“குட்டிமா… இங்க வாடா!!!”
அதுவரை ஹாலில் நடந்த பேச்சுக்களை அரைகுறையாய் ஒட்டுக்கேட்டுக்கொண்டு அறைக்குள் இருந்த அஷ்டா, தந்தை வர சொன்னதும் வேகமாய் எழுந்து வெளியேற சென்றாள்.
“மொள்ள போடா பாப்பா” என சொல்லிக்கொண்டே மங்களம் அவள் பின்னால் வந்தார்.
சட்டென தலைநிமிர்ந்து எல்லோரையும் பார்க்க ஏனோ கூச்சமாய் வந்தது அவளுக்கு.
“இதான் எங்க பொண்ணு! பேரு அஷ்டலட்சுமி” தரகர் மூலமாய் தெரிந்திருந்தாலும் சண்முகம் சொல்லும்போது தலையசைத்து கேட்டுக்கொண்டனர்.
விஜயாவுக்கு போட்டோவில் பார்த்ததை விட நேரில் இன்னும் திருத்தமான லட்சணத்தோடு இருந்த அஷ்டாவை பிடித்துப்போனது.
“வந்தவங்களை ‘வாங்க’ன்னு சொல்லணும் குட்டிமா” மெல்லிய குரலில் என்றாலும் அழுத்தமாய் சொன்னார் சண்முகம்.
அவள் அருகே நின்றிருந்த நீலா, “வணக்கம் சொல்லுடி” என சிரித்தபடி அவள் தோளில் இடித்தார்.
கீ கொடுத்த பொம்மை போல படக்கென ‘வணக்கம்’ வைத்தாள் அவள்.
அதற்குள் தயாராய் வைத்திருந்த ‘காபி’ கோப்பைகளை ஒரு நீள்தட்டில் வைத்து அஷ்டாவிடம் கொடுக்க, இப்போது அவள் வந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்!
கீழே குனிந்திருந்தாலும் கீழ் கண்ணால் பார்த்தவரை பத்தடி தூரத்தில் இருவர் அமர்ந்திருப்பது தெரிந்தது அவளுக்கு. விஜயாவை வாசலில் வைத்தே பார்த்துவிட்டதால் புதியதாய் பார்க்கும் பயமில்லை.
ஆனால், அவனை!?
விழா நாயகி, நாயகனை சந்திக்க வேண்டுமே!? என்னதான் வாய் கிழிய பேசினாலும் முகத்துக்கு முகம் பார்க்க கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது.
‘எப்படி இருப்பானோ தெரியலையே!’
‘கடவுளே! எனக்கு அவனை பிடிச்சுத்தொலைக்கணும்!’
எப்படியோ அவர்கள் அருகே சென்று விட்டவள் விஜயாவிடம் தட்டை நீட்ட, ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டவர், “இது என் பையன் வீரா! கூச்சப்படாம நல்லா பார்த்துக்கோமா” என்றார்.
கைகளில் இருந்த தட்டு அவனை நோக்கி நீண்டது.
‘நிமிர்ந்து பார்!’
‘நிமிர்ந்து பார்!’ என உள்ளுக்குள் இருந்து ஒரு அதட்டல் வந்துக்கொண்டே இருந்தாலும், அவள் தலையை யாரோ தரை நோக்கி அழுத்துவதை போன்று, நிமிர்த்தவே அத்தனை கடினமாய் இருந்தது.
‘நிமிர்ந்து பார்த்துடுடி அஷ்டா!’ என அவளே அவளுக்கு கட்டளை பிறப்பித்துக்கொண்டிருக்க,
“அச்சோ என்னங்க நீங்க? இப்படி கொட்டிட்டீங்களே?” என அதி பதற்றமாய் ஒரு கூக்குரல் கேட்டதும் பதட்டதும்,
“சாரி… சாரி… சாரி…” என நகர்ந்தவள் எங்கே கொட்டியது என தேட, அதற்குள் சண்முகம், நீலா, சிதம்பரம் எல்லோருமே ‘எங்க? என்னாச்சு?’ என வந்துவிட,
“ஒண்ணுமே கொட்டலையே?” என நிமிர்ந்த அஷ்டா அவளெதிரே நின்ற அவனை கண்டு திகைத்துப்போனாள்.
‘இவனா?’
அவள் கண்கள் வியப்பில் முட்டை போல விரிய, லேசாக வாய் பிளந்து அதிர்ந்த தோற்றத்தில் நின்ற அஷ்டாவை தான் பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.
அதற்குள், “என்ன தம்பி கொட்டிடுச்சு?” என நீலா கேட்க,
“இல்ல ஆன்ட்டி, இவங்க என்னை நிமர்ந்து கூட பார்க்காம நின்னுட்டு இருந்தாங்க! எங்க என்னை பார்க்காமயே போய்டுவாங்களோன்னு சும்மா ஒரு ஷாக்கு குடுத்தேன்! பார்த்துட்டாங்க” என்று சிரிக்க,
வீராவின் விளையாட்டு புரிந்து, பெரியவர்கள் சங்கடம் கலந்த முறுவலுடன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டனர்.
இப்போது அஷ்டா அவனை முறைப்பது போல பார்க்க, அவள் கையில் வைத்திருந்த தட்டில் இருந்த கோப்பையை எடுப்பது போல அருகே வந்தவன்,
“ஷாக் ஆகுறதை பார்த்தா நான் தான் பொண்ணு பார்க்க வருவேன்னு தெரியாதோ?” என அவளுக்கு மட்டுமே கேட்கும்படி சொல்லிவிட்டு, அவள் பதிலை கூட எதிர்ப்பாராது சென்று அமர்ந்துக்கொண்டான்.
அவள் தான் ஆணி அடித்ததை போல அந்த இடத்திலேயே அசையாமல் நின்றுக்கொண்டிருந்தாள். கண்கள் மட்டுமே அவனை தொடர்ந்துக்கொண்டிருந்தது.
அஷ்டாவின் பார்வை அவனையே துளைப்பது தெரிய, ஒரு மிடறு குடிப்பவன் போல கோப்பையை வாயருகே கொண்டு சென்றவன், அவளை நோக்கி பட்டென கண்சிமிட்ட, வியர்த்து போனது அவளுக்கு.
அவள் அதிர்வை கண்டு வாய்மூடி சிரிப்பை அடக்கினான் வீரா.
அவள் முறைக்க முறைக்க குஷியானது அவனுக்கு! நிதானமாய் காபியை உறிஞ்சும் அவனை அவள் காரணமேயின்றி முறைக்க, அதை கண்டுக்கொள்ளாத பாவனையில், “ஆன்ட்டி, காபி சூப்பர்” என பாராட்டு பத்திரம் வேறு நீலாவுக்கு!
மேலும், “உங்க சமையலும் சூப்பரா இருக்கும்ன்னு நினைக்குறேன்” என்று வேறு சொல்லிவிட,
நீலா அவன் பாராட்டில் கூச்சமாய் புன்னகைக்க, “அவ எல்லாமே நல்லா பண்ணுவா…” என்ற சண்முகத்தை உலக அதிசயம் போல பார்த்தார் நீலா. முதல் முறையாய் அவர் பாராட்டி கேட்கிறார். அதன் இதத்தை முழுதாய் அனுபவிக்கும் முன்னே,
“வந்தப்போ ஒண்ணுமே செய்ய தெரியாது! மண்ணாந்தையா இருப்பா! எல்லாம் என் ட்ரெயிங்கு!” என பெருமை பொங்க பேசினார் மங்களம் பாட்டி.
மனம் மறுபடி ‘புஸ்ஸ்’ என அடங்கிவிட, சிதம்பரமோ, ‘அப்படியா அக்கா?’ என கேலியாய் புருவம் உயர்த்தினான்.
தம்பியின் பார்வையை அசட்டை செய்தவர், “இன்னொரு நாள் வாங்க தம்பி, உங்களுக்கு விருந்தே வைக்குறேன்! நடக்கிறது, ஓடுறது, பறக்கிறது எல்லாம் இலைல இருக்கும்” என நீலா சொன்னதும்,
“அச்சச்சோ!! நான் ‘வெஜிடேரியன்’ ஆன்ட்டி” என வீரா சிரிக்க, விஜயாவை தவிர அங்கிருந்த அனைவருமே, அதிர்ந்து போய் விழிக்க, வடநாட்டு சீரியலாய் இருந்திருந்தால், அத்தனை பேருக்கும் ‘கிளோஸ் அப்’ ஷாட் வைத்தே அரை மணி நேரத்தை ஓட்டிருக்கலாம். அத்தனை அதிர்ச்சி அலைகள் நிலவியது அங்கே!!!
விஜயா அவர்களின் அதிர்ந்த தோற்றத்தில் குழம்பி, “என்னாச்சு?” என மெதுவாய் கேட்க,
“நாங்க சுத்த ‘அசைவம்’. அஷ்டாவுக்கு வாரத்துல ரெண்டு நாள் கறி எடுக்கலன்னா கை, கால் எல்லாம் உதற ஆரம்பிச்சுடும்” என கேலியாய் சொல்லி சிரித்தார் சிதம்பரம்.
“அட, இவ்ளோதானா?” என்ற வீரா, “வாரத்துல ரெண்டு நாள் என்ன? வாரம் முழுக்க கூட எடுத்துட்டா போச்சு!” என்றான்.
விஜயா, “நான் கொஞ்ச கொஞ்சமா அசைவம் சாப்பிடுறதை நிறுத்திட்டேன் அண்ணி! நான் சாப்பிடுறது இல்லன்னு இவனும் அசைவம் சாப்பிடுறதை விட்டுட்டான்! இப்போதான் மருமக வீட்டுக்கு வந்துடுவால்ல! அவ தயவுல என் பையனும் அசைவம் சாப்பிடட்டும்” என்றதும் தான் இலகுத்தன்மை வந்தது அங்கே!
“நீங்க கவலைப்படாதீங்க ஆன்ட்டி! நான் ‘நான்-வெஜ்’ எல்லாம் சூப்பரா குக் பண்ணுவேன்” என வீரா சொன்னதும்,
“நீங்க சமைப்பீங்களா?” என ஏகத்துக்கும் அதிர்வாய் வியப்பு மேலிட கேட்டார் சண்முகம்.
ஆனால் இதற்கு வீரா பதில் சொல்லும்முன், “அருமையா சமைப்பான்! வீட்டை நல்லா பார்த்துப்பான்! தினமும் வீட்டுல சமையல் இவன் தான்! என்னை ஒரு வேலை கூட செய்ய விட மாட்டான்! உதவிக்கு வரேன்னு சொன்னாலும் திட்டுவான்! பொறுப்பான பையன்!” என பூரிப்புடன் சொல்ல,
நீலா மனத்துக்குள், ‘ஆமா, இதெல்லாம் என் வசனம்’ல?’ என நினைத்தார்.
அதேநேரம், ‘இவங்க சொன்னதுல ஒரு வாக்கியமாவது உன்னால தைரியமா சொல்ல முடியுமா? நீ பெத்து வச்சுருக்க லட்சணம் அப்படி’ என இன்னொரு மனம் குமட்டில் குத்தியது.
“இவ்ளோ நாளும் வீட்டு வேலை, வெளி வேலை, சம்பாத்தியம்ன்னு தனியா அல்லாடிட்டு இருந்தான்! இனி மருமக வந்து வீட்டு பொறுப்பை வாங்கிக்கிட்டா தான் அவனுக்கு கொஞ்சம் ரெஸ்ட்!” என்றார் விஜயா.
நீலாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
‘கவலைய விடுங்க! என் பொண்ணு எல்லாம் பார்த்துப்பா’ என சொல்ல ஆசைதான். ஆனால், முடியாதே!!! சிரித்து சமாளித்தார்.
அதன்பிறகு இருவீட்டாரின் பூர்வீகமும் சுருக்கமாய் பகிர்ந்துக்கொள்ளப்பட்டு, அடுத்தடுத்த விஷயங்களுக்கு பேச்சு தாவியது.
கிட்டத்தட்ட திருமணம் முடிவான நிலை தான்! விஜயாவுக்கு சந்தோஷம் பிடிப்படவில்லை. எப்படியோ மகனுக்கு திருமணம் நடக்கப்போகிறது! வெகு நாளாய் எதிர்ப்பார்த்த நல்ல காரியம் அருகே வந்ததை எண்ணி இப்போதே கனவில் மிதக்க ஆரம்பித்தார்.
இருவீட்டாருக்கும் பிடித்துவிட்ட நிலையில் அடுத்த கட்ட பேச்சுக்களை ஆரம்பிக்க சண்முகம் நினைக்க, விஜயாவோ, “இன்னைக்கே எல்லாம் பேசனும்ன்னு இல்ல அண்ணே! நான் போயிட்டு ஃபோன் பண்றோம்! பிறகு பார்ப்போம்” என்றார்.
பெண்ணுக்கு திருமணமே முடிவாகிவிட்ட சந்தோசத்தில் இருந்த சண்முகத்துக்கு விஜயாவின் இந்த பேச்சில் சட்டென மனசோர்வு உண்டாக, அதேதான் மங்களம் பாட்டிக்கும் நீலாவுக்கும்.
அவர்களின் வாட்டம் முகத்தில் தெரியவே, அதை சரியாய் கண்டுக்கொண்ட விஜயா, “நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கன்னு நினைக்குறேன்! எனக்கு உங்க பொண்ணை ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு! என் பையனுக்கும் தான்” என வீராவை ஓரக்கண்ணில் பார்த்து சிரித்தவர்,
“இன்னைக்கு தான் நம்ம பார்த்துருக்கோம்! நாங்க பேசுனதை வச்சு நீங்க ஒரு முடிவுக்கு வரக்கூடாதுல? நாலு இடத்துல விசாரிங்க, யோசிங்க! எல்லாம் திருப்திப்பட்டா என்னைக்கு நிச்சயத்தை வச்சுக்கலாம்ன்னு எங்களுக்கு தகவல் சொல்லுங்க! பொண்ணை குடுக்குற நீங்க யோசிக்காம செய்யக்கூடாதுல? அதுக்காக சொல்றேன்” என அவசரமாய் சொல்லி முடித்தார்.
சண்முகத்துக்கு ஏக திருப்தியாய் போனது. நிறைந்த மனதுடன் தன் அம்மாவை பார்க்க, ‘இந்த வரனுக்காக தான் இத்தனை நாள் தன் பேத்திக்கு வந்ததெல்லாம் தட்டிப்போனதோ?’ என நினைத்துக்கொண்டிருந்தார்.
சிதம்பரத்திற்கும் இந்த வரன் முடிந்துவிடும் என ஊர்ஜிதமாய் தோன்ற, விசாரிக்கவே தேவையில்லை எனுமளவுக்கு வீரா மேல் ஓர் நல்லபிப்ராயம் தோன்றியது.
அஷ்டா இன்னமும் தன் முறைப்பை விட்டுவிடவில்லை. எதற்கு முறைக்கிறோம் என்றே தெரியாமல் வீராவை முறைத்தபடி நின்றிருந்தாள். அவள் முறைப்பது தெரிந்தே வீராவும் அவ்வப்போது அவளை சீண்டிக்கொண்டிருக்க, அவனுக்கு இதெல்லாம் புதியதாய் இருந்தது.
இங்கு வருவதற்கு முன்புக்கூட அவன் இப்படி எல்லாம் நடந்துக்கொள்வான் என யாரேனும் சொல்லிருந்தால் துளியும் நம்பிருக்க மாட்டான்!!!
அங்கிருந்து விஜயாவும் வீராவும் விடைப்பெற்று ஆட்டோவில் ஏற, அவர்களுக்கு கையசைத்து சிரிப்புடன் விடைக்கொடுத்த முகங்களில் இருந்து நீலாவின் முகம் மட்டுமே மாறி இருந்தது.
அவர்கள் சென்ற பின்பும் வாசலிலேயே நின்று விட்ட நீலாவிடம் “என்னக்கா? வீட்டுக்குள்ள வர மனசே இல்லையா?” என்றார் சிதம்பரம்.
தம்பியை நிமிர்ந்துப்பார்த்த நீலா, திரும்பவும் அவர்கள் சென்ற வழியே பார்க்க, “ரொம்ப நல்ல குடும்பம்ல அக்கா?” என்றார் சிதம்பரம் சிலாகிப்புடன்.
“அதான்டா பயமா இருக்கு” என்ற நீலாவை விநோதமாய் பார்த்தார் சிதம்பரம்.
“என்னக்கா பேசுற? பார்க்கவே ரொம்ப நல்லவங்களா தெரியுறாங்க, பையனுக்கு நல்ல உத்தியோகம் வேற! இதைவிட்டா உள்ளூருல இல்ல, வெளியூருல கூட நம்ம பாப்பாவுக்கு நல்ல வரன் அமையாது!”
“அதெல்லாம் எனக்கும் தெரியுது”
“அப்பறம் என்ன அக்கா?”
நீலா, “அவங்க ரொம்ப எதிர்ப்பார்ப்போட இருக்காங்கடா! வர பொண்ணு அவங்க குடும்பத்தை தாங்கும்ன்னு நினைச்சுட்டு இருக்காங்க! இவளுக்கு ஒரு குடம் தண்ணிய கூட இடுப்புல தாங்க துப்பு இல்லன்னு பெத்து வச்சுருக்க எனக்கு தானே தெரியும்!!!” என நீலா சொன்னதும்,
“என்னக்கா உன் பிள்ளையை பத்தி நீயே இப்படி சொல்ற?” என திகைத்தார் சிதம்பரம்.
“இதை நான் சொல்றதுல தப்பு இல்லடா! இவ போற வீட்டுல இருக்கவங்க சொல்லிட்டா தான் அசிங்கம்” என்றார் முகம் சுருங்க…!
“இப்ப என்ன பண்ணலாம்ன்னு இருக்க?”
சிதம்பரத்தை தீர்கமாய் பார்த்தவர், “சொல்லிடலாம்ன்னு தோணுதுடா!” என்றார்.
குழப்பத்தில் புருவம் சுருக்கிய சிதம்பரம், “என்னன்னு?” என்றார் புரியாமல்…
*****
“கண்ணா…. கண்ணாஆ…. கண்ணாஆஆஆ” ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த விஜயா அருகே உட்காந்திருந்த வீராவின் காதுகளில் கிட்டத்தட்ட கத்த,
கடைசி குரலுக்கு, “ஸ்ஸ்ஸ்… ம்மா? எதுக்கும்மா கத்துறீங்க?” என பரபரவென காதை தேய்த்தான் வீரா.
“கத்துனேனா? அலறுனேன்னு சொல்லுடா… அதுதான் பொருத்தமா இருக்கும்” என விஜயா முறைக்க,
“ஹிஹி! வேடிக்கை பார்த்துட்டு இருந்தேனா! அதுல கவனிக்கல!” என அசடாய் சிரித்தான் வீரா.
அவன் சிரிப்பை பார்த்த விஜயா, “பொண்ணை பார்த்த அரைமணி நேரத்துக்கே இவ்ளோ அசடு வழியுதேடா! இன்னும் அவளை உனக்கு கட்டிவச்சுட்டா… நான் எல்லாம் உன் கண்ணுலேயே பட மாட்டேன் போலருக்கே!?” என போலியாய் வியக்க,
“ப்ச்! போங்கம்மா!” என அதற்கும் சிரித்தான் வீரா.
“சுத்தம் போ!” என்றவர்,
“ஏன்டா, இப்போ உனக்கு அந்த சேமியா வந்துடுச்சா?” என்றார்.
அவர் எதை கேட்கிறார் என தெரிந்தும், “என்ன கேட்குறீங்கன்னே புரியல ம்மா” என்றான் அவன்.
அவனையா விஜயாவுக்கு தெரியாது!?
“ஏன்டா? ஒருவேளை இந்த பொண்ணை உனக்கு முன்னமே தெரியுமோ?”
“இல்லையே” என்றான் பரபரப்பாய்.
பின்னே, “ஏம்மா இப்படி கேட்குறீங்க?”
“இதுவரைக்கும் நம்ம எத்தனை பேரை பொண்ணு பார்க்க போயிருப்போம்? சும்மா சொல்லு”
“ஒரு பத்து, இல்ல பன்னெண்டு!”
“ம்ம்ம்! இத்தனை தடவைல ஒருமுறை கூட நீ இவ்ளோ அதிகப்பிரசங்கியா இருந்ததே இல்லை! வீடு நல்லா இருக்குங்குற, காபி நல்லாருக்குங்குற! விட்டா பொண்ணோட அம்மாக்கு ஐஸ் வச்சே கவுத்துருப்ப போலயே!”
செய்தபோது வராத சங்கோஜம், அதை அன்னை சொன்னபோது வர, “நல்லா இருந்துச்சு… சொன்னேன்” என்றான் உள்ளே போன குரலில்.
“ரொம்ப பிடிச்சுப்போச்சோ?” சிரிப்பை அடக்கி கேட்டார் விஜயா.
தெரியாதவன் போல, “எதும்மா?”
“நீ எதை நினைச்ச?”
“ப்ச்! நீங்க எதை கேட்டீங்க?”
விஜயா, “நீ எதை நினைச்சியோ அதையே தான் டா”
அவனுக்கு பிடி கொடுக்காது விஜயா பேச,
“உங்களுக்கு பிடிச்சா ஒகே தாம்மா” என்றான் தன் முகத்தை அவருக்கு மறைத்து.
“ஹப்பா! நல்லவேளை எங்க உனக்கு பிடிச்சுப்போச்சுன்னு சொல்லிடுவியோன்னு நினைச்சேன்! பொண்ணா அது? ஆளு தான் நெடு நெடுன்னு நிக்குதே தவிர, ஒரு நெளிவு சுழிவே இல்ல! கலரா இருந்தாலும் ஒரு லட்சணம் வேணாம்? பொண்ணுன்னா முடி இடுப்பை தாண்டி தொடணும்! இது என்னவோ கழுத்தோட கிராப்பு வெட்டி வச்சுருக்கு!
ஏதோ நானும் படிச்சேன் பாருன்னு காலேஜுக்கு போயிட்டு, இப்போ சும்மாவே இருக்காமே வீட்டுல? சாப்பிட…. தூங்க… சாப்பிட…. தூங்க… இது மட்டும் தான் அதுக்கு…”
விஜயா பேசிக்கொண்டே போக இன்னும் என்னென்ன சொல்லியிருப்பாரோ? அதற்குள்,
“ம்மா! உங்களுக்கென்ன கண்ணா தெரியல? என்ன பெரிய குறைச்சலை கண்டீங்க? அவங்க நெடுநெடுன்னு எல்லாம் ஒன்னும் கிடையாது! அஞ்சடி ஆறு அங்குலம்! உயரத்துக்கேத்த உடம்பு!
அவங்க கோதுமை மாவுக்கு கண்ணு, மூக்கு வச்ச மாதிரி அம்சமா இருக்காங்க! ஆனா, நான் பனைவெல்லதுக்கு கை, கால் முளைச்ச மாதிரி இருக்கேன்!
முடி எங்க கிராப்பு மாதிரி வச்சுருக்காங்க அவங்க? அழகா முதுகு வரைக்கும் தானே நீண்டு இருக்கு? அது போதாதா உங்களுக்கு?
சம்பாத்தியம் எப்போ வேணா பண்ணலாம், ஆனா படிப்பு? அதெல்லாம் எல்லாருக்கும் அமையுறது இல்லை… என்னை விட அதிகம் படிச்சுருக்காங்க! நாளைக்கு நம்ம பங்க்’கை எடுத்து நடத்த சொன்னா செய்யாமையா போய்ட போறாங்க? அதுவுமில்லாம என் பொண்டாட்டி இன்னொருத்தன் கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குறதுல எனக்கு விருப்பம் இல்லம்மா!
உங்களுக்கு எப்படியோ தெரியாது! ஆனா, நான் அவங்க தான் என் மனைவின்னு முடிவே பண்ணிட்டேன்! என் ஆசையை நீங்க மறுக்க மாட்டீங்கன்னு நினைக்குறேன்”
மூச்சு விடாமல் தம்’க்கட்டி பேசினான் வீரா. பேசி முடித்து லேசாக மூச்சு வாங்க, அன்னையின் முகத்தை பார்க்க தயங்கியவனாய், “என்னம்மா?” என்றான் எங்கோ பார்த்து.
“நான் பிடிச்சுருக்கான்னு கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலடா நீ?”
இப்படி சொன்ன விஜயாவை, ‘லூசாமா நீ?’ என்பதை போல திடுக்கிட்டு பார்த்தவன், லேசான எரிச்சல் கூட எட்டிப்பார்த்த குரலில்,
“பிடிச்சுருக்கு, பிடிச்சுருக்கு! ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு! சீக்கிரமே கல்யாணம் செஞ்சு வைங்க… போதுமா?” என்றான்.
ஆர்ப்பாட்டமான நகைப்புடன், “அத்த, சொல்லுண்ணே மொதோ! அதவுட்டுட்டு முடி இருக்கு, முள்ளங்கி இருக்குனு சொல்றியே” என்றான் ஆட்டோ ஓட்டி.
அவனை கண்டுக்கொள்ளாது, “என்னமா?” என்றான் அன்னையிடம் மீண்டுமாய்.
அப்போதும் விஜயா பேசாது இருக்க, “அண்ணே! உனக்கு புரிலியா? அம்மா போட்டு வாங்குறாங்கண்ணே!!!” என சிரித்தான் அவன் மீண்டும்.
அவன் அப்படி சொன்னதும் ‘அப்படியா?’ என்பது போல அன்னையை பார்க்க, அவர் முகம் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருப்பது தெரிய,
“ம்மா!!! ஹும்…ஹும்….” சிறுப்பிள்ளைப்போல சிணுங்கிக்கொண்டே அவர் மடியில் விழுந்தான் வீரா.
இப்போது நன்றாக வாய்விட்டே சிரித்தவர், “என் பையனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு டோய்” என்று கிண்டலாய் சொல்லிக்கொண்டு சிரிப்பை தொடர, கூச்சத்தில் நெளிந்தான் வீரா.
“அடடா! ஆம்பளை பசங்க வெட்கம் எவ்ளோ அழகு பாரேன்” என்று வேறு வார, கூடவே ஆட்டோ ஓட்டியும், “அண்ணே, வெட்கபடுறதை பார்க்குற பாக்கியம் எனக்கு தானே கிடைச்சுருக்கு” என்று கிண்டலடிக்க,
“டேய்… ஒழுங்கா போடா, ரோட்டை பார்த்து” என அதட்டல் போல குழைந்த குரலில் சொன்னான் வீரா. என்ன முயன்றும் அவனால் தன் வெட்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
“ம்மா? அண்ணனுக்கு எத்தனை பொண்ணு பார்த்துருப்பீங்க? ஒண்ணாச்சு அமைஞ்சுச்சா? எல்லாம் நான் ஆட்டோ ஓட்டி வந்த ராசி!” என்றான் ஆட்டோ ஓட்டி.
வீரா, “ஆஹான்! அப்புறம்?”
அவன், “எதாவது பார்த்து பண்ணுங்கம்மா எனக்கு”
வீரா, “நைட்டு உப்புமா செய்யுறேன், வந்து சாப்பிட்டு போறியா?”
வீராவின் பேச்சை காதிலேயே வாங்காதவன் போல, “இந்த மாச வாடகை காசுல கொஞ்சம் தள்ளுபடி குடுக்கலாம்ல?” என்றான்.
வீரா ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள், “கொஞ்சம் எதுக்கு? நான் இருக்க சந்தோசத்துக்கு அளவே இல்லை! அதனால நம்மக்கிட்ட வண்டி வாங்கி ஓட்டுற எல்லாருக்குமே இந்த மாச வாடகை கட்!!!” என விஜயா சொன்னதும் பல்பு போட்டதை போல பளிச்சென ஆன ஆட்டோ ஓட்டியின் முகம், மீண்டும் ‘புஸ்’சென்றாகி,
“நான் எனக்கு சலுகை கேட்டா நீங்க பொத்தாம் பொதுவா தரீங்களே? எனக்குனு ஸ்பெசலா இல்லையா? நான்தானே ஆட்டோ ஓட்டி வந்தேன் உங்களுக்கு” என சோக கீதம் வாசித்தான்.
வீரா, “ம்மா, இவன் வாடகையை குறைச்சா வண்டியவே அபேஸ்’ பண்ற ஆளு! பார்த்துக்கோங்க!” என்றான் விளையாட்டாய்.
வீராவுக்கு பெட்ரோல் பங்க் தாண்டி இன்னும் சில உபரி தொழில்களும் உண்டு! அதில் ஒன்று தான் பிறருக்கு வாடகைக்கு வண்டி கொடுப்பது.
ஆட்டோ மற்றும் கார்களை பிறருக்கு ஒப்பந்த ரீதியில் வாடகைக்கு விட்டிருந்தான். இப்போது செல்வது கூட அவனது சொந்த ஆட்டோவில் தான்!!!
ஆட்டோ ஓட்டி, “எதுனா பார்த்து செய்ங்கம்மா”
“சரி போ! எல்லாருக்கும் ஒரு மாச வாடகை கட்! உனக்கு மட்டும் மூணு மாசம்!!!” என விஜயா சொல்ல,
அதை கிஞ்சித்தும் எதிர்ப்பாராதவன் சந்தோஷ மிகுதியில் ஆட்டோ ஓட்டுவதை கூட மறந்து தன் சீட்டில் இருந்து அப்படியே திரும்பி, பின்னிருந்த விஜயாவிடம், “அம்மாஆஆ! ரொம்ப நன்றிம்மா!” என பெரிய கும்பிடாய் போட,
தடுமாறிய வண்டியை கண்டு பீதியில், “அடேய் கிராதகா! வண்டியை ஓட்டித்தொலடா” என்று வீரா கத்த, சடுதியில் தன் கட்டுப்பாட்டுக்குள் வண்டியை கொண்டு வந்தவன், “ஹிஹி!” என அசடு வழிய சிரித்து வைத்தான்.
அதன்பின்னே வீராவுக்கு, ‘எனக்கிப்ப கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி’ என பாட்டு பாடவே நேரம் சரியாக இருந்தது… சிதம்பரம் வந்து அவனை பார்க்கும் வரை!!!