்.
“நடிக்காதடா நாயே..? நான் யாருன்னு உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கணுமே..? மரியாதையா சொல்லு, வந்தனா எங்க..?” என்றான் விஜய்.
“அது உனக்குத் தேவையில்லாத விஷயம் விஜய்..!” என்றான் விமலும்.
“நான் இதுல சம்பந்தப்படலைன்னா, கண்டிப்பா இது எனக்குத் தேவையில்லாத விஷயம் தான். என்னோட குரல்ல பேசுற அளவுக்கு முன்னேறியிருக்க போல..? இந்த வயசுல இவ்வளவு திறமையா உனக்கு..?” என்றான் விஜய்.
“எங்க பொண்ணை என்ன பண்ணனும்ன்னு எங்களுக்குத் தெரியும். உனக்கு விட்ட வேலையைப் பார்..!” என்றான் விமல்.
“அப்போ, வந்தனா உன்னோட கஷ்டடியில் தான் இருக்கா..? அப்படித்தானே” என்றான் சந்தேகமாய்.
“அவளை நாங்களே கடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது..?” என்றான் விமல்.
“நான் அவளைக் கடத்தியிருக்காங்கன்னு சொல்லவேயில்லையே..?” என்றான் விஜய்.
“அது வந்து.. நீ கேட்டதுக்கு அது தான் அர்த்தம்..!” என்று உளறிக் கொட்டி முடித்தான் விமல்.
“நீ இப்போ உண்மையை சொல்றியா..? இல்லை நான் நேரா கனகவேல் கிட்டயே பேசவா..?” என்றான் விஜய்.
“ஆமா, நான் தான் கடத்தி வச்சிருக்கேன். ஒரு உண்மையை சொல்லவா..?நீதான் கூட்டிட்டு வர சொன்ன.. அப்படின்னு சொன்ன உடனேயே அவ தானாவே வண்டியில ஏறிட்டா. ரொம்ப கஷ்ட்டப்பட்டு எல்லாம் கடத்தலை. நீ கேட்ட உண்மையை சொல்லிட்டேன். உன்னால முடிஞ்சதை நீ பாருடா..!” என்று போனை வைத்த விமல், உடனடியாக கனகவேலிற்கு அழைத்தான்.
“என்னாச்சு விமல்..? வந்தனாவை கூட்டிட்டு வந்தாச்சா..?” என்றார் எடுத்த எடுப்பில்.
“மாமா..! நீங்க டெல்லியில இருந்து எப்ப வருவிங்க..?” என்றான்.
“நான் என்ன கேட்கிறேன்..? நீ என்ன கேட்டுட்டு இருக்க..? இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவேன்..!” என்றார்.
“வந்தனா எங்க இருக்கான்னு தெரியலை மாமா. ஆனா ஒரு விஷயம் உறுதியாகி இருக்கு..!” என்றான் பீடிகையுடன்.
“என்ன விஷயம்..?” என்றார்.
“உங்களைப் பழி வாங்குறதுக்காக, அந்த விஜய் தான் ஏதோ பண்ணியிருக்கான் மாமா. வந்தனா வேற ஜாதிப் பையனை விரும்புறது தெரிஞ்சும்..அவளை வச்சு, உங்களை ஜெயிக்க அவன் பிளான் போட்டிருக்கான் மாமா. வந்தனா இது தெரியாம அவன் என்ன சொன்னாலும் தலையாட்டுறா. சிம் வீட்டோட நிச்சயதார்த்தம் வேற நடந்து முடிஞ்சிருக்கு. இந்த நேரத்துல இப்படி ஒரு தலை குனிவை எற்படுத்தியிட்டா, நீங்க தேர்தல்ல ஜெயிக்க முடியாது. தொழில்லயும் உங்களை ஈசியா பின்னாடி தள்ளிடலாம்ன்னு பிளான் போட்ருக்கான் மாமா..!” என்றான் விமல்.
“அப்படி இருக்க வாய்ப்பில்லை விமல். அவன் சின்ன பையனா இருந்தாலும் இது வரைக்கும் நேரா தான் நம்மகிட்ட மோதியிருக்கான். இதுல வேற யாரோ சம்பந்தப்பட்டிருக்காங்க..!” என்றார் கனகவேல்.
“விஷயம் உறுதியாகாம உங்ககிட்ட நான் சொல்லுவேனா மாமா..? அந்த விஜயை நம்புற அளவுக்குக் கூட நீங்க என்னை நம்பலையா..?” என்று பாச நாடத்தில் நன்றாக வேஷம் போட்டான் விமல்.
“நான் அப்படி சொல்லுவேனா விமல்..? இதுக்கு காரணம் அந்த விஜய் மட்டும்ன்னு தெரிஞ்சது, அப்பறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். முதல்ல நமக்கு வந்தனா கிடைக்கணும். அதுக்கப்பறம் நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கறேன்..!” என்றார்.
“மாமா, மாப்பிள்ளை வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சா..?” என்றான் விமல்.
“வாயைக் கழுவு விமல். அப்படி ஒன்னு நடந்தா, இந்த கல்யாணம் நின்னு போய்டும். என் மானம் மரியாதை எல்லாம் போய்டும்..! நான் சொன்னதை மட்டும் செய். தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காத. நம்ம பயலுக கிட்ட சொல்லி, வந்தனா இருக்குற இடத்தை எப்படியாவது கண்டுபிடிக்கப் பாரு..!” என்றார் கனகவேல்.
“சொல்லிட்டிங்கல்ல மாமா..! கவலையை விடுங்க..!” என்று போனை வைத்தவனின் முகத்தில் அப்படி ஒரு அகங்கார சந்தோசம்.
‘விஜய்.. இனி உன் பருப்பு என் மாமன் கிட்ட வேகாதுடா..!’ என்று மனதில் நினைத்துக் கொண்டான் விமல், விஜய்யை பற்றி தெரியாமல்.
விஜய்யைத் தேடி வந்திருந்தான் கண்ணன்.
“என்ன மச்சான்..? இன்னைக்கு ஆபீஸ் லீவா..?” என்றான் விஜய்.
“என்னடா நடக்குது இங்க..? பிரவீன் தான் போன் பண்ணி, உன்கிட்ட வந்து கூட இருக்க சொன்னான். அதான் லீவ் போட்டு வந்தேன்..!” என்றான்.
“இவனுக்கு வேற வேலை இல்லை. நான் ஊர்ல இருந்து டென்சனா கிளம்பவும், உன்னை வர சொல்லியிருப்பான்..!” என்றான் விஜய்.
“என்ன பிரச்சனை..?” என்றான் கண்ணன். விஜய் நடந்ததை சுருக்கமாக சொல்ல,
“இப்போ என்னடா பண்றது..?” என்றான் கண்ணனும் குழம்பிப் போய்.
“எல்லாத்தையும் தாண்டி, வந்தனா நமக்குத் தெரிஞ்ச பொண்ணுடா. அதுக்காகவாவது அவளை காப்பாத்தி ஆகணும். அவங்க அப்பா பார்த்த மாப்பிள்ளை கூட ஓகே தாண்டா. ஆனா, இந்த விமலைப் பார்த்தா அவ்வளவு நல்லவனா தெரியலை..!” என்றான் விஜய்.
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத விஜய். நீயும் முதல்லயே உறுதியா சொல்லியிருக்கணும். இப்ப பாரு, எவ்வளவு சிக்கல்ன்னு. எனக்குத் தெரிஞ்சு வந்தனா ரொம்ப நல்ல பொண்ணுடா. உன்னைய இந்த அளவுக்கு விரும்புற பொண்ணு, நீ தேடுனாலும் கிடைக்காது..!” என்றான் கண்ணன். அவனின் வாய் தான் பேசியதே தவிர, வார்த்தைகள் விஜய்யை ஆழம் பார்த்தது.
“இல்ல கண்ணா..! கன்பார்ம்மா இது சரிப்பட்டு வராது..! இந்த பேச்சை இதோட விட்ரு. அவளைக் கண்டுபிடிச்சு, சேர்க்க வேண்டிய இடத்துல சேர்க்க வேண்டியது மட்டும் நான் என்னோட வேலை. என்னோட பேரை சொன்னா, இவளுக்கு எங்க மச்சான் போச்சு புத்தி. எவ்வளவு டெக்னாலஜி வளர்ந்தாலும், இவளை மாதிரி சில பொண்ணுங்களை திருத்தவே முடியாது..” என்று நொந்து கொண்டான் விஜய்.
“விவரம் இல்லாம இல்ல விஜய். இது உன்மேல அந்த பொண்ணு வச்சிருக்குற கண்மூடித்தனமான காதல் தான். எனக்கு அப்படித்தான் தோணுது..!” என்றான் கண்ணன்.
“நான் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டேன். இடையில இந்த விமல் தான் கேம் ஆடியிருக்கான்…!” என்றவன்,
“சிம்பிள்..! அவனுக்கு தான் இந்த தில்லாலங்கடி வேலை எல்லாம் தெரியுமா..? அவன் அந்த அளவுக்கு வொர்த் இல்லடா..! இந்நேரத்துக்கு அவன், நான் தான் வந்தனாவை கடத்தி வச்சிருக்கேன்னு கனகவேல்கிட்ட சொல்லியிருப்பான். இவன் குறுக்கு புத்தி தான் தெரியுமே. அதனால, அந்த ஆள்கிட்ட பேசியும் பிரயோஜனம் இல்லை. இவன் ஒன்னு வந்தனாவை கல்யாணம் பண்ண திட்டம் போட்டிருக்கணும், இல்லையா… அந்த கனகவேலே இவனுக்கு அவளை கட்டி வைக்கிற மாதிரி செய்றதுக்காக திட்டம் போட்டிருக்கணும்…!” என்றான் விஜய்.
“எப்படி அவ்வளவு சரியா சொல்ற விஜய்..? சொத்துக்காகக் கூட இருக்கலாம்ல..?” என்றான்.
“சொத்துக்காகன்னா, அவன், வந்தனாவை கொலை தான் பண்ணியிருக்கணும். ஆட்டோமேட்டிக்கா இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணி எல்லாத்தையும் அடைய திட்டம் போட்டிருக்கணும். ஆனா, கடத்தி தான் வச்சிருக்கான். அப்போ அவனுக்கு வந்தனா தான் வேணும்ன்னு தெளிவா தெரியுது..!” என்றான் விஜய்.
“அவனுக்கு என்ன வயசுடா ஆகும், மிஞ்சிப் போனா நம்மள விட ஒரு ரெண்டு வயசு கூட இருக்குமா..? இப்பவே இவ்வளவு கிரிமினலா யோசிக்குறான்..?” என்றான் கண்ணன்.
“அவனை வளர்த்தது யாரு..? கனகவேல் ஆச்சே..? கிரிமினலோட நிழல்ல வளர்றவன் அப்படித்தான் இருப்பான். இவன் கொஞ்சம் அதிகமா, அந்த ஆளுக்கு காலை சுத்துன பாம்பு அவ்வளவு தான்..!” என்றான் விஜய்.
“இப்ப என்ன பண்ணலாம்..?” என்றான் கண்ணன்.
“இந்நேரம் எங்க இருப்பான்..?” என்று யோசித்த விஜய், ஒரு முடிவுடன், கனகவேல வீட்டு நம்பருக்கு அடித்தான். போனை எடுத்த ராதிகா..’ஹலோ..ஹலோ..’ என்று சொல்ல, விஜய் ஒன்றும் பேசவில்லை.
“யாரு அத்தை போன்ல..?” என்ற விமலின் குரல் பின்னால் கேட்டது.
“யாருன்னு தெரியலை விமல்..! பேச மாட்டேங்குறாங்க…!” என்றார் ராதிகா.
“குடுங்க..!” என்று போனை வாங்கியவன், அவன் பங்குக்கு ஹலோ சொல்ல, விஜய் பட்டென்று போனை வைத்தான்.
“என்னாச்சு விஜய்..?” என்றான் கண்ணன்.
“இப்போ நான் கூப்பிட்டது, கனகவேல் சென்னை வீட்டு நம்பர். சோ, ஆள் இங்க தான் இருக்கான்..!” என்ற விஜய்,
விமலின் செல்போனிற்கு அழைத்தான். அது விமலுக்கு பிரைவேட் நம்பர் என்று காட்ட, யோசனையுடன் போனை எடுத்தான் விமல்.
“சார்..! அந்த பொண்ணு ரொம்ப வீம்பு பண்ணுது சார்..!” என்றான் குரலை மாற்றி.
ராதிகா அருகில் இருந்த பதட்டத்தில் விமல் கவனிக்கவில்லை.
“என்னடா நம்பர் வரலை..?” என்றான் விமல்.
“சார்..! நீங்கதான சார், கவனமா இருக்கனும்ன்னு சொன்னிங்க. உங்க நம்பரை ட்ரெஸ் பண்ணிட்டாங்கன்னா… அதான் சார், இதை கண்டு பிடிக்க முடியாது சார்..!” என்றான் விஜய், அதே வேறு குரலில்.
“என்ன சொல்றா..?” என்றான்.
“அந்த பொண்ணு விஜய்கிட்ட போகணும் போகணும்ன்னு அடம் பண்ணுது சார்..!” என்றான்.
“நான் வாங்க சொன்னதை எல்லாம் வாங்கியாச்சா..?” என்றான் விமல்.
விஜய்க்கு ஒன்றும் புரியவில்லை. யோசித்தவன்,
“சார், என்ன சார் வாங்கணும்..? சரக்குல இருந்ததால கவனிக்கலை சார்..!” என்றான் விஜய்.
“விளங்கிடும்..! உன்னோட குரல் ஒரு மாதிரி இருக்கும் போதே நினைச்சேன். தாலி வாங்கி வைக்க சொன்னேனே..” என்றான் விமல்.
“ஹோ..! அதா சார்..! நான் கூட என்னமோன்னு நினச்சுட்டேன். நீங்க சொல்லி நாங்க செய்யாம இருப்போமா சார்..! அதெல்லாம் வாங்கி வச்சுட்டோம் சார்..!” என்றான் விஜய்.
“விடியற வரைக்கும் அவளை சமாளிங்க..! நான் வந்து பார்த்துக்கறேன்..?” என்ற விமல் போனை வைக்க போக,
“சார்..சார்..!” என்றான் விஜய் வேகமாக.
“இன்னும் என்னடா..?” என்றான் விமல்.
“நம்ம வேணும்ன்னா, லொக்கேஷனை மாத்திடலாமா சார்..? இங்க எதுவும் பிரச்சனை வந்துடாதே..?” என்றான் விஜய்.
“பிரச்சனை வர வாய்ப்பில்லை. அப்படியே வந்தாலும் அது அந்த விஜய்க்கு தாண்டா வரும். நமக்கு வராது.. நீ போனை வை..!” என்று வைத்து விட்டான் விஜய்.
“எப்படி விஜய்..? இப்படி எல்லாம்..?” என்றான் கண்ணன் சிரிப்புடன்.
“நான் தான் சொன்னேன்ல. இவன் அந்த அளவுக்கு வொர்த் இல்லன்னு. பாரு லூசு எப்படி முழுசையும் சொல்லிட்டு வைக்குதுன்னு..” என்றான்.
“இப்ப நிஜ ரவுடிங்க அவனுக்கு போன் பண்ணிட்டா என்ன பண்றது..?” என்றான் கண்ணன்.
“அதுக்கு முன்னாடி நாம போகணும்..!” என்றான் விஜய்.
“எந்த இடம்ன்னு நமக்குத் தெரியாதே..?” என்றான் கண்ணன்.
“அவன் என்ன சொன்னான். அப்படியே பிரச்சனை வந்தாலும், அது அந்த விஜய்க்கு தான்னு சொன்னான்..! இதுல இருந்து என்ன தெரியுது..?” என்றான்.
“புரியலை..!” என்றான் கண்ணன்.
“வந்தனாவை அவன் எனக்குத் தெரிஞ்ச இடத்தில் வச்சிருக்கணும். இல்லையா என்னோட இடத்தில் வச்சிருக்கணும். என்னோட இடத்துலன்னு பார்த்தா, இந்த வீடு, இதை விட்டா பேக்டரி தான். இங்க வீட்ல வாய்ப்பில்லை. சோ, பேக்டரில தான் வச்சிருக்கணும்..!” என்றான் விஜய்.
“உன்னோட பேக்டரில எப்படிடா..?” என்றான் கண்ணன்.
“சிம்பிள்..! நான் ரெண்டு நாளா ஊர்ல இல்லை. காசுக்கு ஆசைப்பட்டு யாராவது செஞ்சிருக்கலாம்..!” என்றான்.
“அப்படி அங்க இல்லைன்னா..?” என்றான் கண்ணன்.
“நமக்கு விமலை பாலோ பண்ணி போறதைத் தவிர வேற வழியில்லை..!” என்றான் விஜய்.
“இதெல்லாம் சாத்தியமா..?” என்றான் கண்ணன்.
“விமலுக்கு உன்னைத் தெரியாது. அந்த கனகவேல் சென்னை வீட்டோட லொக்கேஷனை உனக்கு சேர் பண்றேன். அவனை பாலோ பண்றது தான் உன்னோட வேலை. அவன் நேரா பேக்டரிக்கு வந்தா, நீயும் அங்க வந்துடு. இல்ல, அவன் வேற ரூட்ல போனான்னா, எனக்கு இன்பார்ம் பண்ணு. நான் வந்துடுறேன்..!” என்றான் விஜய்.
“இவ்ளோ ரிஸ்க் எதுக்கு விஜய்..? வந்தனாவுக்காகவா..?”
“நோ..! என் பேரை சொல்லி ஏமாத்தியிருக்கான் அந்த விமல். பொய்யா கூட என்னால ஏமாந்தான்னு இருக்கக் கூடாது கண்ணா..!” என்றான் விஜய்.
“ஓகே..! நான் போயிட்டு உனக்கு கால் பண்றேன். பெட்டர், நீ அந்த ப்ரீத்தியும் கூட கூப்பிட்டுக்கிறது. எது நடந்தாலும், அதை விமல் உன்பக்கம் திருப்பி விட சான்ஸ் இருக்கு. ப்ரீத்தி கூட இருக்குறது தான் பெட்டர் ஆப்ஷன்..!” என்றான் கண்ணன்.
“ஓகே..! நான் ப்ரீத்திகிட்ட பேசிப் பார்க்குறேன். இப்போவே லேட் நைட் ஆகிடுச்சு..!” என்றான் விஜய்.
“ப்ரீத்தி காலையில வந்தா போதும் விஜய். ஹாஸ்ட்டல்ல இப்ப அலோ பண்ண மாட்டங்க..! ஆனா, விஷயத்தை அவகிட்ட சொல்லிடு..!” என்று சொல்லிவிட்டு கிளம்பினான் கண்ணன்.
கண்ணன் காரில் செல்லும் போதே, பிரவீனுக்கு அழைத்து, நடந்ததைச் சொல்ல,
“என்ன சொல்ற கண்ணா..?” என்றான் அவன் அதிர்ச்சியுடன்.
“ஆமா பிரவீன்…! நீ இருந்திருந்தா ஓகே..! சரி பார்க்கலாம்..!” என்றான் கண்ணன்.
“நான் நாளைக்கு எப்படியும் வந்துடுவேன் கண்ணா..!” என்ற பிரவீனுக்கு, ஏதோ தவறாய் நடக்கப் போகிறது என்பது மட்டும் தெரிந்தது.
“கண்ணா ஜாக்கிரதை..!” என்றான் பிரவீன் மீண்டும்.
“விடு மச்சான் பார்த்துக்கலாம்..!” என்று சிரித்தபடியே போனை வைத்தான் கண்ணன்.
அதற்கடுத்து கடந்த நிமிடங்கள், பல யுகங்களாகத் தெரிய, கிளம்பினான் விஜய். நன்றாக விடிந்திருக்கவில்லை. கண்ணனும் அவன் வெளியே வருவான் என்று காத்திருக்க, விமல் வந்தபாடில்லை.
விஜய் தன்னுடைய பேக்ட்ரிக்கு அருகில் செல்வதற்கும் கண்ணன் போன் செய்வதற்கும் சரியாக இருந்தது.
“சொல்லு மச்சான்..!” என்றான் விஜய்.
“விஜய்..! அந்த விமல் இன்னும் வெளியே வரவேயில்லை..!” என்றான் கண்ணன்.
“இன்னும் கிளம்பலையா..?” என்ற விஜய்க்கு ஒரே யோசனையாக இருக்க,
“எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. ஒருவேளை அவனுக்கு நம்ம பிளான் தெரிஞ்சிருக்குமோ..?” என்றான் கண்ணன்.
“வாய்ப்பே இல்லை..!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவன் காரைத் தாண்டி ஒரு கார் சென்றது. விஜய்யின் கவனம் அதில் செல்ல,
“இது கனகவேல் வண்டி நம்பர் மாதிரி இருக்கே..!” என்று யோசித்தான் விஜய். அவன் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்ததால், விமல், விஜய்யின் காரை கவனிக்காமல் அவனைக் கடந்து சென்றிருந்தான்.
“என்னைத் தாண்டி அந்த கனகவேல் கார் போகுது. அந்த ஆள் ஊர்ல இல்லைன்னா, இவனாத்தான் இருக்கணும். ஆனா, பேக்டரியைத் தாண்டி போய்ட்டு இருக்கு. கண்ணா நீ அங்க இருந்து கிளம்பிடு. நான் இவனை பாலோ பண்றேன்..!” என்றான் விஜய்.
“நான் அங்க வரவா விஜய்..!” என்றான் கண்ணன்.
“இல்ல வேண்டாம் கண்ணா..! நான் பார்த்துக்கிறேன். நீ வரவேண்டாம்..! ப்ரீத்தியையும் வர வேண்டாம்ன்னு சொல்லிடு” என்றான் விஜய்.
விஜய் வரவேண்டாம் என்று சொன்னாலும், மனசுக் கேட்காமல் கண்ணன் கிளம்பி சென்றிருந்தான்.
விமலைப் பின் தொடர்ந்து சென்ற விஜய், அவன் ஒரு வீட்டின் முன்பு காரை நிறுத்துவது தெரிந்து , தானும் நிறுத்திவிட்டு அவனைப் பின் தொடர்ந்து சென்றான்.
விமலை அங்கு கண்ட, வந்தனா, அவ்வளவு சோர்விலும்,
“மாமா..! வந்துட்டிங்களா..? இவங்கல்லாம் யார்ன்னு தெரியலை. விஜய் கூட்டிட்டு வர சொன்னதா சொன்னாங்க. நம்பித்தான் வந்தேன். ஆனா, இப்போ வரைக்கும் விஜய்யும் வரலை. இவங்களும் என்னமோ பேசுறாங்க..!” என்றாள் அழுகையுடன்.
“அந்த விஜய் தான் மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்ல. பேசாம என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ வந்தனா. உன்னை நல்லா பார்த்துப்பேன்..!” என்றான் விமல் சிரிப்புடன்.
“மாமா..!” என்று அதிர்ந்தாள் வந்தனா.
“உன்னோட மாமாவே தான். நான்தான் உன்னைக் கடத்த சொன்னேன். போன்ல கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு விஜய் குரல்ல பேச வச்சதும் நான் தான். இப்போ கூட நீ ஓடிப் போயிட்டன்னு தான் உங்கப்பா கூட நம்பிகிட்டு இருக்கார்..!” என்றான் விமல்.
“ச்சீ..! நீயெல்லாம் மனுஷனா..? உன்னை எவ்வளவு நம்புனேன்..! கடைசில இப்படி பச்சை துரோகியா இருந்திருக்க..?”” என்று அவள் கோபத்தில் கத்த,
“நான் கூடத்தான் உங்கப்பனை அவ்வளவு நம்புனேன். ஆனா, அந்த ஆளுக்கு என்னையெல்லாம் கண்ணுக்குத் தெரியலை. உனக்கும் அந்த விஜய் தான் கண்ணுக்குத் தெரிஞ்சான். நான் என்ன பண்றது சொல்லு? எனக்குத் தெரிஞ்ச வழியில தானே நான் போக முடியும்..” என்றான் விமல்.
“பிளீஸ் மாமா..! என்னை விட்ருங்க. நான் அப்பாகிட்ட கூட சொல்ல மாட்டேன்..!” என்று கெஞ்சிப் பார்த்தாள்.
“இன்னைக்கு முறையா ஒரு கோவில்ல வச்சு தான், உனக்குத் தாலி கட்டற பிளானே..! தாலியையும் கட்டிட்டு, வேற வழி தெரியலை மாமா, அவன்கிட்ட இருந்து உங்க பொண்ணை காப்பாத்த நானே தாலியை கட்டிட்டேன்..! இல்லைன்னா, அவ வேற ஜாதி பையன் கையால தாலி வாங்கியிருப்பா. விஜய்யும் உங்களைப் பழி வாங்கியிருப்பான். அப்படின்னு ஒரு சென்ட்டிமென்ட் சீனைப் போடலாம்ன்னு இருந்தேன். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. நான் சொன்ன எல்லாமே நடக்கும். ஆனா, தாலி மட்டும் இங்கயே கட்டிடலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்..!” என்றான் விமல்.